ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு நிறைய பிறமொழித் திரைப்படங்களை மிக எளிதாக பார்க்க முடிகிறது. தேர்தல் பணிக்கு பிறகான காலத்தில் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும் என நினைத்திருந்த பல திரைப்படங்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக பிரேமலு.(Premalu -2024) நாம் பல படங்களில் பார்த்து அலுத்து தீர்த்த மிக மிக ஒரு சாதாரண திரைக்கதையை மிகவும் புதிதாக அதே சமயத்தில் வசீகரமாக எடுக்க முடிகிற வித்தை அசாத்தியமானது.

படம் நகரும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மெல்லிய சிரிப்பினை நம் முகத்தில் தக்கவைத்து, படம் முடியும்போது “அட” போடவைத்து அட்டகாசப்படுத்தி விடுகிறார்கள். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு சக்தி அதன் கதாநாயகன் தான். இத்தனைக்கும் அவன் கதாநாயகனுக்குரிய எவ்விதமான சாகச திறமைகளும் இல்லாதவன். அவன் நம்மில் ஒருவன். சொல்லப்போனால் நாம் தான் அவன். அதனால் படம் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த கதாநாயகனில் தன்னைக் கண்டு கொள்கிறார்கள். அவனது மூடத்தனங்களில், போதாமைகளில், இயலாமைகளில், தங்களின் வாழ்வை ஒப்பீடு செய்து தங்களுக்குள்ளாக சிரித்து வெட்கப்பட்டு கொள்கிறார்கள்.

கிரீஷ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பகத் பாஸில் மற்றும் அவரது நண்பர்கள் தயாரித்திருக்கிறார்கள். கதாநாயகன் சச்சின் சந்தோஷாக நடித்துள்ள நஸ்லீன் தன் நுட்பமான முக பாவனைகளால் பிரமாதப்படுத்துகிறார். எப்போதும் ஏக்கமும் ஏமாற்றமும் தடுமாற்றமும் நிரம்பிய முகத்தோடு அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் “அட நாமும் இப்படி இருந்திருக்கிறோமே..” என நினைக்க வைக்கின்ற திரை மொழி பேரழகு.

கதாநாயகனின் நண்பன் அமல் டேவிஸாக வரும் சங்கீத் பிரதாப் மற்றும் ஏறக்குறைய வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக சியாம் மோகன் என ஆளுக்கு ஆள் அவரவர் பங்கிற்கு பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் பிறரின் மூடத்தனங்களை, போதாமைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். முதன் முதலாக ஒரு திரைப்படம் வாயிலாக நம்மை பொருத்திப் பார்த்து நாம் சிரித்துக் கொள்கிறோம். அதுதான் பிரேமலு கொண்டிருக்கும் தனித்துவம்.

தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

அவசியம் பாருங்கள்.

ஒரு மகிழ்வான மாலை உறுதி.

❤️

மணி செந்தில்.