மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

யாருக்கும் அவனைத் தெரியாது..!

அவன் எளியவன். சாதாரணன். மேடைகளின் வெளிச்சத்தில் ஒளிரும் நட்சத்திரமல்ல அவன்.‌ அடுக்கடுக்காய் செந்தமிழ் பேசும் சொற்களுக்கு சொந்தக்காரன் இல்லை அவன். அவன் எளியவன். சாதாரணன்.

அவனை நீங்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் பார்க்கலாம். ஏதோ உயரத்தில் ஏறிக்கொண்டு கட்சியின் கொடியை அல்லது தோரணத்தை கட்டிக் கொண்டிருப்பான். அதற்கு முந்தைய நாள் இரவில் சுவரொட்டி ஒட்டுபவரோடு அலைந்து திரிந்து சுவர்களை தேர்ந்தெடுத்து இருப்பான்.‌ அண்ணன் சீமானின் முகம் உயரத்தில் மின்ன வேண்டும் என்பதற்காக உயரமான சுவற்றில் ஏறத் தயங்கும் சுவரொட்டுபவரோடு வாக்குவாதம் செய்து அவனே அந்த சுவற்றின் உச்சத்தில் ஏறி சுவரொட்டி ஒட்டி இருப்பான். மேடையில் விரிக்கப்படும் விரிப்பினை அவன் தூசி தட்ட உதறும்போது , அந்த தூசி பறத்தலில் புன்சிரிப்போடு மிளிரும் அவன் முகம் காணலாம்.‌

நாற்காலிகளை தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து பார்த்து ஒவ்வொன்றாய் போடும்போது, யார் ஆலோசனை சொன்னாலும் அதை சிரிப்போடு ஏற்றுக் கொண்டு அந்த நாற்காலிகளை போட்டுக் கொண்டிருப்பான். அவர்கள் சிறியவர் பெரியவர் என்ற பேதம் எல்லாம் அவனுக்குத் தெரியாது. அவர்கள் தன் கட்சிக்காரர்கள். அவர்கள் சொன்னால் அவன் கேட்பான்.

கூட்டம் தொடங்கிய பிறகு அவனை நீங்கள் பார்க்க முடியாது. மேடைக்கு பின்னால் நின்று கொண்டு , ஓடும் ஜெனரேட்டர் சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என பதட்டமாய் பார்த்துக் கொண்டிருப்பான்.பேசி முடித்தவர்களுக்கு தாகம் தணிக்க தண்ணீர் பாட்டில்களை வாங்கி மேடைக்கு முன்னால் இறக்கி வைப்பான். கூடுதலாக நாற்காலிகள் வேண்டுமா என கேட்டு அதற்காக நாற்காலிகள் எடுக்க ஓடிக் கொண்டிருப்பான்.கூட்டம் முடிந்த பிறகு எல்லோரும் கலைந்து விடுவார்கள். அவன் தனிமையாய் நின்று கட்சிக்கொடி அவிழ்த்து கொண்டிருப்பான். தயங்கி யாராவது நின்றால், “நீங்கள் போங்கள் நான் கட்சிக் கொடியை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்..!” என்று சொல்வான். அந்த புலிக்கொடி மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.

எப்போது கூப்பிட்டாலும் ஓடிவரும் தொலைவில் நிற்பான். ஆனால் தொலைவில்தான் நிற்பான். ஒருபோதும் வெளிச்சத்தின் வீதிகளுக்கு தன்னை விற்றவன் அல்ல அவன். நிருபர்கள் பேட்டி எடுக்கும் போது அண்ணனுக்கு பின்னால் நின்று போட்டி போட்டுக் கொண்டு முகங்களை காட்டி முகவரி தேடுகிறவன் அல்ல அவன். தூரமாய் நின்று அண்ணன் சீமானின் மொழிகளை அப்படி ரசிப்பான். வாடகைக்கு வண்டி ஓட்டும் போது ஓய்வெடுக்கும் நேரங்களில் கூட அண்ணன் பேச்சு தான் அவன் அலைபேசியில் ஓடிக்கொண்டிருக்கும்.

எல்லா கட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் முதல் ஆளாய் பேருந்திலோ, வேனிலோ ஏறுபவன் அவனாகத்தான் இருப்பான். அந்தப் பயணம் சென்று முடியும் வரை அந்த பேருந்தில் அல்லது வேனில் பயணிக்கின்ற எல்லோருக்கும் அவன் தான் தண்ணீர் வாங்கி தருவதிலிருந்து, உதவியாய் நிற்பதிலிருந்து, இரவு நேர பயணத்தின் போது ஓட்டுநருக்கு பேச்சுக் கொடுத்து வருவதிலிருந்து, அவன் தான் சகலமும்.

இத்தனைக்கும் அவனுக்குத் தினந்தோறும் அவன் வைத்திருக்கிற டாடா ஏஸ் வண்டி ஓட்டினால் தான் வருமானம். ஆனால் பெரும்பாலும் கட்சி வேலையின் போது அந்த வருமானம் அவனுக்கு கிடைக்காது. அதை உணர்ந்து யாராவது எரிபொருள் போட பணம் வைத்துக் கொள் என கொடுத்தால், அதை வாங்க மறுத்துவிட்டு இது என் கட்சி என் உழைப்பு இன்று மௌனமாக கடந்து விடுவான்.

உண்மையில் அவனை யாருக்கும் தெரியாது. அது பற்றி அவனுக்கும் எந்த குறையும் இல்லை. அவன் பணி அவன் நேசித்த அண்ணனுக்கும் அமைப்பிற்கும் புலிக்கொடிக்கும் நேர்மையாக இருப்பது.

ஒருமுறை அண்ணன் சீமான் கும்பகோணம் வந்திருந்த நாளில் .. எதிர்பாராத விதமாக அவனது தந்தையார் காலமாகிவிட்டார். அண்ணன் தங்கியிருந்த விடுதிக்கு அருகே தான் அவனது வீடு. அண்ணன் வருகையின்போது இப்படி ஒரு துயரம் நடந்து விட்டதே என அவனுக்கு மிகப்பெரிய வலி. அதனால் யாரிடமும் சொல்லாமல் வீட்டு வாசலில் கூட எந்த அறிவிப்பும் செய்யாமல் அமைதியாக அவன் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டான். ஏதேச்சையாக அவனது வீட்டுக்குப் போன ஒரு கட்சி தம்பி இதை தெரிந்து கொண்டு தயக்கமாய் எங்களிடத்தில் சொல்ல, அண்ணன் சீமானுக்கு தகவல் தெரிந்தது. உடனே தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வாருங்கள் தம்பி வீட்டிற்கு போவோம் என வாகனத்தில் கூட ஏறாமல் நடந்தே கிளம்பி விட்டார்.

சென்னை சாலையின் ஓரத்தில் ஒரு இடிந்த சிறிய குடிசை வீடு. எந்த நேரமும் கீழே விழுந்து விடும் என்கிற அளவிற்கு பழுதான சுவர்கள். சாலையில் வேகமாக வரும் ஏதோ ஒரு வாகனம் கண நேரத்தில் தவறினால் வீட்டின் சுவற்றில் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்படுகின்ற ஆபத்தோடு இருக்கின்ற வீட்டில் தான் குடும்பத்தோடு அவன் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான். இரண்டு சிறு ஆண் குழந்தைகள். தன்னைப் போலவே உலகம் அறியா அப்பாவி மனைவி. இதுதான் அவனது உலகம்.‌ அதைத் தாண்டி அவன் சம்பாதித்தது நாம் தமிழர் கட்சியை தான்.

அண்ணன் அந்த வீட்டை பார்த்து ஒரு நொடியில் உறைந்துவிட்டார். இந்த இடத்திலிருந்து அவன் என்னிடத்தில் வந்திருக்கிறானே என அண்ணன் சொன்னபோது அவரது குரல் தழுதழுத்தது. அதனை மாற்ற வேண்டும் என்றார். அந்த வீட்டை பொறுத்து ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்ற விபரம் அவரிடம் தெரிவித்த போது, வழக்கை சீக்கிரம் முடித்து தம்பிக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அண்ணன் சொன்னார். அவனுக்கோ அண்ணனைப் பார்த்து மிகப்பெரிய பதட்டம். அவனுடைய தந்தைக்கு அண்ணன் இறுதி வணக்கம் செலுத்தி அவனை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு உடல் நடுங்கியது. அண்ணன் சென்ற பிறகு.. இதைவிட எனக்கு என்ன கொடுப்பினை இருக்கிறது.. என் அண்ணன் என் வீட்டிற்கு வந்து விட்டார். இனி என் உடலும் வாழ்வும் உயிரும் நாம் தமிழர் கட்சிக்கே ! என உறுதி கூறி பெருமைப்பட்டான்.

அதிலிருந்து இன்னும் மறைவாக ஆனான். அண்ணனுக்கே தன்னை தெரிந்து விட்டது, இனி என்ன யாருக்குத் தெரிய வேண்டும் என நினைத்தானோ என்னவோ.. தனியாக அலைந்துக் கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைத்துக் கொண்டே இருந்தான். பொறுப்புக்காக சண்டை போட்டவர்கள், பொறுப்பில்லாமல் சண்டை போட்டவர்கள் , அங்கீகாரங்களுக்காக அலைந்தவர்கள், முகவரிக்காக முட்டியவர்களுக்கு மத்தியில் ‌ அவன் எதையும் எதிர்பார்க்காமல் ‌ தன்னுடைய அண்ணன் சீமானையும் அவர் தூக்கி சுமந்த புலிக்கொடியையும் நேசித்துக் கொண்டு அலைந்து கொண்டே இருந்தான்.

நேற்றுக் கூட என்னை வந்துப் பார்த்தான். அதற்கு முந்தைய வாரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏன் வரவில்லை.. எனக் கேட்டேன். உடல்நிலை சரியில்லை அண்ணா ! என்றான் . நின்றுக் கொண்டே இருந்தான். அருகிலிருந்த தம்பி Lingadurai K அமருங்கள் அண்ணா ! என கட்டாயப்படுத்தி அமர வைத்தான்.மாநில பொறுப்பு உனக்கு வழங்கப்படவில்லை என ஏதேனும் வருத்தமா என்றும் கூடுதலாக கேட்டேன். “அண்ணா! இது என் கட்சி. இதில் எனக்கு என்ன அண்ணா பொறுப்பு…?பொறுப்புடன் இருப்பது தான் பொறுப்பு..!” என்றான் அவன். பிறகு நீண்ட நேரம் நிற்கவில்லை. சென்றுவிட்டான். ஒரு மீண்டு வராத பயணத்தின் விடைபெறுதலுக்காக அவன் வந்திருக்கிறான் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

இன்று காலை கடும் காய்ச்சலில் படுத்திருந்த எனக்கு தம்பி ஆனந்த் அழைத்தான். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவன் காலமானான் என செய்தி கேட்டு நான் திகைத்துப் போனேன். அவன் வீட்டிற்கு சென்று அவன் உடலுக்கு புலிக்கொடி போர்த்திய போது.. அவனது மனைவி சொன்னார். “உங்க புலிக்கொடி உங்ககிட்டயே வந்துருச்சிங்க என்று..” கூடியிருந்த எல்லோரும் கத்திக் கதறினோம்.

இறுதிச் சடங்கிற்கான முழு பொறுப்பினையும் நாம் தமிழர் கட்சியே ஏற்றுக் கொள்வதென முடிவெடுத்தோம்.

பலரிடமும் இந்தத் துயர செய்தியை நான் பகிர்ந்த போது ஒன்றை உணர்ந்தேன். அவனை யாருக்குமே அதிகம் தெரியவில்லை. எந்தவித அங்கீகாரமும் தேடாமல் புலிக்கொடி சுமந்து இலட்சியத்திற்காக அவன் வாழ்ந்திருக்கிறான்.

அண்ணன் சீமானிடம் சொன்னேன்.‌ அவருக்கு மட்டும் அவனை மிகச் சரியாக நினைவிருந்தது. உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளாமல் இப்படி ஆகிவிட்டானே என்று சொல்லி அவர் கலங்கினார்.

அவனைப் போல எண்ணற்றவர்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல், அடையாளமும் தெரியாமல் புலிக்கொடி பறக்க தமிழ்க்குடி சிறக்க, உதிரத்தை வேர்வையாக சிந்தி, உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிச்சங்களில் இல்லை அவர்கள். இந்தத் துயர் இருட்டில் நின்று கொண்டு சொல்கிறேன்.

“அவர்கள் தான் கட்சிக்கான உண்மையான வெளிச்சங்கள். “

அவனை யாருக்குமே தெரியவில்லை என்றாலும்.. இந்த இரவில் அவன் நெஞ்சாரப் போர்த்திருக்கும் அவன் நேசித்த புலிக்கொடிக்கு அவனைத் தெரியும்.

அதுதான் அவன் நிறைவு. அவன் வாழ்வு.

இப்படி என் தம்பி ஜஸ்டினை போன்ற யாருக்கும் தெரியாத எண்ணற்றவர்களால் தான் உயர உயர பறக்கிறது புலிக்கொடி.

ஜஸ்டின் தமிழ்மணி ( வயது 46) . டாட்டா ஏஸ் ஓட்டுநர்/கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் முழு நேர களப்பணியாளராக பணியாற்றியவர்/ அமைப்பின்ஆணிவேர்/தற்போது புதிய கட்டமைப்பில் மாவட்டத் தலைவர்.

அம்மாவிற்கு..

♥️

அந்தக் காலகட்டங்களில் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அப்போது வெறும் 16 வயது நிரம்பிய ஏறக்குறைய ஒரு சிறுமியாக இருந்தவளுக்கு ஒரு திருமணம். அடுத்த 10 மாதங்களில் அந்த சிறுமி கையில் நோயுற்ற ஒரு குழந்தை.

பிறந்த போது நன்றாகத்தான் இருந்தது.ஆனால் 10 மாதத்திற்கு பிறகு வந்த ஒரு காய்ச்சலில் அந்தக் குழந்தைக்கு தலைக்கு கீழே எந்த உறுப்பும் இயங்கவில்லை. அன்று அழ ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அடுத்த 25 வருடங்கள் இருவருக்கும் அழுகை மட்டும் தான்.

ஆனால் ஒரு சின்ன சிறிய கிராமத்தில் பிறந்த அந்த சிறுமிக்கு மட்டும் ஒரு அசாத்திய நம்பிக்கை. எதுவுமே இயங்காத அந்த குழந்தையை வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் வாழவைப்பது. ஓட முடியாத அந்த குழந்தைக்கு பதிலாக அவள் ஓட தொடங்கினாள்.‌ குழந்தை அழுகையை நிறுத்தியது. எப்போதும் அதிசயக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்த அம்மாக்களுக்கு மத்தியில் .. அவள் தன் குழந்தைக்காக ஒரு உலகத்தை உருவாக்கத் தொடங்கினாள்.

அந்த உலகத்திற்கும்… வழக்கமாக வாழும் இந்த பூமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த உலகத்தில் அந்தக் குழந்தைதான் கதாநாயகன். அவன் மீது எல்லோரும் அன்பாக இருப்பார்கள். அவனை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். அவனை எல்லோரும் கொண்டாடுவார்கள். அவனை யாரும் புண்படுத்த மாட்டார்கள். அம்மா உருவாக்கிய அந்த உலகத்தின் ராஜா அவன்.அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் அந்த உலகம்.

இப்போதும் அம்மாவின் மடியை தேடி அலைகிறான். தூங்கி விழித்த உடன் அம்மாவின் முகம் காண தேடுகிறான். முகம் இல்லையேல் பயப்படுகிறான். அம்மாவைப் பார்த்தவுடன் தான் இயல்பாகிறான். அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் ஆக்சிஜன். அம்மா இல்லையேல் அவன் இல்லை.

ஒரு தீபாவளிக்கு அவனை சென்னை அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். சொல்லப்போனால் அந்த மருத்துவமனையில் தான் அவன் வாழ்ந்துக் கொண்டிருந்தான். உலகமே வெளியில் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில் இவன் மருத்துவமனையில் ஊசி மாத்திரைகளோடும் வலி துயர்களோடும் போராடிக் கொண்டிருந்தான்.

அம்மா கும்பகோணத்தில் இருந்து வந்து விட்டாள்.தன்மகன் இல்லாத தீபாவளி அவளுக்கு எங்கே… அவன் இருக்கும் இடம் தான் அவளுக்கு தீபாவளி. பண்டிகை எல்லாம். அவனது சிரிப்பில் தான் அவளுக்கு மத்தாப்பு பூக்கும்.‌ வான வேடிக்கைகள் நடக்கும்‌. அந்த மருத்துவமனை வளாகத்திலேயே இருந்த சிறு விடுதியில் அப்பா அம்மா அவன் மூவரும் சிறிய மத்தாப்புகளை கொளுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். வலியாலும் நோயாலும் துடித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடுகிற குடும்பம் அது. அவர்களுக்கு இருக்கிற இடம் பொருட்டல்ல.. எங்கே இருந்தாலும் தங்களுக்கென ஒரு வானத்தையும் அங்கே மின்னும் சில நட்சத்திரங்களையும் பால் வழியும் ஒரு நிலாவினையும், கூடவே சில மத்தாப்புகளையும் அவர்களே உருவாக்கிக் கொண்டு தீபாவளியை கொண்டு வந்து விடுவார்கள்.
உலகம் எங்கோ வெளியில் இருந்தது. அவர்களுக்கு அவர்கள் உலகத்தில் அவர்களுக்குள்ளாக அந்த ஒரு தீபாவளி.

அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்தன. எப்போதும் இந்த உலகத்தோடு போட்டி போடுவதற்காக அந்த மகன் மிகவும் ஆசைப்படுவான். ஆனால் தோற்றுவிடுவான். ஆனால் அந்த அம்மா தோற்கமாட்டாளே.. ! அம்மா மகனை தயாரித்துக் கொண்டே இருந்தாள். இந்த உலகத்தோடு போட்டி போட.. இந்த உலகத்தில் வாழ.. அம்மா அவனை கடும் உழைப்போடு தயாரித்துக் கொண்டே இருந்தாள். எதுவுமே முடியாத, தலைக்கு கீழே எதுவுமே இயங்காத அவனுக்கு பேச கொடுத்தாள்.‌ வாழ கற்றுக் கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவன் இயங்கத் தொடங்கினான். ரசிக்க, எழுத, காதலிக்க, வெற்றியில் கொண்டாட, தோல்வியில் துவள, அவனை தயாரித்து துளித்துளியாய் தன் மகனை உருவாக்கினாள். மகனும் அனைத்தும் செய்தான். ரசித்தான். கவிதைகள் எழுதினான். காதலித்தான். இசையை கேட்டு இமைக்காமல் இருந்தான். அவனே ஒரு கார் வாங்கி ஓட்டினான். அம்மா மீதே காரை ஒரு முறை மோதி விட்டான். இனி காரே ஓட்டுவதில்லை என முடிவெடுத்தான். ஆனால் அம்மா அப்படி இல்லையே.. தன் மீது மோதினாலும் மீண்டும் எழுந்து மகன் கார் ஓட்டியாக வேண்டும் என்பதில் அவள் உறுதியாக நின்றாள். அவனும் அப்படியே செய்தான். பயணப்பட்டு பார்த்தான். அடிகள் வாங்கினான். தோல்வியின் சுகம் புரிந்தான். வெற்றியின் போதாமை அறிந்தான். திருமணம் செய்தான். அவனைப் போலவே இரண்டு நகல்களை தயாரித்தான். அந்த இரண்டும் அம்மாவிடம் தான் அம்மா மடியில் தான் கிடக்கின்றன. இப்படி அனைத்திலும் அம்மா இருந்தாள்.

அவன் நினைத்தான். இந்த உலகத்தில் நாமும் சராசரியாய் மாறிவிட்டோம் என. இல்லை இல்லை. ஒரு கட்டத்தில் அவன் அந்த ரகசிய உண்மையை அறிந்து கொண்டான். இந்த உலகத்தில் தன்னால் மற்றோர் போல இயல்பாக வாழ முடியவில்லையே என ஏங்கித் தவித்த அந்த மகனுக்காக அந்த அம்மா மீண்டும் ஒரு நகல் உலகத்தை தயாரித்து இருக்கிறாள் என்ற உண்மை. அதில் அவனை வாழ வைத்திருக்கிற உண்மைப் புரிந்து அந்த மகன் இப்பொழுது சிரித்துக் கொள்கிறான். அது ஒரு வகை ஞானம் தான். உண்மைதான். இதுவும் அம்மா உருவாக்கிய உலகம்தான்.

இறுதியாக அந்த மகன் புரிந்து கொண்ட ரகசியம் என்னவெனில்… அம்மா உருவாக்கிய உலகத்தில் மட்டும் தான் அவனால் வாழ முடியும். சொல்லப்போனால் அம்மா தான் உலகம்.

கடைசி வரை அம்மா உருவாக்கிய அந்த உலகத்தில்.. அவள் கதகதப்பில் அவன் வாழ்ந்துக் கொண்டே இருக்கிறான்.

வாழ்வான். !

மணி கலையரசி

வாழ வைக்கும் தெய்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

♥️

மணி செந்தில்.

( இதனடியில் ஏஐ தொழில்நுட்பத்தில் மிகவும் நேர்த்தியாக ஒரு காட்சி தயாரித்து கொடுத்த எனதுத் தம்பி Ar Anbu Rajesh Ntk விற்கு எனது பேரன்பு நன்றி. )

சீமான் உருவாக்கிய பேராயுதம்!

நடந்து முடிந்த மக்கள் மன்றத்தில் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எல்லா கட்சிகளுக்கும் ஆழமான அதே சமயத்தில் அசத்தலான பதிலடி கொடுத்த காட்சியை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அதே சமயத்தில் இது போன்ற ஒரு ஆயுதத்தை உருவாக்கிய அந்த வித்தைக்காரனையும் நினைக்காமல் இந்த பெருமிதத்தை நாம் கொண்டாட முடியாது.கட்சியின் தொடக்க காலங்களில் மிகவும் கூச்ச உணர்வு கொண்டவனாக , எப்போதும் பின்புறத்தில் நிற்பவனாக இருந்த கார்த்திக் , எப்படி இப்படி ஆனான் அல்லது ஆக்கப்பட்டான் என்பதற்கு நான் எல்லாம் சாட்சி.

அண்ணன் சீமான் தான் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினார். அவனிடத்தில் பொறுப்புகளை கொடுத்து பழக்கப்படுத்தினார். கூச்ச உணர்வை கைவிட்டு மேடையிலே பேச முன்னிறுத்தினார். சிறுசிறு பிழைகளை கூப்பிட்டு திருத்தினார். புத்தகங்களை வாசிக்க சொல்லி அறிவுறுத்தினார். பல நேரங்களில் புத்தகங்களை அவரே பரிந்துரைத்தார். எங்களைப் போன்றோரிடம் பேசும் போது கார்த்தி எப்படிப்பட்ட முக்கியத்துவம் நிரம்பியவன் என்பதை அடிக்கடி எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

அவனும் அண்ணன் சொன்னதை கேட்டு அப்படியே உருவானான். குறிப்பாக புத்தக வாசிப்பு. திராவிடத்தை எதிர்த்து பேச வேண்டும் என்றால் அந்த திராவிடம் சார்ந்த அனைத்தையும் முதலில் வாசித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தான். ஐயா மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா அல்லது வழிமாற்றியதா..? ” என்ற நூலை அவன் வாசித்திருந்த முறைமையை நான் கவனித்து இருக்கிறேன்.ஒரு பக்கம் விடாமல் அடிக்குறிப்புகள் இட்டு அந்த புத்தகத்தையே முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தான். அதேபோல இந்து தமிழ் திசை வெளியிட்ட ” மாபெரும் தமிழ் கனவு ” என்ற நூலை எங்களுக்கெல்லாம் முன்னதாகவே வாங்கி முற்றிலுமாக குறிப்புகள் எடுத்து அதை தனது பேச்சில் தேவைப்படும் இடங்களில் பொருத்தி தனது பேச்சுத் திறமையை இன்னொரு வடிவத்திற்கு மாற்றினான் தம்பி இடும்பாவனம் கார்த்திக்.

அதற்குப் பிறகு பல புத்தகங்கள். இன்றும் நீங்கள் யாராவது அலுவலகத்திற்கு செல்லும் போது பார்க்கக்கூடும். முற்றிலுமாக ஒரு சிறிய அறையில் ஒரு பெரிய புத்தக அடுக்குகளுக்கு நடுவே அவனது வாழ்க்கை அமைந்திருக்கிறது என. இதற்கு அவன் கை கொண்டது முழுக்க முழுக்க உழைப்பினை மட்டுமே. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அரசியல் என்பது முழு நேர வாழ்க்கை. நான் கூட அவனிடம் பரிந்துரைப்பேன். இலக்கியம் கவிதை சினிமா போன்ற பல்வகை பட்ட புத்தகங்களையும் வாசி என்று சொன்னால் எனக்கு அரசியல் புத்தகங்களை படிக்கவே நேரம் போதவில்லை அண்ணா என சொல்லிவிட்டு தவிர்த்து விடுவான்.

அந்த உழைப்பும், ஓர்மைப்பட்ட கவனமும் அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டலும் தான் அவனுடைய மக்கள் மன்ற பேச்சில் எதிரொலித்தது. அண்ணன் சீமான் அவனுடைய பேச்சினை மிகுந்த பெருமிதத்தோடு அவருடைய whatsapp ஸ்டேட்டஸ் இல் வைத்திருந்ததை கண்டேன் . இருக்காதா பின்னே.. எங்கோ முகவரி பெற்ற ஊரிலிருந்து எதுவுமே தெரியாமல் கூச்ச உணர்வோடு தயக்க மனப்பான்மையோடு வந்த ஒருவனை தாய் போல தத்தெடுத்து , அவனை கொஞ்சம் கொஞ்சமாக பட்டைத் தீட்டி இன்று இனத்திற்கான மாபெரும் கருவியாக உருவாக்கி இருக்கும் அண்ணன் சீமான் அவர்களின்‌ முன்கூட்டியே உணரும் அந்த மேஜிக் கணிப்புதான் … இடும்பாவனம் கார்த்திக் என்ற அந்த இளைஞனை உருவாக்கியது .

அவன் தொடங்கிய புள்ளியில் இருந்து இதை எல்லாம் நினைத்துப் பார்த்தால்… உண்மையில் அது அதிசயம் தான். ஆனால் அதிசயங்களை நிகழ்த்துவதற்கான வல்லமை எப்போதும் அற்புதனான அண்ணன் சீமானுக்கு உண்டு என்பதுதான் நாங்கள் எல்லாம் உணரும் மகத்தான நம்பிக்கை.

♥️மணி செந்தில்.

இந்த வாழ்வு உங்களுடையது !

நேற்று அதிகாலையில் என் மைத்துனர்

சே. பாக்கியராசனில் தொடங்கி நள்ளிரவு 11 மணி வரை நேரில் வந்தும், சமூக ஊடகப் பதிவுகள், மற்றும் அலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் எனக்கு பேரன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

குறிப்பாக எனது உயிர் அண்ணன் அண்ணன் செந்தமிழன் சீமான். மற்றும் என் அண்ணி கயல்விழி அவர்கள்.

தனி பதிவிட்டும், அழைத்துப் பேசியும் வாழ்த்தி மகிழ்ந்த என் அண்ணனின் அன்பின் துணைக் கொண்டு தான் இந்த உலகில் நான் வாழ பழகி இருக்கிறேன்.

அவரால்தான் இந்த மாபெரும் பேரன்பு உலகம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்தேன். அவரால் ஆனது நேற்று.அவரே என் தகுதி .

நேற்று நேரில் என் இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய கும்பகோணம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அன்புத் தம்பி கர்ணன் , மூத்த வழக்கறிஞர் மாணிக்கம் மற்றும் அவர்களோடு வந்த வழக்கறிஞர்கள் தம்பிகள், மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி, பாபநாசம் ,திருவிடைமருதூர் ,கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் ,

சமூக வலைதளங்களில் அழகழகான பதிவுகளை எழுதி என்னை வாழ்த்தி என்னை நெகிழ வைத்த என் தம்பி தங்கைகள் , அண்ணன்மார்கள் , உடன்பிறந்தார்கள் , மூத்தவர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

அன்பினால் என்னை மேன்மை செய்தோருக்கு ..

என் மனதின் அடியாழத்தில் இருந்து தெரிவித்துக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.. இறுதிவரை இந்த அன்பிற்கு தகுதி உடையவனாக என்றென்றும் வாழ முயல்வேன்.

எனது இந்த வாழ்வு உங்களுடையது .

நெகிழ்வான நன்றிகள் !

❤️

மணி செந்தில்.

தாரணா.. இப்படிக்கு யாரோ !

தாரணா..

உனக்கு கடிதம் எழுத

நான் யாரோ.

அந்த யாரோ

எழுதிக் கொள்வது

என்னவென்றால்.

கண்ணீரால்

அந்தக் கடலை

மேலும் உப்பேற்றாதே!

நிலமிழந்தவர்களின்

விழியோரங்களால்

அந்தக் கடல்

ஏற்கனவே உப்பேறிதான்

கிடக்கிறது.

கடலிலிருந்து

ஒரு சொட்டு நீலத்தை

துளி நீரிலிருந்து

பிரித்தெடுத்து

கலங்கும் விழிகளுக்குள்

விட்டுக் கொள்.

கடலைப் போலவே

எல்லையற்ற

உன் துயரத்தின்

ஒரு பாகம்

கடலில் கரையக்கூடும்.

மீண்டும் மீண்டும்

கடல் நீரை கைகளால்

துளாவு.

ஏதாவது உலவிக்

கொண்டிருக்கின்ற

சிறு மீன்கள்

உன் விரல்களை

முத்தமிடக்கூடும்.

அந்த

முத்தத்தின் ஈரம்

வெறிச்சோடிய

உன் தனிமைப்

பாலையை

கடக்கும் போது

உதடு நனைத்து

உயிர் காக்க கூடும்.

கணநேரம்

கண் சிமிட்டாமல்

எங்கோ தூரத்தில்

உன்னை கடக்கிற

அந்த ஒற்றை

வெள்ளைப் பறவையை

பார்த்து விடு.

அந்தப் பறவையின்

இறகில் தான்

மீள் எழுவதற்கான

நம்பிக்கையின்

செய்தி

எழுதப்பட்டிருக்கிறது

🔸

உன் தாய்நிலம்

பிரிந்து

கடலேறி வரும்

அந்தக் கண்ணீர்

நாளில்..

நீலம் பூரித்த

கடலுக்கு மேலே

ஒளிந்து கொண்டிருக்கும்

நட்சத்திரங்களை

நீ பார்த்திருப்பாய்.

திசையற்றவர்களுக்கு

அந்த நட்சத்திரங்கள் தான் உறவினர்கள்.

உயிர்நிலம் வலிந்து

பிடுங்கப்பட்ட அந்த இருட்டில்

அந்த நட்சத்திரங்கள் தான்

பூமியில்தான் நீ

இன்னும் இருக்கிறாய்

என உனக்கு அறிவிக்கும்

நம்பிக்கையின் சிமிட்டல்கள் !

🔸

தாரணா !

இப்போது நீ

புரிந்துக் கொள்வாய்.

நீ

தனிமையில் இல்லை.

நீ இல்லை என்றால்

இந்த கடல்தான்

தனிமையில்

தகித்திருக்கும்.

இழந்த

நம் நிலமும்

தனிமையில் இல்லை.

அங்கே விழுந்த

உதிரச் சொட்டுக்கள்

அசாத்திய தருணம்

ஒன்றுக்காக

காத்திருக்கின்றன.

இதுவரை

பூமி காணாத

ஒரு பெருமழை

பெய்யும்

நள்ளிரவு முடிந்த

விடியலில்..

தாய் நிலத்தில்

உறைந்திருக்கும்

உதிரச் சொட்டுக்கள்

உயிர்ப்பிக்கும்.

அந்த நொடியில்

சில்லிட்ட

புல்வெளியில்

உன் மென் பாதம்

நம் தாய் நிலத்தில்

படும் நொடியில்..

உதிர நிறத்தோடு

ஆயிரமாயிரம்

காந்தள் பூத்து

மலரும்.

பொழுது புலரும்.

🔸

இப்படிக்கு

யாரோ.

♥️

மணி செந்தில்.

தாரணா- 18 Miles கதைப்பாடலின் நாயகி.

18 Miles:

18 Miles. -வலிமிகுத் துயரின் பேரழகு.

———————————————————————

தமிழில் தனிப்பாடல் தொகுப்பிற்கான ‌ வரவேற்பு மிகக் குறைவு. அதற்கான முயற்சிகள் எப்போதாவது குறிஞ்சி மலர் போல தமிழில் நடக்கின்றன. எங்களது காலத்தில் சுரேஷ் பீட்டர்ஸ் -ன் ( சிக்கு புக்கு ரயிலே, டேக் இட் ஈசி ஊர்வசி பாடல்களை பாடியவர்) “மின்னலே” என்ற ஒரு ஆல்பம் வந்தது. அதில் “முகிலென மழையென” என்ற பாடல் உண்டு. அந்தத் தனிப்பாடல் மனதை மிகவும் கவர்ந்த பாடல்.

இளையராஜா இந்த வகைமையை பக்தி பாடல்களுக்கான ஒரு வழியாக பெருமளவு பயன்படுத்திக் கொண்டார். ரமண மாலை மூகாம்பிகை பாடல்கள் போன்றவை இந்த வரிசையில் வரும். மற்றபடி அவரது நத்திங் பட் விண்ட், ஹவ் டு நேம் இட் போன்றவை அவரது உச்சபட்ச கலாமேதமையை பறைசாற்றக் கூடியவை. திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை திரைப்பாடல்கள் சாராத அவரது தனிப்பாடல்களாக கேட்க முடிகிறது. ஏ ஆர் ரகுமான் அவர்களும் வந்தே மாதரம் போன்ற சில முயற்சிகள் செய்தார். தமிழில் தனிப்பாடல் அல்லது கதைப்பாடல் வகைமைக்கான முயற்சிகள் குறைவு என்பதுதான் பொதுவான கருத்து.

ஆனால் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இது போன்ற ஆல்பங்களுக்கான வரவேற்பு தனி. இந்தி கசல் தனி பாடல்களை நள்ளிரவுகளில் கேட்டு மகிழ்பவர்கள் கடவுளுக்கு அருகில் வசிப்பவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் மைக்கேல் ஜாக்சன் போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் சுயாதீன பாடல்கள் ( independent songs) மூலமாகத்தான் உலகத்திற்கு தெரிய வந்தார்கள். அப்படி தமிழிலும் அவ்வப்போது முயற்சிகள் நடந்தாலும் மனதில் பதியக்கூடிய ஒரு மாபெரும் பணியை 18 Miles குழுவினர் செய்திருக்கிறார்கள். இந்த முயற்சியை தமிழில் நாம் “கதைப்பாடல்” என வகைமைப்படுத்தலாம். ஆங்கிலத்தில் இதை Visual ballad என்றும் சொல்கிறார்கள்.

🔸

“நிலம் விழுங்கிய உன் கண்களின் முன்னே நிறுத்தப்பட்ட யுத்த ஊனம் நானென்று நீ அறிவாய்.

உன்னை யாரிடமும் நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.

ஆகவே நான் சொல்லத் தொடங்கினேன். “

என்ற அகரமுதல்வனின் வரிகளோடு தொடங்கும் போதே நாம் கனக்கத் தொடங்குகிறோம்.

கண்ணுக்கு எட்டிய தொலைவு முழுக்க நீர். பொங்கி பரவும் அலைகளின் ஊடே நிராதரவாய் கண்கள் முழுக்க கண்ணீரோடு ஒரு பெண். அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு ஆண்.. இப்படி தொடங்குகிறது 18 Miles.

தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையிலான அந்த 18 மைல்கள் தான் இந்தப் பாடலின் மையப் பொருள். ஒரு இன அழிவு எப்படி தனி மனிதர்களின் சுயத்தின் உள்ளே ஊடுருவி வலி மிக்க அனுபவமாய் வெளி வருகிறது என்பதை மிக ஆழத்தோடு இயக்குனர் சதீஷ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

காட்சியியல் அழகில் நுட்பமான பல உணர்ச்சிகளை வெளிக் கொணர தெரிந்த இயக்குனராக சதீஷ் விளங்குவது இந்தப் பாடலின் மூலமாக உறுதிப்படுகிறது. தாய் நிலத்தை இழந்து ஏதிலிகளாக தென்படும் ஏதோ ஒரு கரையில் ஒதுங்கி விட வேண்டும் என்ற வேட்கையில் மிதந்து வரும் உறவுகள் எப்படி எல்லாம் எதிர்கொள்ளப்படுகிறார்கள் என்பதை காட்சியில் பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றன. தாய் நிலத்தை விட்டு வெளியேறும் துயரம் தான் ‌ கடலளவு பெரிது. அதன் நீட்சி முடிவிலி என்பதை சொற்கள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கின்ற இயக்குனர் சதீஷ் ஏற்கனவே பேச்சுலர் என்கின்ற திரைப்படத்தை இயக்கியவர் என்கிறார்கள். அவருக்காக அந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

எல்லாவற்றையும் இழந்து துவளுகிற கரங்களுக்கு பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைத்து விடாதா என கைவிடப்பட்டவர்களின் ஆன்ம வேட்கையை அந்தப் பாடலில் வரும் கதாநாயகி அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி உள்ளார். பாலு மகேந்திரா படங்களுக்குப் பிறகு கதாநாயகிகள் அழகாக காட்டப்படும் சில அபூர்வமான தருணங்களை இந்தப் பாடல் காட்சிகளிலும் காணும் போது பிரமிப்பாக இருந்தது.

குறிப்பாக இந்தப் பாடலின் கதை நாயகி. மென் சோகமும், தீராவலியும், காதலின் ஏக்கமும் பூத்து பூத்து தவழ்கிற கண்கள். எண்பதுகளின் கதாநாயகி மாதவிக்கு பிறகாக பேசும் விழிகள் .

கதையின் நாயகனாக அசோக் செல்வன். அவரது இறுகிய முகம் , நெகிழும் கண்கள் கதையின் போக்கிற்கு பாடலின் வரிகளுக்கு மிகவும் உதவி இருக்கின்றன. பாராட்டுக்கள். உண்மையில் வளர்ந்து வரும் போது நடிகர் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பினை தேர்வு செய்ததற்கு கொஞ்சம் துணிச்சல் வேண்டும் தான். காதலிக்காக தண்டனையை ஏற்கும்

” punishment sir” என அவர் கூறும் போது சலனமற்ற அவரது விழிகள் Awesome.

ஒரு பதினாறு நிமிட பாடலில் ஒரு மாபெரும் இன அழிவை, தாய் நிலம் பிரியும் துயரை, காதலின் பூத்தலை, அது கோரும் வலியை, காவிய காதலுக்கே உரிய முடிவை என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சீரற்ற முறையில் அடுக்கி, அந்த சீரற்றத் தன்மையையே பேரழகாக சித்தரிக்கின்ற கலைத்தன்மை இயக்குனர் , படத் தொகுப்பாளர், மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரிடம் இருந்தது.

இதையெல்லாம் தாண்டி கதைப்பாடல் பேசுகிற பேசுபொருள். தாய் நிலம் இழந்தவர்களின் தவிப்பு. தன் முன்னே தன் இனம் அழியக் கொடுத்தவர்களின் விழியோரங்கள். இவை எதுவுமே நம்மை நிம்மதியாக இருக்க விடாது. பார்வையாளனுக்குள் இனம் புரியாமல் சுரந்துக் கொண்டிருக்கும் பரிதவிப்பிற்கு துணையாக திட்டமிட்டு வார்த்தெடுக்கப்பட்ட அந்தக்

கருப்பு/ வெள்ளை வண்ணம். உரையாடல்களை சாத்தியப்படுத்துகிற அந்த தொலைபேசிக் கூண்டு மட்டும் நினைவுகளின் செந்நிற வண்ணத்தில்.

இறுதியாக “போ..உன் கதைகளை உலகத்திற்கு சொல்!” என பிரிவை சுமந்து வலியோடு நாயகியை அனுப்பி வைக்கும் நாயகனின் வார்த்தைகள் தான் அவனது காதல் உணர்ச்சியின் உச்சம்.

ஒவ்வொன்றிலும் ஆழமான அழகுணர்ச்சியோடு, கவித்துவ உரையாடல்களோடு, கலைச்செழுமையாய் கட்டப்பட்ட இந்த கதைப்பாடல் நாடிழந்த தமிழர்களுக்கானது மட்டுமல்ல. தன் தலைமுறையில் தனது இயலாமையால் சொந்த இனத்தை பறிகொடுத்து குற்ற உணர்வில் குமைகிற தாயகத் தமிழர்களுக்கானதும் தான்.

இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கிற Think Music நிறுவனத்தாருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

மிகு வசீகரம் மிகுந்த படைப்பை நம் விழிகள் முழுக்க நிரப்பி, இன அழிவின் வலியாலும், கசிந்துருகும் காதலின் துயராலும் நம்மை உறைய வைத்திருக்கிற இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு

நெஞ்சிற்கினிய பேரன்பு. நன்றி. பாராட்டுக்கள்.

தவறவே விடக்கூடாத அந்த வசீகர அனுபவத்திற்கு .. நீங்களும் உங்களை ஆடப்படுத்திக் கொள்ள..

இதோ அந்தக் கதைப்பாடலின் தொடர்புச்சுட்டி.

♥️

இப்படியும் மனிதர்கள் !

இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

🔹

உலகத்தின் மாமனிதர்கள் அனைவரும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் “காணாமல் போவதை” வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த உலகை மிகச் சரியான வழியில் கற்றுக் கொள்வதற்கு எந்தத் திட்டமிடலும் இல்லாமல் ஒரு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலாக, காலச்சுவடு வெளியீடான “அமர நாயகன்” படித்துக் கொண்டிருக்கிறேன்.

புரட்சியாளர் சேகுவேரா தனது நண்பருடன் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மோட்டார் சைக்கிளில் அலைந்து திரிந்து பயணத்தின் மூலமாக இந்த உலகை புரிந்து கொள்ள முயற்சித்தது நமக்குத் தெரியும்.

அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் தனது பதின் வயதுகளில் குருவைத் தேடி ஒரு பயணம் போயிருக்கிறார். காசி உள்ளிட்ட வட நாட்டின் நிறைய ஆன்மீக தலங்களுக்கு தனக்கான ஞானக் குருவை தேடி பயணப்பட்ட இளம் வயது போஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் கண்ட பல சாமியார்கள் சுயநலம் கொண்ட, ஏமாற்று பேர்வழிகளாக திகழ்ந்ததால் அவர் இது போன்ற முயற்சிகளை கைவிட்டார். இந்தப் பயணத்தால் அவருக்கு டைபாய்டு ஏற்பட்டது. அதை‌ பிற்காலத்தில் “ஞான குருவை தேடி அலைந்ததால் அடைந்த வினை’ என சொல்லி சிரிப்பாராம்.

ஆனாலும் இந்த பயணம் மூலம் அவர் எளிய மனிதர்களிடம் நெருங்கியிருக்கிறார். அம்மை, காலரா போன்ற நோய்கள் தொற்றி அவதிப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னார்வலராய் பாடுபட்டிருக்கிறார். சேகுவேரா தன் பயணத்தில் தொழுநோய் மருத்துவமனையில் சேவை செய்தது போல.

இது போன்ற ஒற்றுமைகள் இருவர் வாழ்க்கையிலும் நிறைய இருக்கின்றன.

இந்தியாவில் அப்போது உயரிய படிப்பு லண்டனில் தேர்வாகும் ஐசிஎஸ். அதாவது இப்போதைய ஐஏஎஸ் போல. அதை யாராலும் எளிதில் வென்று விட முடியாது. கடும் உழைப்பும், கடுமையான பயிற்சியும், மிகுந்த அறிவும் கோரும் அந்த தேர்வு, இந்தியர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் கூட இந்த தேர்வில் தோற்றவர்தான். எனவே எப்போதும் சவாலையும், சாகசத்தையும் எதிர்கொள்கிற மனநிலையில் இருந்த சுபாஷுக்கு இந்தத் தேர்வும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட, போராடி இறுதியில் வெற்றிப் பெற்றார்.

ஆனாலும் இந்தத் தேர்வில் வென்று அடைகிற ஆங்கிலேய குடிமைப்பணி என்று அழைக்கப்பட்ட வேலையில் சேர சுபாஷுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர் தன் சகோதரர் சரத்திற்கு எழுதிய கடிதங்கள் படிக்கும்போதே நம்மை நெகிழச் செய்கின்றன. “போராட்டம் இல்லாத வாழ்வு அரைவாழ்வு” என வாழ்க்கையைப் பற்றி வரையறுத்த சுபாஷுக்கு , இதுப் போன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கோப்புகளைப் பார்த்து, கையெழுத்து போட்டு, அடிமை வாழ்வு வாழ்வது என்பது கொடும் நரகமாகத் தோன்றியது. குறிப்பாக ஆங்கிலேயனுக்கு கீழே தன்னால் தன் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது எனத் தீர்க்கமாக முடிவு செய்த சுபாஷ், தன் சகோதரரையும் தனது பெற்றோர்களையும் சமாதானப்படுத்த அவர் எழுதிய கடிதங்கள் உண்மையிலேயே ஒரு அப்பழுக்கற்ற மனிதனின் தூய ஆன்மாவை காட்டுகிறது.

ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் பணியில் சேராமல் ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆங்கிலேய அதிகாரியிடம் அனுப்பிய போது, அதை மறுபரிசீலனை செய்ய அவரது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அவ்வளவு சிறந்த மாணவன் இப்படி உயரிய பதவியை மறுப்பது என்பது அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சுபாஷின் தந்தைக்கும் அதே நிலைதான்..

இறுதியாக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு சுபாஷ் தனது சகோதரர் சரத்திற்கு எழுதிய கடிதத்தில்..

“வாழ்க்கை என்ற கடலில் பயணப்பட காத்திருக்கிறேன். இந்தக் கப்பல் இப்போது கவர்ச்சியான துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கிறது. இப்போது இதற்கு அதிகாரம் சொத்து செல்வாக்கு என அனைத்தும் இருக்கிறது. ஆனாலும் என் ஆழ் மனதிற்குள் இன்னொரு குரல் இப்படி கேட்கிறது.. பொங்கிப் பாயும் அலை கடலில் சவால்களை எதிர்கொண்டு பயணிக்கும் போது தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும்” என என் மனது சொல்கிறது. சவால்களை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டேன். இறுதியாக இந்தப் பயணத்தில் எங்கே செல்வேன் என்பதை நான் அறிவேன்.”

என எழுதி இருக்கிற சுபாஷ் பற்றி நினைக்கும் போது நமக்கு நினைவில் வரும் முதுமொழி ” அலைகள் இல்லாத கடல் சிறந்த மாலுமியை உருவாக்காது.”

🔸

இதே போலத்தான் கியூபா புரட்சிக்கு பிறகு அந்த நாட்டின் உயரிய அமைச்சராக பதவி ஏற்ற புரட்சியாளர் சேகுவேரா அந்தப் பதவியை துறந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூப புரட்சி போல புரட்சி செய்ய பயணத்தை தொடங்கிய போது, தனது சகா பிடல் காஸ்ட்ரோவுக்கு எழுதிய கடிதம் தான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது.

“புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையைக் கொண்டு செல்கிறேன். மக்களின் புரட்சிகரத்தன்மைகளைப் பெற்றுச் செல்கிறேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகிற உணர்வை ஏந்திச் செல்கிறேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆழமான காயங்களைச் சரிசெய்கிறது.

வேறோரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன்.

வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம். எனது முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.”

🔸

வரலாற்றின் புதல்வர்கள் எப்போதும் தியாகத்திற்கு தயாரானவர்களாக, துளியும் சமரசம் அற்றவர்களாக, தன்னலம் மறுப்பவர்களாக, எதையும், எந்த நொடியிலும் தூக்கி எறிந்து விட்டு சாதாரண நிலைக்கு கீழிறங்க பயணப்படுபவர்களாக ( down to earth) இருந்திருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமான உண்மைகள். இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

தாலாட்டுதே வானம் !

நேற்றிலிருந்து மனம் ஏனோ மிகுந்த அழுத்தமாக இருந்தது. யாரிடமும் சரியாக பேசக்கூட முடியவில்லை. இனம் புரியாத கவலை ஒன்று சூழ்ந்து இதயத்தை உடைத்துக் கொண்டே இருந்தது. ஏதேதோ நினைவுகள் உள்ளுக்குள் சுரந்து கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தன. சரி தூங்கி விடலாம் என, மாத்திரைகள் எடுத்துக் கொண்ட போதும் நேற்று இரவு முழுமையாக தூக்கமே இல்லை. விடியற்காலையில் விழிப்பு வந்து தவிப்புடன் படுத்திருந்தேன். ஏதோ இன்று தான் எனக்கு உலகின் கடைசி நாள் என்பது போல.. தூங்காத முதல் நாள் இரவு , விழிகளின் மேலே வலியாய் ஏறி அமர்ந்திருந்தது. சாப்பிட்டவை எல்லாம் கசப்பாய் உணர்த்த, பசியும் செத்துப்போனது.

அம்மா பக்கத்திலேயே இருக்க வேண்டும் போல இருந்தது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாத நிலை. இது போன்ற தருணங்களில் தான் புத்தகங்களில் முழ்கிப் போவேன். அதுவும் இந்த முறை பலன் அளிக்கவில்லை. பேசாமல் யாராவது மன நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாமா என்று நினைத்தபோது, ஞாயிற்றுக்கிழமை வேறு. ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்தில் எதுவுமே கிடைக்காது. ஊரே அந்த ஒரு நாளில் மாயமாக மறைந்து விடும். செத்துப்போன ஊர் திங்கட்கிழமை காலைதான் விழிக்கும்.

இதன் நடுவே இழந்து போனவை எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வாழ்வில் செய்த தவறுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்து அழுத்தும் போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போதுதான் காரணமே தெரியாமல் இன்று மதியம் என் கணினியின் பழைய கோப்புகளை அலசிக்கொண்டிருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சில அபூர்வமான இளையராஜா பாடல்களை எப்போதும் சேகரித்து வைத்திருந்தேன். சரி கேட்போம் என, கேட்கத் தொடங்கினேன்.‌

“புத்தம் புது காலை”.. யில் தொடங்கியது என் பயணம். “ஆயிரம் மலர்களே” என மலர்ந்த போது உள்ளுக்குள் கட்டியிருந்த கயிறுகள் ஒவ்வொன்றாய் அறுபடத் தொடங்கின. ” கொடியிலே மல்லிகைப்பூ” படரும்போது வியர்த்துக் கொண்டிருந்த காதோரத்தில் யாரோ குளிர்க்காற்றாய் ஊதிக் கொண்டிருந்தார்கள். “மாலையில் யாரோ மனதோடு” பேசியபோது என் அழுத்தங்கள் ஒவ்வொன்றும் மெலிதாய் ஆவியாகிக் கொண்டிருந்தது. “தாலாட்டும் பூங்காற்று” வீசியபோது அடைபட்ட எல்லா அணைகளும் உடைந்து கண்கள் கண்ணீர் கொட்டித் தீர்த்தன. “காத்திருந்து காத்திருந்து” என உடைந்து அழுதேன்.

அது நள்ளிரவின் மழை போல, சோகத்தின் ” மேகம் கொட்டட்டும் ” எனக் கொட்டித் தீர்த்தது. ” ஏதோ மோகம்.. ஏதோ தாகம்” என்பது போல ஏதோ ஒரு வலி. “விழியிலே மணி விழியிலே” கொஞ்சம் கொஞ்சமாக குளிர் பரவத் தொடங்கியது. “கீரவாணி… இரவிலே.. கனவிலே..” இசைக்கத் தொடங்கியது.

அடுத்தடுத்த பாடல்களில் நான் பரவசமாகி “ஏதேதோ எண்ணம்” நினைத்து மெளனமாகி ” இது மெளன நேரம்” என எனக்குள் நீந்தி “நீலக் குயிலே..சோலைக் குயிலே..‌” என மலர்ந்துக் கொண்டிருந்த அந்த வேளையில்தான் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இசை தெய்வம் இளையராஜாவை பற்றி இயக்குனர் மிஷ்கின் பேசிய சிறியத் துண்டினை பார்த்தேன்.

“தினந்தோறும் சாமியை பார்த்தால் கூட நமக்கு அலுப்புத் தட்டிவிடும். ஆனால் உலகத்தில் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு விஷயம் எதுவெனில்.. அது இளையராஜா தான்..” என்று அவர் தழுதழுத்த குரலில் சொன்னபோது …

நான் கண்கலங்கியவாறு என் கணினி திரைக்கு முன்னால் தலையை அசைத்துக் கொண்டேன்.

அந்த மனிதன் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நரகமான உலகை அந்தத் தனி மனிதன் தான் இறைவனாக காத்து நின்று வாழ முடிகிற அளவுக்கு ..மாற்றி இருக்கிறான். மூச்சடைத்த இருள்வெளியில் கிடைத்த ஆக்சிஜன் பலூன் போல.

மதியத்தில் இருந்து நள்ளிரவு வரை அந்த கடலில் நீந்தி கொண்டே இருக்கிறேன்.

இப்போது “தாலாட்டுதே வானம்.”

♥️

ஊரெல்லாம் ஒரே வானம். -1

என்னுடைய பள்ளிப் பருவத்து நண்பர்களில் ஒருவனான சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னை தொடர்பு கொண்ட போது அவனது குரல் உடைந்து இருந்தது. “என்னடா என்ன பிரச்சனை..?” என்று கேட்டபோது “அப்பா வந்திருக்கிறார்டா. ” என உடைந்து சொன்னான். எனக்கு ஒரே ஆச்சரியம். சிறுவயதிலேயே அவனது அப்பா அவனையும் அவனது அம்மாவையும் கைவிட்டு விட்டு துறவறம் மேற்கொண்டு காசிக்கு போய் விட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனது அம்மா தான் அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் பணிபுரிந்து வருகிறான். அவனது அம்மா சில வருடங்களுக்கு முன்பாக மரணம் அடைந்திருந்த போது அஞ்சலி செலுத்த நானும் சென்றிருந்தேன். அந்த சாவுக்கு கூட அவனது அப்பா வரவில்லை. தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொன்னான். பிறகு சென்னைக்கு குடிமாறி சென்று விட்ட அவனை காணாமல் போன அவனது அப்பா எப்படி தேடி கண்டுபிடித்தார் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். சேகர் அவனது பெரிய அப்பாவோடு தொடர்பில் இருந்தான். சொந்த ஊரில் இருக்கும் தன் அண்ணனை கண்டுபிடித்த சேகரின் அப்பா, சேகரின் முகவரி வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்து விட்டார். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் வாழ்க்கையில் இல்லாத ஒருவர் திடீரென வயதான தோற்றத்தில் தன் முன்னால் நான் தான் உன்னுடைய அப்பா என்று சொல்லிக் கொண்டு அமர்ந்திருக்கும் விசித்திரம் ஏன் தன் வாழ்வில் நடக்கிறது என அவன் என்னிடம் கேட்டபோது என்னிடத்தில் பதில் இல்லை. “சரி..இப்போ என்ன பிரச்சனை ?” என நான் கேட்டதற்கு சேகர் “டேய் !அவர் என்னோடு நிரந்தரமாக தங்குவதற்காக வந்திருக்கிறார். அதற்கான வசதிகளோ இவரை கவனித்துக் கொள்வதற்கான நேரமும் எனக்கு இல்லை. எனவே உனக்குத் தெரிந்த ஏதாவது முதியோர் இல்லம் இருந்தால் சொல் . சேர்த்துவிடலாம்..” என பேசிக் கொண்டிருந்தான்.” சரி. அவர் அங்கே இருக்கட்டும். சென்னையில் இருக்கும் எனக்கு தெரிந்தவரிடம் சொல்லி ஏதாவது முதியோர் இல்லம் பார்க்க சொல்கிறேன்..” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தேன்.

எனக்கு இருந்த வேலையில் அதை மறந்தே போனேன். சில நாட்கள் கழித்து சேகர் அழைத்தான். அவன் அப்பாவோடு காசியில் இருப்பதாக சொன்னான். சில நாள் பயணமாக காசி வந்திருக்கும் அவர்கள் பனி லிங்கம் தரிசிப்பதற்காக இமயமலை செல்ல இருப்பதாகவும் கூறினான். அவன் திட்டமிட்டது போல அவன் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாமல்.. அவனுடைய அப்பா அழைக்க காசிக்கு அவன் போயிருப்பதாக சொன்னான். சில வருடங்கள் கழித்து அவனை சந்தித்தபோது உலகப் பயணம் ஒன்றுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாகவும், அப்பா காசியில் தற்போது இருப்பதாகவும் அடிக்கடி சென்று பார்ப்பதாகவும் அவன் கூறிய போது நான் முன்னர் சந்தித்த சேகர் இவன் இல்லை என புரிந்து கொண்டேன். அவன் அப்பா அவனுக்கு பயணத்தைப் பழக்கப்படுத்தி விட்டார். பயணத்தின் சுவை அறிந்த அவன் இப்போது ஊர் சுற்ற கிளம்பி இருக்கிறான். அவனை சந்தித்த அந்த இரவில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அப்பாவை தான் தவறாக புரிந்து கொண்டு விட்டதாகவும் , அவர் சிறகு உள்ள மனிதன் எனவும், அவரால் பறக்காமல் இருக்க முடியாது எனவும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். நான் சற்று கோபமாகி “அப்படி என்றால் உன் அம்மா பட்ட கஷ்டங்கள் எல்லாம்.. ” “என் அம்மாவிற்கு சிறகு இல்லை. சிறகை வெட்டும் கத்தரியாக நானும் அவளது சூழல்களும் இருந்தோம். கூட்டிலேயே வாழ்ந்து விட்டாள். நீயும் பயணப்படு. நீண்ட நாட்களாக தனக்கு இருந்த மன அழுத்தம் தற்போது இல்லை எனவும், ஏதாவது நோய் இருந்தால் ஊர் சுற்ற கிளம்பு .. புதிய மனிதர்களின் முகங்களை பார். புதிய இடங்களை பார். உலகம் எவ்வளவு பெரிது என உனக்குத் தெரியவரும். பிறகு அனைத்தும் சரியாகிவிடும் ..” என என்னிடம் சொல்லிவிட்டு போன போது என்னால் அவன் சொன்ன விளக்கத்தோடு ஒத்துப் போக முடியவில்லை. நான் சற்றே கடுப்பாகி..அவன் காலில் ஏதேனும் சிறகுகள் இருக்கிறதா என பார்த்தேன் .

……

இந்த மாத காலச்சுவடு இதழில் பிரேசில் நாட்டு இயக்குனர் வால்டர் செலஸ் பற்றி “கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு” என்ற தலைப்பில் ரதன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை வால்டர் இயக்கிய ஐ அம் ஸ்டில் ஹியர் என்கிற 2024 ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத்தைப் பற்றியது. அதே கட்டுரையில் வால்டரின் புகழ்பெற்ற திரைப்படங்களான சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் மோட்டார் சைக்கிள் டைரிஸ் ஆகியவற்றைப் பற்றி குறித்தும் ரதன் எழுதியிருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே முக்கியமானவை.

சேகுவேராவின் இளம் வயது பயணங்களை முன்வைத்து அவர் இயக்கிய மோட்டார் சைக்கிள் டைரிஸ் (2004) எப்போது பார்த்தாலும் மனதை மிகவும் கவரக்கூடியது. சேகுவேரா அவரது வாழ்வில் அசலாக அவர் எந்தெந்த இடங்களுக்கு பயணம் மேற்கொண்டாரோ அதே இடங்களுக்கு சென்று படப்பிடிப்பை வால்டர் மேற்கொண்டு இருக்கிறார். எப்போதாவது தோன்றுகின்ற தன்னலமற்ற ஒரு புரட்சியாளன் எப்படி உருவானான் என்பதற்கு அந்த திரைப்படம் மாபெரும் சாட்சியாக விளங்குகிறது. என்றெல்லாம் எனக்கு மனச்சோர்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் ஒரு முறை “மோட்டர் சைக்கிளில் டைரிஸ்” பார்த்து விடுவேன். படம் முடிந்த பிறகு நான் தேடி வந்த புன்னகை என் முகத்தில் மலர்ந்திருக்கும். மோட்டார் சைக்கிள் டைரிஸ் 1952 ஆம் ஆண்டு சேகுவாராவும் அவரது நண்பர் கிரானடோவும் லத்தீன் அமெரிக்க நாடுகளை சுற்றிப் பார்க்க கிளம்பிய ஒரு பயணத்தைப் பற்றிய திரைப்படம். இந்தப் பயணம் நடக்கும் போது சேகுவேரா ஒரு கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்காத ஒரு மருத்துவ மாணவன். அவரது நண்பர் கிரானடோ 30 வயதை தொடப்போகும் நடுத்தர வயதுக்காரர். அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இருந்து தொடங்கும் அவர்களது பயணம் ஏறக்குறைய 14 ஆயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி வெனிசிலாவில் முடிவதற்கான திட்டத்தோடு கிளம்பும் அவர்கள் நடுவில் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி பல மனிதர்களை சந்தித்து சேகுவேரா என்ற இளைஞன் எப்படி சமூக விழிப்புணர்வு அடைந்தான் என்பதை நுட்பமான காட்சிகளில் விவரிக்கின்ற இந்த திரைப்படம் மிக அற்புதமான ஒன்று.

அதேபோல் சென்ட்ரல் ஸ்டேஷன். 1998 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வாழ்வில் சகல விதமான ஏமாற்றங்களையும் சந்தித்து சோர்வடைந்து இருக்கிற வேலையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு முதிய பெண்ணிற்கும், ஒரு சிறுவனுக்கும் நிலவுகிற உறவைப் பற்றியது. தாயோடு தன் தந்தையை பார்க்க ரயில்வே ஸ்டேஷன் வருகிற சிறுவன் ஒரு விபத்தில் தாயை இழக்க அந்த சிறுவனோடு அவனது தந்தையை தேடி அந்த முதிய பெண்மணி மேற்கொள்கிற பயணமே சென்ட்ரல் ஸ்டேஷன்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே பயணத்தை அடிப்படையாகக் கொண்டவை. பயணத்தின் போது ஏற்படுகிற அனுபவங்களை திரைப்படங்களாக எடுக்கும் போக்கினை உருவாக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது பார்த்தாலும் நம் மனதுக்குள் ஓராயிரம் திறப்புகளை திறக்கக் கூடியவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த திரைப்படங்களை மீண்டும் பார்த்த போது இப்போதுதான் புதிதாக பார்ப்பது போல தோற்றமளித்தது அந்தப் படங்கள் கொண்டிருக்கிற, எல்லா காலத்திற்கும் பொருந்துகிற செவ்வியல் தன்மை.

..

தன் அப்பாவின் மீது வெறுப்பை தன் வாழ்நாள் முழுக்க சுமந்து இருந்த சேகர் அப்பாவை போலவே பயணத்தை ஒரு பானமாக மாற்றி தனக்குள் பருகிப் பருகி ஒரு பயணக் குருவியாக மாறி இருக்கிறான். கொந்தளித்துக் கொண்டிருந்த அவனது ஆன்மா இறுதியாக பயணங்கள் மூலமாக அமைதியாக மாறி இருக்கிறது. பயணம் அவனுக்குள் கனிவை கருணையை சமாதானத்தை மன்னிப்பை இன்னும் பலவற்றையும் தந்திருக்கிறது. இவற்றை தானே நாம் எதிர்ப்படும் எல்லாவற்றிலும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்..??

♥️

மஞ்சள் வெயில் தாலாட்டு.

♥️

அந்தத் தொடர் வண்டியின் ஜன்னல் கண்ணாடியின் வழியே மஞ்சள் ஒளி கண்ணைக் கூச அயர்ந்துத் தூங்கிக் கொண்டிருந்த நான், கண்விழித்த போது சென்னை புறநகரில் தொடர்வண்டி நுழைந்திருந்ததை அறிந்துக் கொண்டேன்.

பயணம் தொடங்கும் போது அமர்ந்திருந்த வயதான தம்பதியர் எங்கோ இறங்கிச் சென்றிருந்தனர். எனக்கு முன்னால் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்த ஒரு இளம் பெண். அவள் அருகே கையில் குழந்தையோடு, மஞ்சள் கயிறு தாலியோடு பச்சை நிற புடவையில் ஒரு பெண். குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மஞ்சள் சுடிதார் இளம்பெண் கண்டிப்பாக ஏதோ தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்ப்பவளாக இருக்க வேண்டும். சட்டென்று ஒரு கூச்சத்தின் மங்கிய நிழல் என்னை சூழ்ந்தது. ஒரு இளம் பெண் முன்னால் அயர்ந்து தூங்குவது அவ்வளவு நேர்த்தியான காட்சி அல்ல. ஆனால் அவள் என்னை கவனித்தது போல் எல்லாம் தெரியவில்லை. தொடர் வண்டியின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தூரத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த மஞ்சள் வெயிலைப் பார்த்துக் கொண்டு, காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு ஏதோ பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நானும் என் கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்தேன். இது போன்ற தனிமைப் பயணங்களில் எதிரே அமர்ந்திருக்கும் இளம் பெண்களின் கவனத்தை கவருமாறு நடந்து கொள்வது அவ்வளவு நாகரீகம் அல்ல என்பது எனக்கும் தெரியும். பக்கவாட்டு இருக்கையில் ஜிப்பா அணிந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்தவரோடு ஏதோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு வந்தார். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நானும் கேட்டுக்கொண்டே இருந்தபோது.. அந்த ஜிப்பாக்காரர் ஒரு பாடகர் என்பதும், ஏதோ கச்சேரிக்கு போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், கச்சேரி சரியாக அமையவில்லை என்ற சலிப்போடு இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. கூட்டம் கூட்ட முடியாதவர்கள் எதற்கு கச்சேரி நடத்துகிறார்கள் என்று பாடகர் ஆவேசமாக கேட்க, அருகில் இருந்தவர் அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் இப்படி ஏதோ ஒரு சலிப்பு ஈரம் கண்ட உள்ளாடை போல உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. சிலருக்கு வேலையை குறித்த சலிப்பு, சிலருக்கு வாழ்க்கைத் துணையை குறித்த சலிப்பு, சிலருக்கு உடல் நலன் குறித்த சலிப்பு என வேறுபட்டாலும் சலிப்பின் திசைவழி என்னவோ ஒன்றுதான்.

எங்கிருந்தோ வந்த ஒரு கடலை வியாபாரி கடலை விற்றுக் கொண்டே வர, யாரும் அவரிடத்தில் கடலை வாங்கி சாப்பிடாத நிலையில் அவரும் சலிப்போடு காலியாக இருந்த எனது பக்கத்திற்கு அமர்ந்து இறுகிய முகத்தோடு கண்ணை மூடி சாய்ந்திருந்தார்.

காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டு இருந்த அந்த இளம் பெண், முகத்தில் மாலை நேரத்து மஞ்சள் வெயில் சிறு ஒப்பனை போல படர்ந்து இருந்தது. வெயில் சுமக்கும் முகங்களில் பூசப்படும் இயற்கையின் ஒப்பனை போல வேறு என்ன சிறந்தது இருக்கிறது..??

மீண்டும் மீண்டும் அந்த இளம் பெண் மீது கவனம் திரும்புவதை எனக்குள் எண்ணிப் பார்த்து என் மீதே கோபம் எனக்கு கோபம் வந்தது. பெண்ணை வலுக்கட்டாயமாக பார்க்கும் விழிகளும் ஏதோ ஒரு வன்முறையை இழைக்கிறது என நினைத்து மெலிதாகக் குற்ற உணர்வு கொண்டேன்.

அப்போதுதான் பச்சைப் புடவை அணிந்திருந்த பெண்ணின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை அழத் தொடங்கியது. அந்தத் தொடர் வண்டி பெட்டியில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி மனநிலைகளில் லயித்துக் கொண்டிருக்கின்ற அந்த மாலை வேளையில் குழந்தையின் அழுகை எல்லோரும் மனநிலையையும் ஒரே இடத்தில் நிறுத்தியது. அந்தப் பச்சைப் புடவை பெண் குழந்தையை சமாதானப்படுத்த, சூ சூ.. கொட்டினாலும் குழந்தை எதையோ நினைத்து வலிமையாக இன்னும் உச்ச குரலில் அழத் தொடங்கியது. உலகத்தில் எல்லா சூழ்நிலைகளையும் ஒரே திசையில் திருப்ப ஒரு குழந்தையின் அழுகை போதும். இயர் போன் மாட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண் கூட இயர் போனை கழற்றிவிட்டு குழந்தை முதுகில் மெதுவாக வருடிக் கொடுத்தாள். கடலை வியாபாரி தன்னுடைய கூடையில் வைத்திருந்த சில்லறைப் பொட்டலத்தை குலுக்கி காட்டி குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றார். குழந்தை இன்னும் வீறிட்டு அழத் தொடங்கியது. எப்படியாவது அந்த குழந்தை அழுகையை நிறுத்தி விட வேண்டும் என அங்கு இருப்பவர்கள் அனைவரும் நினைக்கத் தொடங்கினோம். எங்கெங்கோ மன சஞ்சாரத்தில் பறந்து கொண்டிருந்த எல்லோர் மனதையும் இழுத்து வைத்து வலுக்கட்டாயமாக ஒரே இடத்தில் ஊசிக் குத்தி தைத்தது அந்தக் குழந்தையின் அழுகை.

அப்போதுதான்.. ஒரு கூட்டமற்ற கச்சேரியில் சிக்கிக் கொண்டு, சலிப்புற்று இருந்த அந்த ஜிப்பாப் பாடகர் தன் வாழ்வின் உன்னத கணத்தில் இயற்கையாய் வந்துச் சேர்ந்த ஒரு சவாலை எதிர்கொள்ளும் பொருட்டு

ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார்.

தாலாட்டு மாறிப்போனதே

என் கண்ணில் தூக்கம் போனதே

பெண் பூவே வந்தாடு

என் தோளில் கண்மூடு

என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப்போனதே

என் கண்ணில் தூக்கம் போனதே..”

தொடர்வண்டி தனது இஞ்சின் சத்தத்தை நிறுத்திவிட்டதோ என எண்ணும் அளவிற்கு எல்லோரும் அமைதியாகிவிட்டிருந்தோம். குழந்தை மட்டும் சிணுங்கி கொண்டிருந்தது.

“கண்ணீரில் சந்தோஷம்

நானிங்கு காண்கிறேன்

தாயாக இல்லாமல்

தாலாட்டு பாடினேன்

என் வாழ்வே உன்னோடு

என் தோளில் கண் மூடு.. சுகமாயிரு”

ஆழமான தன் குரலில் இருந்து அபூர்வமான அந்த பாடலை உருக உருக பாடிக்கொண்டிருந்த அந்த ஜிப்பா பாடகர் ” சுகமாயிரு” என்று பாடிய போது உண்மையில் அது ஒரு ஆசீர்வாதம் போல அந்தக் குழந்தையை தூங்க வைத்திருந்தது. பெருமிதத்தின் பொன் நிழல் அந்தப் பாடகரின் முகத்தில் பூத்திருந்தது.அது ஒரு அபூர்வத் தருணம். எதுவும் அறியாத அந்த வெள்ளந்தி குழந்தையின் உறக்கம், அந்த ஜிப்பா பாடகர் இதுவரை வாழ்நாளில் சந்தித்திராத அங்கீகாரம்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த கடலை வியாபாரி கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு தன் கூடையை தூக்கிக் கொண்டு மீண்டும் நடக்கலானார். குழந்தையின் தாய் பனித்த தனது கண்களை தன் சேலையில் துடைத்துக் கொண்டு நன்றியோடு அந்த ஜிப்பாப் பாடகரை பார்த்தார். அதற்குள் அந்தத் தொடர்வண்டி எழும்பூர் நிலையம் வந்து சேர, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அந்த இளம் பெண் வேகமாக சென்று அந்த ஜிப்பாப் பாடகரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு கதவை நோக்கி அவள் சென்றாள்.

அந்த ஜிப்பா பாடகருக்கு எதிரே அமர்ந்திருந்த அவரது நண்பர் அவரை இறுகத் தழுவிக் கொண்ட போது.. அந்தத் தொடர்வண்டி பயணம் ஒரு விருதுபெறும் நிகழ்ச்சியாக மாறி இருந்தது.

❤️

மணி செந்தில்.

விரும்புவோர் கேட்பதற்காக..

Page 1 of 59

Powered by WordPress & Theme by Anders Norén