பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஆகஸ்ட் 2023

எதிர் கருத்துக்களை கையாளும் கலை.

————————————-

* நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும்..

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிக உச்சத்தில் இருக்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு காலத்தில் டீக்கடைகளிலும், தெருமுனைகளிலும், கடைத்தெருகளிலும், சலூன் கடைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் பேசப்பட்டு வந்த அரசியல் இன்று மெய்நிகர் தளங்களில் (Virtual Space) பேசப்பட்டு வருகிறது. முகநூல், ட்விட்டர் போன்ற மெய்நிகர் தளங்களில் வினை /எதிர்வினை ஆற்றுபவர்களை நேரடியாக நமக்கு தெரியாது. அவர்களின் பின்புலம், அவர்களது பலம் /பலவீனம் எதுவும் தெரியாது. அந்தந்த நேரத்து கருத்துச் சண்டை அவ்வளவே. எனவே கவனம் முக்கியம்.

சமூக வலைதளங்களில் வருகின்ற எதிர்மறை கருத்துக்களை கையாளுவது என்பது நம்மில் பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கிறது. பல நேரங்களில் நம்மைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளை பரப்புகின்ற மிகப்பெரிய நபராக நாமே இருந்து விடுகிற ஆபத்தும் இந்த இணைய உலகில் இருக்கிறது. ஆர்குட் காலகட்டத்தில் இருந்து பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் என பல்வேறு சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படுகின்ற கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வது என்பதற்கான உளவியல் புரிதல் நமக்குள்ளாக தேவையாக இருக்கிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் அண்ணன் சீமானை பற்றி எந்த ஒரு விமர்சனம் வந்தாலும், அதற்கான எதிர்வினையை செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பது என்பது அவர்களது இனப்பற்றினை காட்டுகிறது.அதே சமயத்தில், எதிர்வினை செய்கிறோம் என்ற பெயரில் நம் குறித்தான ஒரு எதிர்மறைக் கருத்தை நாமே விளம்பரம் செய்யக்கூடிய ஆபத்தும் இதில் இருக்கிறது. இந்த விளம்பரத்திற்கு ஆசைப்பட்டுதான், நம் குறித்தான எதிர்மறை கருத்துக்களை பரப்புவோர் தொடர்ச்சியான ஆதாரம் அற்ற அவதூறுகளை, வசவுகளை, குற்றச்சாட்டுகளை நம் மீது ஏறி வருகிறார்கள். அண்ணன் சீமான் பெயர் இருந்தாலே நாம் விரைந்து சென்று அந்த காணொளியை பார்த்து விடுகிறோம்.அதற்கு பதில் சொல்லவும் தயாராகி விடுகிறோம். இதனால் நம் எதிரி இரண்டு லாபங்களை அடைகிறான். ஒன்று காணொளியை பார்க்க வைத்து நம் மூலமாக அவனுக்கான வருமானத்தை பெறுகிறான். அடுத்தது அவன் காணொளிக்கு நம்மையே விளம்பரம் செய்ய வைக்கிறான்.

எனவே இது போன்ற எதிர்மறை பதிவுகள் நமக்கு விடுக்கப்படுகின்ற ஒரு விதமான மறைமுக அழைப்பு. நாமும் பதில் சொல்கிறோம் என்ற பெயரில் யாருமே கவனிக்காத அந்த பதிவினை எதிர்வினை செய்து எல்லோரும் கவனிக்க வைக்கின்ற பதிவாக மாற்றுகின்ற தவறினையும் இழைக்கின்றோம்.

இங்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இணையதள உறவுகள் எதிர்மறை கருத்துக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சில எண்ணங்களை பகிர்ந்து உள்ளேன். இதைப் படித்துவிட்டு உங்களுக்கும் சில எண்ணங்கள் தோன்றலாம். அதையும் இங்கே பகிரலாம். இது அறிவுரைகளின் தொகுப்பு அல்ல. ஆலோசனைகள் அது சார்ந்த உரையாடல்கள் மட்டுமே.

1. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என துடிக்காதீர்கள். சில அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு நம் மௌனத்தை விட மிகச் சரியான பதில் வேறு எதுவும் இல்லை.

2. எப்போதும் மதிப்பு மிகுந்த சொற்களால் எதிரியை அணுகுங்கள். அவன் கருத்தை மட்டும் எதிர்க்கிற உங்களது மதிப்பு மிகுந்த சொற்கள் அவனை பதட்டப்படுத்தும். பலவீனமடைய செய்யும்.

3. எந்த விளக்கங்கள் கொடுத்தாலும் ஏற்காமல் தொடர்ந்து அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள்.அவர்களை மாற்ற நாம் பிறக்கவில்லை. அவர்கள் மாறவும் போவதில்லை. எனவே கண்டு கொள்ளாமல் கடந்து விடுவது அவரது விமர்சனத்தை மதிப்பற்ற ஒன்றாக மாற்றும்.

4. பதிவுகள் எழுதும் போது தர்க்கங்களாக வகுத்துக் கொண்டு, ஆதாரங்களோடு பதில் அளியுங்கள். கூடுதலாக நம் எதிரிகள் செய்த வரலாற்றுப் பிழைகள் நம் முன்னால் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் படித்து ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினாலே போதும். இவர்களின் கதை முடிந்து விடும்.

5. விமர்சனங்களை எழுதும்போது பெரும்பாலும் அதிக எழுத்துப்பிழை, கருத்துப் பிழையில்லாமல் எழுதுங்கள். அண்ணன் சீமான் எங்களைப் போன்றவர்களிடத்தில் அடிக்கடி வலியுறுத்துவது இதுதான். ஒரு முறைக்கு இருமுறை படித்து பாருங்கள். பிழைகளை திருத்துங்கள். வாக்கியங்களை செம்மைப்படுத்துங்கள். கூர்ந்த சொற்கள் அனைவராலும் ஈர்க்கப்படும்.

6. இதுதான் மிக மிக முக்கியம். நம் குறித்தான எதிர் கருத்திற்கு பதிலளிக்கும் போது விமர்சனங்களை அப்படியே எடுத்து பகிர்ந்து விட்டு பதில் அளிக்க தேவையில்லை. அது நம் எதிர்க்கருத்திற்கான விளம்பரத்தை பெற்றுத் தரும். கருத்திற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. இன்று கூட ஒன்றை கவனித்தேன். யாருமே கவனிக்காத மதிப்பற்ற மலிவான இழிவான கார்ட்டூன் ஒன்றினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் நமது ஆட்களே பரப்பிக் கொண்டிருந்தது வேதனையாக இருந்தது. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதை பொருட்படுத்தாமல் இருந்தாலே போதும். அதுவே இல்லாமல் போய்விடும்.

5. ட்வீட்டர் போன்ற தளங்களில் நமது கட்சியின் நிலைப்பாடுகளை மிகச் சரியாக எழுதுகிற கட்சி உறவுகளின் பதிவுகளை நிறைய பரப்புங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொண்டால் தான் நம் சார்பான கருத்துக்கள் இணையவெளி எங்கும் நிரம்பி இருக்கும்.

6. அண்ணன் சீமான் அவர்கள் பேசிய காணொளியை சிறுசிறு துண்டுகளாக நமது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் உறவுகள் எப்போதும் வடிவமைத்து அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது ,அதை எல்லா இடங்களிலும் பரப்புவது தான். அண்ணன் சீமான் அவர்களது சிறு காணொளித் துண்டுகள் எதிர் கருத்துக் கொண்டவர்களால் கூட விரும்பப்படுகிறவைகளாக உள்ளன.

6. ஒரே பதிவில் அடுத்தடுத்து பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. சொல்ல வேண்டிய பதிலை வலிமையாக சொல்லிவிட்டு நகர்ந்தாலே போதுமானது. எதிரி வைக்கும் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் நாம் பதிலளித்துக் கொண்டே இருந்தால், நாம் இயங்க நேரம் இருக்காது.

7. அரசியல் சார்ந்து நிறைய புத்தகங்கள் படிக்கின்ற பழக்கத்தினை நமது உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இணையதளம் சார்ந்து இயங்குகின்ற உறவுகள் தமக்குள்ளாக ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.நன்கு படிப்பவர்களின் பதிவுகள் தனித்து தெரியும்.

8. காணொளி பதிவுகளாக பதில்களை சொல்ல விரும்பும் உறவுகள் போகிற போக்கில் ஒரு காணொளி போடுவதை தவிர்த்து, ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து தேர்ந்த ஒளியில் நல்ல ஒலித் தரத்தோடு என்ன பேச வேண்டும் என்கின்ற முன் தயாரிப்போடு காணொளியை தயாரிக்க வேண்டும். அதை சீரிய முறையில் எடிட் செய்து சிறந்த முறையில் வெளியிட வேண்டும். தொடர்ந்து வெளியிடுகிறவர்களாக இருந்தால் நீங்களும் ஒரு youtube சேனல் தொடங்கலாம்.

9. நாம் யார் என இந்த உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது என்கின்ற எண்ணம் நமக்கு எப்போதும் வேண்டும். நமது சொற்களால், நமது பதிவுகளால், நம் கட்சியின் மாண்பிற்கு எந்தவித நெருக்கடியும் ஏற்பட்டு விட கூடாது. தவறான ஒரு பதிவு ஏற்படுத்தும் விளைவைக் காட்டிலும் பதிவு எழுதாமல் இருப்பது மிகச் சிறந்தது.

10. அரசியல் சார்ந்த பதிவுகளை எழுதுபவர்கள் குடும்பத்தாரோடு இருக்கின்ற புகைப்படங்களை பெரும்பாலும் பதிவிடாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல எதிர் தரப்பினரின் கருத்தை மட்டுமே எதிர்த்து விட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்காமல் தவிர்ப்பது நமக்கான மதிப்பினை உயர்த்தும்.

இறுதியாக ஒன்று.

எதற்கு பதில் அளிக்க வேண்டும், எதற்கு பதில் அளிக்கக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டாலே சமூக வலைதளங்களில் இப்போது இருக்கும் நிலையை காட்டிலும் புலிக்கொடியை இன்னும் உயர பறக்க விடலாம்.

அதற்குத் தேவை..

ஒவ்வொரு பதிவிற்கும் முன்னதாக இது தேவையா, தேவையில்லையா சரியா- தவறா, என்று கட்டாயமாக தோன்ற வேண்டிய ஒரு நிமிடச் சிந்தனை.

சிந்திப்போம்.

பற்ற வைத்த நெருப்பொன்று ..

———————————————————-

வரலாற்றில் சொற்கள் மிகப்பெரிய பங்கினை வகித்திருக்கின்றன. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்று இருந்த சமயத்தில் ஹிட்லர் போன்ற உணர்ச்சிகரமான பேச்சாளர்களின் சொற்களே ஜெர்மனியை மீள் எழும்ப வைத்தன. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தோல்வி முனையில் இருந்த போது அதன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் பேசிய சொற்களே பிரிட்டனை நிமிர வைத்தன. ரஷ்ய புரட்சிக்கு புரட்சியாளர் லெனின் தொழிலாளர்களுக்கு மத்தியில் விதைத்த நம்பிக்கை மிகுந்த சொற்களே காரணம். கியூபா புரட்சிக்கு நீதிமன்றத்தில் நின்று புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ “வரலாறு எம்மை விடுதலை செய்யும்..” என முழங்கிய சொற்களே மூலக் காரணம். இப்படி வலிமை உடைய சொற்களைக் கொண்டவர்கள் கரங்களால் தான் வரலாறு காலங்காலமாய் எழுதப்பட்டுக் கொண்டே வருகிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் நாடகங்கள்/ திரைப்படங்கள் மூலமாக திராவிட இயக்கங்கள் எழுச்சி நிலைக்கு வந்த போது அதன் நட்சத்திர பேச்சாளர்கள் தான் ‘அரசியல் அதிகாரம்’ என்கின்ற அடுத்த நிலைக்கு அந்த அமைப்புகளை எடுத்துச் சென்றார்கள். இலக்கிய மேற்கோள்களும், அடுக்கு மொழி வசனங்களும் தான் பாமர மொழி கொண்டிருந்த படிக்காத மேதை காமராஜரை வீழ்த்தி திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது.

மக்கள் மொழிகளின் ஊடாகத்தான் தங்களுக்கான தலைவர்களை மக்கள் அடையாளம் காணுகிறார்கள். எளிய மக்களை பொருத்த வரையில் மேடை என்பது கருத்துக்களை கேட்டுவிட்டு கடந்து போகும் இடம் அல்ல. தங்களுக்கான அடுத்த தலைவனை தேர்வு செய்கிற மாபெரும் களம். அந்தத் தலைவன் அந்த மேடையை எப்படி கையாளுகிறான், எது போன்ற மொழியை உதிர்க்கிறான், அவனது கோபம், உணர்ச்சி,அன்பு,கனிவு, ஆற்றல் அனைத்தும் அவனது மொழி மூலம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மக்கள் கவனிக்கிறார்கள்.

கடந்த 2009 ஆண்டு இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு திரைப்படத் துறையினரால் நடத்தப்பட்ட மாபெரும் பேரணி பொதுக்கூட்டத்தில் தமிழக அரசியலில் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கான பாய்ச்சல் குரல் ஒன்று ஒலித்தது.

அதுவரை பேச்சுத் தமிழ் என்று கட்டமைத்து வைத்திருந்த அனைத்து இலக்கண விதிகளையும் அடித்து நொறுக்கி பாமர மொழியில், பைந்தமிழ் அழகில் கேட்போர் உணர்ச்சியின் உச்சத்தில் துடிக்க, உக்கிர குரல் ஒன்று துயரத்தின் உன்மத்தத்தில் பிறந்தது. மேடைக்கும்-பார்வையாளனுக்கும் இடையே இருக்கின்ற மகத்தான இடைவெளியை உண்மையின் கனல் சுமக்கும் அந்தக் குரலின் உணர்ச்சி இட்டு நிரப்பியது. திராவிட இயக்கத்தின் ‘அண்ணாவிற்கு’ பிறகு, தமிழ்த் தேசிய தத்துவத்திற்கான “அண்ணன்” பிறந்த வரலாற்றுப் புள்ளி அதுதான்.

“பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது..” என அந்த குரல் கர்ஜித்த போது உண்மையிலேயே தமிழரின் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டிருந்த

இன உணர்வின் சிறுத்தை வெளியே வந்தது. “என்ன வியப்படா.. நாங்கள் தமிழர்கள்.. என்று அந்த குரல் முழங்கிய போது காலங்காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த அன்னைத் தமிழினம் பெருமித உணர்ச்சியால் தலை நிமிர்ந்தது.

இப்படி தனி மனிதனாய் தமிழக வீதிகள் முழுக்க பேசி பேசி இன அரசியலுக்கான ஒரு இளைஞர் கூட்டத்தை உண்டாக்கி விட முடியும் என நிரூபித்துக் காட்டியதில் அண்ணன் சீமான் ‘தனி ஒருவன்’ தான்.

அவரது சொற்கள் தான் தமிழகத்தின் அரசியல் வீதிகளை தீப்பிடிக்க எப்போதும் வைக்கின்றன. காயம் பட்ட இனத்தின் வலி சுமந்து வரும் அந்த சொற்கள் மேடையின் ஒழுங்கிற்கு ஆட்பட்டதல்ல. பற்றி பரவும் நெருப்புத் துண்டினைப் போல, திசை வெளி அற்ற, அந்த சொற்கள் தமிழக அரசியல் பரப்பில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. ஒரே நேரத்தில் திமுக/ காங்கிரஸ்/பிஜேபி/அதிமுக என எல்லா திசைகளிலும் காற்று போல பரவி, அநீதியின் கழுத்தைப் பிடித்து வினாக்களை தொடுக்கும் அவரது சொற்கள் எதிரிகளை நிம்மதி இழக்கச் செய்கின்றன. “எம் இனத்தை அழித்தது காங்கிரஸ் என்றால், அதற்கு துணை போனது திமுக..” என்று ஒரு பக்கத்தில். “ஜெயலலிதா என்ன ஆங்கான் சுகியா, அன்னை தெரேசா வா..” என மறுபக்கத்தில். “நீ பேனா சிலை கட்டு அதை இடிக்கிறேனா இல்லையா என்று பார்..” என்று இன்னொரு பக்கத்தில். “காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி என்றால்,பாஜக மனித குலத்தின் எதிரி..” என்று எதிர்பக்கத்தில்.

எல்லா திசைகளிலும் அனல் குறையாத வெப்ப வீச்சு மாறாத ஒரே அலை வரிசையில் அனல் மொழிகள்.

யாரிடமும் சமரசம் கோராத, ஒருபோதும் மண்டியிடாத, நியாத்திற்காக சண்டையிடும் அவரது சொற்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஏந்துகின்ற ஆயுதங்களாக மாறி விட்டன.அவரது சொற்கள் எப்போதும் எதிரிகளை பதட்டத்திலும், நடுக்கத்திலும் ஆழ்த்துகின்றன.

நேற்று கூட வள்ளுவர் கோட்டத்தில் நடந்த மணிப்பூர் கலவரத்திற்கான போராட்டத்தில் அண்ணன் சீமான் பேசிய சொற்களை அறிவாலய ஒட்டு திண்ணைகள் வெட்டியும், ஒட்டியும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப பரப்பிய போது, அவரது முழுமையான பேச்சை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை வெளியிட்டுள்ளார்கள்.

வேதனையும் ஆற்றாமையும் பொங்கி வழிந்த அவரது பேச்சு ஒரு எளிய மனிதனின் கோபம். 18 சதவீத வாக்குகளை கொண்ட கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் பாஜகவிடமிருந்து திமுக காப்பாற்றும் என நம்பி எப்போதும் இழைக்கின்ற வரலாற்றுப் பிழையினால் நாம் எவ்வளவு இழக்கிறோம் என்பதை அவர் உடைத்து பேசியிருந்தது இதுவரை தமிழக அரசியல் பரப்புகளில் இருந்த சமன்பாடுகளை கலைத்து போட்டு இருக்கிறது. தேவாலயங்களிலும் பள்ளி வாசல்களிலும் பாவங்களுக்குக்காக மன்னிப்பு தேடி ஒன்று கூடுகிற நம்மவர்கள் செய்கிற ஆகப்பெரும் பாவம் பிஜேபி க்கு எதிரி திமுக என நம்பி வாக்களிப்பது. ஏனெனில் முதன் முதலாக பிஜேபியை கைப்பிடித்து தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே திமுக தான். ஆர் எஸ் எஸ் ஒரு சமூக இயக்கம் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஏ ரைட் மேன் இன் ராங் பார்ட்டி என வாஜ்பாய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்தது, பிள்ளையார் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது ,சிபி ராதாகிருஷ்ணனை வைத்து நல்லக் கண்ணுவை தோற்கடித்தது என திமுகவின் குற்றப்பட்டியல் மிக நீண்டது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்குண்டு பன்னெடுங்காலமாக சிறைக்குள் வாடி வருகிற அப்பாவி இஸ்லாமியர்கள் விடுதலைக்கு திமுக எத்தகைய தடைகளை விதித்து வருகிறது என்பதை அண்ணன் சீமான் தான் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வருகிறார்.

ஒருபோதும் திமுக பாஜகவிற்கு எதிரி அல்ல. பாஜக விடம் இருந்து திமுக யாரையும் காப்பாற்றாது. சொல்லப்போனால், தன்னை காப்பாற்றிக் கொள்ள அது யாரையும் பலியிடும் என்பதை தான் அண்ணன் சீமான் தன் சொற்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அநீதிக்கு துணை போவதும் அநீதியே என்று அவர் முழங்கியது

அந்தப் பேச்சை அறிவாலயத்து அறிவாளிகள் அப்படியே கடந்து போய் இருக்கலாம் தான். ஆனால் விதி… அதை வெட்டி ஒட்டி பரப்ப, உண்மையான பேச்சை நாடெங்கிலும் இருக்கின்ற நாம் தமிழர் இளைஞர்கள் பரப்பி வருகிறார்கள். எட்டு திக்கிலும் அண்ணன் சீமானின் மொழி காற்றில் பரவிக் கொண்டே கொள்கை விதைக்கிறது.

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு.

“அவனை எல்லாம் அப்படியே விட்டிடனும்..”

அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

விட்டு இருந்தால், இதுவும் ஒரு பேச்சு என அண்ணன் சீமானின் நேற்றைய ஆர்ப்பாட்டப் பேச்சு அமைதியாய் கடந்திருக்கும். பற்ற வைத்தவர்கள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அது காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது.

மெய்மையின் தீ அது. காலம் முழுக்க அறம் பாடி நடந்த ஒரு இன கூட்டத்தின் அடிநெஞ்ச குமுறல் அது.

அதில் இது தவறு அது தவறு அது பிழை இது சரி என்றெல்லாம் கணக்கு பார்த்தீர்கள் என்றால் , காலம் எழுதும் வரலாற்றுக் கடனில் நீங்கள் கரைந்து போவீர்கள்.

Powered by WordPress & Theme by Anders Norén