
♥️
“தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என வள்ளுவர் கூறுகிறார். அந்த அவைகளும் கூட பெரும்பாலும் தந்தையார்களின் அளப்பரிய தியாகத்தினால் தான் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் நான் எப்போதும் மகன் அதியனின் தந்தை என்னுடைய சகோதரன் புதுகை ஜெயசீலன் மற்றும் மகன் தி.த.தமிழவன் கோத்தகிரியின் தந்தை அண்ணன் தமிழ் தாசன் ஆகியோர் எனது பெருமதிப்பிற்குரியவர்கள். மகன்களுக்காக மேடைகள் ஆனவர்கள். அந்த மேடைகள் அவர்களின் ஆன்மாவால் ஆனவை. அவர்கள் மகன்களை உருவாக்குகிற அந்த போராட்டத்தை தாய்மையை விட புனிதமானது என்றே கருதுகிறேன்.
சமீபத்தில் எனது பெரியப்பா எழுத்தாளர் ச.கல்யாணராமன் தனது 89 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது பிள்ளைகளுக்காக மட்டுமல்ல அவரது தம்பி பிள்ளைகளுக்காகவும் கடுமையாக உழைத்த பெருமகன் அவர். வாழ்வில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை, விமர்சிக்க தகுந்த வாழ்க்கை முறையினை அவர் வாழ்ந்தாலும் பிள்ளைகளுக்கு அவர் ஒரு சிறந்த அப்பா. எங்கள் எல்லோரையும் வாழ்வின் உயரத்தில் அமர வைக்க வேண்டும் என அவர் கனவு கண்டார். சிலரும் அமர்ந்தார்கள்.
எங்களில் சிலரின் அளப்பரிய உயரத்திற்கு.. இரவு முழுக்க கை வலிக்க வலிக்க எழுதிய அவரது உழைப்பு மிக முக்கிய காரணம்.
ஆனால் காலம் கொடுமையானது தானே. எல்லா நினைவுகளையும் அழிப்பதுதான் கால வெள்ளத்தின் இயல்பு. மறப்பது மனித இயல்பாக இருக்கிறதோ இல்லையோ என்று இதுவரை எனக்கு சந்தேகம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் அவ்வளவு எளிதாக மனித மனம் எதையும் மறக்காது. ஆனால் மறந்தது போல நடிக்கும். அதுவே வாழ்க்கை என நம்பி இயல்பாக வாழத் தொடங்கும்.
கடைசி காலத்தில் எனது பெரியப்பா உடல் நலிவோடு இருந்த காலகட்டத்தில் நான் அருகில் இல்லை என்கிற ஒரு குற்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. எனக்கென்று குடும்பம் ஆகிவிட்ட நிலையில் அது சாத்தியமில்லைதான்.ஆனால் அவருடைய இறுதிக் காலத்தில் அவர் தனிமையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்பதுதான் எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் சுமக்க போகிற பாவம்.
🔸
சுயநலம் என வந்துவிட்டால்.. தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் என எல்லோரும் அந்நியமாகி விடுகிறோம். எல்லோர் குறைகளும் மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகின்றன. மனிதன் தனித்த தீவாக மாறுவதுதான் அவன் வாழ்வில் அவன் அடைகிற மாபெரும் சீரழிவு. அதுவும் பெரிய குடும்பத்தில் பிறந்துவிட்டு தனியனாக அலைவது ஒரு பாவனை. நினைவுகளை விட்டு யாராலும் அவ்வளவு எளிதாக நிர்வாணமாகி விட முடியாது. ஒவ்வொரு நாளும் ஒன்றாக வாழ்ந்த நாட்களில் பகிர்ந்து கொண்ட அன்பின் ஈரம் மட்டும் உள்ளுக்குள் சுரந்துக் கொண்டே இருக்கும். அது ஒரு வகையான வலி தான்.
உலகத்திலேயே மோசமான கைவிடல் என்பது வயதான காலத்தில் பெற்றோரை விடுவதுதான்.
🔸
எனது தம்பி ஒருவன் இருக்கிறான். கட்சியின் மூலமாகத்தான் அவன் எனக்கு பழக்கம். சிறு வயதில் அவன் கட்சியில் இணைந்த போது அவன் தந்தை அவனிடத்தில் இல்லை. அவர் இன்னொரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். தம்பி தனது தாயுடனும் தன் தங்கையுடனும் வாழ்ந்து வந்தான். தந்தை இல்லாத தனிமையை கொல்வதற்காகத்தான் அவன் கட்சியில் இணைந்ததாக எனக்குத் தோன்றியிருக்கிறது. அந்த வயதில் அவன் எப்போதும் கட்சி வேலைக்காக அலைந்து கொண்டே இருப்பான். ஆனால் அப்பா மீது அவனுக்கு கடுமையான கோபம் இருந்தது. கோபம் என்பதை தாண்டி எல்லாம் அது ஒரு வகையான வன்மம். தந்தையைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் கலங்கிய கண்களுடன் அந்த இடத்தை விட்டு அவன் நகர்ந்து விடுவான்.
அப்படி வாழ்ந்து கொண்டிருந்த அவன் வாழ்வில் ஒரு நாள் அவன் தந்தை எல்லாவற்றையும் இழந்து வந்து அவன் முன்னால் நின்றார். மன்னித்துவிடு என கதறினார். அவனுடைய தாயும் ஏறக்குறைய கண்கலங்கி மன்னிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். அந்த நேரத்தில்தான் அவன் என்னை வந்து பார்த்தான். அண்ணா அந்த ஆளை எனக்கு பிடிக்கவே இல்லை.. ஆனாலும் அம்மா அழுவது என்னால் தாங்க முடியவில்லை. என்ன செய்வது எனக் கேட்டான்.
“சகித்துக் கொண்டு மன்னித்துவிடு. அது மட்டுமே உனக்கு நிம்மதியை தரும்.” என்று சொன்னேன்.
தம்பி இப்போது தாய் மற்றும் தந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த தந்தையின் வயதான காலத்தில் அவருடைய மடியில் தம்பியின் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
🔸
இப்படி தன்னை சிறுவயதில் புறக்கணித்து காலப்போக்கில் எல்லாவற்றையும் இழந்த தந்தையை எதுவும் தண்டிக்காமல் ஏற்றுக் கொள்கின்ற மனதின் சூட்சமம் மிக நுட்பமானது. அது தந்தைக்கான பால்ய கால ஏக்கத்தை சார்ந்தது.
இன்றளவும் தவமாய் தவமிருந்து படம் பார்க்கும்போது கண்கள் கலங்காதவர்கள் யார் இருப்பார்கள்.. தீபாவளியின் முதல் நாள் இரவு வரை உழைத்து விட்டு பிள்ளைகளுக்கு துணிமணிகள் பட்டாசுகள் என வாங்கி வருகிற எத்தனையோ தந்தைகளை நாம் காலத்தோடு கொண்டாடி இருக்கிறோமா என்பதுதான் பெரிய கேள்வி.
தந்தைக்காக காத்திருப்பதுதான் பால்ய காலத்தின் பசுமையான நினைவுகளில் ஒன்று. பெரும்பாலான குழந்தைகளுக்கு தந்தை என்பவர் தான் வெளியே அழைத்துச் சென்று உலகத்தை அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரையில் மூடிய சுவர்களில் இருந்து முதன்முதலாக உலகத்தின் வெளிச்சத்திற்கு தந்தையின் கரங்கள்தான் அழைத்து செல்கின்றன.
எப்போதும் தந்தையின் கரங்கள் நம்பிக்கையின் கதகதப்புக்கு உரியவை. அந்த கைகளைப் பிடித்துக் கொண்டால் போதும். பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் எங்கேயும் போய் விடலாம் என குழந்தைகள் நினைக்கின்றன.
எனது மூத்த மகன் பிறந்த காலத்தில் நான் ஒரு ஸ்கூட்டி வைத்திருந்தேன். பிறந்த ஆறேழு மாதங்களில் என் வீட்டின் ஹாலில் தான் அவனை படுக்க வைத்து இருப்பார்கள். வாசலில் என் ஸ்கூட்டி சத்தம் கேட்டால் போதும். அவனது முகம் புன்னகைக்க துவங்கும். கை கால்களை விரைத்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை அவன் வெளிப்படுத்தும் போது .. அவனை அழைக்கும் விதமாக ” “”குட்டி பாப்பா ..டிங்..டிங்””” என ஒலி எழுப்புவேன். அவனும் சிறிய ஒலி எழுப்பி குதூகலிப்பான்.
கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவனை வெளியே அழைத்துச் செல்ல தொடங்கினேன். எனது இரண்டு மகன்களும் வித்தியாசமானவர்கள். என் உடல் நிலையை கருதி எப்போதும் என்னை அவர்கள் தூக்க சொன்னதே இல்லை. தந்தை தூக்கிக் கொண்டு நடப்பார் என்ற அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை. என்னை பிடித்துக் கொண்டு நடப்பார்கள். இப்போது நான் அவர்களை பிடித்துக் கொண்டு நடக்கிறேன். அந்தக் காலத்தில் நான் பயன்படுத்திய எனது ஸ்கூட்டி மாற்றுத்திறனாளி ஓட்டக்கூடிய மூன்று சக்கர வண்டி அல்ல. இரண்டு சக்கரங்கள் தான். அதில் மிகுந்த திறனுடன் ஓட்ட பழகி நான் நகரையே வலம் வந்து கொண்டிருந்தேன். என் நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி இருக்கிறேன். ஆனால் என் மகனை முன்னால் நிற்க வைத்து ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் பதட்டமாக இருக்கும்.
ஒரு நாள் திரைப்படத்திற்கு அழைத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எனது வண்டி விபத்துக்குள்ளாகிவிட்டது. நான் கீழே விழுந்து விட்டேன். ரோட்டில் விழுந்த அடுத்த நொடி என் மகனுக்கு என்னானது என எனக்குள் துடித்த துடிப்புதான் தாய்மைக்கு நிகரானது தந்தைமை என நம்ப வைத்தது. சட்டென எழுந்து நின்ற எனது மகன் என் அருகில் ஓடி வந்து “எனக்கு ஒன்றும் ஆகவில்லை அப்பா” என தழுதழுத்த குரலில் சொன்னபோது நான் உடைந்து விட்டேன். அவனுக்கு தன் வலியை பற்றி சொன்னால் தன் தந்தை உடைந்து விடுவான் என்கிற நுட்பமான அறிவு அந்த வயதிலேயே இருந்தது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். அதிலிருந்து என் மகனை நான் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதில்லை. அவனுக்காகவே நான் கார் வாங்கினேன்.
என் அப்பாவை கொரோனா காலத்தில் மருத்துவமனையில் சேர்த்த போது நினைவில்லாமல் அவர் இருந்தார். அப்போது ஒரு நொடியில் அவரது உள்ளங்கைகளை நான் பற்றிக் கொண்டேன். மீண்டும் பற்ற முடியுமோ என்கிற பயம் எனக்கு. அந்தக் கைகளில் இருந்து நான் நம்பிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கை முழுக்க என்னை அழைத்துச் செல்லும் என்று எண்ணினேன். நல்லவேளை அம்மா அப்பாவை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்.
🔸

தந்தை மகன் உறவைப் பற்றி மிக நுட்பமாக எழுதி இருப்பவர் மெக்சிகோ எழுத்தாளர் யுவான் ரூல்ஃபோ.
மிகக் குறைவாக எழுதிய எழுத்தாளர். ஆனாலும் அவர் எழுதியவை எல்லாம் உலகத்தின் தரமான எழுத்துக்கள் என கொண்டாடப்படுகின்றன.
1918 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு ஆறு வயதானபோது அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன் பிறகு அடுத்த நான்காண்டுகளில் அவரது தாய் மாரடைப்பினால் காலமானார். அதற்குப் பிறகு சிறிது காலம் உறவினர்கள் மத்தியிலும் பிறகு ஒரு அனாதை இல்லத்திலும் தன் வாழ்க்கையை வாழ்ந்த யுவான் ரூல்ஃபோ எப்போதும் உணர்ச்சி கொந்தளிப்பான மனநிலையை கொண்டவர்.
மெக்சிகோ நவீன இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளராக விளங்கிய ரூல்போ பற்றி இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கோஸ் “எல்லா காலத்திற்குமான, எல்லா இடங்களுக்குமான நீடித்து நிற்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் யுவான் ரூல்ஃபோ” என கொண்டாடுகிறார். அவரது நாவல் “பெட்ரோ பரமோ” உலகப் புகழ்பெற்றது. திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
அவருடைய சிறுகதைத் தொகுப்பு “எரியும் சமவெளி” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு எதிர் பதிப்பகத்தின் வழியாக வெளியாகி உள்ளது. தமிழில் இல. சுபத்ரா மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 17 கதைகளும் மிக முக்கியமானவை. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மால், இக்கதைகளால் மிக எளிதாக மெக்சிகோவின் பண்பாடு மற்றும் நிலத்தில் பொருத்திக் கொள்ள முடிகிறது என்பதுதான் யுவான் ரூல்ஃபோவின் தனித்துவம்.
அதில் இரண்டு கதைகள் இருக்கின்றன. ” என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.” மற்றொன்று “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”
ஒரு காலத்தில் கொலை செய்துவிட்டு இன்னொரு ஊருக்கு ஓடி வந்த ஒருவன் வாழ்நாள் முழுக்க தன்னை தேடி காவலாளிகள் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொந்தளிப்போடு ஒவ்வொரு நொடியும் மரணித்து விடுவோமோ என்ற சாவின் விளிம்பில் துடிப்பது தான் அந்தக் கதை. இறுதியாக அவர்கள் வந்துவிடுவார்கள். அவன் தன் மகனிடம் அவர்களிடம் சொல்ல அந்தத் தந்தை கேட்பதுதான் ‘என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.”
ஆனால் மகன் மறுத்து விடுவான். ஏனெனில் அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். எங்கே அவரது மகன் என்று சொன்னால் தன்னையும் சுட்டு விடுவார்களோ என பயந்து அவன் மறுத்து விடுவான். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் அந்தக் கதை. மரண நொடியில் வாழ்வின் முதுமையில் வாழ்வதற்கான வேட்கை எப்படி கொப்பளிக்கிறது என்பதை பற்றி அவ்வளவு நுட்பமாக எழுதி இருக்கும் யுவானின் இந்த கதை நவீன இலக்கியத்தின் உச்சம்.
அதேபோல , வாழ்நாள் முழுக்க தீமைகளை மட்டும் செய்து வந்த மகனுக்கு உடல்நிலை மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில் அவனைத் தூக்கிக் கொண்டு ஒரு மலை மீது ஏறி ஒரு அங்கே இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் மகனை சேர்ப்பதற்காக முதுகில் சுமந்து கொண்டு போகிற முதிய தந்தையைப் பற்றிய கதைதான் ” நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை”. இந்தக் கதை முழுக்க தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். தீமையை மட்டும் செய்த மகன் தந்தையின் சொற்களை கேட்டு கண்ணீர் வடிக்க தொடங்கும் போது அந்த ஊர் வந்து விடும். இரவு நேரத்தில் நாய்கள் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிற அப்பொழுதில் அந்தத் தந்தை சொல்வதுதான் “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”
உண்மையில் பிள்ளைகளுக்காக “எரியும் சமவெளி” தந்தைகளின் ஆன்மாக்கள் தான்.
🔸
விவாகரத்து வழக்குகளுக்கு மகள்களை அழைத்து வரும் பெற்றோர்களில் பெரும்பாலும் மிகுந்த பதற்றத்தோடு இருப்பது தந்தைகள் தான். பெரிய சிறகு இருந்தால் இப்படி துயரத்திற்கு உள்ளாகி இருக்கிற தன் பிள்ளைகளை போர்த்திக் கொள்ளலாமே என்பது போல அவர்கள் துடிக்கின்ற துடிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
தாய் பிள்ளைகளை வயிற்றில் சுமக்கிறாள். தந்தை பிள்ளைகளை தோளில் சுமக்கிறான்.
தோளுக்கு அருகே தானே இதயம் துடிக்கிறது..?
♥️
மணி செந்தில்.
www.manisenthil.com













