மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சிறகுடைய தந்தைகள்.

♥️

“தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என வள்ளுவர் கூறுகிறார். அந்த அவைகளும் கூட பெரும்பாலும் தந்தையார்களின் அளப்பரிய தியாகத்தினால் தான் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் நான் எப்போதும் மகன் அதியனின் தந்தை என்னுடைய சகோதரன் புதுகை ஜெயசீலன் மற்றும் மகன் தி.த.தமிழவன் கோத்தகிரியின் தந்தை அண்ணன் தமிழ் தாசன் ஆகியோர் எனது பெருமதிப்பிற்குரியவர்கள். மகன்களுக்காக மேடைகள் ஆனவர்கள். அந்த மேடைகள் அவர்களின் ஆன்மாவால் ஆனவை. அவர்கள் மகன்களை உருவாக்குகிற அந்த போராட்டத்தை தாய்மையை விட புனிதமானது என்றே கருதுகிறேன்.

சமீபத்தில் எனது பெரியப்பா எழுத்தாளர் ச.கல்யாணராமன் தனது 89 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது பிள்ளைகளுக்காக மட்டுமல்ல அவரது தம்பி பிள்ளைகளுக்காகவும் கடுமையாக உழைத்த பெருமகன் அவர். வாழ்வில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை, விமர்சிக்க தகுந்த வாழ்க்கை முறையினை அவர் வாழ்ந்தாலும் பிள்ளைகளுக்கு அவர் ஒரு சிறந்த அப்பா. எங்கள் எல்லோரையும் வாழ்வின் உயரத்தில் அமர வைக்க வேண்டும் என அவர் கனவு கண்டார். சிலரும் அமர்ந்தார்கள்.
எங்களில் சிலரின் அளப்பரிய உயரத்திற்கு.. இரவு முழுக்க கை வலிக்க வலிக்க எழுதிய அவரது உழைப்பு மிக முக்கிய காரணம்.

ஆனால் காலம் கொடுமையானது தானே. எல்லா நினைவுகளையும் அழிப்பதுதான் கால வெள்ளத்தின் இயல்பு. மறப்பது மனித இயல்பாக இருக்கிறதோ இல்லையோ என்று இதுவரை எனக்கு சந்தேகம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் அவ்வளவு எளிதாக மனித மனம் எதையும் மறக்காது. ஆனால் மறந்தது போல நடிக்கும். அதுவே வாழ்க்கை என நம்பி இயல்பாக வாழத் தொடங்கும்.

கடைசி காலத்தில் எனது பெரியப்பா உடல் நலிவோடு இருந்த காலகட்டத்தில் நான் அருகில் இல்லை என்கிற ஒரு குற்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. எனக்கென்று குடும்பம் ஆகிவிட்ட நிலையில் அது சாத்தியமில்லைதான்.ஆனால் அவருடைய இறுதிக் காலத்தில் அவர் தனிமையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்பதுதான் எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் சுமக்க போகிற பாவம்.

🔸

சுயநலம் என வந்துவிட்டால்.. தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் என எல்லோரும் அந்நியமாகி விடுகிறோம். எல்லோர் குறைகளும் மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகின்றன. மனிதன் தனித்த தீவாக மாறுவதுதான் அவன் வாழ்வில் அவன் அடைகிற மாபெரும் சீரழிவு. அதுவும் பெரிய குடும்பத்தில் பிறந்துவிட்டு தனியனாக அலைவது ஒரு பாவனை. நினைவுகளை விட்டு யாராலும் அவ்வளவு எளிதாக நிர்வாணமாகி விட முடியாது. ஒவ்வொரு நாளும் ஒன்றாக வாழ்ந்த நாட்களில் பகிர்ந்து கொண்ட அன்பின் ஈரம் மட்டும் உள்ளுக்குள் சுரந்துக் கொண்டே இருக்கும். அது ஒரு வகையான வலி தான்.

உலகத்திலேயே மோசமான கைவிடல் என்பது வயதான காலத்தில் பெற்றோரை விடுவதுதான்.

🔸

எனது தம்பி ஒருவன் இருக்கிறான். கட்சியின் மூலமாகத்தான் அவன் எனக்கு பழக்கம். சிறு வயதில் அவன் கட்சியில் இணைந்த போது அவன் தந்தை அவனிடத்தில் இல்லை. அவர் இன்னொரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். தம்பி தனது தாயுடனும் தன் தங்கையுடனும் வாழ்ந்து வந்தான். தந்தை இல்லாத தனிமையை கொல்வதற்காகத்தான் அவன் கட்சியில் இணைந்ததாக எனக்குத் தோன்றியிருக்கிறது. அந்த வயதில் அவன் எப்போதும் கட்சி வேலைக்காக அலைந்து கொண்டே இருப்பான். ஆனால் அப்பா மீது அவனுக்கு கடுமையான கோபம் இருந்தது. கோபம் என்பதை தாண்டி எல்லாம் அது ஒரு வகையான வன்மம். தந்தையைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் கலங்கிய கண்களுடன் அந்த இடத்தை விட்டு அவன் நகர்ந்து விடுவான்.

அப்படி வாழ்ந்து கொண்டிருந்த அவன் வாழ்வில் ஒரு நாள் அவன் தந்தை எல்லாவற்றையும் இழந்து வந்து அவன் முன்னால் நின்றார். மன்னித்துவிடு என கதறினார். அவனுடைய தாயும் ஏறக்குறைய கண்கலங்கி மன்னிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். அந்த நேரத்தில்தான் அவன் என்னை வந்து பார்த்தான். அண்ணா அந்த ஆளை எனக்கு பிடிக்கவே இல்லை.. ஆனாலும் அம்மா அழுவது என்னால் தாங்க முடியவில்லை. என்ன செய்வது எனக் கேட்டான்.

“சகித்துக் கொண்டு மன்னித்துவிடு. அது மட்டுமே உனக்கு நிம்மதியை தரும்.” என்று சொன்னேன்.

தம்பி இப்போது தாய் மற்றும் தந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த தந்தையின் வயதான காலத்தில் அவருடைய மடியில் தம்பியின் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

🔸

இப்படி தன்னை சிறுவயதில் புறக்கணித்து காலப்போக்கில் எல்லாவற்றையும் இழந்த தந்தையை எதுவும் தண்டிக்காமல் ஏற்றுக் கொள்கின்ற மனதின் சூட்சமம் மிக நுட்பமானது. அது தந்தைக்கான பால்ய கால ஏக்கத்தை சார்ந்தது.

இன்றளவும் தவமாய் தவமிருந்து படம் பார்க்கும்போது கண்கள் கலங்காதவர்கள் யார் இருப்பார்கள்.. தீபாவளியின் முதல் நாள் இரவு வரை உழைத்து விட்டு பிள்ளைகளுக்கு துணிமணிகள் பட்டாசுகள் என வாங்கி வருகிற எத்தனையோ தந்தைகளை நாம் காலத்தோடு கொண்டாடி இருக்கிறோமா என்பதுதான் பெரிய கேள்வி.

தந்தைக்காக காத்திருப்பதுதான் பால்ய காலத்தின் பசுமையான நினைவுகளில் ஒன்று. பெரும்பாலான குழந்தைகளுக்கு தந்தை என்பவர் தான் வெளியே அழைத்துச் சென்று உலகத்தை அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரையில் மூடிய சுவர்களில் இருந்து முதன்முதலாக உலகத்தின் வெளிச்சத்திற்கு தந்தையின் கரங்கள்தான் அழைத்து செல்கின்றன.

எப்போதும் தந்தையின் கரங்கள் நம்பிக்கையின் கதகதப்புக்கு உரியவை. அந்த கைகளைப் பிடித்துக் கொண்டால் போதும். பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் எங்கேயும் போய் விடலாம் என குழந்தைகள் நினைக்கின்றன.

எனது மூத்த மகன் பிறந்த காலத்தில் நான் ஒரு ஸ்கூட்டி வைத்திருந்தேன். பிறந்த ஆறேழு மாதங்களில் என் வீட்டின் ஹாலில் தான் அவனை படுக்க வைத்து இருப்பார்கள். வாசலில் என் ஸ்கூட்டி சத்தம் கேட்டால் போதும். அவனது முகம் புன்னகைக்க துவங்கும். கை கால்களை விரைத்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை அவன் வெளிப்படுத்தும் போது .. அவனை அழைக்கும் விதமாக ” “”குட்டி பாப்பா ..டிங்..டிங்””” என ஒலி எழுப்புவேன். அவனும் சிறிய ஒலி எழுப்பி குதூகலிப்பான்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவனை வெளியே அழைத்துச் செல்ல தொடங்கினேன். எனது இரண்டு மகன்களும் வித்தியாசமானவர்கள். என் உடல் நிலையை கருதி எப்போதும் என்னை அவர்கள் தூக்க சொன்னதே இல்லை. தந்தை தூக்கிக் கொண்டு நடப்பார் என்ற அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை. என்னை பிடித்துக் கொண்டு நடப்பார்கள். இப்போது நான் அவர்களை பிடித்துக் கொண்டு நடக்கிறேன். அந்தக் காலத்தில் நான் பயன்படுத்திய எனது ஸ்கூட்டி மாற்றுத்திறனாளி ஓட்டக்கூடிய மூன்று சக்கர வண்டி அல்ல. இரண்டு சக்கரங்கள் தான். அதில் மிகுந்த திறனுடன் ஓட்ட பழகி நான் நகரையே வலம் வந்து கொண்டிருந்தேன். என் நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி இருக்கிறேன். ஆனால் என் மகனை முன்னால் நிற்க வைத்து ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் பதட்டமாக இருக்கும்.

ஒரு நாள் திரைப்படத்திற்கு அழைத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எனது வண்டி விபத்துக்குள்ளாகிவிட்டது. நான் கீழே விழுந்து விட்டேன். ரோட்டில் விழுந்த அடுத்த நொடி என் மகனுக்கு என்னானது என எனக்குள் துடித்த துடிப்புதான் தாய்மைக்கு நிகரானது தந்தைமை என நம்ப வைத்தது. சட்டென எழுந்து நின்ற எனது மகன் என் அருகில் ஓடி வந்து “எனக்கு ஒன்றும் ஆகவில்லை அப்பா” என தழுதழுத்த குரலில் சொன்னபோது நான் உடைந்து விட்டேன். அவனுக்கு தன் வலியை பற்றி சொன்னால் தன் தந்தை உடைந்து விடுவான் என்கிற நுட்பமான அறிவு அந்த வயதிலேயே இருந்தது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். அதிலிருந்து என் மகனை நான் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதில்லை. அவனுக்காகவே நான் கார் வாங்கினேன்.

என் அப்பாவை கொரோனா காலத்தில் மருத்துவமனையில் சேர்த்த போது நினைவில்லாமல் அவர் இருந்தார். அப்போது ஒரு நொடியில் அவரது உள்ளங்கைகளை நான் பற்றிக் கொண்டேன். மீண்டும் பற்ற முடியுமோ என்கிற பயம் எனக்கு. அந்தக் கைகளில் இருந்து நான் நம்பிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கை முழுக்க என்னை அழைத்துச் செல்லும் என்று எண்ணினேன். நல்லவேளை அம்மா அப்பாவை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்.

🔸

தந்தை மகன் உறவைப் பற்றி மிக நுட்பமாக எழுதி இருப்பவர் மெக்சிகோ எழுத்தாளர் யுவான் ரூல்ஃபோ.

மிகக் குறைவாக எழுதிய எழுத்தாளர். ஆனாலும் அவர் எழுதியவை எல்லாம் உலகத்தின் தரமான எழுத்துக்கள் என கொண்டாடப்படுகின்றன.

1918 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு ஆறு வயதானபோது அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன் பிறகு அடுத்த நான்காண்டுகளில் அவரது தாய் மாரடைப்பினால் காலமானார். அதற்குப் பிறகு சிறிது காலம் உறவினர்கள் மத்தியிலும் பிறகு ஒரு அனாதை இல்லத்திலும் தன் வாழ்க்கையை வாழ்ந்த யுவான் ரூல்ஃபோ எப்போதும் உணர்ச்சி கொந்தளிப்பான மனநிலையை கொண்டவர்.

மெக்சிகோ நவீன இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளராக விளங்கிய ரூல்போ பற்றி இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கோஸ் “எல்லா காலத்திற்குமான, எல்லா இடங்களுக்குமான நீடித்து நிற்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் யுவான் ரூல்ஃபோ” என கொண்டாடுகிறார். அவரது நாவல் “பெட்ரோ பரமோ” உலகப் புகழ்பெற்றது. திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

அவருடைய சிறுகதைத் தொகுப்பு “எரியும் சமவெளி” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு எதிர் பதிப்பகத்தின் வழியாக வெளியாகி உள்ளது. தமிழில் இல. சுபத்ரா மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 17 கதைகளும் மிக முக்கியமானவை. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மால், இக்கதைகளால் மிக எளிதாக மெக்சிகோவின் பண்பாடு மற்றும் நிலத்தில் பொருத்திக் கொள்ள முடிகிறது என்பதுதான் யுவான் ரூல்ஃபோவின் தனித்துவம்.

அதில் இரண்டு கதைகள் இருக்கின்றன. ” என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.” மற்றொன்று “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”

ஒரு காலத்தில் கொலை செய்துவிட்டு இன்னொரு ஊருக்கு ஓடி வந்த ஒருவன் வாழ்நாள் முழுக்க தன்னை தேடி காவலாளிகள் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொந்தளிப்போடு ஒவ்வொரு நொடியும் மரணித்து விடுவோமோ என்ற சாவின் விளிம்பில் துடிப்பது தான் அந்தக் கதை. இறுதியாக அவர்கள் வந்துவிடுவார்கள். அவன் தன் மகனிடம் அவர்களிடம் சொல்ல அந்தத் தந்தை கேட்பதுதான் ‘என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.”

ஆனால் மகன் மறுத்து விடுவான். ஏனெனில் அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். எங்கே அவரது மகன் என்று சொன்னால் தன்னையும் சுட்டு விடுவார்களோ என பயந்து அவன் மறுத்து விடுவான். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் அந்தக் கதை. மரண நொடியில் வாழ்வின் முதுமையில் வாழ்வதற்கான வேட்கை எப்படி கொப்பளிக்கிறது என்பதை பற்றி அவ்வளவு நுட்பமாக எழுதி இருக்கும் யுவானின் இந்த கதை நவீன இலக்கியத்தின் உச்சம்.

அதேபோல , வாழ்நாள் முழுக்க தீமைகளை மட்டும் செய்து வந்த மகனுக்கு உடல்நிலை மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில் அவனைத் தூக்கிக் கொண்டு ஒரு மலை மீது ஏறி ஒரு அங்கே இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் மகனை சேர்ப்பதற்காக முதுகில் சுமந்து கொண்டு போகிற முதிய தந்தையைப் பற்றிய கதைதான் ” நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை”. இந்தக் கதை முழுக்க தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். தீமையை மட்டும் செய்த மகன் தந்தையின் சொற்களை கேட்டு கண்ணீர் வடிக்க தொடங்கும் போது அந்த ஊர் வந்து விடும். இரவு நேரத்தில் நாய்கள் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிற அப்பொழுதில் அந்தத் தந்தை சொல்வதுதான் “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”

உண்மையில் பிள்ளைகளுக்காக “எரியும் சமவெளி” தந்தைகளின் ஆன்மாக்கள் தான்.

🔸

விவாகரத்து வழக்குகளுக்கு மகள்களை அழைத்து வரும் பெற்றோர்களில் பெரும்பாலும் மிகுந்த பதற்றத்தோடு இருப்பது தந்தைகள் தான். பெரிய சிறகு இருந்தால் இப்படி துயரத்திற்கு உள்ளாகி இருக்கிற தன் பிள்ளைகளை போர்த்திக் கொள்ளலாமே என்பது போல அவர்கள் துடிக்கின்ற துடிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

தாய் பிள்ளைகளை வயிற்றில் சுமக்கிறாள். தந்தை பிள்ளைகளை தோளில் சுமக்கிறான்.

தோளுக்கு அருகே தானே இதயம் துடிக்கிறது..?

♥️

மணி செந்தில்.
www.manisenthil.com

அவர்களுக்காகவும் பேசுங்கள்.

நேற்று காலை கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய பதிவு ஒன்று என்னை மிகவும் பாதித்தது.

https://www.facebook.com/share/p/1D5A5tTmjP

திமுகவை சேர்ந்த அவரது அரசியல் நிலைப்பாடுகள் எனக்கு முற்றிலும் எதிர்ப்பானவை. அந்த நிலைப்பாடுகளை பொருத்தவரையில் அவர் எனக்கு எதிரி. அவரது கடுமையான ஆவேசமும் படபடப்பும் எனக்கு உவப்பானவை அல்ல. இவரா இது போன்ற கவிதைகளை, படைப்புகளை எழுதுகிறார் என்று நானே வியந்திருக்கிறேன்.

ஆனால் அவரது உடல்நிலை குறித்தும், தன் எண்ணங்களுக்கும் தன் உடல் குறைபாடுகளுக்கும் இடையே நடக்கின்ற போராட்டங்கள் குறித்து அவர் எழுதுகிற பதிவுகளை நான் மிக உன்னிப்பாக வாசிப்பேன். ஏனெனில் அதே அவஸ்தைகளை நானும் அனுபவித்து வருகிற காரணத்தினால் அவை கொஞ்சம் எனக்கு நெருக்கமானவைகளாக இருக்கும். அதேபோல் அபிலாஷ் எழுதிய “கால்கள்” நாவல் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான பதிவு.

உண்மையில் நடக்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய துயரம் அவர்கள் கொண்டிருக்கின்ற முதுகு வலி தான். குனிந்து பிடித்து நடப்பது அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது போன்றவை எல்லாம் அந்த முதுகு வலிக்கு மூலமான காரணங்கள்.முதுகு வலியின் மிகப்பெரிய தந்திரமே உங்களை தூங்க விடாது என்பதுதான். எப்படி புரண்டு படுத்தாலும் முதுகு வலிக்கும். எனவே உங்களால் தூங்க முடியாது. பின்னிரவு ஏறக்குறைய விடியற்காலை மூன்று மணிக்கு முதுகு வலி தாங்க முடியாமல் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒவ்வொரு நாள் இரவும் ஏற்படும்போதெல்லாம் நான் மனுஷ்ய புத்திரனை பற்றி நினைத்துக்கொள்வேன். என்னை விட மோசமான நிலைமை அவருக்கு. அவர் சக்கர நாற்காலியில் நீண்ட காலமாக பயணித்து வருகிறார். அவருக்கு வருகின்ற பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டு வருவதால் அவருடைய பதிவுகள் எப்போதுமே எனக்கு ஒரு முன்னறிவிப்புகள் தான். அதற்காக நானும் மனதளவில் தயாராகி விடுவேன்.

இதுபோன்று போலியோவால் பாதிக்கப்படுபவர்கள் இளம் வயதை எளிதாக கடந்து விடுவார்கள். ஆனால் வயதாக வயதாக கீழே விழும் ஆபத்து அதிகரித்துக் கொண்டே போகும். எனவே நடப்பதை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அதில் மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில் இதனால் எடை கூட தொடங்கும். எடை கூட கூட முற்றிலுமாக நடை தடைப்படத் தொடங்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சக்கர நாற்காலியை நோக்கி பயணம் தான்.

குவைத் செந்தமிழர் பாசறை பயணத்திற்கு நான் சென்றிருந்தபோது நான் உபயோகிப்பதற்காக உறவுகள் எனக்கு சக்கர நாற்காலி ஒன்று வாங்கி அளித்திருந்தார்கள். உண்மையில் அது எனக்கு பெரும் வசதியாக இருந்தது. கொஞ்சம் முதுகு வலி குறைந்தது போல எனக்கும் தோன்றியது. இதனால் அதை நான் இந்தியாவுக்கும் எடுத்து வந்து விட்டேன். இங்கே வந்தவுடன் என் தம்பி ஆனந்த் ( வழக்கறிஞர் மோ.ஆனந்த் ) அதைக் கோபமாக எடுத்து மேலே கட்டி வைத்து விட்டான். என் அம்மாவும் அதை விரும்பவில்லை.

என்னை மிகவும் விரும்புகிறவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே, எனக்கு இருக்கும் சிக்கல் மற்றும் வலி போன்றவை எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பதுதான். அவர்களிடம் கேட்டால் நான் அவ்வாறு நினைக்கக் கூடாது, நினைக்க உரிமையற்றவன் என்பதுதான் அவர்களின் பதிலாக இருக்கும்.

என் உயிர் அண்ணன் சீமான் என் மீது எந்தவித அனுதாபத்தையும் காட்டாதவர்.எல்லோருக்கும் இணையாக சொல்லப்போனால் இன்னும் சிறப்பாக நான் பணியாற்ற வேண்டும் என்று என்னை வற்புறுத்துபவர். அது என்னால் முடியும் என நம்புபவர்.தாய்மைக்கு நிகரான அந்த கள்ளம் கபடம் அற்ற அந்த உச்ச உணர்விற்காகத்தான் உயிர் உள்ளவரை அவருக்கு நேர்மையாக இருக்கத் துடிக்கிறேன். என் அம்மாவிற்கும் அவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை. வலிகள், உடல் குறைபாடுகளை எல்லாம் தாண்டி நான் இந்த உலகத்தில் எல்லா சூழ்நிலைகளிலும் போராடி உயர வேண்டும் என்பதில் இருவருமே பிடிவாதமாக இருப்பவர்கள்.

பிறகு , என் ஆருயிர் மைத்துனர் பாக்கியராசன், என் தம்பிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி, செந்தில்நாதன், துருவன், போன்ற என்னை மிக ஆழமாக நேசிப்பவர்களுக்கும் இதே எண்ணம்தான். பெரிய பிரச்சினையே நான் அவர்களோடு அடிக்கடி எல்லா ஊர்களுக்கும் வர வேண்டும் என அவர்கள் நினைப்பதுதான். மிக ஆழமான அந்த அன்பிற்கு என்னிடத்தில் பதில் இல்லை . அவர்கள் மத்தியில் இருக்கும் போது நான் என்னையும் மறந்து என் வலியையும் மறந்து நிற்கிறேன் தான். அந்தப் பேரன்பில் நான் நிம்மதி அடைகிறேன் தான்.ஆனாலும் அவர்கள் உலகத்தில் நான் இருந்தே ஆக வேண்டும். எனக்கும் வருவதற்கு ஆசைதான். ஆனால் நீண்ட தூரம் வாகனத்தில் அமர்ந்து வரும்போது கடுமையான முதுகு வலியில் சிக்குவேன். எங்கேயாவது வெளியூர் சென்று விட்டு வந்தால் அடுத்த மூன்று நாட்கள் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. படுத்தே இருப்பேன். என்னை எப்போதும் பாதுகாப்பாக அழைத்து வரும் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கு இந்த பிரச்சனை சற்று புரியும்.‌ அதேபோல் பெரும்பாலும் உடன் இருக்கும் அண்ணன் ஹீமாயூன் அவர்களும் இதைப்பற்றி புரிந்து வைத்திருப்பார்.

அந்த வலி போவதற்கு வலி நிவாரணிகளும் எடுக்க முடியாது. அதிகம் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்ற பயம். எனவே வலியை பொறுத்துக் கொள்ளல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு கவுனி அரிசி கஞ்சி தான் பெரும்பாலான நாட்களில் எடுத்துக் கொள்கிறேன். மதியம் ஒருவேளை உணவு. இரவு 7 மணிக்குள்ளாக உணவு எனத் திட்டமிட்டாலும் பல நாட்களில் அதைப் பின்பற்ற முடிவதில்லை. சிறிய உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக பெரிய பலன்களை எதிர்பார்க்க முடியாது.

இனி இருக்கும் காலங்களில் நலமாக ஒவ்வொரு நொடியையும் வீணாக்கி விடக்கூடாது என அஞ்சுகிறேன். நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் குடந்தை வேட்பாளர் வழக்கறிஞர் தம்பி ஆனந்த் அழைத்து கும்பகோணம் திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற சாய்வுகள் மற்றும் ஏற்பாடுகள் சரிவர இல்லை என சொல்லி எல்லா திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து அரசு அலுவலர்களை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக சொன்னார்.

உண்மையில் இது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. எனக்கு திரைப்படங்கள் பார்க்க பேராவல் உண்டு. ஆனால் திரையரங்கில் இருக்கின்ற படிகளை நினைத்து மிகுந்த அச்சப்படுவேன். ஒருமுறை “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு சென்னையில் தம்பி சாட்டை துரைமுருகன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டான். அங்கே போய் பார்த்த பிறகு தான் தெரிந்தது அந்த இருக்கை அந்த திரையரங்கில் உச்சத்தில் படிக்கட்டுகளின் மேலே இருந்தது. ஆனாலும் தம்பியின் பேரன்பு, திரைப்படங்களின் மீது இருக்கின்ற பெரும் காதல் இவையெல்லாம் தூண்டிவிட நானும் அவனை பிடித்துக் கொண்டு படி ஏறி விட்டேன். அன்று இரவு ஊருக்கு திரும்பிய பிறகு கடுமையான முதுகு வலி. அதற்குப் பிறகு கும்பகோணம் இயன்முறை மருத்துவர் தம்பி கார்த்தியிடம் ஒரு வாரம் மருத்துவம் எடுத்துக் கொண்டேன்.

இருப்பதிலேயே மிகப்பெரிய ஆபத்து படிக்கட்டுகள் தான். எல்லா திரையரங்குகளிலும் எல்லா திருமண மண்டபங்களிலும் சாய்வுத்தளம் வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால் அரசு விதிகளுக்காக பெயரளவில். வைக்கப்படும் சாய்வுத் தளங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத இடத்தில் வைக்கப்படுகின்றன. இவை பெயரளவில்தான் வைக்கப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்கு எந்த அரசு அலுவலரும் இல்லை. கூடுதலாக அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் திருமண மண்டபங்கள் திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் மார்பிள்ஸ் டைல்ஸ் கிரானைட் போன்ற வழுவழுப்பான தரைதளங்கள். அதில் தங்க நேரிடும் சிறு மண் துகள்கள் கூட உடல் குறைபாடு கொண்டவர்களை வழுக்கி கீழே தள்ளிக் காயம் ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை.

இதில் என்னைப் போன்றவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். பேரன்பு குடும்பம். மிகச்சிறந்த நண்பர்கள். என் தம்பிகள் ஆனந்த் லிங்கதுரை அருண் போன்ற எண்ணற்றத் தம்பிகள் நான் மகிழ்வாக வாழ அவர்கள் தன்னையே அர்ப்பணித்து நிற்கிறார்கள்.
உயிருக்குயிராக நேசிக்கும் நாம் தமிழர் உறவுகள் என எனது குடும்பம் என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

என்னை தீவிரமாக அரசியலாகவோ தனிப்பட்ட முறையிலோ எதிர்க்கும் என் எதிரிகள் கூட என்னை ஆழமாக நேசிப்பவர்கள் தான். ஒருபோதும் என் உடல் குறைபாடுகள் அவர்கள் கண்களுக்கு படாமல் இருப்பது தான் எனக்கு ஆச்சரியம். அவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் அவர்களின் எதிர்ப்பைக் கூட நான் மிகவும் நேசிப்பது தான் நகை முரண்.

இது போன்ற சூழ்நிலையில் வாழாமல் எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து துன்பப்படும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அடைகிற துன்பங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. குறிப்பாக பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற துயரங்களைப் பற்றி இதுவரை பெரிதாக பதிவில்லை என்பதே மிகப்பெரிய கொடுமை. மாதவிடாய் காலங்களில் பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற வேதனைகள் இதுவரை பேசாப் பொருள்.

அதேபோல மாற்றுத்திறனாளிகள் என்றால் உடல் குறைபாடுகள் கொண்டவர்கள் மட்டுமல்ல. செவித்திறன் சவால் கொண்டவர்கள், விழித்திறன் சவால் கொண்டவர்கள், பேச்சுத்திறன் சவால் கொண்டவர்கள், சிந்திக்கும் திறன் சவால் கொண்டவர்கள் என அது பல்வகை சவால் மனிதர்களை உள்ளடக்கிய சொல்.

எனது குடும்பத்திலேயே ஆட்டிசம் பாதிப்பில் ஒரு குழந்தையை நாங்கள் வைத்திருக்கிறோம். அவனைப் பாதுகாக்க, பராமரிக்க அவன் தாய், அவனது தாத்தா படுகிற பாடு, நான் அடைந்திருப்பதில் மிகப்பெரிய துயரம் அதுதான்.

ஒருமுறை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்பீரமாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சகோதரி சட்டென நாற்காலியில் இருந்து இறங்கி தவழ்ந்தவாறே கழிவறைக்கு போன காட்சி என்னை நிலைகுலைய வைத்தது. சில நொடிகளில் என்னை நானே தேற்றிக் கொண்டேன். பரவாயில்லை தங்கை அந்த அளவு கடும் உழைப்பினால் உயர்ந்திருக்கிறார் என.

ஆனால் சிறு உதவி, அவர்கள் இந்த உலகை சீராக அணுகுவதற்கான வசதி போன்றவை கூட அரசும் பொதுச் சமூகமும் இவர்களுக்கு செய்யவில்லை என்பது தான் இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை.

இந்த பதிவு கூட யாருடைய அனுதாபத்திற்கும் போடப்படுகின்ற பதிவு அல்ல. ஒரு சரிநிகர் சமுதாயத்தில் வாழ வேண்டும் சுதந்திர மனப்பான்மையோடு எல்லோரும் எல்லோரும் போல தாங்களும் பிறர் துணையின்றி உரிய மதிப்போடு வாழ வேண்டும் என நினைக்கின்ற கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறிய பக்கத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த புரிதல் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் அருகில் இருக்கக்கூடிய உடல் குறைபாடு கொண்டவர்களை நேர்மையாக அணுகுவதற்கு உதவக்கூடும். உண்மையில் அவர்களுக்காக பேச யாருமே இல்லை. உலக சுகாதார நிறுவனம் கணக்கின்படி 130 கோடி பேர் உலகில் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதாவது மனித இனத்தில் ஆறு பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் வாழ நேரிடுகிற சூழல் நிலவுகிறது.

எனவே இதைப் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகள் மிக இயல்பாக மற்றவர்கள் போல வாழ்வதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாடும் எவ்வளவு தாய்மை உள்ளதோடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நாம் வாழும் நாட்டின் மீது எதுபோன்ற மதிப்பு ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள். அங்கே முடியாதவர்களுக்கென தனி நடை பாதைகள். உதவுவதற்கான நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள். தாழ்ந்த தளம் கொண்ட பேருந்துகள். படிக்கட்டுகள் இல்லாத அலுவலகங்கள். கண்ணியமாக நடத்தும் சமூகம், என மாற்றுத்திறனாளிகளுக்கு மேலைநாடுகள் சொர்க்கம் தான். இங்கே எளிதாக வசவு சொற்களில் கூட மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்துகின்ற உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்ற சொற்களை மிக எளிதாக பயன்படுத்தி விடுகிறார்கள். இதுவும் சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும். எப்படி சாதியை சொல்லி சக மனிதனை இழிவாகப் பேசுவது குற்றமோ அதே போலத்தான் உடல் குறைபாடுகளை முன்வைத்து ஒரு மனிதனை வசை பாடுவது. இதற்கான சட்டத்திருத்தமும் இயற்றப்பட வேண்டும் . பொது வழக்கில் மிக எளிதாக பயன்படுத்தப் படும் உடல் குறைபாடுகளை முன்வைக்கிற சொற்கள் முற்றிலுமாக மனிதப் பழக்கத்தில் இருந்து அகல வேண்டுமெனில் உரிய சட்ட திருத்தம் இயற்றப்பட வேண்டும்.

முடிவாக சொல்வது இதுதான்.

.

கண்ணியமாகவும் மதிப்புடனும் ‌உரிமையுடனும் உங்களோடு எல்லா இடங்களுக்கும் வந்து சரிநிகர் சமமாக வலிகள் இல்லாமல் வாழ வேண்டும் என உங்கள் மத்தியில் வாழ்கின்ற சிலர் நினைக்கிறார்கள். அவர்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம். அவர்களும் மகிழ்வுடன் வாழ இந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இது போன்ற பதிவுகளின் நோக்கம்.

இது குறித்து இன்னும் விரிவாக போர்த்தொழிலில் பேசியிருக்கிறேன்.
அதற்கான இணைப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

இதில் நான் பேசியுள்ள விவரங்கள் அனைத்தும் முக்கிய விவாதப் பொருளாக மாற வேண்டும் என விரும்புகிறேன். அதன் மூலமாக பல நல்ல மாற்றங்கள் நடக்கக்கூடும்.

அதன் முடிவில் சொன்னது தான் இதன் முடிவிலும்.

அவர்கள் கேட்பது அனுதாபம் அல்ல.உரிமை !!

( நேற்று முழுக்க இது குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் நேற்று டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம். )

♥️

மணி செந்தில்.

கணக்கு மாறா காலத் தொடர்ச்சி

எப்போதுமே நவம்பர் 26 , 27 ஆகிய இரண்டு தினங்கள் கடுமையான மன அழுத்தத்திற்குள் சிக்கிக் கொள்ளும் நபர்தான் நானும். நமக்காக உயிரை விட்டவர்களின் நாளில் மனம் கொள்ளும் ஆழ்ந்த குற்ற உணர்வின் இன்னொரு வடிவம் தான் அந்த மன இறுக்கம். அந்தக் கார்த்திகை மாதத்திற்கான குளிர், எப்போதும் மழை பெய்வதற்கான காலநிலை என அந்தக் கார்க் காலச் சூழலும் மனதிற்குள் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தும் காரணிகள் நம்மைச் சுற்றி இருக்கும். அப்படித்தான் இந்த முறையும்.

இந்த முறை கூடுதலாக சுற்றி நிகழ்கிற அரசியல் குழப்பங்கள், ஊடகங்கள் நடத்துகிற திட்டமிட்ட கருத்து உருவாக்கங்கள்‌ போன்றவற்றால் கொஞ்சம் தளர்ந்திருந்தேன்.

லட்சியவாதங்களின் மேன்மையை இந்தச் சமூகம் ஏன் உணர மறுக்கிறது என கோபம் வேறு. எப்போதும் நம் தலைவரின் முகம் இது போன்ற பலவீனங்களில் இருந்து என்னை எப்போதும் காப்பாற்றிவிடும். அவர் நிரம்பி இருக்கிற ஒரு இடத்திற்குள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து தான் காரைக்குடியின் எல்லையில் அமைந்திருந்த அந்த மாவீரர் திடலுக்குள் நுழைந்தேன்.

பிரம்மாண்டமான திடல். உண்மையில் புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை உறவுகள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். கடுமையான திட்டமிடல். மிகப்பெரிய மின்னணு ஒளி கட்டவுட்டில் மின்னிக் கொண்டிருந்தார் நம் தலைவர். சுற்றிலும் நூற்றுக்கணக்கான நம் இனத்தின் விடுதலைக்காக மா வீரத்தை விதைத்த குலசாமிகள் பதாகைகளில் காலத்தின் சாட்சிகளாக உறைந்து இருந்தார்கள்.

திடல் முழுக்க கடுமையான லட்சிய இறுக்கம்.சகஜம் ஆகுவதற்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் சிரித்துப் பேசியும் சரியாக வரவில்லை. என்னருகில் தேடி வந்து அமர்ந்து கொண்டாள் என் தங்கை சுனந்தா. அவளும் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாள். இன்னொரு புறம் எங்கள் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன்.அவர் இலட்சியவாதங்களின் உதாரண மனிதர். இப்படி பலரும் உணர்வுகளின் ஒரே ஒத்திசைவில் அமர்ந்திருக்க, இறுக்கி கட்டப்பட்ட தோலில் அறைய, தொடங்கிய பறை இசை இன்னும் எல்லோரையும் மேலும் உணர்வின் இறுக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

நண்பர்கள் பலரை அரங்கத்தில் சந்தித்தப் போது புன்னகைத்து கைகுலுக்கி கொண்டாலும் எல்லோரும் இதே போன்ற மனநிலையில் தான் இருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.அப்போதுதான் அண்ணன் என்ற அந்தக் கனவு மனிதன் உயர்த்தும் கரங்களோடு உள்ளே நுழைந்தான்.‌ எப்போதுமே நம் மன உணர்வுகளின் அலைவரிசையை அந்த மனிதன் அறிந்து வைத்திருப்பது தான் இதுவரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அதிசயம். நம் கேள்விகளுக்கான பதில்களை அவரது அனல் மொழி கொண்டிருக்கும். அந்த நம்பிக்கையை ஒருபோதும் அண்ணன் தகர்த்ததில்லை. சந்திப்பிற்காக அருகில் சென்று நானும் தம்பி ஆனந்தும் கை கொடுத்தோம். மென்மையாக என்னை பார்த்து சிரித்து “உன்னை நான் அறிவேன்” என்பது போல ஒரு பார்வை.

6:00 மணி கடக்க தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான ஒரே அலைவரிசையில் கூடிய அந்தக் கூட்டம் பெரும் அமைதிக்கு உள்ளானது. அந்த அமைதி ஒரு கம்பீரம். ஒரு தேர்ந்த ராணுவ அணிக்கு வாய்க்கும் நேர்த்தி. அண்ணன் *ஈழ* தேசியக் கொடியை ஏற்றத் தொடங்கினார். கரிகால் சோழனும், ராசராசனும் அரசேந்திரனும் ஏந்திய புலிக்கொடி, ஒரே சமயத்தில் இமயத்திலும் ஈழத்திலும் பறந்த கொடி, எம் தலைவரும் எம் குலசாமிகளும் உயிரென சுமந்த கொடி “ஏறுது பார் கொடி ஏறுது பார்” என வானை நோக்கி ஏறி வானில் நிற்கும் எம் *மா* வீரர்களை நோக்கி ஏறி சிலிர்த்து பறந்தது.

பிறகு நாம் தமிழரின் கொடி. அதற்குப் பிறகு மீண்டும் கனத்த அமைதி. அந்த ஐந்து நிமிடங்களில் எங்கோ தூரத்தில் கேட்ட ஒரு சிறு குழந்தையின் சிணுகங்கலான அழுகைக் குரல் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

எல்லோரும் அமைதியாக உறைந்து இருந்தோம். அண்ணன் மட்டும் எழுந்து சில தங்கைகளோடு சுடரேற்ற நடந்துச் சென்றார். தாயக கனவினில் என்ற அந்த பாடல் ஒலிக்க தொடங்கிய அந்த நொடி.. தலையை குனிந்த என்னால் நிமிர முடியவில்லை.

நிமிர்ந்து பார்த்த போது எரிந்த தீ கணங்குகளுக்கு பின்னால் இறுகிப்போயிருந்த அண்ணனின் முகம் தெரிந்தது.அதற்குப் பிறகு வரிசையாக காணொளி காட்சிகள். ஒவ்வொன்றும் கடந்த துயர வரலாற்றின் பேராவணங்கள். மா *வீரர்களைப் பற்றிய பாடல், சிரஞ்சீவி மாஸ்டர் உருவாக்கத்தில் *செம்மணி புதைகுழிகளைப் பற்றிய காணொளி பாடல், தம்பி முரளி மனோகரின் “தேசமே” பாடல் என ஒவ்வொன்றும் நம்மை உணர்வின் உச்ச நிலைக்கு ஆழ்த்தியது.

அந்த உணர்வின் உச்சத்திலேயே அண்ணன் பேசத் தொடங்கினார். நேற்று நிகழ்ந்தது ஒரு கூட்டத்தின் பேச்சல்ல. அது உணர்ச்சியின் பேரலை. “தன் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை போர்க்களத்திலேயே தேச விடுதலைக்காக பலி கொடுத்தவன்‌ என் தலைவன்” என அவர் முழங்கியபோது என் கண்கள் நிறைந்து வழியத் தொடங்கின. பக்கத்தில் அமர்ந்திருந்த தங்கை சுனந்தா அழுதுவிட்டாள்.

அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் போர்க்கள சதிராட்டம். சத்தியத்தின் ஆவேசம். வஞ்சகத்தால் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்தில் மிஞ்சி இருக்கும் வீரன் ஒருவனின் வஞ்சினம். காயம் பட்டப் புலியின் அடங்காத சீற்றம்.அந்தக் குரலை நான் எங்கேயோ வரலாற்று வீதியில் கேட்டது போல எனக்கு நினைவு.

ஆமாம். காளையார் கோவில் காட்டில் இறுதி யுத்தத்திற்காக தயாரான சினம் கொண்ட சின்ன மருதுவின் குரல் தான் அது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுற்றி வளைக்கப்பட்டபோது ஒரு சில மெய்க்காப்பாளர்களுடன் இருந்த திப்பு சுல்தான் இறுதியாக முழங்கிய வீர முழக்கம் தான் அது.

அவ்வளவு செறிவு. அவ்வளவு உறுதி.

இறுக்கி கட்டப்பட்ட தெறிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கணைகள் போல அவரது சொற்கள் ஒவ்வொன்றும் அங்கே கூடியிருந்தோரின் ஆன்மாவின் குத்திக் கிழித்தன. ஒரு சின்ன சலசலப்பு இருக்க வேண்டுமே.. ஒரு பெருமழைக்கு முன்னால் நேரிடும் கனத்த அமைதி போல அந்த மனிதனின் சொற்களுக்கு முன்னால் நாங்கள் கலங்கிய கண்களோடும், சினமேறிய மனதோடும் அமர்ந்திருந்தோம்.

கூட்டம் முடிந்தது. பெரிதாக யாரும் பேசிக் கொள்ளாமல் அந்த இடத்திலிருந்து புறப்பட்டோம். சென்று கொண்டிருக்கும்போது அண்ணன் சீமானிடமிருந்து அழைப்பு. “உங்கள் ஆன்மாவின் குரல் அண்ணா இது.. ” என்று நெகிழ்ந்தவாறே சொன்னேன். அடுத்த அழைப்பில் வந்த தங்கை சுனந்தா ” அண்ணா! அண்ணன் உடம்பில் தலைவர் புகுந்து விட்டார். அது தேசியத் தலைவரின் சத்திய ஆவேசம் அண்ணா !” என்று சொன்னாள்.

இந்த இரண்டில் எது ? என அமைதியாக மகிழுந்தில் சென்று கொண்டிருக்கும் போது யோசித்த போது தான் எனக்கு ஒன்று புரிந்தது.

இந்த இரண்டும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். என்ற உண்மை தான் அது.

அண்ணனின் ஆன்மக் குரலில் தான் தலைவர் நித்தியமாய் ஜீவித்திருக்கிறார் ‌.

அது கணக்கு மாறா காலத் தொடர்ச்சி.

– மணி செந்தில்.

யாருக்கும் அவனைத் தெரியாது..!

அவன் எளியவன். சாதாரணன். மேடைகளின் வெளிச்சத்தில் ஒளிரும் நட்சத்திரமல்ல அவன்.‌ அடுக்கடுக்காய் செந்தமிழ் பேசும் சொற்களுக்கு சொந்தக்காரன் இல்லை அவன். அவன் எளியவன். சாதாரணன்.

அவனை நீங்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் பார்க்கலாம். ஏதோ உயரத்தில் ஏறிக்கொண்டு கட்சியின் கொடியை அல்லது தோரணத்தை கட்டிக் கொண்டிருப்பான். அதற்கு முந்தைய நாள் இரவில் சுவரொட்டி ஒட்டுபவரோடு அலைந்து திரிந்து சுவர்களை தேர்ந்தெடுத்து இருப்பான்.‌ அண்ணன் சீமானின் முகம் உயரத்தில் மின்ன வேண்டும் என்பதற்காக உயரமான சுவற்றில் ஏறத் தயங்கும் சுவரொட்டுபவரோடு வாக்குவாதம் செய்து அவனே அந்த சுவற்றின் உச்சத்தில் ஏறி சுவரொட்டி ஒட்டி இருப்பான். மேடையில் விரிக்கப்படும் விரிப்பினை அவன் தூசி தட்ட உதறும்போது , அந்த தூசி பறத்தலில் புன்சிரிப்போடு மிளிரும் அவன் முகம் காணலாம்.‌

நாற்காலிகளை தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து பார்த்து ஒவ்வொன்றாய் போடும்போது, யார் ஆலோசனை சொன்னாலும் அதை சிரிப்போடு ஏற்றுக் கொண்டு அந்த நாற்காலிகளை போட்டுக் கொண்டிருப்பான். அவர்கள் சிறியவர் பெரியவர் என்ற பேதம் எல்லாம் அவனுக்குத் தெரியாது. அவர்கள் தன் கட்சிக்காரர்கள். அவர்கள் சொன்னால் அவன் கேட்பான்.

கூட்டம் தொடங்கிய பிறகு அவனை நீங்கள் பார்க்க முடியாது. மேடைக்கு பின்னால் நின்று கொண்டு , ஓடும் ஜெனரேட்டர் சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என பதட்டமாய் பார்த்துக் கொண்டிருப்பான்.பேசி முடித்தவர்களுக்கு தாகம் தணிக்க தண்ணீர் பாட்டில்களை வாங்கி மேடைக்கு முன்னால் இறக்கி வைப்பான். கூடுதலாக நாற்காலிகள் வேண்டுமா என கேட்டு அதற்காக நாற்காலிகள் எடுக்க ஓடிக் கொண்டிருப்பான்.கூட்டம் முடிந்த பிறகு எல்லோரும் கலைந்து விடுவார்கள். அவன் தனிமையாய் நின்று கட்சிக்கொடி அவிழ்த்து கொண்டிருப்பான். தயங்கி யாராவது நின்றால், “நீங்கள் போங்கள் நான் கட்சிக் கொடியை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்..!” என்று சொல்வான். அந்த புலிக்கொடி மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.

எப்போது கூப்பிட்டாலும் ஓடிவரும் தொலைவில் நிற்பான். ஆனால் தொலைவில்தான் நிற்பான். ஒருபோதும் வெளிச்சத்தின் வீதிகளுக்கு தன்னை விற்றவன் அல்ல அவன். நிருபர்கள் பேட்டி எடுக்கும் போது அண்ணனுக்கு பின்னால் நின்று போட்டி போட்டுக் கொண்டு முகங்களை காட்டி முகவரி தேடுகிறவன் அல்ல அவன். தூரமாய் நின்று அண்ணன் சீமானின் மொழிகளை அப்படி ரசிப்பான். வாடகைக்கு வண்டி ஓட்டும் போது ஓய்வெடுக்கும் நேரங்களில் கூட அண்ணன் பேச்சு தான் அவன் அலைபேசியில் ஓடிக்கொண்டிருக்கும்.

எல்லா கட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் முதல் ஆளாய் பேருந்திலோ, வேனிலோ ஏறுபவன் அவனாகத்தான் இருப்பான். அந்தப் பயணம் சென்று முடியும் வரை அந்த பேருந்தில் அல்லது வேனில் பயணிக்கின்ற எல்லோருக்கும் அவன் தான் தண்ணீர் வாங்கி தருவதிலிருந்து, உதவியாய் நிற்பதிலிருந்து, இரவு நேர பயணத்தின் போது ஓட்டுநருக்கு பேச்சுக் கொடுத்து வருவதிலிருந்து, அவன் தான் சகலமும்.

இத்தனைக்கும் அவனுக்குத் தினந்தோறும் அவன் வைத்திருக்கிற டாடா ஏஸ் வண்டி ஓட்டினால் தான் வருமானம். ஆனால் பெரும்பாலும் கட்சி வேலையின் போது அந்த வருமானம் அவனுக்கு கிடைக்காது. அதை உணர்ந்து யாராவது எரிபொருள் போட பணம் வைத்துக் கொள் என கொடுத்தால், அதை வாங்க மறுத்துவிட்டு இது என் கட்சி என் உழைப்பு இன்று மௌனமாக கடந்து விடுவான்.

உண்மையில் அவனை யாருக்கும் தெரியாது. அது பற்றி அவனுக்கும் எந்த குறையும் இல்லை. அவன் பணி அவன் நேசித்த அண்ணனுக்கும் அமைப்பிற்கும் புலிக்கொடிக்கும் நேர்மையாக இருப்பது.

ஒருமுறை அண்ணன் சீமான் கும்பகோணம் வந்திருந்த நாளில் .. எதிர்பாராத விதமாக அவனது தந்தையார் காலமாகிவிட்டார். அண்ணன் தங்கியிருந்த விடுதிக்கு அருகே தான் அவனது வீடு. அண்ணன் வருகையின்போது இப்படி ஒரு துயரம் நடந்து விட்டதே என அவனுக்கு மிகப்பெரிய வலி. அதனால் யாரிடமும் சொல்லாமல் வீட்டு வாசலில் கூட எந்த அறிவிப்பும் செய்யாமல் அமைதியாக அவன் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டான். ஏதேச்சையாக அவனது வீட்டுக்குப் போன ஒரு கட்சி தம்பி இதை தெரிந்து கொண்டு தயக்கமாய் எங்களிடத்தில் சொல்ல, அண்ணன் சீமானுக்கு தகவல் தெரிந்தது. உடனே தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வாருங்கள் தம்பி வீட்டிற்கு போவோம் என வாகனத்தில் கூட ஏறாமல் நடந்தே கிளம்பி விட்டார்.

சென்னை சாலையின் ஓரத்தில் ஒரு இடிந்த சிறிய குடிசை வீடு. எந்த நேரமும் கீழே விழுந்து விடும் என்கிற அளவிற்கு பழுதான சுவர்கள். சாலையில் வேகமாக வரும் ஏதோ ஒரு வாகனம் கண நேரத்தில் தவறினால் வீட்டின் சுவற்றில் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்படுகின்ற ஆபத்தோடு இருக்கின்ற வீட்டில் தான் குடும்பத்தோடு அவன் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான். இரண்டு சிறு ஆண் குழந்தைகள். தன்னைப் போலவே உலகம் அறியா அப்பாவி மனைவி. இதுதான் அவனது உலகம்.‌ அதைத் தாண்டி அவன் சம்பாதித்தது நாம் தமிழர் கட்சியை தான்.

அண்ணன் அந்த வீட்டை பார்த்து ஒரு நொடியில் உறைந்துவிட்டார். இந்த இடத்திலிருந்து அவன் என்னிடத்தில் வந்திருக்கிறானே என அண்ணன் சொன்னபோது அவரது குரல் தழுதழுத்தது. அதனை மாற்ற வேண்டும் என்றார். அந்த வீட்டை பொறுத்து ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்ற விபரம் அவரிடம் தெரிவித்த போது, வழக்கை சீக்கிரம் முடித்து தம்பிக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அண்ணன் சொன்னார். அவனுக்கோ அண்ணனைப் பார்த்து மிகப்பெரிய பதட்டம். அவனுடைய தந்தைக்கு அண்ணன் இறுதி வணக்கம் செலுத்தி அவனை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு உடல் நடுங்கியது. அண்ணன் சென்ற பிறகு.. இதைவிட எனக்கு என்ன கொடுப்பினை இருக்கிறது.. என் அண்ணன் என் வீட்டிற்கு வந்து விட்டார். இனி என் உடலும் வாழ்வும் உயிரும் நாம் தமிழர் கட்சிக்கே ! என உறுதி கூறி பெருமைப்பட்டான்.

அதிலிருந்து இன்னும் மறைவாக ஆனான். அண்ணனுக்கே தன்னை தெரிந்து விட்டது, இனி என்ன யாருக்குத் தெரிய வேண்டும் என நினைத்தானோ என்னவோ.. தனியாக அலைந்துக் கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைத்துக் கொண்டே இருந்தான். பொறுப்புக்காக சண்டை போட்டவர்கள், பொறுப்பில்லாமல் சண்டை போட்டவர்கள் , அங்கீகாரங்களுக்காக அலைந்தவர்கள், முகவரிக்காக முட்டியவர்களுக்கு மத்தியில் ‌ அவன் எதையும் எதிர்பார்க்காமல் ‌ தன்னுடைய அண்ணன் சீமானையும் அவர் தூக்கி சுமந்த புலிக்கொடியையும் நேசித்துக் கொண்டு அலைந்து கொண்டே இருந்தான்.

நேற்றுக் கூட என்னை வந்துப் பார்த்தான். அதற்கு முந்தைய வாரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏன் வரவில்லை.. எனக் கேட்டேன். உடல்நிலை சரியில்லை அண்ணா ! என்றான் . நின்றுக் கொண்டே இருந்தான். அருகிலிருந்த தம்பி Lingadurai K அமருங்கள் அண்ணா ! என கட்டாயப்படுத்தி அமர வைத்தான்.மாநில பொறுப்பு உனக்கு வழங்கப்படவில்லை என ஏதேனும் வருத்தமா என்றும் கூடுதலாக கேட்டேன். “அண்ணா! இது என் கட்சி. இதில் எனக்கு என்ன அண்ணா பொறுப்பு…?பொறுப்புடன் இருப்பது தான் பொறுப்பு..!” என்றான் அவன். பிறகு நீண்ட நேரம் நிற்கவில்லை. சென்றுவிட்டான். ஒரு மீண்டு வராத பயணத்தின் விடைபெறுதலுக்காக அவன் வந்திருக்கிறான் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

இன்று காலை கடும் காய்ச்சலில் படுத்திருந்த எனக்கு தம்பி ஆனந்த் அழைத்தான். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவன் காலமானான் என செய்தி கேட்டு நான் திகைத்துப் போனேன். அவன் வீட்டிற்கு சென்று அவன் உடலுக்கு புலிக்கொடி போர்த்திய போது.. அவனது மனைவி சொன்னார். “உங்க புலிக்கொடி உங்ககிட்டயே வந்துருச்சிங்க என்று..” கூடியிருந்த எல்லோரும் கத்திக் கதறினோம்.

இறுதிச் சடங்கிற்கான முழு பொறுப்பினையும் நாம் தமிழர் கட்சியே ஏற்றுக் கொள்வதென முடிவெடுத்தோம்.

பலரிடமும் இந்தத் துயர செய்தியை நான் பகிர்ந்த போது ஒன்றை உணர்ந்தேன். அவனை யாருக்குமே அதிகம் தெரியவில்லை. எந்தவித அங்கீகாரமும் தேடாமல் புலிக்கொடி சுமந்து இலட்சியத்திற்காக அவன் வாழ்ந்திருக்கிறான்.

அண்ணன் சீமானிடம் சொன்னேன்.‌ அவருக்கு மட்டும் அவனை மிகச் சரியாக நினைவிருந்தது. உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளாமல் இப்படி ஆகிவிட்டானே என்று சொல்லி அவர் கலங்கினார்.

அவனைப் போல எண்ணற்றவர்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல், அடையாளமும் தெரியாமல் புலிக்கொடி பறக்க தமிழ்க்குடி சிறக்க, உதிரத்தை வேர்வையாக சிந்தி, உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிச்சங்களில் இல்லை அவர்கள். இந்தத் துயர் இருட்டில் நின்று கொண்டு சொல்கிறேன்.

“அவர்கள் தான் கட்சிக்கான உண்மையான வெளிச்சங்கள். “

அவனை யாருக்குமே தெரியவில்லை என்றாலும்.. இந்த இரவில் அவன் நெஞ்சாரப் போர்த்திருக்கும் அவன் நேசித்த புலிக்கொடிக்கு அவனைத் தெரியும்.

அதுதான் அவன் நிறைவு. அவன் வாழ்வு.

இப்படி என் தம்பி ஜஸ்டினை போன்ற யாருக்கும் தெரியாத எண்ணற்றவர்களால் தான் உயர உயர பறக்கிறது புலிக்கொடி.

ஜஸ்டின் தமிழ்மணி ( வயது 46) . டாட்டா ஏஸ் ஓட்டுநர்/கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் முழு நேர களப்பணியாளராக பணியாற்றியவர்/ அமைப்பின்ஆணிவேர்/தற்போது புதிய கட்டமைப்பில் மாவட்டத் தலைவர்.

அம்மாவிற்கு..

♥️

அந்தக் காலகட்டங்களில் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அப்போது வெறும் 16 வயது நிரம்பிய ஏறக்குறைய ஒரு சிறுமியாக இருந்தவளுக்கு ஒரு திருமணம். அடுத்த 10 மாதங்களில் அந்த சிறுமி கையில் நோயுற்ற ஒரு குழந்தை.

பிறந்த போது நன்றாகத்தான் இருந்தது.ஆனால் 10 மாதத்திற்கு பிறகு வந்த ஒரு காய்ச்சலில் அந்தக் குழந்தைக்கு தலைக்கு கீழே எந்த உறுப்பும் இயங்கவில்லை. அன்று அழ ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அடுத்த 25 வருடங்கள் இருவருக்கும் அழுகை மட்டும் தான்.

ஆனால் ஒரு சின்ன சிறிய கிராமத்தில் பிறந்த அந்த சிறுமிக்கு மட்டும் ஒரு அசாத்திய நம்பிக்கை. எதுவுமே இயங்காத அந்த குழந்தையை வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் வாழவைப்பது. ஓட முடியாத அந்த குழந்தைக்கு பதிலாக அவள் ஓட தொடங்கினாள்.‌ குழந்தை அழுகையை நிறுத்தியது. எப்போதும் அதிசயக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்த அம்மாக்களுக்கு மத்தியில் .. அவள் தன் குழந்தைக்காக ஒரு உலகத்தை உருவாக்கத் தொடங்கினாள்.

அந்த உலகத்திற்கும்… வழக்கமாக வாழும் இந்த பூமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த உலகத்தில் அந்தக் குழந்தைதான் கதாநாயகன். அவன் மீது எல்லோரும் அன்பாக இருப்பார்கள். அவனை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். அவனை எல்லோரும் கொண்டாடுவார்கள். அவனை யாரும் புண்படுத்த மாட்டார்கள். அம்மா உருவாக்கிய அந்த உலகத்தின் ராஜா அவன்.அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் அந்த உலகம்.

இப்போதும் அம்மாவின் மடியை தேடி அலைகிறான். தூங்கி விழித்த உடன் அம்மாவின் முகம் காண தேடுகிறான். முகம் இல்லையேல் பயப்படுகிறான். அம்மாவைப் பார்த்தவுடன் தான் இயல்பாகிறான். அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் ஆக்சிஜன். அம்மா இல்லையேல் அவன் இல்லை.

ஒரு தீபாவளிக்கு அவனை சென்னை அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். சொல்லப்போனால் அந்த மருத்துவமனையில் தான் அவன் வாழ்ந்துக் கொண்டிருந்தான். உலகமே வெளியில் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில் இவன் மருத்துவமனையில் ஊசி மாத்திரைகளோடும் வலி துயர்களோடும் போராடிக் கொண்டிருந்தான்.

அம்மா கும்பகோணத்தில் இருந்து வந்து விட்டாள்.தன்மகன் இல்லாத தீபாவளி அவளுக்கு எங்கே… அவன் இருக்கும் இடம் தான் அவளுக்கு தீபாவளி. பண்டிகை எல்லாம். அவனது சிரிப்பில் தான் அவளுக்கு மத்தாப்பு பூக்கும்.‌ வான வேடிக்கைகள் நடக்கும்‌. அந்த மருத்துவமனை வளாகத்திலேயே இருந்த சிறு விடுதியில் அப்பா அம்மா அவன் மூவரும் சிறிய மத்தாப்புகளை கொளுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். வலியாலும் நோயாலும் துடித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடுகிற குடும்பம் அது. அவர்களுக்கு இருக்கிற இடம் பொருட்டல்ல.. எங்கே இருந்தாலும் தங்களுக்கென ஒரு வானத்தையும் அங்கே மின்னும் சில நட்சத்திரங்களையும் பால் வழியும் ஒரு நிலாவினையும், கூடவே சில மத்தாப்புகளையும் அவர்களே உருவாக்கிக் கொண்டு தீபாவளியை கொண்டு வந்து விடுவார்கள்.
உலகம் எங்கோ வெளியில் இருந்தது. அவர்களுக்கு அவர்கள் உலகத்தில் அவர்களுக்குள்ளாக அந்த ஒரு தீபாவளி.

அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்தன. எப்போதும் இந்த உலகத்தோடு போட்டி போடுவதற்காக அந்த மகன் மிகவும் ஆசைப்படுவான். ஆனால் தோற்றுவிடுவான். ஆனால் அந்த அம்மா தோற்கமாட்டாளே.. ! அம்மா மகனை தயாரித்துக் கொண்டே இருந்தாள். இந்த உலகத்தோடு போட்டி போட.. இந்த உலகத்தில் வாழ.. அம்மா அவனை கடும் உழைப்போடு தயாரித்துக் கொண்டே இருந்தாள். எதுவுமே முடியாத, தலைக்கு கீழே எதுவுமே இயங்காத அவனுக்கு பேச கொடுத்தாள்.‌ வாழ கற்றுக் கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவன் இயங்கத் தொடங்கினான். ரசிக்க, எழுத, காதலிக்க, வெற்றியில் கொண்டாட, தோல்வியில் துவள, அவனை தயாரித்து துளித்துளியாய் தன் மகனை உருவாக்கினாள். மகனும் அனைத்தும் செய்தான். ரசித்தான். கவிதைகள் எழுதினான். காதலித்தான். இசையை கேட்டு இமைக்காமல் இருந்தான். அவனே ஒரு கார் வாங்கி ஓட்டினான். அம்மா மீதே காரை ஒரு முறை மோதி விட்டான். இனி காரே ஓட்டுவதில்லை என முடிவெடுத்தான். ஆனால் அம்மா அப்படி இல்லையே.. தன் மீது மோதினாலும் மீண்டும் எழுந்து மகன் கார் ஓட்டியாக வேண்டும் என்பதில் அவள் உறுதியாக நின்றாள். அவனும் அப்படியே செய்தான். பயணப்பட்டு பார்த்தான். அடிகள் வாங்கினான். தோல்வியின் சுகம் புரிந்தான். வெற்றியின் போதாமை அறிந்தான். திருமணம் செய்தான். அவனைப் போலவே இரண்டு நகல்களை தயாரித்தான். அந்த இரண்டும் அம்மாவிடம் தான் அம்மா மடியில் தான் கிடக்கின்றன. இப்படி அனைத்திலும் அம்மா இருந்தாள்.

அவன் நினைத்தான். இந்த உலகத்தில் நாமும் சராசரியாய் மாறிவிட்டோம் என. இல்லை இல்லை. ஒரு கட்டத்தில் அவன் அந்த ரகசிய உண்மையை அறிந்து கொண்டான். இந்த உலகத்தில் தன்னால் மற்றோர் போல இயல்பாக வாழ முடியவில்லையே என ஏங்கித் தவித்த அந்த மகனுக்காக அந்த அம்மா மீண்டும் ஒரு நகல் உலகத்தை தயாரித்து இருக்கிறாள் என்ற உண்மை. அதில் அவனை வாழ வைத்திருக்கிற உண்மைப் புரிந்து அந்த மகன் இப்பொழுது சிரித்துக் கொள்கிறான். அது ஒரு வகை ஞானம் தான். உண்மைதான். இதுவும் அம்மா உருவாக்கிய உலகம்தான்.

இறுதியாக அந்த மகன் புரிந்து கொண்ட ரகசியம் என்னவெனில்… அம்மா உருவாக்கிய உலகத்தில் மட்டும் தான் அவனால் வாழ முடியும். சொல்லப்போனால் அம்மா தான் உலகம்.

கடைசி வரை அம்மா உருவாக்கிய அந்த உலகத்தில்.. அவள் கதகதப்பில் அவன் வாழ்ந்துக் கொண்டே இருக்கிறான்.

வாழ்வான். !

மணி கலையரசி

வாழ வைக்கும் தெய்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

♥️

மணி செந்தில்.

( இதனடியில் ஏஐ தொழில்நுட்பத்தில் மிகவும் நேர்த்தியாக ஒரு காட்சி தயாரித்து கொடுத்த எனதுத் தம்பி Ar Anbu Rajesh Ntk விற்கு எனது பேரன்பு நன்றி. )

சீமான் உருவாக்கிய பேராயுதம்!

நடந்து முடிந்த மக்கள் மன்றத்தில் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எல்லா கட்சிகளுக்கும் ஆழமான அதே சமயத்தில் அசத்தலான பதிலடி கொடுத்த காட்சியை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அதே சமயத்தில் இது போன்ற ஒரு ஆயுதத்தை உருவாக்கிய அந்த வித்தைக்காரனையும் நினைக்காமல் இந்த பெருமிதத்தை நாம் கொண்டாட முடியாது.கட்சியின் தொடக்க காலங்களில் மிகவும் கூச்ச உணர்வு கொண்டவனாக , எப்போதும் பின்புறத்தில் நிற்பவனாக இருந்த கார்த்திக் , எப்படி இப்படி ஆனான் அல்லது ஆக்கப்பட்டான் என்பதற்கு நான் எல்லாம் சாட்சி.

அண்ணன் சீமான் தான் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினார். அவனிடத்தில் பொறுப்புகளை கொடுத்து பழக்கப்படுத்தினார். கூச்ச உணர்வை கைவிட்டு மேடையிலே பேச முன்னிறுத்தினார். சிறுசிறு பிழைகளை கூப்பிட்டு திருத்தினார். புத்தகங்களை வாசிக்க சொல்லி அறிவுறுத்தினார். பல நேரங்களில் புத்தகங்களை அவரே பரிந்துரைத்தார். எங்களைப் போன்றோரிடம் பேசும் போது கார்த்தி எப்படிப்பட்ட முக்கியத்துவம் நிரம்பியவன் என்பதை அடிக்கடி எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

அவனும் அண்ணன் சொன்னதை கேட்டு அப்படியே உருவானான். குறிப்பாக புத்தக வாசிப்பு. திராவிடத்தை எதிர்த்து பேச வேண்டும் என்றால் அந்த திராவிடம் சார்ந்த அனைத்தையும் முதலில் வாசித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தான். ஐயா மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா அல்லது வழிமாற்றியதா..? ” என்ற நூலை அவன் வாசித்திருந்த முறைமையை நான் கவனித்து இருக்கிறேன்.ஒரு பக்கம் விடாமல் அடிக்குறிப்புகள் இட்டு அந்த புத்தகத்தையே முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தான். அதேபோல இந்து தமிழ் திசை வெளியிட்ட ” மாபெரும் தமிழ் கனவு ” என்ற நூலை எங்களுக்கெல்லாம் முன்னதாகவே வாங்கி முற்றிலுமாக குறிப்புகள் எடுத்து அதை தனது பேச்சில் தேவைப்படும் இடங்களில் பொருத்தி தனது பேச்சுத் திறமையை இன்னொரு வடிவத்திற்கு மாற்றினான் தம்பி இடும்பாவனம் கார்த்திக்.

அதற்குப் பிறகு பல புத்தகங்கள். இன்றும் நீங்கள் யாராவது அலுவலகத்திற்கு செல்லும் போது பார்க்கக்கூடும். முற்றிலுமாக ஒரு சிறிய அறையில் ஒரு பெரிய புத்தக அடுக்குகளுக்கு நடுவே அவனது வாழ்க்கை அமைந்திருக்கிறது என. இதற்கு அவன் கை கொண்டது முழுக்க முழுக்க உழைப்பினை மட்டுமே. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அரசியல் என்பது முழு நேர வாழ்க்கை. நான் கூட அவனிடம் பரிந்துரைப்பேன். இலக்கியம் கவிதை சினிமா போன்ற பல்வகை பட்ட புத்தகங்களையும் வாசி என்று சொன்னால் எனக்கு அரசியல் புத்தகங்களை படிக்கவே நேரம் போதவில்லை அண்ணா என சொல்லிவிட்டு தவிர்த்து விடுவான்.

அந்த உழைப்பும், ஓர்மைப்பட்ட கவனமும் அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டலும் தான் அவனுடைய மக்கள் மன்ற பேச்சில் எதிரொலித்தது. அண்ணன் சீமான் அவனுடைய பேச்சினை மிகுந்த பெருமிதத்தோடு அவருடைய whatsapp ஸ்டேட்டஸ் இல் வைத்திருந்ததை கண்டேன் . இருக்காதா பின்னே.. எங்கோ முகவரி பெற்ற ஊரிலிருந்து எதுவுமே தெரியாமல் கூச்ச உணர்வோடு தயக்க மனப்பான்மையோடு வந்த ஒருவனை தாய் போல தத்தெடுத்து , அவனை கொஞ்சம் கொஞ்சமாக பட்டைத் தீட்டி இன்று இனத்திற்கான மாபெரும் கருவியாக உருவாக்கி இருக்கும் அண்ணன் சீமான் அவர்களின்‌ முன்கூட்டியே உணரும் அந்த மேஜிக் கணிப்புதான் … இடும்பாவனம் கார்த்திக் என்ற அந்த இளைஞனை உருவாக்கியது .

அவன் தொடங்கிய புள்ளியில் இருந்து இதை எல்லாம் நினைத்துப் பார்த்தால்… உண்மையில் அது அதிசயம் தான். ஆனால் அதிசயங்களை நிகழ்த்துவதற்கான வல்லமை எப்போதும் அற்புதனான அண்ணன் சீமானுக்கு உண்டு என்பதுதான் நாங்கள் எல்லாம் உணரும் மகத்தான நம்பிக்கை.

♥️மணி செந்தில்.

இந்த வாழ்வு உங்களுடையது !

நேற்று அதிகாலையில் என் மைத்துனர்

சே. பாக்கியராசனில் தொடங்கி நள்ளிரவு 11 மணி வரை நேரில் வந்தும், சமூக ஊடகப் பதிவுகள், மற்றும் அலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் எனக்கு பேரன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

குறிப்பாக எனது உயிர் அண்ணன் அண்ணன் செந்தமிழன் சீமான். மற்றும் என் அண்ணி கயல்விழி அவர்கள்.

தனி பதிவிட்டும், அழைத்துப் பேசியும் வாழ்த்தி மகிழ்ந்த என் அண்ணனின் அன்பின் துணைக் கொண்டு தான் இந்த உலகில் நான் வாழ பழகி இருக்கிறேன்.

அவரால்தான் இந்த மாபெரும் பேரன்பு உலகம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்தேன். அவரால் ஆனது நேற்று.அவரே என் தகுதி .

நேற்று நேரில் என் இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய கும்பகோணம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அன்புத் தம்பி கர்ணன் , மூத்த வழக்கறிஞர் மாணிக்கம் மற்றும் அவர்களோடு வந்த வழக்கறிஞர்கள் தம்பிகள், மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி, பாபநாசம் ,திருவிடைமருதூர் ,கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் ,

சமூக வலைதளங்களில் அழகழகான பதிவுகளை எழுதி என்னை வாழ்த்தி என்னை நெகிழ வைத்த என் தம்பி தங்கைகள் , அண்ணன்மார்கள் , உடன்பிறந்தார்கள் , மூத்தவர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

அன்பினால் என்னை மேன்மை செய்தோருக்கு ..

என் மனதின் அடியாழத்தில் இருந்து தெரிவித்துக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.. இறுதிவரை இந்த அன்பிற்கு தகுதி உடையவனாக என்றென்றும் வாழ முயல்வேன்.

எனது இந்த வாழ்வு உங்களுடையது .

நெகிழ்வான நன்றிகள் !

❤️

மணி செந்தில்.

தாரணா.. இப்படிக்கு யாரோ !

தாரணா..

உனக்கு கடிதம் எழுத

நான் யாரோ.

அந்த யாரோ

எழுதிக் கொள்வது

என்னவென்றால்.

கண்ணீரால்

அந்தக் கடலை

மேலும் உப்பேற்றாதே!

நிலமிழந்தவர்களின்

விழியோரங்களால்

அந்தக் கடல்

ஏற்கனவே உப்பேறிதான்

கிடக்கிறது.

கடலிலிருந்து

ஒரு சொட்டு நீலத்தை

துளி நீரிலிருந்து

பிரித்தெடுத்து

கலங்கும் விழிகளுக்குள்

விட்டுக் கொள்.

கடலைப் போலவே

எல்லையற்ற

உன் துயரத்தின்

ஒரு பாகம்

கடலில் கரையக்கூடும்.

மீண்டும் மீண்டும்

கடல் நீரை கைகளால்

துளாவு.

ஏதாவது உலவிக்

கொண்டிருக்கின்ற

சிறு மீன்கள்

உன் விரல்களை

முத்தமிடக்கூடும்.

அந்த

முத்தத்தின் ஈரம்

வெறிச்சோடிய

உன் தனிமைப்

பாலையை

கடக்கும் போது

உதடு நனைத்து

உயிர் காக்க கூடும்.

கணநேரம்

கண் சிமிட்டாமல்

எங்கோ தூரத்தில்

உன்னை கடக்கிற

அந்த ஒற்றை

வெள்ளைப் பறவையை

பார்த்து விடு.

அந்தப் பறவையின்

இறகில் தான்

மீள் எழுவதற்கான

நம்பிக்கையின்

செய்தி

எழுதப்பட்டிருக்கிறது

🔸

உன் தாய்நிலம்

பிரிந்து

கடலேறி வரும்

அந்தக் கண்ணீர்

நாளில்..

நீலம் பூரித்த

கடலுக்கு மேலே

ஒளிந்து கொண்டிருக்கும்

நட்சத்திரங்களை

நீ பார்த்திருப்பாய்.

திசையற்றவர்களுக்கு

அந்த நட்சத்திரங்கள் தான் உறவினர்கள்.

உயிர்நிலம் வலிந்து

பிடுங்கப்பட்ட அந்த இருட்டில்

அந்த நட்சத்திரங்கள் தான்

பூமியில்தான் நீ

இன்னும் இருக்கிறாய்

என உனக்கு அறிவிக்கும்

நம்பிக்கையின் சிமிட்டல்கள் !

🔸

தாரணா !

இப்போது நீ

புரிந்துக் கொள்வாய்.

நீ

தனிமையில் இல்லை.

நீ இல்லை என்றால்

இந்த கடல்தான்

தனிமையில்

தகித்திருக்கும்.

இழந்த

நம் நிலமும்

தனிமையில் இல்லை.

அங்கே விழுந்த

உதிரச் சொட்டுக்கள்

அசாத்திய தருணம்

ஒன்றுக்காக

காத்திருக்கின்றன.

இதுவரை

பூமி காணாத

ஒரு பெருமழை

பெய்யும்

நள்ளிரவு முடிந்த

விடியலில்..

தாய் நிலத்தில்

உறைந்திருக்கும்

உதிரச் சொட்டுக்கள்

உயிர்ப்பிக்கும்.

அந்த நொடியில்

சில்லிட்ட

புல்வெளியில்

உன் மென் பாதம்

நம் தாய் நிலத்தில்

படும் நொடியில்..

உதிர நிறத்தோடு

ஆயிரமாயிரம்

காந்தள் பூத்து

மலரும்.

பொழுது புலரும்.

🔸

இப்படிக்கு

யாரோ.

♥️

மணி செந்தில்.

தாரணா- 18 Miles கதைப்பாடலின் நாயகி.

18 Miles:

18 Miles. -வலிமிகுத் துயரின் பேரழகு.

———————————————————————

தமிழில் தனிப்பாடல் தொகுப்பிற்கான ‌ வரவேற்பு மிகக் குறைவு. அதற்கான முயற்சிகள் எப்போதாவது குறிஞ்சி மலர் போல தமிழில் நடக்கின்றன. எங்களது காலத்தில் சுரேஷ் பீட்டர்ஸ் -ன் ( சிக்கு புக்கு ரயிலே, டேக் இட் ஈசி ஊர்வசி பாடல்களை பாடியவர்) “மின்னலே” என்ற ஒரு ஆல்பம் வந்தது. அதில் “முகிலென மழையென” என்ற பாடல் உண்டு. அந்தத் தனிப்பாடல் மனதை மிகவும் கவர்ந்த பாடல்.

இளையராஜா இந்த வகைமையை பக்தி பாடல்களுக்கான ஒரு வழியாக பெருமளவு பயன்படுத்திக் கொண்டார். ரமண மாலை மூகாம்பிகை பாடல்கள் போன்றவை இந்த வரிசையில் வரும். மற்றபடி அவரது நத்திங் பட் விண்ட், ஹவ் டு நேம் இட் போன்றவை அவரது உச்சபட்ச கலாமேதமையை பறைசாற்றக் கூடியவை. திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை திரைப்பாடல்கள் சாராத அவரது தனிப்பாடல்களாக கேட்க முடிகிறது. ஏ ஆர் ரகுமான் அவர்களும் வந்தே மாதரம் போன்ற சில முயற்சிகள் செய்தார். தமிழில் தனிப்பாடல் அல்லது கதைப்பாடல் வகைமைக்கான முயற்சிகள் குறைவு என்பதுதான் பொதுவான கருத்து.

ஆனால் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இது போன்ற ஆல்பங்களுக்கான வரவேற்பு தனி. இந்தி கசல் தனி பாடல்களை நள்ளிரவுகளில் கேட்டு மகிழ்பவர்கள் கடவுளுக்கு அருகில் வசிப்பவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் மைக்கேல் ஜாக்சன் போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் சுயாதீன பாடல்கள் ( independent songs) மூலமாகத்தான் உலகத்திற்கு தெரிய வந்தார்கள். அப்படி தமிழிலும் அவ்வப்போது முயற்சிகள் நடந்தாலும் மனதில் பதியக்கூடிய ஒரு மாபெரும் பணியை 18 Miles குழுவினர் செய்திருக்கிறார்கள். இந்த முயற்சியை தமிழில் நாம் “கதைப்பாடல்” என வகைமைப்படுத்தலாம். ஆங்கிலத்தில் இதை Visual ballad என்றும் சொல்கிறார்கள்.

🔸

“நிலம் விழுங்கிய உன் கண்களின் முன்னே நிறுத்தப்பட்ட யுத்த ஊனம் நானென்று நீ அறிவாய்.

உன்னை யாரிடமும் நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.

ஆகவே நான் சொல்லத் தொடங்கினேன். “

என்ற அகரமுதல்வனின் வரிகளோடு தொடங்கும் போதே நாம் கனக்கத் தொடங்குகிறோம்.

கண்ணுக்கு எட்டிய தொலைவு முழுக்க நீர். பொங்கி பரவும் அலைகளின் ஊடே நிராதரவாய் கண்கள் முழுக்க கண்ணீரோடு ஒரு பெண். அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு ஆண்.. இப்படி தொடங்குகிறது 18 Miles.

தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையிலான அந்த 18 மைல்கள் தான் இந்தப் பாடலின் மையப் பொருள். ஒரு இன அழிவு எப்படி தனி மனிதர்களின் சுயத்தின் உள்ளே ஊடுருவி வலி மிக்க அனுபவமாய் வெளி வருகிறது என்பதை மிக ஆழத்தோடு இயக்குனர் சதீஷ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

காட்சியியல் அழகில் நுட்பமான பல உணர்ச்சிகளை வெளிக் கொணர தெரிந்த இயக்குனராக சதீஷ் விளங்குவது இந்தப் பாடலின் மூலமாக உறுதிப்படுகிறது. தாய் நிலத்தை இழந்து ஏதிலிகளாக தென்படும் ஏதோ ஒரு கரையில் ஒதுங்கி விட வேண்டும் என்ற வேட்கையில் மிதந்து வரும் உறவுகள் எப்படி எல்லாம் எதிர்கொள்ளப்படுகிறார்கள் என்பதை காட்சியில் பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றன. தாய் நிலத்தை விட்டு வெளியேறும் துயரம் தான் ‌ கடலளவு பெரிது. அதன் நீட்சி முடிவிலி என்பதை சொற்கள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கின்ற இயக்குனர் சதீஷ் ஏற்கனவே பேச்சுலர் என்கின்ற திரைப்படத்தை இயக்கியவர் என்கிறார்கள். அவருக்காக அந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

எல்லாவற்றையும் இழந்து துவளுகிற கரங்களுக்கு பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைத்து விடாதா என கைவிடப்பட்டவர்களின் ஆன்ம வேட்கையை அந்தப் பாடலில் வரும் கதாநாயகி அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி உள்ளார். பாலு மகேந்திரா படங்களுக்குப் பிறகு கதாநாயகிகள் அழகாக காட்டப்படும் சில அபூர்வமான தருணங்களை இந்தப் பாடல் காட்சிகளிலும் காணும் போது பிரமிப்பாக இருந்தது.

குறிப்பாக இந்தப் பாடலின் கதை நாயகி. மென் சோகமும், தீராவலியும், காதலின் ஏக்கமும் பூத்து பூத்து தவழ்கிற கண்கள். எண்பதுகளின் கதாநாயகி மாதவிக்கு பிறகாக பேசும் விழிகள் .

கதையின் நாயகனாக அசோக் செல்வன். அவரது இறுகிய முகம் , நெகிழும் கண்கள் கதையின் போக்கிற்கு பாடலின் வரிகளுக்கு மிகவும் உதவி இருக்கின்றன. பாராட்டுக்கள். உண்மையில் வளர்ந்து வரும் போது நடிகர் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பினை தேர்வு செய்ததற்கு கொஞ்சம் துணிச்சல் வேண்டும் தான். காதலிக்காக தண்டனையை ஏற்கும்

” punishment sir” என அவர் கூறும் போது சலனமற்ற அவரது விழிகள் Awesome.

ஒரு பதினாறு நிமிட பாடலில் ஒரு மாபெரும் இன அழிவை, தாய் நிலம் பிரியும் துயரை, காதலின் பூத்தலை, அது கோரும் வலியை, காவிய காதலுக்கே உரிய முடிவை என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சீரற்ற முறையில் அடுக்கி, அந்த சீரற்றத் தன்மையையே பேரழகாக சித்தரிக்கின்ற கலைத்தன்மை இயக்குனர் , படத் தொகுப்பாளர், மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரிடம் இருந்தது.

இதையெல்லாம் தாண்டி கதைப்பாடல் பேசுகிற பேசுபொருள். தாய் நிலம் இழந்தவர்களின் தவிப்பு. தன் முன்னே தன் இனம் அழியக் கொடுத்தவர்களின் விழியோரங்கள். இவை எதுவுமே நம்மை நிம்மதியாக இருக்க விடாது. பார்வையாளனுக்குள் இனம் புரியாமல் சுரந்துக் கொண்டிருக்கும் பரிதவிப்பிற்கு துணையாக திட்டமிட்டு வார்த்தெடுக்கப்பட்ட அந்தக்

கருப்பு/ வெள்ளை வண்ணம். உரையாடல்களை சாத்தியப்படுத்துகிற அந்த தொலைபேசிக் கூண்டு மட்டும் நினைவுகளின் செந்நிற வண்ணத்தில்.

இறுதியாக “போ..உன் கதைகளை உலகத்திற்கு சொல்!” என பிரிவை சுமந்து வலியோடு நாயகியை அனுப்பி வைக்கும் நாயகனின் வார்த்தைகள் தான் அவனது காதல் உணர்ச்சியின் உச்சம்.

ஒவ்வொன்றிலும் ஆழமான அழகுணர்ச்சியோடு, கவித்துவ உரையாடல்களோடு, கலைச்செழுமையாய் கட்டப்பட்ட இந்த கதைப்பாடல் நாடிழந்த தமிழர்களுக்கானது மட்டுமல்ல. தன் தலைமுறையில் தனது இயலாமையால் சொந்த இனத்தை பறிகொடுத்து குற்ற உணர்வில் குமைகிற தாயகத் தமிழர்களுக்கானதும் தான்.

இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கிற Think Music நிறுவனத்தாருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

மிகு வசீகரம் மிகுந்த படைப்பை நம் விழிகள் முழுக்க நிரப்பி, இன அழிவின் வலியாலும், கசிந்துருகும் காதலின் துயராலும் நம்மை உறைய வைத்திருக்கிற இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு

நெஞ்சிற்கினிய பேரன்பு. நன்றி. பாராட்டுக்கள்.

தவறவே விடக்கூடாத அந்த வசீகர அனுபவத்திற்கு .. நீங்களும் உங்களை ஆடப்படுத்திக் கொள்ள..

இதோ அந்தக் கதைப்பாடலின் தொடர்புச்சுட்டி.

♥️

இப்படியும் மனிதர்கள் !

இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

🔹

உலகத்தின் மாமனிதர்கள் அனைவரும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் “காணாமல் போவதை” வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த உலகை மிகச் சரியான வழியில் கற்றுக் கொள்வதற்கு எந்தத் திட்டமிடலும் இல்லாமல் ஒரு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலாக, காலச்சுவடு வெளியீடான “அமர நாயகன்” படித்துக் கொண்டிருக்கிறேன்.

புரட்சியாளர் சேகுவேரா தனது நண்பருடன் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மோட்டார் சைக்கிளில் அலைந்து திரிந்து பயணத்தின் மூலமாக இந்த உலகை புரிந்து கொள்ள முயற்சித்தது நமக்குத் தெரியும்.

அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் தனது பதின் வயதுகளில் குருவைத் தேடி ஒரு பயணம் போயிருக்கிறார். காசி உள்ளிட்ட வட நாட்டின் நிறைய ஆன்மீக தலங்களுக்கு தனக்கான ஞானக் குருவை தேடி பயணப்பட்ட இளம் வயது போஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் கண்ட பல சாமியார்கள் சுயநலம் கொண்ட, ஏமாற்று பேர்வழிகளாக திகழ்ந்ததால் அவர் இது போன்ற முயற்சிகளை கைவிட்டார். இந்தப் பயணத்தால் அவருக்கு டைபாய்டு ஏற்பட்டது. அதை‌ பிற்காலத்தில் “ஞான குருவை தேடி அலைந்ததால் அடைந்த வினை’ என சொல்லி சிரிப்பாராம்.

ஆனாலும் இந்த பயணம் மூலம் அவர் எளிய மனிதர்களிடம் நெருங்கியிருக்கிறார். அம்மை, காலரா போன்ற நோய்கள் தொற்றி அவதிப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னார்வலராய் பாடுபட்டிருக்கிறார். சேகுவேரா தன் பயணத்தில் தொழுநோய் மருத்துவமனையில் சேவை செய்தது போல.

இது போன்ற ஒற்றுமைகள் இருவர் வாழ்க்கையிலும் நிறைய இருக்கின்றன.

இந்தியாவில் அப்போது உயரிய படிப்பு லண்டனில் தேர்வாகும் ஐசிஎஸ். அதாவது இப்போதைய ஐஏஎஸ் போல. அதை யாராலும் எளிதில் வென்று விட முடியாது. கடும் உழைப்பும், கடுமையான பயிற்சியும், மிகுந்த அறிவும் கோரும் அந்த தேர்வு, இந்தியர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் கூட இந்த தேர்வில் தோற்றவர்தான். எனவே எப்போதும் சவாலையும், சாகசத்தையும் எதிர்கொள்கிற மனநிலையில் இருந்த சுபாஷுக்கு இந்தத் தேர்வும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட, போராடி இறுதியில் வெற்றிப் பெற்றார்.

ஆனாலும் இந்தத் தேர்வில் வென்று அடைகிற ஆங்கிலேய குடிமைப்பணி என்று அழைக்கப்பட்ட வேலையில் சேர சுபாஷுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர் தன் சகோதரர் சரத்திற்கு எழுதிய கடிதங்கள் படிக்கும்போதே நம்மை நெகிழச் செய்கின்றன. “போராட்டம் இல்லாத வாழ்வு அரைவாழ்வு” என வாழ்க்கையைப் பற்றி வரையறுத்த சுபாஷுக்கு , இதுப் போன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கோப்புகளைப் பார்த்து, கையெழுத்து போட்டு, அடிமை வாழ்வு வாழ்வது என்பது கொடும் நரகமாகத் தோன்றியது. குறிப்பாக ஆங்கிலேயனுக்கு கீழே தன்னால் தன் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது எனத் தீர்க்கமாக முடிவு செய்த சுபாஷ், தன் சகோதரரையும் தனது பெற்றோர்களையும் சமாதானப்படுத்த அவர் எழுதிய கடிதங்கள் உண்மையிலேயே ஒரு அப்பழுக்கற்ற மனிதனின் தூய ஆன்மாவை காட்டுகிறது.

ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் பணியில் சேராமல் ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆங்கிலேய அதிகாரியிடம் அனுப்பிய போது, அதை மறுபரிசீலனை செய்ய அவரது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அவ்வளவு சிறந்த மாணவன் இப்படி உயரிய பதவியை மறுப்பது என்பது அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சுபாஷின் தந்தைக்கும் அதே நிலைதான்..

இறுதியாக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு சுபாஷ் தனது சகோதரர் சரத்திற்கு எழுதிய கடிதத்தில்..

“வாழ்க்கை என்ற கடலில் பயணப்பட காத்திருக்கிறேன். இந்தக் கப்பல் இப்போது கவர்ச்சியான துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கிறது. இப்போது இதற்கு அதிகாரம் சொத்து செல்வாக்கு என அனைத்தும் இருக்கிறது. ஆனாலும் என் ஆழ் மனதிற்குள் இன்னொரு குரல் இப்படி கேட்கிறது.. பொங்கிப் பாயும் அலை கடலில் சவால்களை எதிர்கொண்டு பயணிக்கும் போது தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும்” என என் மனது சொல்கிறது. சவால்களை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டேன். இறுதியாக இந்தப் பயணத்தில் எங்கே செல்வேன் என்பதை நான் அறிவேன்.”

என எழுதி இருக்கிற சுபாஷ் பற்றி நினைக்கும் போது நமக்கு நினைவில் வரும் முதுமொழி ” அலைகள் இல்லாத கடல் சிறந்த மாலுமியை உருவாக்காது.”

🔸

இதே போலத்தான் கியூபா புரட்சிக்கு பிறகு அந்த நாட்டின் உயரிய அமைச்சராக பதவி ஏற்ற புரட்சியாளர் சேகுவேரா அந்தப் பதவியை துறந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூப புரட்சி போல புரட்சி செய்ய பயணத்தை தொடங்கிய போது, தனது சகா பிடல் காஸ்ட்ரோவுக்கு எழுதிய கடிதம் தான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது.

“புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையைக் கொண்டு செல்கிறேன். மக்களின் புரட்சிகரத்தன்மைகளைப் பெற்றுச் செல்கிறேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகிற உணர்வை ஏந்திச் செல்கிறேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆழமான காயங்களைச் சரிசெய்கிறது.

வேறோரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன்.

வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம். எனது முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.”

🔸

வரலாற்றின் புதல்வர்கள் எப்போதும் தியாகத்திற்கு தயாரானவர்களாக, துளியும் சமரசம் அற்றவர்களாக, தன்னலம் மறுப்பவர்களாக, எதையும், எந்த நொடியிலும் தூக்கி எறிந்து விட்டு சாதாரண நிலைக்கு கீழிறங்க பயணப்படுபவர்களாக ( down to earth) இருந்திருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமான உண்மைகள். இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

Page 1 of 59

Powered by WordPress & Theme by Anders Norén