இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி’. மற்றொன்று, களம் வெளியீடான ‘விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிர‌தமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயர‌ங்களும்)’. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துக்களுடனும், செய்திகளுடனும் வெளிவந்துள்ளன. முந்தைய புத்தகம், சி.பி.ஐ. ‘தயாரித்து’ வைத்த‌ புலனாய்வுக் குறிப்புகளின் அடிப்படையிலும், பிந்தைய புத்தகம் கொலை வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இராபர்ட் பயஸின் சுயசரிதைக் குறிப்புகளின் பின்னணியிலும் இராஜீவ் காந்தி கொலை வழக்கை அணுகுகின்றது. சவுக்கு வெளியீடு, சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவினை லேசாக‌ கன்னத்தில் தட்டிவிட்டு, ‘வெல்டன் பாய்ஸ்’ என்று உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இரண்டாவது புத்தகம், சிபிஐ புலனாய்வுக் குழுவின் அராஜகமான, மனிதத் தன்மையற்ற விசாரணை முறைகளின் மீது காரி உமிழ்கிறது.

ஒன்று, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உண்மைக் குற்றவாளிகள் என அவர்கள் மீது, வழமையான போலீஸ் ஜோடனைக் கதைகளை மிகவும் சுவாரசியமாக (எந்த வெட்கமும் இன்றி) விவரித்துச் செல்கிறது. மற்றொன்று, ஈழத்தில் பிறந்ததையன்றி ஒரு குற்றமும் செய்யாத – அந்த ஒரு காரணத்திற்காகவே ஒரு ஈழத் தமிழரும், அவரது சொந்தங்களும் அனுபவிக்கும் கடுந்துயரங்களை மிகுந்த வலியுடன் பதிவு செய்கிறது. முதல் புத்தகத்திற்கு சிபிஐ முன்னாள் இயக்குனர் விஜய்கரன் முன்னுரை எழுதியிருக்கிறார். களம் வெளியீட்டிற்கு பத்திரிக்கையாளர் அய்யநாதன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், மனித உரிமையாளர் பால் நியூமென் ஆகியோர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள்.

சவுக்கு வெளியீடு, இந்தியாவை வல்லரசாக்க வந்த மகத்தான தலைவனாக இராஜீவ் காந்தியை பெருமிதத்துடன் புகழ்கிறது. களம் வெளியீடு, இந்திய அமைதிப் படையை அனுப்பி, ஈழத்தில் இராஜீவ் காந்தி நடத்திய கொலைவெறியாட்டத்தைப் பதிவு செய்கிறது. ‘சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை’ என்பதை முதல் புத்தகமும், ‘நமக்கு எல்லாம் உயிரின் வாதை’ என்பதை இரண்டாவது புத்தகமும் பேசுகின்றன. ராஜீவ் சர்மா எழுதிய புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும், நமக்கு அடக்கமாட்டாத எரிச்சலும், எழுதியவனின் குரல்வளையை முறிக்கத் தூண்டும் கோபமும் ஏற்படுகிறது. இராபர்ட் பயஸின் தரப்பு நியாயத்தைப் பேசும் புத்தகத்தைப் புரட்டும்போது, அடக்க முடியாத கண்ணீரும், இத்தனை ஆண்டுகளாக அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்களே என்ற துயரமும் நெஞ்சை அழுத்திக் கொள்கிறது; உண்மையை வெளிக்கொண்டு வந்த வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், மணி.செந்தில் இருவரது கைகளையும் நன்றியுடன் பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது.

முதலில் சவுக்கு புத்தகத்திலிருந்து இராபர்ட் பயஸ் பற்றிய சிபிஐ குறிப்புகள்…

“…நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்.

சென்னை போரூரில் இருந்த பலசரக்குக் கடை, கொலை நடந்த காலம் வரை இந்தக் கொலைக்குழுவிற்கு, யாழ்ப்பாணம், இத்தாலி, டென்மார்க் மற்றும் கனடாவிலிருந்து வந்த செய்திகளை பரிமாறிக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டது. கொலை நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு பயஸிற்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உள்ளூரிலிருந்து வந்த அந்த அழைப்பின்போது பயஸ் மிக மெதுவாகவே பேசினார் என அந்த பலசரக்குக் கடை முதலாளி எஸ்.ஐ.டி.யிடம் தெரிவித்தார். கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்புவரை பயஸ் வீட்டிற்கு வெளியே ஒரு ஆம்னி வேன் நின்றதை பலநாட்கள் பொதுமக்கள் பார்த்துள்ளனர். அந்த வாகனம் நபர்களை, குறிப்பாக பெண்களை அழைத்துச் சென்றதற்காக பயன்படுத்தப்பட்டது.

அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார். ஜெயக்குமார் ராபர்ட் பயஸின் உறவினர் எனப் பின் தெரியவந்தது…”

இப்போது களம் வெளியீடான ‘விடுதலைக்கு விலங்கு’ புத்தகத்திலிருந்து (களம் வெளியீடு 8, மருத்துமனை சாலை, செந்தில் நகர், சின்னபோரூர், சென்னை – 600 116. விலை ரூ.100) சில பகுதிகள்…

“…காட்டுமிராண்டித்தனமாக என் வீட்டின் உள்ளே நுழைந்த இந்திய இராணுவ வீர‌ர்களின் கர‌ங்களில் பிறந்து பதின்மூன்றே நாட்களான எனது மகன் சிக்கிக் கொண்டான். அன்று மலர்ந்த இளம் ரோஜா ஒன்று, மதம் பிடித்த யானையின் காலடியில் சிக்கிக் கொண்டதைப் போல பந்தாடப்பட்ட எனது பாலகனை இந்திய இராணுவ வீர‌ன் ஒருவன் தூக்கி எறிந்தான். அழுது வீறிட்டபடியே விழுந்த எனது பச்சிளம் பாலகனுக்கு தலையில் பலத்த காயம். தடுக்கப் பாய்ந்த எனது மனைவியையும் எட்டி உதைவிட்டு கீழே தள்ளியது இந்திய இராணுவம். காயம்பட்ட என் பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஓடினோம். ஆனால் சின்னஞ்சிறு மலர‌ல்லவா, சீக்கிர‌மே உயிரை‌ விட்டுவிட்டது. கொடிய மிருகங்கள் உலவும் காட்டில் எளிய உயிர்களுக்கு இடமில்லை. குண்டு மழை பொழியும் நிலத்தில் சின்னஞ்சிறு அபலை உயிர்களுக்கு மதிப்பில்லை.

உயிர்வாழும் ஆசைதான் எத்தனை விசித்திர‌மானது!.. இந்த வேட்கைதான் காயங்கள் மீது காலம் பூசும் மருந்துக்கு மயிலிறகாக உதவுகிறது. நாங்களும் அப்படித்தான்; உயிர்வாழும் வேட்கை தந்த ஆசை. தடுக்கி விழுந்தால், தாங்கிப் பிடிப்பார்கள் என்று உறவுகள் மீது வைத்த நம்பிக்கை. இந்த இர‌ண்டும் தான் எம்மை தாயகத் தமிழகத்தை நோக்கி விர‌ட்டியது…”

“…குழந்தையை இந்திய இராணுவத்திடம் பறிகொடுத்த ஈழத் தகப்பன் ஒருவன் தான், இராசீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று யாரே‌னும் நம்புவீர்கள் என்றால், என்னைப் போன்று பல்லாயிர‌க்கணக்கான தகப்பன்கள் அச்சமயத்தில் இந்திய இராணுவத்திடம் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தார்கள். அவர்களையும் ஏன் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கவில்லை? பழிவாங்குவதற்கும் ஒரு பலம் வேண்டும். அனைத்தையும் இழந்து நிராதர‌வாக வந்து நிற்கும் அலைக்கழிக்கப்பட்ட ஓர் எளியவனிடம் பழிவாங்கும் உணர்வு என்ன?… வேறு எந்த உணர்வும் இருக்காது…”

“..10/06/1991. இந்த நாளை என்னால் உயிர் உள்ளவரை‌ மறக்க இயலாது. நான் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு, சென்னைப் போரூரில் வாடகைக்கு எடுத்துக் குடியிருந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் இருந்த மளிகை கடைக்கார‌ர் பாண்டியன் என்பவர், என் வீட்டிற்கு காவல்துறையினர் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். இந்த இடத்தில் நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். இங்கு நான் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால் நான் அக்கணமே தப்பித்து ஓடியிருக்க முடியும். ஆனால் எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்வரும் கேடுகளை அறியாமல் என் வீட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் இர‌வு ஒன்பதரை‌ மணிக்கு என்னையும் எனது மனைவியையும், எனக்கு இர‌ண்டாவதாகப் பிறந்த 3 மாத குழந்தையையும், எனது உடன் பிறந்த சகோதரியையும் சிபிஐ ஆய்வாளர் இர‌மேஷ், இக்பால் மற்றும் இரு காவலர்கள் விசாரித்துவிட்டு, அனுப்பிவிடுவதாக சிபிஐ அலுவலகம் அமைந்திருந்த மல்லிகைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்பொழுது கூட என் மனதில் பெரிதாக அச்சமில்லை. ஒரு அகதியாய் தஞ்சம் புகுந்தவனின் வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல, இதுபோன்ற காவல் கெடுபிடிகளுக்கு உட்பட்டது என்பதனை நான் நன்கு அறிந்திருந்தேன்…”

“…அந்த அறையில் இருந்த அலுவலர்கள் என்னைச் சூழ்ந்து நின்றனர். அதில் ஒரு அதிகாரி சிவராசன், காந்தன் இருவரை‌யும் தெரியுமா எனக் கேட்டார். எனக்குத் தெரியாது எனக் கூறிய நொடியில், கடுமையான வேகத்தில் என் முகத்தில் ஓர் அறை விழுந்தது. முதல் அடியிலேயே பொறி கலங்கிப் போனேன். பிறகு அங்கு இருந்த அனைவரும் சேர்ந்து கொண்டு அடிக்கத் துவங்கினர். அடி தாங்காமல் கீழே விழுந்த என் மீது ஷு காலால் உதைத்தனர். நான் வலி தாங்காமல் கத்தும் போது நான் கத்திய சத்தம் பக்கத்திலிருந்த என் மனைவிக்கும், என சகோதரிக்கும் கேட்டிருக்க வேண்டும். நான் கத்தும் போதெல்லாம் அவர்களும் கத்திக் கொண்டிருந்தார்கள்..”

“…என்மீது விழுந்த அடிகளும் உதைகளும் ஏற்படுத்திய வலிகளை விட, இவர்கள் ஏன் இப்படி அடிக்கிறார்கள் என்ற வினா ஏற்படுத்திய உறுத்தலே எனக்குக் கடுமையான வலியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அடிக்கும் அடியின் வலி மெதுவாகக் குறையத் துவங்கியது. அப்போது தான் எனக்குப் புரிந்தது நான் மயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று. விழித்துப் பார்த்த போது, நான் அந்த சிமெண்ட் தளம் போடப்பட்ட தரை‌யில் சுருண்டு கிடந்தேன். நான் கிடந்த அந்த சிமெண்ட் தரை‌ முழுவதும் எனது வியர்வைத் தடம்.

எனக்கு அந்த நொடியில் கடுமையான தாகம் எடுத்தது. அங்கே அருகில் நின்று கொண்டிருந்த காவலரிடம் குடிக்கச் சிறிது தண்ணீர்க் கேட்டேன். ஆனால் காவலர் எனக்குத் தண்ணீர் தர‌ மறுத்துவிட்டார். கடுமையான தாகம் ஏற்படுத்தும் துயர‌ம் மிகக் கொடுமையானது. ஒரு குவளை குடிநீருக்காக என் உயிரை‌யும் நான் மாய்த்துக்கொள்ளத் தயாரானது போன்ற மனநிலை. கடுமையான தாகமும் மிகுதியான உடல் வலியும் தந்தக் களைப்பினால், நான் அப்படியே கண்ணயர‌த் துவங்கினேன். அப்போது சுளீர் என்று முகத்தில் ஒரு வலி. அயர்ந்த எனது முகத்தின் மீது அருகில் நின்று கொண்டிருந்த காவலர் குளிர்ந்த நீரை‌த் தெளித்தார். ஏற்கெனவே கலங்கி இருந்த எனது விழிகளில் இருந்து பெருகிய கண்ணீரோடு தண்ணீரும் கலந்து உலர்ந்த எனது உதடுகளின் மீது பட்டது.

நான் எனது முகத்தில் வழிந்த தண்ணீரை‌ நக்கிக் குடித்து என் தாகம் தணிக்க முயன்றேன். அப்போதுதான் ஆய்வாளர் சுந்தர்ராஜன் என்பவர் அந்த அறைக்குள் வந்தார். வந்த வேகத்தில் வேகமாக ஓர் அடி, என் முகத்தில் அடித்தார். என் பல்லில் பலமாக அடிபட்டு இர‌த்தம் கொட்டியது. அந்த நொடியில் இருந்து பாதிக்கப்பட்ட பல்லைச் சிறைக்கு வந்த பிறகுதான் நானே பிடுங்கி எறிந்தேன்.

அந்த இர‌வின் ஒவ்வொரு நொடியும் எனக்கு நினைவிருக்கிறது. மிக நீண்ட வலி மிகுந்த கொடுமையான இர‌வுகள் என் வாழ்வில் வர‌ப்போகின்றன என எனக்கு அப்போதுத் தெரியாது. அந்த இர‌வில் தூங்கவிடாமல் செய்வதற்கு எனக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய வேலை என்னவெனில், என்னைத் தூங்கவிடாமல் துன்புறுத்துவதும், மீறித் தூங்கினால் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்புவதும் தான். விசார‌ணை முறைகளில் தூங்கவிடாமல் துன்புறுத்தும் விசார‌ணை முறை, மனிதனை மிகவும் வதைக்கும் கொடுமையான ஒன்றாகும். களைத்த உடல் கண்ணயரும்போது அதைத் தடுத்தால் அந்த உடல் மேலும் பலவீனமாகி தாங்கமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆட்படும். இப்படி உளவியல் சிக்கலுக்கு ஆட்படும் ஒருவனிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அனுபவங்கள் தந்த பாடங்களைத்தான் காவல்துறையினர் நாளது தேதிவரை‌ கடைபிடித்து வருகின்றனர். இறுதியாக விடியற்காலை என்னை தூங்கவிடாமல் துன்புறுத்திய காவலரே‌ கண்ணயர்ந்துவிட்டார். பாவம் அவரும் மனிதன் தானே. நானும் அப்படியே கண்ணயர்ந்தேன். வெளியே கொடூர‌மான இர‌வு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த பொழுது எனது அறையில் எனக்கு அறிமுகமில்லாத சுபா சுந்தர‌ம், ஓ.சுந்தர‌ம் மற்றும் சிலர் இருந்தார்கள். யார் யாரோ வந்தார்கள். சிவராசன் தெரியுமா, காந்தன் தெரியுமா எனக் கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தெரியாது என நான் சொன்ன அடுத்த நொடியில், அவர்கள் அடிக்கத் துவங்கிவிடுவார்கள். அன்று பகல் முழுக்க என்னை அடித்துக்கொண்டே இருந்தார்கள். என்னை விசாரித்த விசார‌ணை அதிகாரிகளுக்கு நேர‌ம், காலம் கிடையாது. இர‌வு பகல் என்றெல்லாம் அவர்கள் பார‌பட்சம் காட்டுவதில்லை. எப்போதெல்லாம் அவர்களுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னைக் கேள்விகேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே‌ மாதிரி அடித்தால் வலி பழகிப் போய்விடும் என்பதற்காக, அவர்களுக்குத் தெரிந்த வித்தியாசமான நடைமுறைகளை எல்லாம் கடைபிடித்தார்கள்…”

“…என்னைக் கைது செய்து மூன்றாம் நாள் மதியம் என்று நினைக்கிறேன், சிவராசன் எங்கே எனக் கேட்டு என்னை அடித்துக் கொண்டிருந்த விசார‌ணை அதிகாரிகளுக்குத் திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. என் இர‌ண்டு கால்களையும், சேர்த்து கட்டத் துவங்கிய அவர்களின் எண்ணம் குறித்து நான் புரிந்துக் கொண்டேன். நான் ஒத்துழைக்க மறுத்தேன். இருந்தும் அவர்கள் என்னை விடவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தி தலைகீழாக என்னைத் தொங்கவிட்டார்கள். பலமற்ற கயிறு போலும், கயிறு அறுந்து நான் கீழே விழுந்தேன். எனக்கு முதுகில் பலமாக அடிபட்டது. நூறு ஊசிகளை எடுத்து நடு முதுகில் குத்தியதைப் போன்று மிகக் கொடுமையான வலி. வலியின் மிகுதி எனக்கு மயக்கத்தைத் தந்தது. மயங்கினேன். கடுமையான உடல்வலியும், கொடுமையான குடிநீர்த் தாகமும் ஒன்றுக்கொன்று உடன்பிறந்தவைப் போல் என்னை உலுக்கி எடுத்துவிட்டன.

மயங்குவதும், மயக்கம் தெளிய காவலர்கள் முகத்தில் தண்ணீர்த் தெளிப்பதும், அந்தத் தண்ணீரில் நான் நாக்கை நனைத்துக் கொள்ளுவதுமாக நேர‌ங்கள் கழிந்தன. எதன் பொருட்டும் காவலர்கள் அடிப்பதை நிறுத்தவே இல்லை. நேர‌ம் அதிகரிக்க என் முதுகு வலியின் தீவிர‌ம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. நான் வலி தாங்க முடியாமல் கத்திக் கதறிக் கொண்டே இருந்தேன்…”

“…சிபிஐ யின் விசார‌ணை முறை என்பது மிகத் தனித்துவமானது. பல்வேறு குழுக்கள், பல்வேறு விசார‌ணை முறைகள், குறிப்பாக டி.ஐ.ஜி. ராஜூ தலைமையில் இருந்த டி.எஸ்.பி.சிவாஜி, ஆய்வாளர் இர‌மேஷ், ஆய்வாளர் மாதவன், ஆய்வாளர் இக்பால் மற்றும் சிலர் இருந்த அந்தக் குழுவினரை‌ என்னால் எப்போதும் மறக்க இயலாது. ஏனெனில், விதவிதமாக அடிப்பதற்கும், வகைவகையாக துன்புறுத்துவதற்கும் பெயர் போன குழு அது. இர‌ண்டு கை விர‌ல்களுக்கு இடையே பேனாவை அழுத்திப் பிடித்துக் கொண்டு பேனாவைத் திருப்புவது. இர‌ண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு நாற்காலியில் உட்காருவதைப் போன்று நிற்கச் சொல்லி, சிறிது நேர‌ம் நின்றதும் தசை பிடித்து வலிக்கும்போது, பின்புறம் லத்தியால் அடிப்பது போன்ற பலவிதமான சித்திர‌வதைகள்…”

“…உண்மையைக் கேட்பதற்கு உலகிற்குச் செவிகள் இல்லை. அதே உலகிற்கு பொய்களைப் பர‌ப்ப ஆயிர‌ம் உதடுகள் உண்டு என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர‌த் துவங்கி இருந்தேன். எங்களை அழைத்து வருவது தெரிந்து நிறைய பத்திரிகைக்கார‌ர்களும், புகைப்படக்கார‌ர்களும் அங்கே குழுமியிருந்தார்கள். உண்மை எதுவென அறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும் யாருக்குமே அங்கு விருப்பமில்லை. மாறாக, மறைந்த இராசீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் யாöர‌ன கண்டுபிடிக்கப்படாமல் இருந்த வெற்றிடத்தை எதைக்கொண்டேனும், எவரை‌க் கொண்டேனும் நிர‌ப்பிவிட வேண்டும். இல்லையேல், மாபெரும் வல்லாதிக்க நாடாக, வளரும் நாடுகளின் தலைவனாக விளங்கும் இந்தியாவின் புலனாய்வுத் துறைக்கு அது மிகப்பெரிய களங்கமாக விளங்கும் என்பதற்காகவே இந்த அவசர‌மும், மூர்க்கமும் நிறைந்த தவறான முடிவு…”

“…ஈழத்திலிருந்து அகதிகளாக என்னுடன் வந்த ஜெயக்குமார், அவர‌து மனைவி சாந்தி, அவர்களது மகன் பார்த்திபன் ஆகியோரை‌, நான் கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்குப் பின்னர் கைது செய்திருந்தார்கள். என் கண் எதிரே‌ பல முறை ஜெயக்குமார் குடும்பத்தினரை‌ச் சித்ர‌வதை செய்யும் போது நான் மிகவும் துயருற்றுக் கண்ணீர் சிந்தினேன். ஜெயக்குமார் மனைவியும் , என் சகோதரி முறையிலான சாந்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை அடைந்தது எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த ஆறுதலை அளித்தது.

என்னால் என்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாத மிகத் துயர‌மான சூழலில் நான் என்னோடு வந்த உறவினர் குடும்பமான ஜெயக்குமார் குடும்பம் படும் பாடுகளைக் கண்டு கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது…”

“…தாங்கள் சொல்வதை உண்மையென என்னை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற மூர்க்கத்தில் டிஐஜி.சிறிக்குமாரும், அவருடைய ஆட்களும் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைக்கு இழுத்துப் போனார்கள். இருட்டாக இருந்த அந்த அறையில் கூர்மையான பனிக்கட்டி மீது என்னை நிற்க வைத்து விட்டு குளிர்சாதனத்தின் குளிரூட்டும் சக்தியை அதிகப்படுத்தினார்கள். நான் அந்த பனிக்கட்டி மீது நிற்கும் போது உடலெல்லாம் எனக்கு கடும் வலி. உயிரே‌ என்னை விட்டு பிரிவது போன்ற அவஸ்தை. நேர‌ம் கழியக்கழிய என் உடல் குளிரால் விறைக்கத் துவங்கிவிட்டது. குளிரால் விறைத்துப் போன என்னை அடித்துக் கொடுமை செய்தார்கள். அவர்கள் சொல்லும் பொய்யை ஒப்புக்கொண்டால் வழக்கு முடிந்தவுடன் அந்த வீடு எனக்கே கிடைத்து விடும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்கள். நான் உறுதியாக மறுக்கவே, என்னை அடித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த இர‌வும் என்னை தூங்க விடவில்லை…”

“…அந்த காலக்கட்டத்தில் சிக்கிய யாராவது ஒருவரை‌ இழுத்து வந்து அங்கு அடித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை அவர்களுக்கு அடிக்க ஆள் கிடைக்காவிட்டால் அதிகாரிகள் மாதவனும், ரமேசும் என்னை அழைத்துக் கொண்டு போய் ஏதாவது கேட்டு அடிப்பார்கள்…”

“…இந்திய நாட்டின் முன்னாள் பிர‌தமர் ஒருவரின் கொலை வழக்கு மிகவும் ஒருதலை சார்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என அறிய யாருக்குமே விருப்பமில்லை. இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த புலனாய்வுத் துறையினர், தாங்கள் புனைந்த ஒரு கதைக்கு கதாப்பாத்திர‌ங்கள் தேடினர். அந்தக் கதாப்பாத்திர‌ங்களாக சிக்கிக் கொண்டவர்கள்தாம் நாங்கள். உண்மையில் எனக்கு அமர‌ர் இராசீவ் காந்தியின் மீது பரிதாபம் தான் மிஞ்சுகிறது. ஒரு வல்லாதிக்க நாட்டின் முன்னாள் பிர‌தமர் கொலையின் உண்மைகளை அறிய யாருக்குமே விருப்பமில்லை, என்பதுதான் எத்தனைத் துயர‌மான விடயம்…”

“…தடா சட்டத்தின் கீழ் நான் அளித்ததாகக் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்பது காவல்துறையினர் என்னை சித்திர‌வதைகள் செய்து, பலாத்கார‌மாகப் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்துப் பெற்றது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் தாங்களாகவே தயாரித்தனர்’ என்று என் போலிசு காவல் முடிந்து நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்ட போது நீதிமன்றத்தில் மனுகொடுத்தேன். நீதிபதி, வழக்கு விசார‌ணையின் போது விசாரிப்பதாகக் கூறினார். ஆனால் வழக்கு விசார‌ணை நடைபெற்ற தடா நீதிமன்றத்தில் இந்த மனு விசார‌ணைக்கு வர‌வே இல்லை…”

“…இராசீவ் காந்தி கொலை என்பது பலவிதமான இர‌கசியங்களைக் கொண்ட ஒரு குற்ற நடவடிக்கையாகும். ஒரு நாட்டின் முன்னாள் பிர‌தமரின் கொலையில் தொடர்புடைய, சந்தேகிக்க வேண்டிய பலவித கார‌ணிகளை இந்திய புலனாய்வுத்துறை வேண்டுமென்றே நிராகரித்தது. தாங்கள் முடிவு செய்திருக்கும் இந்த வழக்கின் பாதையில் இருந்து சற்றே விலகி உண்மையைக் கண்டெடுத்துவிடக் கூடாது என்பதில் இந்தியப் புலனாய்வுத்துறை மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டப்பட்ட பலரும் என்னைப் போலவே சிக்கிக் கொண்டவர்கள்தாம்…”

இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருப்பது புத்தகத்திலிருந்து ஆங்காங்கே சில பகுதிகள் மட்டும்தான். முழு புத்தகமும் மனித உரிமைகளைப் புறந்தள்ளிய, உண்மைகள் குறித்து சிறிதும் அக்கறையில்லாத சிபிஐ-ன் விசாரணை முறைகளையும், அதிலிருந்த ஓட்டைகளையும் பேசுகிறது.

வழக்கறிஞர் தடா சந்திரசேகரரிடம் இராபர்ட் பயஸ் அளித்த வாழ்க்கை மற்றும் வழக்குக் குறிப்புகளை, வழக்கறிஞர் மணி.செந்தில் மிகச் சிறப்பானதொரு புத்தகமாக ஆக்கியுள்ளார்.

விசாரணை என்ற பெயரில் இராபர்ட் பயஸ் அனுபவித்த சித்திரவதைகளை அதன் வலியை வாசகர்களுக்குக் கடத்துவதில் மணி செந்திலின் மொழியாளுமை பெரிதும் துணை நின்றிருக்கிறது.

இராஜீவ் சர்மா எழுதிய புத்தகம் பலத்த எதிர்பார்ப்புடனும், பெரும் ஆராவரத்துடனும் வெளியாகி விட்டது. உண்மை எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை; அடங்கியே இருக்கிறது. மணி செந்தில் எழுதிய புத்தகமும் அதுபோலத்தான்.

மக்களிடம் நாம் எதை கொண்டு செல்லப் போகிறோம்?

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15190&Itemid=263)

நன்றி.- கீற்று.காம் (