பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 21 of 57

அண்ணன் உதயகுமாருக்கு..

பாசமிக்க. அண்ணனுக்கு.நேசத்துடன்

சில வார்த்தைகள்..

கடந்த சில நாட்களாக மதிப்பிற்குரிய அண்ணன் எஸ்.பி உதயகுமாருக்கு.. நமது மீது ஏதோ கோபம். சரி நமது அண்ணன் தானே போகட்டும் என்று கடந்து போக பார்த்தால்..

இன்று நம்மை பாசிசம்.. கம்போடியாயிசம் என்றெல்லாம் திட்டி இருக்கிறார். அட இது என்ன திராவிட வாசனை என்று யோசிக்கும்போது..
சரி கனிமொழிக்கு ஓட்டு கேட்டவர் ஆச்சே.. சகவாச தோஷம் போல.. என்று நினைத்து விட்டு விடலாம் என்று பார்த்தால்..

ஏன் நாம் தமிழர் மீது அவ்வளவு காண்டு.. சவுண்ட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே … என்று யோசித்துப் பார்த்தால்..

அண்ணனின் வரலாறு அப்படி.

இதே நம் அண்ணன் தான் இன்று காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயல்படும் இந்துத்துவ ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொண்டு தொப்பி போட்டுக் கொண்டு எல்லாம் திரிந்தார். தொப்பி பொருந்தவில்லை. பிறகு வெளியே வந்து பச்சைத் தமிழ் தேசியம் என்ற புத்தகத்தை எழுதினார். அதே பெயரில் புதுக் கட்சி எல்லாம் தொடங்கினார். பிறகு அண்ணன் சட்டமன்ற தேர்தலில் தனியே தனித்து நின்றார். சில நாட்கள் முகவரியை தேடும் அளவிற்கு முடங்கிப் போனார். பிறகு திடீரென வந்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிறகு தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை ஆதரித்து வாக்குகள் கேட்டார்.

ஆனால் இவை எதையுமே நாம் கேள்வி கேட்டதில்லை. அண்ணன் சீமானோ,நாம் தமிழர் கட்சியினரோ இது குறித்து எதுவும் எழுதியதில்லை ‌. விமர்சிக்க வில்லை. அது அவரது விருப்பம். அவர் தலை. அவர் தொப்பி.தொப்பி தன் தலையில் சரியாக பொருந்துகிறதா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அது பற்றி நாம் கேள்வி கேட்க என்ன இருக்கிறது..??

அதேபோல நாங்கள் எங்கே நிற்க வேண்டும் என்பது நாங்கள் முடிவு செய்ய வேண்டும். என்றாவது நாங்கள் அண்ணன் உதயகுமாரோடு நிற்க போகிறோம் என்று அறிவித்திருக்கிறோமா.. எந்த கட்சியாவது அழைத்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள், கூட்டணி வையுங்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறோமா..

தனித்து நிற்பது என்பது எங்கள் அமைப்பின் தொடக்கத்திலேயே நாங்கள் இறுதியாக உறுதியாக எடுத்த முடிவு. ஏனெனில் எங்களுக்கு முன்னவர்களாக இருந்தவர்களின் வரலாற்றுப் பிழைகளை பார்த்து வலி தாங்கமுடியாமல் பிறந்தவர்கள் நாங்கள்.
மீண்டும் அதே பிழையை இனி ஒரு போதும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற புலிக் கூட்டம் இது.

சரி. அதனால் அண்ணன் உதயகுமாருக்கு என்ன பிரச்சனை என்று பார்த்தால்… அவர் செய்யப் போகின்ற அரசியல் முயற்சிகளுக்கு நம்மை அழைக்க மாட்டாராம்.

மிகவும் நன்றி. அதற்கு ஏன் திட்டுகின்றீர்கள்.

முதலில் அண்ணன் அணு உலை போராட்டம் மூலமாகத்தான் அறிமுகம். அணுவுலை போராட்டம் தாண்டி அண்ணன் உதயகுமார் உக்கிரமாக பங்கேற்ற இதர போராட்டங்களின் விவரங்கள் ‌.. ஏதேனும் இருந்தால் எவரேனும் சொல்லுங்கள். 10 பேரில் அண்ணனும் ஒருவராக இருந்து போராடுகின்ற சம்பிரதாய போராட்டங்களை இந்தப் பட்டியலில் கொண்டு வந்து சங்கடப் படுத்தாதீர்கள்.

ஆனால் சீமான் அண்ணன் அப்படி அல்ல.
அணு உலை தொடங்கி ஹைட்ரோகார்பன் வரையிலான போராட்டங்களில் பங்கேற்று தமிழ்நாடு முழுக்க வழக்குகள் வாங்கி நீதிமன்ற படிகள் ஏறி கொண்டிருப்பவர். ஒவ்வொரு போராட்டத்தையும் தனித்து நடத்தியிருக்கிறார். தேவைப்படும் பட்சத்தில் பிற அமைப்புகளின் மேடைகளில் ஏறி முழங்கியிருக்கிறார்.

சாதாரண உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில் இருந்து.. பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய மேடைகளில் ஒரு இளம் பேச்சாளனாக வளர்ந்து.. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று.. ஈழப்போராட்டத்தின் உச்சத்தில் ஐந்து முறை நெடுநாள் சிறைபட்டு..அதில் 3 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைபட்டு.. தானே ஒரு அமைப்பினை உருவாக்கி.. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு.. 1.1 சதவீத வாக்குகள் பெற்று.. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அது ஏறக்குறைய 4 சதவீதமாக உயர்ந்து இன்று 16 1/2 லட்சம் வாக்காளர்களை ஈர்க்கின்ற ஒரு தலைவராக வளர்வது என்பது அண்ணன் உதயகுமார் போன்றவர்களுக்கெல்லாம் நம்பிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

என்னவோ அண்ணனுக்கு எங்களது வளர்ச்சி சங்கடமாக இருக்கிறது. திமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்க தயாராகிவிட்ட அவரது கண்களுக்கு நாங்கள் சரியாக தெரிந்தால் தான் ஆபத்து.

அத்தோடு இல்லாமல் பாசிசம், நாசிசம் என திராவிடத்தின்‌ அதே பழைய பஞ்சாங்க கதையை அண்ணன் உதயகுமாரும் பேசுவது காலக் கொடுமையாக இருக்கிறது.

எப்போதும் அண்ணன் சீமான் உதயகுமார் போன்றவர்களை.. அவர்களது அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களைப் பற்றி பேசுவதே இல்லை. நாங்கள் யாராவது பேசினால்.. உனக்கு வேறு வேலை இல்லையா என ஏசுவார்.

உண்மையில் அண்ணன் உதயகுமாருக்கு தான் வேறு வேலை இல்லை போலும். முகநூலில் பதிவுகள் போட்டு கொண்டு..சீமான் சரியில்லை அவர் சரி இல்லை, இவர் சரியில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்கள் முதுகை அவர் தேவையில்லாமல் சுரண்டுவது எங்களுக்குப் புரிகிறது. அது ஒருவகையில் எங்களுக்கு சுகமாக இருந்தாலும்.. அண்ணனின் விரல்கள் இதற்காகவா பயன்பட வேண்டும் .. என்று மனம் வருந்துகிறது.

உங்களால் முடிந்ததை செய்யுங்கள் அண்ணே..

சுழித்துக் கொண்டோடும் காலநதியில் நீந்த முடியாமல் திணறுபவை கரை ஒதுங்க தான் செய்யும். வல்லமை மிக்கவை நீந்திக் கடக்க தான் செய்யும்.

கரை ஒதுங்கிக் கிடக்கும் நீங்கள்.. கத்தி கூப்பாடு போடுவதால் எங்களது நீந்தும் வேகம் குறைய போவதில்லை.

பிறகு ஏன் தேவையற்ற கூச்சல்..??

மணி செந்தில்.

காக்கப்படட்டும் காஷ்மீரம்..

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் ஸ்ரீநகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த வாஜ்பாய் அப்போது ஒரு கவிதையை எழுதினார்.

வசந்தம் விரைவில் திரும்பும்.
அழகிய பள்ளத்தாக்கில்
மீண்டும் மலர்கள் மலரும்.
நைட்டிங்கேல் பறவைகள் திரும்பும்..
மீண்டும் இசைத்துக் கொண்டே..

(Spring bill return to the beautiful valley Soon. The flowers will bloom again and the nightingales will return, chirping..)

ஆனால் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் பாஜகவின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் அறிவிப்பு எப்போதும் காஷ்மீரில் அமைதி திரும்பாது என்பதை உறுதி செய்திருக்கிறது.

வரலாற்றின் ரீதியாக காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் துரோகங்களை சந்தித்து வருகிறார்கள். காஷ்மீர் இந்துக்கள் முஸ்லிம்கள் புத்த மதத்தவர் என மூன்று மதங்களை சேர்ந்த ஒரு தேசிய இன மக்கள் வாழ்கின்ற நிலம். இதன் மொத்தப் பரப்பளவு 2,22,870 சதுர கிலோமீட்டர்கள். இதில் பாகிஸ்தான் வசம் உள்ள ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிற நிலத்தின் பரப்பு 78114 சதுர கிலோமீட்டர்கள். மீதம் உள்ள நிலம் இந்தியாவின் ஆளுகைக்கு கீழே இருக்கிறது. காஷ்மீரில் ஏறக்குறைய 70 சதவீதத்தினர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்து மற்றும் புத்த மதத்தை தழுவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி.. இந்துக்களாக இருந்தாலும் சரி.. தாங்கள் காஷ்மீரிகள் என தனித்த தேசியமாக அழைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்திய விடுதலையின் போது காஷ்மீர் இந்து மதத்தை சேர்ந்த ஹரி சிங் டோக்ரா என்கின்ற மன்னரால் ஆளப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்தியா இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டபோது காஷ்மீர் எந்தப் பக்கமும் நினையாமல் தனித்து தன் தனித்துவத்தை காப்பாற்றிக் கொண்டு தனி நாடாக விளங்கியது.

அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ஹரி சிங் தான் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையப் போவதில்லை என அறிவித்து இருந்தார். ஆனால் இந்தியாவோ காஷ்மீரை எப்படியாவது தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டுமென தொடர்ச்சியான பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்தவர். தான் பிறந்த மாநிலமான காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனி நாடாக இயங்குவதை யோ அவர் விரும்பவில்லை.

அக்காலகட்டத்தில் காஷ்மீர் நிலத்தின் மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா மன்னராட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி கொண்டிருந்தார். அவரும் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைவதை விரும்பாமல் சுதந்திர நாடாக இருப்பதையே தனது முழக்கமாக முன்வைத்து போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் காஷ்மீர் மீதான படையெடுப்பைத் தொடங்கியபோது அந்நிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்து மன்னர் ஹரி சிங் இந்தியாவிடம் உதவி கேட்டார். அப்போது இந்திய அரசு மன்னர் ஹரி சிங் உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தை ஷேக் அப்துல்லாவும் ஏற்றுக்கொள்ள.. இடைக்கால அரசு அமைக்க ஷேக் அப்துல்லாவை இந்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி பாதுகாப்பு தகவல் தொடர்பு அயல் நாட்டு தூதரக உறவு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே இந்திய மத்திய அரசு வைத்துக் கொள்ளவும் ஏனைய அதிகாரத்தை காஷ்மீர் அரசு வைத்துக் கொள்ளவும் போர்ச்சூழல் நீங்கிய பின்னர் காஷ்மீரத்து மக்கள் விருப்பப்படி இறுதி முடிவெடுக்க ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவும் ஷரத்துகள் எழுதப்பட்டு அமலுக்கு வந்தன.

இந்திய அரசு இந்த நொடி வரை காஷ்மீரத்து மக்களின் விருப்பப்படி இறுதி முடிவு எடுக்காமல் காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்து இந்தியாவின் ஒரு சிறப்பு மாநிலமாக வைத்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இந்த வரலாற்று துரோகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் ஷேக் அப்துல்லா நேரு இடையிலான நட்பை பயன்படுத்தி இந்திய அரசு காஷ்மீரை எப்படியாவது வளைத்துக் கொள்ள பல முயற்சிகள் எடுத்தது. அதற்கு சம்மதிக்காத ஷேக் அப்துல்லாவின் அமைச்சரவையில் பல குழப்பங்களை தனது உளவுத்துறை மூலம் ஏற்படுத்திய இந்திய அரசு இறுதியில் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் நாள் ஷேக் அப்துல்லாவையே கைது செய்தது.

சிறிது சிறிதாக காஷ்மீர் அரசின் அதிகாரங்களை இந்திய அரசு பறிக்க தொடங்கியது. காஷ்மீர் மாநிலத்திற்கு என தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1963 ஆவுது வருடம் இந்திய அரசியலமைப்பின் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது திருத்தத்தின் படி காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் மன்னர் ஹரி சிங் கோடு இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்த ஷரத்துகள் எதிரானவை மட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தையே இல்லாமல் செய்வதற்கான தன்மைகளைக் கொண்டவை.

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது இரண்டு அரசுகளும் காஷ்மீர் மக்களின் கருத்துக்களை கேட்காமல் சிம்லாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு எல்லைக் கோடு வரைந்து கொண்டன. காஷ்மீர் பிரச்சனை பொறுத்து மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்வது எனவும் முடிவு செய்து கொண்டன.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தொடர்ச்சியாக போராடி வந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொண்டார். ஆனாலும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி வழங்கக்கூடிய அரசியல் சட்டப் பிரிவு 370 தொடர்ந்து அமலில் இருக்கும் என்று இந்திய அரசு உறுதி அளித்தது.

இந்திய அரசின் தொடர்ச்சியான அதிகார அழுத்தங்களாலும், இந்தியா பாகிஸ்தான் என்ற இது வல்லாதிக்க நாடுகளின் அரசியல் விளையாட்டுகளாலும் படிப்படியாக உரிமைகளை இழந்த காஷ்மீர் நிலத்து மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக முறையிலும் ஆயுதங்கள் தாங்கிய முறையிலும் போராடிவருகிறார்கள். பாகிஸ்தான் இந்தியாவின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஜம்மு காஷ்மீரில் நடக்கின்ற தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது. அதேபோல இந்தியா பாகிஸ்தான் ஆளுகைக்குள் இருக்கின்ற ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகின்ற பகுதிகளில் நடக்கின்ற தாக்குதல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது .

எதுவாயினும் இந்த வல்லாதிக்க அரசுகளின் சிக்கிக்கொண்டு தங்களது இறையாண்மை மற்றும் உரிமைகளை இழந்து காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக போராடி கொண்டு வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் மூலமாக காஷ்மீர் நிலத்தை தொடர்ச்சியாக பதட்டம் தணியாத பகுதியாக இந்திய அரசு பராமரித்து வருகிறது. எந்த நொடியிலும் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் சுட்டுக் கொல்லப்படலாம் என்கின்ற துயர நிலையில் மிகுந்த அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு கிடைத்த மாபெரும் பெரும்பான்மையை சாதகமாக வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி பல ஜனநாயக விரோத சட்டங்களை எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றி வருகிறது. இந்துத்துவ கோட்பாட்டின் நீண்டகால வேட்கையான காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமித்தல் என்கின்ற விருப்பத்தை தனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பெருமையை வைத்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறது.

அதன் அடிப்படையில்தான் கடந்த 5 8 2019 அன்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கக்கூடிய பிரிவு 370 யை நீக்குவதற்கு அரசு பரிந்துரை செய்யும் என அறிவித்து இருக்கிறார்.

இதன்படி காஷ்மீர் அரசு இந்தியாவின் சிறப்பு மாநிலம் என்கின்ற அந்தஸ்தை இழக்கும். மக்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச உரிமைகளைக் கூட இழந்து காஷ்மீர் தேசிய இனத்திற்கான இருக்கின்ற இறையாண்மை உரிமையைக்கூட காஷ்மீர் மக்கள் இழப்பார்கள். மக்களின் விருப்பம் என்கின்ற ஜனநாயக விழுமியம் அழித்தொழிக்கப்பட்டு இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு மாநிலமாக காஷ்மீர் மாற்றப்படும்.

இதற்கான தயாரிப்பினை பாரதிய ஜனதா கட்சி ஜூலை இறுதி வாரத்தில் இருந்து செய்யத் தொடங்கிவிட்டது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் பாருக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இணையம் தகவல் தொடர்பு அலைபேசி தொடர்பு என அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒரு அறிவிக்கப்படாத பெரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தாலும் காஷ்மீர் நிலத்தில் இன்று ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே பொறுப்பாளிகள் ஆவார்கள்.

அன்று நைட்டிங்கேல் பறவைகள் இசையோடு திரும்பும் என கவிதை எழுதிய வாஜ்பாயின் பாரதிய ஜனதா அரசு தான் இன்று மனிதர்கள் கூட வாழ முடியாத நிலமாக காஷ்மீரை மாற்றி விட்டது என்பதுதான் துயர்நிலை.

தேர்தலில் கிடைத்திருக்கிற பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற மாபெரும் அதிகார வல்லாதிக்க உணர்வினை தான் பாரதிய ஜனதா கட்சியின் அரசு கொண்டிருக்கிறது என்பதைத்தான் காஷ்மீரத்து இன்றைய நிலைமை காட்டுகிறது.

இச்சமயத்தில் நமக்கு நமது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ.

எந்த வல்லாதிக்கமும் ஜனநாயக வேட்கை உடைய மக்கள் திரளால் எழுதப்படும் என்பதைத்தான் வரலாற்றின் பக்கங்கள் தொடர்ச்சியாக நமக்கு காட்டி வருகின்றன.

காஷ்மீர் நிலத்து மக்களின் துயர் நீங்க தமிழ் தேசிய இன மக்களாகிய நாமும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.

காஷ்மீர் காக்கப்படட்டும்.

மணி செந்தில்

சூனா. பானா வின் பஞ்சாயத்து..

 

சமீபத்தில் காவிரி தொலைக்காட்சியில் பேட்டியாளர் மதன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதது குறித்து சுபவீ இன்று விளக்கம் என்ற பெயரில் வழக்கம் போல் வழ வழா கொழ கொழா பதிவு ஒன்றினை இட்டிருக்கிறார் . வழுக்கி விழந்ததை கூட இப்படி எண்ணை தடவி காட்டுவதற்கு சுப‌.வீயால் தான் முடியும்.

அது போகட்டும். பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுபவீ தடுமாறியது அவரது அரசியல் தோல்வி.
அத்திவரதரை பார்க்க ஏன் திமுக தலைவர்களின் குடும்பங்கள் படையெடுத்தார்கள் என்கிற கேள்விக்கும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் திமுக ஆதரித்த பித்தலாட்டத்தை குறித்த கேள்விக்கும் சுப வீயால் பதில் சொல்ல முடியவில்லை.

அங்கே பதில் சொல்லாமல் விழித்து விட்டு.. சமாளிபிகேஷன் செய்து ஒரு பதிவை போட்டிருப்பது என்பது ஆகப்பெரும் காமெடி.

தான் தொழுது கொண்டிருக்கிற… தனக்கு கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிற திமுகவின் தலைமை கொஞ்சம் கூட வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கெல்லாம்.. சம்பந்தமே இல்லாமல்.. பெரியார் ,அந்தக்காலம் இந்தக்காலம், என்றெல்லாம் உளறிக்கொட்டி விட்டு.. அதை சமாளிப்பதற்காக.. நான் தோற்றுத்தான் போய்விட்டேன்.. நாம் தமிழர் கட்சியினர் என்னை கிண்டல் செய்கிறார்கள்.. பாளையங்கோட்டையில் ஒருவர் திட்டினார்.. புதுக்கோட்டையில் ஒருவர் தும்மினார் என்றெல்லாம் காமெடி செய்திருப்பது உண்மையில் சுபவீ யைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இதற்கும் அண்ணன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை.

சுபவீ இறந்து போக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோமாம். சுபவீ இறந்துவிட்டார் என்று சொன்னது.. நாங்கள் பார்த்து வியந்த கொள்கைவாதி சுபவீ பிழைப்புக்காக தடம்மாறி புரண்டதை அவரது தற்கொலை என்ற அர்த்தத்தில் இறந்து விட்டார் என்று சொல்கிறோம். அது ஒரு கொள்கை சாவு. லட்சியமும் கொள்கையும் இல்லாத பிழைப்புத் தனத்தையே வாழ்க்கையாக கொண்ட மனிதன் பிணத்திற்கு சமம்.

மற்றபடி திமுக அதிமுக தலைமைகளோடு மோதிக் கொண்டிருக்கிற நாங்கள்.. இந்த லகுட பாண்டிகளின் லாவணியை கேட்பதில்லை.

வடிவேலு ஒரு படத்தில் ஆட்டினை திருடிவிட்டு பஞ்சாயத்தை கலைக்க படாத பாடு படுவது போல..

திமுக செய்கிற பிழைப்புத் தனங்களுக்கு முட்டு கொடுப்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்கின்ற கேள்விகளுக்கு சுபவீ படாதபாடு பட்டு உருண்டு புரண்டது.. காண சகிக்காத நாம் விரும்பிய ஒரு காலத்து தத்துவ வாதியின் தோல்விக் காட்சி.

மற்றபடி வடிவேல் சொல்வது போலத்தான்..

சூனா பானா இதை இப்படியே மெயிண்டன் பண்ணு. சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது..

மணி செந்தில்.

அது காதலில்லை..


எனவே
அது காதலில்லை
என்பதை அறிக..

வலி மிகுந்து
தோளில்
முகம் புதைத்து
விசும்பியதை.‌.

இறுக விரல் பிணைத்து
நெடுநீள பயணத்தில்
கதைகள் பேசியதை..

நள்ளிரவு உரையாடல்களில்
தென்படும் மெளனத்தை
நேசத்தின் மொழி கொண்டு
மொழிபெயர்த்ததை…

நடுநிசி கடலோர
காற்றில் அலைபேசி
இசையோடு கால்கள்
நனைத்து கிடந்ததை..

மொத்தமாக
சில நாட்கள் தொலைந்து
நம்மை நாமே
அறிந்துக் கொள்ள
முகவரியற்ற ஊரில்
அலைந்து திரிந்ததை…

குறுஞ்செய்திகளில்
இதயம் மிதக்க வைத்து
பிடித்த பாடலின்
இணைய முகவரியை
தேடி தேடி கண்டடைந்து
பரவசம் கொண்டு
பறந்து அலைந்ததை…

இறுதியாக சிக்கனமான
சொற்களால்..
வடிகட்டி சொன்னாய்..

இதையெல்லாம்
காதல்
என வரைந்து விடாதே..
என..

நானும் எனக்குள்ளே
மெலிதாய்
சொல்லிக்கொள்கிறேன்..

எனவே அது
காதலில்லை
என்பதை அறிக.

மணி செந்தில்.

(கவிஞர் Riska Mukthar எழுதிய கவிதையொன்றின் இன்னொரு வடிவம்.)

இசைக்கப்படாத சொற்கள்

இந்த யாசிப்பில்
எனக்கு எவ்வித
கூச்சமுமில்லை.

மண்டியிட்டு
தாழவும்
மருகி உருகவும்
காலடி தொழவும்
தயாராகவே
உன் முன்னால்
நிற்கிறேன்.

தயவு செய்து
போய்விடு.

இரக்கமற்ற
உன் சமாதானங்களை
நனைந்த காலணிக்குள்
நெளியும் தவளை
என உணர்கிறேன்.

காரணமற்று
கலங்கும் உன்
கண்கள்
வியர்வைப்
பொழுதுகளின்
சுடுதேநீர் போன்றவை.

பேச்சற்று நீ
இசைக்கும் மெளனம்
பாலையில்
தனித்து பதியும்
தடங்களை ஒத்தவை.

பிரிவின் மொழி
பூசி உதிரும்
வெற்றுச்
சருகுகளால்
நிரம்பி இருக்கின்றன
உன் சொற்களின்
தாழ்வாரம்.

புழுதி படர்ந்த
வீணை ஒன்றின்
அறுந்த தந்திகளை
போன்றது நம்
நினைவுகள்
என்றேன்.

கலங்கிய கண்களுடன்
நிமிர்ந்துப் பார்த்தாய்.

அந்த அறுந்த
இசை
நரம்புகளில் தான்
இன்னும்
வாசிக்கப்படாத
ராகங்கள்
உறைந்திருக்கின்றன
என்று தளர்வுடன்
சொன்னாய்.

அயர்ந்தேன்.

உன்னை
பிரிவதை விட
நேசிப்பது
இன்னும்
வலியை
தருமென்பதை
உணர்ந்த தருணம்
அது.

நீ மெலிதாய்
தோளில் சாய்ந்தாய்.

வியர்த்த
உள்ளங்கைகளை
மீண்டும்
இறுக மூடிக்கொண்டேன்.

பின்னால் இருந்த
பாதாளம் ஒருமுறை
நடுங்கி அடங்கியது.

மணி செந்தில்.

உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

நாம் தமிழர் கட்சியில் இன்று பயணிப்பவர்களில் நான் உட்பட 99% திமுக குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான். திமுகவை கருப்பு-சிவப்பு கொடியை கலைஞர் கருணாநிதி அவர்களை முரசொலி நாளிதழை தங்கள் உயிராக நினைத்து நேசித்தவர்கள் தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம்.

திமுகவின் முதல் இணையதள தலைமுறையின் முக்கிய மானவர்களில் நானும் ஒருவன் ‌. ஆர்குட் காலத்திலேயே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து எழுதியவர்களை பக்கம் பக்கமாக எழுதி விரட்டி அடித்தவர்களில் நானும் ஒருவன். அதனால் திமுக தலைவர் கருணாநிதி அவர்களாலும், திக தலைவர் வீரமணி அவர்களாலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றவன் நான். தம்பி டான் அசோக் போன்றவர்களுக்கு இந்த விவரங்கள் எல்லாம் நன்கு தெரியும்.

ஆனால் எதற்காக நாங்கள் திமுகவை விட்டு விலகினோம் என்பது தான் உங்கள் சிந்தனைக்கு உரியது. என் இனம் அழிந்த போது தனது பதவி முக்கியம், தன் மகள் மீதான வழக்கின் முடிவு முக்கியம் என அமைதி காத்து நின்ற திமுக தலைவரின் கள்ள மௌனம் எங்களுக்கு துரோகமாக பட்டது. அவரை மிகவும் நேசித்து நம்பி நின்ற எங்களால் அந்த துரோகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

சொல்லப்போனால் திமுக தலைமை மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் உண்மையான நேசிப்பும் தான் இன அழிவுக்கு பின்னர் கடுமையான வெறுப்பாக மாறிப்போனது.

அதேபோலத்தான் நம்மாழ்வார் அவர்களும்.. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதன்முதலாக கையெழுத்துப் போட்டு தமிழ் நாட்டிற்குள் அனுமதித்தவர் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள்.

பிறகு அவரே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டதாக தெரிவித்தார். இன்று தஞ்சை மண் பாலைவனமாக மாறக் கூடிய அபாயத்தை அன்றே உணர்த்தி மக்களைத் திரட்டி போராடியவர் நம்மாழ்வார்.

அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் திமுகவினர் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. நம்மாழ்வார் இறந்தபோது திமுக இயற்றிய இரங்கல் தீர்மானத்தை இரங்கல் அறிக்கையை தற்போது வெளியிட முடியுமா..

அப்படி ஏதாவது ஒன்று இருக்கிறதா.. உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் கேட்கின்றேன். நம்மாழ்வார் எதிர்த்த மீத்தேன் திட்டத்தை முதன்முதலில் தமிழகத்திற்கு கொண்டு வந்தது அப்போதைய திமுக அரசு.

இப்போது நம்மாழ்வார் உங்கள் கட்சியை சேர்ந்தவர் என்று பெருமை பட்டுக்கொண்டு நம்மாழ்வாரையும் இணைத்தே இழிவு படுத்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

நம்மாழ்வார் குறித்து மிக இழிவாக இணையதள திமுகவினர் எழுதிய பல்வேறு பதிவுகள் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இப்போது திடீரென நம்மாழ்வார் பாசம் வந்திருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது.

பாவம் நம்மாழ்வார். இந்த மண்ணிற்காக இனத்திற்காக உண்மையாக உழைத்த பெருமகன்.

தன் வாரிசுகளுக்கு பதவியையோ சொத்தையோ சேகரித்து வைக்காமல்.. மறைந்த நேர்மையாளர்.

திமுகவினர் அவரை விட்டு விடலாம்.

திமுகவிற்கு உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

மணி செந்தில்.

பேரழகு மொழியால் பெருமை கொண்ட பேச்சுத்தமிழாளன்..

வருடம் 1995 என்று நினைக்கிறேன். நான் அப்போது திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரி ஆண்டுவிழாவிற்கு வருகிற சிறப்பு விருந்தினரை வரவேற்கும் குழுவின் பொறுப்பாளராக என்னை நியமித்திருந்தார்கள். தொடர்வண்டி நிலையத்திலிருந்து அவரை கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்று அழைத்து வந்தார்கள். வந்திருப்பவர் ஒரு பேச்சாளர் என்றார்கள். பார்க்க ஆள் கருப்பாக அவ்வளவு வசீகரமாக இல்லாத தோற்றம். அடிக்கடி இருமிக் கொண்டதும்.. மாத்திரை மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததுமான அவரது நிலைமை கதாகாலட்சேபம் செய்ய வந்த வயதான பிரசங்கி போல இருந்தது.ஒரு கல்லூரி ஆண்டு விழாவிற்கு கதாகாலட்சேபம் செய்பவரை போல ஒருவரை அழைத்து வர வேண்டுமா என்று நிர்வாகிகள் மேல் எனக்கு சற்று கோபம் ஏற்பட்டது.

வந்திருந்தவரை அறைக்குள் ‌விட்டுவிட்டு எனது தினந்தோறும் பணியான மன்னார்குடியில் இருக்கின்ற எனது இல்லத்திற்கு தொலைபேசினேன். அப்போதெல்லாம் அலைபேசி இல்லாத காலங்கள். ஏதேனும் கூட்டம் குறைவாக இருக்கிற எஸ்டிடி பூத்துகளில் காத்திருந்து இடம் பிடித்து பேச வேண்டும். தொலைபேசியை எடுத்தது அப்பா. யார் வந்திருக்கிறது என்று அவர் கேட்டதற்கு யாரோ வலம்புரிஜானாம். கச்சேரி செய்பவர் போல் இருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார்கள் என்று மிகவும் சலிப்பான குரலில் அலட்சியமாக சொன்னேன்.

என் தந்தை அவர் சாதாரண மனிதரல்ல. பேரறிஞர். உன் வாழ்வில் அவருடைய பேச்சை நீ கேட்க இருப்பது ஒரு மகத்தான நிகழ்வு என்றெல்லாம் புகழ்ந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லையே என்று யோசித்தவாறு நான் அறை திரும்பினேன்.

நாங்கள் தங்கியிருந்த youth hostel ல் பக்கத்து அறையில்தான் அவர் தங்கியிருந்தார். இரவு தாமதமாக வந்தவர் அதன் பின்னரும் வெகுநேரம் படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் உறங்க தொடங்கிய பிறகும் அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதிகாலையில் எழுந்து நான் பார்த்தபோது.. அவர் படித்துக் கொண்டிருந்ததை அங்கே இருந்த ஜன்னல் வழியாக காண நேர்ந்தது.

ஒரு மனிதன் எதற்காக இப்படி வாசிக்கிறான்.. வாசிப்பின் மீதான அவனது மயக்கம் எப்போது தீரும் என்றெல்லாம் அலை அலையாய் எனக்குள் ஆயிரத்தெட்டு கேள்விகள். காலை 7 மணிக்கு எங்களை அழைத்து எல்லா நாளிதழ்களையும் வார இதழ்களையும் வாங்கி வரச் சொன்னார். பிறகு அவற்றை உன்னிப்பாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படித்துக் கொண்டிருந்தார். எதைக் கொடுத்தாலும் தின்கிற உலகத்தில் எதைக் கொடுத்தாலும் படித்து விடுகிற பழக்கம் அவருக்கு இருந்தது.

காலையில் பகோடா கட்டிவந்த சின்னஞ்சிறு பேப்பர் துண்டையும் அவர் விடவில்லை. அதையும் படித்துப் பார்த்தார். இது ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியாமல் அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன்.

எதை எடுத்தாலும் படிக்கிறீர்களே.. அப்படி என்ன இருக்கிறது என்று கேட்ட என்னை சற்றே விசித்திரமாக பாத்தார். நாம் வாழ்க்கையில் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருக்கிற ஏதாவது ஏதோ ஒரு அபூர்வ தருணத்தில் சிக்குகிற ஒரு துண்டு காகிதத்தில் கூட கிடைத்து விடலாம் இல்லையா.. அதைத்தான் தேடித்தேடி படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.

பிறகு இரண்டு இட்லிகள் சாப்பிட்டுவிட்டு கல்லூரி விழாவிற்கு கிளம்பினார். ஒரு தேர்ந்த நாதஸ்வர வித்துவான் போல ஒரு பட்டு ஜிப்பா. தலையில் நடு வகிடெடுத்து எண்ணையால் அழுந்தி வாரப்பட்ட தலை.
அவரைப் பொறுத்தவரையில் அவர் பேசிய பல்லாயிரக்கணக்கான மேடைகளில் அதுவும் ஒரு மேடை அவ்வளவுதான். ஆனாலும் ஒரு போர் வீரனை போல.. ஒரு மகத்தான எதிரியை சந்திக்கின்ற ஆயத்தங்களோடு அவர் தயாரானார். ஒரு மணி நேரம் பேச்சுக்கு அவர் ஒரு இரவு முழுக்க தயாரானாரா என்கின்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.

மீண்டும் அவரிடத்தில் கேட்டேன். ஒரு மணி நேரம் பேசுவதற்கு இரவெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறீர்களே நான் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே.. உன் கல்லூரியில் பேசுவதற்காக நான் இரவெல்லாம் படித்து தயாராகவில்லை. என்னை தயார் படுத்திக் கொள்வதற்காக நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சி என் கடைசி நொடி வரைக்கும் நீடிக்கும் என்றே கருதுகிறேன் என்று எளிமையாக சொன்னார்.

அவர் அப்போது வைத்திருந்த புத்தகப்பை அவரது துணிப்பையை விட பெரிதாக இருந்தது. எந்த பயணத்திற்கு போனாலும் புத்தகங்களை உடன் அழைத்துச் செல்வதில் அவர் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக அவர் சொன்னார். சொல்லப்போனால் புத்தகங்கள் படிப்பதற்காகவே அவர் பயணிப்பதாகவும் அவர் சொன்னது எனக்கு விசித்திரமாக இருந்தது.

என் வாழ்க்கையில் அந்த நான் கண்ட மனிதரைப் பற்றி அந்த அற்புத நாளுக்குப் பிறகு தேடத் தொடங்கினேன்.

பேரறிஞர் வலம்புரி ஜான்.

தமிழ் அறிவுலகின் மகத்தான மாமனிதர். அவரது ஆற்றொழுக்கான தமிழ் அனைவரையும் வசீகரிக்கக் கூடியது. ஒரு மணிநேர அவரது பேச்சை கேட்கும் போது பல்லாயிரக்கணக்கான நூல்கள் நிறைந்திருக்கும் ஒரு நூலகத்தை ஒரு முறை சுற்றி வந்தது போல ஒரு நிறைவு ஏற்படும். கவிஞர்/ எழுத்தாளர்/ பத்திரிக்கையாளர்/ அரசியல்வாதி/ மாநிலங்களவை உறுப்பினர்/ வழக்கறிஞர் என பல்வேறு புகழ்பெற்ற அடையாளங்கள் அவருக்கு இருந்தாலும் .. தமிழ்மொழி கண்ட மாபெரும் பேச்சாளர் என்பதே அவரது பிரதான முகம்.

வாசிப்பின் ருசி அறிந்த மனிதர் அவர். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பொழுதுகளில் கூட அவர் படித்துக் கொண்டே இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பேரறிஞர் களுக்கு வழமையாக இருக்கக்கூடிய அனைத்து தீய பழக்கங்களும் அவருக்கும் இருந்தது. ஆனாலும் வாசிப்பை விடாத ஒரு வாழ்வினை கொண்டிருந்ததால்..உடல்நல கேட்டினையும் தாண்டி அவர் ஒரு மாபெரும் மேதை ஆக அவர் வாழ்ந்த காலத்தில் சுடர் விட்டுக் கொண்டிருந்தார்.

எங்கள் கல்லூரியின் விழாவிற்கு அவர் வந்தபோது அவரைப் பற்றி பெரிதளவு அறிந்திரந்தாத மாணவர் கூட்டத்தின் கூச்சல் குழப்பங்களுக்கிடையே அவர் மேடை ஏறினார். மைக்கைப் பிடித்து தான் தாமதம்.. அடுத்த ஒரு மணி நேரம் அவருடைய பேச்சு அந்த அவையைக் கட்டிப் போட்டது. சரளமான பேச்சு. பிறமொழி சொற்கள் கலவாத நுட்பத் திறமை. பல நூல்கள் பற்றி அறிஞர்கள் பற்றி மேற்கோள் காட்டுகிற உரையாக இருந்தாலும், அது கொண்டிருக்கின்ற எளிமை எங்கள் அனைவரையும் அசத்தி போட்டது.

இப்படி ஒரு மனிதனால் பேச முடியுமா.. கடல் போன்ற குறையாத வற்றாத தமிழை.. ஒரு பேச்சினூடே நுழைத்து பெரும் அருவி என கொட்டித் தீர்க்க முடியுமா .. என்றெல்லாம் நாங்கள் வியந்து போனோம்.

மேடை ஏறுவதற்கு முன்பாக கருத்த நிறத்தில் பார்ப்பதற்கே பொருட்படுத்தாத நிலையில் இருந்த அந்த மாமனிதன் அடுத்த ஒரு மணி நேரத்தில்..அங்கே கூடியிருந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ஒரு கதாநாயகனாய்.. அறிவுச் சுடர் விடும் பேரழகனாய்.. மாறிப் போன கதை அது.

மதிப்பிற்குரிய வலம்புரிஜான் அவர்களுடைய மொழி ஆற்றலை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கின்ற குறை என் வாழ்வில் நான் சந்தித்த அனைத்து அறிஞர்களிடத்திலும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாழ்நாளில் பல்வேறு மேடைகளில் பேசி வந்த பேச்சுத்தமிழை தொகுத்து நூல்களாக மாற்றியிருந்தால் இந்த மொழி அடைந்த மாபெரும் செல்வமாக அது காலம் காலமாய் நிலைத்திருக்கும்.

ஆனால் காலம் அவ்வளவு கருணை குணங்கள் கொண்டது அல்ல. மேடைகளில் உலகை வென்ற அரசனுக்கு அரசனாய் வலம் வந்த வலம்புரிஜான் வழக்கம்போல அரசியலில் தோற்றுத்தான் போனார். அவருக்கு இருந்த தீய பழக்க வழக்கங்கள், கடுமையான அலைச்சல்கள், அரசியல் தந்த மன உளைச்சல்கள் என பல அழுத்தங்கள் அவரை சற்றே சிறுவயதிலேயே கொன்று தீர்த்தன.

உலகில் பிறந்த அனைத்து மொழிகளைவிட தமிழ் மொழி என்னும் நீடித்து வாழ்வதற்கு வலம்புரிஜான் போன்ற காலத்தினால் தோன்றிய மொழி கடவுளர்கள் இந்த மொழிக்கு கருணை செய்து கொண்டே இருப்பது தான் காரணம் என்பதை இப்போது நான் அறிகிறேன்.

பேரறிஞர் வலம்புரிஜான் அவர்களுடைய பல பேச்சுக்கள் யூடியூபில் காணக்கிடைப்பது ஆறுதலைத் தருகிறது. இந்த மொழியை நீங்கள் உயிராக நேசிக்க வேறு எதுவும் செய்ய வேண்டாம். மறைந்த மாமேதை வலம்புரி ஜான் அவர்களுடைய தமிழைக் கேளுங்கள்

https://youtu.be/kClKyBFkc9c

அவன் அப்படித்தான்..

 

நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவனை விமர்சித்து விட்டு போங்கள்.

ஆனால் அவன் அவனாகவே இருக்கிறான்.

அலை பாய்ந்து வரும் அவதூறுகளுக்கு அவனுடைய பதில் செயல்.

விஷம் தோய்ந்த அம்புகள் என எய்யப்படுகிற பொய்களுக்கு அவனுடைய பதில் உண்மை.

ஒதுக்கி வைத்து ஓரம் கட்டப்பட்டு
வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிற
சதிகளுக்கு அவனுடைய பதில்
அலட்சிய எக்காளத்துடன் கூடிய
சிறு புன்னகை.

காலம் காலமாய் கட்டி வைத்திருக்கிற
புராதன பழமை பஞ்சாங்கங்களுக்கு
நெருப்பு வைத்து விட்டு புத்துலகம்
படைக்க அவன் அடுத்த மேடையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறான்.

நெருப்பு சொற்களால் ஆன ஒரு கனவினை இளைய கரங்களின்
உள்ளங்கைகளுக்குள் புதைக்கிற கடமையில்.. அவன் வேர்வை சிந்தி
விரைந்து கொண்டிருக்கிறான்.

இதுவரை வரையப்பட்ட அனைத்து விதமான அவல தத்துவ கோடுகளை
அழித்துவிட்டு.. இயற்கையின் தாய்மடியில் கதகதப்பாய் வாழ
கனவுலகம் ஒன்றினை கட்டிக் கொண்டிருக்கிறான்.

சிட்டுக்குருவி களுக்காக சிந்திக்கிறான்.
சிங்கம் புலிகளுக்காக கதறுகிறான்.
யானை பூனைகளுக்காக யாசிக்கிறான்.
மொத்தத்தில் மானுடம் வாழ இந்த பூமியை தன் உயிரென நேசிக்கிறான்.

சாதிகளால் வரலாற்றின் வீதிகளில்
சரிந்து கிடப்போர் தோள் பிடித்து
எழுப்புகிறான்.

இது சரியல்ல. சதி என்று சரித்திரங்களால் தரித்திரங்கள் ஆனவர்களுக்கு சாட்டைகள் அளிக்கிறான்.

எதிரிகளால் கட்டமைக்கப்பட்ட எந்த கணக்குகளுக்குள்ளும் சிக்காமல்
அவர்களது கணிப்பினை பொய்யாக்கி
ஏமாற்ற சாலையின் புழுதியாக்கி
பறக்க விடுகிறான்.

நீரைப் போலவன். நீங்கள் நிரப்பும் பாத்திரங்களின் வடிவை உடுத்திக் கொண்டது
போலத் தெரிந்தாலும்..

சட்டென உங்களது கண்ணாடி கணிப்புகள் விரிசலடையும் ஒரு தருணத்தில்.. அவன் உடைந்து
பெருகி கடலின்
சாயல் கொண்டு விடுகிறான்.

எளிய ஆன்மாக்களின் தாகத்தை தணிக்கிறான். வலிய அதிகாரத்தின்
ஆதிக்க கோட்டைகளை ஆழிப் பேரலையாய் மாறி மூழ்கடிக்கிறான்.

ஒன்றில் தீர்மானமாய் நிற்கிறான்.

எங்கெங்கெல்லாம்
மனிதர்கள் தாழ்த்தப்பட்டு
வீழ்த்தப்பட்டு அடைபட்டுக்
கிடக்கிறார்களோ..

அவர்களோடு ஒருவராக தோள் சேர்த்து நிற்க.. அவன் தீர்மானமாய் நிற்கிறான்.

ஏனெனில்..

அவர்களில் தான் அவன் பிறந்தான். அந்த இயல்பிலேயே திரிந்தான்.

அதனை அரசியல் விருப்பங்களுக்காக அடகு வைப்பதில்லை அவன்.

அதிகார ஆசைகளுக்காக பிறந்தது முதல் அடைந்து வந்திருக்கிற இழிவுகளை மறந்துவிட்டு.. கிடைக்கிற இருக்கை களுக்காக வாக்குப் பருக்கைகள் பொறுக்குகிற.. சாதாரணன் அல்லன் அவன்.

அவன் அப்படித்தான்.

எதனிலும் தன்னியல்பு மாறாமல்..
அவன் அவனாகவே இருப்பதால்தான் அவன் அவருடைய தம்பி.

மணி செந்தில்.

மெளனத்தின் மலர்

 

 

 

அலைவரிசை
தவறிய
உன்
தடுமாற்ற சொற்களுக்கு
மத்தியில்..

உனது மெளனம்
ஒன்று சின்னதாய்
பூத்துவிடுகிறது.

அந்த மெளனத்தின்
ஆழத்தில் தான்
எனது
மீளெழும்பலுக்கான
பாடலை நான்
கண்டடைய வேண்டும்.

புராதன காதலுணர்வின்
ஆதித்துயராக
அந்த மெளனத்தை
நான் நம்புகிறேன்.

அது அதுவாக
கலைவதற்குள்..

அல்லது நீயே
அதை
கலைப்பதற்குள்..

இப்போதே நீ போகலாம்.

மணி செந்தில்.

காலமென்ற பொல்லாத மிருகம்

வைகோவிற்கு அன்றைய திமுக அரசு தொடுத்த தேசத்துரோக வழக்கு மீது இன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிற தண்டனையை நாம் நினைக்கும் போது சில காட்சிகள் நம் மனதிலே எழுகின்றன.

வைகோ மீது தொடுக்கப்பட்ட வழக்கு போல.. அன்றைய இனத்துரோக திமுக ஆட்சியில் பல அநியாய வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இனப்படுகொலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதரவும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதில் அன்றைய திமுக அரசு மிகுந்த கவனத்தோடு இருந்தது.

இனப்படுகொலை காட்சிகளை குறுந்தகடுகளாக தயாரித்துக்கொண்டு மக்களிடையே பரப்பி போராட்ட உணர்வினை உண்டாக்க முயன்ற எண்ணற்ற இளைஞர்கள் காவல்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகளால் கொடுமையாக மிரட்டப்பட்டு பொய் வழக்குகள் போடப்பட்டு முடக்கப்பட்டார்கள்.

அந்த அழிவு நேரத்தில்.. போரில் சிக்கி கொண்டு காயம் பட்டுக் கொண்டிருந்த தமிழர்களுக்கு இங்கிருந்து குருதி சேகரிக்கப்பட்டு உதிர பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட இருந்த வேளையில்.. அவை அனைத்தும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு அப்போது காவல்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் சேட்டின் ஷீ கால்களால் மிதித்து அழிக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் இனி ஈழத்திற்கு ஆதரவாக யாரும் பேசவோ போராடுவோ கூடாது என அப்போதைய அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

கொளத்தூர் மணி, ஐயா பெ மணியரசன், அண்ணன் சீமான் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான பல வழக்குகள். பல மாதங்கள் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஈழ இன அழிப்பிற்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட பல இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீ வைத்துக்கொண்டு தியாகம் செய்ய… அவர்களின் மரணத்தை காதல் தோல்வி, கடன் பிரச்சனை என்றெல்லாம் திசைமாற்றி அன்றைய அரசின் உளவுத்துறை கடுமையாக இழிவுபடுத்தியது.

போர்ச்சூழல் எவ்விதமான செய்தியும் இங்கே வந்து விடக் கூடாது என்று ஊடகங்கள் செய்தித்தாள்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி கால தடைகள் விதிக்கப்பட்டன.

கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட கிளம்பியபோது ஒட்டுமொத்தமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி விடுதிகளை இழுத்து மூடி மாணவர்களின் போராட்டத்தை திமுக அரசு நசுக்கியது.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட கிளம்பியபோது உயர்நீதிமன்றத்தில் தன் காவல்துறையை வைத்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அடித்துத் துவைத்து… அதுவரை இனப்படுகொலைக்காக போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை.. தங்களுக்காக போராட வைத்து திசை மாற்றியது திமுக அரசு.

திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ஈழப் பிரச்சனை எல்லாம் இங்கே ஒரு பிரச்சனையே அல்ல என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

மல்லாக்கப் படுத்துக் கொண்டு முதுகில் ஆப்பரேஷன், காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே நடந்த சாகும்வரை உண்ணாவிரதம், நானே ஒரு அடிமை என்பதான பம்மல்கள், அய்யகோ போன்ற நீலிக்கண்ணீர் தீர்மானங்கள், குப்பைத் தொட்டிக்கு தான் போகப் போகிறது என உறுதி செய்துகொண்டு எழுதப்பட்ட போலி கடிதங்கள், மக்களை ஏமாற்ற மனித சங்கிலி போராட்டங்கள் என சொக்கத்தங்கம் சோனியா விற்காக அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி அந்த நேரத்தில் நடத்திய போலி நாடகங்கள் எண்ணற்றவை.

ஈழ இனப்படுகொலை சம்பந்தமாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை யாராலும் சந்தித்து உரையாட முடியாது. சந்தித்துவிட்டு வரும் பல அல்லக்கைகள் தலைவர் வருத்தத்தில் இருக்கிறார், தலைவர் குப்புறப் படுத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் என்பதான பொய்மூட்டைகளை அழித்துவிடும். பிறகு தனியே பேசும்போது இவரைப் போன்ற மனிதனை நான் பார்த்ததே இல்லை என்றெல்லாம் உணர்வாளர்கள் மத்தியில் நடித்து அழும்.

அதை நம்புவதா இதை நம்புவதா என்று தெரியாமல் நாமெல்லாம் குழம்பிக் கிடப்போம்

போர் முடிந்த பிறகு மருத்துவ சிகிச்சைக்காக வயதான பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இங்கே சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை தரை இறக்காமல் அப்படியே திருப்பி அனுப்புவதில் திமுகவும் காங்கிரசும் மிகக் குறியாக இருந்து நோக்கத்தில் வெற்றி பெற்றன.

அந்த நேரத்தில் வைகோ உரையாற்றிய பேச்சு இதோ

ஆனால் காலம் தான் இருப்பதிலேயே பொல்லாத மிருகம். அதன் வெறிபிடித்த ஓட்டத்தில் சில படிப்பினைகளை மிக எளிதாக நமக்குத் தந்து விடுகிறது.

அதே வைகோ இன்று காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று சபதம் எடுத்து களத்தில் நிற்கிறார்.

அவரைப்போல அன்று எங்களுடன் இருந்த பலர் திசை மாறி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு தலைமுறை இளைஞர்கள் இதையெல்லாம் மறக்காமல் அப்படியே அடி மனதிற்குள் புதைத்து வைத்து இருக்கிறோம். முத்துக்குமாரின் மூச்சுக்காற்றை இதுவரை வீசும் காற்றின் அலைவரிசையோடு கலந்துவிடாமல் காத்து வைத்திருக்கிறோம்.

ஈழ மண்ணில் அந்த காலகட்டத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு உதிரத்துளிக்கும் கண்ணீர் துளிக்கும் எங்கள் இடத்திலே கணக்கு உண்டு. காயம்பட்டு எழும்பிய கூக்குரல்களும்.. வன்புணர்வு கண்டு எங்கள் சகோதரிகள் கத்தித்தீர்த்த கதறல்களும், எங்கள் மகன் பாலச்சந்திரன் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையும்.. எங்களுக்குள் உறைந்துவிடாமல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நான் எல்லாம் பல அண்ணன்களின் விரல் பிடித்து நடந்திருக்கிறேன். அந்த அண்ணன்மார்கள் பேசுகின்ற மொழிகளை தேவ வாக்கு எனக்கருதி நம்பி திரிந்திருக்கிறேன். அவர்களை எம் இனம் காக்க மொழி காக்க வந்த கடவுளர்களாகவே கருதி வழிபட்டு இருக்கிறேன்.

என்னைப் போல.. எங்களைப்போல.. எங்களோடு இன்னொருவரும் நம்பித் திரிந்தார். அவர் அண்ணன் சீமான்.

நாங்கள் நம்பவே முடியாத ஒரு தருணத்தில்.. நாங்கள் நம்பி நின்ற அண்ணன்மார்கள் எல்லாம்.. காலம் வரைந்த இந்த சிக்கலான கணக்குகளுக்கு முன்னால் அம்பலப்பட்டு நிற்கும்போது..
அவர்களை உண்மையாகவே ஒரு காலத்தில் நேசித்த எங்களது இதயத்திற்கு வலிக்கத்தான் செய்கிறது.

ஈழ விடுதலையே தங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்றெல்லாம் எங்கள் இளம் தோள்களை பிடித்து உணர்ச்சி உசுப்பேற்றிய பல அண்ணன்மார்கள் திமுகவிற்கு ஓட்டு கேட்டுக் கொண்டும் காங்கிரஸுக்கு வாக்கு கேட்டுக் கொண்டும் இன்று நிற்பதை எல்லாம் பார்க்கும்போது..

சே…
காலம்தான்
இருப்பதிலேயே பொல்லாத மிருகம்.

அதன் வெறிபிடித்த ஓட்டத்தில்
எதையும் மறக்காமல்
நாம் நினைவோடு
எதையும் மறக்காமல் இருப்பதுதான்
நாம் அடைந்த மகத்தான துயரம்.

மணி செந்தில்.

Page 21 of 57

Powered by WordPress & Theme by Anders Norén