பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 1 of 11

உவர்ப்பு இல்லா கண்ணீர்.

“மனிதன் தாங்கக்கூடிய அளவிற்கே கடவுள் துன்பத்தை தருகிறான்” என்கிறது புனித நூல் திருக்குர்ஆன்.அது என்ன தாங்கக் கூடிய அளவு.. அப்படி துன்பத்திற்கு அளவுகோல்கள் இருக்கிறதா என்ன.. துன்பத்தில் எது பெரிய துன்பம் எது சிறிய துன்பம்.. துன்பம் என்பதே வலி தானே என்றெல்லாம் சிந்தனைகள் விரிந்து கொண்டே போகின்றன.

10 ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தை 1 1/2 வயதில் இறந்துவிட்ட கொடுமையை சமீபத்தில் என் குடும்பம் சந்தித்தது. என் வீட்டுப் பெரியவர்கள் விழிகளில் வலியை சேமித்து உறைந்து விட்டார்கள். கண்ணீர்/கதறல் போன்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை எல்லாம் தாண்டி உறைந்து விடுவது என்கிற நிலையை என் வீட்டிலேயே நான் கண்டேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை.இன்று காலை எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சட்ட உதவிக்காக என்னை அழைத்தார். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் மட்டும் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் குறைந்தவர்.அவரை தனது மூத்த மகன் மிகவும் மோசமாக நடத்துவதாகவும், அடிக்கடி தாக்கி விடுவதாகவும், அதை அவர் மிகுந்த வலியோடு என்னிடம் தெரிவித்தார். மூத்தமகனை அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.வாழ்வின் மிகக் போராட்டம் எதுவென்று சிந்திக்கும்போது உடல் நலமில்லாத குழந்தைகளை வளர்க்க பெற்றோர் நடத்துகிற போராட்டம் தான் என்பதை உணர முடிகிறது. எந்த நேரம் எது நடக்கும் என்று குழந்தைகளின் உடல்நலத்தைப் பொறுத்து எதுவும் தெரியாது. தன் கண் எதிரே தன் குழந்தைகள் படும் பாடு கண்டு பெற்றோர் அடையும் துயரத்தின் உயரம் எவரெஸ்ட்டை விட பன்மடங்கு பெரியது.

என் குடும்பத்திலேயே “ஆட்டிசம்” பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவன் இருக்கிறான். அவனை உருவாக்க அவனது தாய் படும் பாட்டை நான் அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அந்தப் பெண்ணுக்கு அச்சுஅசலாக என்னுடைய தாய் முகம். சிறுவயதில் என் அம்மா எப்படி என்னை தூக்கிக்கொண்டு அலைந்தாரோ அதேபோல அவளும் ஒரு சுமைத் தாங்கியாக மாறி இருப்பது வாழ்வின் அசலான மனிதர்கள் நகலெடுத்துக் கொண்டது போல இருக்கிறது. அவள் எப்போதும் நோயற்ற குழந்தையைப் பெற்று வென்ற என் அம்மாவின் கண்களில் இருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டே இருக்கிறாள். அவளது வெற்றிக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

முழுமையான உடல் நலம் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் வரம் வாங்கியவர்கள். அமைதியாக உறங்கும் இரவுகளை அடைந்தவர்கள்.அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சாலையை கடந்து செல்லும் முடி இழந்த சில குழந்தைகளை பார்க்க நேரிட்டது. தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே உலவும் அந்த குழந்தைகளின் விழிகளை பார்த்துவிட்டு நிதானமாக இருக்க முடியவில்லை.ஒரே சமயத்தில் பால்யத்தின் குறுகுறுப்பும், நோயின் தீவிரம் தரும் வலியின் நிழலும் கொண்ட அந்த விழிகள் எப்போதும் தன் தாய் தந்தையரையே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

நோய்மை நிறைந்த குழந்தைப் பருவம் மிகத் துயரமானது. நோய் தருகிற வலி, உறக்கமற்ற இரவுகள் இதுவெல்லாம் ஒருபுறம், இன்னொரு புறம் நண்பர்கள் தோழிகள் விளையாட்டுகள் இல்லாத தனிமை. மருத்துவமனையின் வெளிறிய சுவர்களை பார்த்து களைப்படையும் கண்களோடு இருந்த எனக்கு என் தந்தை புத்தகங்கள் மூலம் விடுதலைப் பெற்றுத் தந்தார். இந்த ஆன்ம விடுதலை அனைவருக்கும் கிடைப்பதில்லை.

“The Miracle”( 2015) என்கின்ற துருக்கி நாட்டு திரைப்படம் ஒன்று இருக்கிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த திரைப்படம் “Mahsun Kırmızıgül” என்பவர் இயக்கி இருந்தார். பள்ளிக்கூடம் இல்லாத ஒரு கிராமப்புறத்திற்கு பணிக்காக செல்லும் ஒரு ஆசிரியர் அங்கே நோய்மையால் பாதிக்கப்பட்ட பேச்சுத்திறன் இழந்த சரிவர நடக்க முடியாத ஒரு வாலிபனை சந்திக்கிறார். அந்த ஆசிரியர் மற்றும் எதிர்பாராத விதமாக அவனுக்கு அமைந்த மனைவி மூலம் அந்த வாலிபன் உலகின் அனைத்து உயரங்களையும் அடைவது தான் அந்த கதை. எனது ஆருயிர் தம்பி கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி விக்கி தனிமை உணர்ச்சி வெகுவாக ஆட்கொண்ட ஒரு நாளில் எனக்கு இந்தத் திரைப்படத்தை பரிந்துரைத்தார். இரண்டு பாகங்களையும் முழு வீச்சில் பார்த்து முடித்த எனக்கு அதற்கடுத்த இரண்டு நாட்கள் படம் தந்த தாக்கத்திலேயே கழிந்தன. எல்லோரும் மிக முக்கியமாக காண வேண்டிய அந்த திரைப்படத்தின் முதல் பாகம் நெட்ப்ளிக்ஸ் -சில் கிடைக்கிறது. இரண்டாம் பாகம் youtubeலயே இருக்கிறது. நோயற்ற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை பற்றி இந்த படம் பேசியது போல வேறு எந்த படமும் இவ்வளவு நுட்பமாக பேசியதாக தெரியவில்லை.

இளம் வயது நோய்மையின் மிக உக்கிரமான உச்சம் அது தருகிற தனிமை. இளம் வயதில் உளவியலாக அந்தத் தனிமை உணர்ச்சியை அடைந்தவர்கள் வாழ்நாள் முழுக்க எல்லா பொழுதுகளிலும் அந்த தனிமை உணர்ச்சி ஆன்மாவில் தேங்கி நிற்கும். “வேலையில்லாதவனின் பகல் பொழுது தான் உலகத்திலேயே மிக நீளமானது” என்ற வரியை எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். நோயுற்றவனின் இரவும் அப்படித்தான். வலியும் தனிமை உணர்ச்சியும் நிரம்பிய அந்த இரவுகள் முடிவே இல்லாத ரயில் பெட்டிகளின் வரிசையை நினைவூட்டுபவை.

“ஆரோக்கிய நிகேதனம்” என்ற 1953இல் வெளியான புகழ்பெற்ற ஒரு வங்காள நாவல் இருக்கிறது. அதை எழுதியவர் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாயா. தமிழில் குமாரசாமி மொழி பெயர்த்திருக்கிறார். ‘சாகித்ய அகாதெமி’ சார்பில் வெளியாகி இருக்கும் இந்த நூல் நோய்மையின் வெவ்வேறு குணாதிசயங்களையும், குணப்படுத்தும் வெவ்வேறு வழிகளையும் பற்றி விவாதிக்கின்ற அந்த நூல் மரபு சார்ந்த மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் இடையே இருக்கின்ற முரண்களைளையும் அரசியலையும் நுட்பமாக காட்டுகிறது. அதில் ஜீவன் மசாய் என்கின்ற முதன்மை கதாபாத்திரம் உண்டு. தலைமுறை தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்து வரும் குடும்பத்தில் பிறந்த அவர் ஆங்கில மருத்துவப் படிப்பில் சேர்ந்து மஞ்சரி என்ற பெண்ணை காதலித்து பிரிந்து, நிறைவேறாத காதலின் காரணமாக படிப்பை கைவிட்டு, தந்தை வழி ஆயுர்வேதத்தை தொழிலாக மட்டுமல்ல வாழ்வியலாக மாற்றி பின்பற்றி புகழ் பெற்ற ஆரோக்கிய நிகேதனம் என்கின்ற மருத்துவமனையை நிறுவுகிறார். ஆத்தர் பவ் என்ற பெண்ணை மணமுடிக்கும் அவர் வாழ்நாள் முழுக்க மனைவியின் வெறுப்பை சுமந்து ஆங்கில மருத்துவம் படித்த காதலியின் பேரனுக்கு நோய்மையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் புரிதலை உருவாக்கி மறையும் அவரது பாத்திரப்படைப்பு இந்திய நாவல் உலகில் தலைசிறந்தது . இளம் வயதிலேயே தன் மகனை பறிகொடுத்த ஜீவன் மசாய் “எல்லோருக்கும் எதிர்பாராத ஒரு நொடியில் மரணம் தான் முடிவு, அதை வெல்ல யாரும் இல்லை” என்பதை தன் வாழ்நாள் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் அந்தக் கதை. நோயைப் பற்றி தமிழில் சமீபத்தில் வந்திருக்கும் மருத்துவ புதினம் அக்குபஞ்சர் மருத்துவர் உமர் பாருக் எழுதிய “ஆதுர சாலை” நவீன மருத்துவ முறைமைகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்புகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அவரின் மகள் சிறு வயதிலேயே இன்சுலின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஊசி போடக்கூடிய நிலைக்கு ஆளானவர். பணியில் இருக்கும் நேரத்தில் கூட ஓடிப் போய் தன் மகளுக்கு ஊசி போட்டுவிட்டு வியர்த்து விறுவிறுத்து வேக வேகமாக திரும்பும் அவரின் துயரத்தை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் . அவரும் அவரது மனைவியும், தன் மகளை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த பொழுதில், ‌ அவர்களிடம் சென்று ‘நீங்கள் வென்று விட்டீர்கள்’ என சொல்லிவிட்டு நகர்ந்த போது அவர்களது விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அந்த நிறைவு தரும் முழுமை போல உலகில் வேறு எதுவும் முழுமையில்லை.

அந்த நேரத்தில் உதிர்க்கும் கண்ணீர் கூட உவர்ப்பு இல்லாத உவப்பு தானே..??

தேவைப்படும் சில புரிதல்கள்

சமூக வலைதளங்களிலும், அரசியல் பரப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்பற்ற இரண்டை ஒப்பிட்டு விவாதப் பரப்பு ஏற்படுத்துவது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வகையில் இப்போது
இதுவும் ஒன்று.

விஜய்யின் வருகையால் நாம் தமிழருக்கு பாதிப்பா..???

முதலில் நாம் தமிழர் அரசியலையும், நடிகர் விஜய் அரசியல் வருகையையும் ஒப்பீடு செய்யப்படுவது அர்த்தமற்றது.

2009 ல் நடந்த இனத்தின் அழிவு தாங்காமல், தொடர்ச்சியான நம் இனம் அடைந்து வருகிற இழிவு பொறுக்காமல், கொதிப்படைந்த இளைஞர் கூட்டம் நாம் தமிழரை உருவாக்கியது.

வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, மெய்யியல், சூழலியல், என பல்துறை சார்ந்த இனத்தின் எழுச்சி நாம் தமிழர் வருகைக்குப் பின்னால் இந்த மண்ணில் நிகழ்ந்தது. அதுவரை பேசப்படாத பொருட்கள் பல பேசு பொருளாக மாறியது. இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் நம் மண்ணில் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இதற்குப் பின்னால் உறக்கத்தை தொலைத்து உழைப்பை மட்டுமே கொண்டு தனது குரலால் வீதிக்கு வீதி கொள்கை முழக்கம் செய்து கொண்டிருக்கின்ற அதிமனிதன் அண்ணன் சீமானும், அவர் பின்னால் சாதி மத வேற்றுமைகளுக்கு எதிராக தமிழர் ஓர்மை அடைந்து , திரண்ட தன்னிகரற்ற தம்பி, தங்கைகளின் தமிழ்த்தேசிய பற்றுறுதி போன்ற கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன.

தோன்றும்போதே வெடித்து கிளம்பியது போன்ற வரலாற்று பெருவெடிப்பு நாம் தமிழர் கட்சிக்கு நிகழ்ந்தது. ஒரு பக்கம் ஊடகப் புறக்கணிப்புகள் மறுபக்கம் அரசு அதிகாரத்தின் தடைகள் மற்றும் வழக்குகள் இதற்கெல்லாம் முகம் கொடுத்து அண்ணன் சீமான் தலைமையில் எளிய இளைஞர்கள் திராவிட/தேசிய அரசியலுக்கு மாற்றாக புதிதான தமிழ் தேசிய அரசியல் உருவாக்கியது இந்த மண்ணில் நிகழ்ந்துவிட்ட புரட்சி. குறிப்பாக படித்த இளைஞர்கள் /இளம் பெண்கள் அறிவாயுதம் ஏந்தி வீதிகளில் திரண்டது தமிழக அரசியல் பரப்பில் இதுவரை பாராதது.

நடிகர் ரஜினிக்கு வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று அன்று கேட்டார்கள். இன்று நடிகர் விஜய் வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று கேட்கிறார்கள். யார் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் எங்களது இலக்கும், பயணத்தின் பாதையும் தியாகமும், தீரமும் மிக்க எங்களது இன முன்னோர்களால், மாவீர தெய்வங்களால் வடிவமைக்கப்பட்டது. தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சி. தூய தமிழ் மொழி வழியில் தமிழ் வீதிகள். தமிழர் நிலத்தில் தமிழுருக்கே முதல் உரிமை. எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கே நலத்துடன் வாழ, இங்கிருந்தவர்கள் வரலாற்றின் வீதியில் எங்கோ தொலைய என்கின்ற திராவிடப் போக்கு தொலைந்து தீந்தமிழர் ஆட்சியில் எல்லா உயிருக்குமான நலம். கல்வி அறிவியல், சூழலியல், கனிம வள பாதுகாப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, ஊழலற்ற ஆட்சி முறை , தற்சார்பு தாய்மைப் பொருளாதாரம் என ஒரு லட்சம் கனவுகளை உள்ளுக்குள் தேக்கி அதிகாரத்தை நோக்கி நாங்கள் அடி எடுத்து வைக்கும் பயணம் மற்றவர்கள் போல் அல்ல.

ஒரு தேசத்தை புதிதாக கட்டுமானம் செய்ய முயல்கிற புரட்சியின் பொறியாளர்கள் நாங்கள். திரைத் துறையை சேர்ந்த அண்ணன் சீமான் அவர்களை நாங்கள் திரை வசீகரத்தில் தேடிக் கண்டடைந்தவர்கள் அல்ல. இன அழிவின்போது சகிக்காமல் பெருங்குரலெடுத்து அழுது துடித்த எங்கள் குருதி தேய்ந்த ஆன்மாவின் மனித வடிவம் அவர். அடக்க முடியாத எங்களது கோபத்தை அவர் மேடையிலே வெளிப்படுத்திய போது ஒத்த உள்ள அலைவரிசைகள் ஒன்றாய் இணைந்து ஒரு புரட்சிகர பயணத்திற்கு எங்களை அணியமாக்கியது.

தமிழினத்தில் பிறந்த புகழ்பெற்ற திரைக்கலைஞன் என்கின்ற முறையில் நடிகர் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும், பேரன்பும் என்றும் உண்டு.

மற்றபடி வருங்காலத்தில் அவர் முன் வைக்க இருக்கிற அரசியல் அவர் யார் என்று காலத்தின் வீதியில் கணக்கிட்டு காட்டும். அதன் பொருட்டு எம் ஆதரவும்/ எதிர்ப்பும் அமையும்.

அவர் மட்டுமல்ல, இன்னும் திரைத்துறையில் இருந்து யார் வந்தாலும் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. எங்கள் முன் திரள்பவர்கள் நிச்சயமாக இன்னொருவர் பின்னால் நிற்க கூட முடியாது. விசித்திரமான இந்த நிலை நாங்கள் முன்வைக்கின்ற லட்சியங்கள் கொண்டிருக்கிற தனித்த வசீகரம். மாய ஈர்ப்பு.

இந்த நிலமும் இந்த அதிகாரமும் எங்களுக்கு தேவைப்படுகின்றன.

இந்த நிலத்திற்கும், இந்த மக்களுக்கும் நாங்கள் என்றும் தேவைப்படுகிறோம்.

இந்த நிலை மற்ற எவருக்கும் இல்லை எனும் போது மற்றவர் வருகை குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

தனித்துவமான எங்களது லட்சியப் பயணம், எங்களது அண்ணன் சீமான் தலைமையில் அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். பயணம் நகர, நகர.. பாதை விரிய, விரிய உலகின் மூத்த தமிழ்க் குடி அடிமை விலங்கொடித்து உரிமைகளோடு சிறக்கும்.

நாம் தமிழர்.

🟥

நூல் வீதி 8 – கே ஆர் மீரா பெண்களின் அறியப்படாத அக உலகம்

நூல் வீதி 8
++++++++++

இந்த முறை புத்தக கண்காட்சியில் மலையாள மொழியின் மிக முக்கிய எழுத்தாளர் கே ஆர் மீரா அவர்களின் மொழிபெயர்ப்பு நூல்களை என் தம்பி எழுத்தாளுமை அகர முதலவனின் பரிந்துரையில் வாங்கினேன். “தேவதையின் மச்சங்கள் கருநீலம்” என்கிற அவரது சிறுகதை தொகுப்பு மோ செந்தில் குமாரின் மொழிபெயர்ப்பில் தமிழில் எதிர் வெளியீடு மூலமாக வெளியாகி இருக்கிறது.

சமகால மலையாள எழுத்துக்களில் புகழும் தனித்துவமும் கொண்ட படைப்புகளை கே ஆர் மீரா தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது கதைகளில் வரும் பெண்கள் தீர்க்கமானவர்கள். நரகமோ சொர்க்கமோ அவலமோ மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் தங்கள் வாழ்விற்கான தேர்வுகளை முடிவு செய்யும் இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். தன் ஆன்மா முழுக்க காதலால் நிரம்பியவர்கள். உணர்ச்சிகளின் விளையாட்டாக காதலை கருதாமல் அதனால் தீவிர மன எழுச்சி அடைந்து எந்த எல்லைக்கும் செல்பவர்கள்.

அவரது படைப்புலகை பற்றி அவரின் மேற்கோள்களோடு வெளிவந்திருக்கிற ஒரு மிக முக்கியமான கட்டுரை இது.

https://www.vogue.in/culture-and-living/content/writer-k-r-meera-i-dont-write-for-feminists-i-write-so-that-my-book-will-convert-readers-into-feminists-jezebel

குறிப்பாக “தேவதையின் மச்சங்கள்” கதையைப் படித்து முடித்த நேற்றைய இரவினை கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். வேதனை கொடுமை இப்படியெல்லாம் நடக்குமா என்கிற சொற்களையெல்லாம் தாண்டி நிஜமான வாழ்க்கை எப்படி கோரமாக இருக்கிறது என்பதை கவித்துவமான தன்மொழியில் மீரா கதையாடி இருப்பது இந்த தொகுப்பை‌ அனைவரும் வாசிக்கும்படியாக மாற்றுகிறது.

இரண்டே இரண்டு கதைகள் கொண்ட மிகச்சிறிய தொகுப்பான இந்த நூலின் இரண்டாவது கதை கருநீலம். “சதி சாவித்திரி களும் கண்ணியமான உத்தம புருஷர்களும் இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல” என்கிற முன் அறிவிப்போடு தொடங்குகிற இக்கதை காதலாகி கசிந்து உருகிய ஒரு பேரிளம் பெண்ணைப் பற்றியது. உணர்ச்சியற்ற வாழ்வொன்றினை நோக்கி பயணப்படுகிற ஒரு துறவிக்கும், கணவன் குடும்பம் என வாழ்ந்து வருகிற ஒரு பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தை பற்றி மிகுந்த நுட்பமான மொழியில் மீரா கதையாக்கியுள்ளார்.

தமிழில் பெண்களுக்கான புனை உலகத்தை அம்பை சல்மா லீனா மணிமேகலை குட்டி ரேவதி சுகிர்தராணி கிருத்திகா போன்ற பலரின் படைப்புகள் மூலமாக அறிந்திருந்தாலும் மீராவின் எழுத்துக்கள் பெண்களின் அக உலகின் பல்வேறு கோணங்களை மிக ஆழமாக வெளிப்படுத்தியது.

கே ஆர் மீராவின் எழுத்துக்களில் இன்னும் ஒரு சில புத்தகங்கள் வாசிப்பிற்காக இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக அவைகளையும் ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தை இந்த சிறு நூல் ஏற்படுத்தி விட்டது.

கே ஆர் மீரா. சாகித்திய அகாதமி பெற்ற மலையாள மொழியின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். தற்போது கோட்டயத்தில் வசித்து வருகிறார். இவரது நூல்களில் பல தமிழில் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கின்றன.

ஜெயகாந்தனின் புகழ் பெற்ற பெண் கதாபாத்திரங்களில் இருந்து கே ஆர் மீராவின் கதை உலகில் வருகின்ற பெண்கள் வரைக்குமான தனித்துவமான பெண்களின் அக உலகு பற்றியே உண்மையில் ஒரு நூலை எழுதலாம்.

உண்மையில் நாம் அறிந்த பெண்கள் என்று எவருமே இல்லை. பெண்களைப் பற்றி நாம் அறிந்ததாக புரிந்து கொண்டிருப்பவை அனைத்துமே கற்பிதம்தான். படைப்பின் விசித்திரமும் அதுதான். நமக்கான ஏதோ ஒன்றை அவர்களிடத்தில் நாம் தேடிக் கொண்டிருப்பதை தான், நாம் அறிந்த பெண் உலகாக‌ நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதுவெல்லாம் அவ்வாறு இல்லை என நம் நெற்றி பொட்டில் அடித்தாற் போல் விரிகிறது கே ஆர் மீராவின் புனைவுலகம்.

சென்னை பெருமழை வெள்ளம்-செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்.

புயல் மழை காரணமாக தலைநகர் சென்னை தத்தளிப்பது குறித்து வருகின்ற விமர்சனங்களை திமுகவினர் கையாளும் விதம் மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இயற்கை பேரிடர் தான், நாம் எதிர்பார்த்ததை விட அதிகமானது தான்.. ஆனாலும் இதுவெல்லாம் இங்கே கேள்வி அல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொடும் வெள்ளத்திற்கு பிறகாக தகுந்த மழை நீர் வடிகால் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில் திமுக,அதிமுக என்கின்ற இரண்டு திராவிட கட்சிகளுமே அக்கறை காட்ட வில்லை.குறிப்பாக திமுகவை பற்றி எல்லோரும் ஏன் வெறுப்பாகிறார்கள் என்றால் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முறை மழைக் காலத்திலும் திமுக தலைவர்கள் வைத்த விமர்சனங்கள் தான் இன்று அவர்களுக்கே எதிராக போய் நிற்கின்றன‌. ரூ 4000 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் ஒரு அப்பட்டமான தோல்வி என்பதை ஒத்துக் கொள்ள மறுத்து தான் முதலமைச்சர் தொடங்கி அடிமட்டக்கட்சி தொண்டன் வரைக்கும் நேற்று இருந்த படத்தை பாருங்கள், இன்று இருக்கின்ற நிலையை பாருங்கள் என்றெல்லாம் விளக்கவுரை எழுத வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டாகி இருக்கின்றன.

உண்மையில் பல்லாயிரக்கணக்கான சென்னை நகரத்து மக்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்டு கையறு நிலையில் இருக்கிறார்கள். புயல் மழை நின்றவுடன் இயல்பான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது போல அயோக்கியத்தனம் வேறு எதுவும் இல்லை. எதிர்கால வாழ்வாதாரம் என்ற ஒன்றே இழந்துவிட்ட மக்கள் எப்படி மழை விட்ட உடனேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்..?? புகழ் பெற்ற எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தான் அச்சுட்டு வைத்திருந்த 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மழை நீரால் வீணாகி விட்டன. இனி நான் என்ன செய்வேன் என்கிற கேள்வியை நம் முன்னால் வைத்திருக்கிறார். இதுபோன்று பல லட்சக்கணக்கான கேள்விகள் சென்னை மாநகரம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் மறைத்துவிட்டு விஷால் திட்டிவிட்டார் பதிலுக்கு நாங்களும் திட்டுகிறோம் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தால் திராவிட மாடல் ஆட்சியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.

உண்மையில் ஒரு மக்களுக்கான அரசு என்ன செய்ய வேண்டும்..??

1. சென்னையை சுற்றி இருக்கின்ற குறிப்பாக மேற்கு பகுதியில் இருக்கின்ற 4000 நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எவ்வித சமரசமும் இல்லாமல் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

2. எவ்வித சூழலியல் பார்வையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பரந்தூர் விமான திட்டம் போன்ற ஆபத்தான திட்டங்களை ரத்து செய்துவிட்டு.. மழைநீர் காலத்து நீர் சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசே முன்வந்து ஏற்படுத்தி மழை நீரை வெள்ள நீராக வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.

3. சூழலியல் பிரச்சனைகளால் மாறிவரும் பருவச் சூழலுக்கு ஏற்ப அரசின் திட்டங்கள் மாற வேண்டும். 1950 காலத்திய மழை நீர் வடிகால் திட்ட முறைமைகளில் இருந்து விடுபட்டு நவீன கால மழை நீர் வடிகால் திட்ட முறைகளை கையாண்டு மழை நீரை கோடை காலத்திற்கான சேமிப்பு நீராக மாற்றுவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

3. கடந்த காலங்களில் மழைக்காலம் என்றால் ஒரு மூன்று மாத காலம். ஆனால் இப்போதெல்லாம் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த மழைக்காலத்திற்கான தண்ணீரும் மழைநீராக பெய்கிற சூழலை உணர்ந்து, அதற்கான தயாரிப்புகளில் தலைநகரக் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மேலும் சென்னை மாநகரம் விரிவடைந்து கொண்டே போனால் அதனைக் காப்பாற்றுபவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து விரிவடைகிற நகரத்தை கட்டுப்படுத்த, குவிக்கிற மக்கள் பெருக்கத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் மாற்று வழிகளை உடனடியாக சிந்திக்க வேண்டும்.

4. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் முன் வைப்பது போல சென்னை மாநகரை எல்லோரும் குவிவதற்கான குப்பைத் தொட்டியாக மாற்றாமல், நிர்வாக தலைநகரை திருச்சி போன்ற மாநிலத்தின் மையப் பகுதிக்கு மாற்றப்பட வேண்டும். விரிவாகிக் கொண்டே போகும் தலைநகர் மென்மேலும் சூழலியல் சவால்களை சந்திக்கப் போவது என்பது உறுதி. உடனடியாக இந்த ஆபத்து போக்கினை தடுத்து நிறுத்தி, நமது பக்கத்து மாநிலங்கள் மேற்கொள்வது போல நிர்வாக தலைநகர் ஒன்றினை சென்னை மாநகருக்கு வெளியே அமைப்பது நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும்.

******

விமர்சனங்கள் வைப்பவர்கள் அனைவரையும் வெறுப்போடு பார்க்கின்ற பார்வையை தவிர்த்துவிட்டு மக்கள் நலனுக்கான தொலைதூர சிந்தனையோடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு முதலாவதாக விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் திமுகவினர் தடுமாறுவது அவர்களது தோல்வியை காட்டுகிறது.

இயற்கை என்பது நமக்கு மேலானது தான். ஆனால் அரசு எந்திரம் இழைக்கின்ற தவறுகள் இயற்கை செய்கிற மீறல்களை தாண்டியது என்பதுதான் இதில் அடிப்படை. சாலைகளை சேர்த்து வைத்து மழைநீர் வடிகால்களை அமைக்கிறோம் என்ற பெயரில் பெயரளவுக்கு வேலை செய்துவிட்டு டெண்டர் விட்டு சம்பாதிப்பது அல்ல மக்கள் பணி.

அரசியல் / மக்கள் பணி என்றாலே சம்பாதிப்பது என்கின்ற “திராவிட மனநிலையை “ மாற்றி விட்டு சூழலியல் பார்வையோடு நவீன உத்திகளோடு புயல் மழையை கையாண்டால் இன்று தலைநகர் தத்தளிக்கின்ற கொடும் நிலை ஏற்பட்டு இருக்காது.

ஆசிரியர் என்கிற தோணி.

ஆசிரியர் என்றால் என்ன என்கிற எளிய கேள்விக்கு, “கற்பித்தல் என்ற முறையில் மாணவர்களுக்கு அறிவு திறன் மற்றும் நல் ஒழுக்கத்தை பெற உதவுபவர்..” என விக்கிப்பீடியா கூறுகிறது. இதில் அறிவு, திறன் போன்றவை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுபவை என்றாலும், நல் ஒழுக்கம் என்பது வகுப்பறையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

ஒரு சிறந்த ஆசிரியரை மாணவன் தன் வாழ்நாளில் மறப்பதில்லை.

ஒரு கல்லூரி பேராசிரியரின் மகன் என்கின்ற முறையில் என் தந்தையை சந்திக்க வருகிற எத்தனையோ மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை கண் பார்வை தெரியாத மாணவர் ஒருவர் தனது திருமண பத்திரிக்கை வைப்பதற்காக தன் ஆசிரியரான என் அப்பாவை தேடிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார்.

அவர் கல்லூரி படிப்பு முடித்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. என் அப்பா ஏதோ வேலை நிமித்தம் வெளியே போயிருந்த நேரம் அது. அவர் என் அலுவலகத்தில் என் தந்தைக்காக காத்திருந்தார். மெதுவாக பேச்சு கொடுத்து பார்த்தேன். தன்னைப் பார்வையற்றவர் என எல்லோரும் பரிதாபமாக பார்த்த போது அவரது ஆசிரியரான என் தந்தை தான் அவருக்கு நம்பிக்கை கொடுத்ததாக சொன்னார்.

இந்த வாழ்வில் நாம் கைவிடப்படுகின்ற தருணங்களில் எல்லாம் நாம் தேடி அலைவது நம்பிக்கை மிகுந்த சொற்கள் தானே. நம் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபரின் ஆன்மாவிலிருந்து வருகின்ற சொற்கள் தரும் நம்பிக்கைதான் நட்டாற்றில் கைவிடப்பட்ட நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறது.தன் ஆசிரியரை அந்தப் பார்வையற்றவர் நினைவு கூறும் போதெல்லாம் சற்றே உணர்ச்சிவசப்பட்டார் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

இன்னும் ஆழமாக அவர் மனதில் என் தந்தையின் உருவம் எப்படி இருக்கும் என நினைத்து வைத்திருப்பதாக சொன்னார். அதற்கு அடுத்ததாக அவர் சொன்னது தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

“பார்வைத்திறன் உள்ள உங்கள் விழிகளை காட்டிலும் இன்னும் அதி துல்லியமாக என் ஆசிரியரின் உருவம் என் ஆழ் மனதில் வரையப்பட்டிருக்கிறது..” என்றார் அவர்.

எதையும் வெறும் விழிகளால் பார்ப்பதை விட மனதால் பார்ப்பது வலிமையானது தானே..

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே என் தந்தையார் வந்து விட்டார். என் தந்தை காலடி சத்தம் கேட்டவுடன், அதுவரை தன்னைக் கடந்த எந்த காலடி சத்தத்திற்கும் எழுந்து நிற்காத அந்தப் பார்வையற்ற மாணவர் எழுந்து நின்றார். தன் ஆசிரியரின் காலடி ஒலி அவருக்கு அவ்வளவு பரிச்சயமாக இருந்தது.

என் தந்தை வந்தவுடன் தன் மாணவனின் கரத்தை இறுக பற்றிக் கொண்டார். சில நொடிகள் அந்த இடம் அமைதியாக இருந்தது. என் தந்தைக்கு அது ஒரு உணர்வுபூர்வமான தருணம். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணியில் இருந்தமைக்கான உச்சகட்ட அங்கீகாரத்தில் அவர் மிதந்து கொண்டு இருந்தார் என்பதை நெகிழ்ந்து கலங்கிய அவரது கண்கள் மூலம் நான் கண்டு கொண்டேன்.

…..

மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் எனது இயற்பியல் ஆசிரியர் ஜெகதீசன். வழக்கமான பாட கற்பித்தல் முறையை தூக்கி எறிந்து விட்டு உரையாடல்கள் மூலமாக மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான கல்வி அமைய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” என்கிற குறளை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஒரு மாணவனுக்காக தலைமை ஆசிரியரிடம் சென்று சண்டை போட்டுவிட்டு அவரது மேசையில் தன் மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு வந்து விட்டார்.அந்த மாணவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தலைமை ஆசிரியர் பொறுமை காக்க, மறுநாள் அந்த மாணவன் எங்கேயோ பணம் ஏற்பாடு செய்து கட்டணத்தை செலுத்தி விட்டான்.

நன்றி சொல்வதற்காக ஜெகதீசன் சாரை சந்திக்க வந்த அந்த மாணவன் கலங்கிக் கொண்டே .‌”எனக்காக மோதிரத்தை கொடுத்து விட்டீர்களே சார்..” என சொல்ல, “அந்த மோதிரம் தங்கம் என்ற உலோகத்தால் ஆனது. உனது படிப்பு அந்த உலோகத்தை விட மதிப்பு மிகுந்தது..”. எனக் கூறிய அவரது சொற்கள் இன்னும் எனக்கு நினைவில் நிற்கின்றன.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் எனது தமிழாசிரியர் விஜயராகவன். மாணவர்களை தனியார் நிறுவனங்கள் வெளியிடும் நோட்ஸ் வாங்குங்கள் என சொல்லும் ஆசிரியர்களுக்கு மத்தியில் தான் நடத்தும் பாடங்களிலிருந்து மாணவர்களுக்கான நோட்ஸ் எனப்படும் பாடப் குறிப்புகளை தயாரித்து எழுத வைப்பார். மிக சுவாரசியமாக வகுப்புகளை வகுப்பறையில் அரசியல் பேசுவார். தேர்தல் முறை மூலம் வகுப்பு தலைவனை தேர்ந்தெடுப்பார்.

அந்தக் காலகட்டத்தில் போலியோ பாதிக்கப்பட்ட என் கால்களுக்கு உலோகத்தில் ஆன காலிபர் அணிந்திருப்பேன். என் உடல் சிரமத்தால் நான் வகுப்பு தலைவனாக மாற மறுத்தபோது, அந்த முறை என்னை வலுக்கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்து, வகுப்பு தலைவன் ஆக்கினார். இதற்கு எதிரே போட்டியிடும் மாணவனை அழைத்து சொல்லி இருந்தால் அவன் போட்டியிலிருந்து விலகி இருப்பான் தான். இது குறித்து கேட்ட போது, ” நீ போட்டி போட்டு வெல்வது தான் உனக்கான தகுதி. அது கருணையால் எப்போதும் கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இரு.‌” என்று சொன்னார்.

பள்ளி முடிந்தவுடன் வகுப்பறையில் அந்த காலிப்பரை சரி செய்து கொண்டு நான் வெளியே நடந்து வரும் வரையில் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டு நடந்து வருவார். நான் எழுதும் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் அவரது பிச்சை என இந்த நொடியில் நினைத்து நெகிழ்கிறேன்.

அதேபோல் எனது மூத்த வழக்கறிஞர் பலராமன். எந்தத் தருணத்திலும் அவர் என்னை விட்டுக் கொடுத்தது இல்லை. வாழ்க்கையின் அனைத்து விதமான பிழைகளையும் செய்துவிட்டு ஒரு நாள் மாலையில் அவர் வீட்டுத் திண்ணையில் படுத்து இருந்த போது, என்னை உள்ளே அழைத்துச் சென்று அவர் படுக்கையில் படுக்க வைத்தார். “நல்லா தூங்குடா.. எல்லாம் சரியாயிடும்.” என சொல்லிவிட்டு போனபோது என் கண்கள் நிறைந்து இருந்தன. ஏதோ ஒரு தருணத்தில் தூங்கி எழுந்த போது நள்ளிரவாகி இருந்தது. நான் எழுந்த சத்தம் கேட்டு விழித்த அவர் தனது இளம் மனைவியை அழைத்து எனக்கு கோதுமை தோசை சுட்டுத்தர சொன்னார். அக்கால கட்டத்தில் எல்லாராலும் கைவிடப்பட்ட நான் அன்றைய இரவில் அந்த கோதுமை தோசையால் தான் உயிர்ப்பித்தேன்.

“எல்லாம் சரியாகிவிடும்..” என அவரது சொற்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

….

அண்ணன் சீமான். வெறும் சொற்களால், அழைத்தலால் மட்டும் அவர் அண்ணனாக இருந்து விடுவதில்லை என்பதுதான் அவரின் முக்கியத்துவம். கட்சியிலே இணைகின்ற ஒரு எளிய தம்பிக்கு அண்ணனாக மாறுகிற அந்த தருணம் உள்ளொளி நிறைந்த உணர்வுபூர்வமானது. தம்பிக்கு மட்டும் அண்ணன் அல்ல. அவனது பெற்றோர்களுக்கு அவர் தான் மூத்த மகன். அவனது உறவினர் அனைவருக்கும் அவரும் உறவினர். நெகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட சிக்கலான இந்த உணர்ச்சி முடிச்சினில் தான் நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

” நாளும் பல நற்செய்திகள் ” என்று அவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு நாளையும் புதிதாக்குபவை. எல்லோரையும் வாசிக்க சொல்லும் அவர் தன் மேடையை மாபெரும் வகுப்பறையாக மாற்றுகின்ற மாபெரும் ஆசிரியர். அந்த வகுப்பறையில் அவர் அரசியல் சூழலியல் பொருளியல் என தொடாத பாடங்களே இல்லை. தலைப்பை சார்ந்து பேசுகிற ஒரே ஒரு அரசியல் தலைவர் இன்று தமிழ்நாட்டில் அவர் மட்டும்தான்.

தனிப்பட்ட வாழ்வில் நிறைய துரோகங்கள் முதுகுக்கு பின்னால் நடந்து விட்டன என உணர்ந்த ஒரு இரவில் அண்ணன் சீமானுக்கு என் மனவலி தாங்காமல் அழைத்தேன்.

அவரிடம் எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை. மெல்ல விசும்பிக் கொண்டே இருந்தேன்.

“என்ன ஆச்சுடா..” என்று கேட்டார் அண்ணன். “துரோகம்னே .. ” என்று கலங்கியவாறு சொன்ன போது அண்ணன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். “நம் தலைவர் என்றால் சுட்டு விட்டுப் போய் விடுவார். நம்மால் அப்படி செய்ய முடியாது. நாம் விட்டுவிட்டு போய்விடுவோம்..” என்று அவர் மிகுந்த பக்குவத்துடன் சொன்னதைத்தான் என் வாழ்நாள் பாடமாக கடைபிடித்து வருகிறேன்.

எல்லாவற்றையும் கடப்பது என்பது வாழ்வில் மிக மிக முக்கியமானது. அதனால்தான் வாழ்க்கையை பெரும் நதிக்கு ஒப்பிடுகிறார்கள். துயரங்களும் ,துன்பங்களும் வெள்ளப் பெருக்காக பெருக்கெடுத்து ஓடும் இந்த வாழ்வென்ற நதியை கடப்பதற்கு நமக்கு கிடைத்த தோணிகள் தான் நம் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் தான் நம்மை வழி நடத்துகிறார்கள். வழி தவறும் கணங்களில் அவர்களது சொற்கள் நமக்கு திசைகாட்டிகளாக மாறுகின்றன.

“அறிவு என்பது ஏதோ ஒன்றை கற்றுக் கொள்வது. ஞானம் என்பது ஏதோ ஒன்றை கைவிடுவது..” என்கிற ஜென் தத்துவம் ஒன்று உண்டு.

அறிவையும் ஞானத்தையும் ஒரே நேரத்தில் அடைவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

அது நம் ஆசிரியரின் கண்கள். அதில் சரணடைந்தோர் யாரும் சங்கடப்படுவதில்லை.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

சமூக வலைதளங்களில் சகல காலமும் வசிப்போருக்கு..

சமூக வலைதளங்களில் 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் சில பலரது பதிவுகளை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் தங்கள் அலைபேசி திரைக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். யாராவது நினைவூட்டினால் மறுத்துவிடுவார்கள்.

இதில் தான் அவர்களுக்கு சகலமும். நகைச்சுவை கிண்டல் கேலி கோபம் காதல் காமம் நட்பு உறவு பாராட்டு விலகல் புலம்பல் என சர்வ உணர்ச்சிகளின் சதிராட்டத்தை அலைபேசி திரைகளுக்கு உள்ளாகவே அவர்கள் அடக்கி விடுவார்கள்.

எங்கள் பகுதியில் அலைபேசியில் மட்டும் எங்கள் கட்சியில் இயங்கிய ஒருவர் இருந்தார். அவர் அலைபேசி வாயிலாகத் தான் கட்சியில் இணைந்தார். அலைபேசியில் தான் கருத்து சொல்வார். அந்த அலைபேசியிலேயே விமர்சனம் செய்வார். கட்சிக்காரர்கள் யாருக்காவது ஏதாவது குறை என்றால் இவர்தான் முதலில் சென்று அந்தக் குறை என்ன என கேட்டு தனக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவரை அந்தக் குறையில் சம்பந்தப்படுத்தி திட்டுவார். நேரில் கலந்தாய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைத்தால் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை அன்றைய தினம் தான் ஊரில் இல்லை என்பார். போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் அன்று அவரது அலைபேசி அமைதியாகிவிடும். நாங்களும் முடிவு செய்து எப்படியாவது அவரை நேரில் பார்த்து விட வேண்டும் என பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. ஆனால் விமர்சன அலைகளுக்கு மட்டும் அவரிடத்தில் என்றும் குறை இருக்காது. ஒருமுறை அண்ணன் எங்கள் ஊருக்கு வந்தபோது இந்த முறையாவது அந்த “அலைபேசி நபரை” பார்த்து விடுவோம் என முயற்சித்து நேரில் வாருங்கள் அண்ணனை சந்திப்போம் என அழைத்தோம். ஆனால் தலைவர் ‘நைசாக’ எஸ்கேப் ஆகி வந்திருந்த ஒரு தம்பி அண்ணனோடு ஒரு புகைப்படம் எடுத்து பதிவு போட்டதில் சென்று “பலர் படம் எடுக்க முடியவில்லை” என இந்தப் பக்கமே வராத இவர்(!) குறை சொல்லி ‘இவர்கள் இப்படித்தான்’ என பொறுப்பாளர்களை திட்டி தன்னிச்சையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

பிறகு விசாரித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவருக்கு அலைச்சல் வெயில் மழை இரவு பயணம் போராட்டம் சிறை கட்சி என பலவற்றிலும் மிகுந்த அச்ச உணர்வு. அவர் எதற்கும் வர மாட்டார். வரவும் அவருக்கு அச்சம். ஆனாலும் கருத்து சொல்லியே ஆக வேண்டுமே.. அதற்குதான் அந்த அலைபேசி. இவர் போல எங்கள் அமைப்பில் மட்டுமல்ல. பல அமைப்புகளிலும் பல நபர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்.

இப்படி அலைபேசி உரையாடல்களை உண்மை என நம்பி அதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிலரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக முகநூல் ஆதிக்கம் பெருகிய போது இதுபோன்ற நபர்களும் உருவானார்கள். முகநூலிலேயே அவர்களுக்கு சொந்த பந்தங்கள் ஏற்பட்டன. அதிலேயே அன்பு.அதிலேயே விரோதம். அதிலேயே பிரிவு. இப்படி உலகம் அவர்களுக்கு அந்த அலைபேசி திரைக்குள்ளாகதான்.

ஏன் நேரில் வரவில்லை என யாரும் அவர்களை கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் நேரில் வர மாட்டார்கள். ஒரு பொறுப்பு எடுத்து செய்யவும் அவர்களால் முடியாது. செய்பவர்களையும் அவர்களுக்கு பிடிக்காது. என்ன செய்வது.. தங்கள் கற்பனை படகில் ஏறி அலைபேசி முழுக்க புலம்பல்களை நிரப்பித் தள்ளுவார்கள்.

அமைப்புக்குள்ளாக இருக்கிற முரண்களை ஒரு அலைபேசி அழைப்பின் மூலமாக தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிவிட முடியும் தான். அப்படி பேசினால் அது இருவர் சம்பந்தப்பட்ட உரையாடல் மட்டுமே. அதற்கு வாய்ப்பு இருந்தும் பொதுவெளியில் பேசவும் எழுதவும் தான் அவர்களுக்கு விருப்பம்.

முகநூல் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் நம்மை, நம் திறமைகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான அல்லது நமது செய்திகளை, வாழ்த்துக்கள் , ஆழ்ந்த இரங்கல் போன்ற உணர்வுகளை குறிப்பிட்ட நோக்கில் பரப்புவதற்கான ஊடகங்கள் மட்டுமே. இந்த மெய்நிகர் ஊடகங்கள் மூலமாக நமக்கான வாசகர்கள் நமக்கான பார்வையாளர்கள் போன்றவற்றை எளிதில் பெறுகிறோம். அந்த ஒரு வசதியை தவிர இதில் வேறு எந்த புண்ணாக்கும் இல்லை.

கட்சிக்கு உழைப்பவர்கள் எப்படி இருந்தாலும் ஊர் ஊராக அலைந்து கொண்டு போராடிக் கொண்டு எங்கேயோ கொடியேற்றிக்கொண்டு பலரை சந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களும் நிறை குறைகள் நிரம்பிய மனிதர்கள் தான். குறைகள் ஏதேனும் இருப்பின் ஒரு அலைபேசி உரையாடல் மூலம் எளிதில் சொல்லி அதை களைந்து விடலாம் தான். ஆனால் பொதுவெளியில் எழுதி அவர்கள் குறைகளை மட்டுமே ஊதிப் பெருக்குவதன் அரசியல் வன்மம் தனிப்பட்ட கோபம் போன்ற மனித உணர்ச்சிகளை எல்லாம் தாண்டி அது ஒரு உளவியல் கோளாறு.

அலைபேசியை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள 1008 வழிகள் இருக்கின்றன. அதை விடுத்து விட்டு புறம் பேசுவதையும் குறை கூறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் அன்பர்களை காணும் போது உண்மையில் பாவமாக இருக்கிறது. இவர் அடுத்தவரைப் பற்றியே யோசிக்கிறாரே, தன்னிலை குறித்து என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பாரா என சிந்திக்கும் போது பரிதாபம் மிஞ்சுகிறது.

மணிரத்தினம் இயக்கிய “குரு” திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தன்னை அதிகமாக விமர்சிக்கும் பத்திரிக்கைக்கு குருபாய் அதிகம் விளம்பரம் கொடுக்க சொல்வார். அது ஒரு வகையான எதிர்மறை செல்வாக்கு. (Negative publicity). மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த குணாதிசயம் அதிகம் இருப்பதாக சொல்வார்கள். பாராட்டோ விமர்சனமோ அது தன்னை சுற்றி தான் நடக்க வேண்டும் என திட்டமிட்டு சில வேலைகள் செய்வார் என்பார்கள். இது போன்ற மனிதர்கள் இணைய உலகிலும் உண்டு.இதில் ஒருவரை வெறுப்பேற்றுவதற்காக 24 மணி நேரமும் சிந்தித்து பக்கம் பக்கமாய் எழுதி விமர்சிப்பவர்களை பற்றி யோசித்துப் பாருங்கள். உண்மையில் விமர்சிக்கப்படுபவர் விமர்சிப்பவர்களை பயன்படுத்திக் கொண்டு வளர்ந்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார். மற்றொருவரோ பதிவு போட்டுக் கொண்டு தனக்குத்தானே மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.இதில் யார் புத்திசாலி ‌‌…??

ஒருவரை எதிர்ப்பதற்காக பக்கம் பக்கமாக பதிவு பதிவாக போட்டு தள்ளும் பலரும் தங்களை அறியாமல் தாங்களே பலியாகிக் கொண்டிருப்பதை உணராமல் இருக்கிறார்கள்.

உண்மையில் நமது உணர்ச்சிகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அலைபேசி ஊடாக அடுத்தவர் கையில் அதற்கான பொத்தானை கொடுத்துவிட்டு அடுத்த பதிவு என்ன வருகிறது என வேடிக்கை பார்ப்பது போல பைத்தியக்காரத்தனமானது எதுவும் இல்லை.

நமது உள்ளூர்களில் விளம்பர செய்தி தாள்கள் இலவசமாய் வரும் இல்லையா… இங்கே வீட்டுமனை கிடைக்கும் இங்கே இந்த பொருள் கிடைக்கும் என்றெல்லாம் விளம்பரங்கள் நிறைய காணப்படும் அந்த செய்தித்தாள்கள் போலத்தான் இந்த முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள்.

அளவற்று அதில் மூழ்கி போய் உணர்ச்சிகளை கொட்டிக் கொண்டே இருப்பது என்பது.. ஒரு காலத்தில் அதிகம் குடித்துவிட்டு உடல் நலனை கெடுத்துக் கொண்டவர் பின்னர் இறுதி காலத்தில் வருத்தப்படுவது போல ஆகிவிடும்.

நமக்கு முன்னால் அலைபேசி தாண்டிய காலத்தின் ஒரு பியானோ இருக்கிறது. அதை இசைக்க அலைபேசியை தவிர்த்த ஒரு உளவியல் தேவை.ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவித்து உறவுகளோடு கொண்டாடி, சமூக அரசியல் பணிகளுக்கு வீதியில் நின்று வியர்க்க வியர்க்க போராடி அதையும் ரசித்து செய்து அனுபவிக்க 1008 உணர்ச்சிகள் நமக்கு இருக்கின்றன.

சுய மேதமையை போதிக்கும் அலைபேசி திரை சத்தியமாக போலியானது என உணரும் ஒவ்வொருவரும் தாங்கள் இதுவரை இதற்காக செலவு செய்த நேரத்தை யோசிக்கும் போது கண்டிப்பாக வருத்தப்படுவார்.

நவம்பர்-8 அண்ணன் சீமான் பிறந்தநாள்.

“அமைதியான வரலாறு என்ற ஒன்றே உலகில் கிடையாது” என்கிறார் மாமேதை வால்டர். வரலாற்றின் பக்கங்கள் எங்கோ தோன்றிய தனி நபர் விளைவித்த சிந்தனைகளால், கலகங்களால் சதா அதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடம், போகிற போக்கில் நிகழ்ந்துவிடுகிற கால ஓட்டத்தில் இருந்துதான் வரலாற்று அதிர்விற்கான சூட்சமப் புள்ளிகள் தோன்றி விடுகின்றன.

இவர் எங்கிருந்து வந்தார் என யோசிக்கும் முன்னே வரலாற்றுநாயகர்கள் சமகாலத்து சிந்தனைகளை மாற்றிக் கட்டமைத்து புது பாய்ச்சலை நிகழ்த்தி விடுகிறார்கள் ‌.

எப்படி சாத்தியம் என்று நாமெல்லாம் யோசிக்கும்போது நம்மில் ஒருவராக பிறந்து சீமான் என்கின்ற தனி மனிதன் சாத்தியப்படுத்தி சாதித்துக் காட்டியதைத்தான் நாம் 12 வருடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி உருவான புள்ளியான மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் ..” என்கிற பேரணி நடந்த போது கூட தமிழகத்தில் தமிழ் தமிழருக்கு எதிராக ஏதேனும் தோன்றினால் கலகம் செய்ய ஒரு சிறு அமைப்பாக செயல்படும் எண்ணம் தான் அண்ணன் சீமானிடம் இருந்தது. ஆனால் காலம் வேறு மாதிரி சிந்தித்து வைத்திருந்தது என்பதை அவர் கூட அப்போது உணரவில்லை.

படிப்படியான நகர்வு என்பது போன்ற ஒரு தொடர் ஓட்டத்தில் ஒரு பேரணிக்கு அனுமதி வாங்க உண்டாக்கப்பட்ட அமைப்பு இயக்கமானது. இயக்கம் கட்சியானது. அந்தக் கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த் தேசியத்தை அரங்கங்களில் இருந்து விடுதலையாக்கி வெகுஜன அரசியல் பரப்பிற்கு கொண்டு வந்தது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அசலான எதிர்க்கட்சியாக இன்று களத்தில் நிற்கிறது.

ஓய்வறியா தன் உழைப்பால், கொட்டி முழங்கும் தன் தமிழால், சமூகத்தின் கூட்டு மனசாட்சி அல்லது மக்களின் பொதுவான கருத்தியல் போன்றவற்றின் திசையை மாற்றி, தமிழ்த் தேசிய இனத்தின் சிந்தனை ஓட்டத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் அண்ணன் சீமான்.

2009 க்கு பிறகான காலகட்டத்தை திராவிடத்தின் பெருமிதங்களை, தேசியத்தின் தோற்ற மயக்கங்களை தன் அனல் தமிழால் தகர்த்தெறிந்த காலமாக அவர் மாற்றினார்.

ஒரே நேரத்தில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர், தமிழர்கள் திராவிடர்கள் அல்லர் என்று அரசியல் கணக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு துணிந்து அண்ணன் சீமான் முழங்கியது அசலான கருத்தியல் புரட்சி.

இது எதுவுமே அவர் திட்டமிடவில்லை. அதுவாகவே ஒவ்வொரு படியாக நிகழ்ந்ததையும், நகர்ந்ததையும் நாங்கள் அனைவரும் விழிகள் வியக்கக் கண்டோம்.

ஒரு மாயவிசை ஒன்று அவரை இயக்கிக் கொண்டே இருந்ததை நாங்கள் உணர்ந்த போது அவர் தன் லட்சிய பயணத்தில் வெகு தூரம் கடந்து வந்து விட்டார். அந்த மாயவிசையை அவரும் தனக்குள் உணர்ந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட ஒரு இனப்படுகொலைக்கு பின்பான இந்த காலகட்டத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.‌.எல்லோரும் அதைக் கடந்து விடுவோம் என அவருடன் பயணித்த பலர் சமரசமாகி சரண் அடைந்த பிறகும் கூட, இன்றளவும் துளியும் சமரசம் இன்றி அதே உக்கிரத்தோடு போராடிவரும் அண்ணன் சீமான் எங்கள் அண்ணன் என்பதில் எங்களுக்கு பெருமிதம் உண்டு.

இன்று தமிழகம் கண்டு இருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கு குறிப்பாக தமிழ்- தமிழர் உணர்வேற்றத்திற்கு அண்ணன் சீமானே முதன்மைக் காரணம்.

அவரோடு நிற்பதும் , அவரோடும் பயணிப்பதும், எம் இனத்திற்காக எம் மொழிக்காக நாங்கள் செய்யும் பிறவிக் கடன்.

அண்ணன் சீமான் நீடூழி நலத்தோடு வாழட்டும்.

தமிழர் நிலம் தலை நிமிரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

உலகமெங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை..

????

“சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தன.

உண்மையில் அது ஆபத்தான முயற்சி தான். அதுவும் ஒரு வெகுஜன அரசியல் கட்சி தன் கலை பண்பாட்டு பாசறை மூலமாக தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக சங்கப் பாடல்கள் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் பாடல்களை வெகுமக்கள் திரள் முன் மேடையேற்றம் செய்கிற நிகழ்ச்சி அது.‌ ஓட்டு அரசியலுக்கு இது எந்த விதத்தில் கை கொடுக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே அரசியல் பார்வையாளர்களுக்கு எழ வைக்கிற முயற்சி அது. தன் கட்சி கொடிகள் சின்னங்கள் லட்சணைகள் எதுவும் இல்லாமல் கவனமாக அவைகள் தவிர்க்கப்பட்டு, “மீண்டெழும் தமிழ் மொழி ” என்கின்ற புனித லட்சியத்திற்காக தன்னலம் பார்க்காமல் நாம் தமிழர் கட்சி செய்திருக்கின்ற இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு தமிழர் வரலாற்றில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கிற தொடக்கப் புள்ளியாக கொள்ளலாம்.

இருந்தாலும் இந்த நிகழ்ச்சி எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்கிற கவலையும், கூட்ட ஒழுங்கு பற்றிய அச்சமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலருக்கும் அச்சமயத்தில் இருந்தது.

ஆனால் இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சி குறித்து மகத்தான நம்பிக்கை கொண்டிருந்து உலகத் தமிழர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் பணியில் அண்ணன் சீமான் தீவிரமாக இருந்தார். கட்சி பொறுப்பாளர்களை அழைக்கும் போது கூட “இது மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வு. வரலாற்றில் முதல்முறையாக, தவற விட்டு விடாதே..” என உரிமையோடும், அதே நேரத்தில் கொஞ்சம் கண்டிப்போடும் அழைத்த அந்த அழைப்பு, ஆயிரக்கணக்கான தமிழர்களை 17-09-2022 சனிக்கிழமை மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் திரட்டியது.

அந்த அரங்கில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கூடியிருந்த எல்லோர் மனதிலும் இருந்த கேள்வி ” அடுத்து வருகிற சில மணி நேரங்களை எப்படி கடப்பது ‌…”

ஏனென்றால் இது போன்ற பல நிகழ்ச்சிகளை அவர்கள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார்கள். இது போன்ற இசை நிகழ்ச்சியில் திரைப்பட பாடல்களுக்கே உரிய வசீகரமோ, துள்ளல் இசையோ போன்ற கொண்டாட்ட அம்சங்கள் இடம்பெறாது என்பது இதுவரை
நிகழ்ந்த நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் பெற்றிருந்த வாழ்வியல் பாடம். ஒரு வகுப்பறையில் நடக்கும் தமிழ் வகுப்பில் செய்யுள் பாடப்பகுதி‌ நடத்தப்படும் போது எது போன்ற அனுபவம் (?) நமக்கு இதுவரை கிடைத்ததோ அதே அனுபவத்தை இந்த நிகழ்ச்சியும் வழங்கி விடுமோ என்கிற அச்சம் அங்கே கூடியவர்களுக்கு இருந்தது.

ஆனாலும் அண்ணன் சீமான் அழைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசுவதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே அந்த நெருப்புத் தமிழை கேட்பதற்காக வேணும் நாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என அவரவருக்கு ஒவ்வொரு சமாதானத்தை உள்ளுக்குள் உண்டாக்கி இருந்தார்கள்.

அந்த அரங்கில் அமைக்கப்பட்டு இந்த மேடை இந்த கணக்குகளை எல்லாம் தாண்டி பார்த்த நொடியில் ஆர்வத்தை தூண்டக்கூடிய பிரம்மாண்ட ஒழுங்குகளை கொண்டிருந்தது.

மேடையில் ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட தமிழிசை மூத்தோர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த முறையும், ஒலி ஒளி அமைக்கப்பட்டிருந்த ஒழுங்கும் ஒரு பிரம்மாண்டமான இசை விருந்தை எதிர்கொள்ள பார்வையாளர்களை தயார் படுத்தின.

சற்றே இருளும், குளிரூட்டி குளிரும் நிலவிய அந்த அரங்கில் சில முணுமுணுப்புகளை தாண்டி பெரிய ஓசைகள் இல்லை. மேடையிலும் யாரும் இல்லை.
எல்லோருக்கும் இனம் புரியாத அமைதி உள்ளுக்குள் ஊற, தயாரானது அரங்கம்.

சரியாக ஆறு மணிக்கு அண்ணன் சீமான் முகம் முழுக்க பெருமித புன்னகையோடு, அரங்கத்திற்குள் வரவே, உற்சாக குரல்கள் விண்ணை தொட்டன. அவரைத் தொடர்ந்து பட்டாடையோடு உள்ளே வந்தார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் மேடையில் அடுக்கடுக்கான வரிசையில் மிக ஒழுங்காய் நிற்க மேடை முன்புறம் அமைக்கப்பட்ட சிறு மேடையில் வந்து நின்று நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார் ஜேம்ஸ் வசந்தன்.

முதலில் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பார்வையாளர்கள் என்கிற இருவர்களுக்குமான இடைவெளி இருக்கக் கூடாது, இந்த நிகழ்ச்சியில் அனைவருமே பங்கேற்பாளர்கள் என்பதை முத்தாய்ப்பாக அறிவித்தார்‌ அவர்.

தன் உரையின் தொடக்கத்திலேயே
பார்வையாளர்கள் கொண்டிருந்த நிகழ்வு குறித்தான அச்சங்களை
தன் புன்னகை மொழியால் அடித்து நொறுக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் , தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அவர் ஆற்றிய சிறு உரை அந்த நிகழ்ச்சி எப்படி அமையப் போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

முதலில் “திருக்குறளின் கடவுள் வாழ்த்து” அதிகாரம்.

அரங்கமே அமைதியானது. மேடையில் நின்றிருந்தவர்களின் சேர்ந்திசை குரல் மெதுவாக தொடங்கியவுடன், ஒரு பன்னாட்டு இசை நிகழ்ச்சிக்கான நேர்த்தியை நம்மால் உணர முடிந்தது.

“அகர முதல” என தொடங்கிய போது அருகே வைக்கப்பட்டிருந்த திரைகளில் வரிகளும் வரிகளுக்கான விளக்கமும் தோன்றத் தொடங்க, நவீன இசையும் இணைந்து கொள்ள கண்ணுக்கும் காதுகளுக்கும் பெரும் விருந்தை அந்த நிகழ்ச்சி படைக்க தொடங்கியது. அடுத்தது புறநானூறு , குறுந்தொகை, பாரதிதாசன் பாரதியார் பாடல்கள், பாடல்கள் காளமேகப்புலவரின் கவிதைகள்,மீனவர் பாடல் என அடுத்தடுத்த பாடல்கள், அதற்கான முன்னுரைகள் என நிகழ்ச்சிக் களைக் கட்டியது.

பாரி மகளிர் பற்றி சங்க கால கவிஞர் கபிலர் பாடிய பாடலைக் கேட்கும் போது வேள்பாரி உருவம் திரையில் தோன்ற, நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களே தோன்றுவதாக உணர்ந்து அரங்கில் உள்ளோர் விழி நிறைந்து உறைந்தனர்.

அதேபோல் தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடலின் வரிகளும் இசையும் அந்த அரங்கில் உள்ளவரை சொக்கி இழுத்து மயக்கி போட்டன என்றால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற துள்ளல் பாடல் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைவரையும் எழுந்து ஆட வைத்தது. அண்ணன் சீமான் உள்ளிட்ட அந்த அரங்கில் உள்ளோர் அனைவரும் எழுந்து ஆட
உச்சகட்ட கொண்டாட்ட தருணத்தை பார்வையாளர்கள் அனுபவித்தார்கள்.

“விடிவெள்ளி தானே நம் விளக்கு.
..” என்கின்ற மீனவர் பாடல் அரங்கில் உள்ளோர் அனைவரையும் ஐலேசா போட வைத்தது.

ஈடு இணையற்ற தொழில்நுட்ப மேன்மையோடு அமைக்கப்பட்ட அரங்கு, துல்லியமான ஒலி ஒளி வசதிகள் என பிரமிக்க வைத்த 90 நிமிட அந்த நிகழ்ச்சி , தமிழரின் காதல், வீரம், அறம், தொன்மை என அனைத்து பக்கங்களையும் தொட்டு காட்டி பார்க்கும் அனைவரையும் பரவசப்படுத்தியது. “யாயும் யாயும்
யாரோ யாராகியோரோ..” என்கிற சங்க கால காதற் பாடல் இசைக்கப்படும்போது முழுக்க தோன்றிய திரை முழுக்க காதற் சின்ன இதயங்கள் பேரழகு வடிவமைப்பால் நம்மை வெகுவாக கவர்ந்தன.

எல்லா காலத்திலும் எல்லா இசை வடிவங்களிலும் ஒரு மொழி பொருந்துகிறது என்றால் அந்த மொழி எப்படிப்பட்ட வடிவம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை தன் இசை மூலம் ஜேம்ஸ் வசந்தன் நுட்பமாக விளக்க விளக்க அரங்கில் உள்ளோரெல்லாம் தன்னை மறந்து தன் இனத்தையும், தன் மொழியையும் நினைத்து பூரித்து நின்றார்கள்.

90 நிமிட வெகு அற்புதமான நிகழ்ச்சிக்குப் பிறகு, வாழ்த்துரை வழங்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் பலத்த வாழ்த்தொலிகளுக்கு மத்தியில் மேடை ஏறினார்.

மிகுந்த உற்சாகமும் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்த மனிதராக காணப்பட்ட அண்ணன் சீமான் கஎப்படி இசை நம் மொழியின் உயிராக இருக்கிறது என்பதை இலக்கிய சான்றுகளோடு உணர்வுபூர்வமாக உரையாற்றினார். ஓசைக்கும் இசைக்குமான வேறுபாடை அவர் விவரித்த முறை அவரது ஆழ்ந்த பேரறிவை, வாசிப்பை வெளிப்படுத்தியது. கோவில்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதன் கோபத்தையும் தன் உரையில் வெளிப்படுத்திய அவர், இப்படிப்பட்ட புலவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என வியப்பாக தெரிவித்த போது அவர் அடைந்த அதே வியப்பு நிகழ்ச்சியை கேட்ட பார்த்த அனைவரும் அடைந்தார்கள்.

ஆழமான அதே சமயத்தில் அழகான மொழியோடு இசை நிறைந்த வடிவத்தோடு தன் உரையை ஆற்றி அமர்ந்த அண்ணன் சீமான் வாழ்த்துரையில் ஒரு துளி அளவு கூட சமகால அரசியல் குறித்து பேசவில்லை என்பது மிக மிக குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அது தமிழுக்கான மேடை. தமிழ் இசைக்காண மேடை. அதில் அரசியலை கலக்க வேண்டாம் என்கிற அவரது உறுதி தமிழ் நிலத்தில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் வாய்த்திராத அற்புத உளவியல்.

அண்ணன் சீமான் வாழ்த்துரைக்குப் பிறகு ஏற்கனவே இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களில் சிறந்தவை மட்டும் பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் இசைக்கப்பட்ட போது அரங்கம் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றது.

வாழ்க்கையில் இது போன்ற அனுபவத்தை இதுவரை அனுபவித்ததில்லை என்பதை நிகழ்ச்சி முடிந்த பிறகு பார்வையாளர்களின் பரவச முகங்களே அடையாளங்களாய் திகழ்ந்தன.
..

ஒரு மொழி அதுவும் உலகத்தின் மூத்த தொன்மையான இன்றளவும் பேச்சு வழக்கில் எழுத்து வழக்கில் இருக்கின்ற செவ்வியல் மொழி இத்தனை காலங்கள் கடந்த பிறகும், இத்தனை வரலாற்றுப் பக்கங்கள் நகர்ந்த பிறகும் உயிர்போடு இருந்து நவீன கால இசை திறப்புகளிலும் பொருந்துகிறது என்று சொன்னால், தமிழ் மொழி போல் வேறு எந்த மொழியும் இல்லை என்பதை தமிழர் பெருமிதம் கொள்ளலாம் என்பதற்கு சான்று இந்த இசை நிகழ்ச்சி.

குறிப்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை குழுவினரின் அளவற்ற உழைப்பின் மூலம் பயிற்சி மூலம் அடைந்த ஒழுங்கு தான் இந்த நிகழ்ச்சி அடைந்திருக்கும் வெற்றியின் மூலதனம். ஒரே நேரத்தில் காணொலி மூலமாகவும் இசையொலி மூலமாகவும் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும் இளம் பெண்களும் அளவற்ற திறமை கொண்டவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், 90 நிமிட நிகழ்ச்சியில் ஒரு நொடியை கூட வீணாக்காமல் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தையும் , தமிழ்மொழி உணர்ச்சியையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

ஓட்டு அரசியலில் வெகுஜன கட்சியாக செயல்படும் நாம் தமிழர் கட்சி என்கிற அமைப்பு சங்க தமிழோசை என்கிற மொழி மீட்பு இசை நிகழ்ச்சியை நடத்துவதன் மூலமாக வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, தமிழர்கள் தங்களது பண்பாட்டு தளத்தில் மொழி மீட்பு களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்ச்சியை உலகமெங்கும் பரந்து வாழக்கூடிய தமிழர்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டது.

நிகழ்ச்சி மேடையிலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் சொன்னது போல இந்த தமிழோசை ஒவ்வொரு ஊரிலும் உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

மெய் சிலிர்க்க நடந்த இந்த வரலாற்று பெரு நிகழ்வு பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக ஆழமானது.

இதே நிகழ்ச்சி உலகமெங்கும் நடக்கட்டும்.
உலகத் தமிழர் உள்ளத்தில் தமிழ் உணர்ச்சி மலரட்டும்.

“உலகம் எங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை.”

நன்றி : வேல் வீச்சு இதழுக்கான அட்டைப்பட கட்டுரை.

பெளத்தம் என்னும் பெருங்கடலிருந்து…

????

சமீபத்தில் அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking ) எழுதி அவரது மகள் லூசி தொகுத்த “ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்” (Brief answers to the Big questions )என்கின்ற புத்தகத்தை படிக்கும்போது கடவுள் இருக்கிறாரா என்ற சுவாரசியமான கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த நேர்மையான பதில் என்னை மிகவும் கவர்ந்தது.

கடவுள் பற்றிய அவரது கருத்திற்கு பலரும் கடவுள் மறுப்பு சார்ந்த நாத்திக வண்ணம் பூசுவதை அவர் மென்மையாக மறுக்கிறார். டைம் பத்திரிக்கையில் கடவுள் எதிர் ஸ்டீபன் ஹாக்கிங் என குறிப்பிட்டு கட்டுரை வெளியானதை பற்றி குறிப்பிட்டு அந்தப் படம் என்னவோ தன்னை சாத்தான் போல குறிப்பிடுகிறது என நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார்.

அவரைப் பொறுத்தவரையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற கேள்விக்குள்ளேயே செல்லவில்லை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி ஆய்வு நடத்தும் அவர் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு கடவுள் தேவைப்படவில்லை என்கின்ற ஒரு கருத்துக்கு வருகிறார். இந்த நூற்றாண்டு முடிவதற்குள் இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்கின்ற அறிவியல் பூர்வமான தர்க்கத்திற்கு முடிவு கண்டுவிடும் என அவர் உறுதியாக நம்புகிறார்.

இதை பற்றி ஒரு கூட்டத்தில் பேராசிரியர் சுபவீ பேசும்போது இந்தக் கருத்தை அவருக்கே உரித்தான “திராவிட நாத்திகத் தன்மையோடு” விதந்தோதி , அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங்கை திராவிடர் கழகத்தின் உறுப்பினராக மாற்றிய துயரத்தை(?) காண நேர்ந்தது.

நம் மண்ணின் தொல் நிலத்து கடவுள் மறுப்பு சிந்தனைகளை குறித்து நிறைய புத்தகங்கள் வந்திருக்கின்றன. சங்ககால பாடல்கள் தொடங்கி திருக்குறள் பௌத்த சமண இலக்கியங்களில் கடவுள் மறுப்பு சம்பந்தமான குறிப்புகள் காணப்படுகின்றன.

சொல்லப்போனால் கடவுள் மறுப்பு கூட இங்கே தனித்த தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெளத்தத்தில் கடவுளுக்கு இடமில்லை. கடவுளை முன்வைத்து காலம் காலமாய் வகுக்கப்பட்ட விதி, பாவம், புண்ணியம், போன்ற பல சிந்தனை மரபுகள் பெளத்தத்தால் நிராகரிக்கப்பட்டு ‘ஆசையே அனைத்திற்கும் காரணம்’ என்கிற ஒற்றை புள்ளிக்குள் மனித வாழ்க்கை அடைக்கப்படுகிறது.

குறிப்பாக அண்ணல் அம்பேத்கரை ஆழ்ந்து கற்க விரும்புபவர்கள் அனைவரும் அம்பேத்கர் மீதான பௌத்தத்தின் தாக்கம் குறித்து கவனிக்காமல் கடந்து செல்ல முடியாது. அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் எப்படி இந்த உலகத் தோற்றத்திற்கு கடவுள் தேவைப்படவில்லை என்பதை உணர்ந்தாரோ அதேபோல, பெளத்தமும் இந்த உலகத்திற்கு கடவுள் தேவையில்லை என்பதை அறிவிக்கிறது. அவரவர் செய்த கர்ம விதிகளின் அடிப்படையிலேயே அவரவர்களுக்கான உலகம் இயங்குகிறது என பௌத்தம் தீர்மானிக்கிறது.

கர்ம விதிகளுக்கு மேலான இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இயங்குவதை பௌத்தம் தீவிரமாக மறுக்கிறது. பௌத்தத்தை தோற்றுவித்த புத்தர் கூட பௌத்தத்தில் கடவுள் இல்லை. அவர் விடுதலை பெற்ற மனிதர் அவ்வளவுதான்.

புத்தரின் போதனைகள் பௌத்தத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. புத்தரின் போதனைகள் அல்லது அறவுரைகள் சுத்த பிடகம், விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்கின்ற மூன்று வகையான திரிபீடகங்கள் ஆக தொகுக்கப்பட்டுள்ளன. இதில் சுத்த பிடகம் என்று அழைக்கப்படுவது ஒருவரின் உள்ளொளியை வெளிப்படுத்தி அவரை ஆத்ம விடுதலைக்கு தயார் செய்யும் நோக்கத்தை கொண்டது.

சுத்த பிடகம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தீக நிகாயம், மச்சிம்ம நிகாயம், சம்புட்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்கிற ஐந்தில் குட்டக நியாகத்தில் இரண்டாம் பகுதியாக தம்மபதம் அமைந்துள்ளது. மனித வாழ்வியலுக்கு அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தேவையான பதில்களை எளிமையான கவிமொழியில் அமைத்து பாலி மொழியில் 423 அறவுரைகளாக தொகுப்பட்ட தம்மபதம் உலகின் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். கே ஸ்ரீ தம்மானந்தா என்பவர் தொகுத்த தம்மபதம் தமிழில் யாழன் ஆதி மொழிபெயர்ப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

(எதிர் வெளியீடு, விலை 130/-)

மனம், உலகம், பிரியம், சினம், நீதி, வழி, தீமை, அழகு, விழிப்பு, தண்டித்தல், உலகம், புத்தர் உள்ளிட்ட இருபத்தியாறு தலைப்புகளில் தம்மபதம் 423 எளிமையான கவிதைகளில் விவரிக்கப்படுகிறது.

இணை என்ற தலைப்பில் ஆறாவது கவியாக

“அவர்களுக்குத் தெரியாது

விவாதித்துப் பகைக்கிறார்கள்

அவர்களுக்குத் தெரியும்

அமைதியாய் இருக்கிறார்கள்

எல்லோருக்கும் உண்டு

மரணம் என்பது”

எல்லோருக்கும் மரணம் உண்டு என்பதை தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். தெரியாதவர்கள் தேவையில்லாமல் விவாதித்துக் கொண்டு பகைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எளிய மொழியில் சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக தம்ம பதத்தில் ஆழமான கருத்துகளுக்கு எளிய உதாரணங்கள் பல இயல்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.

“ருசித்த உணவு

காமம் புசித்த உடல்

வேட்கையின் வெளி

இயக்கமற்ற சோம்பல்

இவை மிகுந்த வாழ்வு

பெரும் புயலில் விசிறி அடிக்கப்பட்ட

வேரற்ற மரம்”

என்ற அற உரையில் வாழ்வு என்பது எப்போது பெரும் புயலில் சிக்கி அழிந்த வேரற்ற மரம் ஆக மாறுகிறது

என்பதை காட்சியியல் பூர்வமாக தம்மபதம் ஆழமாக விவரிக்கிறது.

இதோ மனம் என்னும் தலைப்பில்

” நீரினின்று எடுத்து

நிலத்தில் விடுபட்ட மீன் துள்ளும்.

மனமும் துள்ளும்.

துள்ளுவதை அடக்குவதே நல்லது”

என அலைபாயும் மனதை நீரில் இருந்து பிரித்து நிலத்தில் விடப்பட்ட மீனாக உருவகப்படுத்துகிறது தம்மபதம்.

பௌத்த மரபில் பிக்கு என்பவர் யார் என்பதற்கு தம்மபதம் ஒரு விளக்கம் அளிக்கிறது.

“கைகளை கட்டுப்படுத்தி

கால்களை கட்டுப்படுத்தி

பேச்சை கட்டுப்படுத்தி

மனதை கட்டுப்படுத்தி

தியானத்தில் மகிழ்ந்து

தனிமையும் அமைதியும் சூழ இருப்பவர் பிக்கு என அழைப்பர்”

முதுமை என்ற தலைப்பில்

“கவனி

இந்த அழகிய உடல்

தீராத வலிகளின் குவியல்.

நோய்க்கூடு.

அதில் என்ன இருக்கிறது

எதுவும் தொலைந்து விட.”

என வாழ்வின் நிலையாமையை போகிற போக்கில் நம் மனதில் அலைந்து உண்மையை பகிர்கிறது இந்த அறவுரை.

“யாரிடமும் வேண்டாம்

கடின வார்த்தைகள்

அவை எதிர்க்கப்படும்

கெடு நோக்குடை பேச்சு.

துக்க மூலம்.

பழிவாங்கப்படுவர்”

என்கிற தம்மபதம் சொற்களால் உண்டாகும் கேடுகளைப் பற்றியும் தண்டனை பற்றியும் ‘தண்டித்தல்’ என்ற அத்தியாயத்தில் எச்சரிக்கிறது.

“குற்றத்தை சுட்டிக் காட்டும்

அறிவரை பின்பற்ற வேண்டும்.

புதையலை காட்டும் வழிகாட்டியைப்

பின்பற்றுவதை போல்”

என நமக்கு நன்மை தீமையை பகுத்து குற்றத்தை சுட்டிக் காட்டும் “அறிவர்” யாரென தம்மபதம் அடையாளம் காட்டுகிறது.

????

பௌத்த சிந்தனை மரபுகளை பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மறைந்த புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கி டூக் ( Kim Ki Duk) இயக்கத்தில் 2003ல் வெளியான “Spring, Summer, Fall, Winter… and Spring ” என்ற பால்ய வயதிலிருந்து பௌத்த துறவி ஆவதற்கான ஒருவனின் போராட்டத்தைப் பற்றி அதிக உரையாடல்கள் இன்றி காட்சி பூர்வமாக விளக்குகிறது. ஒரு புத்த துறவியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் தன் பால்யத்தில் சிறு சிறு உயிர்களை வதைக்க என்னும் உணர்விலிருந்து, வாலிபத்தில் அலைகழிக்கும் காமம் வரைக்குமான ,உணர்வு அலைகளில் சிக்கிக்கொண்டு தவித்து மடாலயத்தை விட்டு வெளியேறி உலக மாயைகளில் சிக்குண்டு மீண்டும் மடாலயத்தை தேடி வருகிற உணர்வுபூர்வமான கதை. இது பெரும் காட்சியியல் அனுபவம். வழக்கமான கிம் கி டூக்கின் படங்கள் போல் இல்லாது மெல்லிய நீரோட்டம் போல் இயற்கை சார்ந்த காட்சி அமைப்புகளுடன் ‘கர்மா’ என்று சொல்லக்கூடிய மனித வினைகள் பற்றிய பௌத்தத்தின் பார்வை தான் இப்படத்தின் திரைமொழி.

அதேபோல் 2001 இல் பான் நளின் (Pan Nalin) இயக்கத்தில் வெளிவந்த சம்சாரா ( Samsara) என்கிற திரைப்படமும் பௌத்த சிந்தனைகளை சார்ந்த மிக மிக முக்கியமான ஆக்கம்.

பனி படர்ந்து லடாக் பகுதியில் கடுமையான தியானத்தில் ஈடுபட்டு கென்போ என்ற உயர் நிர்வாண நிலையை அடைந்த தாஷி(Tashi) என்ற பௌத்த பிக்கின் வாழ்வியல் அனுபவங்கள் தான் இந்தப் படம்.

சாதாரண மனித வாழ்வின் இச்சைகளுக்கும் பௌத்த வாழ்வியலின் சவால்களுக்கும் இடையே அல்லாடிக் கொண்டு பௌத்த பிக்கு ஆக விரும்பும் ஒரு இளைஞனை அழைத்து இந்த உலக வாழ்க்கையை சகலவிதமான உணர்ச்சி கொந்தளிப்புகளோடு வாழ்ந்து விட்டு வா என அனுப்புகிற மூத்த துறவியின் அறிவுரைப்படி ஒரு கிராமத்தை நோக்கி கிளம்பும் இளைஞன் எப்படி மீண்டும் மாபெரும் பௌத்தத்திற்கு ஆக மாறி நிர்வாண நிலையை அடைகிறான் என்பதை மிக ஆழமாக விவாதிக்கின்ற திரைப்படம்தான் சம்சாரா.

இந்த மானுட வாழ்வு அவனுக்கு முன்னால் தத்துவார்த்தமாக ஒரு கேள்வியை எழுப்புகிறது.

அது என்னவெனில் “how can you stop a drop water from disappearing..?” ஒரு நீர்த்துளி ஆவியாகாமல் எப்படி காப்பாய்..?

அதற்கும் பதிலை காமமும் இச்சையும் ஆசையும் நிரம்பிய அவனது வாழ்வே அளிக்கிறது.

“அதை தூக்கி கடலில் வீசு.”

கடலோடு கலந்த நீர்த்துளியும் கடலாகிறது. இனி அது ஒருபோதும் ஆவியாக போவது இல்லை.

“ஆசையை வெல்வது என்பது வேறு. ஆசையை பூர்த்தி செய்வது என்பது வேறு” என்கிற நுட்ப வேறுபாட்டினை

மிக அழகிய திரைமொழியில் சம்சாரா திரைப்படம் விளக்கிறது.

அதேபோல் பௌத்தம் சார்ந்த சில முக்கிய புத்தகங்களை பார்ப்போம்.

கௌதம புத்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஹெர்மன் ஹெஸ்ஸே 1922 ல் நாவலாக எழுதினார். அது தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.( வளரி வெளியிடு, விலை ரூ 130/-)

அதே போல மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய புத்தர் வரலாறு என்கின்ற நூலும் மிக மிக முக்கியமானது.

சமீபத்தில் விலாஸ் சராங் எழுதிய The dhamma man” என்ற நூலை எனது நண்பர் காளி பிரசாத் தமிழில் “தம்மம் தந்தவன்” என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.( நற்றிணை வெளியீடு விலை ரூ 260)

புத்தரின் வரலாற்றை நவீன இலக்கிய மொழியில் ஒரு புதினமாக இந்த நூல் கட்டமைக்கிறது. புத்தரைப் பற்றி ஒரு அறிமுகம் அடைந்துகொள்ள ‘தம்மம் தந்தவன்’ மிகப்பெரிய உதவி செய்கிறது.

????

“கடவுள் இல்லை என்று யார் சொன்னது.‌.? இருந்திருந்தால் நன்றாக இருக்கும் .”என்கிற ஒரு புகழ்பெற்ற திரைப்பட வசனம் போல பாடுகள் நிறைந்த மனித வாழ்வு ஏதேனும் ஒன்றை செயற்கையாக உருவாக்கிக் கொண்டு அதையே பற்றிக்கொள்ள துடிக்கிறது. பௌத்தம் அதற்கு எதிராக சிந்தித்து மனித வாழ்வின் பாடுகளை களைய அதன் காரணங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.

“உங்கள் காலணிகள் சரியாக இருக்கும்போது

அதை மறந்து விடுகிறீர்கள்..”

என்கிறது பெளத்த மரபை சார்ந்த ஒரு ஜென் கவிதை.

அப்படித்தான் வாழ்வின் பாடுகளை, துயரங்களை போக்கிக்கொள்ள நிழல் தருகிற மரமாக அறிவார்ந்த பௌத்த மரபு இருக்கிறது.

எத்தனை நிழல் கிடைத்தாலும் வேட்கையும் , ஆசையும் நிரம்பிய மனித வாழ்வு என்னவோ பாலைவனத்தில் பட்டாம்பூச்சி ஆகத்தான் அலைகழிந்து கொண்டு இருக்கிறது

கருப்பு- தமிழினத்தின் நிற அரசியல்

????

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வெறும் அரசியல் கட்சியாக மட்டும் இது பயணித்து விடக்கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகுந்த கவனமாக இருந்தார். ஒரு இனத்திற்கான விடுதலை என்பது மண் விடுதலை மட்டுமல்ல , சாதிமத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற மானுட விடுதலை, தாய்மொழி மீட்சி, இழந்த உரிமைகளை போராடிப் பெறுவது, பல்வேறு ஊடுருவல்களால் சிதைந்துபோன இனத்தின் பண்பாட்டு மீட்டெடுப்பு போன்ற பல தளங்களில் நமக்கு வேலை இருக்கிறது என்று தீவிரமாக எங்களுக்கு அறிவுறுத்திய அவர் சில முடிவுகளை நடைமுறைப்படுத்த தொடங்கினார்.நடுகல் மரபினரான நம் இனத்தில் மூத்தோர் வழிபாடு , முன்னோர் வழிபாடு குலதெய்வங்கள், சிறுதெய்வ வழிபாடு என தமிழ்த் தேசியத்தின் பண்பாட்டு வேர்களை பலப்படுத்துவதற்கான பணிகளில் அவர் முழுமையாக ஈடுபட்டார்.

கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வேல் தூக்கி விட்டார். இந்துத்துவா பக்கம் சென்று விட்டார் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதினார்கள். புத்தகம் போட்டார்கள். ஆனால் அண்ணன் சீமானோ இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பல பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.அதில் மிக மிக முக்கியப் பணி நம் இனத்தின் தொன்ம தெய்வமான முருகனை ஆரிய வடிவத்திலிருந்து மீட்பது. இரவு பகலாக அதுகுறித்து அவர் சிந்தித்துக்கொண்டே இருந்தார். பல‌ வடிவமைப்புகளை பல எண்ணங்களை நாங்களெல்லாம் அவரோடு பகிர்ந்து கொண்டு இருந்தபோது அவர் வேறு மாதிரியாக சிந்தித்து கொண்டிருந்தார்.

சில நாட்கள் கழித்து எங்கள் அலைபேசியில் அவரிடத்தில் இருந்து ஒரு ‘முருகன்’ வந்திருந்தான்.அமுல் பேபி போல, செக்கச் செவேல் என்று கொழு கொழு என கடைந்தேடுத்த தயிர் பாலகன் போல ஓவியங்களில் காட்சியளித்த அக்ரகாரத்து முருகனை பார்த்துப் பழகிய எங்களது விழிகள் முதன்முறையாக பாட்டன் முருகனை கருமைநிற இளைஞனாக பார்த்தபோது மகிழ்ச்சியால் கலங்கின.ஆம் அசலான முருகன் அப்படித்தான் பிறந்தான். வலுவான உடற்கட்டு ,, கூரிய மீசை என அசலான தமிழ் முகத்தோடு வந்த முருகனை பார்த்துவிட்டு, ஏற்கனவே வீட்டுக்கு வீடு தொங்கிக் கொண்டு இருக்கிற அந்தக் கொழுகொழு முருகனை என்ன செய்வது அண்ணா என‌ சந்தேகத்துடன் அவரிடம் கேட்டேன்.அண்ணன் சிரித்துக்கொண்டே ..” தம்பி அவன் நம்ம ஆளு இல்லடா.. அவன் வடநாட்டு சுப்பிரமணி. நம்ம தாத்தன் செகப்பா இருப்பானா.. சதை மெழுகி குண்டா இருப்பானா.. காடு மலைகளில், வெயில் மழை என பாராது, வேட்டையாடி, அலைந்து திரிந்து இருக்கிறான்.

அப்படி என்றால் உடல் எவ்வளவு வலுவாக இருந்திருக்கும் . யோசித்துப் பார். அதுதான் 6 pack வைத்து கருப்பாக களையாக கம்பீரமாக நம் பாட்டன் உருவாகி இருக்கிறான். இனிமேல் இந்த கருப்பன் தான்டா நம்ம முருகன் .” என்றார் அவர்.அன்றுமுதல் நம் முருகன் அசலான நம் பாட்டனாக, நம் உள்ளம் கவர்ந்த கருப்பனாக, மாறி போனான். பல இடங்களில் நம் கருப்பு முருகன் இன்று ஊடுருவி விட்டான். தனியார் பேருந்துகளில் பிரம்மாண்டமான ஓவியமாக மிளிர்கிறான். பல பொதுவான சுவரொட்டிகளில் நம் கருப்பு முருகன் கையில் வேலோடு‌ ஒளிர்கிறான்.இப்படித்தான் சில வேலைகளை அதிரடியாக செய்ய வேண்டியிருக்கிறது. அதே போல் தான் நம் இனத்தின் பெருமைக்குரிய கலைஞன் இசைமேதை ஏ ஆர் ரகுமான் தன் தாய்மொழி உணர்ச்சியால் ஆஸ்கர் மேடையில் கூட எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் முழங்கியவர்.

வடநாட்டு கச்சேரிகளில் அலை பாய்ந்து வரும் எதிர்ப்புகளை புறக்கணித்துவிட்டு தமிழில் பாடல்களைப் பாடுபவர். தமிழ்நாட்டு மேடையில் ஆங்கிலம் ஒலிக்கும்போது தமிழில் பேசுங்கள் அப்போதுதான் மேடையில் இருப்பேன் என கம்பீரமாக சொல்பவர். ஆளப்போறான் தமிழன் என இசையமைக்கும் போது என் உள்ளுக்குள் ஏதோ ஒன்று என்னை ஆட்டி வைத்தது என பெருமிதப் படுபவர். கனடா நாட்டில் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்கு மத்தியில் “உன் தேசத்தின் குரல்‌ ” என கண் கலங்க பாடி நம்மை மெய்சிலிர்க்கவும் கலங்கவும் வைத்தவர்.சமீபத்தில் துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பாட்டு பாடுவோமா எனக் கேட்டுவிட்டு அப்படியே உணர்ச்சியில் ஊறி தமிழ் தமிழ் தமிழ் என‌ முழங்கிக் கொண்டே நின்றவர். மூப்பில்லா மொழி எங்கள் மொழி என தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பவர். அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு என்கின்ற ஓவியத்தை வெளியிட்டதற்கு சங்கிக் கூட்டம் வழக்கம் போல் துள்ளிக்குதித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.கூடுதலாக.. இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என அமித்ஷா சொன்னதற்கு, தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனச் சொல்லி ஏற்கனவே வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டிருக்கின்ற சங்கிகளின் தலையில் ரகுமான் நெருப்பு அள்ளி வைத்திருக்கிற பரவசக் காட்சியை நாமெல்லாம் மகிழ்ச்சியோடு கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்று கொண்டிருக்கிறோம்.

நேற்று கூட தொழில் முனைவோர் மாநாட்டில் பேசிய இசைமேதை ஏ ஆர் ரகுமான் நம் நிறம் நமக்கு. தென்னிந்தியாவில் கருப்பான நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என நம் இனத்தின் நிறத்திற்கு ஆதரவாக மீண்டும் துணிவுடன் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்த் தாயை கருப்பாக அசிங்கமாக வரைந்திருக்கிறார்கள், அதை இந்த ரகுமான் வெளியிடுகின்றார், என ஓநாய் கண்ணீர் வடிக்கிறது ஒரு கூட்டம். இவர்களைப் பொறுத்தவரையில் கருப்பு என்பது அழகின்மை.அருவெறுப்பு , அசிங்கம்.ஆனால்.. தமிழர்கள் நமக்கோ அதுதான் நிறம். அதுதான் அடையாளம்.நமது தாய் தமிழணங்கு. அவள் கருப்பாகதான் இருப்பாள்.‌ எங்கள் பாட்டன் முருகன். கருப்பாக தான் இருப்பான்.இதில் பத்ரி சேஷாத்ரி வகையறாக்கள், சங்கி மங்கி கூட்டங்கள் பதறுவதற்கு எதுவுமே இல்லை. எமது அழகை இவர்கள் வரையறை படுத்த எவ்வித உரிமையும் அற்றவர்கள். எம் இனத்தின் அடையாளம் கருப்பு. எங்கள் குலசாமி ஒன்றின் பெயர் கருப்பு.கருப்பு என்பது ஒருபோதும் எமக்குப் பெருமை குறைவல்ல. சொல்லப்போனால் அதுதான் எமது தகுதி. எமது பெருமை.கர்வமாக சொல்வோம்.இது கருப்பர் நாடு. காவியே ஓடு.இசைமேதை ஏ ஆர் ரகுமானுக்கு நெகிழ்ச்சியுடன் புரட்சி வணக்கம்.

❤️

மணி செந்தில்.

தொடர்புடைய சுட்டிகள்.

https://youtu.be/efmKKC8XD8ohttps://youtu.be/B5wZZ565iPY

Page 1 of 11

Powered by WordPress & Theme by Anders Norén