கல்லூரி வாழ்க்கை போல லேசானதும் கனமானதும் வேறில்லை. அதுவும் முதலாண்டில் அடியெடுத்து வைக்கும் போது ஒரு விதமான அச்சம், படபடப்பு, கனமானப் புத்தகங்கள் ,காதல், எதிர்காலம் என பல்வேறு விதமான கனவுகள் வனத்தின் இருட்டாகவும்,அதில் உலவும் மின்மினி பூச்சிகளின் வெளிச்சமுமாக, சூழ்ந்து நிற்கும். அதை மிகக் கொண்டாட்டமாக பலர் கடந்து இருந்தாலும், சிலர் அந்தக் காலகட்டத்தை நினைக்கக்கூட அச்சப்படுவார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பன் இருந்தான். அவன் தன் கல்லூரி வாழ்க்கையில் ஒரு பெண்ணை உருக உருகக் காதலித்தான். கையை அறுத்துக் கொண்டான். கல்லூரி வகுப்பறையின் கண்ணாடியை உடைத்தான். அந்தப் பெண்ணிற்காக சீனியர் மாணவர்களை அடித்தான் . ஒரு புல்லட் வாங்கி அந்த புல்லட்டில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ஊர் முழுக்க சுற்றி அலைந்தான். போகிற இடத்தில் எல்லாம் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்ப்பவர்களை எல்லாம் போட்டு அடிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவனை பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணே அவனை பார்த்து பயப்படுகிற சூழ்நிலை உண்டானது. பிறகு மூன்றாம் ஆண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். பிறகு இருவருக்குமே திருமணமாகி அவரவர் செட்டில் ஆகிவிட்டார்கள்.
அதற்குப் பிறகு .. நீண்ட காலம் கழித்து எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணை நான் வளர்ந்த ஒரு மகளோடு பார்க்க நேர்ந்தது. என்னை பார்த்தவுடன் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘வா ஏதாவது ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து பேசுவோம்’.. என கூப்பிட்டாள்.
மாலை நேர மஞ்சள் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்தது அந்த காபி ஷாப். அவளது மகள் சற்று தூரத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள்.
‘எப்படி போகுது வாழ்க்கை..?’ என கேட்டாள்..
‘ம்ம்.. காலம் ஓடிப்போச்சு. பிள்ளைங்க வளந்துட்டாங்க. ‘
“இதுதான் வாழ்க்கையா.. எல்லார்கிட்டயும் ஒரே பதில். காலம் ஓடிப்போச்சு..” என சலிப்புடன் கூறிய அவளை பார்த்து சிரித்துக் கொண்டேன்.
“அப்புறம்… உன்னுடைய அவனை மீண்டும் எங்கேயாவது பார்த்தாயா..?”
சட்டென அவளது கண்கள் கலங்கின.
“அதையெல்லாம் மறந்து நல்லா இருக்கேன் செந்தில். மீண்டும் ஞாபகப்படுத்தாதே. அது ஒரு பைத்தியக்காரத்தனம். என்னுடைய வேண்டுதல் என்ன தெரியுமா.. என் பெண்ணுக்கு அப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்பது மட்டும் தான்.. ” என்று சொன்ன அவளிடம் அதற்குப் பிறகு அதைப்பற்றி பேசவில்லை.
உண்மையில் வாழ்வில் மிக சிலருக்கு மட்டுமே காதல் நினைத்தாலே இனிக்கிறது. பலரும் பதட்டமாக, அவசர, அவசரமாக கடந்து விடும் சூடு நிறைந்த செங்கற்கள் பாவித்த கோவில் பிரகாரமாக காதல் நினைவுகள் மாறிவிடுகின்றன.
விவாகரத்து வழக்கிற்கு வரும் ஆண்களை விட பெண்கள் வழக்கின் தொடக்கக் காலத்தில் கண்கலங்கி அழுதுக் கொண்டே இருப்பார்கள். பிரியும்போது பெரும்பாலும் அழுவதை நிறுத்தி இருப்பார்கள். வாழ்வின் ஓட்டத்தில் அதுவும் ஒரு நிகழ்வு என்பது போல வேகமாக கடந்துப் போக கற்றுக் கொண்டிருப்பார்கள். நீதிமன்ற அனுபவங்கள் அவர்களுக்கு அந்த வெப்பத்தை தாங்கும் வலுவினை தந்து விடுகின்றன.
சமீபத்தில் Obsession (2026) என்ற படம் பார்த்தேன். என் மகன் Cibi Gowtham அவசியம் பார் என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றான்.

அதீதமாக காதலிக்கப்படும் போது காதல் கூட சாபமாக மாறி விடுகிறது என்பதைத்தான் தீவிரத் திரைமொழியில் அந்த படம் சொல்லி இருக்கிறது. படத்தின் கதாநாயகனுக்கு ஒரு விசித்திரமான கேட்ட வரங்களை தரக்கூடிய ஒரு குச்சி (One Wish Willow) போகிற போக்கில் ஒரு கடையில் கிடைக்கிறது. ஒருமுறை அந்த குச்சியை உடைத்தால் கேட்ட வரம் கிடைக்கும். மீண்டும் அதே குச்சியை அந்த வரத்தை முறிப்பதற்காக பயன்படுத்த முடியாது. அப்படி விசித்திரமான அந்த குச்சியை உடைத்து தான் விரும்பக்கூடிய, தன்னை அதுவரையில் விரும்பாத, சொல்லப்போனால் தம்பியாக நினைக்கின்ற ஒரு பெண்ணைப் பார்த்து, தன்னை விரும்ப வேண்டுமென வரம் கேட்கும் கதாநாயகன். அந்த நொடியில் இருந்து ஆட்டம் மாறிவிடுகிறது. எப்படி எல்லாம் அந்த பெண், அவனே சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு காதலிக்கிறாள் என்பது தான் மீதிப் படம். ஒரு மாதிரியாக குமட்டிக் கொண்டே இருந்தது எனக்கு.
இளையராஜா இசையையும், பாரதிராஜா/ மகேந்திரன்/ பாலு மகேந்திரா காதல் கதைகளையும் மென்மையாக கேட்டு பார்த்து ரசித்து சிலிர்த்த எனக்கு, இந்த Obsession உண்மையில் விஷப் பரிட்சை தான்.
காதல் ஒரு வகையான தேன் மாதிரிதான். அளவு அதிகமானால் திகட்டி விடுகிறது. அதுவே நிரம்பி வழிந்தால் வாழ முடியாத அளவிற்கு வாழ்க்கை நரகமாக மாறிவிடுகிறது என்பதை கூச்சநாச்சம் இல்லாமல் அப்படியே வடிகட்டாமல் காட்டுகிறது Obsession.
பாலு மகேந்திராவின் “ஜூலி கணபதி” (2003) என்ற ஒரு படம் உண்டு. அதில் ” எனக்கு பிடித்த பாடல் உனக்கு பிடிக்குமே..” என்ற கவித்துவமான இளையராஜா பாடல் உண்டு. கமலின் குணா திரைப்படத்தின் ஏறக்குறைய பெண் மைய நகல். காதலை ஒரு மனநோய் போல காட்டி ஒரு திரில்லர் திரைப்படத்தை பாலுமகேந்திரா தர முயற்சித்து இருப்பார். 90களில் கன்னடத்தில் வெளிவந்த “ஓம்” திரைப்படமும் இதே வகை தான்.
எதுவுமே வலிந்து திணிக்கும் போது விஷம் ஆகி விடுகிறது என்பதுதான் வாழ்க்கையின் சூட்சமம். தமிழ்த் தேசியத் தத்துவப் பேராசான் ஐயா பெ. மணியரசன் அவர்களின் மனைவி அம்மா லட்சுமி அவர்களுக்கும் மணியரசன் ஐயா அவர்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவை கூர்ந்துக் கவனித்து இருக்கிறேன்.
ஒருமுறை உடல்நிலை சரியில்லாத போது ஐயாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு, அருகில் இருந்த ஐயா.. “நான் தான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே..! “என கண்கள் மினுக்கச் சொன்னதில் தென்பட்ட ஆழ்ந்த அன்பு தன்னை காதல் என விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை.
உடல் நலமில்லாத என் தந்தையை என் அம்மா கவனித்துக் கொண்டே இருப்பதை இந்த நள்ளிரவிலும் பார்த்துக் கொண்டே அமர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நொடி கூட என் தந்தையை விட்டு என் அம்மா நகர்வது இல்லை. என் தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து என் அம்மா ஏறக்குறைய ஒரு ஐந்தாறு கிலோ எடை குறைந்ததை அருகில் இருந்து வேதனையோடு கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் அம்மாவிற்கு சலிப்பு இல்லை. பெரு மகிழ்ச்சியோடு கொஞ்சமும் முகம் சுழிப்பு இல்லாமல் அப்பாவை பார்த்துக் கொள்ளும் என் அம்மாவிடம் தென்படுவது என்ன என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இதுவெல்லாம் காதல் என்றால், obsession நிறுவ முயல்வது என்ன..??

“ஞாபகார்த்தம்” என்ற எழுத்தாளர் கு அழகிரிசாமி எழுதிய புகழ்பெற்ற கதை ஒன்று உண்டு. காதலை சொல்ல முடியாமல் தவிக்கின்ற ஒரு இளைஞனுக்கும், அதை அழகாக வெளிப்படுத்துகிற ஒரு இளம் பெண்ணுக்குமான உறவை கவித்துவமாக விவரிக்கின்ற அந்த கதை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நமக்கு அதே உணர்வை ஏற்படுத்துகிற மாயம் கொண்டது.
Curry Barker இயக்கிய Obsession திரைப்படம் வசூல் சாதனை படைத்தது என்று செய்திகளைப் படிக்கும் போது, உண்மையில் எனக்கு இந்த சமூகத்தைப் பற்றி பயமாக இருந்தது. திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பல காட்சிகளில் ரசிகர்கள் சிரித்தார்கள் என்று என் மகன் சிரித்துக் கொண்டே சொன்னது கூட எனக்கு அச்சமாக இருந்தது. எதுவுமே அதீதமாக நுகர்ந்துக் கொள்ளும் இந்த தலைமுறையின் அலைவரிசையில் நான் பொருந்தாமல் தவிப்பது, ஒருவகையில் வரம் என்று கருதுகிறேன்.
கு. அழகிரி சாமியின் “ஞாபகார்த்தம்” சிறு கதையை Obsession திரைப்படத்தை பார்த்த இந்த இரவில், மீண்டும் எடுத்துப் படித்தேன்.
அப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.
நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.










