கேள்வி கேள்

அதுதான் பகுத்தறிவு.

என்றார்கள்.

கேட்டேன்.

அவதூறு பேசாதே

என்று அதட்டினார்கள்.

நான் சொன்னாலும்

நம்பாதே.

உன் அறிவுக்கு எட்டிய

வரையில்

சிந்தித்துப் பார் என்றார்கள்.

சிந்தித்தேன்.

இவன் நன்றி மறந்தவன்

என நிந்தித்தார்கள்.

எல்லாம் புத்தகத்தில்

இருக்கிறது.

படித்துப் பார் என்றார்கள்.

படித்துப் பார்த்தேன்.

இவன் பழசைக் கிளறுகிறான்

என்று பதறினார்கள்.

அவர் சொன்ன புத்தி போதும்

சொந்தப் புத்தி வேண்டாம்

என்றார்கள்.

சரி என்று அவர்

சொன்னதைச் சொன்னேன்.

நீ துரோகி என பட்டம் சூட்டி

எதிர்த்தார்கள்.

கோவிலுக்கு போகாதே

என்றார்கள்.

சொல்லை நம்பி

போகாமல் வெளியே நின்றேன்.

பார்த்தீர்களா

கோவிலுக்குள் விடவில்லை..

நீ சூத்திரன் என்றார்கள்.

இல்லை..

நீங்கள் சொல்லி தான்

போகவில்லை

என்று சொல்வதற்குள்

அவர்தான் அழைத்துப் போனார்

என்றார்கள்.

உள்ளே வராதே என்றவனும்

உள்ளே செல்லாதே என்றவனும்

நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள்.

கடவுள் இல்லை

என்றார்கள்.

நான் வணங்குவதை விட்டேன்.

பின்னர் இப்படி

சொன்னவர் தான்

கடவுள்.. வணங்கு

என்றார்கள்.

நாங்கள் தான்

படிக்க வைத்தோம்

என்றார்கள்.

பிறகு குறளும்

சிலம்பும் மேகலையும்

அகம் புறம்

பேசிய சங்கமும்

பதினெண் கீழ்க்கணக்கும்

எட்டுத்தொகையும்

எப்படி என்றேன்.

குறளை மலம் என்றார்கள்.

சிலம்பை காமக்குளம் என்றார்கள்.

பெரிய புராணத்தை

பெரியப் புளுகு என்றார்கள்.

தேவாரம் திருவாசகத்தை தேறாது

என விரட்டினார்கள்.

நீ பேசும் தமிழ் சனியன்

என்றார்கள்.

ஆங்கிலத்தில் பேசு என

அதட்டினார்கள்.

தாய்ப்பால் பைத்தியங்கள்

என பேசினார்கள்.

நீ திராவிடன் என

பொய்யைக் குழைத்துப்

பூசினார்கள்.

இதை ஏன்

தெலுங்கனுக்கோ

கன்னடனுக்கோ

மலையாளிக்கோ

சொல்லவில்லை

என்று கேட்டால்

நீ மொழி வெறியன் என

ஏசினார்கள்.

அடையாளங்களை

அழித்தார்கள்.

பிறகு அடையாளமே

இல்லை எனச் சொல்லி

அடித்தார்கள்.

குனியக்குனிய

கொட்டினார்கள்.

குனிந்த பின்

தலையிலேயே

தமிழைச் சொல்லி

தட்டினார்கள்.

இறுதியாக

நீ காட்டுமிராண்டி

என்றார்கள்.

குனிந்தவன்

கண் சிவந்து

நிமிர்ந்தேன்.

“ஆம்.

நான் காட்டுமிராண்டிதான்.

ஆனால் காடு

என்னுடையது.

நீ வெளியேறு.”

என

உரத்தக் குரலில்

உறுமினேன்.

புலி உறுமலில்

புவி சிலிர்த்து

ஆடி அடங்கிற்று

ஆதி வனக்காடு.

⚫