(கொஞ்சம் பெரிய பதிவு.. சில வரலாற்று உண்மைகளுக்காக..)

2006 முதல் 2009 வரையிலான காலக்கட்டம். நாங்கள் ஆர்க்குட் இணையதளத்தில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்கிற குழுவை வைத்து இயங்கிக் கொண்டிருந்தோம். அதன் முதல் வருடாந்திரக் கூட்டம் சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை நான் தலைமையேற்று நடத்த ஐயா சுபவீ, அண்ணன் அறிவுமதி, எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன், தோழர் பாமரன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

மறுவருடக் கூட்டத்தில் அண்ணன் சீமான் உரையாற்றினார். இதற்கு நடுவில் அண்ணன் அறிவுமதி மூலம் அண்ணன் சீமான் எனக்கு நெருக்கமாகி இருந்த காலகட்டம் அது. அப்போது சில மாதங்கள் அண்ணன் சீமானோடு எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை. அவர் நாட்டிலேயே இல்லை என்றெல்லாம் தகவல். நீண்ட நாள் கழித்துதான் அண்ணன் சீமான் என் தொடர்புக்கு வந்தார்.அப்போது தோழர் மகேந்திரன் அவர்களது வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகரத் துணைச் செயலாளர் மற்றும் ‌ கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பணிபுரிந்து வந்தேன்.

அப்போது உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தில் இருந்து நாங்கள் பிரிந்து “இணையத் தமிழர் இயக்கம்” என்பதை உருவாக்கி பணிபுரிய தொடங்கியிருந்தோம். என்னோடு தோழர்கள் கோவை யுவன் பிரபாகரன், விஷ்ணுபுரம் சரவணன், அப்போது சேனா பானா என்று அழைக்கப்பட்ட இப்போது நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிற எனது மைத்துனர் பாக்கியராசன், இப்போது திமுகவில் இருக்கும் டான் அசோக், நண்பன் ஒட்டக்கூத்தன் என பலரும் அதில் இயங்கினோம்.

நீண்ட நாட்கள் கழித்து அண்ணன் சீமான் தொடர்புக்கு வந்த போது மிக முக்கியமான செய்திகள் இருக்கிறது தம்பி.. நேரில் சந்திப்போம் என சொல்லி இருந்தார். இதற்கு நடுவே மாவீரன் முத்துக்குமார் தற்கொடை, அடுத்தடுத்த அண்ணன் சீமான் அவர்களின் கைது என நாட்கள் கழிய அண்ணனை நான் பாண்டிச்சேரி சிறையில் தான் நேரில் சந்திக்க நேர்ந்தது.அப்போது நான் அண்ணன் சீமான் அவர்களின் சிறை தண்டனையை எதிர்த்து எழுதிய “கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று” என்கிற கட்டுரையை தோழர் மகேந்திரன் அவர்கள் தாமரை இதழின் அட்டைப்படக் கட்டுரையாக கொண்டு வந்தார்.

அண்ணன் சீமான் வெளியே வந்த போது போர்ச்சூழல் அங்கே இறுகி இருந்தது. இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் திரைப்பட இயக்குனர்களை வைத்துக்கொண்டு காங்கிரசை பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்காக பெரும் பிரச்சார பயணத்தில் கும்பகோணத்தில் “இணையத் தமிழர் இயக்கம்” சார்பாக கும்பகோணம் மகாமகக் குளத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் ஐயரை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் எழுச்சி உரையாற்றினார்.

அப்போதெல்லாம் கொளத்தூர் மணி அவர்கள், அண்ணன் அறிவுமதி அவர்கள், ஐயா சுபவீ அவர்கள் அண்ணன் சீமானோடு மிக நெருங்கிய உறவு. இவர்கள் சந்திக்கும் பல தருணங்களில் நான் உடன் இருக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அப்போது எல்லா தருணங்களிலும் அண்ணன் சீமான் தன்னுடைய ஈழப் பயணம் அனுபவங்களை முக்கியமாக தலைவரைப் பார்த்து வந்ததைத்தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அதுவெல்லாம் பொய் என்றால் இவர்கள் அங்கேயே மறுத்து பேசி இருக்கலாம். சொல்லப்போனால் பெரியார் திக மேடைகளில் அண்ணன் சீமான் பேசும் போதெல்லாம் தனது ஈழப் பயணத்தின் அனுபவங்களைப் பற்றியும், தலைவரை சந்தித்து வந்தது பற்றியும் உணர்வுபூர்வமாக பேசுவார். அப்போதும் கூட மறுத்திருக்கலாம். அப்போது அருகில் இருந்து கைதட்டி மகிழ்ந்தவர்கள் இப்போது அவர் தலைவரையே சந்திக்கவில்லை என்றெல்லாம் பேசுவது அவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பதை உலகிற்கு காட்டுகிறது.

மறைந்த இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் தலைவரோடு நிகழ்ந்த சந்திப்பு குறித்தும் அப்போது தலைவர் தந்த பணிகளைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தபோது கொடியைப் பற்றி பேச்சு வந்தது. இயக்குனர் மணிவண்ணன் தலைவர் அண்ணன் சீமான் அவர்களுக்கு அளித்த பணிகளை செய்ய தலைவரின் கொடியை சில மாறுதல்கள் மட்டும் செய்து நாம் பயன்படுத்துவோம் என்றார். அந்த சந்திப்பில் தலைவரோடு நடந்த சந்திப்பில் நிகழ்ந்த பல செய்திகளை அண்ணன் சீமான் எடுத்துரைக்க அருகில் இன்று அண்ணன் சீமான் சொல்வதை எல்லாம் மறுக்கின்ற பலரும் இருந்தார்கள். நானும் அருகில் இருந்தேன். முதல் கொடி அறிவிப்பு மாநாடு தஞ்சையில் நானும், தஞ்சையின் மூத்த வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அவர்களும் திலகர் திடலில் நடத்தினோம். சோழர்களின் கொடி புலிக்கொடி என்பதால் கொடி அறிமுகத்திற்கு தஞ்சை தேர்வு செய்யப்பட்டது.

நாம் தமிழர் இயக்கமாக இருந்த காலத்தில் இருந்த கொடி சிறிது சிறிதாக சில மாற்றங்கள் அடைந்து இன்று இருக்கின்ற இறுதி நிலையை அடைந்தது.

நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலைவரின் எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. தலைவரே ஆன்மப் பலமாக இருந்து அதை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் உறுதியாக உணர்ந்துதான் நான் பெருமிதத்தோடு அண்ணன் சீமானுடன் நிற்கிறேன்.

முதலில் சந்திக்கவே இல்லை என்றார்கள். பின்னர் திரைப்படங்களைப் பற்றி மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றார்கள். பிறகு ஐந்து நிமிடம் தான் பார்த்தார் என்றார்கள். பிறகு புகைப்படம் மட்டும் தான் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார் என்றார்கள். பிறகு அந்த புகைப்படம் பொய்யானது என்றார்கள். இப்போது வடிவமைத்து கொடுத்தது நான் தான் என்று யாரையோ பேச வைக்கிறார்கள்.

அண்ணன் சீமான் தலைவரை சந்தித்ததை பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எத்தனையோ இயக்கத்தின் மூத்தவர்கள் சொல்ல நான் எல்லாம் கேட்டிருக்கிறேன். சொல்லப்போனால் தலைவர் சந்திப்பில் நடந்த பலவற்றை அண்ணன் சீமான் இதுவரை சொல்லவில்லை. இன்னும் வெளியிடாத பல புகைப்படங்கள் அதற்கு ஆதாரமாக இருக்கின்றன. அதில் சிலவற்றை நானே பார்த்திருக்கிறேன்.

தலைவரை சந்திக்காத ஒருவரை பற்றி தன் இறுதி நொடியில் அண்ணன் சூசை பேச வேண்டிய அவசியம் இல்லை. “சீமான் கிட்ட சொல்லுங்கோ.. அவரிடம் தான் விட்டுப் போறோம்..” என்கிற அவரது குரல் இன்னும் இந்த காற்றில் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறது.

அண்ணன் சீமானின் ஈழப் பயணம் எந்த நேரத்தில் எப்பேர்பட்ட தருணத்தில் நடந்தது, அதில் என்னென்ன பேசப்பட்டது, அவர் எவரையெல்லாம் சந்தித்தார் என்பது அண்ணன் சீமானோடு அப்போது இருந்த எனக்கு உட்பட எல்லோருக்கும் தெரியும்.

இப்போது தரம் தாழ்ந்து பேசும் பெரியவர் கொளத்தூர் மணி அவர்கள் இதையெல்லாம் பொய் என்று சொல்லி இனிமேலும் மறுக்கக்கூடும். மீசையை தவிர வேறு எதையும் நிமிர்த்தாத சுபவீ அண்ணா அறிவாலயத்து திண்ணைக்காக இவற்றையெல்லாம் தவறு என தர்க்கம் செய்யக்கூடும்.

இன்னும் நான் பெயர் சொல்லவே கூசுகின்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இதற்கெல்லாம் ஜால்ரா அடித்து கதைகள் கட்டக்கூடும்.

உண்மைகள் தெரிந்தவர்கள் எல்லோரும் உயிருடன் தான் இருக்கிறோம். கவனம்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இதுவெல்லாம் ஏன் பேசப்படுகிறது என்றால் கடந்த பத்து நாட்களாக அண்ணன் சீமான் அடித்த அடி அப்படி.

புதைக்குழியில் ஆழப் புதைக்கப்பட்ட அக்காலத்து விடுதலை இதழ்கள் ஒவ்வொன்றாய் வெளிவர… திராவிடக் கூடாரம் நடுக்கம் அடைந்து அவதூற்றுப் பொய்களை “பெரியாரைக் காப்பாற்ற பெரியவர்கள் துணையோடு” அழைத்து வந்திருக்கிறது.

பொய்களுக்குத்தான் விளம்பரம் தேவை.உண்மைகளுக்கு எந்த வெளிச்சமும் தேவையில்லை. காலப் புழுதிகளை, அவதூற்றுப் புயல்களை தாண்டி கம்பீரமாக நிற்க உண்மைக்கு எப்போதுமே வலிமை உண்டு.

என்னிடம் என் மனச்சான்று அறிய எளிமையான உண்மைகள் இரண்டு உண்டு.

அவன் மன்னாதி மன்னன்.

இவன் மாசற்ற அண்ணன்.

⚫