பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2010 Page 1 of 2

நன்றிகளோடு விடைபெறுகிறேன்..

அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..

என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் பதிவுகளை கண்டு நான் தேடிக் கொண்டிருந்த என் பால்ய கால நண்பன் எனக்கு கிடைத்தான். தொடர்பு விட்டிருந்த என் மிக நெருக்கமான என் தோழி ஒருவர் கிடைத்தார். கும்பகோணம் பள்ளி விபத்து பகிர்விற்காக …தமிழ் மணம் உறவுகளுக்காக பிரத்யோகமாக நான் குழந்தைகளின் பெற்றோர்களை பேட்டி எடுத்ததும், அதை தளத்தில் வெளியிட நானே இணையத்தில் தேடி தொழில் நுட்பம் அடைந்ததும் மிக வித்தியாசமான அனுபவங்கள். இந்த வாரத்தில் எம் அண்ணன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. அடுக்கடுக்கான நெருக்கடிகளாலும், மிகத் தீவிர அரசியல் பணிகளாலும் எனக்கு மிகவும் கால பற்றாக்குறை நிலவியது . இருந்தும் ஏதோ ..எழுதி இருக்கிறேன். என் மின்னஞ்சல்களில் குவிந்த ஆதரவுதான் தமிழ் மணம் எத்தகைய வளர்ச்சியும், பரவலையும் பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிந்தது.

தமிழ் படித்து, தமிழ் எழுதும் தாங்கள் வீழ்ந்து விட்டிருக்கிற நம் இனத்தின் இன்றைய நிலையில் உங்களுடைய ஆற்றலையும், அறிவினையும் நம்மினம் மீள் எழுவதற்கான பணிகளில் செலவழிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மகிழ்வாக, கொண்டாட்டமாக ஒரு பத்தி எழுத ஆசைதான் . ஆனால் எம் இனம் இருக்கும் இன்றைய நிலை என்னை நிம்மதியிழந்த ,அலைகழிப்பிற்கு உள்ளான மனிதனாக , படைப்பாளனாக மாற்றி இருக்கிறது.

கால நதியின் ஏதோ ஒரு தருணத்தில் தமிழர்களாகிய நாமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூழல் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நான் விடை பெறுகிறேன். தொடர்ந்து தமிழ் மணத்தின் வாயிலாக உறவினை தொடர்வோம். என்னால் மறுமொழி திரட்டியை பயன்படுத்த தெரியவில்லை. யாராவது உதவினால் நான் மகிழ்வேன்.

அண்ணன் சங்கரபாண்டிக்கு என்றும் அன்புடைய தம்பியாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

நாம் தமிழர்.

நன்றி.
தங்கள்

மணி .செந்தில்

நம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்…

நம் நிகழ்காலத்துக்கு முழுமையான சமகாலத்தவராக ஒரு போதும் நாம் இருப்பதில்லை. மாறுவேடத்துடனேயே முன்னேறுகிறது வரலாறு .முந்தைய காட்சியின் முகமூடியை அணிந்த படியே மேடையில் தோன்றுகிறது அது

புரட்சிக்குள் புரட்சியில் ரெஜி டெப்ரே.

என்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு நாடு என்ற அடிப்படை மனித தேவையை மனித விழுமியங்களை சுரண்டி கொழிக்கும் வல்லாதிக்கம் மிகத் தீவிர எதிர்க்கிறது. வல்லாதிக்கத்தின் இருப்பு எளிய இனங்களின் அழிவின் மேல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஈழத்தின் பூர்வ குடி மக்களாகிய தமிழர்கள் ஒரு நாடு அடைய வேண்டியதற்கான அனைத்து அவசியங்களையும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அவர்களின் சுதந்திர வேட்கைக்கான புள்ளி சிங்கள பேரினவாதத்தின் மீறல்களில் இருந்து எழுகிறது. உலக மானுட சமூகம் யாரும் சிந்தித்துப் பார்க்க கூட இயலா உச்சியில் அவர்களின் வீரம் செறிந்த சமரும், தியாகமும் இருந்தன. இருந்தும் உலக வல்லாதிக்கங்கள் கூட்டமைவு கொண்டு நடத்திய போரில் நம் சகோதரர்கள் தோற்றார்கள்.

ஒரு தோல்வியை தோல்வியாக உணரும் போது தான் மீள் எழுவதற்கான சாத்தியப்பாடுகளை சிந்திப்பதற்கான மன வலு கிடைக்கும். எனவே நம் தோற்றோம் என்பதை மிக நேர்மையாக ஒப்புக்கொள்வோம். தோற்றோம் என்ற சொல்லில் அவ்வளவாக உண்மையில்லை என்பதனால் இன்னும் உண்மைக்கு நெருக்கமான சொல்லாக இருக்கக் கூடிய தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோம். நம் சம காலத்தில் ..நம் கண் முன்னால்.. நாம் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் நம்மால் எளிதில் செரிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. ஆனால் தோல்விகளையும், பின்னடைவுகளையும் உலக வரலாறு வேறு மாதிரியாக கணிக்கிறது. ஒரு தேசிய இனம் தன் உயரிய இலட்சியமான இறையாண்மை உடைய ஒரு நாடு அடைவதற்கான போராட்டத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சந்திக்கிறது. பலவிதமான பின்னடைவுகளுடன் கூடிய தியாகங்களுக்கு மத்தியில் அப் போராட்டம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக் கொண்டு ,புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

முதலாளித்துவம் மனித மனங்களில் வரையறுத்து உள்ள எதையும் உடனே துய்க்கிற நுகர்வு மனநிலைதான் எளிய தோல்வியை கூட சந்திக்க இயலா பலவீனத்தினை பரிசாக அளித்திருக்கிறது. சம காலத்து மனிதனுக்கு எதுவும் உடனே வேண்டும் . தமிழனும் இம் மனநிலைக்கு விதி விலக்கானவன் இல்லை. முள்ளிவாய்க்கால் துயர் முடிந்து இன்னும் ஓரு வருட காலத்திற்கு பின்னரும் தமிழினம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்வதில் தலையாய சிக்கல் என்னவென்றால் தற்காலத்து தமிழன் கொண்டிருக்கிற நுகர்வு மனநிலை தொடர்ச்சியான பயணத்திற்கு தயாராக இல்லை என்பதுதான்.

ஆனால் மீள் எழுந்துதான் ஆக வேண்டும். ஒரு நாட்டினை இன்னொரு இனத்திடம் இருந்து மீட்பதற்கான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல. இந்திய பெருந்தேசத்தின் சுதந்திர போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து..இரு நாடுகளாக பிரிவதாக குழப்பத்தில் முடிந்தது. கியூபப் புரட்சியை லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு முறை நிகழ்த்திட இயலாது என்று ஒரு சொற்றொடர் உண்டு. கியூப புரட்சியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அதீத காவியத் தன்மையின் வெளிப்பாடு இது. கியூபப் புரட்சி காலக் கட்டத்தில் இருந்த சமன்பாடுகள் தற்காலத்தில் வெகுவாக மாறி விட்டன என்றாலும் அதன் ஊடாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. கியூபப் புரட்சி என்பது 12 பேரில் துவங்கி கணக்கின்றி பெருகி தலைவர் பிடல் ,தளபதி சே குவேரா போன்றோரின் சாகச உத்திகளால் வல்லாதிக்கத்தினை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய கதை என இரண்டு வரிகளில் இனிப்புத் தடவி கூறி விட முடியாது. கியூபப் புரட்சிக்கு தேவையான சூழலும், அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஈழப் போராட்டத்திற்கு ஒப்பாகவே இருந்தன. தலைவரும், தளபதிகளும் கியூப புரட்சியாளர்களை தாண்டிய சாகசக் காரர்களாகவும், மிகு ஒழுங்கினை உடையவர்களாக இருந்தார்கள் . இருந்தும் கியூபாவில் புரட்சியாளர்கள் வெற்றியடைந்தனர். நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.

தோல்விக்கான காரணங்களை மாசற்ற தலைமையின் மீதும் இயக்கத்தின் மீதும் போட்டு விட்டு எதிரியின் வெற்றியில் குளிர்காயும் துரோகிகளின் எழுத்துக்களை நாம் ஏறெடுத்துக் கூட பார்க்க மறுப்போம். நம் தேசியத் தலைவரின் சொல்லும் , வாழ்க்கையும் நமக்கு போதித்தது இதுதான் .எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.

ஆனால் நமக்குள்ளாக நம் மீள் எழுதலுக்கான சக்தியை பெற நடந்து முடிந்த ஈழப் போரின் வாயிலாக சில பாடங்களை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் ஈழம் என்பது அந்நிலப்பகுதியில் வசிக்கக் கூடிய தமிழர்களுக்கான நாடு என்பது உண்மை என்றாலும் அது உலகம் முழுக்க வாழக் கூடிய தமிழர்களுக்கான நாடும் அதுதான் என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும் . வெறும் நிலப்பகுதியும், புறவியல் காரணிகளும் மட்டுமே ஒரு நாடாக நாம் கருதி விட இயலாது. மாறாக நாடு என்பது ஒரு உணர்ச்சி. ஒரு தேசிய இனத்தின் அடிப்படையான குணம். மனித வரலாறு நாடுகளை அடையும் போராட்டங்களாகத்தான் பகுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈழம் என்ற ஒற்றைக் கனவினை சுமக்க உலகில் வாழும் 12 கோடி தமிழர்களின் விழிகளும் தயாராக வேண்டும்.

அடுத்து . நம் தேசியத் தலைவர் மீது நாம் வைத்திருக்ககூடிய விசுவாசம். இன்றளவும் சிங்களன் திகைப்பது இதில் தான். நம் தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட அவனை பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். தொன்மை வாய்ந்த தமிழினத்தின் உயரிய பெருமிதம் நம் தேசியத் தலைவர் அவர்கள் . அவரின் மீதான நம் பற்றையும் ..விசுவாசத்தினையும் நாம் தலைமுறைகளாக கடத்திப் போவோம். வீட்டுக்கு வீடு பிரமாண்டமாய் அவரது புகைப்படங்களை நாம் மாட்டுவோம். நம் பிள்ளைகளுக்கு அவரை நம் அண்ணனாக காட்டுவோம். பிள்ளைகள் அவரை பெரியப்பா என்றே அழைக்கட்டும். நம் தேசியத் தலைவர் இல்லாத தமிழன் வீடு இல்லை என்ற மிகப் பெரிய தோற்றத்தினை உருவாக்குவோம்.. நம் வீட்டு விழாக்களில் அவரையே விழா நாயகனாக முன் நிறுத்துவோம் . திருமண அழைப்பிதழ்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்த்துகளோடு என்று அச்சிடுவோம். நம் குழந்தைகளுக்கு இரவில் பயம் வந்தால் தேசியத் தலைவரை நினைத்துக் கொள் எனக் கூறுவோம். தேர்வுக்கு முன்னால் தலைவரை நினைத்து விட்டு போ என்று அறிவுறுத்துவோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அவரின் பங்கு இருக்கட்டும்.

அடுத்து நம் மரபின் மேல் , நம் மொழியின் மேல் ஆழ்ந்த பற்றும், மதிப்பும் உடையவர்களாக மாறுவோம். உலகின் எந்த மூலையில் நாம் வசித்தாலும் நம் குழந்தைகளை தமிழில் அப்பா, அம்மா என அழைக்கச் சொல்வோம். பண்டிகைக் காலங்களில் வேட்டி கட்டுவோம். தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டால் நம் மொழியில் வணக்கம் , நன்றி எனச் சொல்வோம். கூடிய மட்டும் பிற மொழிக் கலப்பின்றி பேசுவோம்.

இப்படிப்பட்ட பிடிவாதம் மிக்க நிபந்தனைகளின் பேரில் தான் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு தோற்ற சமூகம் எப்படி மீள் எழக் கற்றது என்பதனை நம் எதிரிக்கு உதவிய இஸ்ரேலில் இருந்து கற்போம். அடுத்தாண்டு இஸ்ரேலில் சந்திப்போம் என்ற அவர்களது ஆழ்ந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு இஸ்ரேலை பெற்றுத் தந்தது. எனவே நாமும் அடுத்தாண்டு ஈழத்தில் சந்திப்போம்.

தாயகத் தமிழர்கள் இனி திராவிடர்களாக அடையாளம் காட்டப்படுவதை பெரும் கோபங் கொண்டு மறுப்போம். திராவிடமும்,இந்தியமும் தான் எங்களை வீழ்த்தின என்று உரத்தக் குரலில் சொல்வோம். சாதீயம் பேசி அரசியலுக்காக அணி மாறிக் கொண்டு பேரம் பேசும் போலிமைகளை புறக்கணிப்போம். சமூகத்தினுள் ஆழமாக புரையோடிப் போன சாதீயத்தினை வெல்ல இனம் வாயிலாக ஒன்று படுவதை அவசியமாக கொள்வோம் . நாம் வாழ நாம் நதி ஆள்வோம். தர மறுக்கும் அயலானுக்கு நாமும் எதையும் தர மறுப்போம். நம் இனத்து ஆளுமைகள் ஏராளம் இருக்கையில் மாற்றான் இனத்து ஆளுமைகளை முன் நிறுத்தும் அபத்தம் ஒழிப்போம். நம் நாட்டினை நாம் ஆள வேண்டும். குறைந்த பட்சம் ஆள்பவனை தீர்மானிக்கும் சக்தியை நாம் பெறும் வல்லமையை நாம் பெற வேண்டும் . அதற்காக தான் நாம் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் . அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து குடும்பமாக இறுகி ..பல்கி பெருகிய கூட்டமாய் அதிகாரத்தினை நோக்கிய பயணத்தினை துவக்க வேண்டும். நம் மொழிக்கும், நம் மக்களுக்கும் இன்னல் இழிவென்றால் சீற்றம் கொண்டு கேட்க வேண்டும். சினம் மறந்த இனம் பிணம். நமக்குள் நம் தொன்ம மரபின் வாயிலாக பெற்றிருக்கிற அற சீற்றப் பண்பை நாம் அவ்வப் போது பயன்படுத்திட வேண்டும். மதுவிற்கும் ,தொலைக்காட்சிக்கும், காசுக்கும் மயங்கும் மாண்பினை கைவிட வேண்டும். நமக்கான உரிமைகளை எதன் பொருட்டும் யாருக்கும் விற்கவோ ,அடகு வைக்கவோ கூடாது. தமிழை வாழ வைப்போம். தமிழனையே ஆள வைப்போம்.

தமிழின இளைஞர்கள் மற்ற இனத்து இளைஞர்களை விட உழைக்க வேண்டும். நாம் அடைந்த தோல்வி நம்மை வன்மம் கொள்ள வைத்திருக்கிறது. நமக்கான .. நம் இனத்திற்கான ..பொருளாதார முன்னேற்றத்தினை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். மற்ற இனத்தவரைக் காட்டிலும் நம் திறமையை அதிகம் உபயோகித்து பொருள் சேர்க்க வேண்டும் . நம் வருமானத்தில் நம் இனமானம் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்கி இன நலப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.

உடல் முழுக்கக் காயங்களோடு..ரத்தம் வழிய வழிய… தீரா வன்மத்துடன் ..ஒரு மிருகம் போல நாம் நின்று கொண்டிருக்கிறோம். எதிரி எக்காளம் வழிய ஏளனம் பேசுகிறான். நாம் பொறுமையாக காத்திருப்போம். காத்திருப்பு என்பது ஒய்வல்ல. மாறாக வலுவோடு மீள நமக்கு கிடைத்திருக்கும் இடைவேளை .தாக்குதல் என்பது இனி நேருக்குநேர் நின்று ஒருவரை உடல்ரீதியாக விழ்துவது இல்லை. மாறாக நம் போர் வாக்காய், வாழ்க்கையாய், பேச்சாய், செயலாய், முழக்கமாய், எண்ணமாய் , கனவாய், நினைவாய், ஆற்றலாய், அறிவாய்., தெளிவாய், கொள்கையாய், கோட்பாடாய், தத்துவமாய் விரியட்டும் எமக்கான வாழ்க்கை, எமக்கான உயர்வு நம் கையில்தான் உள்ளது என்பதனை நம் அறிவு தெளியட்டும்.

நாம் தமிழர்,

மணி செந்தில் .

துரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.

தமிழர்களின் தாயக நிலமான ஈழம் எதிரிகளின் கரங்களுக்கு இடமாறிய பிறகு கருத்து என்ற பெயரில் தத்துவங்களை உதிர்த்தும், ஆராய்ச்சி என்ற பெயரில் தன் இனத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் இழந்த போராளிகளின் பின்னடைவினை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மோசடி பேர்வழிகள் இணையத் தளங்களின் ஊடாக நிரம்பி வழிகிறார்கள்.

அ.மார்க்ஸ் என்ற உலக மானுட இனத்தின் மனித உரிமை காப்பாளர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அனுபவங்களை முற்காலத்தில் உலகப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவாரே ..ஆம் அவரே தான் இதயம் பேசுகிறது மணியன் பாணியில் பல தளங்களில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகள் இன்னும் மீள கிடைக்கவில்லை என கதறும் அ.மார்க்ஸ் , பெரும்பான்மையான பூர்வீக குடி மக்கள் பிச்சைக்காரர்களாய் எதுவும் அற்ற ஏதிலிகளாய் நிற்கும் மக்களைப் பற்றி பேசுவதில்லை. காஷ்மீருக்கு எல்லாம் சென்று மனித உரிமையை நிலைநாட்டி ,புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்து புத்தகம் எழுதும் அ.மார்க்ஸ் ஈழத்தில் நடைப்பெற்ற போர்க்குற்றங்களை பற்றி கேட்டால் மவுனம் சாதிக்கிறார். தோழர்.மு.கார்க்கி அ.மார்க்ஸின் முகமுடியை கிழித்து எறிந்து (அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும் ) அப்பட்டமாக்கி காட்டிய பிறகும் இது நாள் வரை தோழர் கார்க்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க துப்பில்லாத அ.மார்க்ஸ் ஈழம் பற்றி பேச எவ்வித அருகதையும் இல்லாதவர். அ.மார்க்ஸின் கள்ள மவுனம் எதன் பொருட்டு என்பது அம்சாகளுக்கு மட்டுமே வெளிச்சம். அ.மார்க்ஸின் சிறுபான்மை இன அக்கறை என்பது அப்பட்டமான மூன்றாம் தர ஒத்திகை பார்க்கப்படாத நடிப்பு என்பது பல்வேறு சமயங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது . அடுக்கடுக்காய் வெளியாகும் அ.மார்க்ஸின் புத்தகங்களுக்கான பொருளாதார பின்புலத்தினை எட்டிப் பார்த்தால் தெரியும் எதன் பொருட்டு அ.மா சிறுபான்மை அக்கறை பிடில் வாசிக்கிறார் என்று. தேசிய இனங்களின் தன்னுரிமை கோரல் குறித்து அ.மாவின் நிலைப்பாடு பற்றி கேள்வி கேட்டால் நாம் புலி ஆதரவாளர் ஆகி விடுவோம். அ.மார்க்ஸ், சோபா சக்தி ,சுகன் , ஞானி ,சோ, சுப்பிரமணியசாமி ,ஜெயலலிதா , கருணாநிதி போன்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் .எதிர்த்து கேட்டால்..கேட்பவர் புலி ஆதரவாளர் என்ற தட்டையான விமர்சனத்தினை வைத்து இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.

ஈழ மக்கள் புலிகளால் வதைக்கு உள்ளானர்கள் என்ற இவர்களின் சொத்தையான வாதம் ராசபக்சேவிற்கு ஆதரவான ஒன்றே . மக்களில் இருந்து தான் புலிகளின் துவக்கம் என்ற அடிப்படை உண்மையும், புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர் என்ற உண்மையையும் மறைத்து புலிகளின்ஆயுதப் போராட்டத்தினால் தான் ஈழப் பெரு நிலம் அழிவிற்கு உள்ளானது என்று மாய்மாலம் பேசும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை வரலாறு முடிவுசெய்யும் .

இனப்பிரச்சனையின் முதல் கலவர நிகழ்வாக கருதப்படும் 1956ஆம் வருடத்திய தனி சிங்களச் சட்டத்தினை எதிர்த்து அகிம்சை வழிப் போராட்டமான 05-06- 1956 அன்று நடைப்பெற்ற காலி முகத் திடல் போராட்டத்தில் தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டத்தினை சிங்கள குண்டர்கள் தாக்கியதை பற்றியும் , போராடிய தலைவர்களை அருகில் இருந்த பெய்ரா ஏரியில் தூக்கிப் போட்ட கதையையும் அது முதல் தமிழர்கள் தன் எதிர்ப்பினை பதிவு செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் இவர்கள் அறியாதவர்களா என்ன..? 1956 ஆம் வருடம் ஜீன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிங்கள காடையர்களால் வன்முறைக்கு பலியாகி இனக்கலவரத்தில் பலியாகிப் போன தமிழர்களில் எத்தனை சிறுபான்மையினர் இருந்தார்கள் என்ற பட்டியல் இவர்களிடம் இருக்கிறதா..?

1958 ஆம் வருடம் மே மாதம் சிங்கள எழுத்தான ஸ்ரீ யை பொறிக்க தமிழச்சிகளின் மார்புகள் தான் ஏடுகளாய் பயன்பட்டன மற்றும் இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் , 14,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்தனர் என்பதும் இவர்கள் அறியதவரா என்ன..?

1961 ஆம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டத்தினை எதிர்த்து தந்தை செல்வா சத்யாகிரகப் போராட்டம் நடத்தி அவரது தமிழரசு கட்சி தனி தபால் தலையை அச்சிட்டு உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏகாம்பரம் இறந்ததும், தந்தை செல்வா உள்ளீட்டோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைப் பெற்ற வரலாற்றினையும் இவர்கள் அறியாதவரா என்ன..?

1971 ஆம் வருடத்திய சிங்கள அரசின் கல்வி தரப்படுத்துதல் சட்டத்தினால் கட்டாய சிங்கள கல்வியாலும் , மதிப்பெண் அடிப்படையில்லாது, இனத்தின் அடிப்படையில் தான் உயர்கல்வி, உத்தியோகம் என்ற அநீதியால் தமிழ் இளைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அதன் காரணமாக போராட தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர் என்பதையும் இவர்கள் அறியாததா என்ன..?

1974 ஆம் ஆண்டு , உலக தமிழ் அறிஞர்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு மிக ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள அரசு வலுக்கட்டாயமாக காவல்துறையை ஏவி நடத்திய கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதும் இவர்களுக்கு தெரியாததா என்ன?

1976 ஆண்டு நடைபெற்ற தனி தாயகத்தினை வலியுறுத்தி ஈழத்து காந்தி தந்தை செல்வா எடுத்த வட்டுக் கோட்டை மாநாட்டு தீர்மானங்களுக்கு பிறகு மேலும் மூர்க்கம் பெற்ற சிங்கள பேரினவாதம் 1977 ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கில் தமிழர்களை வேட்டையாட துவங்கியதையும்,1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயர் தமிழ் நூற்கள் எரிந்து சாம்பலானதையும், 1983 ஆம் ஆண்டு கருப்பு சூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் தன் சொந்த பூர்வீக நிலங்களை துறந்து நாடு கடந்து போய் இன்றளவும் உலக நாடுகளில் பரவி கிடக்கிறார்கள் என்பதையும், இவர்கள் அறியாததா என்ன..? புலிகளின் தாயகப் போராட்டம் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதுதான் என்பதும்… புலிகளின் போராட்டம் இனம் சார்ந்ததே ஒழிய …மதம் சார்ந்தது அல்ல என்பதையும் …தன் மகனுக்கே சார்லஸ் ஆண்டனி என்ற பெயர் சூட்டிய தலைவர் பிரபாகரன் என்பதையும் இவர்களுக்கு தெரியும்.

எல்லாம் தெரியும். சிங்கள பேரினவாதம் அளிக்கும் எச்சிலைகளுக்கு நன்றி விசுவாசம் பாராட்ட இவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சிறுபான்மையினர் உரிமை. மற்ற படி மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.

ஈழத் தமிழர்கள் படிப்படியான நிலைகளில் ஆயுத வழிப் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டனர் என்பதையும்…உலக வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன்று சிங்கள பேரினவாதம் அடைந்திருக்கும் வெற்றியை உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் 12 கோடி தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் நிரந்தரமாக்க விட மாட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக ஐ.நா கொடுக்கும் போர்க் குற்ற விசாரணை நிர்பந்தங்களால் சிங்கள பேரினவாதம் நிலை குலைந்து செய்வது அறியாமல் ஐ.நா பொதுச் செயலாளர் படத்தினை செருப்பால் அடித்து வருவதை நாம் பார்க்கதானே செய்கிறோம்..?

இதற்கு மேலும் செருப்புகள் தேவைப்படும். சிங்கள பேரினவாதம் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதற்கும், இப்போது கூடி கும்மி அடிக்கும் இந்த துரோக பதர்களை சிங்கள பேரினவாதமே தோற்றுப்போன எரிச்சலில் செருப்பால் அடித்து துரத்துவதற்கும் செருப்புகள் தேவைப்படும்.

ஒரு நாள் அல்ல ஒரு நாள். நம்பிக்கைகளோடு சொல்கிறோம். எம் இனத்திற்கான விடுதலையை, எம் இனம் கனவு கண்டு.. தலைவர் அணு அணுவாய் உருவாக்கி.. தற்போது துரோகங்களின் சதியால் எதிரிகளில் கரங்களில் சிக்குண்டு கிடக்கும் ஈழ நாட்டை நாங்கள் அடைந்தே தீருவோம். ஒரு தேசிய இனத்தின் தாகத்தினை துரோகத்தின் சோரங்களால் சிதைத்து விட முடியாது. தலைமுறை தலைமுறையாக வன்மத்துடன் வாழ்வோம். உயிர் கொடுத்து..உதிரம் கொடுத்து தாயகம் அமைக்க தளமாய் போன மாவீரர்களின் மூச்சுக் காற்று இன்னும் இந்தப் பூமியில் தான் உலவுகிறது. அது எம்மை இயங்க வைத்துக் கொண்டே இருக்கும். துரோகங்களின் முகத்தில் காறி உமிழ எம்மை தூண்டிக் கொண்டே இருக்கும். எம் விழியோரத்தில் பூத்திருக்கும் உதிரச் சிவப்பில் என்றாவது எம் இனத்திற்கான விடுதலை சாத்தியப்பட்டே தீரும் .

பிரிவின் சாலை..

ஒற்றை இதழாய் உதிர்ந்து விட்டு போ.

நீரிலிருந்து பிரியும் தூண்டில் முள்ளைப் போல

என்னை சலனிக்காதே.

காற்றாய் கடக்க முயலாதே.

இரவின் புள்ளியில் இடமாறிய துயரம் போல

சின்ன பிசிறலாய் உணர்த்தி விட்டு செல்லாதே.

உந்தன் அசைவினை நான் உணராத கணத்தில்

கடந்து விடு.

உன் நிழலை என் மீது வரையாதே.

எதற்கும் உன்னை பரிசோதித்துக் கொள்

ஏதேனும் மிச்சம் இருந்தால் சுரண்டி எடுத்து விட்டுப் போ.

அது நானாக இருந்தாலும் கூட.

மிடறு விழுங்கி விரிந்த சொல்லில் துவங்காதே.

ஒரு யுக வாழ்க்கையை பிரிபடாத ஒற்றைச் சொல்லில் முடி.

குறுகிய பாதைகளில் ..இறுகிய தருணங்களில்..

எதிர்பட்டால் வலிக்காமல் இருக்க உதிர்ந்து விடு.

சிறகின் நுனி தீப்பற்ற பறந்து விடு.

உடைந்துப் போன ஒரு நொடியின் துளியில்

முடங்கட்டும் துளிர்த்தலுக்கான வேண்டல்.

முடிவிலியாய் தொடரும் பாதையில்

கண நேரத்து மெளனமாய் உறைந்து போ.

உறைவின் உறக்கத்தில் வாழட்டும் நம் பிரிவு.

கும்பகோணம் பள்ளியின் தீ விபத்து – நேர்காணல்களோடு ..நேரடி சாட்சியமாய் ஒரு பகிர்வு.


கடந்த 2004 ஆம் வருடம் ஜீலை 16 ஆம் நாள் கும்பகோணம் தீ விபத்தில் பலியாகிப் போன 94 குழந்தைகளின் நினைவு நாள் வழக்கம் போல விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது. அனைத்துக் கட்சி ஊர்வலம், பள்ளி வாரியாக குழந்தைகளை அழைத்து வந்து அஞ்சலி நிகழ்வுகள்.. கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி எனஎப்போதுமே அமைதியாக இருக்கும் பள்ளி அமைந்துள்ள காசிராமன் தெரு இந்த ஒரு நாளில் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்குகிறது. ஊரெங்கும் சுவர்களில் அரசியல் கட்சியினர், ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள், மற்றும் வியாபாரிகள் சங்கம் ,தொழிலாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்கள், அமைப்புகள் ஆகியவை சுவரொட்டி அடித்து ஒட்டி வைத்து தங்கள் சமூக உணர்ச்சியினை பதிவு செய்கிறார்கள். இதைத் தவிர வேறு எதுவும் இனிமேலும் இது போன்ற அவலம் நடக்கக்கூடாது என்ற இந்த நாளும் கழிகிறது மற்றொரு நாளாய்.

உண்மையில் வெட்கமாகத்தான் இருக்கிறது. தொழிற்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியினை உலகம் நுகர்ந்துக் கொண்டிருக்கும் போதுதான் ..விண்வெளி பயணம் என்பது பக்கத்து வீட்டிற்கு செல்வது போல என மிக சாதாரணமாகி விட்ட போதுதான்… எங்கிருந்தாலும் ஒரே நாளுக்குள் வந்து சென்று வந்து விடலாம் என உலகம் சுருங்கி விட்ட அதே காலக்கட்டத்தில் தான் .. கல்வி கற்கப் போன ஏழை வீட்டு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி தீயினால் எரிந்துப் போனார்கள் . நாம் எவ்வளவு மோசமான ,புரையோடிப் போய் சீழ் பிடித்த ஒரு உலகில் வாழ்கிறோம் என்பதற்கு மிக நேரிடையான எடுத்துக்காட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளிக்கும் எனக்கும் நேரிடையான தொடர்பு உண்டு. நான் அந்தப் பள்ளியில் தான் என் 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளை படித்தேன். எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. நான் படித்த காலக்கட்டத்தில் பள்ளியின் குறுகலான பாதையின் துவக்கத்தில் தலைமை ஆசிரியரின் அறை . பிறகு 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி 1 ஆம் வகுப்பு வரை வலப்புறம் தமிழ் வழிக் கல்வி பயிலும் வகுப்புகள் . அதே போல அப்பாதை இடதுப் பக்கம் 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி LKG வரை ஆங்கில வழிக் கல்வி. நான் தமிழ் வழிக் கல்வி 2 ஆம் வகுப்பு B பிரிவில் படித்தேன். அடர்த்தியான மீசை வைத்த வாத்தியார் ,எங்களால் முடியும் என்ற குழந்தைகள் திரைப்படம் , ஜெய்சங்கர் , கணேஷ் என்ற இரண்டொரு நண்பர்களின் பெயர்கள் என இவற்றினை தவிர வேறு எதுவும் நினைவில்லை. ஆனால் மறக்கவே முடியாமல் இருப்பது அப்பள்ளியின் நடுவே இருந்த மிக குறுகலான நடைபாதை. அந்த ஒரு பாதையில் தான் மாணவர்கள் சென்று வர இயலும்.

அதற்கு பிறகு அந்த பள்ளியை நான் பல்வேறு காலக் கட்டங்களில் பார்த்திருக்கிறேன். அந்த பள்ளி பல அடுக்குகளாக அச்சிறிய இடத்திற்குள் வளர்ந்தது. தீப்பெட்டி அடுக்குகள் போல வளர்ந்த அப்பள்ளியில் அப்பகுதியில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் குழந்தைகளும் தான் படித்தன. அப்பள்ளிக்கு மிக நெருக்கமான தொலைவில் எனது வீடு இருப்பதால் ..என் வீட்டிற்கு முன்னால் இருக்கின்ற சுருட்டுப் பேட்டையின் பெரும்பாலான குழந்தைகள் அங்குதான் படித்தார்கள். ரிக்சா, ஆட்டோ ஒட்டுனர்கள், கொத்தானார் ,சித்தாள் வகையாறாக்கள் , செருப்பு தைப்பவர்கள் என சமூகத்தின் அடித் தட்டு மக்கள் வசிக்கும் அப்பகுதியின் பெரும்பாலான குழந்தைகள் அப் பள்ளியில் தான் படித்தன.

கடந்த 2004 ஆம் வருடத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் இருந்த போதுதான் அருகில் இருந்த தீ அணைப்பு நிலையத்திலிருந்து வண்டிகள் மிக அவசர கதியில் பாய்ந்து வேகமெடுப்பதை கண்டோம். தொடர்ச்சியான பரபரப்பிற்கு நடுவே தீயைப் போல செய்தியும் பரவியது. உள்ளூர் தொலைக்காட்சிகள் அந்த விபத்தினை நேரடி ஒளிப்பரப்பு செய்ததுதான் இன்னும் வேதனையை அதிகப்படுத்தியது . நானும் என் வழக்கறிஞர் நண்பர்களும் பள்ளி விரைந்து சென்ற பார்த்த போதுதான் நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் புரிந்தது. பள்ளியின் 2 ஆம் தள ஜன்னலிருந்து கரு கருவென புகை வந்துக் கொண்டிருந்தது. யாரோ யாரோ பள்ளிக்குள் புகுந்து தீயினில் எரிந்துக் கரிக்கட்டைகளாகிப் போன குழந்தைகளின் உடல்களை அலறியப்படி தூக்கி வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருமே அலறிய வண்ணம் இருந்தார்கள். பல தாய்மார்கள் என் குழந்தையை காணோமே.. என கதறிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற காவல்துறையினர் தங்கள் சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு உள்ளே பாய்ந்து குழந்தைகளை அள்ளிக் கொண்டு கத்திக் கொண்டே ஓடியதை நான் கண்டேன் . என்னோடு வந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்கள் அனைவரும் உள்ளே கத்திக் கொண்டு ஓடினார்கள். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூட்டம் பிதுங்கிற்று. கும்பகோணம் நகரம் முழுக்க விதவிதமான செய்திகள் பரவி மக்களை மென்மேலும் பீதியடையச் செய்தன. 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை என்றும் , குழந்தைகளை இழந்த பெற்றோர் பலர் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன.

ஒரு நகரம் தான் மீளவே முடியாத உச்சக்கட்ட சோகத்திற்கு உள்ளாகி வெறுமையானது. நகரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு ஓட்டு மொத்த நகரமே தன்னையே மயானமாக்கி நின்றது.தெருக்களில் எதிரெதிர் கடந்துப் போனவர்களின் கண்கள் கலங்கி இருந்தன. இறுதியில் என் தெருவினைச் சேர்ந்த 11 குழந்தைகள் உள்ளீட்டு தீ விபத்தில் 94 குழந்தைகள் எரிந்துப் போனார்கள் . குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமானதற்கு காரணமாய் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைதான் அனைவரையும் உலுக்கியது. தீ பிடித்தவுடன் அவசர கதியில் ஓடி வந்த பல குழந்தைகள் தங்களுடைய புத்தகப் பையை விட்டு விட்டு சென்றால் வீட்டில் பெற்றோர் அடிப்பார்களே என்று நினைத்துக் கொண்டு புத்தகப் பையையும், டிபன் பாக்ஸையும் எடுக்க மீண்டும் பள்ளிக்குள் ஓடிய போதுதான் தீக்கு பலியாகிப் போன கொடுமை நடந்தேறியது. தன் வறுமையான ஏழைப் பெற்றோரிடம் பல முறை சொல்லி போராடி வாங்கி ஆசை ஆசையாய் பாதுகாத்து வந்த புத்தகங்களும், நோட்டுகளும் காணாமல் போனால் எங்கே அப்பா, அம்மா அடிப்பார்களோ, மீண்டும் வாங்கி தர மாட்டார்களோ என்ற அச்சத்தில் அப்பாவியாய் இறந்தன குழந்தைகள்.

தினம் தோறும் பள்ளிக்கு ஒழுங்காக போகும் என் தெருவினைச் சேர்ந்த 2 ஆவது படித்த வெங்கடேஷ் அன்றைய தினம் உடல் நலம் இல்லை எனக்கூறி பள்ளிக்கு செல்ல மறுத்ததை குழந்தைகள் கூறும் வழக்கமான பொய்யாக நினைத்து குழந்தையை அடித்து தரதரவென இழுத்து வந்து பள்ளியில் கொண்டு விட்ட வெங்கடேஷின் அப்பா முருகானந்தத்தின் கதறல் இன்றளவும் என்னை நிம்மதியிழக்க செய்கிறது.

தீ விபத்து நடந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் அவ் வழக்கு வாய்தாவிற்கு வாய்தா நடந்துக் கொண்டிருக்கிறது. தற்போது வழக்கு தஞ்சைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொடிய அந்த தீ விபத்திற்கு பிறகு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்த அப்பள்ளியின் தாளார் பழனிச்சாமியை வழக்கறிஞர்கள் அடிக்க பாய்ந்ததும் நடந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் தான் செத்தனரே ஒழிய அப்பள்ளியின் ஒரே ஒரு ஆசிரியர் கூட தீயிற்கு பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சீர்கெட்ட கல்விக் கொள்கைகளுக்கு சாட்சியாக இருக்கிறது அந்த எரிந்துப் போன கட்டிடம். தனது பணத்தாசையால் குறுகிய கட்டிடத்திற்குள் அளவுக்கதிமான குழந்தைகளை அடைத்து கொலை செய்த பள்ளி தாளாளரையும் அவருடைய அனைத்து மோசடிகளுக்கும் துணைப் போன கல்வித் துறை நிர்வாகிகளையும் இன்றளவும் கூட சட்டத்தினால் எதுவும் செய்ய இயலாமல் வாய்தாவிற்கு மேல் வாய்தா வழங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விதிகளுக்கும் முரணாக குறுகிய இடத்தில் கட்டிடம், அனுமதிக்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகமான குழந்தைகளை சேர்த்தது.., விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகளை மீட்க போதிய பணியாளர்கள் இல்லாதது போன்றவை காரணங்களாக இருக்கின்றன. மேலும் மதிய உணவிற்காக பற்ற வைத்த அடுப்பின் நெருப்பு பள்ளியின் கீற்று மேற்கூரைக்கு பரவி பிள்ளைகளை காவு வாங்கி இருக்கிறது. 94 பிள்ளைகளை பலி கொடுத்த பிறகே தமிழ்நாடு அரசு கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்கு கெடுபிடி காட்டியது.

வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து தஞ்சாவூர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இன்னமும் நடந்துக் கொண்டிருக்கிறது. குற்றப்பத்திரிக்கை இப்போதுதான் வழங்கி இருக்கிறார்கள். இன்னும் வழக்கின் விசாரணை துவங்கவில்லை.போபால் விஷ வாயு வழக்கில் நிகழ்ந்த தாமதக் கேடு இந்த வழக்கிலும் நிகழ்ந்து விடக்கூடாது என பதறி துடிக்கிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள். அரசாங்க தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மதுசூதனன் என்ற ஆளுங்கட்சி வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எது எதற்கோ டெல்லியில் இருந்து விமானத்தில் காசு கொட்டி கொடுத்து பிரபல வழக்கறிஞர்களை அழைத்து வரும் அரசு இந்த வழக்கில் மெத்தனமாக இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தீ விபத்து நடந்த பள்ளியில் வருடாவருடம் ஜீலை 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியினை நடத்துகின்றனர் இறந்துப்போன குழந்தைகளின் பெற்றோர்கள். இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோருகிறார்கள் இவர்கள். அங்கு இறந்த குழந்தைகளின் படங்களை ஒரே படமாக உருவாக்கி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதில் ஒரு குழந்தை என்னை ஈர்த்தது. அக்குழந்தைக்கு புகைப்படம் இல்லை. புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் அக்குழந்தையின் பெயரான “ப்ரியா” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னொரு படமும் அப்படித்தான். புகைப்படம் இல்லாமல் உருவத்தினை வரைந்து வைத்திருந்தார்கள் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. ஒரு புகைப்படம் கூட எடுக்க இயலாத வறிய சூழலில் இருந்த அக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக வந்த இடத்தில் எரிந்து செத்திருக்கின்றன. குழந்தை பிறந்த நொடி முதல் ஹேண்டிகாமில் பதிவு செய்து பரவசப்படும் உலகில் தான் எவ்வித அடையாளமுமற்று இறந்து விட்டிருக்கிறாள் ப்ரியா.

மேலை நாடுகளில் குழந்தைகளை கொண்டாடுகிறார்கள். மிக சுகாதாரமான பள்ளியில் நல்ல வெளிச்சத்தில் ,சிறப்பான ஆசிரியர்களின் கற்பித்தலில் குழந்தைகள் வளருகின்றன. மிக சுகாதாரமான கழிவறைகளோடு , காற்றோட்ட வெளிச்சத்தில் வகுப்பறை என குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியோடு ,சூழலையும் இணைந்தே அளிக்கின்றன மேலை நாடுகள். ஆனால் நம் நாட்டிலோ தரமற்ற பள்ளியில் வெளிச்சம் இல்லாத வியர்வை புழுக்க அறையில் பிள்ளைகளை திணித்து, தகுதியற்ற ஆசிரியர்கள் கல்வி வழங்குகிறார்கள். பல பள்ளிகளில் கழிவறைகள் இல்லை.இருந்தாலும் பயன்படுத்த தகுதியற்று சுகாதரமற்று இருக்கின்றன.

இனிமேலும் கும்பகோணங்கள் உருவாக வேண்டாம் என்பதுதான் கும்பகோணத்துக்காரர்களின் வேண்டலாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தீமை மனிதனுக்குள் ஊறிக்கிடக்கும் சுயநலம் சார்ந்த சகிப்புத் தன்மை உணர்ச்சி. அந்த சகிப்பே வாழ்வின் எல்லா மட்டங்களிலும் சமரசங்களை தேடச் சொல்கிறது. வாழ்வதற்கான எவ்வித தகுதியும் இல்லாத சமூகத்தில் நாம் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்கிறோம். குழந்தைகள் சாகின்றன.

குருட்டுக் கண்களைத்

திறந்துப்பார்த்தால் இருட்டுதான்

பிரகாசமாய்த் தெரிகிறது

செவிட்டுச் செவிகளை கூராக்கி முயற்சித்தால்

நிசப்தம்தான் கூச்சலாய் கேட்கிறது

நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால்

சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது

உருமாறிப் போனவன்

உடல் மாறி

மனம் மாறினப் பின்.

ஆத்மநாமின் இரவில் பேய்கள் கவிதையிலிருந்து…


தமிழ் மணம் உறவுகளுக்காக தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் சங்க முதன்மையாளர் இன்பராஜ் அவர்களை நான் எடுத்த நேர்காணலின் ஒலி வடிவம்
(முதல் முயற்சி இது. அதனால் ஒலியை தரப்படுத்தி எடிட் செய்ய தெரியவில்லை.பொறுத்தருள்க)



போபால் பேரழிவு வழக்கு – அழிவினை மிஞ்சிய தலைகுனிவு.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த உலக மகா பேரழிவுகளில் ஒன்றான விஷவாயு தாக்குதலில் சிக்கி தொழிலாளிகள், அப்பாவி பொதுமக்கள் என 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் ,மனம் பாதிக்கப்பட்டு போனதும் உலக வல்லாதிக்க நாடுகளின் கைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும் இந்தியா சிக்கி எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதனை அப்பட்டமாக காட்டுகிறது. 26 ஆண்டுகளாய் நடந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷவாயு கக்கிய யூனியன் கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு எவ்வித தண்டனையும் இல்லை. கடந்த 1984 ஆம் வருடம் போபால் விஷவாயு பேரழிவிற்கு பிறகு சம்பவ இடங்களை பார்வையிட வந்த வாரன் ஆண்டர்சனை கைது செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே(?) சிறை வைக்கப்பட்டார். சிறைச்சாலைகளும், கைதுகளும் இல்லாத நாடு இது பாருங்கள் . அதனால் தான் ஆண்டர்சன் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். எதன் காரணத்திற்காக ஆண்டர்சன் பொதுச் சிறைக்குள் வைக்கப்படாமல் வீட்டுச்சிறைக்குள் வைக்கப்பட்டார் என்பதற்கு யாரிடமும் எவ்வித விளக்கமும் இல்லை. அக்காலக்கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அர்ஜீன் சிங் தன் அரசு விமானத்தில் உயரிய பாதுகாப்புகளோடு டெல்லிக்கு அனுப்பி வைத்தார். டெல்லியில் 20,000/- பேரைக் கொன்ற ஆலையின் தலைவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயரிய தலைவரான ஜனாதிபதியின் மாளிகையில் ஒரு நாள் விருந்தினராக தங்கி கூத்தடித்து விட்டு மறு நாள் அப்போதைய மத்திய அமைச்சர் நரசிம்மராவ் வழியனுப்ப உல்லாசப் பயணம் முடித்த திருப்தியில் அமெரிக்காவிற்கு பயணமானார் ஆண்டர்சன். இது குறித்து காங்கிரஸ் கட்சியினைக் கேட்டால் ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி பறக்க விட்டது நாட்டு நலனை முன் நிறுத்தி தான் என சிரிக்காமல் விளக்கம் அளித்தது.

நாட்டு நலனை முன் நிறுத்தி காங்கிரஸ் கட்சி செய்து வருகிற செயல்களை பாருங்கள். இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழனை கொன்றது ராஜ தந்திரம் என்றால்…போபால் மக்களை கொன்றது நாட்டு நலன். ஆண்டர்சன் தப்பித்து போனது கடந்த 2005 ஆம் ஆண்டு வரை எவருக்கும் தெரியாது. 20 ஆண்டுகள் கழிந்த விட்ட அரசின் ஆவணங்கள் ரகசியம் அப்புறப்படுத்தப்பட்ட ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பிறகே உண்மைகள் ஊருக்கு தெரிந்தன. இந்த லட்சணத்தில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியிடம் அப்போது இருந்த அமெரிக்க துணை தூதர் கார்டன் ஸ்டீரிப் மூலம் பேசி தப்பித்து போக உறுதிகள் வாங்கிக் கொண்டே ஆண்டர்சன் இந்தியா வந்ததாக தகவல் கூறுகின்றன. இதை விட வெட்க கேடு வேறு என்ன இருக்க இயலும்.? ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டு வர கடும் முயற்சிகள் செய்வதாக சொல்லும் காங்கிரஸ் அரசுதான் அன்று ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப்பி தப்பிக்க விட்டது. பொய் சொல்லுங்கள். ஆனால் பொய்யிலேயே வாழாதீர்கள் .

குற்றவாளிகளின் தோழனாக இந்தியா தன்னை எப்போதும் காட்டிக் கொண்டே வருகிறது. உலக மகா குற்றவாளியான ராஜபக்சே, வாரன் ஆண்டர்சன், டக்ளஸ் தேவனாந்தா, போர்பர்ஸ் ஊழலில் சிக்குண்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி என இந்தியாவின் குற்றவாளிகளின் பாசம் பரந்தது.

போபால் விஷ வாயு தாக்குதல் திடீரென ஏற்பட்ட விபத்தல்ல.1975 ஆம் ஆண்டில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை முன் மாதிரி உற்பத்திகளை செய்த போதே விஷவாயு தாக்குதலுக்கு காரணமான மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுத்திரவத்தினை இங்கு உற்பத்தி செய்யக்கூட்டாது என போபால் மாவட்ட தொழிற்சாலை ஆய்வாளர் ஆணை பிறப்பித்தார். அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பைப் பெற்ற முதலாளிகளை பகைத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு என்ன நடக்கும்..? நீங்கள் ஊகித்தது சரி. அது தான் நடந்தது. தொழிற்சாலை ஆய்வாளர் மாற்றப்பட்டார். 1979 ஆம் ஆண்டு முதல் மீத்தைல் ஐசோ சயனைடு உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே ஏகோபித்த அரசு ஆதரவோடு துவக்கப்பட்டது. பணத்திற்காக மனிதனை உண்ணும் வேலைக்கு அரசின் ஆதரவு கேட்காமலேயே வழங்கப்பட்டது. ஏனென்றால் தொழிற்சாலையின் முதலாளி ஆண்டர்சன் அமெரிக்காவினை சேர்ந்தவர். அமெரிக்கா கக்கூஸ் போனால் இந்தியா கால் அலம்பி விட வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி.

1981 –ன் துவக்கத்தில் மீத்தைல் ஐசோ சயனைடின் கலத்தில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர் மரணமுற்றார். பிறகு ஒன்றிரண்டு மாதத்திற்குள்ளாகவே அங்கு பணிபுரிந்த வேதியியல் பொறியாளர் ஒருவருக்கு நச்சுவாயு பாதிப்பினால் கடுமையான காயங்கள். நச்சு வாயு கசிவினால் தொடர்ச்சியாக பணியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.இப்படி தொடர்ச்சியாக நச்சு வாயு கசிவுகள் ஏற்பட்டும் முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே இருந்த அபரிதமான செல்வாக்கினால் விஷ தொழிற்சாலை மிகச் சிறப்பாக ,எவ்வித தடையும் இல்லாமல் நடைப் பெற்று வந்தது. குறைந்தப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட ஆண்டர்சன் தன் தொழிற்சாலையில் செய்யாததன் விளைவு போபால் தலைமுறை தலைமுறைகளாக சுடுகாடாய் மாறிப் போனது. திட்டமிட்டே இந்தியாவின் வறுமை மக்களை தன் பரிசோதனைக்கு பயன்படுத்தி பார்த்து விட்டு இப்போது வேடிக்கை பார்க்கும் அமெரிக்காவிற்கு அடிக்கடி போய் விருந்துண்டு வருகிறார் நம் மன்மோகன். சரி , சாப்பிட்டு ஏப்பம் விடும் நேரத்திலாவது ஆண்டர்சனைப் பற்றி ஓபாமாவிடம் ஏதாவது கூறி நடவடிக்கைகள் ஏதேனும் எடுப்பார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தோமானால் நம் வாயில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு கொண்டதற்கு சமம். தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசு ஈழத்தமிழர்களை காப்பாற்ற கொலைகாரன் ராஜபக்சேவிடம் பணம் கொடுத்தனுப்புகிறது. இந்த சிக்னலை மிகச்சரியாக புரிந்துக் கொண்ட ராஜபக்சே கொடுத்த பணத்தினை அவனது தேர்தல் செலவிற்கு பயன்படுத்தி விட்டு தேர்தல் வந்தது, ஊர்வலம் வந்தது என சாக்கு சொல்கிறான் நலம் விசாரிக்கப் போன நம் நாட்டு எம்பிகளிடம்.

போபால் விஷவாயு வழக்கு 26 வருடங்கள் நடைப்பெற்று தண்டனைக்குள்ளான யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் கேசவ மகேந்திரா உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளது போபால் நீதிமன்றம்.( 20,000 மக்களை கொன்றவர்களுக்கு ஜாமீன். மக்கள் செத்ததை பத்தி கேட்டா ஜாமீன் மறுப்பு. இது தான் சட்டமாய்யா ?-ன்னு என் கிட்ட கேக்காதீங்க. நாங்க சட்டத்தினை பாதுகாக்குற வழக்கறிஞர்கள் )

சரி . ஊழல் அரசியல்வாதிகளின் பணத்தாசைக்கும், வல்லாதிக்க முதலாளிகளின் பேராசைக்கும் பலியாகிப் போன மக்களுக்கு என்னங்க வழி..? இதுக்கு இன்னும் பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தி, ஆலோசனைகள் செய்து , ஏதோ கொடுக்கலாம் என்று அரசு யோசித்த யோசனையை பரிசீலித்து ..எப்படி மக்கள் செத்து 26 வருடங்கள் கழித்து குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தோமோ…அதே போல மிக விரைவாக மக்கள் வாயில் அள்ளிப் போட இருக்கிறது மண் என முடிவு செய்துவிட்டனர் அரசியல் வாதிகள்.

போபால் அழிவினைக் காட்டிலும் தங்களது பேராசைகளுக்காக அப்பாவி மக்களை கொன்றவர்களை அரசும் ,நீதிமன்றமும் கையாளும் விதம் அதைவிட அழிவினை அளிக்கும் கொடுமைகள். தேர்தல் செலவுக்கு கோடானு கோடி ஒதுக்கும் அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க தினந்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் அமைச்சரவை கூட்டங்கள். வேதனை.

அலைக்கழிப்பின் இறுதி.

துடித்து வெடித்த நொடிக்குள் கிழித்த காற்றை

அருந்திற்று அம்பு.

அம்பின் துளிர்ப்பில் அதிரட்டும் இலக்கு.

இருட்டின் பெருவெள்ளத்தில் நகரும் சுடராய்

அலைந்தது இலக்கு.

எய்யப்பட்ட அம்போடு பயணம் போன பார்வையும்

சற்று முன்னதாகவே சென்று குத்திற்று இலக்கில்.

இலக்கின் அலைக் கழிப்பில் நிதர்சனத்தின் ஆட்டம்.

அம்பின் நுனியில் நம்பிக்கையின் சுமை.

விசுவாசத்தின் பெருக்கில் கரைந்தது திசைகளின் சுழற்சி.

நகராமல் ..விலகாமல் நடு உச்சத்தில் பெருகிற்று வெப்பம்.

நொடியை பிரித்து கசக்கி முகர்ந்தது வெறியேற்றிய வேகம்.

மூர்க்கத்தின் துளியில் துவங்கிற்று முடிவிற்கான துவக்கம்.

நெருங்கிய இடைவெளி இழைக்குள் நுழைந்த காற்றின் கேசம்

அறுப்பட்டு சிதறிற்று காண்.

தொட்ட துளியில் இலக்கின் புள்ளியில் உறங்கியது வில்லாளனின் குறி.

அம்பின் நுனி துளைத்து கிழித்தத் துளியில் இன்னமும் மிச்சமிருக்கும் இலக்கு.

துளைத்த கணத்தில் ஆடி அதிர்ந்தது வில்.

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…

திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…

கருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு..

உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.

முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.

என்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.

டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )

என்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா ஆயிட்டிச்சி.

ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.

அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .

விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?

இப்படிக்கு.

கருணாநிதியின் கடிதம்

சிவப்பில் சிலிர்க்கும் கடல்..

உதிரம் உதிர கரிப்பினில் கடல் நீர்.

நீலத்தில் உறைந்த கடல் ரத்தத்தில் சிலிர்க்கிறது.

அனாதையாய் கிடக்கும் மீன் வலைக்குள்

மீன்கள் சுற்றி திரிகின்றன..

நடுங்கும் கடலில் நகராமல் நிற்கிற படகில்

கனவோடு திறந்த கண்கள்.

கழுகின் வெறித்த பார்வைக்குள் சிக்குகிறது

உடலம் மிதக்கும் படகின் நுனி.

உறக்கத்தின் ஒரு புள்ளியில்

திடுக்கிட்டு வெளுக்கிறது வானம்.

வீறீட்ட வானத்தில் சிவப்பாய்

பரவுகிறது தமிழனின் ரத்தம்.

குடிசைக்குள் குழந்தை அழுகிறது

உணராத சோகத்தின் அறியாத பசியாய்.

வரப் போகும் அரிசிக்காக

தணலாய் காத்திருக்கும் அடுப்பில்

விழுந்து ஓலமிடும் கண்ணீர்.

சால்வைகள் ரூபாய் தாள்களோடு

விலை பேசுகின்றன விலையில்லாதவற்றை.

காவல்காரர்கள் காத்துக் கொண்டு

இருக்கிறார்கள் வேலி தாண்டி

விழுங்கும் சிம்மத்தினை..

கணக்கற்ற கனத்தினால்

கடல் பொங்கிறது

சில சமயங்களில் சுனாமியாய்..

(தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்)

மைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை



பன்முகத் தன்மை கொண்ட பல வகை நாட்டுப் புற இசை வடிவங்களையும் ,பறை போன்ற உணர்வினை உசுப்பி உள்ளுக்குள் எழுப்பிற இசைக் கருவிகளையும் தன் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவே அடைந்த தமிழர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் போன்ற மேனாட்டு இசை கலைஞர்களின் இசை வடிவங்கள் நெருக்கமில்லாமல் போனது வியப்பேதும் இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானின் இசை நம்மிடையே உலவினாலும் இன்றளவும் 80 களின் இளையராஜா பாடல்கள் வெற்றிக்கரமாக அனைவராலும் உணர்வு மேலீட்டு கேட்க இயலுகிறது என்றால் அப்பாடல்களில் தொனிக்கும் மண் சார்ந்த நுணுக்கங்கள் தான். மண் சார்ந்த மரபிசையின் நுணுக்கங்களும்,திரை இசை வடிவங்களுக்கே உரிய உணர்வு உந்துதல்களும் நிரம்பிய இளையராஜாவின் இசை என்றென்றும் நம் மண்ணுக்குரியது. எனவே தன் மண் சார்ந்து வாழும் வாழ்க்கையைப் பெற்ற தமிழர்கள் பிற இசை வடிவங்களை விரும்புவதில் அதீத தன்னியல்பு காரணமாக விருப்பமற்று இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். மைக்கேல் ஜாக்சன் போன்ற ஒரு இசை கலைஞனை என்னைப் போன்ற எளிய தமிழன் நெருங்கையில் இனம் புரியாத அச்சத்துடன் நகர நேர்ந்தது.

ஜாக்சனின் வேக வேகமான நடனங்களும்., என்னிடத்தில் இருக்கும் சொற்ப ஆங்கில அறிவிற்கு எட்டாத வாக்கியங்களும் நொடிக்கு நொடி என்னை விரைவாக கடந்து போகையில் உண்மையில் நான் சற்றே அயர்ந்துப் போனேன். என்னைப் பொறுத்த வரையில் நான் இசை கேட்கும் ஒவ்வொரு முறையும் மழைக்கால மாலை ஒன்றில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்துக் கொண்டு ஒரு சுவையான தேநீர் அருந்துவதற்கு இணையான ஒரு அனுபவமாக அடைய விரும்புவேன். இசை ,இலக்கியம் போன்றவற்றில் என்னால் எளிதில் கடந்துப் போக இயலும் எதையையும் நான் அணுக விரும்புவதில்லை. அவ்வாறாகவே ஜாக்சனின் இசையும் அவரது மொழியும் எனக்கு சவாலாக இருந்தன.

மைக்கேலின் இசையை நெருங்க வேண்டுமானால் முதலில் நாம் மைக்கேலினை நெருங்க வேண்டும். பளபளப்பு மேடையில் லட்சக் கணக்கான வெறித்தன ரசிகர்களுக்கு மத்தியில் சுழன்று சுழன்று ஆடி குதித்து அசத்தும் மைக்கேலின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமயமானது. தன் வாழ்நாள் முழுக்க மிகுந்த மன அழுத்தங்களுக்கு இடையே தான் அற்புதமான இசை வடிவங்களை மைக்கேல் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் முதலில் நெருங்கியது மைக்கேலின் த்ரில்லர் ஆல்பத்தில் உள்ள பீட் இட் ( beat it) என்ற பாடலைதான் . 1984 ஆம் வருடத்தில் ஏகப்பட்ட கிராமி விருதுகளைப் பெற்ற இந்த ஆல்பம் தான் மைக்கேலினை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்பாடலின் பரபரப்பான இசை மட்டுமே நான் மைக்கேலினை நெருங்குவதற்கு போதுமானதாக இருந்தது. இருந்தும் இன்னும் மொழி புரிந்து, வரிக்கு வரி தெரிந்து இசையை கேட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என நம்பினேன். மைக்கேல் ஜாக்சனின் டேஞ்சரஸ் தொகுப்பு 1991 ஆம் வருடம் ஆடீயோ கேசட்டுகளாக வெளிவந்த போது அதன் அட்டையில் அந்த தொகுப்பின் பாடல் வரிகள் இருந்தன. பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் இன்னும் பிற பாடல்களின் வரிகள் கிடைத்தன. ஜாக்சனின் பாடல் வரிகள் அசாத்தியமானவை.

“They Told Him Don’t You Ever Come Around Here


Don’t Wanna See Your Face, You Better Disappear


The Fire’s In Their Eyes And Their Words Are Really Clear


So Beat It, Just Beat It

எனத் துவங்கும் பாடலை மைக்கேல் இந்த வரியைத்தான் பாடுகிறார் என்பதை நான் பாடல் வரிகளினை கைகளில் வைத்துக் கொண்டு கேட்டப் பிறகே புரிந்தது. இத்தனைக்கும் திரில்லர் அவரது 6 ஆவது ஆல்பம் தான். 1958 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மைக்கேல் பிறந்தார். தன்னுடைய 11 ஆவது வயதில் தன் சகோதரர்களோடு ஜாக்சன் 5 என்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் தந்தையின் கொடுமைக்கு உள்ளான குழந்தையாக வளர்ந்தார். மைக்கேலின் முகத்தினை மிக மோசமாக திட்டிய அவரது தந்தையின் நடவடிக்கைகளால் அவரது பால்யம் பறி போனது.

சிறு வயதில் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாக தன் முகத்தினை மாற்றிக் கொள்ள அறிவியலின் துணை நாடி முயன்றுக் கொண்டே இருந்தார் மைக்கேல். 1971 ஆம் ஆண்டு முதல் தனி நிகழ்ச்சிகள் நடத்திய மைக்கேல் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகி நீதிமன்றங்களுக்கு அலையும் நிலைக்கு உள்ளானார். குழந்தைகளிடம் பாலியல் உறவு போன்ற மிக மோசமாக குற்றசாட்டுகளுக்குள் அவர் சிக்கியும் அவரது இசை தனித்துவமானதாக நின்றது.

மைக்கேலின் இசை வடிவங்களை நம் ஊர் ஆட்கள் வரை ஏராளமனோர் நகலெடுத்து இருக்கின்றனர். பிரபுதேவா, லாரன்ஸ் போன்றோர் அவர் போல ஆடவும் முயன்று வருகின்றனர். தற்காலத்து மேற்கத்திய நடன கலைஞர்களில் மைக்கேலின் பாதிப்பு இல்லாதவர்கள் மிக குறைவு. தன்னுடைய கருத்த உடல் குறித்து மைக்கேல் மிகவும் குற்ற உணர்வு கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே நிறம் மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் நிறைய செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து மைக்கேலிடம் கேட்ட போது தன்னுடைய இயல்பு மாறுவதற்கு காரணம் ஒரு வகை தோல் வியாதிதான் என விளக்கம் அளித்தார். அவரது மகனுக்கும் அவரைப் போன்ற வியாதி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

மைக்கேலின் ஆல்பங்கள் 75 கோடிகளுக்கும் மேலாக விற்று தீர்ந்திருக்கின்றன. இன்றளவும் விற்றுக் கொண்டிருக்கின்றன. இசை உலகின் மிக உயரிய விருதான கிராமி விருதினை 13 முறை வென்று பாப் உலகின் மன்னன் என்றெல்லாம் பட்டம் பெற்று ,ஒரு இசைக் கலைஞன் அடைய முடியாத சிகரங்களை தொட்டிருக்கிறார் மைக்கேல்.எம்.டிவி என்பதன் முழு வடிவம் மியூசிக் டிவி என்றாலும் அது மைக்கேல் ஜாக்சன் டிவியாக செயல்பட்ட காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் மைக்கேல் சென்றடைந்து புகழடைந்தார்.

எனக்கு மைக்கேலின் இசை வடிவங்களில் beat it ( thriller), smooth criminal (bad),Jam (dangerous),heal the world( dangerous) , they don’t care about us ( history), black or white (dangerous) போன்ற பாடல்கள் மிக விருப்பமானவை.

தன் இசை இழைகளின் அனைத்துப் புள்ளிகளும் ஒர்மைப்பட்டு அது ஆகச் சிறந்ததாக விளங்க மைக்கேல் மிகவும் எடுத்துக் கொள்வார். அவரது இசை வடிவங்களைப் போலவே அவரது இசை சார்ந்த ஆல்பங்களும் உயரிய சிறப்பு தொழிற்நுட்ப நுணுக்கங்கள் வாய்ந்தவை. மைக்கேலின் பல பாடல்களை தமிழ் திரைப்படக்காரர்கள் நகலெடுத்திருக்கிறார்கள். they don’t care about us என்ற பாடலினை பாய்ஸ் திரைப்படத்தில் சங்கரும் , Remember The Time என்ற பாடலினை இந்தியன் திரைப்படத்திலும் ,சின்னக் கண்ணம்மா திரைப்படத்திலும் அப்பட்டமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பல திரைப்படங்களில் மைக்கேலின் நுணுக்கமான கலை வடிவங்களை நகலெடுத்திருப்பதை நாம் நன்கு அறியலாம்.

மைக்கேலின் இசை பாப் உலகில் புதிய ஒளியினை பாய்ச்சியது. அவரது இசை உலகப் பொது இசையாக மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் உலகின் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளான ஒரு மனிதனின் மனநிலையினை அவை உரத்துக் கூறுகின்றன.நிம்மதியற்ற ஒரு மனிதனின் உள்ளார்ந்த அழுகையின் சப்தம் மைக்கேலின் இசையில் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் மிகவும் அறிந்த ஒரு மனிதன் இசையாய் வாழ்ந்து பல வித கனவுகளோடு முடிவுற்றிருக்கிறான். மைக்கேல் இறக்கும் தருவாயில் அவரிடம் அடுத்த இசை பயணங்களுக்கான கனவுகளும், முன்னேற்பாடுகளும் இருந்தன. நிறைவேறாத ஆசைகளோடு மைக்கேலின் குரல் காற்றில் உலவும் பேரிசையாக விளங்குகிறது. ஒரு ஒடுக்கப்பட்ட கருப்பின கலைஞன் என்ற முறைமையில் மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான். மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான்.

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén