பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஆகஸ்ட் 2015

இரவு முடிவிலியான கதை

starry_night_by_girl_on_the_moon-d351dj0
—————————————————–

இரவை போர்த்திக்
கொண்டு
அவள் படுத்திருந்த
அவ் வேளையில் தான்
கலைந்த அவளது
கேசத்தில்
நட்சத்திரங்கள்
பூத்திருந்தன…

சட்டென்று இரவை
பிடித்தெழுத்து
மீண்டும் ஒரு
விடியலுக்கு
நான் தயாரான
போது…

அவள் சிரித்தாள்.

நான் சற்றே மூர்க்கத்துடன்..

நீ போர்த்திக்கிடக்கிற
இரவை பிடித்து இழுத்தால்
என்ன செய்வாய்..?

என கேட்டேன்

மீண்டும்
சிரித்தப்படியே
அவள் சொன்னாள்..

நான் உன்னை போர்த்திக்
கொள்வேன் – என

ஆதி வன
மூங்கிலில்
யாரோ
காற்று ஊதி
இன்னுமொரு
இரவிற்கு
ஏற்பாடு செய்தார்கள்…

பிறகுதான்
நான்
உணர்ந்தேன்..

இரவும், அவளும்
முடிவிலி என…

வாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.

Vasuvum-Saravananum-Onna-Padichavanga-–-VSOP-2015-Tamil-Mp3-Songs-Download

 

 

கடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து   “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற திரைப்படம் வந்த போது அதன் தலைப்பு சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. மதுக்குடி ஒரு பொழுதுப் போக்கு என்கிற நிலை மாறி, மதுக்குடி ஒரு தீவிர நோயாக உருமாறிக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் தான் மதுக்குடியை கொண்டாட்டத்தின் வடிவமாக, உணர்ச்சியின் வடிகாலாக , காட்டி நியாயப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப ( ஆங்கிலத்தில் வி.எஸ்.ஓ.பியாம்- மதுபான வகையொன்றின் பெயர். )

காதலிப்பது,குடிப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்யும் கதாநாயகன், அவன் வெறுப்பேற்ற, அவன் காதலுக்கு உதவ அவனைப் போன்ற ஒரு நண்பன், இவர்களை நேசிக்க எந்த தார்மீக காரணமும் இல்லை என்பது புரிந்தும் காதலிக்கும் இவர்களை போன்ற பொறுப்பற்ற கதாநாயகிகள் , இவர்களை சார்ந்த உப கதாபாத்திரங்கள் என வைத்துக்கொண்டு, கதை என்கிற முக்கிய கருப்பொருள் இல்லாமல், எவ்வித உண்மைத்தன்மை இல்லாமல்  திரையில் எது சொன்னாலும், எது காட்டினாலும் மக்கள் சிரித்து விடுவார்கள் என்கிற மகத்தான (?) நம்பிக்கைகளோடு தயாரிக்கப்படும் பல நூறு திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப. வழக்கமான இயக்குனர் ராஜேஷின் அதே கதை. அதே குடி.

 இது நடிகர் ஆர்யாவின் 25 வது திரைப்படம் என்ற அறிவிப்போடு படம் தொடங்குகிறது. தனது திரைவாழ்வின் முக்கியமான படமொன்றுக்கு ஆர்யா இது போன்ற கதையை தேர்வு செய்தது ஆச்சர்யமே. படம் முழுக்க பரவிக்கிடக்கும் மதுபானம் அருந்துகிற காட்சிகள் பார்வையாளர்களை முகம்சுளிக்க வைக்கிறது. மதுவிலக்கிற்கு ஆதரவான போராட்டக்குரல்கள் எழுந்திருக்கிற இக்காலக்கட்டத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு நகைமுரண். தமிழகத்து இளைஞர்கள் என்றாலே எப்போதும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு ஏதோ ஒரு பொண்ணை காதலிப்பதற்காக வீதிவீதியாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கின்ற கருத்தை வலியுறுத்துகிற பல படங்கள் வரிசையில் இத்திரைப்படமும் இடம்பெறுகிறது. படத்தில் பெரிதாக கதை ஒன்றுமில்லை. சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த வாசு என்கிற சந்தானமும், சரவணன் என்கிற ஆர்யாவும் மிகநெருங்கிய நண்பர்கள். சந்தானத்திற்கு திருமணம் ஏற்பாடாகிறது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான பானுவிடம் தன் நண்பன் மீது கொண்ட அதீத அன்பாலும், அக்கறையாலும் ஒரு நேர்முகத்தேர்வு(?) நடத்துகிறார். ஆர்யாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மனம் வெறுத்துப்போன பானு தன் கணவன் சந்தானத்திடம், ‘உன் நண்பன் ஆர்யாவை கைவிட்டு வந்தால்தான் நமக்கு முதலிரவு’ என்று நிபந்தனை(?) வைக்கிறார். சந்தானமும் தனது நண்பன் ஆர்யாவும் தன்னைப்போலவே காதல் திருமணம் செய்துகொண்டால் நட்பு இயல்பாகவே ஒருகட்டத்தில் அறுந்து விடும் என்று கருதி, நண்பன் காதலிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறார். ஆர்யா, தமன்னாவை காதலிக்க அதுவும் பல்வேறு குழப்பங்களில் தடைபட்டுப்போக இறுதியில் வாசுவும், சரவணனும் ஒன்றாகவே இணைந்தார்களா? வாசுவுக்கு தனது மனைவியோடு முதலிரவு நடந்ததா? சரவணன் தனது காதலியோடு சேர்ந்தாரா? என்கின்ற கேள்விகளுக்கான விடைகளோடு திரைமொழி (?) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க பல நட்சத்திரங்கள் தோன்றி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.  கவுரவ வேடத்தில்,படத்தின் இறுதிக்காட்சியில் காவல்துறை அதிகாரியாக வரும் விசாலும் இதைத்தான் செய்கிறார். இப்படத்திற்கென பெரிதான இசையோ,ஒளிப்பதிவு மேதமையை காட்டும் காட்சிகளோ தேவை இல்லை என்பதை இயக்குனர் முடிவு செய்து விட்ட பிறகு ..இடையில் நாம் யார்..? படத்திற்கு கதையே வேண்டாமென முடிவு எடுத்தவராயிற்றே அவர்…

இன்றைய தமிழ் திரைப்படங்களின் திரைமொழி விவரிப்பு என்பது வெகுவாக மாறியிருக்கிறது. இளம் இயக்குனர்கள் பலர் முன் வந்து நம்பிக்கை அளிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் ஜிகர்தண்டா,காக்கா முட்டை, சூதுகவ்வும்  போன்ற பல்வேறு சோதனை முயற்சிகள் தமிழ்த்திரைப்படத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சமகாலத்தில் தமிழ்த்திரைப்பட உலகம் போலவே மலையாளத் திரைப்பட உலகமும், இந்தி திரைப்பட உலகமும் பல்வேறு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக வெகுசன திரைப்பட ரசிகனின் ரசனை என்பது சமீபகாலத்தில்  பெரும் மாற்றமடைந்திருக்கிறது. சமூகம் சார்ந்த, ரசனை சார்ந்த திரைப்படங்கள் கவனிக்கப்படும் இச்சூழலில் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ போன்ற திரைப்படங்கள் உண்மையாகவே திரைப்பட ரசனைக்கும், திரைக்கலைக்கும் ஏதாவது முன்னேற்றத்தை அளிக்கின்றனவா? என்பது குறித்து நாம் திவிரமாக சிந்தித்துதான் ஆக வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்ற, ரசிக்கின்ற ஊடகமாக திரைப்படம் இருக்கின்றது. திரையில் தோன்றும் கதாநாயகனை தனக்கு முன்மாதிரியாக கொண்டு வாழும் பல கோடி இளைஞர்களைக் கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம் விளங்குகிறது. எனவே, இயல்பாகவே தமிழ்த்திரையில் தோன்றுகின்ற கதாநாயகர்களுக்கு ஒரு சமூக பொறுப்புணர்ச்சி தேவையாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஏதோ குடித்துவிட்டு பெண்கள் பின் சுற்றுவதையே தமிழ் இளைஞர்கள் வேலையாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொதுக்கருத்தை இத்திரைப்படம் நிறுவ முயற்சித்திருப்பது உண்மையாகவே வருத்தமளிக்கிறது. குடிப்பது ஒரு குற்றமல்ல, அது சமூக இயல்பு என தனது திரைமொழியின் மூலம் இயக்குனர் நிறுவ விரும்புவது கண்டிப்பாக ஆபத்தானதே.  மேலும் பெண்கள் ஆண்களை காதலிக்கதான் படைக்கப்பட்டவர்கள் என்பது போல இன்றளவும் நினைத்துக்கொண்டும், அதை திரைப்படமாக தயாரித்துக்கொண்டும் இருப்பது பிற்போக்குத்தனமானவை. திரைப்படங்கள் மூலம் பல்வேறு சமூகக்கருத்துகளைப் பரப்பிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற புரட்சியாளர்கள் இருந்த திரைப்படத்துறையில் நாமும் இருக்கிறோம் என்ற உணர்வு ஆர்யாவுக்கும், இயக்குனர் ராஜேசுக்கும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆனால், இதனையெல்லாம் கவலைகொள்ளாமல் சந்தானத்தின் இடைவிடாத நகைச்சுவைகளை முக்கியக் காரணியாகக் கொண்டு எந்த அடிப்படையும், வலுவும் இல்லாத கதையை வைத்துக்கொண்டு படம் முழுக்க மதுபானம் அருந்துகிற காட்சிகளை, அதுசார்ந்த உரையாடல்களைப் பொருத்திக்கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது உண்மையாகவே தமிழ்த்திரைப்பட ரசிகனின் மனோபாவத்தை பெரிதும் பாதிக்கிற நடவடிக்கையாக நாம் கருதலாம். திரைப்படம் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஊடகம்தானே? இதில் எதற்கு கருத்துக்கள்? என்று கேட்போர்க்கு, எது மகிழ்ச்சி…என்கிற சிந்தனை வயப்படுத்தும் வினாவை எழுப்ப கடமைப்பட்டவர்கள் நாம் என்பதை மறக்கக்கூடாது.

எனவே, திரைப்படம், எழுத்து, இலக்கியம், நுண்கலைகள் என கலைவடிங்களில் பங்குபெற்று உழைப்போர்க்கு கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்ச்சி தேவை என்பதைத்தான் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. திரையரங்க வாசலில் ஒரு சாதாரண பார்வையாளன் உதிர்த்த கருத்தொன்று எனக்கு இந்நேரம் நினைவுக்கு வருகிறது.’ வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பதற்கு பதிலாக வாசுவும் சரவணனும், ஒண்ணா குடிச்சவங்க என்றே பெயர் வைத்திருக்கலாம்.

உண்மைதான்…

-மணி செந்தில்

Powered by WordPress & Theme by Anders Norén