
அவன் எளியவன். சாதாரணன். மேடைகளின் வெளிச்சத்தில் ஒளிரும் நட்சத்திரமல்ல அவன். அடுக்கடுக்காய் செந்தமிழ் பேசும் சொற்களுக்கு சொந்தக்காரன் இல்லை அவன். அவன் எளியவன். சாதாரணன்.
அவனை நீங்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் பார்க்கலாம். ஏதோ உயரத்தில் ஏறிக்கொண்டு கட்சியின் கொடியை அல்லது தோரணத்தை கட்டிக் கொண்டிருப்பான். அதற்கு முந்தைய நாள் இரவில் சுவரொட்டி ஒட்டுபவரோடு அலைந்து திரிந்து சுவர்களை தேர்ந்தெடுத்து இருப்பான். அண்ணன் சீமானின் முகம் உயரத்தில் மின்ன வேண்டும் என்பதற்காக உயரமான சுவற்றில் ஏறத் தயங்கும் சுவரொட்டுபவரோடு வாக்குவாதம் செய்து அவனே அந்த சுவற்றின் உச்சத்தில் ஏறி சுவரொட்டி ஒட்டி இருப்பான். மேடையில் விரிக்கப்படும் விரிப்பினை அவன் தூசி தட்ட உதறும்போது , அந்த தூசி பறத்தலில் புன்சிரிப்போடு மிளிரும் அவன் முகம் காணலாம்.
நாற்காலிகளை தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து பார்த்து ஒவ்வொன்றாய் போடும்போது, யார் ஆலோசனை சொன்னாலும் அதை சிரிப்போடு ஏற்றுக் கொண்டு அந்த நாற்காலிகளை போட்டுக் கொண்டிருப்பான். அவர்கள் சிறியவர் பெரியவர் என்ற பேதம் எல்லாம் அவனுக்குத் தெரியாது. அவர்கள் தன் கட்சிக்காரர்கள். அவர்கள் சொன்னால் அவன் கேட்பான்.
கூட்டம் தொடங்கிய பிறகு அவனை நீங்கள் பார்க்க முடியாது. மேடைக்கு பின்னால் நின்று கொண்டு , ஓடும் ஜெனரேட்டர் சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என பதட்டமாய் பார்த்துக் கொண்டிருப்பான்.பேசி முடித்தவர்களுக்கு தாகம் தணிக்க தண்ணீர் பாட்டில்களை வாங்கி மேடைக்கு முன்னால் இறக்கி வைப்பான். கூடுதலாக நாற்காலிகள் வேண்டுமா என கேட்டு அதற்காக நாற்காலிகள் எடுக்க ஓடிக் கொண்டிருப்பான்.கூட்டம் முடிந்த பிறகு எல்லோரும் கலைந்து விடுவார்கள். அவன் தனிமையாய் நின்று கட்சிக்கொடி அவிழ்த்து கொண்டிருப்பான். தயங்கி யாராவது நின்றால், “நீங்கள் போங்கள் நான் கட்சிக் கொடியை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்..!” என்று சொல்வான். அந்த புலிக்கொடி மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.
எப்போது கூப்பிட்டாலும் ஓடிவரும் தொலைவில் நிற்பான். ஆனால் தொலைவில்தான் நிற்பான். ஒருபோதும் வெளிச்சத்தின் வீதிகளுக்கு தன்னை விற்றவன் அல்ல அவன். நிருபர்கள் பேட்டி எடுக்கும் போது அண்ணனுக்கு பின்னால் நின்று போட்டி போட்டுக் கொண்டு முகங்களை காட்டி முகவரி தேடுகிறவன் அல்ல அவன். தூரமாய் நின்று அண்ணன் சீமானின் மொழிகளை அப்படி ரசிப்பான். வாடகைக்கு வண்டி ஓட்டும் போது ஓய்வெடுக்கும் நேரங்களில் கூட அண்ணன் பேச்சு தான் அவன் அலைபேசியில் ஓடிக்கொண்டிருக்கும்.
எல்லா கட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் முதல் ஆளாய் பேருந்திலோ, வேனிலோ ஏறுபவன் அவனாகத்தான் இருப்பான். அந்தப் பயணம் சென்று முடியும் வரை அந்த பேருந்தில் அல்லது வேனில் பயணிக்கின்ற எல்லோருக்கும் அவன் தான் தண்ணீர் வாங்கி தருவதிலிருந்து, உதவியாய் நிற்பதிலிருந்து, இரவு நேர பயணத்தின் போது ஓட்டுநருக்கு பேச்சுக் கொடுத்து வருவதிலிருந்து, அவன் தான் சகலமும்.
இத்தனைக்கும் அவனுக்குத் தினந்தோறும் அவன் வைத்திருக்கிற டாடா ஏஸ் வண்டி ஓட்டினால் தான் வருமானம். ஆனால் பெரும்பாலும் கட்சி வேலையின் போது அந்த வருமானம் அவனுக்கு கிடைக்காது. அதை உணர்ந்து யாராவது எரிபொருள் போட பணம் வைத்துக் கொள் என கொடுத்தால், அதை வாங்க மறுத்துவிட்டு இது என் கட்சி என் உழைப்பு இன்று மௌனமாக கடந்து விடுவான்.
உண்மையில் அவனை யாருக்கும் தெரியாது. அது பற்றி அவனுக்கும் எந்த குறையும் இல்லை. அவன் பணி அவன் நேசித்த அண்ணனுக்கும் அமைப்பிற்கும் புலிக்கொடிக்கும் நேர்மையாக இருப்பது.
ஒருமுறை அண்ணன் சீமான் கும்பகோணம் வந்திருந்த நாளில் .. எதிர்பாராத விதமாக அவனது தந்தையார் காலமாகிவிட்டார். அண்ணன் தங்கியிருந்த விடுதிக்கு அருகே தான் அவனது வீடு. அண்ணன் வருகையின்போது இப்படி ஒரு துயரம் நடந்து விட்டதே என அவனுக்கு மிகப்பெரிய வலி. அதனால் யாரிடமும் சொல்லாமல் வீட்டு வாசலில் கூட எந்த அறிவிப்பும் செய்யாமல் அமைதியாக அவன் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டான். ஏதேச்சையாக அவனது வீட்டுக்குப் போன ஒரு கட்சி தம்பி இதை தெரிந்து கொண்டு தயக்கமாய் எங்களிடத்தில் சொல்ல, அண்ணன் சீமானுக்கு தகவல் தெரிந்தது. உடனே தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வாருங்கள் தம்பி வீட்டிற்கு போவோம் என வாகனத்தில் கூட ஏறாமல் நடந்தே கிளம்பி விட்டார்.
சென்னை சாலையின் ஓரத்தில் ஒரு இடிந்த சிறிய குடிசை வீடு. எந்த நேரமும் கீழே விழுந்து விடும் என்கிற அளவிற்கு பழுதான சுவர்கள். சாலையில் வேகமாக வரும் ஏதோ ஒரு வாகனம் கண நேரத்தில் தவறினால் வீட்டின் சுவற்றில் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்படுகின்ற ஆபத்தோடு இருக்கின்ற வீட்டில் தான் குடும்பத்தோடு அவன் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான். இரண்டு சிறு ஆண் குழந்தைகள். தன்னைப் போலவே உலகம் அறியா அப்பாவி மனைவி. இதுதான் அவனது உலகம். அதைத் தாண்டி அவன் சம்பாதித்தது நாம் தமிழர் கட்சியை தான்.
அண்ணன் அந்த வீட்டை பார்த்து ஒரு நொடியில் உறைந்துவிட்டார். இந்த இடத்திலிருந்து அவன் என்னிடத்தில் வந்திருக்கிறானே என அண்ணன் சொன்னபோது அவரது குரல் தழுதழுத்தது. அதனை மாற்ற வேண்டும் என்றார். அந்த வீட்டை பொறுத்து ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்ற விபரம் அவரிடம் தெரிவித்த போது, வழக்கை சீக்கிரம் முடித்து தம்பிக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அண்ணன் சொன்னார். அவனுக்கோ அண்ணனைப் பார்த்து மிகப்பெரிய பதட்டம். அவனுடைய தந்தைக்கு அண்ணன் இறுதி வணக்கம் செலுத்தி அவனை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு உடல் நடுங்கியது. அண்ணன் சென்ற பிறகு.. இதைவிட எனக்கு என்ன கொடுப்பினை இருக்கிறது.. என் அண்ணன் என் வீட்டிற்கு வந்து விட்டார். இனி என் உடலும் வாழ்வும் உயிரும் நாம் தமிழர் கட்சிக்கே ! என உறுதி கூறி பெருமைப்பட்டான்.
அதிலிருந்து இன்னும் மறைவாக ஆனான். அண்ணனுக்கே தன்னை தெரிந்து விட்டது, இனி என்ன யாருக்குத் தெரிய வேண்டும் என நினைத்தானோ என்னவோ.. தனியாக அலைந்துக் கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைத்துக் கொண்டே இருந்தான். பொறுப்புக்காக சண்டை போட்டவர்கள், பொறுப்பில்லாமல் சண்டை போட்டவர்கள் , அங்கீகாரங்களுக்காக அலைந்தவர்கள், முகவரிக்காக முட்டியவர்களுக்கு மத்தியில் அவன் எதையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய அண்ணன் சீமானையும் அவர் தூக்கி சுமந்த புலிக்கொடியையும் நேசித்துக் கொண்டு அலைந்து கொண்டே இருந்தான்.
நேற்றுக் கூட என்னை வந்துப் பார்த்தான். அதற்கு முந்தைய வாரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏன் வரவில்லை.. எனக் கேட்டேன். உடல்நிலை சரியில்லை அண்ணா ! என்றான் . நின்றுக் கொண்டே இருந்தான். அருகிலிருந்த தம்பி Lingadurai K அமருங்கள் அண்ணா ! என கட்டாயப்படுத்தி அமர வைத்தான்.மாநில பொறுப்பு உனக்கு வழங்கப்படவில்லை என ஏதேனும் வருத்தமா என்றும் கூடுதலாக கேட்டேன். “அண்ணா! இது என் கட்சி. இதில் எனக்கு என்ன அண்ணா பொறுப்பு…?பொறுப்புடன் இருப்பது தான் பொறுப்பு..!” என்றான் அவன். பிறகு நீண்ட நேரம் நிற்கவில்லை. சென்றுவிட்டான். ஒரு மீண்டு வராத பயணத்தின் விடைபெறுதலுக்காக அவன் வந்திருக்கிறான் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.
இன்று காலை கடும் காய்ச்சலில் படுத்திருந்த எனக்கு தம்பி ஆனந்த் அழைத்தான். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவன் காலமானான் என செய்தி கேட்டு நான் திகைத்துப் போனேன். அவன் வீட்டிற்கு சென்று அவன் உடலுக்கு புலிக்கொடி போர்த்திய போது.. அவனது மனைவி சொன்னார். “உங்க புலிக்கொடி உங்ககிட்டயே வந்துருச்சிங்க என்று..” கூடியிருந்த எல்லோரும் கத்திக் கதறினோம்.
இறுதிச் சடங்கிற்கான முழு பொறுப்பினையும் நாம் தமிழர் கட்சியே ஏற்றுக் கொள்வதென முடிவெடுத்தோம்.
பலரிடமும் இந்தத் துயர செய்தியை நான் பகிர்ந்த போது ஒன்றை உணர்ந்தேன். அவனை யாருக்குமே அதிகம் தெரியவில்லை. எந்தவித அங்கீகாரமும் தேடாமல் புலிக்கொடி சுமந்து இலட்சியத்திற்காக அவன் வாழ்ந்திருக்கிறான்.
அண்ணன் சீமானிடம் சொன்னேன். அவருக்கு மட்டும் அவனை மிகச் சரியாக நினைவிருந்தது. உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளாமல் இப்படி ஆகிவிட்டானே என்று சொல்லி அவர் கலங்கினார்.
அவனைப் போல எண்ணற்றவர்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல், அடையாளமும் தெரியாமல் புலிக்கொடி பறக்க தமிழ்க்குடி சிறக்க, உதிரத்தை வேர்வையாக சிந்தி, உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிச்சங்களில் இல்லை அவர்கள். இந்தத் துயர் இருட்டில் நின்று கொண்டு சொல்கிறேன்.
“அவர்கள் தான் கட்சிக்கான உண்மையான வெளிச்சங்கள். “
அவனை யாருக்குமே தெரியவில்லை என்றாலும்.. இந்த இரவில் அவன் நெஞ்சாரப் போர்த்திருக்கும் அவன் நேசித்த புலிக்கொடிக்கு அவனைத் தெரியும்.
அதுதான் அவன் நிறைவு. அவன் வாழ்வு.
இப்படி என் தம்பி ஜஸ்டினை போன்ற யாருக்கும் தெரியாத எண்ணற்றவர்களால் தான் உயர உயர பறக்கிறது புலிக்கொடி.
ஜஸ்டின் தமிழ்மணி ( வயது 46) . டாட்டா ஏஸ் ஓட்டுநர்/கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் முழு நேர களப்பணியாளராக பணியாற்றியவர்/ அமைப்பின்ஆணிவேர்/தற்போது புதிய கட்டமைப்பில் மாவட்டத் தலைவர்.














