

அந்தத் தொடர் வண்டியின் ஜன்னல் கண்ணாடியின் வழியே மஞ்சள் ஒளி கண்ணைக் கூச அயர்ந்துத் தூங்கிக் கொண்டிருந்த நான், கண்விழித்த போது சென்னை புறநகரில் தொடர்வண்டி நுழைந்திருந்ததை அறிந்துக் கொண்டேன்.
பயணம் தொடங்கும் போது அமர்ந்திருந்த வயதான தம்பதியர் எங்கோ இறங்கிச் சென்றிருந்தனர். எனக்கு முன்னால் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்த ஒரு இளம் பெண். அவள் அருகே கையில் குழந்தையோடு, மஞ்சள் கயிறு தாலியோடு பச்சை நிற புடவையில் ஒரு பெண். குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மஞ்சள் சுடிதார் இளம்பெண் கண்டிப்பாக ஏதோ தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்ப்பவளாக இருக்க வேண்டும். சட்டென்று ஒரு கூச்சத்தின் மங்கிய நிழல் என்னை சூழ்ந்தது. ஒரு இளம் பெண் முன்னால் அயர்ந்து தூங்குவது அவ்வளவு நேர்த்தியான காட்சி அல்ல. ஆனால் அவள் என்னை கவனித்தது போல் எல்லாம் தெரியவில்லை. தொடர் வண்டியின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தூரத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த மஞ்சள் வெயிலைப் பார்த்துக் கொண்டு, காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு ஏதோ பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
நானும் என் கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்தேன். இது போன்ற தனிமைப் பயணங்களில் எதிரே அமர்ந்திருக்கும் இளம் பெண்களின் கவனத்தை கவருமாறு நடந்து கொள்வது அவ்வளவு நாகரீகம் அல்ல என்பது எனக்கும் தெரியும். பக்கவாட்டு இருக்கையில் ஜிப்பா அணிந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்தவரோடு ஏதோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு வந்தார். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நானும் கேட்டுக்கொண்டே இருந்தபோது.. அந்த ஜிப்பாக்காரர் ஒரு பாடகர் என்பதும், ஏதோ கச்சேரிக்கு போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், கச்சேரி சரியாக அமையவில்லை என்ற சலிப்போடு இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. கூட்டம் கூட்ட முடியாதவர்கள் எதற்கு கச்சேரி நடத்துகிறார்கள் என்று பாடகர் ஆவேசமாக கேட்க, அருகில் இருந்தவர் அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் இப்படி ஏதோ ஒரு சலிப்பு ஈரம் கண்ட உள்ளாடை போல உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. சிலருக்கு வேலையை குறித்த சலிப்பு, சிலருக்கு வாழ்க்கைத் துணையை குறித்த சலிப்பு, சிலருக்கு உடல் நலன் குறித்த சலிப்பு என வேறுபட்டாலும் சலிப்பின் திசைவழி என்னவோ ஒன்றுதான்.
எங்கிருந்தோ வந்த ஒரு கடலை வியாபாரி கடலை விற்றுக் கொண்டே வர, யாரும் அவரிடத்தில் கடலை வாங்கி சாப்பிடாத நிலையில் அவரும் சலிப்போடு காலியாக இருந்த எனது பக்கத்திற்கு அமர்ந்து இறுகிய முகத்தோடு கண்ணை மூடி சாய்ந்திருந்தார்.
காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டு இருந்த அந்த இளம் பெண், முகத்தில் மாலை நேரத்து மஞ்சள் வெயில் சிறு ஒப்பனை போல படர்ந்து இருந்தது. வெயில் சுமக்கும் முகங்களில் பூசப்படும் இயற்கையின் ஒப்பனை போல வேறு என்ன சிறந்தது இருக்கிறது..??
மீண்டும் மீண்டும் அந்த இளம் பெண் மீது கவனம் திரும்புவதை எனக்குள் எண்ணிப் பார்த்து என் மீதே கோபம் எனக்கு கோபம் வந்தது. பெண்ணை வலுக்கட்டாயமாக பார்க்கும் விழிகளும் ஏதோ ஒரு வன்முறையை இழைக்கிறது என நினைத்து மெலிதாகக் குற்ற உணர்வு கொண்டேன்.
அப்போதுதான் பச்சைப் புடவை அணிந்திருந்த பெண்ணின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை அழத் தொடங்கியது. அந்தத் தொடர் வண்டி பெட்டியில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி மனநிலைகளில் லயித்துக் கொண்டிருக்கின்ற அந்த மாலை வேளையில் குழந்தையின் அழுகை எல்லோரும் மனநிலையையும் ஒரே இடத்தில் நிறுத்தியது. அந்தப் பச்சைப் புடவை பெண் குழந்தையை சமாதானப்படுத்த, சூ சூ.. கொட்டினாலும் குழந்தை எதையோ நினைத்து வலிமையாக இன்னும் உச்ச குரலில் அழத் தொடங்கியது. உலகத்தில் எல்லா சூழ்நிலைகளையும் ஒரே திசையில் திருப்ப ஒரு குழந்தையின் அழுகை போதும். இயர் போன் மாட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண் கூட இயர் போனை கழற்றிவிட்டு குழந்தை முதுகில் மெதுவாக வருடிக் கொடுத்தாள். கடலை வியாபாரி தன்னுடைய கூடையில் வைத்திருந்த சில்லறைப் பொட்டலத்தை குலுக்கி காட்டி குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றார். குழந்தை இன்னும் வீறிட்டு அழத் தொடங்கியது. எப்படியாவது அந்த குழந்தை அழுகையை நிறுத்தி விட வேண்டும் என அங்கு இருப்பவர்கள் அனைவரும் நினைக்கத் தொடங்கினோம். எங்கெங்கோ மன சஞ்சாரத்தில் பறந்து கொண்டிருந்த எல்லோர் மனதையும் இழுத்து வைத்து வலுக்கட்டாயமாக ஒரே இடத்தில் ஊசிக் குத்தி தைத்தது அந்தக் குழந்தையின் அழுகை.
அப்போதுதான்.. ஒரு கூட்டமற்ற கச்சேரியில் சிக்கிக் கொண்டு, சலிப்புற்று இருந்த அந்த ஜிப்பாப் பாடகர் தன் வாழ்வின் உன்னத கணத்தில் இயற்கையாய் வந்துச் சேர்ந்த ஒரு சவாலை எதிர்கொள்ளும் பொருட்டு
ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார்.
“
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே..”
தொடர்வண்டி தனது இஞ்சின் சத்தத்தை நிறுத்திவிட்டதோ என எண்ணும் அளவிற்கு எல்லோரும் அமைதியாகிவிட்டிருந்தோம். குழந்தை மட்டும் சிணுங்கி கொண்டிருந்தது.
“கண்ணீரில் சந்தோஷம்
நானிங்கு காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண் மூடு.. சுகமாயிரு”
ஆழமான தன் குரலில் இருந்து அபூர்வமான அந்த பாடலை உருக உருக பாடிக்கொண்டிருந்த அந்த ஜிப்பா பாடகர் ” சுகமாயிரு” என்று பாடிய போது உண்மையில் அது ஒரு ஆசீர்வாதம் போல அந்தக் குழந்தையை தூங்க வைத்திருந்தது. பெருமிதத்தின் பொன் நிழல் அந்தப் பாடகரின் முகத்தில் பூத்திருந்தது.அது ஒரு அபூர்வத் தருணம். எதுவும் அறியாத அந்த வெள்ளந்தி குழந்தையின் உறக்கம், அந்த ஜிப்பா பாடகர் இதுவரை வாழ்நாளில் சந்தித்திராத அங்கீகாரம்.
என் பக்கத்தில் அமர்ந்திருந்த கடலை வியாபாரி கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு தன் கூடையை தூக்கிக் கொண்டு மீண்டும் நடக்கலானார். குழந்தையின் தாய் பனித்த தனது கண்களை தன் சேலையில் துடைத்துக் கொண்டு நன்றியோடு அந்த ஜிப்பாப் பாடகரை பார்த்தார். அதற்குள் அந்தத் தொடர்வண்டி எழும்பூர் நிலையம் வந்து சேர, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அந்த இளம் பெண் வேகமாக சென்று அந்த ஜிப்பாப் பாடகரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு கதவை நோக்கி அவள் சென்றாள்.
அந்த ஜிப்பா பாடகருக்கு எதிரே அமர்ந்திருந்த அவரது நண்பர் அவரை இறுகத் தழுவிக் கொண்ட போது.. அந்தத் தொடர்வண்டி பயணம் ஒரு விருதுபெறும் நிகழ்ச்சியாக மாறி இருந்தது.

மணி செந்தில்.
விரும்புவோர் கேட்பதற்காக..
மறுமொழி இடவும்