பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2021 Page 1 of 3

முதல் மரியாதை.

சொல்லுக்குள்
தன் மொழியை
தன் நிலத்தை
தமிழர் வாழ்வை
சுருக்கி உட்புதைத்து
தைத்த வித்தகனுக்கு.‌..
முதல் மரியாதை

❤️

வான்புகழ் கொண்ட
தனி மொழி தமிழுக்கு
தன் கறுப்பு மண்ணின்
கரும்பு சாறெடுத்து கவிதை
அமுதூட்டியவன்.

பூங்கதவின் தாழ் திறந்து
அந்தி மழை பொழிகையில்
ஆயிரம் தாமரை மொட்டுக்களில்
பாயிரத் தமிழ்க் கும்மி அடித்தவன்.

சின்னச்சின்ன ஆசைகளோடு
சிகரங்களை நோக்கி
தமிழாற்றுப்படையோடு
நடைபோட்டாலும்
கள்ளிக்காட்டில் அமர்ந்து கருவாச்சி காவியம் கண்டவன்.

பழைய பனை ஓலைகளில்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
என நேற்றுப் போட்ட கோலமாய்
கல்வெட்டுகளில் உறைந்திருந்த
தமிழுக்கு நிறம் கண்டு
வடுகப்பட்டி முதல் வால்கா வரை
எல்லா நதிகளிலும் தமிழ் ஓடங்களை மிதக்க விட்ட திருத்தி எழுதிய தீர்ப்புக்காரன்.

அவன் சொன்னால்..
பெய்யெனப் பெய்தது மழை.

அந்த குளத்தில் கல்லெறிந்தவர்களுக்கும்..
இதனால் சகலமானவர்களுக்கும்..

எப்போதும் மீண்டும் தன் தொட்டிலுக்கு திரும்பி விடத் துடிக்கும்
அவன் தன் வாழ்வு மூலம் தெரிவித்துக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

❤️

கவிப்பேரரசு அவர்களுக்கு..

இன்றைய நாளில் என் தம்பி என்னோடு தரையில் இருந்தால்
உங்களுக்கோர் தமிழ்த் தோரணம் கண்டிருப்பான்.

துரை சிறையில் இருக்கிறான்.

அவன் சிந்தை முழுக்க நிறைந்திருக்கும் கவி தந்தை
தங்களை.. அவன் எண்ண அலைகளோடு என்னையும் இணைத்து இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.

தவிர்க்க கூடாத தவிர்ப்பு..

❤️

மனித குணங்களில் வெறுப்பினை போல் விசித்திரமானது ஏதுமில்லை. உண்மையில் வெறுப்பு என்பது கொப்பளித்துக்கொண்டு இருக்கிற நீர்க்குமிழி போன்றது. சில வெறுப்புகளுக்கு காரணங்கள் தேவையில்லை. அப்படி காரணமில்லாமல் ஏதோ ஒன்றை வெறுக்க முடிகிற ஒரு உயிரி இந்த பிரபஞ்சத்தில் உண்டு என்றால் அது மனிதன் மட்டும்தான்.

சகமனிதனின் வெறுப்பு நெருப்பாய் நமது மீது கொட்டும்போது நாம் தவித்து விடுகிறோம். எதனால் இது நேர்ந்தது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மை வெறுப்பவர் அனைவரையும் நாமும் வெறுக்க தயாராகிறோம். சொல்லப்போனால் ஒரு எதிர்வினை போல நமது உளவியல் அதற்கு தயாராகிறது. நாமும் அந்த நொடியே நம்மை வெறுத்தவர் போலாகி பிறரை வெறுக்க தொடங்கி விடுகிறோம். முடிவில்லா தொற்றுநோய் போல வெறுப்பு என்கின்ற குணாதிசயம் காலதேச வரையறைகளைத் தாண்டி எல்லோர் மனதிற்குள்ளும் ஊடுருவிக் கொண்டே இருக்கிறது.

வெறுப்பினை சாத்தான் மொழி என்கிறது பைபிள். பிறரை வெறுப்பது நம்பிக்கையாளர்களுக்கு உகந்ததல்ல என்கிறது திருக்குர்ஆன். பற்றிப் பரவும் நெருப்பை விட கொடியது வெறுப்பு என்று போதிக்கிறது புத்தம்.

சகமனிதர்களின் அர்த்தமற்ற வெறுப்பினை எவ்வாறு கையாளுவது என்று ஒருமுறை அண்ணன் சீமான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து அவரைப்போல் விமர்சனங்களை, வசவுகளை, வெறுப்பினை எதிர் கொண்ட மனிதர்கள் மிகமிகக் குறைவு. சமகாலத்தில் அவர் மீதான விமர்சனங்கள் தான் அவர் மீதான ஈர்ப்பிற்கு மூலதனமாக அமைகிறது.

எப்படி அர்த்தமற்ற வெறுப்பினை எதிர்கொள்கிறீர்கள் என அவரிடம் கேட்டபோது.. “நான் ஒருபோதும் வெறுப்பினை எதிர்கொள்வதில்லை. தவிர்த்து விடுவேன் என்றார். மற்றொன்று இன்னொருவரின் வெறுப்பினை எதிர்கொள்வது எனது வேலை அல்ல..” என்றும் கூறினார். இது எனக்கு சுவாரசியமாக இருந்தது.

அவரிடம் நான் பொருட்படுத்த மாட்டேன் என்பது போன்ற பதிலைத்தான் எதிர்பார்த்திருந்தேன். எனக்கு புரூஸ்லி பற்றி நினைவிற்கு வந்தது.

புரூஸ்லீயை பற்றி ஒரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். தன் மீதான தாக்குதலை பெரும்பாலும் அவர் தவிர்க்கும் மொழியைத்தான் தனது கராத்தே கலையின் முக்கிய அம்சமாக கருதுவதாக அவர் கூறுகிறார். காற்றைக் கிழித்து எதிரியின் பலம் பொருந்திய முஷ்டி நம் தாடையை உடைக்க வேகமாக வரும் போது அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதில் தான் தன் கவனம் இருப்பதாக சொல்கிறார். இமைக்கும் ஒரு நொடியில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாக இருக்கும் தன் உடலை மிகக் குறைந்த அங்குலம் நாசூக்காக நகர்த்திக் கொள்வதன் மூலமாக எதிரியின் தாக்குதல் உடலில் படாமல் வீணாகிறது. அந்தத் தாக்குதல் நிறைவேறாமல் போவதில் எதிரி ஏமாற்றம் அடைகிறான். பதட்டம் கொள்கிறான். பலவீனம் அடைய தொடங்குகிறான். இதைத்தான் தனது யுக்தி என்கிறார் புரூஸ் லீ.

அவர் எதிரியின் தாக்குதலை பொருட்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் தவிர்த்து விடுகிறார். அந்தத் தவிர்ப்பு நிலைதான் அவரது மேதைமை.

தவிர்ப்பது என்பது வேறு/ பொருட்படுத்தாமல் போவது என்பது வேறு.

அண்ணன் சீமானும் அப்படித்தான் தன்மீதான நேர்மையற்ற விமர்சனங்களை தவிர்க்க கற்றிருக்கிறார் ‌.அதைத் தன் மீது அன்பு பாராட்டும் உறவுகளும் கடைபிடிக்க வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் நாம் யாரும் அவ்வாறு இருப்பதில்லை.

அண்ணன் சீமான் பற்றிய ஒரு அவதூறு காணொளி வரும்போது அவர் மீது அன்பு பாராட்டும் எண்ணற்ற தம்பி தங்கைகள் அந்தக் காணொளிக்கு பதில் சொல்ல தயார் ஆவதற்காக அந்த காணொளியை பார்க்கின்றனர். பலரும் பதில் சொல்ல வேண்டும் என நினைத்து அவர்களே பரப்புகின்றனர். இது ஒரு வகையில் அவதூறு காணொளி வெளியிட்டவர் நோக்கத்திற்கு உதவி செய்வது போல் ஆகிவிடுகிறது.

அண்ணன் சீமான் பற்றி ஏதேனும் அவதூறு அல்லது வசவு போன்ற அம்சங்களைக் கொண்ட காணொளி வெளியிடுகிற பலருக்கு மிக முக்கிய நோக்கமே தங்கள் காணொளியை பலரும் பார்க்க வேண்டும் என்பதுதான். கண்டிப்பாக இதற்கு பதில் சொல்ல சீமான் தம்பி/ தங்கைகள் வருவார்கள் என்ற நோக்கத்தில்தான் அவர்கள் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுகிறார்கள். சொல்லப்போனால் அந்தக் காணொளியை எதிர்க்க வேண்டி பார்க்கின்ற பார்வையாளர்கள் கூட்டம் தான் அந்த காணொளிக்கான விளம்பரம். அதன் மூலம் வருமானம்.

அண்ணன் சீமான் குறித்து அவதூறு பரப்புகிற காணொளியை நாம் தீவிரமாக எதிர்க்கிற அரசியல் கட்சியினர் கூட அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் நமது ஆட்களோ அதில் என்ன இருக்கிறது பதில் சொல்ல வேண்டும் என்ற பரபரப்பில் அந்தக் காணொளியை அதிகம் பார்வையாளர்கள் பார்த்து காணொளியாக மாற்றி விடுகிறார்கள்.
பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும்போது அந்த காணொளிக்கான வருவாய் கூடுகிறது.

எனவேதான் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவதில் அதன் மூலமாக விளம்பரம் ஆகி பொருளீட்ட பலரும் துணிகிறார்கள். இந்த இடத்தில் அந்த காணொளியை நாம் தவிர்க்க கற்றுக் கொண்டு விட்டோமானால் காணொளி வெளியிட்டவர் நோக்கம் வெற்றி பெறாமல் ஏமாற்றம் அடைவார்.

அண்ணன் மீது நாம் கொண்டிருக்கிற பேரன்பு நம் எதிரிக்கு சாதகமாக மாறத் தொடங்குகிற விசித்திரமான புள்ளி அது. எனவேதான் எதை ஏற்பது, எதைத் தவிர்ப்பது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என நம் அண்ணன் சீமான் வலியுறுத்துகிறார்.

மறைந்த எனது மூத்த வழக்கறிஞர் பலராமன் ஒருமுறை அவசரமாக நீதிமன்றத்திற்கு கிளம்பிச் செல்லும்போது அவரது வீட்டு வாசலில் குடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தவரை கவனிக்காமல் கடந்து போனது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அவர் ஒருமுறை அதட்டி இருந்தால் அந்த குடிகாரன் அங்கிருந்து போயிருப்பான் இப்படி கேட்காமல் கடந்து போகிறாரே என்று நினைத்து நீதிமன்றத்திற்கு வந்த பிறகு அவரிடம் கேட்டேன்.
அவர் என்னை உற்று நோக்கிவிட்டு எந்த பதிலும் எனக்குச் சொல்லவில்லை.

மீண்டும் நாங்கள் வீட்டிற்கு திரும்பிய போது அந்தக் குடிகாரன் சாக்கடை ஓரம் விழுந்து கிடந்தான்.
என்னை பார்த்து சிரித்த அவர்
“இவனிடம் சண்டை போடுவதா நமது வேலை.. இன்று காலை நாம் சண்டை போட்டிருந்தால்.. ஒருவேளை அவன் ஏதாவது எதிர்த்துப் பேசி இருந்தால்.. நாம் அடித்து இருக்க வேண்டியிருக்கும். ஏதாவது பெரிய அளவில் தகராறு ஏற்பட்டு இருந்தால்.. நீதிமன்றத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் போயிருக்கும். இன்று பார்த்த எந்த வேலையும் நம்மால் பார்த்திருக்க முடியாது. எனவே சில இடங்களில் தவிர்த்துவிட்டு முன்னகர்ந்து விடுவதுதான் அறிவுத்தனம்” என்றார்.உண்மைதான். நான் உணர்ச்சி வசப்பட்டது போல அவரும் பட்டிருந்தால் உண்மையில் அந்த நாள் அன்று வீணாகி இருக்கும்.

வெற்று விமர்சனங்களுக்கு பதிலளித்து பதிலளித்து எத்தனை பக்கங்களை நாம் வீணாக்குகிறோம் .. நேரத்தை செலவழிக்கிறோம் என்று நினைத்தால் உண்மையில் அச்சமாக இருக்கிறது. அந்த வீணாய் போன விமர்சனங்களுக்கு நாம் பதில் அளிப்பதால் விமர்சிப்பவர்கள் அடங்கப் போவதில்லை. அவர்கள் மாறப் போவதுமில்லை. எனவே இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்கக் கற்றுக்கொள்வது தான் நீண்ட நெடிய இந்த அரசியல் பயணத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை குணாதிசயம்.

நம்மை அழிக்க நினைக்கும் சிலரை வாழ்க்கையில் பெயர் சொல்லாமல் கடப்பது ஒருவகையான நிறைவு என்றால்.. அவர்களை நினைக்காமல் வாழ்வதென்பதுதான் முழுமையான வெற்றி.

எதை ஏற்பது என்பதைவிட எதைத் தவிர்ப்பது என்பதில் தான் வாழ்வின் முழுமை அடங்கி இருக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து செல்வது போல.‌.

“ஊரார் வாய்களை தைப்பது கடினம். உங்கள் செவிகளை மூடுவது சுலபம்.”

செவிகளை மூடுங்கள்.
அறிவினை திறவுங்கள்.

❤️

அண்ணன் சீமான் தந்த அண்ணன்.

❤️

அண்ணன் திருமா அவர்களைப் பற்றிய சித்திரம் அண்ணன் சீமானது மதிப்பு மிகுந்த வார்த்தைகளால்தான் எனக்குள் உருவானது. அதற்கு முன் தமிழ்ப்பாதுகாப்பு இயக்க மேடைகளில் அவரை நான் பார்த்திருந்தாலும் அண்ணன் சீமான் தான் தொல். திருமா என்கிற தனிமனிதரின் முழு உருவத்தை, எனக்குள் வரைந்தார்.

உண்மையில் சமூகத்தின் கடைக்கோடி எல்லையிலிருந்து ஒரு மனிதன் உருவாகி, பலதரப்பட்ட அனுபவங்களை உள்வாங்கி, ஒரு ஆற்றல் மிக்க தலைவராக மாறுவதென்பது மிக மிக அபூர்வம். அதுவும் சமீப நாட்களில் நாம் காண நேர்கிற அவரது நேர்காணலை பார்க்கும் போது ஏதோ ஒரு ‘மென்மை’ அவரது சொற்களின் மீது படர்ந்து இருப்பதாக தோன்றுகிறது. அதை அனுபவங்கள் தந்த பக்குவம் என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

அது ஒருவகை நிதானம். ஆவேசமாக மேடைகளில் முழங்கி, போராட்டக் களங்களில் அதிகார உச்சங்களோடு மோதி, திமிறி எழுந்து, அடங்க மறுத்து, ஆர்ப்பரித்த, ஒரு காலத்து திருமா தற்போது சற்றே பக்குவம் அடைந்து நிதானப்பட்டிருப்பதை பார்க்கும்போது வாழ்க்கைத் தரிசனம் குறித்தான முக்கியச் செய்தி ஒன்றை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.

அவரது தீவிரமான வாசிப்புத் தன்மையை அண்ணன் சீமான் விவரிக்கும்போது நான் வியந்திருக்கிறேன். அண்ணன் சீமான் அவர்களே மிக மிக தீவிரமான புத்தக வாசிப்பாளர். இரவு பகலாக புத்தகம் படிப்பதில் அதில் ஆழ்ந்து முழ்குவதில் தேர்ந்தவர். அப்படிப்பட்ட சீமான் அண்ணன் அவர்களே திருமா அண்ணனின் வாசிப்பு பழக்கத்தை சொல்லும்போது வியப்பான மொழிகளில் விவரிக்கிறார்.

சமீபகாலங்களில் பௌத்தத்தை நோக்கி அவர் நகரத் தொடங்கும் நுட்பமான புள்ளிகளை கவனிக்கும்போது அவரின் ஒட்டுமொத்த அரசியல்- பண்பாட்டு வாழ்விற்கான இறுதி இலக்கினை நோக்கி நகர்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அவரது அரசியல் சமரசங்களில் நமக்கு எத்தனையோ முரண்படும் புள்ளிகள் உண்டு. இதுபோன்ற முரண்பாட்டு புள்ளிகள், சமரசத் தருணங்கள் போன்ற விசித்திரங்கள் அண்ணல் அம்பேத்கர் அரசியல் வாழ்விலும் ஏற்பட்டிருக்கிறது. அதை ஒரு நேர்காணலில் மிகுந்த சங்கடத்தோடு எதிர்கொள்ளும் அண்ணன் திருமா அவர்கள் அவற்றை ‘ஒரு கையறு நிலை’ என வலியோடு சொல்கிறார்.

“எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் எதையாவது பிடித்துக்கொண்டு மேலெழும் முயற்சிகள் அவை” என்கிறார். இந்தப் பார்வை இந்த ஒட்டுமொத்த சாதியச் சமூகத்தின் மீதான அவரது காத்திரமான விமர்சனம் எனலாம்.

நீட் தேர்வு கொடுமையால் இறந்துபோன தங்கை அனிதாவின் மரணத்தின் போதும், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட முனைவர் நடராசன் அவர்களின் மறைவின் போதும் அண்ணன் திருமா அவர்களை நேரடியாக சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அண்ணன் சீமான் தான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவரது கைகளில் எல்லாம் நிறைய காயங்கள். நகக்கீறல்கள்.என்ன என்று கேட்டதற்கு ‘பேரன்புத் தம்பிகள் வழங்கிய விருதுகள்’ என்று சிரித்தபடியே சொன்னார்.

உண்மையில் சாதிப் பிடிமானம் மனித உளவியலிலும், சமூகத்திலும் வலிமையாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் அண்ணன் திருமா அவர்களின் இருப்பு, அவரது சாதி மறுப்புக் கருத்தியல், சனாதன தர்மத்திற்கு எதிராக அவரின் நகர்வுகள் ஆகியவை மிகு முக்கியத்துவம் பெறுகின்றன.

சாதிப்படி நிலைகளின் வலிமை, அதன் உள்ளார்ந்த அரசியல் அதிகாரம் , சாதி அடுக்கு பல்வேறு அதிகாரங்களாக மருவி காலம் காலமாக நீண்டு தொடர்ந்து காலத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் அதன் ஆற்றல் ஆகியவைகளை கல்வியாகவும்,அனுபவமாகவும் பயின்றவர்கள் அண்ணன் திருமாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள்.

அந்த ஒரு மனநிலையில்தான் அரசியல் முரண்பாடுகள்,தேர்தல் நிலைகள், இவற்றையெல்லாம் தாண்டி தொல் திருமாவளவன் என்கின்ற தனிப்பெரும் மனிதனை, அவர் நாம் சாராத இன்னொரு கட்சியின் தலைவர் என்ற நிலையிலும், நம், அண்ணன், நம் உடன்பிறந்தவர் என்றெல்லாம் அவரது பிறந்த நாளில் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். வாழ்த்திப் பெருமை அடைகிறோம்.

அந்தப் புரிதலை எங்களிடத்தில் ஏற்படுத்தி உலகமெங்கும் வாழும் நாம் தமிழர் தம்பிகள் இன்று அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தும் பெருமித மனநிலையை ஏற்படுத்தியது அண்ணன் சீமான் அவர்கள்தான்.

❤️

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் நம் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு.. மனம் நிறைந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பாவம் அவர்கள்..

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல,
90 சதவீதம் இந்துக்கள் தான் எங்கள் கட்சியில் உள்ளார்கள் என பகிரங்கமாக சொல்கிற திமுக வை நம்புகிறவர்கள்.

இது ஆர்எஸ்எஸின் திட்டம், நவீன குலக்கல்வித் திட்டம் என திக தலைவர் வீரமணியால் , கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் முத்தரசன் போன்றவர்களால் கூட சுட்டிக் காட்டப்படும் “இல்லம் தோறும் கல்வித் திட்டம்” தான் திராவிடத்தின் அடையாளம் என பேசுகிற திமுகவை நம்புகிறவர்கள்.

ஆர்எஸ்எஸ் சமூக இயக்கம் எனச் சான்றிதழ் கொடுத்து சங்பரிவார் கூட்டத்தில் கலந்து கொண்டு பாரதமாதா சிலையை அமைச்சரை வைத்து திறந்து வைக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடியை ஆதரித்த திமுகவை நம்புகிறவர்கள்.

A Right Man in Wrong Party என வாஜ்பாய்க்கு சான்றிதழ் கொடுத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுகவை நம்புகிறவர்கள்.

முதன்முதலாக பிள்ளையார் ஊர்வலத்திற்கு இந்த மண்ணில் அனுமதி கொடுத்து, இந்த நொடி வரை பிள்ளையார் சதுர்த்தி அன்று பள்ளிவாசல் நுழைவாயில்களை பதட்டம் கொள்ள வைக்கிற ஆபத்தினை அன்றே அனுமதித்த திமுகவை நம்புகிறவர்கள்.

காலையில் தினமலர் விழாவில் கலந்துகொண்டு, தினமலருக்கும் கழகத்திற்கும் உள்ள உறவை கவிதையாக பேசிவிட்டு, மாலை நோன்புக் கஞ்சி குடித்து, குல்லா போட்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, இரவு துக்ளக் விழாவில் சோ எனது நண்பர் என பேசிய கருணாநிதி தலைமையிலான திமுக வை நம்புகிறவர்கள்.

நீதிமன்றமே பிடிவாரண்ட் கொடுத்த போதும் கூட எச் ராஜாவை கைது செய்யாது வேடிக்கை பார்த்து பாஜகவோடு அனுசரணையாக நடந்து கொள்ளும் திமுகவை நம்புகிறவர்கள்.

பத்மா சேஷாத்திரி பள்ளி மீது கைவைத்தால் உன் ஆட்சியைக் கலைப்பேன் என பகிரங்கமாக முகத்தில் காரி உமிழும் சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு சொல்கூட பேசாமல் அமைதியாக அடக்கமாக நடந்து கொள்ளும் திமுகவை நம்புகிறவர்கள்.

இஸ்லாமிய மக்களை பாதிக்கக்கூடிய குடியுரிமை சட்டங்கள், வேளாண் சட்டமசோதா போன்றவற்றை தந்திரமாக பாராளுமன்றத்தில் ஆதரித்து வந்துவிட்டு , இங்கே எதிர்ப்பது போல நடித்து ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வழக்கும் வாங்காமல் தப்பித்து போன திமுகவை நம்புகிறவர்கள்.

பாஜகவின் அதிகார பீடமாய் வந்து அமர்ந்து இருக்கும் ஆளுநர் மேசைக்கு அனைத்து கோப்புகளையும் அனுப்ப வேண்டும் என அடிமை சாசன உத்தரவை பிறப்பிக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

தேர்தல் காலத்தில் வாக்களித்த நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை எதையுமே செய்யாமல் மத்திய அரசை பகைத்துக் கொள்ளாமல் நட்பு பாராட்டும் திமுகவை நம்புகிறவர்கள்.

கோவை குண்டுவெடிப்பு கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களை இதுவரை விடுதலை செய்யாமல், இதற்கு முன்னாலும் விடுதலை செய்யாமல் ஓட்டுக்கு மட்டும் முஸ்லிம்களை பயன்படுத்தும் திமுகவை நம்புகிறவர்கள்.

எப்போதும் தேர்தல் அரசியலில் இரண்டு சீட்டு மூன்று சீட்டுக்கு மேல் இஸ்லாமியர்களுக்கு தராமல் அவர்களது ஓட்டை மட்டும் கணக்கு செய்து சரியாக கறக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பு மட்டுமே, நீதி அல்ல, இது எங்கள் மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதி, என முழங்கிய அண்ணன் சீமானை நம்பாது நீதிமன்றத் தீர்ப்பு அப்படியே கடைபிடியுங்கள் என சொன்ன திமுகவை நம்புகிறவர்கள்.

இந்து முன்னணிக்கு எதிராக வீரத்தமிழர் முன்னணி தொடங்கி சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழ்,ராமனுக்கு எதிராக ராவணன், பிள்ளையாருக்கு எதிராக முருகன்,விவேகானந்தருக்கு எதிராக வள்ளலார், காவிக்கு எதிராகப் பச்சை , சூலாயுதத்திற்கு எதிராக வீரவேல், ராகவேந்திரருக்கு எதிராக வைகுந்தர்,சாய்பாபாவிற்கு எதிராக புரட்சியாளர் பழனி பாபா என்றெல்லாம் பிரகடனப்படுத்தி இஸ்லாமியர்களை தமிழர் மெய்யியல் காக்கும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களாக அறிவித்து எப்போதும் இஸ்லாமியர்கள் பக்கம் நிற்கின்ற அண்ணன் சீமானை 1008 கேள்விகள் கேட்டு விட்டு திமுகவினை ஒரு சொல் கூட கேட்காமல் அப்படியே நம்புகிறவர்கள்..,

நாங்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தி , ஒவ்வொரு தேர்தலிலும் இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் வழங்காத அப்பெரும் இடங்களை இஸ்லாமியர்களுக்கு வழங்கி, குறிப்பாக 13 இடங்களில் எட்டு இடங்களில் இஸ்லாமியப் பெண்களுக்கு வழங்கி, இஸ்லாமிய மக்கள் இந்த மண்ணின் சிறுபான்மை அல்ல, அவர்கள் பெரும்பான்மை தமிழ் தேசிய இனத்தின் பெருமை மிக்க மக்கள் என முழங்கிடும் நாம் தமிழர் கட்சியை..

நம்பாமல் போவது இயற்கைதான்.

இன்னும் நாளை பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்தாலும் அதையும் இவர்கள் நியாயப்படுத்தி தான் பேசுவார்கள். ஏற்கனவே பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்தபோது குறைந்த பட்ச செயல் திட்டம் இருக்கிறது என்றெல்லாம் நியாயப் படுத்தி தான் பேசினார்கள்.

பாவம் அவர்கள்.
அவர்களோடு விவாதிக்காதீர்கள்.

யார் எதிரி, யார் நண்பன் என தெரியாத பாவம் அவர்கள்.

இங்கே இந்துத்துவா தான் திராவிடம் வழியாக வருகிறது என உண்மை அறியாத பாவம் அவர்கள்.

அவர் வந்து விடுவார், இவர் வந்துவிடுவார் என அச்சுறுத்தி ஓட்டை பறிக்கும் திருடர்களை நம்பி வழிதவறி நிற்கிற கூட்டம் அவர்கள்.

அநீதிக்கு துணை போவதும், நேர்வழி நிற்பவர்களை இழிவு படுத்துவதும் சரியானவையா என மறுமையில் ஏக இறைவன் முன்னால் அவர்கள் பதில் அளிக்கட்டும்.

இதைச் சரியாக உணர்ந்து
தேவையற்ற விவாதங்களை நம் உறவுகள் தவிருங்கள். புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும். அன்று அவர்கள் வரட்டும்.

நம் தலைவர் நமக்கு கற்பித்தது போல நாம் அவர்களுக்காகவும் தான் களத்தில் நிற்கிறோம். பல சமயங்களில் அவர்களுக்காக நாம் மட்டுமே களத்தில் நிற்கிறோம்.

அண்ணன் சீமான் சொல்வது போல..

இந்தத் தேர்தல் களத்திற்கு அப்பாலும் நமக்கென ஒரு லட்சியம் இருக்கிறது. நாம் வெல்கிறோமோ, தோற்கிறோமோ, போராடுவோம்.

ஏனெனில் நாம் போராடப் பிறந்தவர்கள். நம்மை விமர்சிப்பவர்களுக்காகவும் நாம் போராடுவோம்.

நாம் தமிழர்.

மணி செந்தில் ‌.

ஜெய் பீம்- அநீதிகளுக்கு எதிரான கலைக்குரல்.

எப்போதும் அநீதிகளுக்கு சாட்சியமாக குழந்தைகளின் விழிகள் அமைந்து போவது தான் உலகத்தின் கோர விதியாக இருக்கிறது. ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இது நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஜெய் பீம் -ல் குழந்தைகள்” என தனி ஆய்வே செய்யலாம் என்ற அளவிற்கு குழந்தைகளின் அழுகை, குணாதிசயங்கள், எதிர்பார்ப்புகள், அச்ச உணர்வுகள் என குழந்தைகளின் யதார்த்தக்காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

சற்று பிசகினாலும் ஆவணப்பட சாயல் அளித்துவிடும் என்கிற அளவிற்கு உண்மை சம்பவங்களை, நிஜ மனிதர்களை காட்சிமைப் படுத்தியது சவாலான காரியம் தான்.

இந்த படத்தின் அடிநாதம் எளிய மனிதர்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதி, வன்முறை போன்றவை. எனவே கதாநாயக பிம்பம் அநீதிக்கு எதிராக எழுந்து நிற்க கதையோட்டத்தில் அநீதியின் பிம்பம் வலிமையாக இருக்க வேண்டும். அதை கதாநாயகன் சூர்யாவுக்கு இணையாக ஏறக்குறைய சம பலத்தில் தாங்கிப் பிடித்திருக்கிறார் காவல்துறையின் உதவி ஆய்வாளராக வருகின்ற தம்பி தமிழ்.

ஏற்கனவே அசுரன் படத்தில் வியத்தகு நடிப்பாற்றலை வெளிப்படுத்திய தம்பி தமிழுக்கு ஜெய்பீம் ஒரு புதிய பாய்ச்சல்.

புரட்சியாளர் அம்பேத்கர் வழங்கிய “ஜெய் பீம்” என்ற சொல்லின் அரசியலை படம் முழுக்க ஒரு கல்வி போல பார்ப்பவரின் மனதிற்குள் விதைப்பதற்கான வித்தை இயக்குனர் ஞானவேலுக்கு கூடி வந்திருக்கிறது.

சில திரைப்படங்கள் வெளிவரும் போது அதற்கான அரசியல் போக்குகள் உருவாக முயலும் காட்சிகளை சமீபகாலத்தில் காண்கின்றோம். குறிப்பாக சாதி புகழ் பேசும் சில திரைப்படங்கள் மனதிற்குள் கடும் அருவெறுப்பை,ஒவ்வாமையை தோற்றுவித்து விடுகின்றன.

நெருங்கிய தம்பி ஒருவர் அந்தப்படத்தைப் பற்றி எழுதுங்கள் அண்ணா என்று சொன்னார். எதிர்த்து எழுதுவது கூட அதற்கான விளம்பரமாக அமைந்து விடும் என்கிற பயத்தில்தான் அப்படியே கடந்து விடுவது.

அது போன்ற படங்களைப் பற்றி பேச மறுப்பது தான் அந்த படங்களுக்கு எதிரான கடும் எதிர்ப்பு.

எல்லாவற்றையும் பேச முடிகிற நமக்கு அத்திரைப்படங்களை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.அது போன்ற திரைப்படங்களை பற்றி பேசுவது கூட ஆதிக்க அரசியலுக்கு சார்பான போக்கு என்ற நிலையில்தான் ஜெய்பீம் வெளிவந்திருக்கிறது.

ஆனால் ஜெய்பீம் பற்றி
அவசியம் பேசவேண்டும்.
பேசியே தீரவேண்டும்.

அது கூட ஒரு அரசியல்தான்.
அதுதான் மக்களுக்கான அரசியல்.
எளிய மனிதர்களுக்கான அரசியல்.

படம் பார்த்து முடித்த பின்னரும் அதிர்ந்து கொண்டே இருக்கும் மனநிலையில் செங்கனியின் விம்மிய அழுகை மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஜெய்பீம் பற்றி பேசுவோம்.
விரிவாகப் பேசுவோம்.

ஒரு வகையில் அந்தப் படம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

பேசப்பட வேண்டும் என்பதுதான் அநீதிகளால், அதிகாரங்களால் பாதிக்கப்பட்ட அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

பேசுவோம்.

அண்ணன் என்ற அற்புதன்..

❤️

2009 -ல் மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் “கூட்ட மேடையில் முதன்முதலாக ஏறிய போது கைப்பிடித்து என்னை ஏற்றினார்.

அந்த நொடி முதல் அந்த கைகள் என்னை விட்டு விலகியதே இல்லை. தாய்மை சாயல் கொண்ட அந்தக் கண்கள் என்னை விலக்கியதே இல்லை.

அண்ணன் என்ற சொல்லுக்கு அவரைத் தவிர வேறு எதுவும் அர்த்தமில்லை. அவரிடமிருந்து வரும் என்ற தம்பி என்ற அழைப்பைத் தாண்டி வேறு எதுவும் உயர்வில்லை.

தனிப்பட்ட அளவில் நான் எவ்வாறு அவரைப்பற்றி உணர்ந்திருக்கிறேனோ, அதே போல்,நாம் தமிழர் கட்சி என்ற அமைப்பில் இருக்கின்ற லட்சக்கணக்கான உறவுகளும் அவரை உணர்கிறார்கள்.
அவர்கள் அனைவரோடும் நேச வேதியியல் அமைந்த விசித்திரமான பிணைப்பு அண்ணன் சீமானுக்கு உண்டு.

சாதி, மதம், பொருளாதார அடிப்படை, சுயநல அரசியல் பிழைப்பு, எதிர்பார்ப்பு என்றெல்லாம் இயல்பான சமூகத்திற்கு உரிய எந்த சமூக இணைப்புகளும் இல்லாத ஒரு பெருங்கூட்டம், அந்த ஒற்றை மனிதனின் அன்பான சில வார்த்தைகளால் தான் கட்டப்பட்டிருக்கிறது. இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கட்சியை விட்டு சென்றுவிட்ட சிலர் கடுமையாக விமர்சிப்பதை பார்க்கும் போது அதில் தொனிக்கின்ற உணர்ச்சிகளை கவனித்துப் பார்த்தால்..பிசகிய காலத்தினால் இழக்கவே கூடாத “அண்ணனை இழந்து விட்ட” சுய கழிவிரக்கம் அவர்களை பாடாய்படுத்துவதை தான் வெறுப்பாய் உமிழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என நானெல்லாம் உணர்ந்திருக்கிறேன்.

ஏனெனில் அண்ணனின் நிழல் போல் சொர்க்கத்தின் அரண்மனை கூட சுகமாக இருக்காது என அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும் இல்லையா..??

அண்ணன் என தலைவனின் தம்பியை அழைத்து விட்டு மற்றவர்களை தலைவராக ஏற்க , அண்ணனாக அழைக்க கூசும் இல்லையா..??

எதிர்ப்புகளால் தான் நம் அண்ணன் உருவானார். போராட்டங்களும் இழப்புகளும் தான் அவரை உரம் ஏற்றியது. எதற்கும் அஞ்சாத, இனத்திற்காக எதையும் இழக்க துணிந்த அவரது அசாத்திய துணிச்சல் தான் அவரை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

இவைகள்தான் ஒவ்வொரு நொடியும் அவர் நமக்கு விடுத்துக் கொண்டிருக்கின்ற செய்தி.

….

இரவு பகலாக உழைத்து, வியர்வை மழையில் நனைந்து, நிறைய வாசித்து, எந்தத் தலைவர்களும் பேசாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் பேசி, துளித்துளியாய் இலட்சக்கணக்கில் உறவுகளை இணைத்து, ஒரு பெரும்படை கட்டி நிமிர்ந்து நின்று , ஒவ்வொரு நொடியும் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிற அந்தப் பெருமகன் நம்மைப் பொறுத்தவரையில் நாம் கற்க விரும்பும் ஒரு தனி மனிதனின் வரலாறு மட்டுமல்ல. நிமிரத்துடிக்கும் ஒரு இனத்தின் வரலாறு.
காலத்தினால் கையளிக்கப்பட்ட
ஒரு கடமையின் வரலாறு.

❤️

“அண்ணன் என்ற என் அண்ணைக்கு
நெஞ்சமெல்லாம் பூரித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.”

❤️

இனி நாம்தமிழர் காலம்

❤️

Missed call..

❤️

❤️

அந்தப் பாடல் ஒரு கருணை என்றாய். மழை போல. இளவெயில் போல.‌ எப்போதாவது உணரத்தக்க மனநிலையில் ‌ காலத்துளியின் நழுவத் துடிக்கும் ஒரு இழையில் அனிச்சையாக சிக்கிக்கொண்ட அபூர்வம் போல அந்தப்பாடல் ஒரு கருணை என விழிகள் மூடி மெய்மறந்து நீ சொல்லும் அந்தக் கணத்தில்…

நிச்சயமாக நீதான் அந்தக் கருணை என எனக்கு சொல்லத் தோன்றியது.

❤️

இப்போதும் எங்கேயாவது என்னையும் மீறி கேட்டு விடுகிற அந்த பாடல் விரைந்து செல்கிற நதி
குளிர்கால பனியால் கனத்து விடுவதுபோல‌ கனத்து விடுகிறது.

அந்தப் பாடல் ஒரு திடப்பொருள் போல உறைந்து விடுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி விலகி ஓடுகிற மணி நேர நொடிகளை இறுக்கி கட்டி அந்தப் பாடல் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விடுகிறது.

❤️

எங்கிருந்தோ கிடைத்த அந்தப் பாடலின் வசீகரமான துண்டு ஒன்றினை என் அலைபேசியின்
அழைப்பிசையாக பொருத்திய போது, யாரோ ஒருவர் அழைக்கும் போதெல்லாம் நீயே அழைப்பதாக எனக்குத் தோன்றியது.

ஒரு கட்டத்தில் நீ தான் அந்தப்பாடல்
என உணரத் தொடங்கிய போது
நானே வெவ்வேறு அலைபேசிகளின் மூலமாக என்னை அழைத்துக் கொண்டதும் நடந்தது.

இறுதியாக நீயே ஒரு பின்னிரவில் என்னை அழைத்தாய்.

உலகமே தன் இமைகளை மூடிக்கிடக்கும் அந்த சலனமற்ற
நள்ளிரவின் திறக்கப்படாத கதவுகளை அந்த அழைப்பிசை
திறந்ததாக நான் உணரத் தொடங்கினேன்.

காலதேச தூரம் கடந்து காற்றின்
சிறகை பிடித்துக் கொண்டு
நீயே அருகில் வந்து விட்டதாய் ஓர் உணர்வு.

அழைப்பினை எடுக்க துடிக்கிற
எனது விரல்களுக்கும்..
அழைப்பிசை தந்த மெய் மறத்தல்
உணர்வுகளுக்கும் இடையே..

நேரம் வழுவி அழைப்பு துண்டானது.

மீண்டும் அழைத்தாய்.

மீண்டும் அதே நிலை.

❤️

எதற்காக அழைத்து இருப்பாய் என எண்ணுவதற்கு முன்பாக அழைத்திருக்கிறாய் என்ற நிறைவில் நான் நிலைத்திருக்க..

“Missed call’ என்று உனது பெயர் மின்னிக் கொண்டிருந்தது.

❤️

மாநாடு-திரைக்கதை கலையின் விசித்திரம்.


திரை உலகை கனவுத் தொழிற்சாலை என வரையறுத்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா . நம் கண்முன்னால் விரிகிற திரை நமக்கும் , நம் கனவிற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை அழிக்க முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சியை தான் நாம் திரைப்படம் என்கிறோம். ஒரு நல்ல திரைக்கதை “ஹைக்கூ” வடிவம் போன்றது என்கிறார் காட்பாதர் , அபாகலிஸ் நெள போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ. அவரே சொல்கிறார் , “ஒரு கலை வடிவத்தின் உச்சத்தை அடைவதற்காக துணிச்சலான முடிவுகளை எடுங்கள். அது வெல்லலாம், தோற்கலாம்.. ஆனால் துணிச்சலான முடிவுகள் தான் எப்போதும் கலை வடிவத்தின் உச்சங்களை வெளிப்படுத்துகின்றன”.


ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக அதன் திரைக்கதை விளங்குகிறது. சிறந்த கதையாக அறியப்பட்டவைகள் திரைக்கதையாக வேதியியல் மாற்றம் அடையும்போது பல சூழ்நிலைகளில் தோல்வி அடைந்திருக்கின்றன. நல்ல கதைகளுக்கு எப்போதுமே நல்ல திரைக்கதைகள் தேவைப்படுகின்றன. ஆனால் நல்ல திரைக்கதைகளுக்கு ஓரளவு போதுமான வழக்கமான கதை இருந்தால் வென்று விடலாம். அவ்வாறாகத்தான் மாநாடு வென்றிருக்கிறது.


ஒரு திரைப்படத்தை அறிவியலாக புரிந்து கொள்வதும், கலை மொழியில் அறிந்து கொள்வதும் வெவ்வேறானது. திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒரு எளிய பார்வையாளன் திரையில் விரிகிற காட்சியோடு ஒன்றுபட்டு தானும் அதில் ஒரு பகுதியாக உணர தலைப்படும் போது தான் கலையின் அழகியல் வெளிப்படுகிறது. ஒரு திரைப்படம் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பார்வையாளனின் சகலவிதமான நினைவுகளிலிருந்து அவனை திசை திருப்பி , தான் விவரிக்கும் கதையில் அவனை ஒன்ற வைத்து , அவனது கால ஓட்டத்தை மெலிதாக அவன் மறக்க வைக்கிற அந்த உணர்வுப் புள்ளியை தான் தனது வெற்றியாக கருதுகிறது. 


அந்த கால ஓட்டத்தை தான் ஒரு கதைக் கருவாகக் கொண்டு மாநாடு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவருடைய முந்தைய திரைப்படங்கள் வணிக ரீதியிலான அனைத்து சமரசங்களுக்கும் உட்பட்டு , வெகு மக்களுக்கான தமிழ்சினிமாவின் சகலவிதமான இலக்கணங்களுக்கு உட்பட்டவை தான். அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 (2007) தெருவில் நடக்கும் கிரிக்கெட் பந்தயத்தை அடிப்படையாக கொண்டது. மாபெரும் திறமை உள்ள விளையாட்டு வீரர்களை விதந்தோதும் படங்களுக்கு மாற்றாக தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பற்றிய அத்திரைப்படத்தின் எளிய வகையிலான திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது. தெரிந்தோ தெரியாமலோ வெங்கட்பிரபு தான் கட்டமைத்த நண்பர்கள், கேளிக்கைகள், விளையாட்டுகள், காதல், கடத்தல் இவற்றில் எழுகின்ற துரோகங்கள், வழக்கமான கதாநாயகத்தனம் போன்ற குறிப்பிட்ட வகையிலான சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் சில ரசனை மிகுந்த தந்திரங்களை அவரால் செய்ய முடிந்தது. அவரது உச்சபட்ச வணிக வெற்றியை கொடுத்த மங்காத்தா திரைப்படம் கூட இவ்வாறானதே. வழக்கமான நன்மை/தீமை இடையிலான யுத்தமாக ஒரு திரைப்படத்தை வடிவமைக்காமல், ஒரு திரைப்படத்தில் அனைவரும் கெட்டவர்களாக இருந்து, யார் இதில் அதிகம் கெட்டவர் என்கின்ற போட்டி நடத்தி,  அந்தப் போட்டியையும் மக்களை ரசிக்க செய்து அதிகம் தீயவர் எவரோ, எவர் அதிகம் வில்லத்தனம் செய்கிறாரோ அவர்தான் கதாநாயகன் என வழமையான கோடுகளில் இருந்து மாற்றி வரைந்தது மங்காத்தாவின் திரைக்கதை அமைப்பு.
முதல் முறையாக “வெங்கட்பிரபு அரசியல்”(  A Venkat Prabu Politics) என தலைப்பிடப்பட்டு மாநாடு என்கின்ற திரைப்படத்தை அவர் அறிவித்தபோது நிச்சயமாக இது தீவிரமான அரசியல் திரைப்படமாக இருக்காது என அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தவர்கள் கண்டிப்பாக கணித்து இருப்பார்கள். அந்தக் கணிப்பு சரியானது தான். மாநாடு அரசியல் படமல்ல. அரசியலைப் பற்றிய படமும் அல்ல.


நழுவி ஓடும் கால ஓட்டத்தின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் சிம்பு மற்றும் வில்லன் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவர் விளையாடும் பரமபத கதையே மாநாடு.  எல்லோரையும் விட இந்த திரைப்படம் நடிகர் சிலம்பரசனுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் சமீப காலத்தில் தன் மீது எழுந்திருந்த எல்லா விமர்சனங்களுக்கும் அவர் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அவருக்கு ஒரு வெற்றி தேவையாக இருந்தது. இந்த இரண்டில் அவர் மீது எழுந்து இருந்த எல்லா விமர்சனங்களுக்கும் இத்திரைப்படத்தின் மூலம்  அவர் பதில் சொல்லிவிட்டாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது இரண்டாம் தேவையான படத்தின் வெற்றி அவருக்கு கிடைத்துவிட்டது.


அரசியல் என்ற சொல்லை பயன் படுத்தி விட்டதால் கதாநாயகன் ஒரு இஸ்லாமியனாக உருவாக்க பட்டிருப்பதை தாண்டி , இஸ்லாமியர்கள் என்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்கின்ற செய்தி இந்த திரைப்படத்தின் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற ஆறுதல் நமக்கு இருந்தாலும் அது வலிமையாக சொல்லப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு மத பெரும்பான்மையினர் வசிக்கும்  நாட்டில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை பற்றி இத்திரைப்படம் இன்னும் விரிவாகப் பேசி இருக்கலாம் என்பது ஒரு குறையே.
“Time Loop” பற்றி ஏற்கனவே பல ஆங்கிலத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்னவென்று சிந்தித்தால்”காலச்சுழி” என்பது சரியாக இருக்கும் என்றே கருதுகிறேன். இந்தக் கருத்தோடு காலத்தின் முன்னாலும் பின்னாலும் பயணிக்கிற ‘டைம் மிஷின்’ விவாகரங்களை பொருத்திப் பார்த்துக் கொண்டால் இன்னும் இந்த விஷயம் புரியும்.


புத்திசாலித்தனமாக மாநாடு திரைப்படத்திலேயே” Time loop”  திரைப்படங்கள் குறித்த அறிமுகங்களை கதாநாயகனே கொடுத்து விடுவதால் அந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று என பார்வையாளர்களை இயக்குனர் நம்ப வைத்து விடுகிறார்.
தமிழிலும் ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவா இயக்கிய 12 B( 2001) இதுபோன்ற திரைப்பட வகைமைகளுக்கு தமிழில் நமக்கு கிடைக்கின்ற ஒரு முன்னோடி திரைப்படம். அதேபோல் சூர்யா நடித்து விக்ரம் கே குமார் இயக்கிய 24 (2016), அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த கேம் ஓவர் (2019) சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கன்னியும் 3 களவாணிகளும் (2014)  போன்ற சில படங்களும் இதே போன்று கால நழுவலின் கண்ணியில் சிக்கிக்கொண்ட நிகழ் மனிதர்களின் கதைகள் தான். டைம் மெஷின் பற்றிய திரைப்படங்களை தனி பட்டியலாக வே கூறலாம்.


படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக வருகிற ஒய் ஜி மகேந்திரன் தனது வசனத்தில் போகிற போக்கில் கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” ( Tenet) திரைப்படத்தை குறிப்பிடுவதும் படம் குறித்த புரிதலை பார்வையாளருக்கு ஏற்படுத்தும் முயற்சி தான். 


இவ்வளவு முன் தயாரிப்புகளை சொல்லியும் பார்வையாளர்களுக்கு ‌ “Time Loop”  பற்றி புரிகிறதோ புரியவில்லையோ, ஆனால் திரைக்கதை வடிவமைப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்திருக்கிற திறமையான “எளிமை” இந்தத் திரைப்படத்தின் மூல கருத்தினை புரிந்துகொள்ளாத எளிய பார்வையாளர்களுக்கு கூட , திரைக்கதையின் சுவாரஸ்யத்தை சென்று சேர்த்துவிடுகிறது. 
அதற்காகவே வழக்கமான தமிழ் திரைப்படங்களுக்கு உரிய கதாநாயகன் -வில்லன் மோதலாக இந்த திரைப்படத்தை வடிவமைத்துக் கொண்டது இயக்குனரின் புத்திசாலித்தனம். இந்த வழமையான சட்டகத்திற்குள் Time Loop சற்றே குழப்பமான வடிவத்தை பொருத்தி , அதற்கு இந்திய திரைப்பட பார்வையாளனுக்கு தேவைப்படும் புராணீக நியாயம் சேர்ப்பதற்காக காலபைரவர் கதையையும் இணைத்து இயக்குனர் வெங்கட்பிரபு விவரிக்க முயன்றிருக்கிறார்.


இந்த முயற்சிகள் படம் பார்ப்பவர்களை சிந்திக்க வைப்பதற்கு முன் ,எஸ் ஜே சூர்யா வின் அசாத்திய உடல்மொழியோடு கூடிய தவிப்பிலும்,” தலைவரே தலைவரே..” என அவர் புலம்பும் புலம்பலிலும், இத்திரைப்படம் பார்வையாளனுக்கு வெகு சுவாரசியமாக மாறிவிடுகிறது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா தான் இந்தப் படத்தின் மாபெரும் வலிமை.


படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் படத்தின் படத்தொகுப்பு. படத்தொகுப்பாளர் பிரவீனுக்கு இது நூறாவது படம் என்பதனால் தன்னுடைய பங்களிப்பு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக உழைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். காட்பாதர் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் என அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வாங்கிய “வால்டர் முர்ச்”  சிறந்த படத்தொகுப்பிற்கு 1. உணர்ச்சி 2.கதை 3. ரிதம் 4. கண் பார்வையை தொடர்தல் 5. திரையின் இருபரிமாண இடம் 6. முப்பரிமாண வெளி என ஆறு விதிகளை வகுக்கிறார் ( மாண்டேஜ் -தமிழில் தீஷா, பேசாமொழி பதிப்பகம் வெளியிடு). இந்த விதிகளில் ஒன்று பிசகினாலும் திரைப்படம் தான் தெரிவிக்க வந்த மூல கருத்திற்கு அப்பால் விலகிச் சென்றுவிடும் எனவும் அவர் எச்சரிக்கிறார். இந்த விதிகளை மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பில் பொருத்திப் பார்த்தால் ஏறக்குறைய பொருந்திப் போவது ஆச்சரியம்தான்.


மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் தனது கடந்த 99 திரைப்படங்கள்  வழங்கிய அனுபவத்தினை வைத்து எது பார்வையாளர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் வெற்றி கண்டுள்ளார்.  படத்தின் இன்னொரு பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை.
மற்றபடி காட்சிக்கு காட்சி வேறுபடும் கதாநாயகன் சிம்புவின் உடல்வாகு படத்தின் போக்கினை பாதிக்கிறது. வேக வேகமாக நகரும் திரைக்கதையில் குறிப்பிட்ட சில காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் பார்வையாளர்கள் களைப்படைந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் சில புதிய விஷயங்களை சேர்த்து இணைத்து வழங்கி இருப்பது படத்திற்கு பலம் என்றாலும், அது ஒவ்வொரு முறையும் நடக்கும் போது கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது. 
ஒரு திரைக்கதையாக இந்தப் படத்தை இயக்குனர் விவரிக்கும்போது அதை புரிந்து கொண்டு தயாரிக்கும் திரை அறிவு கண்டிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு அவசியம் தேவை. “மிக மிக அவசரம்”(2019) என்கின்ற மிக முக்கியமான ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கிய சுரேஷ் காமாட்சி இந்தத் திரைக்கதையின் அடிப்படையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தயாரித்திருக்கிறார். நீண்ட காலமாக படம் தயாரிப்பு நிலையிலேயே இருந்தது பல காட்சிகளில் தெரிந்தாலும், படத்தின் திரைக்கதையின் போக்கு அதை முறியடிக்கிறது.


படம் வெளிவருவதற்கு முன்பாக வழக்கம்போல் தடைகள் ஏற்பட்டன. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்கின்ற முறையில் பணம் போட்டு ஒரு படைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை சரியாக மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பது மிக மிக சவாலான ஒரு விஷயம். அந்த சவாலில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெற்றி பெற்றிருக்கிறார். 
வழமையான கதையில் புதுமையான திருப்பங்களோடு கூடிய, விறுவிறுப்பான திரைக்கதையால் மாநாட்டிற்கு கூட்டம் கூடுகிறது.


அந்தவகையில் மாநாடு தன் வழக்கமான திரைக்கதையின் போக்கில் வலிந்து பொருத்திக்கொண்ட “கால விசித்திரத்தால்” தமிழில் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறியிருப்பது ஒரு வெற்றிக்காக காத்து நின்ற இயக்குனர் வெங்கட்பிரபுவிற்கும், நடிகர் சிலம்பரசனுக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கக்கூடும்.


-மணி செந்தில்.

அப்பாவின் பிறந்தநாளில்..

அப்பாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.எப்போதும் அவருக்கு பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளாக தான் கடந்து போகும் ‌. இன்றும் அவர் அப்படித்தான் அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் நாட்களின் நகர்வு ஒன்று மட்டுமே மனிதனின் வாழ்நாள் அல்ல. அந்த நாட்களில் அவன் என்ன சாதித்து இருக்கிறான் என்பதே அவனது வாழ்நாள் என்கிறார்.

அவர் அப்படித்தான். இன்றளவும் தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் படிப்பதற்காக ஒதுக்குகிறார். நாம் தமிழர் காணொளிகள் அனைத்தையும் விடாமல் பார்த்து விடுகிறார். வாரத்திற்கு ஒரு முறை அண்ணன் சீமானோடு அலைபேசியில் பேசி விடுகிறார். அடுத்து வருகின்ற ஆன்றோர் அவைய கூட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்திருக்கும் இடும்பாவனம் கார்த்தியோடு சமகால அரசியல் குறித்து ஆர்வத்துடன் விசாரிக்கிறார்.ஒரு காலத்தில் முரசொலி படிக்காமல் அவருக்கு ஒருநாள் முடியாது. வீட்டில் கருணாநிதி என அழைக்கக் கூடாது கலைஞர் என்றுதான் அழைக்க வேண்டும் என வாதிட்டவர். எங்கெங்கெல்லாம் கருப்பு சிவப்பு கொடி பறக்கிறதோ அதுவெல்லாம் தன் ஊராக நினைத்தவர், 2009 இன அழிவிற்கு பிறகு தன்னை வெகுவாக மாற்றிக் கொண்டு விட்டார்.

இன்று இடும்பாவனம் கார்த்தியிடம் புதியதோர் தேசம் இதழை புத்தக வடிவில் கொண்டுவர முடியுமா எனக் கேட்கிறார். அண்ணன் சீமான் மீது அளவற்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. உறுதியாக அவர் வெல்வார் என நம்புகிறார். நான் படிப்பது, இனத்திற்காக நிற்பது, மொழியை நேசித்து எழுதுவது எல்லாமுமே அவரை பார்த்து நகல் எடுத்தது தான். புத்தகங்கள் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை எனக்கு அளித்து நோயில் இருந்தும், தனிமையில் இருந்தும் என்னை விடுவித்தவர்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போகிற போக்கில் நம் முன்னோர்கள் உதிர்த்து விட்டுப் போன வார்த்தை அல்ல என்பதை பலமுறை எனக்கு உணர்த்தியவர்.அவருக்கு அருகில் நான் மிகப் பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறேன். உணருகிறேன். அவர் எனக்கு அளித்த அனைத்து நல்லவைகளுக்காகவும, நல்லவை களைத் தவிர வேறு எதுவும் எனக்கு அளிக்காத இந்த வாழ்விற்காகவும் அவருக்கு நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன்.

இன்றைய நாளில் அவருக்காக வந்திருந்து மகிழ்ந்த , சென்னை தவிர்த்து அப்பாவிற்காக என்னுடன் இருந்த என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் , குடும்பத்தோடு வந்து இருந்து நேசித்து மகிழ்ந்த என் உடன்பிறந்தவர்கள் வழக்கறிஞர் மோ.ஆனந்த் , பிரகாஷ் , அடுத்த வருடம் இந்நாளில் இருவராக மாற இருக்கும் என் தம்பி Lingadurai K , எனது அலுவலக இளையோர் வீர பிரபாகரன், பிரகாஷ் , தங்கை லட்சுமி , என் தங்கை மீனா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பேரன்பு.

இனிய அகவை தின வாழ்த்துக்கள் அப்பா.

363பிரகாஷ், இரா. கார்த்தி நிமலன் and 361 others104 comments5 sharesLikeCommentShare

10

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு கடிதம்.

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு.

வணக்கம் தல. மாநாடு படத்தை உடனே பார்க்க முடியாததற்கு மன்னிக்கவும்.படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தான் பார்க்க நேர்ந்த போதிலும், கூட்டம் நிறைந்து அரங்கம் முழுமையாக இருந்ததை பார்த்த போது உண்மையிலேயே உங்கள் முகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

மற்றபடி இந்த கடிதம் மாநாடு பற்றி அல்ல. திரையரங்கில் இருந்து நான் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய குரல் பதிவில் சொன்னதுபோலவே உங்கள் பெயர் திரையில் மின்னிய உடன் நான் எழுந்து நின்று கை தட்டினேன். வழக்கமாக கதாநாயகனுக்கு, இயக்குனருக்கு, இசையமைப்பாளருக்கு என கைத்தட்டல்கள் குவியும் ஒரு அரங்கில் தயாரிப்பாளருக்கு‌ எழுந்து நின்று கை தட்ட வேண்டிய நிலையில் இன்றைய தமிழ் சினிமா வந்து விட்டது உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.

கடந்த சில ஆண்டுகளாக உங்களை கவனித்து வந்ததில் நீங்கள் இந்த இடத்தை அடைவதற்காக எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றி அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் வலிமையாகி கொண்டே சென்றதை பரவசத்தோடு கவனித்திருக்கிறேன். அந்த வலிமையிலும் நண்பர்கள் மத்தியில்‌ நீங்கள் எளிமையாகிக் கொண்டே போவதை கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

அந்த எளிமை தான் உங்கள் வலிமை தல.திரை உலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்பார்கள். கனவுகளை தயாரிக்கும் தொழிற்சாலை என்பதால் அங்கே நிஜ மனிதர்களுக்கு இடமில்லை என்பதாகப் புரிந்துகொள்ள நம் அருகில் இருக்கின்ற திரைத் துறையைச் சார்ந்த அசலான மனிதர்களே உதாரணமாக இருக்கின்றார்கள். ஆயினும் நீங்கள் தடம் மாறாமல், தடுமாறாமல் தொடர்ச்சியாக போராடி கொண்டிருந்தீர்கள்.ஒரு கட்டத்தில் எனக்கே அச்சமாக இருந்தது. இவர் திரைத்துறை மீது கொண்டிருக்கும் அதீத விருப்பத்தினால் எங்கே, எல்லாவற்றையும் இழந்து விடுவாரோ என்றெல்லாம் நான் யோசித்திருக்கிறேன்.

அதை நம் நண்பர் வெற்றியிடம் கூட பேசியிருக்கிறேன். ஆனாலும் நீங்கள் விடாப்பிடியாக காத்திருந்தீர்கள்.ஒரு முறை கோடம்பாக்கத்தில் தீவிரமாக திரைத்துறையில் முன்னேற வேண்டுமென கனவு கொண்டு அலைந்து கொண்டிருந்த, தற்போதும் அதே நம்பிக்கையில் லயித்திருக்கிற நமக்கு மிகவும் வேண்டிய ஒரு அண்ணனிடம் ஒரு கேள்வி கேட்டேன். எந்த நம்பிக்கையில் இங்கு இருக்கிறீர்கள்..??அவர் சிரித்துக்கொண்டே சொன்ன பதில் இதுதான்.. “சுற்றி நான்கு திசையிலும் தண்ணீர் சூழ்ந்த நீல கடல்தான். திசைகள் அற்ற பெருவெளி தான். ஆனாலும் கரையேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் கடலில் இறங்கினோம்” என்றார்.

அந்த நம்பிக்கையை இறுதியாக என்னால் ஒரு வழியாக புரிந்து கொள்ள முடிந்தது.அதே நம்பிக்கை தான் உங்களை சந்திக்கும்போதெல்லாம் விழிகளில் மின்னிக் கொண்டு இருந்ததை நான் கவனித்தேன். அடுத்தடுத்து சில முயற்சிகள் செய்வதாக நீங்கள் சொல்லும் போதெல்லாம், வாழ்த்துகள் என மேலோட்டமாக சொன்னாலும் சத்தியமாக உள்ளுக்குள் எனக்கு கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும்.ஆனால் நீங்கள் நம்பிக்கையை இழக்காத விக்ரமாதித்தன் போல, சினிமா வேதாளத்தை ஆசையோடு தோளில் சுமந்து அலைந்து கொண்டு இருந்தீர்கள்.முன்பு ஒரு பொழுதில் உங்களது மிக மிக அவசரம் என்கிற உங்களது திரைப்படத்தின் திரைக்கதை வடிவத்தை நீங்கள் எனக்கு அனுப்பி இருந்தீர்கள்.

வழமையான வணிக சமரசங்கள் எதுவும் இல்லாத அந்த வடிவம் எனக்கு மகிழ்வைத் தந்தாலும், இந்தப் படம் எப்படி மக்களை சென்று சேரும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். அதுபற்றி எல்லாம் நீங்கள் கவலை படுவதே இல்லை எனக் கேள்விப்பட்ட பிறகு இன்னும் அதிகம் கவலைப்பட்டேன். பல மாதங்களுக்கு முன் மாநாடு திரைக்கதையை சுருக்கமாக நீங்கள் சொன்ன போது அதை புரிந்து கொள்ளவே திரைக்கதை பற்றிய புரிதல் தேவையாக இருந்தது என உணர்ந்த போது ஏன் இந்த மனிதர் இவ்வாறெல்லாம் துணிகிறார் என எனக்குள்ளாக யோசித்தேன்.இந்த நெருக்கடிகளுக்கு நடுவிலும், உங்களுக்கென இருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் பார்வையை நீங்கள் எங்கும் வெளிப்படுத்த தயங்கியதே இல்லை.

அண்ணன் சீமான் அவர்கள் மீது பெரு நம்பிக்கை கொண்டு பயணிக்கின்ற எங்களைப்போன்ற எத்தனையோ தம்பிகளுக்கு மத்தியில் நீங்களும் ஒருவராக பயணித்துக் கொண்டு அதே சமயத்தில் கலைத்துறையில் உங்களுக்கென மதிப்பு வாய்ந்த ஓர் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருந்தீர்கள்.இப்போது மாநாடு படம் வெளிவந்து விட்டது. இந்த படம் குறித்து வெளிவந்த அனைத்து எதிர்மறை செய்திகளுக்கெல்லாம் அப்பால் நாங்கள் உங்களைக் குறித்து தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக உங்களை அறிந்தவர்கள் அனைவருக்கும் இருந்த அச்சம் உங்களுக்கு இருந்ததா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

அச்சம் படத்தைப் பற்றி அல்ல. உங்களைப் பற்றி. நீங்கள் செல்லும் பயணத்தின் எல்லையைப் பற்றி. அந்த எல்லையையும் மீறி செல்வதற்கு எதையும் இழக்கத் தயாராகும் உங்களது மனநிலை பற்றி.படம் நன்றாக வந்திருக்கிறது என என் தம்பி இடும்பாவனம் கார்த்தியும், என் மைத்துனர் பாக்கியராசனும் சொன்னபோது தான் நிம்மதியாக இருந்தது.உண்மையில் வாழ்வதற்கு இதுபோன்ற வலிகள் தேவைதானா என்கின்ற கேள்வி இப்போதும்கூட எழுகிறது. அதற்கு கனவுகள் நிறைந்த உங்கள் விழிகளின் புன்னகை ஒன்றே பதிலாக இப்போது அமைந்துவிட்டது.

இந்த படத்தின் வெற்றியால் இந்த படத்திற்காக நீங்கள் அடைந்த உங்களது பொருளாதார இழப்புகள் சரிசெய்யப்பட்டு விட்டனவா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. அது பற்றிய கவலைகள் நீடிக்கும் இப்பொழுதிலும் கூட வெற்றி தரும் மினுமினுப்பு மகிழ்வாக இருக்கிறது.அதையும் தாண்டி , நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்த்துவிட்ட ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை எழும்போது சற்று நிறைவாக உணர்ந்திருப்பீர்கள் என்று மட்டுமே நான் உணர்கிறேன்.அது நிறைவுக்காக, அந்த நிறைவு தரும் கிளர்ச்சிக்காக மீண்டும் இன்னொரு பயணத்தை நீங்கள் தொடங்கி இருப்பீர்கள்.‌ அந்தப் பயணத்தையும் ஒரு எல்லை மீறும் போராட்டமாக உங்களுக்குள்ளாக நீங்கள் உருவாக்கிக் கொண்டு போராட தயாராக இருப்பீர்கள்.கரையேறும் நம்பிக்கை இருக்கும் வரை தான் கடலின் வசீகரம் குறையாமல் இருக்கும்.திரைத்துறையும் அப்படித்தான் ‌. துணிபவர்களால்தான் திரையின் வசீகரம் குறையாமல் இருக்கிறது.நீங்கள் துணிந்து இருக்கிறீர்கள் தல.அதுதான் இங்கு வசீகரமாக இருக்கிறது.

❤️

பேரன்பு வாழ்துகளுடன்

மணி செந்தில்

213You, தில்லை நாதன் சந்திரன், Arunkumar and 210 others9 comments7 shares

Love

LoveCommentShare

9

Page 1 of 3

Powered by WordPress & Theme by Anders Norén