❤️

கனவுகளை
துரத்திய காலம்
முடிந்து
கனவுகள்
இப்போது துரத்திக் கொண்டிருக்கின்றன.

நான்
அஞ்சி ஓடிக்
கொண்டிருக்கிறேன்.

❤️

அப்போதே சொல்லி
இருக்கலாம் தான்‌.

அப்போது
சொல்லி இருந்தால்
நீ சற்றே
ஏக்கத்தோடு
அப்போதே
சொல்லி இருக்கலாமே
என இப்போது
சொல்லி
இருக்க மாட்டாய்.

அதனால்தான்
அப்போது
சொல்லவில்லை.

❤️

பிரிந்து
செல்வதற்கு முன்
செயற்கையான
சிரிப்போ
ஒப்பனையான
கை குலுக்கல்களோ
தயாரிக்கப்பட்ட
கண்ணீர் துளியோ
என்னை
அவமானப்படுத்துகின்றன.

நிர்கதியான
ஒரு மௌனம்.
நிராதரவான
ஒரு பார்வை.

இது போதாதா..

நீயும் நானும்
நாமாக இருந்ததற்கு.

❤️

பிரிவின்
மழைநாளில்
நீ இறுதியாய் அமர்ந்த
அந்த உணவக
இருக்கையின்
எதிரே
நான் தனியே
அமர்ந்திருந்தேன்.

திடீரென எங்கிருந்தோ
வந்த ஒரு இளைஞன்
அலைபேசியில்
யாரிடமோ
கோபமாக பேசிவிட்டு
ஒரு முழு பிரியாணியை
ஆர்டர் செய்து
பொறுமையாக
சுவைத்து சாப்பிட
தொடங்கினான்

எனக்கு ஏனோ
நிம்மதியாக இருந்தது.

❤️

ஏதோ ஒரு வாழ்க்கை
நீ இல்லாத
அர்த்தமற்ற பொழுதுகள்
என்றெல்லாம்
விம்மி வெடித்து
நீ அலைபேசியில்
கண்ணீர் உகுத்த
அந்தக் குளிர்கால இரவில்..

அதுவரை
நான்
நினைக்க முடியாமல்
வெறுத்த நம் பிரிவு
கதகதப்பாய்
ஒரு போர்வை போல
என் மீது போர்த்தத்
தொடங்கியது.

❤️

நாசுக்கு பார்க்காமல்
இடம் பொருள் எண்ணாமல்
தகுதி வயது
காலம் மறந்து
அடக்கி
வைத்து முழுங்கத்
தோன்றாமல்
நேர்மையாய்
அழுது விட முடிவது
எவ்வளவு சுகமானது…

❤️