படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திமுகவை தவிர அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில்.. திமுகவின் ஐடி விங் புத்திசாலித்தனமாக(?) வேலை பார்க்கிறோம் என்ற பெயரில் ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி திமுகவின் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, இவர்களின் எஜமானர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அண்ணன் மகன் பேச்சைக் கேட்டு அப்பிரண்டிசுகளை வேலைக்கு வைத்த பெயிண்டர் நேசமணி கதையாகி கந்தலாகிவிட்டது திமுக.

வரலாற்றில் அம்பேத்கரியம் எதிர் திராவிடம் என்கின்ற நிலை புதிதானதல்ல. ஏற்கனவே தாய் மண் இதழிலும், நிறப்பிரிகை இதழிலும் விடுதலை சிறுத்தைகளின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் திராவிடத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் முன்வைத்த கூர்மையான விமர்சனங்கள் 90 களின் இறுதியில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தின.அம்பேத்கரியத்தை, அவர் முன்வைத்த பௌத்தத்தை முழுமையாகப் பின்பற்றும் இளைஞர்களுக்கு பெரியார் ஒருபோதும் ஆதர்சம் அல்ல. குறிப்பாக திமுகவின் பண்ணையார்தனமான சந்தர்ப்பவாத உயர் சாதி இந்து அரசியல் அம்பேத்கரிய இளைஞர்களுக்கு உவப்பானதும் அல்ல. அரசியல் சமரசங்கள் மிகுந்த விடுதலை சிறுத்தைகள்- திமுக உறவு கொள்கைவாத அம்பேத்கரிய இளைஞர்களால் விரும்பக் கூடியதும் அல்ல. அவர்களைத் தான் ஆர்ம்ஸ்ட்ராங் இயக்குனர் ரஞ்சித் போன்றவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். காலங் காலமாய் திமுக தாழ்த்தப்பட்டோரை ஒரு வாக்கு வங்கியாக பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்து “இதுவெல்லாம் நாங்கள் போட்ட பிச்சை” முதலாளிப் பேச்சு பேசுவதை படித்த அம்பேத்கரிய இளைஞர்கள் வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பில் தான் உயர் சாதி மேட்டிமை மனோபாவம் கொண்ட திராவிட அரசியல்வாதிகளிடம் அடிமைகளாய் இருப்பதை விட, தனது சண்டைக்காரனாக இருந்தாலும், சக மனிதனாக இருக்கிற வன்னியர்களிடம் சமரசமாக போய்விடலாம் என எண்ணி ஆர்ம்ஸ்ட்ராங் போன்றவர்கள் ஒற்றுமை குறித்தெல்லாம் பேசினார்கள்.

அதை நுட்பமாக உணர்ந்த திமுக ஐடி விங் இப்போது படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பற்றி அவதூறுகள் பரப்புவதையும், படுகொலை பற்றி கேள்வி எழுப்புகின்ற இயக்குனர் ரஞ்சித்தை வசவுகள் பாடுவதையும் தீவிரமாக செய்கிறார்கள். தங்கள் கட்சியை /ஆட்சியைப் பற்றி யாரும் எந்தப் பிரச்சனையிலும் எதிர்த்து பேசி விடக்கூடாது, விமர்சனங்கள் செய்து விடக் கூடாது என்பதில்
மூர்க்கமாக இருக்கும் திமுகவின் ஐடி விங் ஒன்று போதும். திமுகவின் சரிவிற்கு.

அரசியலில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாத முக்கிய பகுதி. ஆம்ஸ்ட்ராங்கிற்கு அவரது இடத்தில் ஏன் சமாதி வைக்க அனுமதி மறுக்கிறீர்கள் எனக் கேட்டால் உரிய காரணங்களோடு விதிகளோ சட்டங்களோ ஏதேனும் இருந்தால் அதன் அடிப்படையில் பதில் சொல்ல அறிவு வேண்டும். ஆம்ஸ்ட்ராங் யார் தெரியுமா என்று அவதூறு பரப்ப ஆரம்பித்தால்.. கருணாநிதிக்கு எப்படி மெரினா கடற்கரையில் கல்லறை என்று எல்லோரும் பேச தொடங்குவார்கள். அப்படித்தான் சமூக வலைதளங்களில் நிறைய விவாதங்கள் கிளம்பின.
சொந்தக் கூரையின் மீதே கொள்ளி வைக்கிற கூட்டமாக திமுக ஐடி விங் மாறி இருக்கிறது . கூடுதலாக திமுகவிற்கு ‘காரண காரியத்தோடு’ அதிகம் சொம்படித்த பலருக்குதான் இதில் தர்ம சங்கடம். இந்த சமயத்தில் திருமுருகன் காந்தி போன்றோர் ” திமுக ஐடி விங்” பதிவுகளை “ஒரு சிலரது” எனக் குறுக்கிக் கட்டி சமாதானப்படுத்த முயல்வது பரிதாப நகைச்சுவை.

திமுக தன் ஆட்சி காலத்தில் தனக்கான ஆதரவாளர்களை இழந்துக் கொண்டே போவதும், அதை தீவிரமாக ஆதரித்த பலருக்கும் தர்ம சங்கடத்தை எல்லாம் தாண்டி இப்போது கடும் நெருக்கடிகள் ஏற்படுவதும் நீண்ட காலமாக அரசியல் களங்களில் திமுகவைப் பற்றி காலம் காலமாக எச்சரித்து வரும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்னும் காலம் நிறைய உணர்த்தும் தோழர்களே..

நாங்கள் காத்திருக்கிறோம்.

🌑

மணி செந்தில்.
www.manisenthil.com