பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2024

வரலாற்றின் நிழல்.

நேற்று மன்னார்குடி மருத்துவர் ஐயா பாரதி செல்வன் அவர்கள் அழைத்திருந்தார். வாழ்ந்த வீட்டை இழந்த துயரத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையினை படித்து விட்டு பல அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது சில முக்கியமான நூல்களைப் பற்றி எங்களது பேச்சு திசை திரும்பியது. “ஓநாய் குல சின்னம்” நூலைப் பற்றி பல கருத்துக்கள் பகிர்ந்து கொண்டவர் அலெக்ஸ் ஹேலியின் “வேர்கள்” பற்றி பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசத் தொடங்கினார். மேற்கண்ட இரண்டு புத்தகங்களையும் நானும் வாசித்து இருந்த காரணத்தினால் புத்தகங்களில் அவரவருக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எஸ் ராமகிருஷ்ணனின் மண்டியிடுங்கள் தந்தையே என்கிற புத்தகத்தைப் பற்றியும் பேசினோம்.சமகால இன விடுதலை அரசியலில் நூல் வாசிப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்த மாமனிதர் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்கள்.அப்போதுதான் டாக்டர் ராஜேந்திரன் ஐ ஏ எஸ் எழுதிய “1801” மற்றும் “காலாபாணி” புத்தகங்களைப் பற்றி எங்களது உரையாடல் திரும்பியது.

தமிழர் நிலத்தில் அன்னியர் ஆதிக்கத்திற்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சிவகங்கைச் சீமையில் மருதிருவர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் போர்தான் முதல் இந்திய சுதந்திரப் போர். தமிழ்நாட்டில் தமிழர் தலைமையில் நடைபெற்ற ஒரே காரணத்திற்காக அதற்கான வரலாற்று அங்கீகாரம் கூட இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் மாபெரும் துயரம். குறிப்பாக மருது பாண்டியர்களை பற்றி தமிழில் பல நூல்கள் வெளி வந்தாலும், இந்த இரட்டை நூல்கள் மிக மிக முக்கியமானவை. கதை சொல்லும் போக்கில் ஒரு நாவல் போல இந்த நூல்கள் அமைந்திருந்தாலும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவை. வீரத்திலும் விடுதலை உணர்ச்சியிலும் ஆற்றலிலும் மருது பாண்டியர்களுக்கு இணையான அரசர்கள் அன்றைய காலகட்டத்தில் யாருமில்லை. குறிப்பாக ஆங்கிலேயரிடம் விலை போகாது தாய் நாட்டு விடுதலைக்காக உழைக்க அழைத்த சின்னமருது வெளியிட்ட விடுதலை பிரகடனம் சூரியன் மறையாத ஆங்கிலேய பேரரசை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியது.கட்டபொம்மன் தூக்கிலிட்டப்பட்ட பிறகு ஊமைத்துரையை காப்பாற்றும் மருது பாண்டியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை 1801 மிக நுட்பமாக விவரிக்கிறது. குறிப்பாக பெரிய மருது உண்மையிலேயே எப்பேர்ப்பட்ட பெரிய மனிதராக வாழ்ந்து இருக்கிறார் என்பதை படிக்கும் போது மனம் நெகிழ்ந்து போய் விடுகிறது. ஆங்கிலம் உருது போன்ற மொழிகளில் சரளமாக பேசக்கூடிய பெரிய மருது தன் தம்பியின் மீது பேரன்பு கொண்ட பெருமகன். நிதானமும் ஆழ்ந்த சிந்தனையும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்கின்ற கூர்மையான அறிவும் கொண்டு ஆங்கிலேயருடன் தேவையில்லாமல் பகை வேண்டாம் என யோசித்த பெரிய மருது தன் தம்பி சின்ன மருதுவின் தாயக விடுதலை கனவிற்காக தனது எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு போர்க்களத்தில் நின்றவர். சாதி உணர்ச்சியை பின்னுக்குத் தள்ளி தாய் மண்ணை நேசித்த மகத்தானவர்.குறிப்பாக சின்ன மருதுவை கை, கால் சங்கிலி இட்டு ஒரு இரும்புக் கூண்டுக்குள் அடைத்து தூக்கிலிட அழைத்து வரும் காட்சி படிக்கும்போதே மனம் பதறுகிறது. பெரிய மருதுவை அந்த நிலையிலும் பார்த்து வணங்கும் சின்ன மருதுவின் நிலையும் கைது செய்யப்பட்ட சிறு சிறு குழந்தைகளின் நிலைமைகளையும் பார்க்க சகிக்க முடியாமல் தன்னை முதலில் தூக்கில் போட வேண்டும் என ஆங்கிலேயரிடம் பெரிய மருது கேட்க அதையும் ஆங்கிலேயர்கள் நிராகரித்தார்கள். இந்த நூலின் தொடர்ச்சியாக சின்ன மருதுவின் இளைய மகன் சின்னச்சாமி , பெரிய மருதுவின் மருமகன் அரசர் உடையண்ண தேவர் உள்ளிட்ட 73 தமிழர்கள் நாடு கடத்தப்பட்ட கண்ணீர் கதை தான் காலாபாணி.

இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஐயா பாரதிச் செல்வன் அவர்கள் மக்களுக்காக போராடுகின்ற களங்களில் நாம் சமரசம் இன்றி நிற்பதற்கான உந்துதலை இது போன்ற புத்தகங்களில் இருந்து தான் பெறுகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அன்று இரவே அந்த புத்தகங்களை இணையம் வழி வாங்கப் போவதாகவும் சொன்னார். ஐயா மருத்துவர் பாரதிச் செல்வன் அவர்கள் மன்னை நகரத்தில் புகழ்பெற்ற மருத்துவர். இதய நோய் மருத்துவத்தில் தமிழ்நாடு அறிந்த பேரறிஞர். தன் மருத்துவமனையையே மிகப்பெரிய நூலகமாக , தமிழ்த்தாய் ஆலயமாக நடத்தி வருபவர்.

என் தந்தை மேனாள் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ச.மணி அவர்களும் ஐயா மருத்துவர் பாரதி செல்வன் அவர்களும் மன்னார்குடி பகுதியில் முதன் முதலாக அறிவொளி இயக்கத்தை தொடங்கி பலருக்கும் எழுத்தறிவு ஊட்டியவர்கள். என் தந்தையோடு சமூகப் பணியாற்றியவர் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் என்னோடு அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மன்னார்குடி பகுதியில் அவர் அலையாத இடமில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க தெருத்தெருவாய் அலைந்து, மதிய நேரங்களில் கிடைத்த மரத்தடியில், பள்ளிக்கூட வளாகங்களில் படுத்து ஓய்வெடுத்து விட்டு மீண்டும் தேர்தல் பணிக்காக அலைந்த அவரது தமிழ்த் தேசிய உணர்வு விவரிக்க முடியாத மாபெரும் கடல். கொடியேற்றும்போதெல்லாம் “தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மே*த*கு வாழ்க” என உணர்வெழுச்சியோடு அவர் முழுக்கமிடுவதை பார்க்கும் போது அரசியல் களத்தில் இயல்பாக நம்மைச் சூழும் சலிப்பு, இயலாமை, குறைகள், தான்மை போன்ற சகலவிதமான எதிர்மறை உணர்ச்சிகளும் இல்லாமல் போகும்.

வரலாற்றின் ஏடுகளில் மட்டுமே காணத்தக்க பெரிய மருது போன்ற பெரும் மனிதர்களை எவ்வாறு உணர்ந்தும்,அறிந்தும் கொள்வது என்றால்… அது மருத்துவர் ஐயா பாரதிச்செல்வன் போன்றவர்களை பார்க்கும்போதுதான். அந்த வகையில் அவரும் வரலாற்றின் நிழல்தான்.

A/5 – இடிந்த அரண்மனையும் , தொலைந்த இளவரசனும்..

🟥

காலம் ஒரு வெறி கொண்ட மிருகம். உன்மத்த வெறியோடு காலம் ஓடும் ஓட்டத்திற்கு பலியாகாதவர்கள் யாரும் இல்லை‌. குறிப்பாக மனித நினைவுகள் மீது காலம் நிகழ்த்தும் வன்முறை போல வேறு எதுவும் கொடுமை இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்த மருத்துவர் அண்ணன் சித்தார்த்தனோடு மூணாறு சென்றிருந்தபோது நினைவுத் தவறிய ஒரு பெரியவரை சந்தித்தோம். ஒரு மலைப்பாறையில் அமர்ந்து கொண்டு சதா முணுமுணுத்துக் கொண்டு இருந்த அவர் 1970 களை விட்டு தாண்டவே இல்லை எனவும், சொல்லப்போனால் அவரது நினைவுகள் காலத்தின் விசித்திர புள்ளி ஒன்றில் தேங்கி விட்டன என்றும் அவரது மகள் மூலம் தெரிந்துக் கொண்டோம். அவரது மகள் முகச்சாடையில் இருந்த தன்னுடைய பேத்தியை அவர் மகளாக நினைத்து பேசுவதையும் நேரில் பார்த்தோம். அவரைப் பொறுத்தவரையில் காலம் உறைந்துப் போன ஒரு பனிக்கட்டியாக இறுகி விட்டது. கூட இருந்த அண்ணன் சித்தார்த்தன் “அவரவருக்கு பிடித்த காலத்தில் அப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” என என்னிடம் கேட்டபோது என்னிடத்தில் அப்போது பதில் இல்லை.

உண்மைதானே. எல்லோருக்கும் பிடித்தமான காலம் என்ற ஒன்று மனதோரம் ஒரு சுழலும் இசைத் தட்டு போல இசைந்துக் கொண்டே இருக்கிறது. சமகாலத்தில் எப்போதெல்லாம் காயங்களால் கீறப்பட்டு உலர்ந்து விடுகிறோமோ, அப்போதெல்லாம் நாம் வாழ்வதற்கான ஈரத்தை அங்கிருந்து தானே எடுத்துக் கொள்கிறோம்..!

யாரையும் காலம் விட்டு வைப்பதில்லை.காலம் என்ற கருணையற்ற மிருகம் பிடித்தமான காலத்திலிருந்து நம்மைப் பிய்த்து எறிகிறது. எங்கோ இடம் பொருள் ஏவல் தெரியாமல் தூக்கிப் போடுகிறது. வன்முறையாய் நமது மீது காலம் நிகழ்த்தும் நகர்வுகளால் “பிடித்த காலம்” என்பது ஒரு நினைவு போல மாறிப் போய் அந்த நினைவுகளும் கூட மறதியின் தூரிகையால் மங்கலாக்கப்பட்டு விடுகின்றன.

“மூன்றாம் பிறை” திரைப்படத்தில் நினைவுப் பிசகும் கதாநாயகி அவளது சிறு வயதிற்கு சென்று விடுவாள். சிறுவயதில் தலையில் நிறைய முடி இருந்த தந்தை முகம் தான் அவளது நினைவேட்டில் பதிந்திருக்கும். தன்னை கண்டுபிடித்து வந்து நிற்கும் நிகழ்காலத் தந்தை அவளுக்கு யார் என்றே தெரியாது. அவளைப் பொறுத்த வரையில் காலம் நகரவே இல்லை.

அப்படியே அதற்கு எதிர்மறையாக “ஒரு கல்லூரியின் கதை” என்ற திரைப்படத்தில் நினைவுப் பிசகும் கதாநாயகனுக்காக உடன் படித்த அனைவரும் மீண்டும் ஒரு கல்லூரி காலத்தை உருவாக்கி அவனுக்கு முன்னால் ஒரு காலத்தை பின்னால் நகர்த்தி மீண்டும் நிகழ்த்தி காட்டுவார்கள்.

காலத்தின் கொடிய விதி எது தெரியுமா…நம்மைக் கடக்கும் காலத்தின் சிறு துளியைக் கூட நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. கால எந்திரங்கள் என்கிற திரைப்படங்களின் வசீகர கற்பனைகள் ஒருவேளை சாத்தியப்பட்டால் யாருமே நிகழ்காலத்தில் இருக்க விரும்ப மாட்டார்கள்.

என் வாழ்வின் ஏறக்குறைய 25 வருடங்கள் வாழ்ந்த மன்னார்குடிக்கு சென்றிருந்தபோது நான் பள்ளி முடித்து என் வீட்டிற்கு திரும்பும் வீதியை பார்க்க வேண்டும் என விரும்பினேன். வீதி பெரும் மாற்றத்தைச் சந்தித்திருந்தது. நான் பார்த்த எந்த முகங்களும் இப்போது இல்லை. என்னுடைய டியூஷன் வாத்தியார் காசிநாதன் சார் வாழ்ந்திருந்த வீடு சீரமைக்கப்பட்டு வடிவம் மாற்றப்பட்டிருந்தது. புதிய கேட் மாற்றப்பட்டிருந்தது.
நிறைய புதிய கட்டிடங்கள். தெருமுனைகளில் தென்படும் கோவில்கள் மட்டும் மனித நம்பிக்கைகளின் காரணமாக இடிக்கப்படாமல் இருந்தது மனதிற்கு ஏனோ ஆறுதலாகப் பட்டது.

அதைத் தாண்டி வந்த போது , என் குடும்பத்தோடு நான் பல ஆண்டுகள் வசித்து வந்த என் வீடு அமைந்திருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் கட்டிடங்கள் முற்றிலுமாக இடிக்கப்பட்டு கற்குவியலாக இருந்ததை கண்டபோது ஒரு நொடியில் உறைந்து போனேன்.

“ஏ பிளாக் ஐந்தாம் நம்பர் வீட்டின்” (A-5) கற்கள் ஏதாவது அங்கே இருக்குமா என தேடிப் பார்க்க கூட எனக்குத் தோன்றியது.

உண்மையில் வீடு என்பது வெறும் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல. நினைவுகளின் சேகரம். கனவுகளின் தாழ்வாரம். உணர்ச்சிகளின் பத்தாயம்.

அந்த வீட்டிற்குள் எனக்கு எவ்வளவோ நடந்து இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அந்த வீட்டின் சுவர்கள் சாட்சியாக இருந்திருக்கின்றன. என் வீட்டின் பின்பக்கம் ஒரு பால்கனி இருக்கும். அதில் நான் கை வைத்து நின்று கொண்டிருக்கும் இடம் கூட இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. அந்தப் பால்கனியில் தொட்டியில் புதைத்து வளர்த்த ஒரு சிறிய மாஞ்செடியை வீட்டை காலி செய்து புறப்படும் போது தொட்டியோடு எடுத்து வந்து இப்போது நான் வசிக்கும் வீட்டில் தோட்டத்தில் புதைத்து வைத்தேன். அது பெருமரமாக நிற்கிறது. இந்த இரவில் அதுவும் சோகத்தால் விம்மி கொண்டிருக்கும் என நான் உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் கட்டிடத்தின் மொட்டைமாடி. சிவப்பு கற்கள் பாவித்த அந்த மொட்டை மாடி முழுக்க என் கனவுகள் இறைந்து கிடந்தன. புகை போக்கி கூண்டின் மீது படுத்து கொண்டு வானத்தைப் பார்த்து கிடந்த பொழுதுகளை வானம் கூட மறந்திருக்காது.

எங்கள் வீடு இருந்த அந்த வீட்டு வசதி வாரிய கட்டிடம் இடிந்து கிடந்தது கைவிடப்பட்ட ஒரு அரண்மனை சாய்ந்து கிடந்தது போல ஒரு காட்சி. உண்மையில் அந்தக் கட்டிடம் ஒரு அரண்மனை தான். அந்தக் கட்டிடத்தில் பதவிகளில் அதிகாரத்தில் வலம் வந்த அரசர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இணையாக நிறைய கதைகள் பேசிக் கொண்டு மகாராணிகள் உலவினார்கள். வேகமாக காற்றைக் கிழித்து பயணப்படும் இளவரசர்கள் இருந்தார்கள். சுற்றிலும் நறுமணம் மிதக்க நீல விழி இளவரசிகள் வெள்ளை உடை அணிந்து உலா வந்த பொழுதுகள் இருந்தன. எல்லோரும் கூடி நின்று கொண்டாடிய நிலா காலங்கள் இருந்தன. பகிர்ந்து கொள்ள உணவும் உறவும் நேசமும் இருந்தன. அந்தக் கட்டிடத்துக்குள் ஒரு அரண்மனை மட்டும் அல்ல, ஒரு சாம்ராஜ்யமும் அதற்கே உரிய கம்பீரத்தோடும் வீரத்தோடும் காதலோடும் சோகத்தோடும் இருந்தது.

ஆனால் சாம்ராஜ்யங்களை சரிப்பது தானே காலத்தின் தீரா விளையாட்டு.. காலத்திற்கும், நம் நினைவுகளுக்கும் நடக்கின்ற பகடை ஆட்டத்தில் காலம் எப்போதும் சகுனியைப் போல் வென்று விடுகிறது. எப்போதும் தோல்வியை தருகிற அந்த முடிவிலா பகடையாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தவனாய், ஒரு கட்டிட இடிபாடுகளுக்குள் ஒரு அரண்மனையைத் தேடி நிற்பது பெரும் துயரமாக இருக்கிறது.

ஏன் எல்லாவற்றையும் இழந்தேன் என்று இப்போதும் எனக்கு புரியவில்லை. இப்போது அடைந்திருப்பது அனைத்தும் அந்த இழப்பினால் தான் என்கிற சமாதானமும் எனக்கு போதவில்லை. உள்ளுக்குள் கழிவிரக்கம் ஒரு வற்றாச் சுனை போல ஊறிக் கொண்டே இருக்கிறது. துயரம் மேலேழும்பி என்னை நானே வெறுக்கும் அவலமும் நடக்கிறது.

மொத்தம் ஆறு வீடுகள் இருந்த அந்த கட்டிடத்தில் மையப் பகுதியில் ஏறி வர எட்டு படிக்கட்டுகள் ஆறு முறை அமைந்திருக்க மூன்று அடுக்குகளில் அந்தக் கட்டிடம் உயர்ந்திருக்கும். குறிப்பாக என்னுடைய தனிப்பட்ட நூலகத்துடன் கூடிய அறை இசை கேசட்டுகளால் நிரம்பி வழியும். மர செல்ஃபில் நிரம்பி வழியும் புத்தகங்கள். 90களில் புகழ்பெற்ற இஷா கோபிகர் என்கிற ஒரு நடிகை உண்டு. அவரின் புகைப்படம் மற்றும் கோபுர வாசலிலே கார்த்திக்கின் புகைப்படம், இளையராஜா ஆர்மனியத்தோடு அமர்ந்திருக்கும் புகைப்படம், மேசையில் வைக்கப்பட்டிருக்கும் பெரியாரின் புகைப்படம் , ரஷ்ய புரட்சியாளர் லெனினின் ஓவியம் என ஒரு மியூசியம் போல அந்த அறையை நான் அலங்கரித்து இருப்பேன். வடக்கு திசையில் இருக்கும் ஜன்னல் கதவு எனக்கு விசேடமானது. அதை திறக்கும் போதெல்லாம் அதன் வழியாக ஒரு ஏணியை கொண்டு வானத்தில் ஏறி விடுவேன். மனமெல்லாம் சிறகு முளைக்க வைக்கும் அந்த ஜன்னல் இன்று இல்லை என நினைக்கும் போது சிறகு தொலைத்த பறவையாய் துவள்கிறேன்.

The Shawshank Redemption (1994) என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தில் வரும் சிறை நூலகர் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தமானது. வாழும் காலம் முழுக்க சிறையில் ஒரு நூலகராக இருந்து விட்டு விடுதலையாகி வெளியே வரும்போது காலத்தின் கோர ஓட்டம் தாங்க முடியாமல் மீண்டும் சிறைக்குத் திரும்ப முயற்சிக்க, அதுவும் தோல்வி அடைந்து அவர் தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்கின்ற காட்சி இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலேயே மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. யாராலும் தனக்கு பிடித்த காலத்திற்கு திரும்ப முடியாது என்பது தானே காலத்தின் கொடும் விதி..

The Last Emperor (1987) என்கிற புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வாங்கிய திரைப்படத்தில் நாட்டில் நடந்த அரசியல் புரட்சியால் தன் அரண்மனையை இழந்த அடையாளம் இழந்த ஒரு இளவரசன், பார்வை பொருளாக மாற்றப்பட்டு விட்ட தன் அரண்மனையை தானே சுற்றி பார்க்க வரும் காட்சி மறக்க முடியாதது.

அதுபோல இடிந்துக் கிடக்கும் என் வீட்டினை கடந்த போது கண்கலங்கி விழிகளை மூடினேன். இளையராஜாவின் பின்னணி இசை இசைக்கத் தொடங்க, காலம் ஏதோ ஒரு கருணையால் ஒவ்வொரு துளியாக பின்னகர்ந்து
இடிந்த கட்டிடம் துளித்துளியாய் மேலெழும்ப, அப்படியே இடிந்தவை அனைத்தும் அந்தந்த இடத்தில் பொருந்த ஏற்கனவே குடியிருந்தவர்கள் அனைவரும் மீண்டும் அங்கே குடியிருக்க திரும்ப, அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்க நான் ஒரு மூன்றாம் பார்வையாளன் போல அந்தக் காட்சிகளை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

The Last Emperor படத்தில் வரும் தன் அரண்மனையை தானே பார்க்க வரும் இளவரசன் போல.

தனக்குப் பிடித்த அரண்மனையில் வாழ்வாங்கு வசித்தவர்கள் யாவரும் இளவரசர்கள் தானே…!

❤️

தொலைக்க முடியா புத்தகங்கள்.

❤️

புத்தகங்கள் தரும் போதை போல் வேறு எதுவும் போதை தருவதில்லை. வாழ்வின் கிளர்ச்சியான மது புத்தகப் பக்கங்களில் தான் ஒளிந்து இருக்கிறது. வாங்குகின்ற எல்லா புத்தகங்களையும் படிக்கிறோமோ இல்லையோ புத்தகங்களுக்கு நடுவில் வாழ்வது என்பது பேரின்பத் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்களை வாங்குகிறோம். சில சமயம் நம் சேமிப்பில் உள்ள நாம் படிக்காமல் விட்ட புத்தகத்தை கூட மறதியாய் மீண்டும் வாங்கி வந்து விடுகிறோம். ஆனாலும் அதையும் வைத்து இது வேறு பதிப்பு, இது வேறு புத்தகம் என்று சமாதானம் ஆகிக்கொள்கிறோம்.

புத்தகங்களை யாராவது இரவல் கேட்டால் நான் பதட்டம் ஆகி விடுவேன். அந்த சூழ்நிலையை எப்படிக் கடப்பது என தவிப்பேன். ஏனெனில் இரவல் கொடுத்து நிறைய நல்ல புத்தகங்களை நான் இழந்திருக்கிறேன். அதே சமயத்தில் இரவல் வாங்கி வந்து சில நல்ல புத்தகங்களை அடைந்திருக்கிறேன்.

இன்னொன்று.. இரவல் கொடுத்து நல்லப் புத்தகங்களை இழப்பது என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஒருமுறை தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அவர்களிடம் நக்சல் பாரிகளை பற்றிய “ரெட்சன்” என்கின்ற புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். நீண்ட காலம் அவரிடம் திருப்பிக் கேட்க நானும் மறந்து விட்டேன். பிறகு அவரும் கட்சியில் இருந்து விலகி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். இப்போது அவரிடம் போய் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்கின்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. மேலும் அவரும் எனக்கு “பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு” நூலை இரவலாக கொடுத்திருந்தார். இதற்கும்,அதற்கும் சரியாகிவிட்டது எனது சமாதானப்படுத்திக் கொண்டாலும், “ரெட் சன்” என்ற அந்தப் புத்தகம் இல்லாத எனது நூலக அறை ஏதோ குறைபாட்டுடன் இருப்பதாக எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

சென்ற வருடம் புத்தக கண்காட்சியில் மீண்டும் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி என் அலமாரியில் வைத்த பிறகு தான் என் தவிப்பு தணிந்தது. புகழ் பெற்றவர்களின் புத்தக சேமிப்புகளை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அண்ணல் அம்பேத்கரின் புத்தக சேமிப்பு மிக புகழ் பெற்றது. ஜவர்கலால் நேரு முக்கியமான புத்தகங்களை பெரிய மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்து பாதுகாத்ததாக சொல்வார்கள். உலகத்தின் மிக முக்கியமான புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை இப்போது படிப்பில் கூட இல்லாத அபூர்வ புத்தகங்களை எழுத்தாளர் கோணங்கி மிக கவனமாக சேகரித்து பாதுகாத்து வருகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அண்ணன் சீமான் வீட்டு நூலகத்திலும் இது போன்ற பல முக்கியமான அபூர்வமான பதிப்பில் கூட இல்லாத புத்தகப் பொக்கிஷங்களை நான் கண்டேன்.

அறை முழுக்க நிரம்பி வழியும் புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் நேரங்களில் ராஜ தர்பாரில் ஒரு பேரரசனாய் அமர்ந்திருப்பது போல உணர்வு. சங்க காலப் புலவர்கள் தொடங்கி தற்கால எழுத்தாளர்கள் வரைக்குமான பலரும் நம் வீட்டு ராஜ அவையில் நம் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்பதும், உலக வரைபடத்தில் நம் காணாத நிலங்களை எல்லாம் ஒளிப்படரும் புத்தகப் பக்கங்களின் மூலமாக நீளும் கற்பனை விரல்களால் நம்மால் தொட முடிகிறது என்பதும், எல்லாவற்றையும் தாண்டி புத்தகங்கள் கால எந்திரங்களை விட கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் வேகமாக பயணிப்பவை என்பதும் எவ்வளவு சுவாரசியமானது..???

ஒவ்வொரு புத்தகத்திற்கும் நமக்குமான உறவு வெகு அந்தரங்கமானது. ரகசிய காதலி தரும் கிளர்ச்சியை விட மேலானது. ஒவ்வொரு புத்தகத்திற்கு பின்னாலும் அது தந்த அனுபவங்களை சார்ந்து விவரிக்கப்பட வேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. வாசகர் ஒருவரிடம் இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் வாங்கப் போன எஸ். ராமகிருஷ்ணனின் அனுபவத்தை அவர் மிக அற்புதமாக “துணையெழுத்து” என்ற அவரது புத்தகத்தில் எழுதி இருப்பார்.

ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த, சொல்லப்போனால் மெல்லிய காதலும் பூத்திருந்த, ஒரு பெண்ணிடம் அந்தக் காலத்தில் நான் உருகி உருகிப் படித்த ப்யோதர் தாஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். பிறகு வீடு மாறுதல் அடைந்த கால ஓட்டத்தில் அந்த நேசிப்பு தொலைந்து போய், அந்தப் பெண்ணோடு சுத்தமாக எவ்வித தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. புதையல் போன்ற அற்புதமான புத்தகத்தை இரவல் கொடுத்து தொலைத்து விட்டோமே என்று பலமுறை சிந்தித்து எனக்குள்ளேயே குமைந்திருக்கிறேன்.

இப்போது எல்லா இடங்களிலும் அந்த புத்தகம் கிடைத்தாலும் நான் இரவல் கொடுத்த புத்தகம் இப்போது கிடைப்பதில்லை. அது சோவியத் ரஷ்யாவின் “ராதுகா பதிப்பகம்” வெளியிட்ட செவ்விலக்கிய பதிப்பு. தாள்கள் அப்படி பிரமாதமாக இருக்கும். கனமான அட்டையில் பைண்ட் செய்யப்பட்டு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கட்டிடங்கள் பொன்னிற ஓவியமாய் அட்டை முகப்பில் வரையப்பட்டிருக்கும். அந்த கதையோடு தாஸ்தாவெஸ்கியின் மேலும் இரண்டு கதைகளும் அந்த நூலில் உண்டு. அப்படிப்பட்ட அபூர்வமான புத்தகத்தை நாம் மீண்டும் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பில்லாத ஒருவரிடம் இழந்து விட்டோமே என்கிற வலி எனக்கு எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு தேடலில் முகநூல் கணக்கில் அந்தப் பெண்ணை சரியாக கண்டுபிடித்து விட்டேன் . அவளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தன. குடும்பத்தோடு பண்டிகை கொண்டாடுவது போல சில புகைப்படங்களை முகநூலில் அவள் பதிவிட்டிருந்ததை கண்டேன். எனக்குள் எவ்விதமான உணர்ச்சி அலையும் அந்த நொடியில் பொங்கவில்லை என்பது எனக்கே வேதனையாக இருந்தது. அவளிடம் ஒரு காலத்தில் கொடுத்த புத்தகத்தை மீண்டும் கேட்கலாமா என வெகு நேரம் யோசித்தேன். அவளும் தொலைத்திருந்தால் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்து விட்டு இறுதியாக அவளுக்கு மெசேஞ்சரில் ஒரு சிறிய செய்தி ஒன்றை அனுப்பினேன்.

“வணக்கம். என்னுடைய வெண்ணிற இரவுகள் புத்தகம் உங்களிடத்தில் இருக்கிறது. அதைத் தர முடியுமா..”

என்று கேட்டிருந்தேன் ‌.

அவள் அடிக்கடி முகநூல் பக்கம் வராதவள் போல. என் செய்தியை அவள் பார்க்கவே இல்லை. நான் தினந்தோறும் மெசேஞ்ஜரை திறந்து பார்த்துவிட்டு ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் திடீரென்று ” யூவர் அட்ரஸ் ப்ளீஸ்..” என அவளிடம் இருந்து ஒரு செய்தி.

நானும் என் முகவரி அனுப்ப, அடுத்த மூன்று நாட்களில் எனக்கு கொரியர்.
ஆவலுடன் பிரித்துப் பார்த்த போது அதே புத்தகம். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. எங்கோ தொலைந்து போன என் காதலி எனக்கு மீண்டும் கிடைத்து விட்டது போன்ற பெரு மகிழ்ச்சி. அட்டைப் போட்டு பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்திருக்கிறாள்.

புத்தகத்தை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அட்டையின் உட்புறத்தில் சிவப்பு வண்ண பென்சிலால் வரையப்பட்ட ஒரு சிவப்பு இதயம். அதன் கீழே நான் இரவல் கொடுத்த தேதியை குறித்து வைத்திருந்தாள்.

முதன்முறையாக இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து லேசாக வலித்தது.

அதற்குப் பிறகு அவளும் முகநூல் கணக்கில் இல்லை.

❤️

காலம் உணர்த்தும் கணக்குகள்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திமுகவை தவிர அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில்.. திமுகவின் ஐடி விங் புத்திசாலித்தனமாக(?) வேலை பார்க்கிறோம் என்ற பெயரில் ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி திமுகவின் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, இவர்களின் எஜமானர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அண்ணன் மகன் பேச்சைக் கேட்டு அப்பிரண்டிசுகளை வேலைக்கு வைத்த பெயிண்டர் நேசமணி கதையாகி கந்தலாகிவிட்டது திமுக.

வரலாற்றில் அம்பேத்கரியம் எதிர் திராவிடம் என்கின்ற நிலை புதிதானதல்ல. ஏற்கனவே தாய் மண் இதழிலும், நிறப்பிரிகை இதழிலும் விடுதலை சிறுத்தைகளின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் திராவிடத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் முன்வைத்த கூர்மையான விமர்சனங்கள் 90 களின் இறுதியில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தின.அம்பேத்கரியத்தை, அவர் முன்வைத்த பௌத்தத்தை முழுமையாகப் பின்பற்றும் இளைஞர்களுக்கு பெரியார் ஒருபோதும் ஆதர்சம் அல்ல. குறிப்பாக திமுகவின் பண்ணையார்தனமான சந்தர்ப்பவாத உயர் சாதி இந்து அரசியல் அம்பேத்கரிய இளைஞர்களுக்கு உவப்பானதும் அல்ல. அரசியல் சமரசங்கள் மிகுந்த விடுதலை சிறுத்தைகள்- திமுக உறவு கொள்கைவாத அம்பேத்கரிய இளைஞர்களால் விரும்பக் கூடியதும் அல்ல. அவர்களைத் தான் ஆர்ம்ஸ்ட்ராங் இயக்குனர் ரஞ்சித் போன்றவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். காலங் காலமாய் திமுக தாழ்த்தப்பட்டோரை ஒரு வாக்கு வங்கியாக பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்து “இதுவெல்லாம் நாங்கள் போட்ட பிச்சை” முதலாளிப் பேச்சு பேசுவதை படித்த அம்பேத்கரிய இளைஞர்கள் வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பில் தான் உயர் சாதி மேட்டிமை மனோபாவம் கொண்ட திராவிட அரசியல்வாதிகளிடம் அடிமைகளாய் இருப்பதை விட, தனது சண்டைக்காரனாக இருந்தாலும், சக மனிதனாக இருக்கிற வன்னியர்களிடம் சமரசமாக போய்விடலாம் என எண்ணி ஆர்ம்ஸ்ட்ராங் போன்றவர்கள் ஒற்றுமை குறித்தெல்லாம் பேசினார்கள்.

அதை நுட்பமாக உணர்ந்த திமுக ஐடி விங் இப்போது படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பற்றி அவதூறுகள் பரப்புவதையும், படுகொலை பற்றி கேள்வி எழுப்புகின்ற இயக்குனர் ரஞ்சித்தை வசவுகள் பாடுவதையும் தீவிரமாக செய்கிறார்கள். தங்கள் கட்சியை /ஆட்சியைப் பற்றி யாரும் எந்தப் பிரச்சனையிலும் எதிர்த்து பேசி விடக்கூடாது, விமர்சனங்கள் செய்து விடக் கூடாது என்பதில்
மூர்க்கமாக இருக்கும் திமுகவின் ஐடி விங் ஒன்று போதும். திமுகவின் சரிவிற்கு.

அரசியலில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாத முக்கிய பகுதி. ஆம்ஸ்ட்ராங்கிற்கு அவரது இடத்தில் ஏன் சமாதி வைக்க அனுமதி மறுக்கிறீர்கள் எனக் கேட்டால் உரிய காரணங்களோடு விதிகளோ சட்டங்களோ ஏதேனும் இருந்தால் அதன் அடிப்படையில் பதில் சொல்ல அறிவு வேண்டும். ஆம்ஸ்ட்ராங் யார் தெரியுமா என்று அவதூறு பரப்ப ஆரம்பித்தால்.. கருணாநிதிக்கு எப்படி மெரினா கடற்கரையில் கல்லறை என்று எல்லோரும் பேச தொடங்குவார்கள். அப்படித்தான் சமூக வலைதளங்களில் நிறைய விவாதங்கள் கிளம்பின.
சொந்தக் கூரையின் மீதே கொள்ளி வைக்கிற கூட்டமாக திமுக ஐடி விங் மாறி இருக்கிறது . கூடுதலாக திமுகவிற்கு ‘காரண காரியத்தோடு’ அதிகம் சொம்படித்த பலருக்குதான் இதில் தர்ம சங்கடம். இந்த சமயத்தில் திருமுருகன் காந்தி போன்றோர் ” திமுக ஐடி விங்” பதிவுகளை “ஒரு சிலரது” எனக் குறுக்கிக் கட்டி சமாதானப்படுத்த முயல்வது பரிதாப நகைச்சுவை.

திமுக தன் ஆட்சி காலத்தில் தனக்கான ஆதரவாளர்களை இழந்துக் கொண்டே போவதும், அதை தீவிரமாக ஆதரித்த பலருக்கும் தர்ம சங்கடத்தை எல்லாம் தாண்டி இப்போது கடும் நெருக்கடிகள் ஏற்படுவதும் நீண்ட காலமாக அரசியல் களங்களில் திமுகவைப் பற்றி காலம் காலமாக எச்சரித்து வரும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்னும் காலம் நிறைய உணர்த்தும் தோழர்களே..

நாங்கள் காத்திருக்கிறோம்.

🌑

மணி செந்தில்.
www.manisenthil.com

வெயிலைப் போர்த்தியவன்.

🟥

வாழ்வின் அலைகழிப்பெல்லாம் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

எங்கெங்கோ ஓடி ஓடி ஒளிவதும் களைப்படைந்து மூச்சிரைக்க சாய்வதும் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

அது ஒரு பாவனை.

எதையோ மறக்க.. மறக்க முடியாமல் இறக்க.. செல்லும் நடைபாதையில் தானே தன்னையே தொலைக்கும் தோற்றம்.

வாழ்வின் கொடூர விதி என்ன தெரியுமா..

நாம் யாரை எவ்வளவு நேசிக்கிறோமோ… அதன் அளவு நாம் நேசிக்கிறவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத அளவில் இருப்பது தான்.

இறுதி வரை அது ஒரு மாய விளையாட்டு.

சுவற்றில் வீசப்பட்டும் திரும்பி வராத ரப்பர் பந்து.

மழை நீரில் நனைந்து முழுகி போகும் காகிதக் கப்பல்.

எழுதப்படாத கவிதையை சுமக்கும் வெற்றுத்தாள்.

🟥

இடதுசாரி இயக்கங்களில் பயணித்த போது கட்சி அலுவலகத்திலேயே சதா நேரம் உண்டு உறங்கி வாழ்ந்து வந்த வயது முதிர்ந்த தோழர் ஒருவரை ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது. கட்சி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் தொடங்கி, வருகின்றவர்களுக்கு பதில் சொல்வதில் இருந்து, தண்ணீர் பிடிப்பது, விருந்தினர்களுக்கு டீ வாங்கி வருவது என அனைத்தும் அந்த முதிய தோழர் தான்.

இத்தனைக்கும் அவருக்கு ஒரு குடும்பம் இருந்ததை நான் அறிவேன். வார இறுதி நாட்களில் அவரை மாலை நேரங்களில் சந்தித்து விட்டு செல்லும் அவரது மகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோரின் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவர் வீட்டுக்கு செல்வதில்லை. சொந்தமாக வீடு இருந்தது என்று கூட சொன்னார்கள். மகன் அரசு வேலையில் இருந்ததாகவும் இவரை அன்பாக பார்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும் சொன்னார்கள். ஆனாலும் அவர் கட்சி அலுவலகத்திலேயே இருந்தார். அது ஒரு வகையான மூர்க்கம். கட்சி அலுவலகத்தின் இரவு நேர தனிமை அவருக்கு வேண்டியதாக இருந்தது. அன்பும் நெருக்கமும் இல்லாத மேலோட்டமான உறவு நிலை அவருக்கு ஆறுதலாக இருந்தது. இதையெல்லாம் கவனித்த நான் ஒரு நாள் அவரிடம் பேச தொடங்கினேன்.

தோழர்..

சொல்லுங்க தோழர்.. தாமரை வந்திருக்கு படிச்சிட்டீங்களா..

தோழர்..உங்ககிட்ட தான் பேசணும்..

என்கிட்ட பேச ஒன்னும் இல்லையே.. என இறுகத் தொடங்கினார்.

ஏன் தோழர் வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கீங்க.. என கேட்ட என்னிடம், டீ சாப்பிடுறீங்களா.. என பேச்சை மாற்று நோக்கில் மேலோட்டமாக கேட்டார்‌.

நான் நின்று நிதானித்து “சேர்ந்து டீ சாப்பிட போவோமா.. ” என்ற எனது கேள்வியில் லேசாக தோழர் பதட்டமானார்.

இல்லை.. நீங்கள் இருங்கள்.. நான் போய் டீ வாங்கி வருகிறேன் என்றார்.

சேர்ந்தே போவோமே.. என சொன்னதற்கு அவர் சட்டென என்னை பார்த்து.. ” தொல்லை செய்யாதீர்கள் தோழர்..!  போய் வாருங்கள்..” என சொன்னார் ‌.

அதிலிருந்து அவர் என்னிடம்  பேசுவதில்லை. என் முகத்தை பார்ப்பதையே தவிர்த்தார்.

எனது நெருக்கம் அவருக்கு தொந்தரவாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். ஆனாலும் அதற்கு என்ன காரணம் என என் மனம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

பிறகு இதைப் பற்றி அவர் வயது கொண்ட இன்னொரு தோழரிடம் கேட்டபோது..

“அவன் அப்படித்தான். மனைவிகிட்டயும் இப்படித்தான் இருந்திருக்கிறான். அந்த அம்மாவும் புலம்பிக்கொண்டே போய் சேர்ந்துடுச்சு. யாரிடமும் அவன் அன்பா இருக்க முடியாது. கனிவா பேசிட முடியாது. யாராவது கனிவா பேசினா அவனுக்கு பயம் வந்துரும். தன் மீது யாரும் அன்பு பாராட்ட கூடாது என்பதில் அவன் ரொம்ப தீவிரமா இருப்பான். சின்ன வயசுல அவன் ஒரு பொண்ண விரும்பி இருக்கிறான். அந்தப் பொண்ணும் இவன தீவிரமா விரும்பி இருக்கு. இது வீட்டுக்கு தெரிஞ்சுப் போய் தகராறு ஆன உடனே கூப்பிட்டு வச்சு கேட்டதற்கு அந்த பொண்ணு சும்மா தான் பேசினேன் இவர் தப்பா நினைச்சுக்கிட்டாரு.. என சொல்ல அன்னிக்கு வெறுப்ப குடிக்க ஆரம்பித்தவன் தான். ஆயுசு முழுமைக்கும் யாரிடமும் ஒட்ட முடியாமல் வெயில் போல தகிச்சிகிட்டே இருக்கான். எண்ணெயில மிதக்கிற தண்ணி போல ஒட்டாம உலகத்தோட விலகி நிக்கிறான்”

கடைசியா கட்சியை விட்டு விலகும் போது அவரிடம் சொல்லிக் கொள்ள சென்ற போது அவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.

வெளியே வெயில் தகித்துக் கொண்டிருந்தது.

அவருக்கு உள்ளேயும்.

🟥

எனது அணுக்க நண்பர் Suresh Kamatchi தயாரிப்பில், இயக்குனர் ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கிற “ஏழு கடல் ஏழுமலை” திரைப்படத்தின் சந்தோஷ் நாராயணன் குரலில், மதன் கார்க்கி வரிகளில், இப்பாடலை கேட்டபோது ஏனோ மனித வாழ்வின் அலைகழிப்பைப் பற்றியும், அந்தத் தோழரை பற்றியும் உள்ளுக்குள் நினைவுகள் சுரந்துக் கொண்டே இருந்தன.

நல்ல படைப்பின் நோக்கம் அதுதானே…

உள்ளுக்குள் ஏதோ ஒன்றே செய்ய வேண்டும்.

இந்தப் பாடல் செய்கிறது. கேளுங்கள்.

❤️

அம்பேத்கரின் ராஜினாமா.

அம்பேத்கரின் ராஜினாமா.

அண்ணல் அம்பேத்கரைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோடி சில கருத்துக்களை பேசியிருந்ததை கண்டோம். குறிப்பாக அம்பேத்கர் அவர்களின் ராஜினாமா.

பிரதமர் மோடி ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போதே நாம் கவனமாகி விட வேண்டும். ஏனெனில் அதில் பொய்யும் வரலாற்று திரிபுகளும் கலந்து அக்கருத்தை உண்மை என நிறுவி விடுகிற மோடியின் துடிப்பு மிக ஆபத்தானது.

குறிப்பாக மோடி வழியாக இந்துத்துவ இயக்கங்கள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். திருவள்ளுவருக்கு பட்டை பூசி காவி உடை மாட்டியதில் தொடங்கி வள்ளலாரை இந்து மத சின்னங்களோடு அடையாளப்படுத்துவதில் வரையிலான அடையாளச் சிக்கல்களை அண்ணல் அம்பேத்கருக்கும் ஏற்படுத்தும் இந்துத்துவ சதிகளில் தமிழர்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தின் எதிரியாக தன்னை நிறுவிக் கொண்டவர். தன் வாழ்நாள் முழுக்க சனாதன தர்மத்திற்கு எதிராக ஒரு மாபெரும் போரை நிகழ்த்தியவர். இந்து மதத்தின் ஆன்மாவாக கருதப்படும் மனுதர்மத்தை எரித்தவர். நான் ஒரு இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என கம்பீரமாக முழங்கி அதன்படியே பௌத்தத்தை தழுவியவர்.

காங்கிரசை அம்பேத்கர் எதிர்த்தார். ஏனெனில் காங்கிரஸ் உயர்சாதி இந்துக்களுக்கான கட்சியாக இருந்தது. முதன் முதலாக மும்பையில் அண்ணல் அம்பேத்கர் காந்தியடிகளை சந்தித்தபோது இந்த நாட்டில் வாழ்கின்ற தீண்டப்படாத மக்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க காங்கிரஸ் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறது என கூற அதனால் என்ன பயன் என மறு கேள்வி கேட்டு காந்தியை திணறடித்தார் அண்ணல் அம்பேத்கர். இந்து முஸ்லிம் பிரச்சனையை விட தீண்டாமை ஒழிப்பு தான் தனக்கு முக்கியம் என அம்பேத்கரிடம் ஒத்துக் கொண்ட காந்தியை அம்பேத்கர் என்றுமே நம்பியதில்லை. இவ்வாறாக காங்கிரஸ் மீதான எதிர்ப்பு நிலையை அம்பேத்கர் எடுத்திருந்தார். அது முழுக்க முழுக்க இந்து சனாதன தத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு.

காந்தியடிகளின் சனாதன ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க பேராற்றலாக நின்றார். காந்தியடிகள் இந்திய பெரு நிலத்தின் அறிவிக்கப்படாத மன்னர். எல்லோராலும் வாழும் காலத்திலேயே வழங்கப்பட்ட மனிதப் புனிதர். ஆனால் அண்ணல் அம்பேத்கர் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான புரட்சியாளர். இருவரும் வரலாற்றில் எதிர் எதிர் புள்ளிகளாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மிகுமதிப்பு கொண்டிருந்தார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் அமைச்சரவை உருவாகும் காலத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தன் அமைச்சரவையில் இணைக்க நேரு எடுத்த முடிவை காந்தி மனதார பாராட்டினர்.

முஸ்லிம் லீக் உதவினால் இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்ற அண்ணல் அம்பேத்கர் அந்த குழுவில் இடம் பெற்ற அனைவரையும் விட கடுமையாக உழைத்தார். உலக அரசியலமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களை இந்திய அரசியலமைப்பில் கொண்டு வர வேண்டும் என விரும்பினார். சமூகத்தின் எல்லாருக்குமான உரிமைகளை காக்கின்ற அரசமைப்பாக அது திகழ வேண்டும் என விரும்பி அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என கனவு கண்டார்.

சட்ட அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏற்கனவே இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி புதிய இந்துமத சட்டத்தினை இயற்றிட அண்ணல் அம்பேத்கர் முயன்றார். ஏற்கனவே இருந்த இந்து மத சட்டத்தின்படி விதவை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடையாது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல்வேறு பிற்போக்கு தனங்களோடு இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக புதிய இந்து மத சட்டத்தினை அண்ணல் அம்பேத்கர் இயற்ற தொடங்கினார்.

அப்போது தான் திருமணம் செய்ய நினைத்த டாக்டர் கபீர் என்று அழைக்கப்பட்ட சவீதா அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கூட புதிய இந்து மத சட்ட தொகுப்பை எழுதி வருகிற செய்தியை குறிப்பிடுகிறார். தான் திருமணம் செய்து கொள்ள ஏற்படும் காலதாமதத்தை பற்றி தன் வருங்கால இணையரான, பிராமண சாதியை சேர்ந்த சவிதாவிற்கு கடிதங்கள் எழுதும் அம்பேத்கர் தற்போது இருக்கின்ற இந்து மத சட்டத்தின்படி தனது திருமணம் அங்கீகரிக்கப்படாது என்றும் புதிய இந்து மத சட்டம் விரைவில் ஏற்றப்பட்டவுடன் தனது சாதி மறுப்பு திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு விடும் என்றும் அந்த கடிதங்களில் குறிப்பிடுகிறார். இல்லையேல் சிறப்பு திருமண சட்டத்தின் படி தான் திருமணம் செய்ய வேண்டி இருக்கும் எனவும் குறைபட்டு கொள்கிறார்.

அப்படி அவர் இரவு பகலாக உழைத்து பாடுபட்டு உருவாக்கிய புதிய இந்து மத சட்டத் தொகுப்பினை பாராளுமன்றத்தில் அவரால் சட்டமாக்க முடியவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட முற்போக்கு கருத்துக்கள் அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்து மத சனாதன ஆதரவாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. நாத்திகரான நேரு இதில் நடுநிலைமை வகுத்ததை அண்ணல் அம்பேத்கர் விரும்பவில்லை. தனது தனிப்பட்ட தோல்வியாக இதை உணர்ந்த அண்ணல் அம்பேத்கர் இனியும் சட்ட அமைச்சர் பதவியில் இருப்பது பலனில்லை என உணர்ந்து தன் பதவியை 1951இல் ராஜினாமா செய்தார்.

இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு கூட இந்து மத சனாதன எதிர்ப்புணர்ச்சியின் மாபெரும் விளைவாகத்தான் ஏற்பட்டது என்பதை மோடி மறைத்து காங்கிரசுக்கும் அம்பேத்காருக்கும் பொத்தம் பொதுவாக சண்டை என காட்டுவது மோடியின் மோசடி வித்தை.

Powered by WordPress & Theme by Anders Norén