பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 1 of 12

தொலைக்க முடியா புத்தகங்கள்.

❤️

புத்தகங்கள் தரும் போதை போல் வேறு எதுவும் போதை தருவதில்லை. வாழ்வின் கிளர்ச்சியான மது புத்தகப் பக்கங்களில் தான் ஒளிந்து இருக்கிறது. வாங்குகின்ற எல்லா புத்தகங்களையும் படிக்கிறோமோ இல்லையோ புத்தகங்களுக்கு நடுவில் வாழ்வது என்பது பேரின்பத் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்களை வாங்குகிறோம். சில சமயம் நம் சேமிப்பில் உள்ள நாம் படிக்காமல் விட்ட புத்தகத்தை கூட மறதியாய் மீண்டும் வாங்கி வந்து விடுகிறோம். ஆனாலும் அதையும் வைத்து இது வேறு பதிப்பு, இது வேறு புத்தகம் என்று சமாதானம் ஆகிக்கொள்கிறோம்.

புத்தகங்களை யாராவது இரவல் கேட்டால் நான் பதட்டம் ஆகி விடுவேன். அந்த சூழ்நிலையை எப்படிக் கடப்பது என தவிப்பேன். ஏனெனில் இரவல் கொடுத்து நிறைய நல்ல புத்தகங்களை நான் இழந்திருக்கிறேன். அதே சமயத்தில் இரவல் வாங்கி வந்து சில நல்ல புத்தகங்களை அடைந்திருக்கிறேன்.

இன்னொன்று.. இரவல் கொடுத்து நல்லப் புத்தகங்களை இழப்பது என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஒருமுறை தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அவர்களிடம் நக்சல் பாரிகளை பற்றிய “ரெட்சன்” என்கின்ற புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். நீண்ட காலம் அவரிடம் திருப்பிக் கேட்க நானும் மறந்து விட்டேன். பிறகு அவரும் கட்சியில் இருந்து விலகி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். இப்போது அவரிடம் போய் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்கின்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. மேலும் அவரும் எனக்கு “பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு” நூலை இரவலாக கொடுத்திருந்தார். இதற்கும்,அதற்கும் சரியாகிவிட்டது எனது சமாதானப்படுத்திக் கொண்டாலும், “ரெட் சன்” என்ற அந்தப் புத்தகம் இல்லாத எனது நூலக அறை ஏதோ குறைபாட்டுடன் இருப்பதாக எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

சென்ற வருடம் புத்தக கண்காட்சியில் மீண்டும் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி என் அலமாரியில் வைத்த பிறகு தான் என் தவிப்பு தணிந்தது. புகழ் பெற்றவர்களின் புத்தக சேமிப்புகளை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அண்ணல் அம்பேத்கரின் புத்தக சேமிப்பு மிக புகழ் பெற்றது. ஜவர்கலால் நேரு முக்கியமான புத்தகங்களை பெரிய மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்து பாதுகாத்ததாக சொல்வார்கள். உலகத்தின் மிக முக்கியமான புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை இப்போது படிப்பில் கூட இல்லாத அபூர்வ புத்தகங்களை எழுத்தாளர் கோணங்கி மிக கவனமாக சேகரித்து பாதுகாத்து வருகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அண்ணன் சீமான் வீட்டு நூலகத்திலும் இது போன்ற பல முக்கியமான அபூர்வமான பதிப்பில் கூட இல்லாத புத்தகப் பொக்கிஷங்களை நான் கண்டேன்.

அறை முழுக்க நிரம்பி வழியும் புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் நேரங்களில் ராஜ தர்பாரில் ஒரு பேரரசனாய் அமர்ந்திருப்பது போல உணர்வு. சங்க காலப் புலவர்கள் தொடங்கி தற்கால எழுத்தாளர்கள் வரைக்குமான பலரும் நம் வீட்டு ராஜ அவையில் நம் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்பதும், உலக வரைபடத்தில் நம் காணாத நிலங்களை எல்லாம் ஒளிப்படரும் புத்தகப் பக்கங்களின் மூலமாக நீளும் கற்பனை விரல்களால் நம்மால் தொட முடிகிறது என்பதும், எல்லாவற்றையும் தாண்டி புத்தகங்கள் கால எந்திரங்களை விட கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் வேகமாக பயணிப்பவை என்பதும் எவ்வளவு சுவாரசியமானது..???

ஒவ்வொரு புத்தகத்திற்கும் நமக்குமான உறவு வெகு அந்தரங்கமானது. ரகசிய காதலி தரும் கிளர்ச்சியை விட மேலானது. ஒவ்வொரு புத்தகத்திற்கு பின்னாலும் அது தந்த அனுபவங்களை சார்ந்து விவரிக்கப்பட வேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. வாசகர் ஒருவரிடம் இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் வாங்கப் போன எஸ். ராமகிருஷ்ணனின் அனுபவத்தை அவர் மிக அற்புதமாக “துணையெழுத்து” என்ற அவரது புத்தகத்தில் எழுதி இருப்பார்.

ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த, சொல்லப்போனால் மெல்லிய காதலும் பூத்திருந்த, ஒரு பெண்ணிடம் அந்தக் காலத்தில் நான் உருகி உருகிப் படித்த ப்யோதர் தாஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். பிறகு வீடு மாறுதல் அடைந்த கால ஓட்டத்தில் அந்த நேசிப்பு தொலைந்து போய், அந்தப் பெண்ணோடு சுத்தமாக எவ்வித தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. புதையல் போன்ற அற்புதமான புத்தகத்தை இரவல் கொடுத்து தொலைத்து விட்டோமே என்று பலமுறை சிந்தித்து எனக்குள்ளேயே குமைந்திருக்கிறேன்.

இப்போது எல்லா இடங்களிலும் அந்த புத்தகம் கிடைத்தாலும் நான் இரவல் கொடுத்த புத்தகம் இப்போது கிடைப்பதில்லை. அது சோவியத் ரஷ்யாவின் “ராதுகா பதிப்பகம்” வெளியிட்ட செவ்விலக்கிய பதிப்பு. தாள்கள் அப்படி பிரமாதமாக இருக்கும். கனமான அட்டையில் பைண்ட் செய்யப்பட்டு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கட்டிடங்கள் பொன்னிற ஓவியமாய் அட்டை முகப்பில் வரையப்பட்டிருக்கும். அந்த கதையோடு தாஸ்தாவெஸ்கியின் மேலும் இரண்டு கதைகளும் அந்த நூலில் உண்டு. அப்படிப்பட்ட அபூர்வமான புத்தகத்தை நாம் மீண்டும் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பில்லாத ஒருவரிடம் இழந்து விட்டோமே என்கிற வலி எனக்கு எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு தேடலில் முகநூல் கணக்கில் அந்தப் பெண்ணை சரியாக கண்டுபிடித்து விட்டேன் . அவளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தன. குடும்பத்தோடு பண்டிகை கொண்டாடுவது போல சில புகைப்படங்களை முகநூலில் அவள் பதிவிட்டிருந்ததை கண்டேன். எனக்குள் எவ்விதமான உணர்ச்சி அலையும் அந்த நொடியில் பொங்கவில்லை என்பது எனக்கே வேதனையாக இருந்தது. அவளிடம் ஒரு காலத்தில் கொடுத்த புத்தகத்தை மீண்டும் கேட்கலாமா என வெகு நேரம் யோசித்தேன். அவளும் தொலைத்திருந்தால் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்து விட்டு இறுதியாக அவளுக்கு மெசேஞ்சரில் ஒரு சிறிய செய்தி ஒன்றை அனுப்பினேன்.

“வணக்கம். என்னுடைய வெண்ணிற இரவுகள் புத்தகம் உங்களிடத்தில் இருக்கிறது. அதைத் தர முடியுமா..”

என்று கேட்டிருந்தேன் ‌.

அவள் அடிக்கடி முகநூல் பக்கம் வராதவள் போல. என் செய்தியை அவள் பார்க்கவே இல்லை. நான் தினந்தோறும் மெசேஞ்ஜரை திறந்து பார்த்துவிட்டு ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் திடீரென்று ” யூவர் அட்ரஸ் ப்ளீஸ்..” என அவளிடம் இருந்து ஒரு செய்தி.

நானும் என் முகவரி அனுப்ப, அடுத்த மூன்று நாட்களில் எனக்கு கொரியர்.
ஆவலுடன் பிரித்துப் பார்த்த போது அதே புத்தகம். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. எங்கோ தொலைந்து போன என் காதலி எனக்கு மீண்டும் கிடைத்து விட்டது போன்ற பெரு மகிழ்ச்சி. அட்டைப் போட்டு பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்திருக்கிறாள்.

புத்தகத்தை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அட்டையின் உட்புறத்தில் சிவப்பு வண்ண பென்சிலால் வரையப்பட்ட ஒரு சிவப்பு இதயம். அதன் கீழே நான் இரவல் கொடுத்த தேதியை குறித்து வைத்திருந்தாள்.

முதன்முறையாக இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து லேசாக வலித்தது.

அதற்குப் பிறகு அவளும் முகநூல் கணக்கில் இல்லை.

❤️

காலம் உணர்த்தும் கணக்குகள்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திமுகவை தவிர அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில்.. திமுகவின் ஐடி விங் புத்திசாலித்தனமாக(?) வேலை பார்க்கிறோம் என்ற பெயரில் ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி திமுகவின் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, இவர்களின் எஜமானர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அண்ணன் மகன் பேச்சைக் கேட்டு அப்பிரண்டிசுகளை வேலைக்கு வைத்த பெயிண்டர் நேசமணி கதையாகி கந்தலாகிவிட்டது திமுக.

வரலாற்றில் அம்பேத்கரியம் எதிர் திராவிடம் என்கின்ற நிலை புதிதானதல்ல. ஏற்கனவே தாய் மண் இதழிலும், நிறப்பிரிகை இதழிலும் விடுதலை சிறுத்தைகளின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் திராவிடத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் முன்வைத்த கூர்மையான விமர்சனங்கள் 90 களின் இறுதியில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தின.அம்பேத்கரியத்தை, அவர் முன்வைத்த பௌத்தத்தை முழுமையாகப் பின்பற்றும் இளைஞர்களுக்கு பெரியார் ஒருபோதும் ஆதர்சம் அல்ல. குறிப்பாக திமுகவின் பண்ணையார்தனமான சந்தர்ப்பவாத உயர் சாதி இந்து அரசியல் அம்பேத்கரிய இளைஞர்களுக்கு உவப்பானதும் அல்ல. அரசியல் சமரசங்கள் மிகுந்த விடுதலை சிறுத்தைகள்- திமுக உறவு கொள்கைவாத அம்பேத்கரிய இளைஞர்களால் விரும்பக் கூடியதும் அல்ல. அவர்களைத் தான் ஆர்ம்ஸ்ட்ராங் இயக்குனர் ரஞ்சித் போன்றவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். காலங் காலமாய் திமுக தாழ்த்தப்பட்டோரை ஒரு வாக்கு வங்கியாக பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்து “இதுவெல்லாம் நாங்கள் போட்ட பிச்சை” முதலாளிப் பேச்சு பேசுவதை படித்த அம்பேத்கரிய இளைஞர்கள் வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பில் தான் உயர் சாதி மேட்டிமை மனோபாவம் கொண்ட திராவிட அரசியல்வாதிகளிடம் அடிமைகளாய் இருப்பதை விட, தனது சண்டைக்காரனாக இருந்தாலும், சக மனிதனாக இருக்கிற வன்னியர்களிடம் சமரசமாக போய்விடலாம் என எண்ணி ஆர்ம்ஸ்ட்ராங் போன்றவர்கள் ஒற்றுமை குறித்தெல்லாம் பேசினார்கள்.

அதை நுட்பமாக உணர்ந்த திமுக ஐடி விங் இப்போது படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பற்றி அவதூறுகள் பரப்புவதையும், படுகொலை பற்றி கேள்வி எழுப்புகின்ற இயக்குனர் ரஞ்சித்தை வசவுகள் பாடுவதையும் தீவிரமாக செய்கிறார்கள். தங்கள் கட்சியை /ஆட்சியைப் பற்றி யாரும் எந்தப் பிரச்சனையிலும் எதிர்த்து பேசி விடக்கூடாது, விமர்சனங்கள் செய்து விடக் கூடாது என்பதில்
மூர்க்கமாக இருக்கும் திமுகவின் ஐடி விங் ஒன்று போதும். திமுகவின் சரிவிற்கு.

அரசியலில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாத முக்கிய பகுதி. ஆம்ஸ்ட்ராங்கிற்கு அவரது இடத்தில் ஏன் சமாதி வைக்க அனுமதி மறுக்கிறீர்கள் எனக் கேட்டால் உரிய காரணங்களோடு விதிகளோ சட்டங்களோ ஏதேனும் இருந்தால் அதன் அடிப்படையில் பதில் சொல்ல அறிவு வேண்டும். ஆம்ஸ்ட்ராங் யார் தெரியுமா என்று அவதூறு பரப்ப ஆரம்பித்தால்.. கருணாநிதிக்கு எப்படி மெரினா கடற்கரையில் கல்லறை என்று எல்லோரும் பேச தொடங்குவார்கள். அப்படித்தான் சமூக வலைதளங்களில் நிறைய விவாதங்கள் கிளம்பின.
சொந்தக் கூரையின் மீதே கொள்ளி வைக்கிற கூட்டமாக திமுக ஐடி விங் மாறி இருக்கிறது . கூடுதலாக திமுகவிற்கு ‘காரண காரியத்தோடு’ அதிகம் சொம்படித்த பலருக்குதான் இதில் தர்ம சங்கடம். இந்த சமயத்தில் திருமுருகன் காந்தி போன்றோர் ” திமுக ஐடி விங்” பதிவுகளை “ஒரு சிலரது” எனக் குறுக்கிக் கட்டி சமாதானப்படுத்த முயல்வது பரிதாப நகைச்சுவை.

திமுக தன் ஆட்சி காலத்தில் தனக்கான ஆதரவாளர்களை இழந்துக் கொண்டே போவதும், அதை தீவிரமாக ஆதரித்த பலருக்கும் தர்ம சங்கடத்தை எல்லாம் தாண்டி இப்போது கடும் நெருக்கடிகள் ஏற்படுவதும் நீண்ட காலமாக அரசியல் களங்களில் திமுகவைப் பற்றி காலம் காலமாக எச்சரித்து வரும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்னும் காலம் நிறைய உணர்த்தும் தோழர்களே..

நாங்கள் காத்திருக்கிறோம்.

🌑

மணி செந்தில்.
www.manisenthil.com

வெயிலைப் போர்த்தியவன்.

🟥

வாழ்வின் அலைகழிப்பெல்லாம் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

எங்கெங்கோ ஓடி ஓடி ஒளிவதும் களைப்படைந்து மூச்சிரைக்க சாய்வதும் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

அது ஒரு பாவனை.

எதையோ மறக்க.. மறக்க முடியாமல் இறக்க.. செல்லும் நடைபாதையில் தானே தன்னையே தொலைக்கும் தோற்றம்.

வாழ்வின் கொடூர விதி என்ன தெரியுமா..

நாம் யாரை எவ்வளவு நேசிக்கிறோமோ… அதன் அளவு நாம் நேசிக்கிறவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத அளவில் இருப்பது தான்.

இறுதி வரை அது ஒரு மாய விளையாட்டு.

சுவற்றில் வீசப்பட்டும் திரும்பி வராத ரப்பர் பந்து.

மழை நீரில் நனைந்து முழுகி போகும் காகிதக் கப்பல்.

எழுதப்படாத கவிதையை சுமக்கும் வெற்றுத்தாள்.

🟥

இடதுசாரி இயக்கங்களில் பயணித்த போது கட்சி அலுவலகத்திலேயே சதா நேரம் உண்டு உறங்கி வாழ்ந்து வந்த வயது முதிர்ந்த தோழர் ஒருவரை ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது. கட்சி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் தொடங்கி, வருகின்றவர்களுக்கு பதில் சொல்வதில் இருந்து, தண்ணீர் பிடிப்பது, விருந்தினர்களுக்கு டீ வாங்கி வருவது என அனைத்தும் அந்த முதிய தோழர் தான்.

இத்தனைக்கும் அவருக்கு ஒரு குடும்பம் இருந்ததை நான் அறிவேன். வார இறுதி நாட்களில் அவரை மாலை நேரங்களில் சந்தித்து விட்டு செல்லும் அவரது மகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோரின் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவர் வீட்டுக்கு செல்வதில்லை. சொந்தமாக வீடு இருந்தது என்று கூட சொன்னார்கள். மகன் அரசு வேலையில் இருந்ததாகவும் இவரை அன்பாக பார்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும் சொன்னார்கள். ஆனாலும் அவர் கட்சி அலுவலகத்திலேயே இருந்தார். அது ஒரு வகையான மூர்க்கம். கட்சி அலுவலகத்தின் இரவு நேர தனிமை அவருக்கு வேண்டியதாக இருந்தது. அன்பும் நெருக்கமும் இல்லாத மேலோட்டமான உறவு நிலை அவருக்கு ஆறுதலாக இருந்தது. இதையெல்லாம் கவனித்த நான் ஒரு நாள் அவரிடம் பேச தொடங்கினேன்.

தோழர்..

சொல்லுங்க தோழர்.. தாமரை வந்திருக்கு படிச்சிட்டீங்களா..

தோழர்..உங்ககிட்ட தான் பேசணும்..

என்கிட்ட பேச ஒன்னும் இல்லையே.. என இறுகத் தொடங்கினார்.

ஏன் தோழர் வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கீங்க.. என கேட்ட என்னிடம், டீ சாப்பிடுறீங்களா.. என பேச்சை மாற்று நோக்கில் மேலோட்டமாக கேட்டார்‌.

நான் நின்று நிதானித்து “சேர்ந்து டீ சாப்பிட போவோமா.. ” என்ற எனது கேள்வியில் லேசாக தோழர் பதட்டமானார்.

இல்லை.. நீங்கள் இருங்கள்.. நான் போய் டீ வாங்கி வருகிறேன் என்றார்.

சேர்ந்தே போவோமே.. என சொன்னதற்கு அவர் சட்டென என்னை பார்த்து.. ” தொல்லை செய்யாதீர்கள் தோழர்..!  போய் வாருங்கள்..” என சொன்னார் ‌.

அதிலிருந்து அவர் என்னிடம்  பேசுவதில்லை. என் முகத்தை பார்ப்பதையே தவிர்த்தார்.

எனது நெருக்கம் அவருக்கு தொந்தரவாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். ஆனாலும் அதற்கு என்ன காரணம் என என் மனம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

பிறகு இதைப் பற்றி அவர் வயது கொண்ட இன்னொரு தோழரிடம் கேட்டபோது..

“அவன் அப்படித்தான். மனைவிகிட்டயும் இப்படித்தான் இருந்திருக்கிறான். அந்த அம்மாவும் புலம்பிக்கொண்டே போய் சேர்ந்துடுச்சு. யாரிடமும் அவன் அன்பா இருக்க முடியாது. கனிவா பேசிட முடியாது. யாராவது கனிவா பேசினா அவனுக்கு பயம் வந்துரும். தன் மீது யாரும் அன்பு பாராட்ட கூடாது என்பதில் அவன் ரொம்ப தீவிரமா இருப்பான். சின்ன வயசுல அவன் ஒரு பொண்ண விரும்பி இருக்கிறான். அந்தப் பொண்ணும் இவன தீவிரமா விரும்பி இருக்கு. இது வீட்டுக்கு தெரிஞ்சுப் போய் தகராறு ஆன உடனே கூப்பிட்டு வச்சு கேட்டதற்கு அந்த பொண்ணு சும்மா தான் பேசினேன் இவர் தப்பா நினைச்சுக்கிட்டாரு.. என சொல்ல அன்னிக்கு வெறுப்ப குடிக்க ஆரம்பித்தவன் தான். ஆயுசு முழுமைக்கும் யாரிடமும் ஒட்ட முடியாமல் வெயில் போல தகிச்சிகிட்டே இருக்கான். எண்ணெயில மிதக்கிற தண்ணி போல ஒட்டாம உலகத்தோட விலகி நிக்கிறான்”

கடைசியா கட்சியை விட்டு விலகும் போது அவரிடம் சொல்லிக் கொள்ள சென்ற போது அவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.

வெளியே வெயில் தகித்துக் கொண்டிருந்தது.

அவருக்கு உள்ளேயும்.

🟥

எனது அணுக்க நண்பர் Suresh Kamatchi தயாரிப்பில், இயக்குனர் ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கிற “ஏழு கடல் ஏழுமலை” திரைப்படத்தின் சந்தோஷ் நாராயணன் குரலில், மதன் கார்க்கி வரிகளில், இப்பாடலை கேட்டபோது ஏனோ மனித வாழ்வின் அலைகழிப்பைப் பற்றியும், அந்தத் தோழரை பற்றியும் உள்ளுக்குள் நினைவுகள் சுரந்துக் கொண்டே இருந்தன.

நல்ல படைப்பின் நோக்கம் அதுதானே…

உள்ளுக்குள் ஏதோ ஒன்றே செய்ய வேண்டும்.

இந்தப் பாடல் செய்கிறது. கேளுங்கள்.

❤️

அம்பேத்கரின் ராஜினாமா.

அம்பேத்கரின் ராஜினாமா.

அண்ணல் அம்பேத்கரைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோடி சில கருத்துக்களை பேசியிருந்ததை கண்டோம். குறிப்பாக அம்பேத்கர் அவர்களின் ராஜினாமா.

பிரதமர் மோடி ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போதே நாம் கவனமாகி விட வேண்டும். ஏனெனில் அதில் பொய்யும் வரலாற்று திரிபுகளும் கலந்து அக்கருத்தை உண்மை என நிறுவி விடுகிற மோடியின் துடிப்பு மிக ஆபத்தானது.

குறிப்பாக மோடி வழியாக இந்துத்துவ இயக்கங்கள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். திருவள்ளுவருக்கு பட்டை பூசி காவி உடை மாட்டியதில் தொடங்கி வள்ளலாரை இந்து மத சின்னங்களோடு அடையாளப்படுத்துவதில் வரையிலான அடையாளச் சிக்கல்களை அண்ணல் அம்பேத்கருக்கும் ஏற்படுத்தும் இந்துத்துவ சதிகளில் தமிழர்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தின் எதிரியாக தன்னை நிறுவிக் கொண்டவர். தன் வாழ்நாள் முழுக்க சனாதன தர்மத்திற்கு எதிராக ஒரு மாபெரும் போரை நிகழ்த்தியவர். இந்து மதத்தின் ஆன்மாவாக கருதப்படும் மனுதர்மத்தை எரித்தவர். நான் ஒரு இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என கம்பீரமாக முழங்கி அதன்படியே பௌத்தத்தை தழுவியவர்.

காங்கிரசை அம்பேத்கர் எதிர்த்தார். ஏனெனில் காங்கிரஸ் உயர்சாதி இந்துக்களுக்கான கட்சியாக இருந்தது. முதன் முதலாக மும்பையில் அண்ணல் அம்பேத்கர் காந்தியடிகளை சந்தித்தபோது இந்த நாட்டில் வாழ்கின்ற தீண்டப்படாத மக்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க காங்கிரஸ் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறது என கூற அதனால் என்ன பயன் என மறு கேள்வி கேட்டு காந்தியை திணறடித்தார் அண்ணல் அம்பேத்கர். இந்து முஸ்லிம் பிரச்சனையை விட தீண்டாமை ஒழிப்பு தான் தனக்கு முக்கியம் என அம்பேத்கரிடம் ஒத்துக் கொண்ட காந்தியை அம்பேத்கர் என்றுமே நம்பியதில்லை. இவ்வாறாக காங்கிரஸ் மீதான எதிர்ப்பு நிலையை அம்பேத்கர் எடுத்திருந்தார். அது முழுக்க முழுக்க இந்து சனாதன தத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு.

காந்தியடிகளின் சனாதன ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க பேராற்றலாக நின்றார். காந்தியடிகள் இந்திய பெரு நிலத்தின் அறிவிக்கப்படாத மன்னர். எல்லோராலும் வாழும் காலத்திலேயே வழங்கப்பட்ட மனிதப் புனிதர். ஆனால் அண்ணல் அம்பேத்கர் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான புரட்சியாளர். இருவரும் வரலாற்றில் எதிர் எதிர் புள்ளிகளாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மிகுமதிப்பு கொண்டிருந்தார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் அமைச்சரவை உருவாகும் காலத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தன் அமைச்சரவையில் இணைக்க நேரு எடுத்த முடிவை காந்தி மனதார பாராட்டினர்.

முஸ்லிம் லீக் உதவினால் இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்ற அண்ணல் அம்பேத்கர் அந்த குழுவில் இடம் பெற்ற அனைவரையும் விட கடுமையாக உழைத்தார். உலக அரசியலமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களை இந்திய அரசியலமைப்பில் கொண்டு வர வேண்டும் என விரும்பினார். சமூகத்தின் எல்லாருக்குமான உரிமைகளை காக்கின்ற அரசமைப்பாக அது திகழ வேண்டும் என விரும்பி அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என கனவு கண்டார்.

சட்ட அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏற்கனவே இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி புதிய இந்துமத சட்டத்தினை இயற்றிட அண்ணல் அம்பேத்கர் முயன்றார். ஏற்கனவே இருந்த இந்து மத சட்டத்தின்படி விதவை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடையாது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல்வேறு பிற்போக்கு தனங்களோடு இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக புதிய இந்து மத சட்டத்தினை அண்ணல் அம்பேத்கர் இயற்ற தொடங்கினார்.

அப்போது தான் திருமணம் செய்ய நினைத்த டாக்டர் கபீர் என்று அழைக்கப்பட்ட சவீதா அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கூட புதிய இந்து மத சட்ட தொகுப்பை எழுதி வருகிற செய்தியை குறிப்பிடுகிறார். தான் திருமணம் செய்து கொள்ள ஏற்படும் காலதாமதத்தை பற்றி தன் வருங்கால இணையரான, பிராமண சாதியை சேர்ந்த சவிதாவிற்கு கடிதங்கள் எழுதும் அம்பேத்கர் தற்போது இருக்கின்ற இந்து மத சட்டத்தின்படி தனது திருமணம் அங்கீகரிக்கப்படாது என்றும் புதிய இந்து மத சட்டம் விரைவில் ஏற்றப்பட்டவுடன் தனது சாதி மறுப்பு திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு விடும் என்றும் அந்த கடிதங்களில் குறிப்பிடுகிறார். இல்லையேல் சிறப்பு திருமண சட்டத்தின் படி தான் திருமணம் செய்ய வேண்டி இருக்கும் எனவும் குறைபட்டு கொள்கிறார்.

அப்படி அவர் இரவு பகலாக உழைத்து பாடுபட்டு உருவாக்கிய புதிய இந்து மத சட்டத் தொகுப்பினை பாராளுமன்றத்தில் அவரால் சட்டமாக்க முடியவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட முற்போக்கு கருத்துக்கள் அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்து மத சனாதன ஆதரவாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. நாத்திகரான நேரு இதில் நடுநிலைமை வகுத்ததை அண்ணல் அம்பேத்கர் விரும்பவில்லை. தனது தனிப்பட்ட தோல்வியாக இதை உணர்ந்த அண்ணல் அம்பேத்கர் இனியும் சட்ட அமைச்சர் பதவியில் இருப்பது பலனில்லை என உணர்ந்து தன் பதவியை 1951இல் ராஜினாமா செய்தார்.

இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு கூட இந்து மத சனாதன எதிர்ப்புணர்ச்சியின் மாபெரும் விளைவாகத்தான் ஏற்பட்டது என்பதை மோடி மறைத்து காங்கிரசுக்கும் அம்பேத்காருக்கும் பொத்தம் பொதுவாக சண்டை என காட்டுவது மோடியின் மோசடி வித்தை.

சென்று வா-எம் பாசப்பறவையே-ராபர்ட் பயஸ்.

எனது அன்பு அண்ணன்
ராபர்ட் பயஸ் அவர்களுக்கு..

ஒரு பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘விடுதலைக்கு விலங்கு’ எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள்.

ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன்.

நமக்குள்ளாக எவ்வளவோ உரையாடல்கள் இருந்திருக்கின்றன. பகிர்ந்து கொள்ள முடிந்த அனைத்தையும் நாம் பகிர்ந்திருக்கிறோம். சில சமயங்களில் எவரிடமும் பகிர முடியாத சிலவற்றை உங்களோடு மட்டும் நான் பகிர்ந்திருக்கிறேன். நின்று நிதானித்து எனக்கு நீங்கள் திசை காட்டியிருக்கிறீர்கள். என்னைக் காணும் போதெல்லாம் புன்னகை பூக்கும் உங்கள் முகம் என் ஆன்மாவில் ஒரு சித்திரமாக உறைந்து இருக்கிறது. குறிப்பாக நீங்கள் பரோலில் வந்த போது என் மைத்துனர் பாக்கியராசன் இல்லத்தில் நாம் இருந்த பொன்னான பொழுதுகள் தேன் வடியும் நினைவுகள்.

இனி உங்களது சிறகு விரும்பிய திசையெல்லாம் விரியட்டும். நிறைய வானம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் நத்தைப் போல ஒரு நாள் ஒன்று நகர்வது இனி குதிரை போல மாறும். கால மாறுதல்களின் வேகம் குறித்து நிறைய சிந்திப்பீர்கள். ஆனாலும் நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கும் போது எங்கே இருக்கிறோம் என்கிற மனப்பதட்டம் உங்களுக்குள் விரியும். உங்கள் அருகில் இருக்கும் அண்ணியும், அம்மாவும் உங்களுக்கு ஆறுதலை தருவார்கள். இதையெல்லாம் குறித்து என் வாழ்நாள் முழுக்க நான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். என் நினைவுகளால் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

நாம் வெவ்வேறல்ல.. ஒரே நினைவின் இரண்டு பிரதி என்றே உணர்கிறேன். அதனால்தான் உங்களின் உணர்வுகளை நான் உள்வாங்கி எழுத முடிந்தது என நிறைவுக் கொள்கிறேன்.

இந்த மகிழ்வான சமயத்தில் நம் மூத்தவர் தெய்வப் பெருமகன் தடா சந்திரசேகர் இல்லை என்கிற குறை மட்டும் எனக்கு ஏக்கமாய் தேங்கி நிற்கிறது. உங்களுக்கும் அது இருக்கும் தான். என்ன செய்ய.. மூத்தவரின் நிறைவேறாத ஆசையான உங்களது விடுதலை நிறைவேறி விட்ட மகிழ்வில் அவரது ஆன்மாவும் அமைதி அடைந்திருக்கும் என்று நினைவில் நாம் நிலைத்திருப்போம்.

இந்த சமயத்தில் விடுதலை கனவோடு நம்மிடமிருந்து விடைபெற்ற அண்ணன் சாந்தனை நினைவு கூர்கிறேன். அவர் இன்னும் சில காலம் நலமோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அண்ணன்கள் முருகன் ஜெயக்குமார் ஆகியோர் குடும்பங்களோடு இணைகிற இப்பொழுதுகளில் அவர்களது நலமும் வளமும் நீடிக்கட்டும்.

சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள்.
பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள்.

போய் வாருங்கள் அண்ணா. உங்கள் பால்யத்தில் நீங்கள் திரிந்த நதிக்கரையில் பால் நிலா பொழுதுகளில் காலார நடந்து செல்லுங்கள். நீங்கள் நேசித்த தாய் மண்ணை உங்கள் நினைவுகளின் கண்ணீரில் குழைத்து நெஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்.

சுருங்கிவிட்ட இந்த உலகில் என்றாவது ஒரு நாள் மீண்டும் நாம் சந்தித்தே தீருவோம். அந்த நாளுக்காக இங்கே நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இந்த பூமியின் ஏதோ ஒரு இடத்தில் கடற்கரை ஓரத்தில் மகிழ்வான பொழுதில் நாம் நினைத்து சிரித்துப் பேச நிறைய செய்திகள் அன்று பூத்துக் குலுங்கும்.

அன்றைய நாளுக்காக … இனி நாங்கள் காத்திருப்போம்.

நெகிழ்வான நினைவுகளோடும்.. நெஞ்சம் முழுக்க பேரன்போடும்..

என்றும் உங்கள் தம்பி..
மணி செந்தில்.

பிரேமலு-மெல்லிய புன்னகையின் மொழி.

ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு நிறைய பிறமொழித் திரைப்படங்களை மிக எளிதாக பார்க்க முடிகிறது. தேர்தல் பணிக்கு பிறகான காலத்தில் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும் என நினைத்திருந்த பல திரைப்படங்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக பிரேமலு.(Premalu -2024) நாம் பல படங்களில் பார்த்து அலுத்து தீர்த்த மிக மிக ஒரு சாதாரண திரைக்கதையை மிகவும் புதிதாக அதே சமயத்தில் வசீகரமாக எடுக்க முடிகிற வித்தை அசாத்தியமானது.

படம் நகரும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மெல்லிய சிரிப்பினை நம் முகத்தில் தக்கவைத்து, படம் முடியும்போது “அட” போடவைத்து அட்டகாசப்படுத்தி விடுகிறார்கள். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு சக்தி அதன் கதாநாயகன் தான். இத்தனைக்கும் அவன் கதாநாயகனுக்குரிய எவ்விதமான சாகச திறமைகளும் இல்லாதவன். அவன் நம்மில் ஒருவன். சொல்லப்போனால் நாம் தான் அவன். அதனால் படம் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த கதாநாயகனில் தன்னைக் கண்டு கொள்கிறார்கள். அவனது மூடத்தனங்களில், போதாமைகளில், இயலாமைகளில், தங்களின் வாழ்வை ஒப்பீடு செய்து தங்களுக்குள்ளாக சிரித்து வெட்கப்பட்டு கொள்கிறார்கள்.

கிரீஷ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பகத் பாஸில் மற்றும் அவரது நண்பர்கள் தயாரித்திருக்கிறார்கள். கதாநாயகன் சச்சின் சந்தோஷாக நடித்துள்ள நஸ்லீன் தன் நுட்பமான முக பாவனைகளால் பிரமாதப்படுத்துகிறார். எப்போதும் ஏக்கமும் ஏமாற்றமும் தடுமாற்றமும் நிரம்பிய முகத்தோடு அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் “அட நாமும் இப்படி இருந்திருக்கிறோமே..” என நினைக்க வைக்கின்ற திரை மொழி பேரழகு.

கதாநாயகனின் நண்பன் அமல் டேவிஸாக வரும் சங்கீத் பிரதாப் மற்றும் ஏறக்குறைய வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக சியாம் மோகன் என ஆளுக்கு ஆள் அவரவர் பங்கிற்கு பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் பிறரின் மூடத்தனங்களை, போதாமைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். முதன் முதலாக ஒரு திரைப்படம் வாயிலாக நம்மை பொருத்திப் பார்த்து நாம் சிரித்துக் கொள்கிறோம். அதுதான் பிரேமலு கொண்டிருக்கும் தனித்துவம்.

தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

அவசியம் பாருங்கள்.

ஒரு மகிழ்வான மாலை உறுதி.

❤️

மணி செந்தில்.

இசைஞானி 81

🟥

ஒரு மனிதன் தனித்துவிடப் படுகின்ற தருணங்களில் தான் தன்னை நோக்கி வரும் தேவ கரங்களை யாசிக்கிறான். தனிமையும் மௌனமும் கனத்திருக்கும் பொழுதுகளில் சங்கடங்களில் சரிந்திருப்பவன் சாய்ந்திருக்க தோள் ஒன்றை தேடுகிறான். அப்போதுதான் இளையராஜாவின் கிட்டார் மீட்டல்களோ, பியானோ தீட்டல்களோ அவனை மீட்க காற்றின் ரதம் ஏறி இதம் சுரக்க வருகின்றன.

உடலெங்கும் செடிகள் மேவிய பழங்கோவில் ஒன்றில் சிற்ப இடுக்கில் ஊடுருவிப் பாயும் ஒற்றை வெளிச்சம். சட்டென தட்டும் ஒரு கைத்தட்டலால் தாழ்வாரத்தில் தானியம் பொறுக்க வரும் பறவை ஒன்றின் சிறகடிப்பு. வயல் நிறைந்த பயிர்களில் தேங்கி இருக்கும் அதிகாலைப் பனி.பின்னிரவில் சாலை விளக்கு ஒன்றின் தனிமை.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் துள்ளல். என இளையராஜாவின் இசையால் உணர்த்தப்படாதவை எது.. எது..??

எல்லாராலும் கைவிடப்படுபவர் இளையராஜாவால் தத்தெடுக்கப்படுபவராகி தத்தளிப்பில் இருந்து மீள்கிறார். தோல்வியடைந்த பின்னிரவுகளில் தனித்திருக்கும் போது ” கண்ணே கலைமானே..” கேட்டு “உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே..” என்று குழைந்து நெகிழாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

முதன்முதலாக காதலை உணர்ந்த ஒரு மழை மாலைப் பொழுதில் “காதலில் தீபம் ஒன்று..” கேட்டு கன்னக்கதுப்பில் மிளிரும் புன்னகையோடு வானத்தைப் பார்க்காதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

இன்றும் “வருஷம் 16” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/bAnsu5udPDs?feature=shared

நாம் வாழ்ந்த வாழ்க்கையை, அப்படியே மீண்டும் சம்பவங்களோடு ரீவைண்ட் செய்து
நமது அகக் கண்களால் நாமே காண முடிகிற அந்த மேஜிக் தான் இளையராஜா.

உங்களில் யார் யார் “கோபுர வாசலிலே” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டிருப்பீர்கள்..??

கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூடிய உங்கள் கண்களுக்குள் ஒரு நொடியில் இருண்மையையும், அடுத்த நொடியில் வெளிச்சத்தையும் ஒருங்கிணைக்கிற அந்த குகை வழி ஞானப் பயணத்தை இளையராஜாவை விட யாரால் வழிநடத்த முடியும்..??

என்னைப் பொறுத்த வரையில் அவரை சார்ந்து இசை /மொழி என்றெல்லாம் விவாதங்கள் எழுப்பப்படுவது அர்த்தமற்றவை.
அவரது படங்களில் பின்னணி இசையில் கலாபூர்வமாக காட்சி இடைவெளியில் அவர் விடுகின்ற சிறு மௌனம் கூட அறிகிறவர்களுக்கு பேரிசை தான்..

“அழகி” படத்தில் சாலை ஓரத்தில் பார்க்க நேர்ந்து விட்ட காதலி அளிக்கும் உணவை சாப்பிடும் போது மழை பெய்யும் பொழுதில் அவன் நனையாமல் இருக்க காதலி ஒரு தடுப்பினை பிடிக்க.. அங்கே கொடுப்பார் பாருங்கள் கலை மேன்மை கொண்ட ஒரு மௌனம்..

அதற்குப் பிறகு அவரது கனத்த குரலில் “உன் குத்தமா என் குத்தமா” என இசை எழும்போது உள்ளுக்குள் உணர்ச்சியின் உருண்டை வயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குள் அடைத்து விழி நனையாதவர் யார் யார்..??

மௌனத்தை கூட தனது இசையின் பக்க வாத்தியமாகக் கொண்டவருக்கு ஏது மொழி.. ??

காதலுக்கு மரியாதை என்கின்ற படத்தின் உச்சக் காட்சியில் எந்த வசனமும் இல்லாமல் எந்த சண்டைக் காட்சியும் இல்லாமல் வயலின்களை வைத்தே கிளைமாக்ஸை நிறுவி இருப்பாரே.. அதற்கு ஏது மொழி..??

பசிக்கும், கனவிற்கும், காதலுக்கும், காமத்திற்கும், தோல்விக்கும், தவிப்புக்கும், வறுமைக்கும், வாழ்வின் இருண்மைக்கும், நெகிழ வைக்கிற தாய்மைக்கும் , நோக வைக்கிற நோய்மைக்கும், இன்னும்.. இன்னும்.. உள்ளுக்குள் ஊறுகிற ஓராயிரம் உணர்ச்சிக்கும் ஏதேனும் மொழி இருக்கிறதா என்றால்.‌.

இருக்கிறது..

அதன் பெயர் இளையராஜா.

அதுதான் எங்கள் மொழி.
அதுதான் எங்கள் வலி
மறக்க இருக்கும் வழி.

எம் வாழ்வின்
எல்லா
நொடிகளிலும்..

இமைக்க மறந்து,
இதயம் நனைந்து,
இசையில் எமை
நிறைக்கும்,
இசை இறைவன்
இளையராஜாவிற்கு,
இனிய பிறந்தநாள்.
வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.

இசைஞானி81

HBDIlayaraja

An Unread message…

❤️

இன்னும்
அலைபேசி திரையில்
நான் பார்க்காத
உனது
குறுஞ்செய்தி ஒன்று
பனிக்கால இரவில்
சாக்கு பையின்
கதகதப்பில்
படுத்திருக்கும்
பூனைக்குட்டி போல
உறைந்திருக்கிறது.

உடனே
திறந்துப் பார்க்க
முடியாமல்
படிக்காத குறுஞ்செய்தியை
உறைந்த பார்வையோடு
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்.

அது விரல் படாத
பியானோ பொத்தான்கள்
போல ஏதேனும் இசைத்துளி ஒன்றை உள்ளுக்குள்
தேக்கி இருக்கக்கூடும்
என எண்ணுகிறேன்.

அல்லது

ஒரு பெரு மழையோ
ஒரு சுடும் பாலையோ
இன்னும் ஏதாவது
இருக்கக்கூடும்.

இந்தக் குறுஞ்செய்தியைப்
படிக்க நான்
தனிமையும்
பனியும் நிறைந்த
ஒரு மலைமுகட்டை
தேட வேண்டி இருக்கிறது.

சில சமயங்களில்
உன்
குறுஞ்செய்திகளை
படிக்கும்போது
என் கழுத்தை கவ்வும்
ஒரு ஓநாய்
காத்திருப்பது என்பது
எதேச்சையானது அல்ல‌.

பிரிபடாத
அந்தக் குறுஞ்செய்தியில்
ஏதேனும் காரணங்கள்
இருந்து விடக் கூடாது என அஞ்சுகிறேன்.

காரணங்கள் இல்லாமல் குறுஞ்செய்தி
அனுப்பி
கொண்ட காலங்கள்தான்
பொன்னிழைப் பொழுதுகள்.

காரணங்கள்
அலுப்புட்டுகின்றன.
காரணங்கள்
சுயநல ஒப்பனையோடு
துருத்திக் கொண்டு தெரிபவை.

காரணங்களே
இல்லாமல்
அனுப்பப்படும்
குறுஞ்செய்திகள் தான்
காதலின் மது அருந்தி
பேரன்பின் நிர்வாணத்தோடு
இமைகள் கிறங்க
வந்திறங்கி
நம் இதயம் இடறுபவை.

காரணங்கள்
இல்லாமல்
குறுஞ்செய்தி அனுப்புவது
என்ன
காரணத்திற்காக
என்று கேட்கிறார்கள்.

நீயும் நானும்
இருக்கிறோம்
என்கிற காரணம்
ஒன்றே ஒரு
குறுஞ்செய்தி
அனுப்புவதற்கு போதாதா..

அவர்களுக்குத்
தெரியாது.
எழுத்துக்கள் இல்லாத
வெறுமை
குறுஞ்செய்திகளில் கூட
வாசிக்கக்கூடிய செய்திகள் இருக்கின்றது என்று.

அதையும் தாண்டி..
யாருக்கேனும்
காரணங்கள் தேவைப்பட்டால்
நம்மிடம் உதிர்த்துக்கொள்ள
ஒரு கன்னக் கதுப்புப்
புன்னகையும்,
பின்னணியில்
இசைந்துக்கொள்ள
ஒரு இளையராஜாவின் இசைத்துண்டும்
தயாராகவே இருக்கின்றன
என்பதே காரணங்களாக இருக்கின்றன என்று
அவர்களுக்கு எப்படி
உணர்த்துவது..??

“சாட்டை”க்கு பாராட்டுக்கள்..

LGBTQ+ வினரை பற்றி தம்பி சாட்டை துரைமுருகன் மிக முக்கியமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. முதலில் இதை விவாத பொருளாக மாற்றியதற்கே தம்பி துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வரலாற்றால் வஞ்சனை செய்யப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுவது தான் நீதி. பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பது தான் அறம். அதைஉணர்ந்து தம்பி துரைமுருகன் செயல்பட்டிருப்பதை மனதார பாராட்டுகிறேன்.

1960களில் ஓரின பால் ஈர்ப்பு என்பது மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்பட்டு வந்த நிலையில் நவீன மருத்துவம் அது “ஹார்மோன் மாறுபாட்டினால் ஏற்படுகிற நிலைமை” என்பதை கண்டறிந்த பிறகு உலகளாவிய அளவில் LGBTQ+ வினரைப் பற்றி பார்வைகள் மாறி இருக்கின்றன.

1870களில் இயற்றப்பட்ட ஆங்கிலேய சட்டத்தின் பிரதியான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 ஓரின பால் ஈர்ப்பை இயற்கைக்கு மாறான உறவு என வரையறுத்து தண்டனைக்குரிய குற்றமாக வைத்திருந்ததை 2018 ல் உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஓரின பால் ஈர்ப்பு குற்றச் செயல் அல்ல என அறிவித்தது. ஆனால் சமத்துவத்திற்கு எதிரான பிரிவு 377 ஐ ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதையும் அது பாராளுமன்றத்திற்கு தான் உண்டு என்பதையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதேபோல் உலகளாவிய முறையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து இருக்கின்றன. இந்த முற்போக்கு வரலாற்றின் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் இயற்றி அவர்களுக்கான கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு போன்றவற்றில் காட்டப்படும் பாகுபாட்டை தடுக்கிறது.

நவீன அறிவியல் /மருத்துவ சிந்தனைகளால், கண்டுபிடிப்புகளால் பழைமை நிறைந்த பிற்போக்கு கருத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட சமூகமாய் இருந்த LGBTQ+ வை சேர்ந்தவர்கள் பொதுச் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தை அவர்கள் ‘பெருமை மாதமாக” ( Pride Month) அறிவித்து பேரணிகள் நடத்துகிறார்கள்.

பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து தங்களுக்கான உரிமைகளை, தங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் கோருகிறார்கள். இது மனநலம் சார்ந்த பிரச்சனை அல்ல, ஹார்மோன் மற்றும் உடல் மாறுதல்களால் ஏற்படுகின்ற விளைவு என்பதை பொதுச் சமூகத்திற்கு புரிய வைக்க அவர்கள் மிகுந்த அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் நடுவில் நீண்ட காலம் பயணித்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் வெளியான ஒரு தலை ராகம் திரைப்படத்தில்
” கொக்கரக்கோ கோழி கூவுற வேளை” என கிண்டலும், அவமானமும் நிறைந்த சின்னங்களாக பொதுச் சமூகத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டவர்கள் அடைந்த இழிவுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று அவர்களையும் மனிதர்களாக பார்க்கின்ற சக உயிரிகளாக பார்க்கின்ற குரல்கள் ஆங்காங்கே எழ தொடங்கியிருக்கின்றன.

திருநங்கைகள் பெரும்பாலும் கண்ணியமானவர்களாக காட்டக்கூடிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கி இருக்கின்றன. சரத்குமார், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் கூட திருநங்கைகளாக நடிக்க முன்வருவது அனைத்தும் மாறி வருகிற முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாடுகளே. ஒரு தலை ராகம் தொடங்கி காஞ்சனா/ சூப்பர் டீலக்ஸ் வரையிலான காட்சி அமைப்பு மாறுதல்களின் வரலாற்றுக்குப் பின்னால் எண்ணற்றவர்களின் துயர நிறைந்த போராட்டக் கதைகள், அவமான வலிகள், ஒதுக்கப்பட்டவர்களின் காயங்கள் ஒளிந்து இருக்கின்றன.

சமீபத்தில் ப்ரைமில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்கின்ற தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று லெஸ்பியனாக வடிவமைக்கப்பட்டு அவர்களின் துயரம் பற்றி காட்சி அமைப்புகள் இருந்ததும் , பல வெப் தொடர்களில் ஓரின பால் ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி இருப்பதும் ஆரோக்கியமான காட்சிகளே.

நம்மோடு பிறந்தவர்கள் அவர்களை ஏன் நாம் அருவெறுப்பாக பார்த்து ஒதுக்க வேண்டும் என்கிற கேள்வி இன்று பரவலான பொதுக் கேள்வியாக மாறி இருக்கிறது. அவர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் இணைத்து பேசுவது போன்ற பிற்போக்குத்தனங்கள் குறைந்து இருக்கின்றன. காலங்காலமாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிய திரைப்படங்கள் எவ்வாறு இன்று குறைந்து போயிருக்கிறதோ, பிற்போக்கு சிந்தனைகளின் வடிவமாக பார்க்கப்படுகிறதோ அதேபோல LGBTQ+ வினரை தவறாக காட்டுகின்ற திரைப்படங்களும் குறைந்திருக்கின்றன என்பது ஆறுதலான மாறுதல்.

பாலியல் தேர்வு என்பது அவரவர் தனிநபர் சார்ந்தது.LGBTQ+ வினரில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள் இருப்பது போல எந்த பாலினத்தின் மீதும் ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இயல்பான மனிதர் வாழும் சாதாரண வாழ்விற்காக, எல்லோருக்கும் கிடைக்கும் சாதாரண உரிமைகளுக்காக சமத்துவ சமூகம் வேண்டி அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு இப்போதைய தேவையெல்லாம் நம் புரிதல் மட்டுமே.

மற்றபடி பிற்போக்குத்தனங்களின் பிதற்றல்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவே கத்தி தானாக ஓய்ந்துவிடும். இது வரலாற்றில் எப்போதும் நடப்பது தானே.

மற்றபடி புரிந்துணர்வு மிக்க, ஆகச் சிறந்த, மனம் நிறைந்த பாராட்டப்பட வேண்டிய காணொளி வெளியிட்ட Saattai- சாட்டை க்கும், என் ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகனுக்கும், எனது மனமார்ந்த பாராட்டு‌. பேரன்பு.

அவன் என் தம்பி என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மணி செந்தில்.

உவர்ப்பு இல்லா கண்ணீர்.

“மனிதன் தாங்கக்கூடிய அளவிற்கே கடவுள் துன்பத்தை தருகிறான்” என்கிறது புனித நூல் திருக்குர்ஆன்.அது என்ன தாங்கக் கூடிய அளவு.. அப்படி துன்பத்திற்கு அளவுகோல்கள் இருக்கிறதா என்ன.. துன்பத்தில் எது பெரிய துன்பம் எது சிறிய துன்பம்.. துன்பம் என்பதே வலி தானே என்றெல்லாம் சிந்தனைகள் விரிந்து கொண்டே போகின்றன.

10 ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தை 1 1/2 வயதில் இறந்துவிட்ட கொடுமையை சமீபத்தில் என் குடும்பம் சந்தித்தது. என் வீட்டுப் பெரியவர்கள் விழிகளில் வலியை சேமித்து உறைந்து விட்டார்கள். கண்ணீர்/கதறல் போன்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை எல்லாம் தாண்டி உறைந்து விடுவது என்கிற நிலையை என் வீட்டிலேயே நான் கண்டேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை.இன்று காலை எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சட்ட உதவிக்காக என்னை அழைத்தார். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் மட்டும் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் குறைந்தவர்.அவரை தனது மூத்த மகன் மிகவும் மோசமாக நடத்துவதாகவும், அடிக்கடி தாக்கி விடுவதாகவும், அதை அவர் மிகுந்த வலியோடு என்னிடம் தெரிவித்தார். மூத்தமகனை அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.வாழ்வின் மிகக் போராட்டம் எதுவென்று சிந்திக்கும்போது உடல் நலமில்லாத குழந்தைகளை வளர்க்க பெற்றோர் நடத்துகிற போராட்டம் தான் என்பதை உணர முடிகிறது. எந்த நேரம் எது நடக்கும் என்று குழந்தைகளின் உடல்நலத்தைப் பொறுத்து எதுவும் தெரியாது. தன் கண் எதிரே தன் குழந்தைகள் படும் பாடு கண்டு பெற்றோர் அடையும் துயரத்தின் உயரம் எவரெஸ்ட்டை விட பன்மடங்கு பெரியது.

என் குடும்பத்திலேயே “ஆட்டிசம்” பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவன் இருக்கிறான். அவனை உருவாக்க அவனது தாய் படும் பாட்டை நான் அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அந்தப் பெண்ணுக்கு அச்சுஅசலாக என்னுடைய தாய் முகம். சிறுவயதில் என் அம்மா எப்படி என்னை தூக்கிக்கொண்டு அலைந்தாரோ அதேபோல அவளும் ஒரு சுமைத் தாங்கியாக மாறி இருப்பது வாழ்வின் அசலான மனிதர்கள் நகலெடுத்துக் கொண்டது போல இருக்கிறது. அவள் எப்போதும் நோயற்ற குழந்தையைப் பெற்று வென்ற என் அம்மாவின் கண்களில் இருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டே இருக்கிறாள். அவளது வெற்றிக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

முழுமையான உடல் நலம் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் வரம் வாங்கியவர்கள். அமைதியாக உறங்கும் இரவுகளை அடைந்தவர்கள்.அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சாலையை கடந்து செல்லும் முடி இழந்த சில குழந்தைகளை பார்க்க நேரிட்டது. தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே உலவும் அந்த குழந்தைகளின் விழிகளை பார்த்துவிட்டு நிதானமாக இருக்க முடியவில்லை.ஒரே சமயத்தில் பால்யத்தின் குறுகுறுப்பும், நோயின் தீவிரம் தரும் வலியின் நிழலும் கொண்ட அந்த விழிகள் எப்போதும் தன் தாய் தந்தையரையே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

நோய்மை நிறைந்த குழந்தைப் பருவம் மிகத் துயரமானது. நோய் தருகிற வலி, உறக்கமற்ற இரவுகள் இதுவெல்லாம் ஒருபுறம், இன்னொரு புறம் நண்பர்கள் தோழிகள் விளையாட்டுகள் இல்லாத தனிமை. மருத்துவமனையின் வெளிறிய சுவர்களை பார்த்து களைப்படையும் கண்களோடு இருந்த எனக்கு என் தந்தை புத்தகங்கள் மூலம் விடுதலைப் பெற்றுத் தந்தார். இந்த ஆன்ம விடுதலை அனைவருக்கும் கிடைப்பதில்லை.

“The Miracle”( 2015) என்கின்ற துருக்கி நாட்டு திரைப்படம் ஒன்று இருக்கிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த திரைப்படம் “Mahsun Kırmızıgül” என்பவர் இயக்கி இருந்தார். பள்ளிக்கூடம் இல்லாத ஒரு கிராமப்புறத்திற்கு பணிக்காக செல்லும் ஒரு ஆசிரியர் அங்கே நோய்மையால் பாதிக்கப்பட்ட பேச்சுத்திறன் இழந்த சரிவர நடக்க முடியாத ஒரு வாலிபனை சந்திக்கிறார். அந்த ஆசிரியர் மற்றும் எதிர்பாராத விதமாக அவனுக்கு அமைந்த மனைவி மூலம் அந்த வாலிபன் உலகின் அனைத்து உயரங்களையும் அடைவது தான் அந்த கதை. எனது ஆருயிர் தம்பி கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி விக்கி தனிமை உணர்ச்சி வெகுவாக ஆட்கொண்ட ஒரு நாளில் எனக்கு இந்தத் திரைப்படத்தை பரிந்துரைத்தார். இரண்டு பாகங்களையும் முழு வீச்சில் பார்த்து முடித்த எனக்கு அதற்கடுத்த இரண்டு நாட்கள் படம் தந்த தாக்கத்திலேயே கழிந்தன. எல்லோரும் மிக முக்கியமாக காண வேண்டிய அந்த திரைப்படத்தின் முதல் பாகம் நெட்ப்ளிக்ஸ் -சில் கிடைக்கிறது. இரண்டாம் பாகம் youtubeலயே இருக்கிறது. நோயற்ற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை பற்றி இந்த படம் பேசியது போல வேறு எந்த படமும் இவ்வளவு நுட்பமாக பேசியதாக தெரியவில்லை.

இளம் வயது நோய்மையின் மிக உக்கிரமான உச்சம் அது தருகிற தனிமை. இளம் வயதில் உளவியலாக அந்தத் தனிமை உணர்ச்சியை அடைந்தவர்கள் வாழ்நாள் முழுக்க எல்லா பொழுதுகளிலும் அந்த தனிமை உணர்ச்சி ஆன்மாவில் தேங்கி நிற்கும். “வேலையில்லாதவனின் பகல் பொழுது தான் உலகத்திலேயே மிக நீளமானது” என்ற வரியை எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். நோயுற்றவனின் இரவும் அப்படித்தான். வலியும் தனிமை உணர்ச்சியும் நிரம்பிய அந்த இரவுகள் முடிவே இல்லாத ரயில் பெட்டிகளின் வரிசையை நினைவூட்டுபவை.

“ஆரோக்கிய நிகேதனம்” என்ற 1953இல் வெளியான புகழ்பெற்ற ஒரு வங்காள நாவல் இருக்கிறது. அதை எழுதியவர் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாயா. தமிழில் குமாரசாமி மொழி பெயர்த்திருக்கிறார். ‘சாகித்ய அகாதெமி’ சார்பில் வெளியாகி இருக்கும் இந்த நூல் நோய்மையின் வெவ்வேறு குணாதிசயங்களையும், குணப்படுத்தும் வெவ்வேறு வழிகளையும் பற்றி விவாதிக்கின்ற அந்த நூல் மரபு சார்ந்த மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் இடையே இருக்கின்ற முரண்களைளையும் அரசியலையும் நுட்பமாக காட்டுகிறது. அதில் ஜீவன் மசாய் என்கின்ற முதன்மை கதாபாத்திரம் உண்டு. தலைமுறை தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்து வரும் குடும்பத்தில் பிறந்த அவர் ஆங்கில மருத்துவப் படிப்பில் சேர்ந்து மஞ்சரி என்ற பெண்ணை காதலித்து பிரிந்து, நிறைவேறாத காதலின் காரணமாக படிப்பை கைவிட்டு, தந்தை வழி ஆயுர்வேதத்தை தொழிலாக மட்டுமல்ல வாழ்வியலாக மாற்றி பின்பற்றி புகழ் பெற்ற ஆரோக்கிய நிகேதனம் என்கின்ற மருத்துவமனையை நிறுவுகிறார். ஆத்தர் பவ் என்ற பெண்ணை மணமுடிக்கும் அவர் வாழ்நாள் முழுக்க மனைவியின் வெறுப்பை சுமந்து ஆங்கில மருத்துவம் படித்த காதலியின் பேரனுக்கு நோய்மையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் புரிதலை உருவாக்கி மறையும் அவரது பாத்திரப்படைப்பு இந்திய நாவல் உலகில் தலைசிறந்தது . இளம் வயதிலேயே தன் மகனை பறிகொடுத்த ஜீவன் மசாய் “எல்லோருக்கும் எதிர்பாராத ஒரு நொடியில் மரணம் தான் முடிவு, அதை வெல்ல யாரும் இல்லை” என்பதை தன் வாழ்நாள் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் அந்தக் கதை. நோயைப் பற்றி தமிழில் சமீபத்தில் வந்திருக்கும் மருத்துவ புதினம் அக்குபஞ்சர் மருத்துவர் உமர் பாருக் எழுதிய “ஆதுர சாலை” நவீன மருத்துவ முறைமைகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்புகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அவரின் மகள் சிறு வயதிலேயே இன்சுலின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஊசி போடக்கூடிய நிலைக்கு ஆளானவர். பணியில் இருக்கும் நேரத்தில் கூட ஓடிப் போய் தன் மகளுக்கு ஊசி போட்டுவிட்டு வியர்த்து விறுவிறுத்து வேக வேகமாக திரும்பும் அவரின் துயரத்தை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் . அவரும் அவரது மனைவியும், தன் மகளை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த பொழுதில், ‌ அவர்களிடம் சென்று ‘நீங்கள் வென்று விட்டீர்கள்’ என சொல்லிவிட்டு நகர்ந்த போது அவர்களது விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அந்த நிறைவு தரும் முழுமை போல உலகில் வேறு எதுவும் முழுமையில்லை.

அந்த நேரத்தில் உதிர்க்கும் கண்ணீர் கூட உவர்ப்பு இல்லாத உவப்பு தானே..??

Page 1 of 12

Powered by WordPress & Theme by Anders Norén