மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மலையாள நடிகர் ஜெயராமின் விருதுகளை விட உன்னதமானவர்கள் எங்கள் தாய்மார்கள்..

.
சில நாட்களுக்கு முன் தமிழின தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என தரக்குறைவாக பேசி.. எம் இனப் பெண்கள் மீது காறித் துப்பி கொக்கரித்த நடிகர் ஜெயராம் இன்று தொலைக்காட்சிகளில் அழுதுக் கொண்டே (?) நடிக்க துவங்கியுள்ளார்.
ஆம் . மலையாளத்தான் ஜெயராம் அவர்களே..
நாங்கள் கருப்பர்கள் தான்.
வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து விட்டு…
சுடும் வெயிலில்..உழைப்பேறிய உடலோடு..வியர்வைக் குளியலாடி…அன்றாட வாழ்க்கைக்கே
அல்லலுற்று…நிற்கிற நாங்கள் வெளுப்பாகவும்..சிறப்பாகவும் இருக்க இயலாது தான்.
வந்தவனை எல்லாம் வாழ விட்டு…ஆள விட்டு..வீதியில் நிர்கதியாய் நிற்கிற நாங்கள் உங்களைப் போல ..உங்கள் குடும்பத்தினர் போல.. வெளுப்பாகவும்..தளுப்பாகவும்,, இருக்க இயலாதுதான்.
உழைக்கும் மக்களினமான தமிழின மக்கள் கருத்த உடலை உடையவர்கள் என்பதுதான் மலையாள நடிகர் ஜெயராமின் எள்ளலுக்கும்..நக்கலுக்கும் காரணமாக இருக்கிறது.
ஆரியப் புளுகு புராணங்களில் தமிழர்களை குரங்குகளாக..அரக்கர்களாக படைத்த ஆரியர்களின் இன்றைய மனநிலையின் சின்னம் தான் இந்த மலையாளத்து பார்ப்பான் ஜெயராம்.
எம் ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க காரணமாக இருந்த மலையாள திமிரில்.. அங்கே.. நம் தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என மிகச் சாதாரணமாக சிரித்துக் கொண்டும்..குதுகலித்தும்.. கூறி விட்டு இப்போது நானும் தமிழன் தான் என அழுதுக் கொண்டே நடிக்கிறார் நடிகர் ஜெயராம்.
பல ஆண்டுகளாகவே தமிழர்களை குறித்து மிக கேவலமான..மூன்றாம் தர சொல்லாடல்களை மலையாள திரை உலகு கடைப் பிடித்து வந்தது. அதன் உச்சம் தான் அந்த மலையாள ஜெயராமின் திமிர்த்தனப் பேட்டி…கேட்டால் சென்னையில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், அவரது பிள்ளைகள் தமிழ் தான் (?) படிப்பதாகவும் என கண்கலங்க பேசுகிறார்.
உண்மையில் தமிழர்களாகிய நாங்கள் தான் எம் இனமும், எம் மக்களும் அடையும் அவமானத்திற்கு கண்கலங்க வேண்டும். வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு மலையாளத்தான் வீட்டில் கருத்த எருமை தடிச்சி பட்டமும் வாங்கிக் கொண்டு வேலைக்காரிகளாக எங்கள் தாய்மார்கள் வேலைப் பார்க்கிறார்களே… அதை நினைத்து நாங்கள் தான் கண்கலங்க வேண்டும்.. கேட்டால் நகைச்சுவையாக மிமிக்ரி பேசினாராம். நீங்கள் நகைச்சுவையாக பேசி விளையாட ….வறுமைக்கு ஆட்பட்டு, உம் வீட்டில் பணிபுரியும் எங்கள் அப்பாவி தாய்மார்களா கிடைத்தார்கள்..? .
உங்கள் விருதுகளை விட .. உங்கள் கேடயங்களை விட..எம் தாய்மார்கள் எங்களுக்கு உயர்ந்தவர்கள்.
.
ஆண்டாண்டு காலமாய் ..வந்தவரை எல்லாம் வாழ விட்டு…தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் வக்கில்லாத இனமாக…கேட்பாரும் ..மீட்பாரும் இல்லாத நாதிஅற்ற இனமாக நம் தமிழினம் இருந்து வருகிறது.அந்த துணிச்சல் தான் இந்த மலையாளத்தானை அங்கே பேச வைத்தது.
ஒரு மலையாள நடிகன் எம் தாயையும், எம் சகோதரியையும் கருத்த எருமை தமிழச்சி என எள்ளி நகையாடினால்…
நாங்கள் மறந்து விடவும் வேண்டுமாம். மன்னித்து விடவும் வேண்டுமாம்..
மீறி கேட்டால்..
போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காதாம்.
உணர்வுள்ள தமிழர்களே.. உணர்ந்துக் கொள்வீர்.
.

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….








மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ;
(புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்)
பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர்.
.
முத்துக்குமார் .
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல.
இது ஒரு போர் முழக்கம்.
ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின்
விழிப்பின் உச்சம்.
.
முத்துக்குமார்.
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல.
இனப் பாசிச அரக்கனால் கொன்று வீழ்த்தப்பட்ட நம் ஈழ சகோதர சகோதரிகளை கண்டு கதறி கூட அழ முடியாத அளவிற்கு நம்மை நகர்த்தி வைத்திருந்த இந்தியத்தின் உச்சாணிக் கொம்பிற்கு விடுக்கப்பட்ட சவால்.
நாங்கள் கண்ணீர் விட்டு கதறியும் கண்டு கொள்ளாத
உலகத்தின் செவிகளுக்கு அடித்துக் கூறிய
பறை முழக்கம்.
.
முத்துக்குமார் .
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல
இன்னும் தமிழன் இருக்கிறானடா இந்த நாட்டில்- என
இனத்தினை காட்டிக் கொடுத்தவர்களின்
செறுமாந்த இறுமாப்பினை தகர்த்த
இடி முழக்கம்.
தன்னை தானே திரியாக்கி
ஊருக்கே வெளிச்சமாய் போன
ஒற்றைச் சுடர்..
.

சென்ற வருடத்தில் ஜனவரி 29 ஆம் தேதி நடுப்பகல் 12 மணி அளவில்
அவசரமும், பதட்டமும் நிறைந்த ஒரு குரலின் மூலம் முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செய்தியை நான் அறிந்தேன். தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத ஒரு இளைஞன் தன்னையே எரித்துக் கொள்வதான மனநிலை என்னை முற்றிலும் சிதைத்துப் போட்டது. அன்றைய காலக் கட்டத்தில் நமது கையறு நிலையின் உச்சம் முத்துக்குமாரின் தியாகம்.அந்த சமயத்தில் மட்டுமல்ல..இப்போதும் கூட முத்துக்குமாரின் மரணம் எனக்கு மிகுந்த குற்ற உணர்வாக வலியினை கொடுக்கிறது. என் கண் முன்னால் நடந்த…நடக்கின்ற… வேதனைகளை..கொடுமைகளை சகிக்கும் என் மனநிலையின் மீது ஆறாத வெறுப்பாய் கவிழ்ந்திருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாட சுகங்கள் மீதான நுகர்வு கூட என்னை மிகுந்த பதற்றம் உடைய மனிதனாக..குற்ற உணர்வு கொள்பவனாக மாற்றி வைக்கிறது.
நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற தமிழின இளைஞர்கள் இவ்வாறு தான்
ஈழம் சிதைந்துப் போன வலியோடு..துயரோடு… வாழ்கிறார்கள்.

ஆனால் முத்துக்குமாருக்கு மட்டும் சுயநலத்தினை மீறிய இனநலன் சார்ந்த மனநிலை வாய்த்திருக்கிறது.
பாருங்கள்…உலகத்தீரே…
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஒரு தேசிய இனத்தின் வழி தோன்றியவன் …உலகத்திற்கு கலை, பண்பாடு, இலக்கியம், நாகரீகம், அரசு,வீரம் என அனைத்தையும் போதித்த இனத்தின் புதல்வன் … தன் சொந்த சகோதர, சகோதரிகள் தன் கண் முன்னால் அழிவதை கண்டு சகிக்க முடியாமல் தன்னை தானே எரித்து மரித்துப் போனான்.
உலகத்தின் மெளனம், இந்தியத்தின் வேடம், தமிழக அரசியல்வாதிகளின் துரோகம் ..இவைதான் எங்கள் ஈழத்தினையும் அழித்தன. எங்கள் முத்துக்குமாரையும் பறித்தன.
அறம் செய்ய விரும்பிய இனத்தின் பிள்ளையான முத்துக்குமார் தன் உளச் சான்றுக்கு நேர்மையாக இருந்து விட்டு போனார். …
ஒரு மரணத்திற்கு முன்னதான பொழுதுகளில் முத்துக்குமார் கடைப்பிடித்த நிதானம் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியது. ஒரு மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவல்ல என்பதனை முத்துக்குமார் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அந்த மனிதன் சமூகத்தின் மிகச் சாதாரணப் பகுதியில் இருந்து தான் என்ன செய்கிறோம் என்பதனை முழுக்க ஆராய்ந்து..இனிமேலும் பொறுப்பதற்கோ, இழப்பதற்கோ ஏதுமற்ற நிலையில் தன்னையே ஒரு தீபமாக்கி கொண்டு ஊருக்கு வெளிச்சமாகிப் போனார் முத்துக்குமார்.
ஈழ அழிவின் கடைசிக் காலங்களில் தன் சொந்த சகோதர சகோதரிகள் தங்கள் கண்ணெதிரே அழிவதை கண்ட தமிழ்ச் சமூகம் என்ன செய்வது எனப்புரியாமல் கண் கலங்க நின்றது. நாமெல்லாம் ஏதாவது அதிசயம் நடக்காதா… ஏதோ ஒரு அற்புத நொடியில் நம் ஈழம் அழிவிலிருந்து மீளாதா என்ற பரிதவிப்பில் நின்றுக் கொண்டிருந்தோம். மனித சங்கிலியாக கொட்டும் மழையில் நின்றுப் பார்த்தோம். சாலை மறியல், தொடர்வண்டி மறியல், போராட்டம், உண்ணாவிரதம் என அனைத்தும் செய்தோம். இன்று அப்பட்டமான போலிகளாக நம் முன்னால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னமும் வேஷமிட்டு திரியும் வேடதாரிகளை நம்பிக் கிடந்து நாசமாய் போனோம்.உணர்வு மிக்க இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடக்கும் போது கண்கலங்க கடந்துப் போனார்கள். சீமான் அண்ணன், கொளத்தூர் மணி அண்ணன்,அய்யா மணியரசன் போன்றோர் தேசியத்தினை(?) பாதுகாக்க கைது செய்யப்பட்டனர். இறுதியாக திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலை என்ற முடிவோடு அமர்ந்தார். நாம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். என்ன நடந்ததோ, ஏது விளைந்ததோ தெரியவில்லை. சில பேருந்துகள் எரிந்ததை தவிர எவ்வித பலனும் இல்லை. மீண்டும் கலங்கி நின்றோம் . என்ன செய்வது என்ற தயக்கத்தின் ஊடான தேக்கம் நம் தொப்புள் கொடி உறவுகளை காப்பற்ற கடைசி முயற்சிகளையும் தளர வைத்தது.
அந்த நேரத்தில் தான் தமிழின இளைஞர்களின் உணர்வின் வெளிப்பாடாக முத்துக்குமார் உயிராயுதம் எடுத்தார். ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகங்கள் வெகு சாதாரணமானவைதான் என்றாலும் முத்துக்குமாரின் தியாகம் தனிவகையானது. நின்று.. நிதானித்து .. அறிவின் ஊற்றாய் நிலை நிறுத்தப்பட்டு வழங்கிய ஒரு அறிக்கையின் மூலம் முத்துக்குமாரின் தியாகம் ஆவணப்படுத்தப் பட்டு விட்டது.

அது வெறும் அறிக்கையோ அல்லது மரண வாக்குமூலமோ அல்ல. தமிழனின் கடந்த ,நிகழ்கால வரலாற்றினை மீள் பார்வைக்கு உட்படுத்தும் நீதிமன்றக் கூண்டு. இவ்உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் உள் மன சான்றினை உலுக்கிய பேரிடியாக விளங்கிய அந்த அறிக்கை, பதவிக்காக எதையும் இழக்க துணியும் போலி அரசியல் ஒப்பனை முகங்களை கிழித்தெறிந்தது. அரசியல் வியாபாரம் செய்து ,தன்னை விற்று, தன் இனத்தினை விற்று..மிஞ்சி இருப்பதை விட்டு விட மனமில்லாமல் புறங்கையை நக்குபவர்களையும், ஓட்டு பிச்சைக்காக ராணுவம் அனுப்பி நாடு வாங்கித் தருவேன் என்று நாடகமாடிய நயவஞ்சக எதிரியையும், தமிழன்னையை மறந்து பதவிக்காக இத்தாலி அன்னையிடம் அனைத்தையும் இழந்த துரோகிகளையும் அந்த அறிக்கை மிகச் சரியாக அடையாளமிட்டுக் காட்டியது. இனி மக்களிடமிருந்து தமிழுணர்வு மிக்க தலைமை உருவாக வேண்டும் என புது திசை வழி காட்டியது.
இன உணர்வு மிக்க இளைஞர்களின் ஆழ் மன வெளிப்பாடாய் முத்துக்குமாரின் ஈகை விளங்கியது. தமிழினத்திற்காக தன்னையே அளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் நடக்கையில்…மனசாட்சியை , இன மாட்சியை தலைநகரில் அடகுவைத்து விட்டு ஈழ ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பிறந்தநாள் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் தலைவர்கள்.
சாப்பிட்டீர்களா தலைவர்களே… அதில் எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் மாமிசமும் இருந்திருக்குமே… !
.
எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார் ?
ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும், ஒரு குவார்ட்டர் பாட்டிலும், 500 ரூபாய் நோட்டிற்கும் இனத்தினை அழித்தவர்களுக்கே மீண்டும் வாக்களித்து தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் இவர்களுக்காகவா..?
.
இனம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் .. மானடவும்,மயிலாடவும் கண்டு விட்டு.. தோற்பதன் துயரம் கூட உணராமல்.. சாதியால் பிளவுண்டு.. மதத்திற்கு முன்னால் மண்டியிட்டு
சாதாரண வாழ்க்கையில் சாக்கடையாய் போன இவர்களுக்காகவா..?
.
பின் யாருக்காக ..எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார்..?
.
லட்சியவாதிகளின் மரணம் ஒரு துவக்கமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தார் முத்துக்குமார். தன் இரத்த உறவுகளுக்காக உயிரையும் கொடுப்போம்- என கொடுத்து ஈழ மக்களின் கண்களில் துயரத்தின் ஊடான கண்ணீரில் நன்றியாய் கசிந்தவர் முத்துக்குமார்.
தன் உடலைக் கூட துருப்புச் சீட்டாய் பயன் படுத்த கோரிய முத்துக்குமார் – தாயக தமிழகத்தின் தலைச் சிறந்த கரும்புலியாக நம் நினைவில் வலம் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்.
ஆயுதங்கள் பிணங்களை உருவாக்கின – ஈழத்தில்.
ஆனால் இங்கோ ஒரு பிணம் ஆயுதமாகிப் போனது.
முத்துக்குமார் சாதித்தார்.
முத்துக்குமார் முடிவல்ல. அது ஒரு தொடர்ச்சி.
எதுவுமே முடிந்து விடாது.முடிந்து விட்டது என நினைத்தப் போதுதான் முத்துக்குமார் என்ற துவக்கம் நிகழ்ந்தது.
முத்துக்குமார் – தான் வாழ்விற்கான முழுமையான பணியை தன் அறிக்கையின் வழியாக ஒவ்வொருவரின் ஆழ்மனதில் ஊடுருவி அறிவின் தெளிவாய்..இன மான உணர்வாய் வெளிப்பட்டு செய்து கொண்டே இருக்கிறார் . இனி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது முத்துக்குமாருக்கான உண்மையான அஞ்சலி.
.
ஆம்.
முத்துக்குமார்..என்பது
வெறும் பெயர்ச்சொல் அல்ல..
வினைச்சொல்.
……..
எம் அன்பார்ந்த ஈழ உறவுகளே…
முத்துக்குமார் பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறோம்.
உங்களின் வலியையும், உங்களின் இழப்பினையும் நாங்கள்
எங்கள் துயரமாக உணருகிறோம்.
எங்கள் மனதின் அடி ஆழத்திலும் தோல்வியின் வன்மமும், மீளுவதற்கான
கனவும் கசிந்துக் கொண்டுதான் இருக்கிறது.
நீங்களும் ,நாங்களும்..வேறல்ல..
ஒரு தியாகம் செறிந்த இனத்தின் மிச்சங்கள் நாம்.
நமக்கு பிறக்கும் பிள்ளைகளை முத்துக்குமாராக வளர்ப்போம்.
நாம் வாழ்ந்த கதையையும்…துரோகத்தின் ஊடாக வீழ்ந்த கதையையும்
சொல்லி வளர்ப்போம்.
உலகில் வாழும் ஒரு தொன்ம இனத்திற்கான நாடு
தமிழீழ நாடு.
ஒரு கனவினை 24 கோடி விழிகள் சுமக்கின்றன.
காத்திருப்போம்.
வலியோடு.வன்மத்தோடு.
.
இன்றல்ல..ஒரு நாள்..ஈழம் மலரும்..
அன்றுதான் நம் காலை புலரும்.
.
அது வரை இருண்டு கிடக்கும் நம் வாழ்வில்
முத்துக்குமார் என்ற ஆன்ம ஒளி பிரகாசித்துக்
கொண்டே இருக்கும்.
.
தேசியத் தலைவர் நீடுழி வாழ்க.
.


காஞ்சிபுரம் பார்ப்பன குருக்களின் காமமும்- உடைத்தெறியப் பட்ட பார்ப்பனப் புனிதமும்….

பிராமணர்கள் யார்..?

எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்

– தந்தை பெரியார் (19-09-1937 குடிஅரசு பக்கம் 9 )

சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.
இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்து மத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் என்ற முறைமையில் நாம் மகிழ சில சங்கதிகள் உண்டு.

உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை நாம் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் கடவுள்ள அது: கல் தான் .. என நாம் காட்டுக்கத்தலாய் தெரு முனைகளில் கத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் வெகு சுலபமாக பாலாலும், தேனாலும் அபிஷேகம் செய்து படையல் வைத்து ஆயிரம் காலமாய் புனிதம் போற்றி தொழுகிற அந்தணர் பாதம் மட்டுமே பட்டு வந்த கருவறைக்குள் எல்லாவித தடைகளுக்கும் சவாலாய் சாதி வேறுபாடின்றி பெண் என்ற ஒற்றைத் தகுதியை மட்டும் பார்த்து கட்டிய குடுமியுடன் கட்டிப்பிடித்து ஆலிங்கணம் நடத்திய தேவநாதன் இத்தனை ஆண்டு காலம் பார்ப்பனர் கட்டி வைத்த பாரம்பரிய கோட்டையின் அடித்தளத்தில் குண்டு வைத்து தகர்த்திருக்கிறான்.

தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற நாத்திகனாக நமக்குப் படுகிறான். தமிழர்க்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது.
தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது. இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான்.

ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.
தந்தை பெரியார் சொல்கிறார்…

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்-
தந்தை பெரியார்
(3-12-1971 விடுதலையில்..)

பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான்.கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு..சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கிக் கொண்டு நாம் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய நம்மை வெளியே நிற்க வைத்து ..அழகு பார்த்த பார்ப்பனீய இந்து மத பிரதிநிதியான தேவநாதன் கடவுளை போற்றும் சிறப்பு இதுதான்.

ஆனால் இதையெல்லாம் உணராத தமிழ்ச்சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.

தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள்,சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தமிழன் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறான்.

தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைவினை தேவநாதன் மிக எளிமையாக தன் காமத்திற்காக நிகழ்த்தி தன்னுடைய கேடு கெட்டத் தனம் கடவுளை விட உயர்ந்தது அல்ல என்பதனை நிருபித்து இருக்கிறான்.இதில் நாமும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. தமிழனின் கருவறை நுழைவு இப்படி யாருக்கும் தெரியாமல் காமத்தின் பாற் கேடு கெட்டத்தனமாய் விளையாமல்..சாதிகளை துறந்த சமத்துவ நோக்கில் கலகம் வாய்ந்த புரட்சியாக நிகழ வேண்டும் என்பதே.

தேவநாதனை விளக்குமாற்றால் அடிக்க பெண்கள் பாய்கிறார்கள். இதையெல்லாம் தனக்கு முன்னால் நிகழ்த்திக் கொண்டு இன்னும் கல்லாக சமைந்து நிற்கும் கடவுளின் சிலைகளை இவர்கள் எக்காலத்தில் எதனைக் கொண்டு அடிக்கப் போகிறார்கள்.?

தந்தை பெரியார் தன் வாழ்நாட்கள் முழுவதையும் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து வந்ததை தேவநாத பார்ப்பான்கள் தங்கள் நடத்தைகள் மூலம் நிரூபித்து காட்டுகிறார்கள்.

இந்த நிகழ்வு மூலம் கோவில் ,சிலைகளின் எல்லையற்ற அதிகாரமும், புனிதமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பார்ப்பன மேலாண்மையின் சீரழிவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

பார்ப்பன லீலைகளை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தேவநாதனுக்கு நாம் நன்றி சொல்வதோடு..இனியாவது பார்ப்பானிடம் ஏமாறாத சமூகம் தமிழ்ச் சமூகம் அமைய உறுதிக் கொள்வோம்.

எம் தலைவர் பிரபாகரன் – அறம் வழி நின்ற சான்றோன்…

மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலை இய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல-
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய் ..

– புறநானூறு- முரஞ்சியூர் முடிநாகராயர்
தொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குத் உலகத் தமிழர்கள் ஒரே அலைவரிசையில் திரண்டு போற்றி மகிழ்ந்தனர்.தாயக தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஒரு மாபெரும் வீழ்ச்சிக்கு பின்னர்.. எதிர்காலம் குறித்த மாறா நம்பிக்கையை உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழ் தேசிய இனத்தின் வழித் தோன்றல்கள் தங்களுக்குள் தாங்களே எழுப்பிக் கொண்டார்கள். நம் சம காலத்தில் தமிழருக்கே உரிய தொன்ம அறப் பலத்தோடு நம்மை எல்லாம் வழி நடத்தும் நம் தேசிய தலைவர் பிறந்த நாளை தங்கள் இனத்தின் மீட்சி நாளாக உலகத் தமிழர்கள் ஒற்றைக் குரலில் உலகுக்கு அறிவித்தனர். ஒரு பேரழிவிற்கு பின்னால்..சாம்பலாய் கருகிய ஒரு இனம்..சுதந்திர வேட்கையும் ,இன மான உணர்வும் கொண்டு தனக்குள்ளே உயிருட்டி..உருவாக்கிக் கொண்டு தங்களுக்கான சுதந்திரத்தினையும், தங்களுக்கான நாட்டினையும் அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் சிந்திக்க துவங்கி உள்ளனர் என்பதற்கு அறிகுறிகளாக உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள் அறிவிக்கின்றன. ஒரு தொன்ம அறம் வழி சார்ந்த ஒரு தேசிய இனத்தின் ஈடு இணையற்ற தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என்பதனை நம் எதிரிகளும், துரோகிகளும் புரிந்துக் கொண்டு முழி பிதுங்கி நிற்கின்ற நிலைமையை உலகத் தமிழர்கள் மாவீரர் தின நிகழ்வுகளால் இன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.
தமிழரின் நெடிய வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது ஒரு அற உணர்வு கொண்ட தேசிய இனம் தான் இது என்று நம்மை நாமே பெருமிதம் கொள்ள நிறையக் காரணங்கள் உண்டு.
குறியீடுகளால் நிரப்பப் பட்டது தமிழரின் இலக்கியம். முல்லைக்கு தேர் அளித்த பாரி, மகனை தேர்க் காலில் இட்ட சோழன், தன் பச்சிளம் மகவினையும், போர்க் களத்திற்கு அனுப்பிய தாய்,காயம் பட்ட புறாவிற்காக தன் தொடையினை அறுத்த சிபி ,குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை அளித்த பேகன் என புனைவும் ,குறியீடுமாய் திகழும் நம் இலக்கியங்கள் காட்டும் குறியீடுகள் எவை என்று ஆராயும் போது வீரமும் , அறமும், இரக்கமும்,ஈகையும் நம் முன்னோர்களின் வாழ்வாக இருந்திருக்கின்றன.வரலாற்றில் ஒரு இனத்திற்கென இப்படிப் பட்ட அறவியல் கூறுகளை எங்கும் பார்க்க இயலாது. சங்க இலக்கியங்களில் ஒழுகும் அற உணர்வு தமிழரின் வாழ்வியலில் அறம் எத்தனை நூற்றாண்டு காலமாய் நீடீத்து வந்திருக்கிறது என்பதனை உணர்த்துகிறது. எதிரியிடம் கூட நாம் நாகரீகத்தினை, இரக்கத்தினை காட்டும் தன்மையை நம் தொன்ம இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன.
உலகில் தன் இனத்திற்காக,மொழிக்காக தன்னைத் தானே தனிமனிதனாய் எரித்துக் கொண்டும், வெடித்துக் கொண்டும் இறந்த தமிழின இளைஞர்கள் தன் இனத்தின் அறவுணர்ச்சி மூலமாகவே ஆன்ம பலம் அடைந்தார்கள். தன் இனத்திற்காகவும், மொழிக்காவும் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள முன்வருவதுதான் தியாகத்தின் உச்சம். அந்த தியாகத்தினை மிகவும் நேர்த்தி மிகுந்த துணிவான முறையில் தமிழ் இளைஞர்கள் மனம் உவந்து செய்தார்கள். இதே அற உணர்வினால் தான் தன் கைக்கு எட்டிய தொலைவில் தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட உயிர் ஈகைப் போராளிகள் தங்களைத் தாங்களே நெருப்புக்கு இரையாக்கி விதையாய் இந்த மண்ணில் வீழ்ந்ததும் நடந்தது.ஆணுக்கு சமம் பெண் என உலக நாகரீகங்களுக்கு கற்றுக் கொடுத்த நம் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சியாய் நம் சகோதரிகள் பெண் புலிகளாய் களம் புகுந்ததும், தீரத்துடன் போரிட்டதும், நம் விழிகளை பெருமித கண்ணீரால் நிறைக்கும் உணர்வாகும். இதே அறம் தான் நம் வான்புலிகள் சிங்கள மக்கள் மீது குண்டு வீசாமல் படை இலக்கினை மட்டுமே தாக்கி விட்டு பறந்த போதும் இருந்தது. இதே அறம் தான் நம் தேசிய தலைவர் மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் இன்றளவும் ஒரு தவறான செய்தியை கூட சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு எதிரிகளை நிற்க வைத்திருக்கிறது.
வரலாற்றின் நெடிய பக்கங்களில் பார்க்கும் போது வேறு எந்த இனத்தினை காட்டிலும் தன் மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும் கரும்புலிகளாக, மொழிப் போராட்ட தீரர்களாக திகழ்ந்து தான் வீழ்ந்து இனம் செழிக்க களம் புகுந்த மாவீரர்கள் உடைய ஒரே இனம் நம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஈகையும், வீரமும் உடைய நம் முன்னோர்களின் வழித் தோன்றலாய் தோன்றி, உலகினை ஒற்றை இயக்கத்தின் வாயிலாக எதிர்த்த தனி மனித ஆளுமையான நம் தேசிய தலைவர் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம். கொடும் துயர்களுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் பெருமை மிகு தலைமையும் அறம் இழக்கா உணர்வினை தக்க வைத்ததுதான் நான்காம் கட்ட ஈழப் போர் நமக்கு விட்டுச் சென்ற பாடம். இந்த பூமிப் பந்தெங்கும் வன்னி முகாம்களில், தமிழக வயல்களில், வளைகுடா நாடுகளின் சுடும் பாலையில், மலேயா காடுகளில், அமெரிக்க, கனடா நாடுகளில், கணினி திரைகளுக்கு முன்னால், என எங்கும் பரவிக் கிடக்கும் தமிழினம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக நம் தொன்ம அறத்தின் தொடர்ச்சியாய் தலைவரும், இயக்கமும் பாதுகாத்த இந்த அற உணர்வுதான் இருக்கிறது.
செஞ்சோலை குழந்தைகளை கூட குண்டு வீசி கொல்லும் கொடிய சிங்கள ராணுவத்திற்கு எதிராக அற உணர்வுடன் தலைவர் நடத்திய மரபு வழிப் போரும், பிடிபட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகவும் மதிப்புடன் நடத்திய பண்பும் நம்மை மேன் மேலும் பெருமிதத்திற்கு உள்ளாக்குகிறது. தொடர்ச்சியான கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தன் மக்களை பாதுகாத்த உளப்பாட்டின் உறுதி நம் தேசிய தலைவரின் மதிப்பினை பன் மடங்கு உயர்த்துகின்றன.
ஒரு இனம் வீழ்வதும் ..பிறகு வீழ்ச்சியினை கடந்து மீள்வதும் உலகத்தியற்கை. தேசிய இனங்களின் தன்னுரிமைக்கான விடுதலைப் போராட்டங்கள் போராட்டங்கள் உலக நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகின்றன. ஆனால் வேறு எந்த இனத்திற்கும் மேதகு.பிரபாகரன் போல அறம் வழி நின்ற தலைவர் கிட்ட வில்லை. தன் குடும்பத்திற்காக தன் இனத்தினை காட்டிக் கொடுத்த தலைவர்களை ஈழ விடுதலைப் போர் நமக்கு அடையாளம் காட்டியது. ஆனால் தன் இனத்திற்காக தன் குடும்பத்தினரையும் தலைவர் இழக்க சித்தமாக இருந்ததை நாம் அறிகிறோம்.அதற்கு உதாரணமாக இன்னும் சிங்கள ராணுவத்தின் கோரக் கரங்களின் ஊடாக தேசிய தலைவரின் பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள்.
தேசிய தலைவரை எந்த ஆன்ம சக்தி இப்படி நேர்மை வலிவோடு செயல்பட வைக்கிறது என்று நாம் சிந்திக்க துவங்கினால் நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்று விடுகிறோம். தமிழ் தொன்மத்தின் அறவுணர்ச்சி முழுவதையும் உள்வாங்கிய ஒரு மனிதராய் நம் தேசிய தலைவர் இருக்கிறார். தன் வாழ்வு முழுக்க மக்களுக்கான ஒன்று என்பதனை அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். சாதாரண மனிதர்களுக்கு உண்டான பலவீனங்கள் எதனையும் அவரிடம் காண முடியாமல் போவதற்கு காரணமும் அதுதான். மேதகு.பிரபாகரனின் அறவுணர்ச்சிதான் கடும் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை காப்பாற்ற செஞ்சோலை சிறுவர் இல்லமாக உருவெடுத்தது. ஆண் குழந்தைகளுக்காக காந்தரூபன் அறிவுச் சோலையாக,போரினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மீள் வாழ்விற்காக வெற்றிமனையாக, இன ஒடுக்கு முறை யுத்தத்தினால் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட முதியவர்களை காக்க மூதாளர் பேணகமாக,போரினால் தொடர்ந்த வறுமையை அழிக்க தமிழர் புனர் வாழ்வு கழகமாக, மருத்துவ பணிகளுக்கு தியாகி திலீபன் மருத்துவ சேவை மையமாக என பரிமாணங்களில் தமிழ்த் தேசியத்தலைவரின் அறவுணர்ச்சி மிளிர்ந்தது.
எமது மன உறுதிக்கு எதிரி சவால் விடுகின்றான்.இந்த சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியை தவிர வேறு ஆயுதங்கள் தேவை இல்லை
-1991 மாவீரர் தின உரையில்..

மேதகு. பிரபாகரன் ஆயுதங்களை மட்டும் நம்பி போராடிய வெறும் கலகக் காரர் இல்லை . மாறாக ஆன்ம உறுதியோடு சுதந்திர வாழ்விற்காக போராடிய புரட்சியாளர் அவர். சங்க இலக்கியங்கள் ஊடாகவும், நெடிய தமிழ் பண்பாட்டு பாரம்பரிய விதைகள் மூலமாக இயல்பாகவே தமிழன் என்கிற முறைமையின் தலைவர் பெற்ற அறவுணர்ச்சிதான் போர் களத்தில் ஆயுதங்களை விட வலிமையான ஆன்ம உறுதியாக உருவெடுத்தது.
எங்கள் இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நாங்கள் தேசிய விடுதலைக்காக போராடி வருகிறோம்.எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கெளவரத்துடனும் வாழுகின்ற புனித உரிமையை பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம்.(1984-ல் அனிதா பிரதாப்பிற்கு அளித்த பேட்டியில் )

தேசிய தலைவர் தன் நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். உலகம் முழுதும் வாழுகின்ற தமிழர்களின் கரங்களில் இன்று ஈழ விடுதலைப் போர் கையளிக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோலன் ஹிட்லரால் மாண்ட யூத இனம் எப்படி தங்களுக்கான ஒரு நாட்டினை சமைத்தார்களோ, அதே போல உலகத் தமிழர்கள் தங்களுக்கான ஈழ நாட்டினை என்ன விலை கொடுத்தேனும் அடைந்தே தீர வேண்டும். நாம் இந்த விடுதலைப்போரில் அளவிற்கு அதிகமாகவே விலை கொடுத்து விட்டோம். நாம் இழந்த உறவுகளின் நினைவு எப்போதும் நம் உள்ளத்தின் உச்சாணிக் கொம்பில் நிலை நிற்க வேண்டும். புதைக் குழிகளுக்குள் புதையுண்டு போன எண்ணற்ற தமிழர்களின் இறுதி மூச்சு இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது என்ற கவனப்பாடு நம் மனதில் என்றும் வேண்டும்.

தமிழின இளைஞர்கள் மற்ற இன இளைஞர்களை காட்டிலும் உள்ளம் முழுக்க வீழ்ந்த வன்மத்துடன் செயல் புரிய வேண்டும். கல்வி,பொருளாதாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் இழப்புகளின் தீரா துயர் தந்த வன்மத்துடன் போராடி தமிழர்கள் முதலிடம் அடைய வேண்டும். சிறுக சிறுக பெருகி..ஆர்ப் பரிக்கும் மக்கட் வெள்ளமாய் தமிழர்களுக்கான தாயகத்தினை அடைய போராடுவதற்கான மன நிலையை தக்க வைப்பதுதான் நாம் மாவீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க இயலும்.
கடும் துயர் சூழ்ந்த போதும் அறம் காத்த சான்றோனாய் தலைவர் பிரபாகரன் இருக்கிறார். அவர் குறித்த பெருமிதமும், தீவிர செயல்பாடுமே நம் எதிர் காலத்தினை தீர்மானிக்கும்

12 கோடி தமிழர்களின் ஒற்றைக் கனவு தமிழீழம். அதை நாம் எந்த விலை கொடுத்தேனும் அடைந்தே தீருவோம். தமிழர்கள் ஒருவருகொருவர் சந்திக்கும் போது அடுத்தாண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று சொல்லுவோம். அறம் வழி நின்று உலகத்திற்கு தமிழரின் துயர் சூழ்ந்த போதும் அகலா அறத்தினையும், மாறா மறத்தினையும் உணர்த்திய தேசிய தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என உரக்கச் சொல்லுவோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .

பழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. மற்றபடி மனோஜ், பத்மபிரியா, கனிகா ,சுமன் என விரிவான நட்சத்திர கூட்டம் மலையாள மண்ணிற்கே உரிய மிகை இல்லாத நடிப்பில் மிளிர்கிறார்கள். இசை நம் இளையராஜா. குன்றத்து எனத் தொடங்கும் அந்த பாடலின் இசை மெய்க்குள் புகுந்து மனதை மயக்கச் செய்கிறது.பின்னணி இசையிலும் இளையராஜா தான் மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். மலையாள பண்பாட்டினை ஒவ்வொரு காட்சியிலும் புகுத்தி இருப்பது திரைமொழியின் இயல்பான நகர்விற்கு உதவுகிறது. எளிய ஆங்கில வசனங்கள் பல வருகின்றன. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவியாக அக்காட்சிகளில் மட்டும் தமிழில் உதவி தலைப்பு (sub-title) பதித்து இருக்கலாம்.

பழசிராஜா கதை மிக எளிமையான ,நமக்கு ஏற்கனவே பழக்கமான கட்டபொம்மன் கதைதான். வரி கொடுக்க மறுக்கும் கேரள வர்ம பழசிராஜாவினை தனது சர்வாதிகார பலத்தினால் அடக்க துடிக்கிறது ஆங்கில ஏகாதிபத்தியம். அதை எதிர்த்து பழசிராஜாவும், அவரது ஈடு இணையற்ற படையினரும் போராடி வீரமரணம் எய்கின்றனர். காட்டிக் கொடுக்க இன துரோகியாக சுமன் கதாபாத்திரம்.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். மக்களை நினைக்கும் தலைவன். அவரின் விசுவாசமான தளபதிகள். காட்டிக் கொடுக்க துரோகி. மண்டியிடாத வீரம் உடைய தலைவன் மக்களை தன்னை விட்டு போக சொல்லி வலியுறுத்தும் போதும் , அந்த அடர்ந்த காட்டின் நடுவே உணர்வின் ஊற்றாய் தலைவன் திகழ்வதை காணும் போதும் நமக்கு ஈழம் நினைவிற்கு வராமல் இருக்கமுடியாது.
உலகம் முழுக்க ஏதோ பகுதியில் சிந்தி சிதறிக் கிடக்கிற நம் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஈழம் என்ற வலியையும் , நம் தலைவர் பிரபாகரன் குறித்த பெருமிதத்தினையும் சுமந்தே வாழ்கிறோம். எதிரியாக வரும் ஆங்கில அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விருந்து உபசரித்து அனுப்பும் காட்சியில், பிடிபட்ட சிங்கள வீரர்களை கண்ணியமாக நடத்திய நம் தலைவரின் கண்ணியம் தெரிகிறது. இப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. எந்த விஷயமும் எனக்கு நம் தேசிய தலைவர் குறித்த பெருமிதத்துடன் தான் நகர்கிறது. அச்சமயங்களில் நான் கண் கலங்கி விடுகிறேன். பழசிராஜா திரைப்படத்தில் அழகியலுக்காகவும், கதாபாத்திர வலுவிற்காகவும் புனைவு இருக்கலாம். ஆனால் சமகாலத்தில் நம் தேசிய தலைவர் எவ்விதமான மிகைப் படுத்தலும் இல்லாமல் இயல்பாகவே அறம் காக்கும் சான்றோனாய் வாழ்வது உண்மையில் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமைதான். பழசிராஜா திரைப்படத்தில் பெண்கள் போரிடுகிறார்கள். கடைசி நொடி வரை நம்பிக்கை இழக்காமல் தியாகம் செய்ய தயங்காமல் தளபதிகள் போர் புரிகின்றார்கள் .இவை அத்தனைக்கும் நம்மிடத்தில் மாவீரர்களாய், கரும்புலிகளாய், பெண் புலிகளாய் வாழ்ந்த நம் ரத்த உறவுகள் உதாரணமாக இருக்கிறார்கள். மலையாள மண்ணிற்காக இரண்டு நூற்றாண்டு முன்னால் இருந்த ஒரு வீர வரலாற்றை திரைப்படமாக எடுத்த்திருக்கிறார்கள். எங்களின் போராளிகளோ சம காலத்து சாட்சிகளாக ,எங்களின் பெருமைமிகு அடையாளங்களாக , எங்கள் ஆன்மாவின் உள்ளார்ந்த வேட்கையாக உறைந்து இருக்கிறார்கள். தமிழர்களுக்கான தேசம் தமிழீழ தேசம். அதை நாங்கள் எந்த விலைக் கொடுத்தாவது , எங்கள் மாவீரர்களின் நினைவுகளோடு அடைந்தே தீருவோம்.
மற்ற படி பழசிராஜா – ஒரு தமிழனுக்கு ஈழம் குறித்த உணர்வினையும், வலியினையும், தலைவர் குறித்த பெருமிதத்தினையும் அளிக்கும் திரைப்பட அனுபவமாக கண் முன்னால் விரிகிறது.
கடைசியாக ஒன்று: முதல்வர் கருணாநிதி இத்திரைப்படத்தினை பார்த்து விட்டு மம்முட்டியை பாராட்டினாராம். இது தான் எனக்கு ஆச்சர்யம். குற்ற உணர்ச்சி அல்லவா வந்திருக்க வேண்டும்?

பேராண்மை -புனைவின் அரசியல்

சமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த வசனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் கதாநாயகனின் கதாபாத்திரம் திரையில் ஏதாவது ஒரு காட்சியில் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தனது குரலை பதிவு செய்யும் என ஆவலாய் நாம் அமர்ந்திருந்தால்…ஏமாற்றம் தான் .மேலும் இந்தியக் கொடிக்காவும், நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கவும், துப்பாக்கி தூக்கி தாக்கவும் அர்ஜீனும், விஜயகாந்தும் போதும். அதற்கு அரசு இயந்திரங்களால் சூறையாடப்படும் ஆதி சமூகத்தின் வன மனிதன் தேவை இல்லை. வகுப்பறையில் மார்க்சிய கூறுகளை எளிமையாக விளக்கும் கதாநாயகன் காட்டின் நடுவே அதிகார மையத்தின் சின்னமாக இருக்கும் இந்திய நாட்டிற்கு உயிரைக் கொடுப்பதாக சூளுரைப்பதும், சாதீய ஒடுக்குமுறையினை சகித்துக் கொண்டு மெளனித்திருப்பதும் முரண்களே.. தேசிய இனங்களின் விழிப்பு நிலை சமீப காலமாக உச்ச நிலைக்கு விரையும் இக்காலக் கட்டத்தில் பேராண்மை நிறுவ விரும்புவது எவற்றை..?
1.இந்திய ஏவுகணையை தகர்ப்பதற்காக காடு மலை ஏரி என கண்ணன் தேவன் டீக்காக அலையும் பி.டி.உஷாவினை போல அலையும் சர்வதேச கூலிப்படைக்கு எதிராக போராட விளிம்பு நிலை மனிதர்களும் தயாராக வேண்டும்- தங்களுக்கு எதிராக நாடும், அதன் ராணுவ,காவல் கட்டமைப்பு இயந்திரங்களும் நிகழ்த்தும் வன்முறைகளை ஏற்றுக் கொண்டு அவர்களும் நாட்டினை காக்க போராட வேண்டும் என்று ஜனநாதன் சொல்ல வருகிறாரா?
2. ஆதி வனத் தமிழின பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறையை விட இந்திய தேசியம் உயர்வானது என்று கதாநாயகன் மெளனமாக சகித்திருப்பதும், அதை காக்க போராடுவதும், இந்தியா எனும் பெருமிதத்திற்கு முன்னால் எளிய மக்களின் மீதான சாதீய, அரசு வன்முறை எதிர்வினை புரியத் தக்கதல்ல என்பதனை இறுதிக் காட்சி வரை உறுதி செய்வதன் மூலம் மக்களை விட அரசின் எல்லையற்ற அதிகாரம் ( THE KING CAN DO NO WRONG) என்பதை ஜனநாதன் நிறுவ முயல்கிறாரா.?

தெளிவில்லாத திரைமொழியும், அது நிறுவ முயலும் தத்துவமாக இருக்கும் இந்திய தேசிய உணர்வு காட்சிகளும் நம்மை மிகவும் சோர்விற்கு உள்ளாக்குகின்றன.. உன்னைப் போல் ஒருவன் ஒரு இந்திய பார்ப்பன இந்துத்வா குரலாய் ஒலித்தது..பேராண்மை இந்திய தேசிய மேலாதிக்கத்தினை எளிய மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறைகளை மெளனமாக கடப்பது போன்ற வழிமுறைகள் மூலம் நிறுவ முயல்கிறது. முன்னதை விட பின்னது மிகவும் அபாயகரமானதொன்றாக நான் உணர்கிறேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் ,ஆணிவேர்,கோவில் பட்டி வீரலட்சுமி ஆதிக்க எதிர்ப்புணர்வு போன்ற படங்களுக்கான இந்திய தேசியத்தின் உரத்த, சாசக மறுமொழியாக பேராண்மை இருக்கின்றது.

இயற்கை, ஈ போன்ற படங்களை வைத்து பேராண்மையை கடக்க முடியாது. தமிழ் மொழி கல்வி பயின்ற கதாநாயகிக்கு மட்டும் அந்த ஆதி இளைஞன் மீது காதல் வருவதாக சித்தரிப்பது போற்றத் தக்கது என்றால் அந்த கதாநாயகியும் மற்ற ஆங்கில கல்வி பயின்ற மேல்சாதி,மேல் வர்க்க தோழிகளுக்கு கட்டுப்பட்டவளாக காட்டப்படுவது சலிப்பை தருகிறது. தமிழ் மொழி பயின்றவள் என்றால் திரை மொழியில் பலவீனமான ஒரு கதாபாத்திரமாக சித்தரிப்பது பல படங்களில் தொடர்வது போல இதிலும் தொடர்கின்றது. மற்றப் படி என்.சி.சி மாணவிகளுக்கு ஏவுகணை தொழிற்நுட்பமும், அதி நவீன இயந்திர துப்பாக்கிகளும் கைவரக் கொடுக்கும் கல்வி நம் நாட்டில் எங்கே இருக்கிறது.., அதி பாதுகாப்பு உடைய ஒரு இடத்தின் அருகில் மிக எளிதாக மற்றொரு ஏவுகணையை நிறுவுவது ….போன்ற துளைகள் நிரம்பிய திரைமொழியில் பேராண்மை வடிவேல் கண்கலங்க பேசும் ஒரு வசனத்திலும், உடல் ஊனமுற்ற அந்த ஆதி மனிதன் தன் கைகளால் நடந்து தாக்க முயல்கிற மூர்க்கத்திலும் – நின்று விட போராடுகிறது.

பிழைகள் அற்ற திரைமொழி சாத்தியமில்லைதான்.. ஆனால் பேராண்மை சாத்தியப்படுத்த முயலும் எதிர்வினையற்ற சாதீய, அரசு இயந்திரங்களின் வன்முறை காட்சிகள் மறுக்கவே இயலா பிழைகள் தான்.

நன்றி: தோழர்.விஷ்ணுபுரம் சரவணன்

பறை மொழி அறிதல்..

அடி விழ… அடி விழ

அதிரும் பறை.
தலைமுறைக் கோபம்.
-மித்ரா

குடந்தை தமிழ்க் கழக பொறுப்பாளர் தோழர்.சுடர் பறைக் கற்றுக் கொள்ள போவதாக என்னிடம் கூறிய போது எனக்கு வியப்பும், மகிழ்வும் ஏற்பட்டது. பறை என்ற தொன்மத்தின் மீது நான் வெகு நீண்ட காலமாக சற்று மிதம் மிஞ்சிய ஈர்ப்பில் இருந்தேன். தமிழ் தொன்மக் கூறான பறை என்ற இசை வடிவம் திட்டமிட்டு வந்தேறிய சாதீயக் காரணிகளினால் ஒதுக்கப் பட்ட கலையாகவும், அதை உள் வாங்கி இசைத்த மனிதன் விளிம்பு நிலை பிறவியாகவும் திரிக்கப்பட்டதன் அவலம் உணர்ந்த பின் ..என் தொன்மக் கலையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படாமல் என்ன செய்யும்..?

கலை இலக்கிய இரவுகளில் மக்கள் நடுவே பறை இசை நிகழ்த்தப்படும் போது என்னையும் அறியாமல் பறை இசைக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தேன்.ஆண்டைகளின் மீதுள்ள கோபத்தினை..உழும் மாடுகளின் மீது செலுத்திய என் தமிழனின் கோபம் ..பறை மீது ..இசையாய் மாறியது என்று நானே உணர துவங்கியக் காலக் கட்டத்தில் நான் இன்னமும் பறை அருகே நெருங்கினேன்.

என் பூர்வீக கிராமத் திருவிழாக்களின் போது பறை இசைக் கலைஞர்களோடு மிக நெருக்கமான மனிதனாய் நெருங்கியதும் பறை மீதுள்ள பற்றின் காரணமாகத்தான்.உலகம் முழுக்க ஆதி மனித இனங்களின் இசைக் கருவியாக இழுத்து தைக்கப்பட்ட மிருகங்களின் தோல்தான் இருந்து வருகிறது என்பதும்..ஆப்பிரிக்க பூர்வீக மக்களின் தொன்ம இசை வடிவமும் நம் பறை போன்ற ஒன்றுதான் என்பதும் என்னை வெகுவாக கவர்ந்தன.
அதனால்தான் தோழர் சுடர் அழைத்தவுடன் நான் மிகவும் உற்சாகத்தில் விஷ்ணுபுரம் சரவணனை அழைத்துக் கொண்டு பறை இசைப் பயிற்சி நடக்கும் மைதானத்தினை நோக்கி விரைந்தேன்.

.
நாங்கள் அங்கே சென்ற போது ஒரு பூசைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு பறைகளும், சில மூங்கில் துண்டுகளும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தன.ஒரு வயதான பறை ஆசிரியரும், அவரது மகனும் பூசைக்கான பணிகளில் இருந்தனர். அதில் அந்த வயதான பெரியவருக்கு இடது கை சற்று ஊனமாகவும், இரண்டு விரல்கள் இல்லாமல் இருந்ததும் கவனிக்கத் தக்கதாக இருந்தன.பூசைகள் முடிந்து பயிற்சி துவங்கும் போது பறை நாம் தமிழர் குடந்தை ஒருங்கிணைப்பாளர் தம்பி புகழ் மாறன் கரங்களில் இருந்தது. மற்றொரு பறை கற்றுக் கொடுக்கும் வயதான ஆசிரியர் கையில் இருந்தது.நான் கண்களில் ஆர்வம் தெறிக்க கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில் பறை அடிக்கும் குச்சிகளை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டது.புகழ் மாறன் முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பறை அவ்வளவு இலகுவாக வரவில்லை. அடுத்தது பறை எனக்கு அளிக்கப்பட்டது.
.
இழுத்துக் கட்டப்பட்ட அந்த பழுப்பேறிய பறையினை மெதுவாக நான் தடவிப்பார்த்தேன். எனது புலன்களில் இனம் புரியாத நடுக்கம். எனக்குள் இருந்த என் இனத்தின் ஆதி மரபுணுக் கூறுவினை யாரோ தொட்டு எழுப்பியது போல ஒரு உணர்வு. மெலிதாய் தட்டிப்பார்த்தேன். பறை அதிர்ந்தது. அதன் அதிர்வில் என்னை சுற்றியுள்ள அனைத்தும் அசையாத் தன்மை உடையதாக மாறி விட்டதாக நான் உணர்ந்தேன்.

நானும் என் மூதாதையின் கரங்களை உடையவனாக மாறிப் போனேன். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது என்னுள் இறங்க துவங்கியது. ஆசிரியர் அடிக்கத் துவங்கினார். நானும் அடிக்கத் துவங்கினேன். மிக எளிதாக பறை என் வசப்பட்டது.மேலும் மேலும் என்னுள் உக்கிரம் ஏறிக் கொண்டே இருந்தது.வானில் நிலா காய்ந்துக் கொண்டிருந்தது. என் முன் நிற்பவர்கள் மறைந்துப் போனார்கள். நான் அடித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஒழுங்கு வயப்பட்ட ஒலியை என் இனத்தின் வலியை நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழ நினைவும், வலியும் என்னை மேன் மேலும் உக்கிரப்படுத்தியது. உடலும் மெலிதாக ஆடத் துவங்கியது. அடித்துக் கொண்டே இருந்தேன். தாளக் கட்டுக்கள் மாற்றி வாசித்து காண்பிக்கப்பட்டும் என்னுள் உள்ள வலியும் ,உக்கிரமும் என் தொன்மத்தில் கிளர்ந்து என்னை மயக்க நிலைக்கு இட்டு சென்றது. என் முன்னால் என் மக்கள் பிணங்களாய் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பறை மேலும் உக்கிரமடைந்தது. யாரும் எங்களுக்கு இல்லை..என்ற உணர்வும் தவிப்பும் என்னை தாங்க இயலா சோகத்திற்கு இட்டு சென்றன..என் பறையில் என் மூதாதை உக்கிரமாக வெளிப்படுவது போன்ற உணர்வு. கரங்கள் வலித்தன. கையில் வைத்திருந்த குச்சிகள் பிய்த்துக் கொண்டு போயின.நானும் ,அந்த வயதான பெரியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தோம்.

கரங்களின் வலி அதிகரிக்கவே..அடிப்பதை நிறுத்தினேன். கரங்கள் வலிப்பதாக கூறியவுடன்.. தம்பி புகழ் நம் தேசிய தலைவரை நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். நான் மீண்டும் உக்கிரமாக அடிக்க துவங்கினேன்.

பறை மொழி மிகவும் வசீகரமானது மட்டுமல்ல..உள்ளுக்குள் ஊறும் அனைத்தையும் கிளறக் கூடியது. சமீப கால எனது வலி மிகுந்த துயர் மனநிலை பறையுடன் மிக எளிதாகப் பொருந்திப் போனது.ஒவ்வொரு அதிர்விலும் நூற்றாண்டுகளை கடந்து என் இனத்து மூதாதையின் அருகே இருந்து விட்டு வருவது போன்ற உணர்வு. வேறு எந்த இசை வடிவமும் என்னை இவ்வாறு அலைக் கழித்தது இல்லை.என் நிகழ்கால வலியை..எனது துயரத்தினை எனது ஆதி துவக்கத்தின் கரங்களில் வைத்துகொண்டு அழுவது போன்ற அனுபவத்தினை பறை எனக்களித்தது..அந்த இரவும்..அந்த வயதான ஆசிரியரும், அந்த ஒழுங்கமைவு இசையும் என் மனநிலையை பிறழச் செய்தன.சம காலத்தில் என் கண் முன்னரே என் இனம் அழிக்கப்பட்டதை எண்ணி எண்ணி எனக்குள் ஊறிக் கொண்டே இருக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடாய் பறையின் மொழி வெளி வந்தது.

ஒரு ஒலிக்கும்..உணர்வுகளுக்கும் இடையில் நிகழும் ஒத்திசைவு பறையில் நிகழ்வது போல வேறு எதிலும் நிகழ்வது இல்லை.

பறை எனக்கானதும்..என் தொன்ம இனத்தின் இசைக்கானதும் ஆகும்.ஆண்டாண்டு காலமாக அதிர்ந்துக் கொண்டிருக்கும் பறையின் மொழி மனிதனின் துயரத்தினை,வலியை, கோபத்தினை ,உக்கிரத்தினை சொல்கிறது.
வாசித்து முடித்ததும் அந்த வயதான பெரியவர் என்னை இறுக அணைத்து முத்தமிட்டார். அதிர்ந்து அதிர்ந்து உணர்வேறிய அவரது விரல்களும் அப்போது நடுங்கின என்பதை நான் உணர்ந்தேன்.

. வானம் இருட்டிக் கொண்டு மழை பெய்ய துவங்கியது.

மிதக்கும் வலி…


இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்
உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….
தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்ட
உயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.
தனிமையில் கசியும் என் கோப்பை
முழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..
வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்
ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ரசாயன எரித்தலில் கருகிப் போன
பிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….
என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றை
விளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறது
கருப்பை ரத்தச் சுழி ஒன்று….
நாசியை புணரும் ரத்த வாடை
என் விழிகளில் மாற்ற இயலா
வடுவாய் எஞ்சி நிற்கிறது..

தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்
அறுந்து தொங்கும் ஒற்றை ரத்த விரல் நீட்டி..
தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறந்த பிணங்களின்
வாயில் எச்சில் கோழையாய் வழிகிறது இறையாண்மை..

.
ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
எல்லாம் முடிந்த பின்னர்.
தனிமையாகத் தான் இருக்கிறேன்
என உறுதி செய்துக் கொண்டு.
.

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.)

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி …வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர்க் கொள்ளலாம்.
இந்த வக்கிரக்காரர்களின் பின்புல அரசியல் மிக கீழ்த்தரமானது. மக்கள் அவலத்தின் ஊடே இவர்கள் தேடுவது எவ்விதமான நியாயத் தீர்வுகளும் இல்லை. மாறாக இவர்களின் சொல்களின் ஊடாக கசியும் மனித இறைச்சி வாசனை கொடுங்கோலன் ராஜபக்சே மனநிலையை விட அபாயமானது. புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு வாயே முளைத்திருக்கிறது..முளைத்ததும் கள்ளிப் பாலாய் சொட்டுகிறது. இது போன்ற நபர்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் அபாயம்தான். இவர்களை தனிமைப்படுத்துவதும்..இவர்களின் பின்புல அரசியலை ஊரறியச் செய்வதும்தான் நம் பணியாக இருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்தினை வாய் கூசாமல் விமர்சனம் என்கிற பெயரில் ஏசவும், தூற்றவும் துணிகிற இவர்களது சொல்லாடல்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன தெரியுமா..?
இவர்களின் ஒருவரான சுகன் ..சென்னையில் நடந்த சமீபத்திய கூட்டமொன்றில் சிங்கள தேசிய பாடலை பெருமையுடன் பாடுவதில் இருந்து இவர்கள் யார் …? இந்த நரிகள் யாருக்காக ஓலமிடுகின்றன…? என்பது தெரியவில்லையா..?

தோழமையுடன்

மணி.செந்தில்

கும்பகோணம்

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

ஈழ உறவுகளுக்கு…
தாயகத் தமிழகத்திலிருந்து…மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. உங்களின் முகத்தை பார்க்க கூட எங்களுக்கு திராணியில்லை. உங்களின் துயரத்தை கேட்டு பொங்கி அழ கூட எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
இங்கே சினிமா ரசனையும்..மாத சம்பளம் வாங்கும் வர்க்கமும்…போதையில் முழ்கிக் கிடக்கும் கூட்டமும் அரசியலை தீர்மானிக்கின்றன..இங்கே யாருக்கும் தொன்மம் குறித்த புரிதலோ..தமிழ்ச் சமூகம் குறித்த அறிதலோ இல்லை.
மிக எளிதாக நாங்கள் விலைபோனோம் உறவுகளே… எங்களை நாங்களே காட்டிக் கொடுக்க சில ரூபாய் தாள்கள் போதுமானதாக இருந்தது. எங்களின் தொன்ம பெருமை மிகு அடையாளமாய் இருந்த உங்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்கள் மேடை ஏறும் போது..நாங்கள் தலைவர்கள் தொண்டை கிழியும் அளவிற்கு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு இருந்தோம். தமிழ் மரபுகளை மீட்டெடுத்து..இந்த தலைமுறையின் கண்களுக்கு முன்னாலேயே நாடு கட்டி ஆண்டு பார்த்த எங்கள் உறவுகளான உங்களை அழிக்க மூலமாய் இருந்தவர்களின் கரங்களில் நாங்கள் மலர்க் கொத்து கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் தொப்புள் கொடி நம்மை துவளாமல் காக்கும் என நம்பிக்கையோடு இருந்தீர்கள் உறவுகளே….இறுதி வரைக்கும் காத்திருந்தீர்கள்.ஆனால் நாங்கள் ..கேவலம். ஒரு சாராயப் பாக்கெட்டிற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும், இருநூறு ரூபாய் காசுக்காகவும் உங்களை கைக் கழுவி விட்டோம் உறவுகளே…
நீங்கள் பசியால் கதறிய போது..கூக்குரல் கேட்க கூடாது என மருத்துவமனையின் ஏசி அறைக்குள் ஒளிந்துக் கொண்டோம்..
சாவுக் குழிகளுக்குள் நின்றுக் கொண்டு யாராவது காப்பாற்ற வாருங்களேன் நீங்கள் என கதறிய போது ..நாங்கள் கடற்கரை காற்று வாங்க … மதிய உணவு நேரம் வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினோம்.
மழை மழையாய் பொழிந்த குண்டுகளினால் காயம் பட்டு…வலி பொறுக்க முடியாமல் நீங்கள் சயனைடு குப்பிகளை மென்ற போது..நாங்கள் தேர்தல் வெளிச்சத்தில் எங்களை மறந்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் முடிந்தது. வதை முகாம்களில் சிக்குண்டு கிடக்கிற உங்களை நாங்கள் சிந்தித்து பார்க்கவே கூடாது என்பதற்காக..விதவிதமான திரைக்கதைகள்..விதவிதமான நாடகங்கள்..
ஈழ உறவுகளை காப்பாற்றாமல் ..இந்த ஆட்சி இருந்தால் என்ன..போனால் என்ன என்று உருக்கமாய் அய்யகோ கூப்பாடு போட்டோம். .
இங்கு அனைத்திற்குமே ஒரு விலை இருக்கிறது..
எனவே தான் எங்களது ஊழலுக்கும் ,பதவிக்குமான விலையாய் உங்களை நிர்ணயித்தோம்.
ஆனால் டெல்லிக்காரன் புத்திசாலி. இந்த முறை அவன் வாங்கியது உங்களை அல்ல உறவுகளே..
எங்களை.
எங்களை நாங்களே ஒரு விலை போட்டு விற்றுக் கொண்ட கூத்திற்கு இங்கே வித்தியாசமான ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது பெயர் தேர்தல்.
இனி தாயகத் தமிழகத்தில் இப்போது வாழும் இந்த தலைமுறை தன் வாழ்நாள் முழுக்க துயர் மிகு வலியை சுமந்தே வாழும். இதற்கு அப்பாலும் உங்களை நாங்கள் எங்கள் உயிரினும் மேலாய் நேசித்தோம் உறவுகளே..அதை நாங்கள் முத்துக்குமாராய் நிரூபித்தும் காட்டினோம்.,தெரு தெருவாய் அலைந்து மக்களை திரட்டி..ஆர்பார்ட்டம், பேரணி, உண்ணாவிரதம், மறியல், மனித சங்கிலி என அனைத்தும் செய்தோம்.ஆனால் இந்திய அரசு எங்களை சிறிது கூட மதிக்க வில்லை. எப்படி எங்களை மத்திய அரசு மதிக்கும்..? பதவிக்காகவும், ஊழல் பிழைப்பிற்காகவும் எங்கள் தலைவர்கள் தான் டெல்லியின் காலை தொழுதுக் கொண்டிருக்கிறார்களே….எப்படி மதிக்கும்…?…எல்லாம் முடிந்த பின்னர்…என்ன செய்வது என்று தெரியாமல் வலி மிகுந்த மெளனத்தோடு தலைக் குனிந்து நடக்கிறோம்… பிறர் அறியாமல் தனிமையில் அழுகிறோம்.. தலைவரால் நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.. நாங்கள் தலைவர்களால் அழிந்துப் போனோம். இது தான் உண்மை.தமிழர்களுக்கான தேசத்தை நீங்கள் அவசியம் கட்டமைப்பீர்கள். உறவுளே… அதில் எனக்கெல்லாம் எள்ளவும் சந்தேகமில்லை..ஆனால் அந்த வெற்றியில் நாயினும் இழி பிறவிகளான எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் எழுவதும் …வாழ்வதும் சாத்தியம் தான் …ஆனால் நாங்கள்.?
துரோகங்களை வெல்லுங்கள்…
யாருக்கும்..எதற்கும் விலை போகாதீர்கள்…
நல்லத் தலைவனின் வழி தொடருங்கள்..
இல்லையேல் நாளை நம்முடையதல்ல..
அதற்கு சாட்சியாக… தோற்ற சமூகமாக..உங்கள் தாயக தமிழ் உறவுகள்
நாங்கள் இருக்கிறோம்..
எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..
எப்படி வாழக் கூடாது என்பதற்கு.
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
மணி.செந்தில்

Page 45 of 53

Powered by WordPress & Theme by Anders Norén