????

உன்னை கொல்ல
நான்
ஆதி கால ஆயுதம்
ஒன்றை பரணில்
தேடிக்
கொண்டிருக்கும்
போது தான்,
அந்த துருப்பிடித்த கத்தியை
தேடி எடுத்தேன்.

அதன் முனை
அவ்வளவு கூர்மையாக இல்லை.
ஆனால் அதன் வளைவில் எப்போதோ குத்தப்பட்ட
குருதியின் கறை
அந்தக் கத்தியை
நான் தேர்ந்தெடுக்க போதுமான காரணத்தை தந்தது.

அதை உன்
தோல்களை கவ்வி நிற்கும்
விலா எலும்பில் குத்தலாமா,
கதகதப்பான
நடுநெஞ்சில் பாய்ச்சலாமா,
தசை ததும்பி நிற்கும் அடிவயிற்றில் சொருகலாமா, என்றெல்லாம் நினைக்கும் போது ..
மிடறு விழுங்குகிற உன் தொண்டைக் குழி எனக்கு நினைவுக்கு வந்தது.

அதன் மென்மை
இந்தக் கத்திக்கு
உகந்தது தான்‌.

ஆனால்..
எங்கே குத்தினாலும் சரி
நான் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.

உன் குருதித் துளி என் மீது பட்டுவிடக் கூடாது.

உன்னை விட
உன் குருதியை
நான் அதிகம் வெறுக்கிறேன்.
அதோடு அந்த நொடியில் உறையும் உன் விழிகளையும்.

அந்த இரண்டும்
வாந்தி எடுக்க முடியாத
ஒரு குடிகாரனின் இரவு போன்றவை.

ரத்தம் கொப்பளிக்கும்
உன் சாவை
எப்போதும் கொந்தளித்துக் கொண்டே இருக்கும்
என் மனக்கடலில்
ஒரு படகாக மாற்றி
செலுத்தி விட வேண்டும்
என எண்ணிய அந்த பொழுதில்..
ஏதோ
திருப்தியற்றவனாய்
சாவின் துருவேறிய
அந்தப் பழங்கத்தியை
என் ஜன்னல் வழியே
தூக்கி எறிந்தேன்.

அந்த நொடியில்
நிராயுதபாணியாக
நின்று இருந்த‌
என்னிடம்
என்ன ஆயுதம் இருக்கிறது
என யோசிக்கும் போது தான்…

அதுவரை
கண்ணியம் காத்தோ..
பழகிய காலம் கருதியோ..
உள்ளுக்குள் எப்போதும் சுரக்கும் பேரன்பின்
வாடை உறுத்தியோ…
உன்னைப் பற்றி
பேச கட்டாயப்படுத்தப்பட்ட
எல்லா தருணங்களிலும் மௌனித்த நான்,

முதல்முறையாக
உன்னை பற்றி பேசத் தொடங்கினேன்.

இனி
இயல்பாகவே
நடந்து விடும்‌.
எனக்கான ஒரு கொலையும்,
உனக்கான ஒரு சாவும்.

????