சில நொடிகள்

கண்களை மூடி

தியானிக்கிறேன்..

உன்னை

பார்த்து விடுகிறேன்.

❤️

யாரிடமும் பேசாமல்

தலைகவிழ்ந்து

இமை சொருகி

மெளனிக்கிறேன்.

உன்னிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்.

❤️

யாரோ என்னிடம்

ஏதோ கேட்கிறார்கள்.

காதில் விழவில்லையா

என சாடை காட்டுகிறார்கள்.

அப்போதுதான் உனக்கு

பிடித்த நாயகன் பட

பின்னிசை எனக்குள்

அனிச்சையாக ஒலித்துக்

கொண்டு இருக்கிறது.

❤️

ஆள் தெரியாத

மழைச்சாலையில்

தனித்து பயணித்த

காரை ஒதுக்கி

கண்ணாடி ஏற்றி

சாய்ந்திருக்கிறேன்.

என் விழிகளுக்கு

முன்னால்

ஒரு பாதி

திறந்த கதவும்.

ஒரு மஞ்சள் சுடிதாரும்.

❤️

ஆளில்லா

பிற்பகல் கோவில்

பிரகாரத்தில் கண்மூடி

படுத்திருக்கிறேன்.

பழக்கத்தில்

அனிச்சையாய்

துழவும் என் விரல்களில்

ஒரு உதிரிப்பூ.

❤️

விடுமுறை கல்லூரி

ஒன்றில் யாருமில்லா

வகுப்பறைகளின்

திறந்திருக்கும்

ஜன்னல்கள் ஒவ்வொன்றாய்

மூடிக் கொண்டே வருகிறேன்.

ஏனோ உன்னை இறுதியாய்

பார்த்த போது

நீ தேவையில்லாமல்

கண் சிமிட்டிக்கொண்டு

இருந்தாய்…