❤️

இன்னும்
அலைபேசி திரையில்
நான் பார்க்காத
உனது
குறுஞ்செய்தி ஒன்று
பனிக்கால இரவில்
சாக்கு பையின்
கதகதப்பில்
படுத்திருக்கும்
பூனைக்குட்டி போல
உறைந்திருக்கிறது.

உடனே
திறந்துப் பார்க்க
முடியாமல்
படிக்காத குறுஞ்செய்தியை
உறைந்த பார்வையோடு
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்.

அது விரல் படாத
பியானோ பொத்தான்கள்
போல ஏதேனும் இசைத்துளி ஒன்றை உள்ளுக்குள்
தேக்கி இருக்கக்கூடும்
என எண்ணுகிறேன்.

அல்லது

ஒரு பெரு மழையோ
ஒரு சுடும் பாலையோ
இன்னும் ஏதாவது
இருக்கக்கூடும்.

இந்தக் குறுஞ்செய்தியைப்
படிக்க நான்
தனிமையும்
பனியும் நிறைந்த
ஒரு மலைமுகட்டை
தேட வேண்டி இருக்கிறது.

சில சமயங்களில்
உன்
குறுஞ்செய்திகளை
படிக்கும்போது
என் கழுத்தை கவ்வும்
ஒரு ஓநாய்
காத்திருப்பது என்பது
எதேச்சையானது அல்ல‌.

பிரிபடாத
அந்தக் குறுஞ்செய்தியில்
ஏதேனும் காரணங்கள்
இருந்து விடக் கூடாது என அஞ்சுகிறேன்.

காரணங்கள் இல்லாமல் குறுஞ்செய்தி
அனுப்பி
கொண்ட காலங்கள்தான்
பொன்னிழைப் பொழுதுகள்.

காரணங்கள்
அலுப்புட்டுகின்றன.
காரணங்கள்
சுயநல ஒப்பனையோடு
துருத்திக் கொண்டு தெரிபவை.

காரணங்களே
இல்லாமல்
அனுப்பப்படும்
குறுஞ்செய்திகள் தான்
காதலின் மது அருந்தி
பேரன்பின் நிர்வாணத்தோடு
இமைகள் கிறங்க
வந்திறங்கி
நம் இதயம் இடறுபவை.

காரணங்கள்
இல்லாமல்
குறுஞ்செய்தி அனுப்புவது
என்ன
காரணத்திற்காக
என்று கேட்கிறார்கள்.

நீயும் நானும்
இருக்கிறோம்
என்கிற காரணம்
ஒன்றே ஒரு
குறுஞ்செய்தி
அனுப்புவதற்கு போதாதா..

அவர்களுக்குத்
தெரியாது.
எழுத்துக்கள் இல்லாத
வெறுமை
குறுஞ்செய்திகளில் கூட
வாசிக்கக்கூடிய செய்திகள் இருக்கின்றது என்று.

அதையும் தாண்டி..
யாருக்கேனும்
காரணங்கள் தேவைப்பட்டால்
நம்மிடம் உதிர்த்துக்கொள்ள
ஒரு கன்னக் கதுப்புப்
புன்னகையும்,
பின்னணியில்
இசைந்துக்கொள்ள
ஒரு இளையராஜாவின் இசைத்துண்டும்
தயாராகவே இருக்கின்றன
என்பதே காரணங்களாக இருக்கின்றன என்று
அவர்களுக்கு எப்படி
உணர்த்துவது..??