பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஏப்ரல் 2015 Page 1 of 2

கங்காரு -தீவிர அன்புணர்வின் எளிய மொழியியல்…

Kangaroo

 

மிருகம்,உயிர்,சிந்து சமவெளி போன்ற சர்ச்சை திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு வேறு தளத்தில் பயணிக்கிறது. எப்போதும் உணர்வு சார்ந்த திரைக்கருவில் மிகை நடிப்பிற்கான சாத்தியங்கள் அதிகம். அதே போன்ற அண்ணன் -தங்கை அன்புணர்வினை தீவிரமாக பேசுகிறது கங்காரு..

எப்போதும் வாழ்க்கை நினைத்தது போல அமைந்துவிடுவதில்லை.நினைப்பது போல நடக்காததன் அவஸ்தைகளை,வலிகளை,வேதனைகளை, ஏமாற்றங்களை,சவால்களை பேசுவதுதான் திரைப்படங்களும், இலக்கியங்களும்… மனித மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களின் தொகுப்பில் மகத்தானது அன்பு என்கிற மகத்தான உணர்வு.ஒரு வகை பதிலீட்டை,எதிர்பார்ப்பை,கைமாற்றை கோரி நிற்கிற மாபெரும் துயராக அன்புணர்வு பேருருவம் அடையும் போது மனித மனம் பிறழ்வு அடைகிறது. அப்படிப்பட்ட அன்பினை யாசகமாக கோரி நின்ற சகோதர உணர்ச்ச்சியின் பிறழ்வு அவஸ்தைகளை தான் கங்காரு பேசுகிறது.

எங்கிருந்தோ வந்த ஒரு சிறுவனின் கரங்களில் ஒரு கைக்குழந்தை. டீக்கடை வைத்திருக்கும் தம்பி இராமைய்யா அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை வளர்க்கிறார். தனது தங்கையே உலகமென வாழும் அந்த சிறுவனும்,கைக்குழந்தையும் வளர்கிறார்கள். உரிய வயது வந்தவுடன் தங்கைக்கு காதல் பிறக்கிறது. அது கனிந்து அண்ணனின் ஆசியோடு திருமணமாக மலர இருக்கையில் காதலன் கொல்லப்படுகிறான். அதன்பின் பார்த்த மாப்பிள்ளையும் கொல்லப்படுகிறார். பின் திருமணம் செய்து கொள்கிற இளைஞன் நோக்கியும் கொலை முயற்சி. இதற்கு பின்னால் இருப்பது யார் என்ற மர்ம முடிச்சுகளுடன் திரை மொழி அமைத்திருக்கிறார் இயக்குனர் சாமி.

தன் முந்தையப்படங்களின் பாலியல் உறவுகள் சார்ந்த சாயல் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருக்கிறார் இயக்குனர். மின்னும் உயர் நட்சத்திரங்கள், மாபெரும் அரங்கங்கள், பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் ஆகிய எதுவுமின்றி,புதிய நட்சத்திரங்களைக் கொண்டு தான் கொண்டிருக்கிற கதைக்கருவினை மிகச்சரியாக திரைமொழிக்கு நகர்த்தி விட வேண்டும் என்கிற இயக்குனரின் உழைப்பு திரைப்படத்தில் தெரிகிறது.

தனது குட்டியை தானே சுமந்து திரியும் விலங்கினங்களில் சற்றே வித்தியாசமானது கங்காரு . தனது வயிற்றோடு இருக்கிற பையில் தனது குட்டியினை வைத்துக் கொண்டு திரிகிற கங்காருவினை முன் மாதிரியாக வைத்து கதையினை அமைத்திருக்கிறார்கள். மனித மனதிற்குள் பூட்டி கிடக்கிற விலங்கு விழித்தால் அடைகிற அவலங்களும், அன்பின் மிகுதியில் மனிதமனம் அடைகிற பிறழ்வுகளுமாக உளவியல் சார்ந்த திரைக்கதையாக கங்காரு உருவாகியுள்ளது.

மனப்பிறழ்வு கொண்ட கதாநாயகனாக நடித்திருப்பவர் இன்னும் உடல் மொழியில் மெனக்கிட்டு இருக்கலாம். கதாநாயகியாக பிரியங்கா. அமைதிப்படை 2 –ல் நடித்தவர். தன்னை தவறாக வழிநடத்த முயல்கிற தனது அக்காவினையும், அவரது ஆட்களையும் செருப்பால் அடித்து வெளுக்கிற காட்சியில் மின்னுகிறார். தங்கையாக நடித்திருக்கும் புது முகம் தனது அண்ணனுக்காக அவசர அவசரமாக கஞ்சியினை விழுங்கும் காட்சியில் நன்கு நடித்திருக்கிறார். தம்பி இராமையா, கலாபவன் மணி,சுந்தர்ராஜன் போன்றவர்கள் எப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் சுடர் விடுபவர்களே.இப்படமும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல.

மருத்துவராக நடித்திருக்கிற வெற்றிக்குமரன், தயாரிப்பாளராகவும் இருந்து, தங்கையின் கணவனாகவும் நடித்து இருக்கிற சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தங்களால் முடிந்த நேர்மையை செய்திருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா.. என்ற கேள்வி எழுப்பிகிறவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது தெலுங்கன் கரங்களிலும், மார்வாடி கரங்களிலும்,கன்னடத்தான் கரங்களிலும் சிக்கி வதைபடுகிற திரை உலகினை மீட்க எம் நண்பர் சுரேஷ் காமாட்சி போன்றோர் போராடத் தொடங்கியுள்ளார்கள். அப்போராட்டத்தின் முதற்படி தான் கங்காரு போன்ற திரைப்படங்கள். அடுத்தடுத்து வரும் திரைப்படங்களில் இப்படத்திற்கான தவறுகளை திருத்திக்கொள்வார்கள என்கிற எனது நம்பிக்கைதான் இப்படத்தினை தவறுகள் கடந்து நேசிக்கச்சொல்கிறது. எளிய பொருட்செலவில் உண்மையான பாச உணர்வின் தீவிரத்தை பேசுகிற கங்காரு..நான்கு பாட்டு,இரண்டு குத்து, நான்கு காமெடி என்கிற பெயரில் கடிகள் என்கிற வகையில் வெளிவருகிற எத்தனையோ திரைப்பட குப்பைகளுக்கு மத்தியில் மதிப்புறு படமே..

கங்காரு – தமிழன் தயாரித்த தமிழர்களுக்கான திரைப்படம்.

அவசியம் அனைவரும் காண்போம்.

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன்

images (1)

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன் -மணி செந்தில்
——————————————————————————————

ஜெயகாந்தனுக்கு ஏன் நீங்கள் ஒரு பதிவு எழுதவில்லை..என்று கேட்டே விட்டான் என் தம்பி துருவன் செல்வமணி.

இறந்து விட்டார் என்பதற்காக அவரை ஆஹா-ஓஹோ என புகழ்ந்து பதிவிடும் போக்கு இணையத்தளம் வந்த பிறகு அதிகமாகி விட்டது என நான் கருதுகிறேன்.ஜெயகாந்தன் ஒரு வேளை மீண்டும் பிழைத்தாரென்றால்….”நான் செத்தால் இப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்றால்…நான் சாகவே மாட்டேன்” என சொல்லி விடுவார் போல…
வெறுப்பின் குணாம்திசியங்களோடு,கறாராய் வாழ்ந்த அம்மனிதனுக்கு திகட்ட திகட்ட இரங்கல் உரைகள்.

நான் ஜெயகாந்தன் தமிழ்ச்சிறுகதை உலகினை ஆட்சி செய்த போது வாசிக்க தொடங்கவில்லை. என் அம்மா பைண்டிங் செய்யப்பட்ட ஜெயகாந்தன் நாவல்களை அடிக்கடி வாசித்துக் கொண்டிருப்பதை கண்ட போதுதான் அக்காலத்திய பெண்களின் புரட்சிக்காரனாய் அவர் திகழ்ந்திருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது..அவரது அக்கினி பிரவேசம் சிறுகதையை என் அம்மா சிலாகித்து பேசும் போது எனக்கென்னவோ அதில் கொண்டாட ஏதுமில்லை என்றுதான் தோணிற்று. அதன் பின்னால் அவரை நான் வாசித்த போது புதுமைப்பித்தன்,திஜா,எம்.வி.வி,கரிச்சான்குஞ்சு,தஞ்சை ப்ரகாஷ் போன்ற என் அபிமான அக்காலத்து எழுத்தாளர்கள் அளவிற்கு ஜெயகாந்தன் என்னை ஈர்க்கவில்லை. மேலும் தமிழ்மொழி குறித்தும், காஞ்சி மடம் குறித்தும்,பெரியார் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள்,செயல்பாடுகள் ஆகியவை எனக்கு எதிரானவையாக இருந்தன, ஜெயகாந்தன் எழுத்துக்களில் புலப்படும் அதிகப்படியான உரையாடல்கள் அக்காலத்திற்கு உகந்தவையாக,புதுமையாக இருந்தாலும்..எனக்கு சற்று மிகையாக தான் தெரிந்தன..ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் அவரைப்போலவே நெகிழ்வற்ற பாத்திரங்களாக விளங்கின. மரபுகள் மீதான கலகமாய் ஜெயகாந்தனை நாம் கொண்டாட முடியாது.. ஏனெனில் அவருடைய வெளிப்படையான பார்ப்பன,இந்துத்துவ ஆதரவு அதற்கு எதிராக இருக்கிறது. சினிமா உலகிற்கு ரஜினிகாந்த் போல இலக்கிய உலகிற்கு ஜெயகாந்தன் திகழ்ந்திருக்கிறார் போல…என்ன செய்வது..எனக்கு நடிப்பில் கார்த்திக் (முத்துராமன்) தான் பிடிக்கும்.

ஜெயகாந்தனின் திரைப்படங்களில் நான் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ,சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற படங்களும் மெலோ டிராமா வகையை சார்ந்தவையே… அப்படங்களில் நடித்த நடிகை லெட்சுமி படங்களை விட என்னை ஈர்த்தார்.

இப்போது நானும் இணையத்தளங்களில் கொட்டிக்கிடக்கும் ஜெயகாந்தன் பற்றிய வாழ்க்கை விவரணைக் குறிப்புகளில் இருந்தும், அவரது பல கட்டுரைகளில் இருந்தும் ஜெயகாந்தன் பற்றிய ஒரு புகழ் கட்டுரையை தேற்றி விடலாம் தான். ஆனால் அது ஜெயகாந்தன் உருவாக்க முனைந்த பிம்பத்திற்கு எதிரானது…இந்து நாளிதழில் நேற்றைய சமஸ் கட்டுரை கூட எனக்கு மிகவும் அந்நியமாக,சடங்காக தெரிந்தது அவ்வாறுதான்.. ஒரு வேளை.. ஜெயகாந்தனைப் பற்றி ஆவணப்படம் எடுத்த..அவருடன் நெருங்கிப் பழகிய ரவி சுப்ரமணியன் சமரசமற்ற ஒரு பதிவு எழுதினால் ஏறக்குறைய ஜெயகாந்தன் என்கிற மனிதனுக்கு நேர்மையாக இருக்கும்.

உன்னை பிடிக்காது என்பதை ஜெயகாந்தனிடம் நேரடியாக சொல்வதே..வெளிப்படையாக வாழ்ந்த அந்த எழுத்தாளனுக்கு நான் செலுத்துகிற உண்மையான அஞ்சலி..

அதைத்தான் அவரும் விரும்புவார்.

மற்ற படி ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன். நான் வெறுக்க ,நிராகரிக்க ஜெயகாந்தன் இருந்தார் .இப்போது இல்லை. அந்த காரணங்களுக்காக வருந்துகிறேன்.

மரம் வெட்டிகள் சொன்ன கதை..

07-1428394570-andhra-encounter43

 

பால்யத்தின்
பாடப்புத்தகங்களிலும்,
தேவதைக் கதைகளிலும்
சட்டென சந்தித்திட
இயலும் சாதாரண
மரம் வெட்டிகள்தான்
நாங்களும்..

தங்கக்கோடாலியை
எடுத்து தருகிற
தேவதையை
யாரோ கற்பழித்து
போட்ட தினத்தில் தான்…

அடிவயிற்றுப்
பசித்தீக்காக
நாங்கள் வெயில்
அலையும் வனத்தில்
நின்று கொண்டிருந்தோம்..

எம் காதோரம்
பெருகுகிற வியர்வைத்
துளிகளுக்குள்
வீட்டில் பூனை உறங்குகிற
எம் வீட்டு அடுப்படிக்
கதைகள் ஒளிந்திருக்கின்றன…

புன்னகை மறந்த எம்
உதடுகளில்
பசித்திருக்கும்
எம் குழந்தைகள்
உதிர்க்கும்
நடுநிசி முனகல்களின்
சாயல் படிந்திருக்கின்றன…

கனவுகளில் கூட
அச்சம் துறக்க மறக்கிற
நிலைக்குத்திய
விழிகளுக்கு சொந்தக்காரர்கள்
நாங்கள்…

அப்படித்தான்
அன்றும்
நீண்டது முடியத்துடிக்கிற
பயணமொன்றின்
இறுதி ஊர்வலம்..

அன்றுதான்…
காற்றின் துடுப்புகளை
முறித்துப்போட்டு
எங்களை நோக்கி
முன்னேறிய துப்பாக்கி
ரவைகளை நாங்கள் சந்தித்தோம்..

உடனே ஏதாவது சொல்லி
துப்பாக்கி சீறலில்
கருணை கசிகிறதா
என கணத்தில் கணக்கிட்டோம்..

நாங்கள் இந்தியர்கள்
என்றோம்.

இல்லாத முகவரியை
சுமக்கிற அடையாளமற்ற
அஞ்சலட்டைகள்
என்றன துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் திராவிடர்கள்
என்றோம்..

உங்களை வைத்து
பிழைப்பதற்காக
எங்கள் எஜமானர்கள்
செய்து வைத்து வைத்த
நூற்றாண்டு மோசடி
என்று நகைத்தன
துப்பாக்கி ரவைகள்..

நாங்கள் மனிதர்கள்
என்றோம்..

உயருகிற அதிகார முனைகள்
என்றுமே மனிதர்களை
தின்றுதான் பசியாறுகின்றன
என்று தர்க்கம் உரைத்தன
துப்பாக்கி ரவைகள்..

இறுதியாக
சொன்னோம்….
நாங்கள் தமிழர்கள் என…

உயிருள்ள சடலங்கள்
உயிரற்று விழுவதால்
எழப்போவது
எதுவுமில்லை..
என்று காறி உமிழ்ந்த
படியே
சீறி துளைத்தன
ரவைகள்…

 

ராஜ வாழ்க்கை…

358843-bigthumbnail

எப்போதும் என் குதிரை
இராஜபாட்டையில்
செல்வதான கனவில்..

நான் மன்னன் இல்லை
என்பதையும்,
வாழ்க்கை குதிரை
இல்லை என்பதை மறந்து
போனேன்…

சறுக்கி விழும்
தருணங்களே
அறிவிக்கின்றன…
சதுப்பில் பயணப்படும்
எருமையாய் வாழ்வும்
ஒட்டிய ஈயாய் நானும்…

சொற்களின் மினுக்கும் சிறகுகள்

11064900_10153260048767074_1943520695953753847_nகாற்றில்
மிதந்து திரிகிற
உன் சொற்களில்
மின்மினி பூச்சிகளின்
சிறகினை கண்டேன்…

வளைந்து,நெளிந்து
திரிகிற புதிர் பாதையில்
ஆயிரத்தி எட்டு
நட்சத்திரங்களை
விதைத்து போயின அவை.

சட்டென கிளைத்த
மெளனத்தில்…
நட்சத்திரம் அழிந்த
வானமாய் நிர்மூலமானது
நானும் கூட….

 

தோட்டாவின் பாடல்..

thalaivar1

அடிமை இடுகாட்டின்
பற்றி எரியும் வரலாற்று
பெருமித பிணங்களுக்கு
நடுவே…

குனிந்த தலைகளாய்..
முணுமுணுத்த உதடுகளாய்..
கடந்துப் போன துயரோடிய
சாட்சிகளாய்..

நீண்டிருந்த வரிசைகளுக்கு
நடுவே..
ஏதிலியாய் ஏதுமற்று
எதுவுமற்று எல்லாமும் அற்று
மானம் விற்று வாழ்ந்த
மானுட சவங்களுக்கு நடுவே..

உதிரம் உறைந்த ஆயுத முனைகள்
குத்தி கிழிக்கும் சதை துணுக்கில்
சதா ஒழுகிக் கொண்டிருக்கும்
சிங்க இன இறுமாப்புகளுக்கு
நடுவே..

வலிகளின் தடம் சுமந்து
இழப்பின் பெருமூச்சாய்
அனல் காற்று அலைகழித்த
அவலங்களுக்கு நடுவே..

அலைகழிக்கும்
துயர் காற்றின்
சிறகுகள்
ஒடித்து
சீறி பாய்ந்தது
ஒளி கமழும் தோட்டா ஒன்று…

பஃருளி ஆற்றின்
பன்மலை அடுக்கமும்,
பத்து தலையாய்
பரவிக் கிடந்த ஒற்றை
உடலின் உயிர் நுனியும்,
சோழத்து கொடியில்
பாய்ந்திருந்த வரிப்புலியின்
தோல் வரியும்
சிலிர்த்தன..சிலிர்த்தன..

அடுக்கடுக்காய்
எழுந்த ஆதிக்க அலைகளின்
வளை நெறித்து
தாழ் பணிந்த முதுகுகளின்
நிமிர்வாய் உலவியது
அந்த தோட்டாவின் சீறல்..

பேரினவாத
பூட்ஸ் கால்களில்
மிதிப்பட்டு கிடந்த
விடுதலை
விழிகளின் விலங்கொடிக்க
புதிய பூபாளத்தினை
புகட்டி விட்டுப் போனது
அந்த தோட்டாவின் பாடல்..

குருதிச் சிவப்பேறிய
விளைநிலத்தில்…
மண்டையோடுகள்
உருண்டு,புரண்ட
அலைகடல் ஓரத்தில்..

தொடைமிச்சங்களும்,
மார்பு கறிகளும்
விற்கப்பட்ட
சாத்தான் வீதிகளில்…

தாழ்ந்திருந்த தலைகளை
வெட்டத்துணியும் வல்லாதிக்க
வாட்களின் மின்னிய
நுனிகளுக்கு அப்பால்..

பெருமுழக்கத்தோடு
தோட்டாவின் பாடல்
கேட்டிற்று..

இருண்மை வீதிகளில்
உயிரற்ற உடலாய்
கிடந்த
மானுட வாழ்வின்
மகத்தான பிரகடனம்
தோட்டாவின்
ஒளிச்சிறகுகளால்
உயிர்த்தெழுந்தது.

அது ஒற்றைத் தோட்டா
அல்ல..

எம் இனத்தின் பெரும் வரலாறு..

துயரக்காற்றில் அலையும் மலர்…

1264180814thamarai-news
உணர முடியா

தருணமொன்றில்
மெளனமாய் சொட்டிக்
கொண்டே இருக்கின்றன
கருகிப் போன நம்பிக்கைகள்..

சின்னஞ்சிறு கரத்தோடு
பின்னி பிணைந்த
விரல்களின் நெருக்கமும்…
நிலாக்கால இரவுகளில்..
கதைகள் கேட்ட கதகதப்பும்..
கனவாய் தொலைந்த வலியில்
வார்த்தைகளற்று வெறித்தப்படியே…

துயரக்காற்றில்
அலைந்திருக்கும்
ஒரு மலர் உதிரவும்
முடியாமலும்..
உறங்கவும்
முடியாமலும்…..

(யார் பக்கம் தவறு இருந்தாலும்…
தண்டனையை மட்டும் அடைந்திருக்கும்
தியாகு-தாமரை மகன் சமரனிற்காக.. )

நவனும்..அவனும்..

Modern art wallpaper 05 1280x720
கோப்பைகளில்
குடியேறிய
இரவொன்றில்
வெறியின் முனை
கொண்டு மானுட
சாசனமொன்றை
எழுதவதாக அறிவித்தான்
நவன்..
விடிவதற்குள் தன்
பக்கங்களில் சூரியனை
இழுத்து வந்து புகுத்தி
விட கனவுகளின்
வெப்பத்தை கடத்தி
வந்திருக்கிறான்..
மிதக்கும் ஏடுகளில்
அடுக்கடுக்காய்
வார்த்தைகளை
நவன் வசப்படுத்தி
வரைந்திருந்த
பொழுதில்…
முறிந்த குழலில்
சொட்டிய இசையாய்
புனைவின் 68 ஆம்
பக்கத்திற்கு அருகே
அழுதுக் கொண்டிருந்த
அவனை சந்தித்து
விட்டான்…
என்னை கொன்று விடு
துயர் மிகு வரிகளால்..
என்று இறைஞ்சியவனின்
மூடிய இமைகளில்
சிறகுகள் வரையப்பட்டிருந்தன…
எழுதாப் பக்கங்களில்
தளும்பிக் கொண்டிருந்த
வேட்கை மேகமொன்றில்
அழுத அவனின்
விழி துடைத்து
இலட்சிய சமூகத்தின்
கனவு மனிதனாய் அமர
வைத்தான் நவன்..
புன்னகை கோலோட்சி
மானுட பிரகடனத்தை
முழக்க குரலால் அவன்
இசைக்க தொடங்கும்
போதுதான் அது நடந்தது..
காற்றின் நுனி கிழித்து
ஆழ் கனவின்
பள்ளத்தாக்கு ஒன்றில்..
நாக்கு தள்ளி
செத்துப் போனான்
இறுதிச் சமூகத்து
இலட்சிய மனிதன்…
உதிரம் உறைந்திருந்த
வெள்ளைப் பக்கத்தில்
தனது கண்ணீரால்
நவன் இவ்வாறு
எழுதினான்..
அவன் மரணத்திற்கு
நான் காரணமல்ல..
காற்று வீசி
கண்ணீர் வரிகளை
உலர்த்தி போனதோடு..,
மானுட வரலாற்றின்
கடைசி வரி முடிவிலியாய்
அந்தரத்தில் அலைகிறது..
-மணி செந்தில்

தேநீர் வாழ்க்கை

tea-in-the-rain

மிச்சம் வைக்காமல்

ஒரே மடக்கில்

உறிஞ்சி விட

தோணுகிறது..

வாழ்க்கை எனும்

இந்த மழைக்கால தேநீரை.

கதை வீடு

1358672
நீல நதிக் கரையோரம்
இடறிய சொற்களை
சேகரித்து
ஒரு கதை வீடு
கட்டினேன்..
நாயகனும், நாயகியும்
கொஞ்சி குலாவிய
கதை வீட்டிற்கு
வெறுமை நிரம்பி
கோப்பை தளும்பிய
தருணத்தில் வில்லன்
ஒருவன் வந்தமர்ந்தான்..
பின்னரவின் கனவொன்றில்
உதிர்ந்த புன்னகை
வாசத்தோடு விதூசகன்
ஒருவனும் வந்து சேர்ந்தான்.
அலை கடல் ஓரமாய்
ஒதுங்கிய ஒற்றை
செருப்பு,
நதியில் மிதந்த
பெளர்ணமி நிலவின்
நிழல்
குப்பைத் தொட்டியில்
கிடந்த  ஒஷோவின்
கிழிந்த பக்கம்
என அடுக்கடுக்காய்
துணை நடிகர்கள் வந்து
சேர்ந்தனர்
அங்கே நவரசம் நிரம்பிய
கதைப் பின்னல்
தன்னைத்தானே பின்னிக்
கொண்டது..
எழிலார்ந்த உரு கொண்டு
மின்னலின் நுனி விழியாய்
விளைந்த பெண்ணொருத்தி
வில்லனின் துணையாய்
குடியேற
கதைப் பின்னலில்
 துருத்திய
சுரமாய்..சுயமாய்
 துடித்தது
யாரோ ஒருவனின்
இடது விழி ஒன்று..
சட்டென்று வீசப் பட்ட
கல் வீசலில்
கலைந்து போன
நதி நிலா பிம்பமாய்
கதை வீடு சரடு
பிரிந்து கலைந்தது
கலைந்த கதை வீட்டின்
அருகே  நிராசையாய்
போன கனவுகள் சில
சிதறிக் கிடப்பதாய்
மனநிலை கலைந்த
ஒருவன் உளறி விட்டு
போனான்….

 

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén