பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2019

அவன் அப்படித்தான்..

 

நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவனை விமர்சித்து விட்டு போங்கள்.

ஆனால் அவன் அவனாகவே இருக்கிறான்.

அலை பாய்ந்து வரும் அவதூறுகளுக்கு அவனுடைய பதில் செயல்.

விஷம் தோய்ந்த அம்புகள் என எய்யப்படுகிற பொய்களுக்கு அவனுடைய பதில் உண்மை.

ஒதுக்கி வைத்து ஓரம் கட்டப்பட்டு
வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிற
சதிகளுக்கு அவனுடைய பதில்
அலட்சிய எக்காளத்துடன் கூடிய
சிறு புன்னகை.

காலம் காலமாய் கட்டி வைத்திருக்கிற
புராதன பழமை பஞ்சாங்கங்களுக்கு
நெருப்பு வைத்து விட்டு புத்துலகம்
படைக்க அவன் அடுத்த மேடையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறான்.

நெருப்பு சொற்களால் ஆன ஒரு கனவினை இளைய கரங்களின்
உள்ளங்கைகளுக்குள் புதைக்கிற கடமையில்.. அவன் வேர்வை சிந்தி
விரைந்து கொண்டிருக்கிறான்.

இதுவரை வரையப்பட்ட அனைத்து விதமான அவல தத்துவ கோடுகளை
அழித்துவிட்டு.. இயற்கையின் தாய்மடியில் கதகதப்பாய் வாழ
கனவுலகம் ஒன்றினை கட்டிக் கொண்டிருக்கிறான்.

சிட்டுக்குருவி களுக்காக சிந்திக்கிறான்.
சிங்கம் புலிகளுக்காக கதறுகிறான்.
யானை பூனைகளுக்காக யாசிக்கிறான்.
மொத்தத்தில் மானுடம் வாழ இந்த பூமியை தன் உயிரென நேசிக்கிறான்.

சாதிகளால் வரலாற்றின் வீதிகளில்
சரிந்து கிடப்போர் தோள் பிடித்து
எழுப்புகிறான்.

இது சரியல்ல. சதி என்று சரித்திரங்களால் தரித்திரங்கள் ஆனவர்களுக்கு சாட்டைகள் அளிக்கிறான்.

எதிரிகளால் கட்டமைக்கப்பட்ட எந்த கணக்குகளுக்குள்ளும் சிக்காமல்
அவர்களது கணிப்பினை பொய்யாக்கி
ஏமாற்ற சாலையின் புழுதியாக்கி
பறக்க விடுகிறான்.

நீரைப் போலவன். நீங்கள் நிரப்பும் பாத்திரங்களின் வடிவை உடுத்திக் கொண்டது
போலத் தெரிந்தாலும்..

சட்டென உங்களது கண்ணாடி கணிப்புகள் விரிசலடையும் ஒரு தருணத்தில்.. அவன் உடைந்து
பெருகி கடலின்
சாயல் கொண்டு விடுகிறான்.

எளிய ஆன்மாக்களின் தாகத்தை தணிக்கிறான். வலிய அதிகாரத்தின்
ஆதிக்க கோட்டைகளை ஆழிப் பேரலையாய் மாறி மூழ்கடிக்கிறான்.

ஒன்றில் தீர்மானமாய் நிற்கிறான்.

எங்கெங்கெல்லாம்
மனிதர்கள் தாழ்த்தப்பட்டு
வீழ்த்தப்பட்டு அடைபட்டுக்
கிடக்கிறார்களோ..

அவர்களோடு ஒருவராக தோள் சேர்த்து நிற்க.. அவன் தீர்மானமாய் நிற்கிறான்.

ஏனெனில்..

அவர்களில் தான் அவன் பிறந்தான். அந்த இயல்பிலேயே திரிந்தான்.

அதனை அரசியல் விருப்பங்களுக்காக அடகு வைப்பதில்லை அவன்.

அதிகார ஆசைகளுக்காக பிறந்தது முதல் அடைந்து வந்திருக்கிற இழிவுகளை மறந்துவிட்டு.. கிடைக்கிற இருக்கை களுக்காக வாக்குப் பருக்கைகள் பொறுக்குகிற.. சாதாரணன் அல்லன் அவன்.

அவன் அப்படித்தான்.

எதனிலும் தன்னியல்பு மாறாமல்..
அவன் அவனாகவே இருப்பதால்தான் அவன் அவருடைய தம்பி.

மணி செந்தில்.

மெளனத்தின் மலர்

 

 

 

அலைவரிசை
தவறிய
உன்
தடுமாற்ற சொற்களுக்கு
மத்தியில்..

உனது மெளனம்
ஒன்று சின்னதாய்
பூத்துவிடுகிறது.

அந்த மெளனத்தின்
ஆழத்தில் தான்
எனது
மீளெழும்பலுக்கான
பாடலை நான்
கண்டடைய வேண்டும்.

புராதன காதலுணர்வின்
ஆதித்துயராக
அந்த மெளனத்தை
நான் நம்புகிறேன்.

அது அதுவாக
கலைவதற்குள்..

அல்லது நீயே
அதை
கலைப்பதற்குள்..

இப்போதே நீ போகலாம்.

மணி செந்தில்.

காலமென்ற பொல்லாத மிருகம்

வைகோவிற்கு அன்றைய திமுக அரசு தொடுத்த தேசத்துரோக வழக்கு மீது இன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிற தண்டனையை நாம் நினைக்கும் போது சில காட்சிகள் நம் மனதிலே எழுகின்றன.

வைகோ மீது தொடுக்கப்பட்ட வழக்கு போல.. அன்றைய இனத்துரோக திமுக ஆட்சியில் பல அநியாய வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இனப்படுகொலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதரவும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதில் அன்றைய திமுக அரசு மிகுந்த கவனத்தோடு இருந்தது.

இனப்படுகொலை காட்சிகளை குறுந்தகடுகளாக தயாரித்துக்கொண்டு மக்களிடையே பரப்பி போராட்ட உணர்வினை உண்டாக்க முயன்ற எண்ணற்ற இளைஞர்கள் காவல்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகளால் கொடுமையாக மிரட்டப்பட்டு பொய் வழக்குகள் போடப்பட்டு முடக்கப்பட்டார்கள்.

அந்த அழிவு நேரத்தில்.. போரில் சிக்கி கொண்டு காயம் பட்டுக் கொண்டிருந்த தமிழர்களுக்கு இங்கிருந்து குருதி சேகரிக்கப்பட்டு உதிர பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட இருந்த வேளையில்.. அவை அனைத்தும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு அப்போது காவல்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் சேட்டின் ஷீ கால்களால் மிதித்து அழிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் இனி ஈழத்திற்கு ஆதரவாக யாரும் பேசவோ போராடுவோ கூடாது என அப்போதைய அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

கொளத்தூர் மணி, ஐயா பெ மணியரசன், அண்ணன் சீமான் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான பல வழக்குகள். பல மாதங்கள் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஈழ இன அழிப்பிற்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட பல இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீ வைத்துக்கொண்டு தியாகம் செய்ய… அவர்களின் மரணத்தை காதல் தோல்வி, கடன் பிரச்சனை என்றெல்லாம் திசைமாற்றி அன்றைய அரசின் உளவுத்துறை கடுமையாக இழிவுபடுத்தியது.

போர்ச்சூழல் எவ்விதமான செய்தியும் இங்கே வந்து விடக் கூடாது என்று ஊடகங்கள் செய்தித்தாள்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி கால தடைகள் விதிக்கப்பட்டன.

கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட கிளம்பியபோது ஒட்டுமொத்தமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி விடுதிகளை இழுத்து மூடி மாணவர்களின் போராட்டத்தை திமுக அரசு நசுக்கியது.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட கிளம்பியபோது உயர்நீதிமன்றத்தில் தன் காவல்துறையை வைத்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அடித்துத் துவைத்து… அதுவரை இனப்படுகொலைக்காக போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை.. தங்களுக்காக போராட வைத்து திசை மாற்றியது திமுக அரசு.

திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ஈழப் பிரச்சனை எல்லாம் இங்கே ஒரு பிரச்சனையே அல்ல என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

மல்லாக்கப் படுத்துக் கொண்டு முதுகில் ஆப்பரேஷன், காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே நடந்த சாகும்வரை உண்ணாவிரதம், நானே ஒரு அடிமை என்பதான பம்மல்கள், அய்யகோ போன்ற நீலிக்கண்ணீர் தீர்மானங்கள், குப்பைத் தொட்டிக்கு தான் போகப் போகிறது என உறுதி செய்துகொண்டு எழுதப்பட்ட போலி கடிதங்கள், மக்களை ஏமாற்ற மனித சங்கிலி போராட்டங்கள் என சொக்கத்தங்கம் சோனியா விற்காக அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி அந்த நேரத்தில் நடத்திய போலி நாடகங்கள் எண்ணற்றவை.

ஈழ இனப்படுகொலை சம்பந்தமாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை யாராலும் சந்தித்து உரையாட முடியாது. சந்தித்துவிட்டு வரும் பல அல்லக்கைகள் தலைவர் வருத்தத்தில் இருக்கிறார், தலைவர் குப்புறப் படுத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் என்பதான பொய்மூட்டைகளை அழித்துவிடும். பிறகு தனியே பேசும்போது இவரைப் போன்ற மனிதனை நான் பார்த்ததே இல்லை என்றெல்லாம் உணர்வாளர்கள் மத்தியில் நடித்து அழும்.

அதை நம்புவதா இதை நம்புவதா என்று தெரியாமல் நாமெல்லாம் குழம்பிக் கிடப்போம்

போர் முடிந்த பிறகு மருத்துவ சிகிச்சைக்காக வயதான பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இங்கே சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை தரை இறக்காமல் அப்படியே திருப்பி அனுப்புவதில் திமுகவும் காங்கிரசும் மிகக் குறியாக இருந்து நோக்கத்தில் வெற்றி பெற்றன.

அந்த நேரத்தில் வைகோ உரையாற்றிய பேச்சு இதோ

ஆனால் காலம் தான் இருப்பதிலேயே பொல்லாத மிருகம். அதன் வெறிபிடித்த ஓட்டத்தில் சில படிப்பினைகளை மிக எளிதாக நமக்குத் தந்து விடுகிறது.

அதே வைகோ இன்று காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று சபதம் எடுத்து களத்தில் நிற்கிறார்.

அவரைப்போல அன்று எங்களுடன் இருந்த பலர் திசை மாறி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு தலைமுறை இளைஞர்கள் இதையெல்லாம் மறக்காமல் அப்படியே அடி மனதிற்குள் புதைத்து வைத்து இருக்கிறோம். முத்துக்குமாரின் மூச்சுக்காற்றை இதுவரை வீசும் காற்றின் அலைவரிசையோடு கலந்துவிடாமல் காத்து வைத்திருக்கிறோம்.

ஈழ மண்ணில் அந்த காலகட்டத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு உதிரத்துளிக்கும் கண்ணீர் துளிக்கும் எங்கள் இடத்திலே கணக்கு உண்டு. காயம்பட்டு எழும்பிய கூக்குரல்களும்.. வன்புணர்வு கண்டு எங்கள் சகோதரிகள் கத்தித்தீர்த்த கதறல்களும், எங்கள் மகன் பாலச்சந்திரன் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையும்.. எங்களுக்குள் உறைந்துவிடாமல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நான் எல்லாம் பல அண்ணன்களின் விரல் பிடித்து நடந்திருக்கிறேன். அந்த அண்ணன்மார்கள் பேசுகின்ற மொழிகளை தேவ வாக்கு எனக்கருதி நம்பி திரிந்திருக்கிறேன். அவர்களை எம் இனம் காக்க மொழி காக்க வந்த கடவுளர்களாகவே கருதி வழிபட்டு இருக்கிறேன்.

என்னைப் போல.. எங்களைப்போல.. எங்களோடு இன்னொருவரும் நம்பித் திரிந்தார். அவர் அண்ணன் சீமான்.

நாங்கள் நம்பவே முடியாத ஒரு தருணத்தில்.. நாங்கள் நம்பி நின்ற அண்ணன்மார்கள் எல்லாம்.. காலம் வரைந்த இந்த சிக்கலான கணக்குகளுக்கு முன்னால் அம்பலப்பட்டு நிற்கும்போது..
அவர்களை உண்மையாகவே ஒரு காலத்தில் நேசித்த எங்களது இதயத்திற்கு வலிக்கத்தான் செய்கிறது.

ஈழ விடுதலையே தங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்றெல்லாம் எங்கள் இளம் தோள்களை பிடித்து உணர்ச்சி உசுப்பேற்றிய பல அண்ணன்மார்கள் திமுகவிற்கு ஓட்டு கேட்டுக் கொண்டும் காங்கிரஸுக்கு வாக்கு கேட்டுக் கொண்டும் இன்று நிற்பதை எல்லாம் பார்க்கும்போது..

சே…
காலம்தான்
இருப்பதிலேயே பொல்லாத மிருகம்.

அதன் வெறிபிடித்த ஓட்டத்தில்
எதையும் மறக்காமல்
நாம் நினைவோடு
எதையும் மறக்காமல் இருப்பதுதான்
நாம் அடைந்த மகத்தான துயரம்.

மணி செந்தில்.

செத்துப் போன ஒரு திமுக காரனின் கடைசி முனகல்..

ராகு காலம் எமகண்டம் பார்த்து வளர்பிறை அமிர்த யோகத்தில் திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று இருக்கின்ற உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பினை பற்றி விடுதலையில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்..

இதேபோல ஒரு நாள் திகவின் தலைவராக ஆக இருக்கிற அன்புராஜ் வீரமணியின் பதவியேற்பினை பற்றி முரசொலியில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்..

இதேபோல திமுகவின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும்போது பதவியேற்பினைப் பற்றி விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்..

அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளராக இன்ப நிதி உதயா பதவி ஏற்கும்போது விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும் ‌…

அதேபோல அன்புராஜின் மகன் தி.கவின் தலைவராக பதவி ஏற்கும்போது முரசொலியில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்..

ஆவலோடு எதிர் பார்க்கின்றேன்.

இதைவிட இன்னும் ஆவலோடு..

இந்த காண சகிக்காத கண்றாவியை எல்லாம் .. ஒரு சாண் வயிற்றுக்காக…திராவிடத்தின் எதிர்காலம், திராவிடம் 2.0 என்றெல்லாம்
முட்டுக் கொடுத்து முக்காப்பக்கம் முகநூல் பதிவு எழுதும் முற்போக்காளர்களின் பதிவுகளையும்…

பெரியாரை காப்பாற்றிட வேண்டுமே, திராவிட கொள்கைகளை காத்திட வேண்டுமே என்றெல்லாம் பேசி எழுதி பேமென்ட் வாங்கும் அறிவுஜீவி பதிவுகளையும்..

இனி கோபாலபுரத்தில் சாய்பாபாவின் ஆசிப் பெற்ற மஞ்சள் துண்டு மகானின் வீட்டில் பிறக்கப்போகிற சின்னக் குஞ்சும் பெரியாரை காக்க போகிற திராவிடப்பிஞ்சு என்று எழுதப் போகிற எழுத்து வல்லாண்மை மிக்க 200 ரூபாய் உ.பிக்களின் பாசப் பதிவுகளையும்..

ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எனக்குள் ஒரு செத்துப் போன திமுக காரன் எப்போதும் உண்டு. அவ்வப்போது அவன் லேசாக முனகுவான்.அப்போதெல்லாம் என் தன்மான செருப்பை எடுத்து அவன் தலையிலேயே தட்டி அவனை மீண்டும் கொல்வேன்.

இந்தக் கண்றாவியை எல்லாம் பார்த்துவிட்டு எனக்கு ஒரு நிம்மதி. இனி அந்த செத்துப் போன திமுக காரன் மீண்டும் முனகப்போவதில்லை. அவன் தன்னைத் தானே காறி உமிழ்ந்து விட்டு காலமாகிவிட்டான்.

ஒரே ஒரு கேள்விதான்..
ஒரு செத்துப் போன திமுக காரன்
என்ற அளவில் என்னிடம் இருக்கிறது.

அயோக்கியர்களா…

உங்களைவிட பெரியாருக்கு எதிரி வேறு யார் இருக்க முடியும்..??
…..

மணி செந்தில்.

ஒரு வரலாற்றின் கதை.. ——————————–

 

அவன் முன்னால் கால்கடுக்க நின்றவாறு
அவனின் சொற்களுக்கு ஏற்றவாறு.. சிந்தித்தும் சிரித்தும் கோபப்பட்டும் கொந்தளித்தும் ஆர்ப்பரிக்கும் அந்த இளைஞர் கூட்டம் அரியணையில் அமர்ந்து அரசாண்ட ராஜவம்சத்தினர் அல்லர்.

மிக எளியவர்கள்.

அவர்களின் தந்தையர்
செய்திருந்த
வரலாற்றுப் பிழைகளுக்காக..
அவர்கள் அங்கே கூடியிருந்தார்கள்.

அவர்களின் தந்தையரும்
அவர்களைப் போலவே
எளியவர்கள்தாம்.

தவறான எஜமானர்கள் மீது
கொண்டிருந்த
அளவற்ற விசுவாசத்தால்
அவர்களுக்கு அவர்களாகவே
விதித்துக் கொண்ட
கொடும் விதியின் கரம் பற்றி
வாழ்ந்தவர்கள்.

ஒரு பொன்னான
ஐம்பது ஆண்டு காலத்தை
எங்கிருந்தோ வந்தவர்களின்
பளபளக்கும் சொல்லாட்சியிலும்
மினுமினுக்கும் வெள்ளைத் தோலிலும்
கவரப்பட்டு பறிகொடுத்தவர்கள்.

கரை படிந்த தங்களது வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல்..
கரைவேட்டி இடுப்பில் நின்றது குறித்து
கர்வப்பட்டவர்கள்.

வாழ்ந்து கெட்ட ஜமீன்தார்களாக
சாராயக் கடையில் சரிந்து கிடந்தவர்கள்.

….

அவர்களின் மகன்கள் தான் அவன் முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அவன் பேசிக் கொண்டிருக்கிறான்.

வியர்வை படிந்த அவனது முதுகுப்புற சட்டை அவ்வப்போது அங்கே உலவிக் கொண்டிருந்த கோப பெருமூச்சுகளால்
உலர்ந்துக் கொண்டிருந்தது.

அவன் இம்மண்ணின் நிறத்தவன்.

விரல்களை இறுக்கி மூடி.. உயரும் அவரது கரங்களில்.. காலங்காலமாய் அழித்தொழிக்கப்பட்ட அவனது முன்னோர்களின் கனவுகள்
நட்சத்திரங்களாய் மின்னின..

இதுவரை அடுக்குமொழி ஆடம்பர வார்த்தைகளாலும்.. வரலாற்றை தன் திசைக்கு ஏற்றவாறு மாற்றி எழுதிய விரல்களாலும் அலுத்துப் போயிருந்த
ஒரு தலைமுறை..
வாழ நேர்ந்திட்ட அவல வாழ்வின் சினமேறிய அவனது சொற்களால் சிலிர்த்துப்போனது.

காற்றின் ரதமேறி கம்பீரமாய் மிதந்து வந்த அவனது சொற்களின் கருப்பை சுமந்த வெப்பத்தால்
அங்கே கூடியிருந்தவர்களின்
ஆன்மா தகிக்கத் தொடங்கியது.

முதலில் இது உணர்ச்சிகளின் கூடாரம் என உதாசீனப்படுத்தியவர்கள் பிறகு அஞ்சத் தொடங்கினார்கள்.

அவதூற்று ஆயுதங்கள் கொண்டு நிமிரத் தொடங்கிய பூர்வக்குடிகளின் தலைகளை தடுக்கப்பார்த்தார்கள்.

எகத்தாளமாக எழுதிப் பார்த்தார்கள். வார்த்தை வளைவுகளால் கலையா அவன் மன உறுதியை கலைக்கப் பார்த்தார்கள்.

மொத்தத்தில்..சலிப்பும் சங்கடமும் நிரம்பிய தங்கள் இரு கரங்களால்.. ஒரு வானத்தை மறைக்கப் பார்த்தார்கள்.

ஆனாலும்..
சினம் மறந்த இனத்தின் ஆதித் திமிர் பிடித்து பிறந்த அந்த அசுரர் குலத்து
மகன் இறுதியில் எழுதத் தொடங்கினான்.

முடிவில்..
ஒரு வரலாறு இவ்வாறாகத்தான்
பிறந்தது.

மணி செந்தில்.

ஒவ்வொரு வாரமும் குமுதம் ரிப்போர்ட்டரில் அண்ணன் சீமான் எழுதும் அரசியல் தொடர்
அடங்காப் பெருநெருப்பு.

வாசிக்கத் தவறாதீர்கள்.

உங்களோடு ஒரு நிமிடம்

 

உங்களோடு ஒரு நிமிடம

..

அந்த உணர்வை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது இனவெறியாக, பாசிசமாக நாசமாக காட்டுமிராண்டித்தனமாக எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் காற்று இந்த நிலம் இந்த மலை இந்த மண் இந்த செடி கொடிகள் இந்த மரம் என இங்கே இருக்கின்ற அனைத்தும் எங்களுக்குச் சொந்தம்.

நான் இம்மண்ணின் பூர்வகுடி.

நீங்கள் உங்கள் தத்துவ ஆயுதங்களை தூக்கிக்கொண்டு எங்களது வீதிகளில் வந்து இனிப்பு தடவிய வார்த்தைகளால் ஒரு எதிர்காலத்தை எங்கள் முன்னால் உங்களது மாய விரல்கள் மூலம் உருவாக்கி காட்டுகிறீர்கள்.

இந்த வயல்வெளிகளில் உலவும் காற்று எங்களுடையது. எங்களது முன்னோர்கள் காலம் காலமாய் சுவாசித்த காற்று அது.
அவ்வளவு எளிதாக உங்களுக்கு நாங்கள் கடன் கொடுத்து விட முடியாது.

எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே இருக்கின்ற மேடுபள்ளங்களை சமப்படுத்த வந்திருப்பதாக புன்னகையுடன் எங்களிடத்திலே பேசுகிறீர்கள்.

எங்களது சமமற்ற மண்ணில் நீங்கள் போட்டிருக்கும் உங்களது வல்லாதிக்க அதிகார குடிசையை இன்னும் சில தலைமுறைக்கு அகற்றாமல் நீட்டிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்.

ஆம் இது சமமற்ற மண் தான்‌.

மேடு பள்ளமும் சேறும் சகதியுமாக இருந்தாலும் இது எங்கள் மண்‌.

எங்கள் தாய் மண்.

எங்களது மண்ணில் நாங்கள் எங்களது உரிமையை விட்டுத்தர மாட்டோம்.

எங்களை நீங்கள் இந்தியன் என்று மயக்கலாம். திராவிடன் என்று குழப்பலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி என் உடம்பில் தவித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு மரபணு என்னை தமிழனாக துடித்து உணர வைக்கிறது.

எனக்கு எனது இன்னொரு தாய் நிலமான ஈழம் அழிகையில் வலித்தது. உயிரே போனது போல ஒரு வலி அது. அந்தத் தோல்வியால் தனிப்பட்ட முறையில் நான் இறந்து விட்டதாக உணர்கிறேன். ஆனாலும் அந்தத் தோல்வியை வரலாற்றின் நிரந்தரமாக ஆக்கிவிடக் கூடாது என சுதாரித்து எழுகிறேன்.

இந்தப் பரிதவிப்போ வன்மமோ உங்களுக்கு இல்லை. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணை சேர்ந்தவர் அல்ல.
உங்களது இனத்தவர்கள் எல்லாம் அவரவர் மண்ணில் இறையாண்மை யோடு வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள்.

ஆனால் நாங்களும் எங்களது இரண்டு தாய் நிலங்களையும் இழந்துவிட்டு.. எங்களை நாங்களே ஏமாற்றிக்கொண்டு 50 ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனாலும் நாங்கள் இப்படியே இருக்கப் போவதில்லை. எங்கள் தலைமுறையில் எங்களது கரங்கள் உயர்ந்திருக்கின்றன. இதே தலைமுறையில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை என்றால்.. எங்களது அடுத்த தலைமுறையின் விழிகளில் எங்களது விடுதலைப் போராட்டக் கதையை நம்பிக்கையோடு ஒளிர வைப்போம்.

ஆம். உங்களால் காட்டுமிராண்டிகள் என அழைக்கப்பட்ட நாங்கள் கம்பீரமாக சொல்கிறோம்.

ஆம்.. நாங்கள் காட்டுமிராண்டிகள் தான்.

ஆனால் காடு எங்களுடையது.

.

மணி செந்தில்

இதன் அடியில் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்க துடிக்கும் வல்லாதிக்க கரங்களோடு போராடிக் கொண்டிருக்கின்ற அந்த இளம் குழந்தைகளின் போராட்டக் காட்சிகள்.

ஒரு நாள்.. எங்கள் மண்ணிலும் இது நடக்கலாம். எங்கள் பிள்ளைகளும் இவ்வாறே நிற்கலாம்.

அதற்குள் தேவை
ஒரு விழிப்பு.

ஜெயமோகனின் தோசை.

பிரச்சனை என்னவென்றால்..

அந்தக் கதையை முழுதாகப் படித்து பாருங்கள். தினந்தோறும் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு பிரபல எழுத்தாளர் ஒருவர் தாக்கப்படுகிறார்.

இதில் மகிழவோ சிரிக்கவோ ஒன்றுமில்லை என்றாலும் கூட..

இதுதான் தமிழ் சமூக மனநிலையின் நிலை, தமிழ் சமூகமே சாடிஸ்ட்.. என்றெல்லாம் கொதிப்பதற்கும், குதிப்பதற்கும் இதில் ஒன்றுமில்லை.

ஆனால் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன.

ஆசானுக்கும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் கூடி வாழும் சமூகத்தை கவனிக்க தவிர்த்துவிட்டு நீங்கள் மயிலாசனத்தில் சிம்மாசனம் சூடி அமர்ந்து இருந்தீர்களேயானால் நீங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் அது பொது சமூகத்திற்கு தெரியாமல் விலக்கப்படுவீர்கள்.

நீங்களும் சாலைக்கு வர வேண்டும் ஆசானே… எவன் கூரை பற்றி எரிந்தால் என்ன.. இந்த நிலத்தில் மீத்தேனோ ஹைட்ரோ கார்பனோ எடுக்கப்பட்டால் என்ன.. நமக்குத் தொழில் எழுத்து. அந்த இருக்கையை விட்டு நான் எழ மாட்டேன் என்று இருந்தால்..நீங்கள் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போது.. உங்களுக்கு வேண்டியவர்களை தவிர உச்சுக் கொட்ட யாரும் இருக்க மாட்டார்கள்.

எழுத்தாளன் தனியானவன் அல்ல. இந்தப் பெரு உலகத்தின் அங்கம். மற்ற எல்லாரையும் விட இந்த சமூகத்தை சரியாக அவதானிப்பதற்கும் , தவறானவற்றை எதிர்த்து நிற்பதற்கு மான கூடுதல் பொறுப்பு நிலை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை எழுத்தாளர்கள் முதலில் நம்ப வேண்டும். நான் மகாபாரதம் எழுதுவேன். ஆனால் பக்கத்து தெருவில் நடக்கும் அநியாயத்தை எட்டி பார்க்கமாட்டேன் என்றால் சூழ்நிலை பிசகும் தருணமொன்றில் நம்மை எட்டிப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள் ‌.

தோசை காரனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வருகிறார்கள் என்றெல்லாம் ஆவேச படுகிறீர்கள். தன்னிடம் வருகின்ற எந்த மனிதனுக்கும் அவன் பாதிப்பிற்காக வழக்கறிஞர்கள் வரத்தான் செய்வார்கள். அது அவர்களது தொழில். அதே தோசை காரன் காயம்பட்டால் மருத்துவர்கள் மருத்துவம் செய்யத்தான் செய்வார்கள்.
அது அவர்களது பணி.
அவனுக்காக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்று நீங்கள் பதறுவதில் எவ்வித நியாயமும் இல்லை ஆசானே…
அவரவர்களுக்கு வேண்டியவர்கள் அந்தந்த சமயங்களில் வரத்தான் செய்வார்கள்.

பாதிக்கப்பட்ட நேரத்தில் சொல்லிக் காட்டக் கூடாது தான்.. ஆனாலும் நீங்கள் பதறுவதால் சொல்ல வேண்டி இருக்கிறது.

நீங்கள் முன்வைக்கிற எதற்கும் மாற்றாக இருக்கிற எவரையும் உங்கள் வாழ் காலத்தில் நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள். அவர்களை இழிவுபடுத்தி அவதூறு பேசி இருக்கிறீர்கள். தமிழர் மீது, தமிழ் நிலத்தின் மீது வேட்டையாடும் அனைத்து வல்லாதிக்க தேசியங்களின் மீதும் உங்களது கருணை உங்கள் எழுத்துக்கள் மூலம் சொட்டிக்கொண்டே இருக்கிறது. எதைப் பற்றியும் உங்களுக்கு கவலை இல்லை. ஒரு கௌரி லங்கேஷ் போலவோ, ஒரு கிரிஷ் கர்னாட் போலவோ உங்களை இருக்க சொல்லவில்லை. ஒரு சாதாரண மனிதனாக உங்களை சுற்றியுள்ளவற்றை உங்களது பெருமித முகமூடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்க்கச் சொல்கிறேன். அவ்வளவே.

எதையும் கவனிக்காமல் பார்க்காமல் தாங்கள் வந்தது தான் ஓவியம், சித்தரித்தது தான் எழுத்து என்று கிரீடம் சூட்டிக் கொண்டு இருந்தால்… நம் கருத்துகளுக்கு மாற்றாக எழுதும் எவனும் அயோக்கியனே என்று தனக்குத்தானே தராசு பூட்டி எடை பார்த்துக் கொண்டிருந்தால்… நாம் தனித்து தான் நிற்போம்.

எனவேதான் தோசை காரனுக்கு வருகின்ற நாலு பேர் கூட உங்களுக்கு வரவில்லை. உங்களை ஆதரித்து எழுதுகிற நண்பர்கள் கூட சென்ற காலங்களில் நீங்கள் எழுதியது குறித்து தாங்கள் பொருட்படுத்தவில்லை என்ற பெருந்தன்மை மனோபாவத்தை வெளிப்படுத்தவே ஆதரிக்கிறார்கள்.
அது போன்ற எழுத்துக்கள் ‘ஆயிரம் முரண்கள்’ இருந்தாலும் என்பது போன்ற பெருந்தன்மை பாவனைகள். அந்த அரிதார எழுத்துக்கள் சமூகத்தின் பொது வெளிப்பாடு அல்ல.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எழுத்தாளர் என்பதாலோ தோசை மாவு விற்பவர் என்பதாலோ ‌ நடைபெற்று முடிந்த இருக்கின்ற சம்பவத்தின் மீதான கரிசனத்தை கோரி நிற்கக் கூடாது.

உண்மை விசாரணை நடைபெற்று தவறு செய்தவர் தண்டிக்கப்படட்டும்.

மற்றபடி ஆசான் ஜெயமோகன் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது ‌. அவர் யார் என்றே தெரியாமல் தோசை மாவு விற்பவர் அவரை அணுகியது என்பது பரவலாக்கப்படாத தமிழ் அறிவுலகம் (!) பற்றி சிந்திக்க வைப்பதால் அது கவலை அளிக்கிறது.

மணி செந்தில்.

Powered by WordPress & Theme by Anders Norén