பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: பிப்ரவரி 2024

உவர்ப்பு இல்லா கண்ணீர்.

“மனிதன் தாங்கக்கூடிய அளவிற்கே கடவுள் துன்பத்தை தருகிறான்” என்கிறது புனித நூல் திருக்குர்ஆன்.அது என்ன தாங்கக் கூடிய அளவு.. அப்படி துன்பத்திற்கு அளவுகோல்கள் இருக்கிறதா என்ன.. துன்பத்தில் எது பெரிய துன்பம் எது சிறிய துன்பம்.. துன்பம் என்பதே வலி தானே என்றெல்லாம் சிந்தனைகள் விரிந்து கொண்டே போகின்றன.

10 ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தை 1 1/2 வயதில் இறந்துவிட்ட கொடுமையை சமீபத்தில் என் குடும்பம் சந்தித்தது. என் வீட்டுப் பெரியவர்கள் விழிகளில் வலியை சேமித்து உறைந்து விட்டார்கள். கண்ணீர்/கதறல் போன்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை எல்லாம் தாண்டி உறைந்து விடுவது என்கிற நிலையை என் வீட்டிலேயே நான் கண்டேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை.இன்று காலை எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சட்ட உதவிக்காக என்னை அழைத்தார். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் மட்டும் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் குறைந்தவர்.அவரை தனது மூத்த மகன் மிகவும் மோசமாக நடத்துவதாகவும், அடிக்கடி தாக்கி விடுவதாகவும், அதை அவர் மிகுந்த வலியோடு என்னிடம் தெரிவித்தார். மூத்தமகனை அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.வாழ்வின் மிகக் போராட்டம் எதுவென்று சிந்திக்கும்போது உடல் நலமில்லாத குழந்தைகளை வளர்க்க பெற்றோர் நடத்துகிற போராட்டம் தான் என்பதை உணர முடிகிறது. எந்த நேரம் எது நடக்கும் என்று குழந்தைகளின் உடல்நலத்தைப் பொறுத்து எதுவும் தெரியாது. தன் கண் எதிரே தன் குழந்தைகள் படும் பாடு கண்டு பெற்றோர் அடையும் துயரத்தின் உயரம் எவரெஸ்ட்டை விட பன்மடங்கு பெரியது.

என் குடும்பத்திலேயே “ஆட்டிசம்” பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவன் இருக்கிறான். அவனை உருவாக்க அவனது தாய் படும் பாட்டை நான் அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அந்தப் பெண்ணுக்கு அச்சுஅசலாக என்னுடைய தாய் முகம். சிறுவயதில் என் அம்மா எப்படி என்னை தூக்கிக்கொண்டு அலைந்தாரோ அதேபோல அவளும் ஒரு சுமைத் தாங்கியாக மாறி இருப்பது வாழ்வின் அசலான மனிதர்கள் நகலெடுத்துக் கொண்டது போல இருக்கிறது. அவள் எப்போதும் நோயற்ற குழந்தையைப் பெற்று வென்ற என் அம்மாவின் கண்களில் இருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டே இருக்கிறாள். அவளது வெற்றிக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

முழுமையான உடல் நலம் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் வரம் வாங்கியவர்கள். அமைதியாக உறங்கும் இரவுகளை அடைந்தவர்கள்.அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சாலையை கடந்து செல்லும் முடி இழந்த சில குழந்தைகளை பார்க்க நேரிட்டது. தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே உலவும் அந்த குழந்தைகளின் விழிகளை பார்த்துவிட்டு நிதானமாக இருக்க முடியவில்லை.ஒரே சமயத்தில் பால்யத்தின் குறுகுறுப்பும், நோயின் தீவிரம் தரும் வலியின் நிழலும் கொண்ட அந்த விழிகள் எப்போதும் தன் தாய் தந்தையரையே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

நோய்மை நிறைந்த குழந்தைப் பருவம் மிகத் துயரமானது. நோய் தருகிற வலி, உறக்கமற்ற இரவுகள் இதுவெல்லாம் ஒருபுறம், இன்னொரு புறம் நண்பர்கள் தோழிகள் விளையாட்டுகள் இல்லாத தனிமை. மருத்துவமனையின் வெளிறிய சுவர்களை பார்த்து களைப்படையும் கண்களோடு இருந்த எனக்கு என் தந்தை புத்தகங்கள் மூலம் விடுதலைப் பெற்றுத் தந்தார். இந்த ஆன்ம விடுதலை அனைவருக்கும் கிடைப்பதில்லை.

“The Miracle”( 2015) என்கின்ற துருக்கி நாட்டு திரைப்படம் ஒன்று இருக்கிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த திரைப்படம் “Mahsun Kırmızıgül” என்பவர் இயக்கி இருந்தார். பள்ளிக்கூடம் இல்லாத ஒரு கிராமப்புறத்திற்கு பணிக்காக செல்லும் ஒரு ஆசிரியர் அங்கே நோய்மையால் பாதிக்கப்பட்ட பேச்சுத்திறன் இழந்த சரிவர நடக்க முடியாத ஒரு வாலிபனை சந்திக்கிறார். அந்த ஆசிரியர் மற்றும் எதிர்பாராத விதமாக அவனுக்கு அமைந்த மனைவி மூலம் அந்த வாலிபன் உலகின் அனைத்து உயரங்களையும் அடைவது தான் அந்த கதை. எனது ஆருயிர் தம்பி கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி விக்கி தனிமை உணர்ச்சி வெகுவாக ஆட்கொண்ட ஒரு நாளில் எனக்கு இந்தத் திரைப்படத்தை பரிந்துரைத்தார். இரண்டு பாகங்களையும் முழு வீச்சில் பார்த்து முடித்த எனக்கு அதற்கடுத்த இரண்டு நாட்கள் படம் தந்த தாக்கத்திலேயே கழிந்தன. எல்லோரும் மிக முக்கியமாக காண வேண்டிய அந்த திரைப்படத்தின் முதல் பாகம் நெட்ப்ளிக்ஸ் -சில் கிடைக்கிறது. இரண்டாம் பாகம் youtubeலயே இருக்கிறது. நோயற்ற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை பற்றி இந்த படம் பேசியது போல வேறு எந்த படமும் இவ்வளவு நுட்பமாக பேசியதாக தெரியவில்லை.

இளம் வயது நோய்மையின் மிக உக்கிரமான உச்சம் அது தருகிற தனிமை. இளம் வயதில் உளவியலாக அந்தத் தனிமை உணர்ச்சியை அடைந்தவர்கள் வாழ்நாள் முழுக்க எல்லா பொழுதுகளிலும் அந்த தனிமை உணர்ச்சி ஆன்மாவில் தேங்கி நிற்கும். “வேலையில்லாதவனின் பகல் பொழுது தான் உலகத்திலேயே மிக நீளமானது” என்ற வரியை எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். நோயுற்றவனின் இரவும் அப்படித்தான். வலியும் தனிமை உணர்ச்சியும் நிரம்பிய அந்த இரவுகள் முடிவே இல்லாத ரயில் பெட்டிகளின் வரிசையை நினைவூட்டுபவை.

“ஆரோக்கிய நிகேதனம்” என்ற 1953இல் வெளியான புகழ்பெற்ற ஒரு வங்காள நாவல் இருக்கிறது. அதை எழுதியவர் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாயா. தமிழில் குமாரசாமி மொழி பெயர்த்திருக்கிறார். ‘சாகித்ய அகாதெமி’ சார்பில் வெளியாகி இருக்கும் இந்த நூல் நோய்மையின் வெவ்வேறு குணாதிசயங்களையும், குணப்படுத்தும் வெவ்வேறு வழிகளையும் பற்றி விவாதிக்கின்ற அந்த நூல் மரபு சார்ந்த மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் இடையே இருக்கின்ற முரண்களைளையும் அரசியலையும் நுட்பமாக காட்டுகிறது. அதில் ஜீவன் மசாய் என்கின்ற முதன்மை கதாபாத்திரம் உண்டு. தலைமுறை தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்து வரும் குடும்பத்தில் பிறந்த அவர் ஆங்கில மருத்துவப் படிப்பில் சேர்ந்து மஞ்சரி என்ற பெண்ணை காதலித்து பிரிந்து, நிறைவேறாத காதலின் காரணமாக படிப்பை கைவிட்டு, தந்தை வழி ஆயுர்வேதத்தை தொழிலாக மட்டுமல்ல வாழ்வியலாக மாற்றி பின்பற்றி புகழ் பெற்ற ஆரோக்கிய நிகேதனம் என்கின்ற மருத்துவமனையை நிறுவுகிறார். ஆத்தர் பவ் என்ற பெண்ணை மணமுடிக்கும் அவர் வாழ்நாள் முழுக்க மனைவியின் வெறுப்பை சுமந்து ஆங்கில மருத்துவம் படித்த காதலியின் பேரனுக்கு நோய்மையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் புரிதலை உருவாக்கி மறையும் அவரது பாத்திரப்படைப்பு இந்திய நாவல் உலகில் தலைசிறந்தது . இளம் வயதிலேயே தன் மகனை பறிகொடுத்த ஜீவன் மசாய் “எல்லோருக்கும் எதிர்பாராத ஒரு நொடியில் மரணம் தான் முடிவு, அதை வெல்ல யாரும் இல்லை” என்பதை தன் வாழ்நாள் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் அந்தக் கதை. நோயைப் பற்றி தமிழில் சமீபத்தில் வந்திருக்கும் மருத்துவ புதினம் அக்குபஞ்சர் மருத்துவர் உமர் பாருக் எழுதிய “ஆதுர சாலை” நவீன மருத்துவ முறைமைகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்புகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அவரின் மகள் சிறு வயதிலேயே இன்சுலின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஊசி போடக்கூடிய நிலைக்கு ஆளானவர். பணியில் இருக்கும் நேரத்தில் கூட ஓடிப் போய் தன் மகளுக்கு ஊசி போட்டுவிட்டு வியர்த்து விறுவிறுத்து வேக வேகமாக திரும்பும் அவரின் துயரத்தை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் . அவரும் அவரது மனைவியும், தன் மகளை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த பொழுதில், ‌ அவர்களிடம் சென்று ‘நீங்கள் வென்று விட்டீர்கள்’ என சொல்லிவிட்டு நகர்ந்த போது அவர்களது விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அந்த நிறைவு தரும் முழுமை போல உலகில் வேறு எதுவும் முழுமையில்லை.

அந்த நேரத்தில் உதிர்க்கும் கண்ணீர் கூட உவர்ப்பு இல்லாத உவப்பு தானே..??

தேவைப்படும் சில புரிதல்கள்

சமூக வலைதளங்களிலும், அரசியல் பரப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்பற்ற இரண்டை ஒப்பிட்டு விவாதப் பரப்பு ஏற்படுத்துவது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வகையில் இப்போது
இதுவும் ஒன்று.

விஜய்யின் வருகையால் நாம் தமிழருக்கு பாதிப்பா..???

முதலில் நாம் தமிழர் அரசியலையும், நடிகர் விஜய் அரசியல் வருகையையும் ஒப்பீடு செய்யப்படுவது அர்த்தமற்றது.

2009 ல் நடந்த இனத்தின் அழிவு தாங்காமல், தொடர்ச்சியான நம் இனம் அடைந்து வருகிற இழிவு பொறுக்காமல், கொதிப்படைந்த இளைஞர் கூட்டம் நாம் தமிழரை உருவாக்கியது.

வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, மெய்யியல், சூழலியல், என பல்துறை சார்ந்த இனத்தின் எழுச்சி நாம் தமிழர் வருகைக்குப் பின்னால் இந்த மண்ணில் நிகழ்ந்தது. அதுவரை பேசப்படாத பொருட்கள் பல பேசு பொருளாக மாறியது. இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் நம் மண்ணில் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இதற்குப் பின்னால் உறக்கத்தை தொலைத்து உழைப்பை மட்டுமே கொண்டு தனது குரலால் வீதிக்கு வீதி கொள்கை முழக்கம் செய்து கொண்டிருக்கின்ற அதிமனிதன் அண்ணன் சீமானும், அவர் பின்னால் சாதி மத வேற்றுமைகளுக்கு எதிராக தமிழர் ஓர்மை அடைந்து , திரண்ட தன்னிகரற்ற தம்பி, தங்கைகளின் தமிழ்த்தேசிய பற்றுறுதி போன்ற கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன.

தோன்றும்போதே வெடித்து கிளம்பியது போன்ற வரலாற்று பெருவெடிப்பு நாம் தமிழர் கட்சிக்கு நிகழ்ந்தது. ஒரு பக்கம் ஊடகப் புறக்கணிப்புகள் மறுபக்கம் அரசு அதிகாரத்தின் தடைகள் மற்றும் வழக்குகள் இதற்கெல்லாம் முகம் கொடுத்து அண்ணன் சீமான் தலைமையில் எளிய இளைஞர்கள் திராவிட/தேசிய அரசியலுக்கு மாற்றாக புதிதான தமிழ் தேசிய அரசியல் உருவாக்கியது இந்த மண்ணில் நிகழ்ந்துவிட்ட புரட்சி. குறிப்பாக படித்த இளைஞர்கள் /இளம் பெண்கள் அறிவாயுதம் ஏந்தி வீதிகளில் திரண்டது தமிழக அரசியல் பரப்பில் இதுவரை பாராதது.

நடிகர் ரஜினிக்கு வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று அன்று கேட்டார்கள். இன்று நடிகர் விஜய் வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று கேட்கிறார்கள். யார் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் எங்களது இலக்கும், பயணத்தின் பாதையும் தியாகமும், தீரமும் மிக்க எங்களது இன முன்னோர்களால், மாவீர தெய்வங்களால் வடிவமைக்கப்பட்டது. தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சி. தூய தமிழ் மொழி வழியில் தமிழ் வீதிகள். தமிழர் நிலத்தில் தமிழுருக்கே முதல் உரிமை. எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கே நலத்துடன் வாழ, இங்கிருந்தவர்கள் வரலாற்றின் வீதியில் எங்கோ தொலைய என்கின்ற திராவிடப் போக்கு தொலைந்து தீந்தமிழர் ஆட்சியில் எல்லா உயிருக்குமான நலம். கல்வி அறிவியல், சூழலியல், கனிம வள பாதுகாப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, ஊழலற்ற ஆட்சி முறை , தற்சார்பு தாய்மைப் பொருளாதாரம் என ஒரு லட்சம் கனவுகளை உள்ளுக்குள் தேக்கி அதிகாரத்தை நோக்கி நாங்கள் அடி எடுத்து வைக்கும் பயணம் மற்றவர்கள் போல் அல்ல.

ஒரு தேசத்தை புதிதாக கட்டுமானம் செய்ய முயல்கிற புரட்சியின் பொறியாளர்கள் நாங்கள். திரைத் துறையை சேர்ந்த அண்ணன் சீமான் அவர்களை நாங்கள் திரை வசீகரத்தில் தேடிக் கண்டடைந்தவர்கள் அல்ல. இன அழிவின்போது சகிக்காமல் பெருங்குரலெடுத்து அழுது துடித்த எங்கள் குருதி தேய்ந்த ஆன்மாவின் மனித வடிவம் அவர். அடக்க முடியாத எங்களது கோபத்தை அவர் மேடையிலே வெளிப்படுத்திய போது ஒத்த உள்ள அலைவரிசைகள் ஒன்றாய் இணைந்து ஒரு புரட்சிகர பயணத்திற்கு எங்களை அணியமாக்கியது.

தமிழினத்தில் பிறந்த புகழ்பெற்ற திரைக்கலைஞன் என்கின்ற முறையில் நடிகர் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும், பேரன்பும் என்றும் உண்டு.

மற்றபடி வருங்காலத்தில் அவர் முன் வைக்க இருக்கிற அரசியல் அவர் யார் என்று காலத்தின் வீதியில் கணக்கிட்டு காட்டும். அதன் பொருட்டு எம் ஆதரவும்/ எதிர்ப்பும் அமையும்.

அவர் மட்டுமல்ல, இன்னும் திரைத்துறையில் இருந்து யார் வந்தாலும் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. எங்கள் முன் திரள்பவர்கள் நிச்சயமாக இன்னொருவர் பின்னால் நிற்க கூட முடியாது. விசித்திரமான இந்த நிலை நாங்கள் முன்வைக்கின்ற லட்சியங்கள் கொண்டிருக்கிற தனித்த வசீகரம். மாய ஈர்ப்பு.

இந்த நிலமும் இந்த அதிகாரமும் எங்களுக்கு தேவைப்படுகின்றன.

இந்த நிலத்திற்கும், இந்த மக்களுக்கும் நாங்கள் என்றும் தேவைப்படுகிறோம்.

இந்த நிலை மற்ற எவருக்கும் இல்லை எனும் போது மற்றவர் வருகை குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

தனித்துவமான எங்களது லட்சியப் பயணம், எங்களது அண்ணன் சீமான் தலைமையில் அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். பயணம் நகர, நகர.. பாதை விரிய, விரிய உலகின் மூத்த தமிழ்க் குடி அடிமை விலங்கொடித்து உரிமைகளோடு சிறக்கும்.

நாம் தமிழர்.

🟥

நூல் வீதி 8 – கே ஆர் மீரா பெண்களின் அறியப்படாத அக உலகம்

நூல் வீதி 8
++++++++++

இந்த முறை புத்தக கண்காட்சியில் மலையாள மொழியின் மிக முக்கிய எழுத்தாளர் கே ஆர் மீரா அவர்களின் மொழிபெயர்ப்பு நூல்களை என் தம்பி எழுத்தாளுமை அகர முதலவனின் பரிந்துரையில் வாங்கினேன். “தேவதையின் மச்சங்கள் கருநீலம்” என்கிற அவரது சிறுகதை தொகுப்பு மோ செந்தில் குமாரின் மொழிபெயர்ப்பில் தமிழில் எதிர் வெளியீடு மூலமாக வெளியாகி இருக்கிறது.

சமகால மலையாள எழுத்துக்களில் புகழும் தனித்துவமும் கொண்ட படைப்புகளை கே ஆர் மீரா தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது கதைகளில் வரும் பெண்கள் தீர்க்கமானவர்கள். நரகமோ சொர்க்கமோ அவலமோ மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் தங்கள் வாழ்விற்கான தேர்வுகளை முடிவு செய்யும் இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். தன் ஆன்மா முழுக்க காதலால் நிரம்பியவர்கள். உணர்ச்சிகளின் விளையாட்டாக காதலை கருதாமல் அதனால் தீவிர மன எழுச்சி அடைந்து எந்த எல்லைக்கும் செல்பவர்கள்.

அவரது படைப்புலகை பற்றி அவரின் மேற்கோள்களோடு வெளிவந்திருக்கிற ஒரு மிக முக்கியமான கட்டுரை இது.

https://www.vogue.in/culture-and-living/content/writer-k-r-meera-i-dont-write-for-feminists-i-write-so-that-my-book-will-convert-readers-into-feminists-jezebel

குறிப்பாக “தேவதையின் மச்சங்கள்” கதையைப் படித்து முடித்த நேற்றைய இரவினை கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். வேதனை கொடுமை இப்படியெல்லாம் நடக்குமா என்கிற சொற்களையெல்லாம் தாண்டி நிஜமான வாழ்க்கை எப்படி கோரமாக இருக்கிறது என்பதை கவித்துவமான தன்மொழியில் மீரா கதையாடி இருப்பது இந்த தொகுப்பை‌ அனைவரும் வாசிக்கும்படியாக மாற்றுகிறது.

இரண்டே இரண்டு கதைகள் கொண்ட மிகச்சிறிய தொகுப்பான இந்த நூலின் இரண்டாவது கதை கருநீலம். “சதி சாவித்திரி களும் கண்ணியமான உத்தம புருஷர்களும் இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல” என்கிற முன் அறிவிப்போடு தொடங்குகிற இக்கதை காதலாகி கசிந்து உருகிய ஒரு பேரிளம் பெண்ணைப் பற்றியது. உணர்ச்சியற்ற வாழ்வொன்றினை நோக்கி பயணப்படுகிற ஒரு துறவிக்கும், கணவன் குடும்பம் என வாழ்ந்து வருகிற ஒரு பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தை பற்றி மிகுந்த நுட்பமான மொழியில் மீரா கதையாக்கியுள்ளார்.

தமிழில் பெண்களுக்கான புனை உலகத்தை அம்பை சல்மா லீனா மணிமேகலை குட்டி ரேவதி சுகிர்தராணி கிருத்திகா போன்ற பலரின் படைப்புகள் மூலமாக அறிந்திருந்தாலும் மீராவின் எழுத்துக்கள் பெண்களின் அக உலகின் பல்வேறு கோணங்களை மிக ஆழமாக வெளிப்படுத்தியது.

கே ஆர் மீராவின் எழுத்துக்களில் இன்னும் ஒரு சில புத்தகங்கள் வாசிப்பிற்காக இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக அவைகளையும் ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தை இந்த சிறு நூல் ஏற்படுத்தி விட்டது.

கே ஆர் மீரா. சாகித்திய அகாதமி பெற்ற மலையாள மொழியின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். தற்போது கோட்டயத்தில் வசித்து வருகிறார். இவரது நூல்களில் பல தமிழில் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கின்றன.

ஜெயகாந்தனின் புகழ் பெற்ற பெண் கதாபாத்திரங்களில் இருந்து கே ஆர் மீராவின் கதை உலகில் வருகின்ற பெண்கள் வரைக்குமான தனித்துவமான பெண்களின் அக உலகு பற்றியே உண்மையில் ஒரு நூலை எழுதலாம்.

உண்மையில் நாம் அறிந்த பெண்கள் என்று எவருமே இல்லை. பெண்களைப் பற்றி நாம் அறிந்ததாக புரிந்து கொண்டிருப்பவை அனைத்துமே கற்பிதம்தான். படைப்பின் விசித்திரமும் அதுதான். நமக்கான ஏதோ ஒன்றை அவர்களிடத்தில் நாம் தேடிக் கொண்டிருப்பதை தான், நாம் அறிந்த பெண் உலகாக‌ நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதுவெல்லாம் அவ்வாறு இல்லை என நம் நெற்றி பொட்டில் அடித்தாற் போல் விரிகிறது கே ஆர் மீராவின் புனைவுலகம்.

Powered by WordPress & Theme by Anders Norén