பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: என் கவிதைகள்.. Page 3 of 4

பேரறிவாளனின் வீடு. ——————————-

யாருமே
அழைக்காமல்
அந்தப் பொல்லாத
இரவும்
துயர் காற்றின்
விரல் பிடித்து
அந்த வீட்டுக்குள்
நுழைந்தது.

அதுவரை
நிலா முற்றங்களில்
அன்பின் கதகதப்போடு
அந்த ஐவரும்
உறங்கிய இரவுகள்
முடிவுக்கு வந்தன.

அந்த வீட்டின்
ஒற்றை புன்னகையை
எங்கிருந்தோ வந்த
இருட்டின் கரங்கள்
இழுத்துச் சென்றன.

யார் யாரோ வந்தார்கள்.
ஏதேதோ சொன்னார்கள்.
காரணக் கதைகள்
ஆயிரம் சொன்னாலும்
மறைந்துபோன
புன்னகையை
அந்த வீட்டினில்
மலர வைக்க
யாராலும் முடியவில்லை.

அலைந்தலைந்து
பாதங்கள் சோர்ந்தன.
அழுது அழுது
கண்ணீரின் தடம்
கலையாமல்
கன்னங்கள்
தழும்புகள் ஆகின.

வாசல் பார்த்த விழிகள்
நிலைக்குத்தின.
அசையா அந்த
விழிகளின் நடுவே
ஒரு தலைமுறை
கடந்த துயரம்
உறைந்து கிடக்கிறது.

வீட்டிற்கு கதவுகள்
இருந்தன.
கொடும் மழை காற்றிலும்
அவை சாத்தப் படவே இல்லை.
மூடப்படாத கதவுகளுக்கு
வலது பக்க ஓரத்தில்
என்றும் வாடாத
செம்பருத்திப் பூ சூடிய
ஒரு அழைப்பு மணி இருந்தது.

அதைத் தாயன்பு என்றார்கள்.

அந்த வீட்டிற்கு
ஜன்னல்களும்
இருந்தன.
சாத்தப்படாத ஜன்னல்கள்
பெருமூச்சு இரவுகளில்
உயிர்க்காற்றின்
அலைச்சலால்
அடித்துக் கொண்டே
இருக்கின்றன.

எனவே அதை
காற்றின் வீடு
என்றார்கள்.

அந்த வீட்டையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்த
பித்தன் ஒருவன்
உக்கிரமாகி சொன்னான்..

அது காற்றின் வீடு
அல்ல..
காத்திருப்பின் கூடு
என.

அந்தப் பொல்லாத
இரவு
அதன்பிறகு
இன்னும்
விடியவே இல்லை.

மணி செந்தில்.

இரவு முடிவிலியான கதை

starry_night_by_girl_on_the_moon-d351dj0
—————————————————–

இரவை போர்த்திக்
கொண்டு
அவள் படுத்திருந்த
அவ் வேளையில் தான்
கலைந்த அவளது
கேசத்தில்
நட்சத்திரங்கள்
பூத்திருந்தன…

சட்டென்று இரவை
பிடித்தெழுத்து
மீண்டும் ஒரு
விடியலுக்கு
நான் தயாரான
போது…

அவள் சிரித்தாள்.

நான் சற்றே மூர்க்கத்துடன்..

நீ போர்த்திக்கிடக்கிற
இரவை பிடித்து இழுத்தால்
என்ன செய்வாய்..?

என கேட்டேன்

மீண்டும்
சிரித்தப்படியே
அவள் சொன்னாள்..

நான் உன்னை போர்த்திக்
கொள்வேன் – என

ஆதி வன
மூங்கிலில்
யாரோ
காற்று ஊதி
இன்னுமொரு
இரவிற்கு
ஏற்பாடு செய்தார்கள்…

பிறகுதான்
நான்
உணர்ந்தேன்..

இரவும், அவளும்
முடிவிலி என…

மழை அறிந்த மனசு..

மழை வருவதும்..
வராததும்
அவரவர் மன நிலையை
பொருத்தது.

பல நேரங்களில்
மழை யாரோ
ஒருவருக்கு
மட்டும் பெய்து
விட்டு போவதும்..

ஊரே நனைகையில்
ஒருவருக்கு
மட்டும்
பொய்ப்பதும்
நேசிப்பில் மட்டுமே
சாத்தியம்.

மழையில்
இசையை
உணருபவனும்..
இசையில்
மழையை
உணருபவனும்..

நிச்சயம் வெவ்வாறனவர்களே..

ஒரு இளஞ்சூட்டு
தேநீரோடு
மழை விடை பெறலாம்.

அந்த தேநீரின்
கதகதப்பிற்காகவே
இன்னொரு மழையும்
பெய்யலாம்.

தேநீரை காதலியாக
பருகுபவர்களும்..
காதலியை ஒரு
இளஞ்சூட்டு தேநீராக
ரசிப்பவர்களும்..

பாக்கியவான்கள்.

உங்களில் யார் பாக்கியவான்கள்…?

-மணி செந்தில்.

எம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.

அவருக்கு ஏதடா மரணம்..? 

நடு நிசியில் கரையும் கனவல்ல..
அவர்.

 எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும்
 பறவையின் சிறகும் அவர்தான்..

சின்னஞ்சிறிய பறவைக்கான
சுதந்திர வெளி தந்த
 அந்த அதிகாலை வானமும் அவர்தான்..

அவர்தான்..
செங்கல்பட்டிலும்..
 நெய்வேலியிலும்..
இராமேஸ்வரத்திலும்..
நெல்லையிலும்..
இன்னும்..இன்னும்
தெருக்கள் தோறும்..
இங்கு உரத்தக் குரல்களில்
பொங்கும் முழக்கங்களாக…

அவர்தான்..
 இங்கு உயரும் கரங்களில்
 மிளிரும் துடிப்பாக…

 அவர்தான்..
கடற்கரை மணலில்
உறவுகளுக்காக ஒளிரும்
 தீபங்களாக..

அவர்தான்..
மூவர் உயிர்க் காக்க
மூண்டெழுந்த
 ஆவேச நெருப்பாக…

அவர்தான்..
முல்லைப் பெரியாற்று அணையின்
பலமாக பூத்திருக்கும்
 தமிழ் இன ஓர்மையாக..

 அவர்தான்..
கூடங்குளத்து அணு உலையை
அகற்ற சொல்லும் மக்கட் திரளாக..

அவர்தான்..
இங்கு… அனைத்துமாய்..

 சாதி திமிறுக்கு எதிராக..
 மத வெறிக்கு எதிராக…
ஒலிக்கும் குரல்களில்
 அவர்தான்
 ஒளிந்திருக்கிறார்..

 பிழைப்பினை அரசியலாக
வைத்து கிடப்போரின்
பித்தலாட்ட முகமூடி கிழிக்கும்
 எளியவனின் ஆவேசத்தில்
அவர்தான் மலர்ந்திருக்கிறார்..

 முத்துக்குமாராய்..
செங்கொடியாய்..
இன்னும்..இன்னும்…
அவர்தான் பரவுகிறார்..
பரப்புகிறார்..

அவர்தான்
இங்கு அனைத்துமாய்…

பிரளயமாய்…
பிரவாகமாய்…
பிரபாகரனாய்..

 உயிர்ப்பிற்கும்.. துளிர்ப்பிற்கும்..
என்றும் இல்லை மரணம்.

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

பிரிவின் சாலை..

ஒற்றை இதழாய் உதிர்ந்து விட்டு போ.

நீரிலிருந்து பிரியும் தூண்டில் முள்ளைப் போல

என்னை சலனிக்காதே.

காற்றாய் கடக்க முயலாதே.

இரவின் புள்ளியில் இடமாறிய துயரம் போல

சின்ன பிசிறலாய் உணர்த்தி விட்டு செல்லாதே.

உந்தன் அசைவினை நான் உணராத கணத்தில்

கடந்து விடு.

உன் நிழலை என் மீது வரையாதே.

எதற்கும் உன்னை பரிசோதித்துக் கொள்

ஏதேனும் மிச்சம் இருந்தால் சுரண்டி எடுத்து விட்டுப் போ.

அது நானாக இருந்தாலும் கூட.

மிடறு விழுங்கி விரிந்த சொல்லில் துவங்காதே.

ஒரு யுக வாழ்க்கையை பிரிபடாத ஒற்றைச் சொல்லில் முடி.

குறுகிய பாதைகளில் ..இறுகிய தருணங்களில்..

எதிர்பட்டால் வலிக்காமல் இருக்க உதிர்ந்து விடு.

சிறகின் நுனி தீப்பற்ற பறந்து விடு.

உடைந்துப் போன ஒரு நொடியின் துளியில்

முடங்கட்டும் துளிர்த்தலுக்கான வேண்டல்.

முடிவிலியாய் தொடரும் பாதையில்

கண நேரத்து மெளனமாய் உறைந்து போ.

உறைவின் உறக்கத்தில் வாழட்டும் நம் பிரிவு.

அலைக்கழிப்பின் இறுதி.

துடித்து வெடித்த நொடிக்குள் கிழித்த காற்றை

அருந்திற்று அம்பு.

அம்பின் துளிர்ப்பில் அதிரட்டும் இலக்கு.

இருட்டின் பெருவெள்ளத்தில் நகரும் சுடராய்

அலைந்தது இலக்கு.

எய்யப்பட்ட அம்போடு பயணம் போன பார்வையும்

சற்று முன்னதாகவே சென்று குத்திற்று இலக்கில்.

இலக்கின் அலைக் கழிப்பில் நிதர்சனத்தின் ஆட்டம்.

அம்பின் நுனியில் நம்பிக்கையின் சுமை.

விசுவாசத்தின் பெருக்கில் கரைந்தது திசைகளின் சுழற்சி.

நகராமல் ..விலகாமல் நடு உச்சத்தில் பெருகிற்று வெப்பம்.

நொடியை பிரித்து கசக்கி முகர்ந்தது வெறியேற்றிய வேகம்.

மூர்க்கத்தின் துளியில் துவங்கிற்று முடிவிற்கான துவக்கம்.

நெருங்கிய இடைவெளி இழைக்குள் நுழைந்த காற்றின் கேசம்

அறுப்பட்டு சிதறிற்று காண்.

தொட்ட துளியில் இலக்கின் புள்ளியில் உறங்கியது வில்லாளனின் குறி.

அம்பின் நுனி துளைத்து கிழித்தத் துளியில் இன்னமும் மிச்சமிருக்கும் இலக்கு.

துளைத்த கணத்தில் ஆடி அதிர்ந்தது வில்.

சிவப்பில் சிலிர்க்கும் கடல்..

உதிரம் உதிர கரிப்பினில் கடல் நீர்.

நீலத்தில் உறைந்த கடல் ரத்தத்தில் சிலிர்க்கிறது.

அனாதையாய் கிடக்கும் மீன் வலைக்குள்

மீன்கள் சுற்றி திரிகின்றன..

நடுங்கும் கடலில் நகராமல் நிற்கிற படகில்

கனவோடு திறந்த கண்கள்.

கழுகின் வெறித்த பார்வைக்குள் சிக்குகிறது

உடலம் மிதக்கும் படகின் நுனி.

உறக்கத்தின் ஒரு புள்ளியில்

திடுக்கிட்டு வெளுக்கிறது வானம்.

வீறீட்ட வானத்தில் சிவப்பாய்

பரவுகிறது தமிழனின் ரத்தம்.

குடிசைக்குள் குழந்தை அழுகிறது

உணராத சோகத்தின் அறியாத பசியாய்.

வரப் போகும் அரிசிக்காக

தணலாய் காத்திருக்கும் அடுப்பில்

விழுந்து ஓலமிடும் கண்ணீர்.

சால்வைகள் ரூபாய் தாள்களோடு

விலை பேசுகின்றன விலையில்லாதவற்றை.

காவல்காரர்கள் காத்துக் கொண்டு

இருக்கிறார்கள் வேலி தாண்டி

விழுங்கும் சிம்மத்தினை..

கணக்கற்ற கனத்தினால்

கடல் பொங்கிறது

சில சமயங்களில் சுனாமியாய்..

(தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்)

சொற்களின் தூரிகை..


முதிர்வின் நட்பு நடமாடும் குளத்தருகே

பாசிகளோடு சிந்திக் கிடந்த

பசுமையான சில சொற்களை பார்த்ததாக

அப்பா சொன்னார்.


தத்தி தவழ்ந்து வந்து கட்டி அணைத்து கன்னம்

பதித்த மழலை ஒன்று மஞ்சள் சொல்லொன்றை

மகிழ்வுடன் பரிசளித்துப் போனது.


கடந்துப் போன காலமொன்றை இழுத்து வந்த

நினைவு ஒன்று , பெருமூச்சோடு செம்பருத்தி பூவில் இருந்து

உதிரும் சிவந்த சொல் ஒன்றை கையளித்துப் போனது.


இடையறா முயக்கத்தின் வெளிச்சத்தில்

காம கடும் புனல் தருணமொன்று ..கிறங்கிய சொல் ஒன்றில்

நிலவின் துளி ஒன்றை நிறுத்தி வைத்துப் போனது.

பொழிந்த மழையின் கசிவாய் நகரும் காற்றின் சிறகொன்று

யாருக்கும் தெரியாமல் சிலிர்ப்பின் சொல்லுக்கடியில்

ஊதா நிறமொன்றை ஒளித்து வைத்துப் போனது.


இழுத்து உருவேற்றி கட்டிய வில்லொன்றின் குறியாய்

இலக்கின் இதயம் நோக்கி பாயும் சொல்லொன்றை எய்து

விட்டுப் போன மனைவியின் நிழலில் தணல் ஒன்றின் நிறம் கண்டேன்..


பின்னிரவு சாலையில் வெளிச்சப் பெருக்காய் கசியும் விளக்கொன்றின்

தனிமைத் துயரின் மிச்சத்தில் வெளிறிய பழுப்பின் வாசம் அறிந்தேன்..

முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் உறவொன்றின் துயரப் பெருக்கில்

விடியாத இரவொன்றின் நிறம் எடுத்தேன்..


நிறம் சேர்த்த தூரிகையில் வரைய தொடங்கினேன்..

இந்த யுகத்திற்கான இறுதி ஒவியமொன்றை..

முடித்து பார்த்து அதிர்ந்தேன்.

வெள்ளைத் தாளின் வெறுமை கண்டு.

மிதக்கும் வலி…


இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்
உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….
தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்ட
உயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.
தனிமையில் கசியும் என் கோப்பை
முழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..
வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்
ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ரசாயன எரித்தலில் கருகிப் போன
பிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….
என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றை
விளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறது
கருப்பை ரத்தச் சுழி ஒன்று….
நாசியை புணரும் ரத்த வாடை
என் விழிகளில் மாற்ற இயலா
வடுவாய் எஞ்சி நிற்கிறது..

தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்
அறுந்து தொங்கும் ஒற்றை ரத்த விரல் நீட்டி..
தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறந்த பிணங்களின்
வாயில் எச்சில் கோழையாய் வழிகிறது இறையாண்மை..

.
ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
எல்லாம் முடிந்த பின்னர்.
தனிமையாகத் தான் இருக்கிறேன்
என உறுதி செய்துக் கொண்டு.
.

Page 3 of 4

Powered by WordPress & Theme by Anders Norén