கணங்களின் கதை
கவிதைகள்
டிசம்பர் 7, 2016
கோப்பை ஏந்தியிருக்கும்
கரத்தின் சிறு நடுக்கத்தில்
சற்றே சிந்தும்
ஒரு துளி தேநீர்..
யாருடனோ
பேசுதலின் போது..
சொற்களின் ஊடே
கசியும் மெளனம்..
மழை நனைக்கும்
பொழுதில்
விழி மூடி
வானை நோக்கி
தலை உயர்த்தும்
கணங்கள்…
எங்கிருந்தோ
கரையும் பாடலில்
தலையணை
நனைய முகம்
சிவந்து கிடக்கும்
நடு நிசிப் பொழுது..
இப்படி..
இப்படி..
ஏதேனும் நொடிகள்
வாய்த்து விடுகின்றன..
சொல்ல
முடியாதவற்றை..
நமக்குள்ளே
சொல்லிக் கொள்ள..
உறைந்த உயிரை
நாமே கிள்ளிக் கொள்ள..
1,096 total views, 1 views today