மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.

கல்லூரி வாழ்க்கை போல லேசானதும் கனமானதும் வேறில்லை. அதுவும் முதலாண்டில் அடியெடுத்து வைக்கும் போது ஒரு விதமான அச்சம், படபடப்பு, கனமானப் புத்தகங்கள் ,காதல், எதிர்காலம் என பல்வேறு விதமான கனவுகள் வனத்தின் இருட்டாகவும்,அதில் உலவும் மின்மினி பூச்சிகளின் வெளிச்சமுமாக, சூழ்ந்து நிற்கும். அதை மிகக் கொண்டாட்டமாக பலர் கடந்து இருந்தாலும், சிலர் அந்தக் காலகட்டத்தை நினைக்கக்கூட அச்சப்படுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பன் இருந்தான். அவன் தன் கல்லூரி வாழ்க்கையில் ‌ ஒரு பெண்ணை உருக உருகக் காதலித்தான். கையை அறுத்துக் கொண்டான். கல்லூரி வகுப்பறையின் கண்ணாடியை உடைத்தான். அந்தப் பெண்ணிற்காக சீனியர் மாணவர்களை அடித்தான் . ஒரு புல்லட் வாங்கி அந்த புல்லட்டில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ஊர் முழுக்க சுற்றி அலைந்தான். போகிற இடத்தில் எல்லாம் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்ப்பவர்களை எல்லாம் போட்டு அடிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவனை பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணே அவனை பார்த்து பயப்படுகிற சூழ்நிலை உண்டானது. பிறகு மூன்றாம் ஆண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். பிறகு இருவருக்குமே திருமணமாகி அவரவர் செட்டில் ஆகிவிட்டார்கள்.

அதற்குப் பிறகு .. நீண்ட காலம் கழித்து எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணை நான் வளர்ந்த ஒரு மகளோடு பார்க்க நேர்ந்தது. என்னை பார்த்தவுடன் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘வா ஏதாவது ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து பேசுவோம்’.. என கூப்பிட்டாள்.

மாலை நேர மஞ்சள் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்தது அந்த காபி ஷாப். அவளது மகள் சற்று தூரத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள்.

‘எப்படி போகுது வாழ்க்கை..?’ என கேட்டாள்..

‘ம்ம்.. காலம் ஓடிப்போச்சு. பிள்ளைங்க வளந்துட்டாங்க. ‘

“இதுதான் வாழ்க்கையா.. எல்லார்கிட்டயும் ஒரே பதில். காலம் ஓடிப்போச்சு..” என சலிப்புடன் கூறிய அவளை பார்த்து சிரித்துக் கொண்டேன்.

“அப்புறம்… உன்னுடைய அவனை மீண்டும் எங்கேயாவது பார்த்தாயா..?”

சட்டென அவளது கண்கள் கலங்கின.

“அதையெல்லாம் மறந்து நல்லா இருக்கேன் செந்தில். மீண்டும் ஞாபகப்படுத்தாதே. அது ஒரு பைத்தியக்காரத்தனம். என்னுடைய வேண்டுதல் என்ன தெரியுமா.. என் பெண்ணுக்கு அப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்பது மட்டும் தான்.. ” என்று சொன்ன அவளிடம் அதற்குப் பிறகு அதைப்பற்றி பேசவில்லை.

உண்மையில் வாழ்வில் மிக சிலருக்கு மட்டுமே காதல் நினைத்தாலே இனிக்கிறது. பலரும் பதட்டமாக, அவசர, அவசரமாக கடந்து விடும் சூடு நிறைந்த செங்கற்கள் பாவித்த கோவில் பிரகாரமாக காதல் நினைவுகள் மாறிவிடுகின்றன.

விவாகரத்து வழக்கிற்கு வரும் ஆண்களை விட பெண்கள் வழக்கின் தொடக்கக் காலத்தில் கண்கலங்கி அழுதுக் கொண்டே இருப்பார்கள். பிரியும்போது பெரும்பாலும் அழுவதை நிறுத்தி இருப்பார்கள். வாழ்வின் ஓட்டத்தில் அதுவும் ஒரு நிகழ்வு என்பது போல வேகமாக கடந்துப் போக கற்றுக் கொண்டிருப்பார்கள். நீதிமன்ற அனுபவங்கள் அவர்களுக்கு அந்த வெப்பத்தை தாங்கும் வலுவினை தந்து விடுகின்றன.

சமீபத்தில் Obsession (2026) என்ற படம் பார்த்தேன். என் மகன் Cibi Gowtham அவசியம் பார் என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றான்.

அதீதமாக காதலிக்கப்படும் போது காதல் கூட சாபமாக மாறி விடுகிறது என்பதைத்தான் தீவிரத் திரைமொழியில் அந்த படம் சொல்லி இருக்கிறது. படத்தின் கதாநாயகனுக்கு ஒரு விசித்திரமான கேட்ட வரங்களை தரக்கூடிய ஒரு குச்சி (One Wish Willow) போகிற போக்கில் ஒரு கடையில் கிடைக்கிறது. ஒருமுறை அந்த குச்சியை உடைத்தால் கேட்ட வரம் கிடைக்கும். மீண்டும் அதே குச்சியை அந்த வரத்தை முறிப்பதற்காக பயன்படுத்த முடியாது. அப்படி விசித்திரமான அந்த குச்சியை உடைத்து தான் விரும்பக்கூடிய, தன்னை அதுவரையில் விரும்பாத, சொல்லப்போனால் தம்பியாக நினைக்கின்ற ஒரு பெண்ணைப் பார்த்து, தன்னை விரும்ப வேண்டுமென வரம் கேட்கும் கதாநாயகன். அந்த நொடியில் இருந்து ஆட்டம் மாறிவிடுகிறது. எப்படி எல்லாம் அந்த பெண், அவனே சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு காதலிக்கிறாள் என்பது தான் மீதிப் படம். ஒரு மாதிரியாக குமட்டிக் கொண்டே இருந்தது எனக்கு.

இளையராஜா இசையையும், பாரதிராஜா/ மகேந்திரன்/ பாலு மகேந்திரா காதல் கதைகளையும் மென்மையாக கேட்டு பார்த்து ரசித்து சிலிர்த்த எனக்கு, இந்த Obsession உண்மையில் விஷப் பரிட்சை தான்.

காதல் ஒரு வகையான தேன் மாதிரிதான். அளவு அதிகமானால் திகட்டி விடுகிறது. அதுவே நிரம்பி வழிந்தால் வாழ முடியாத அளவிற்கு வாழ்க்கை நரகமாக மாறிவிடுகிறது‌ என்பதை கூச்சநாச்சம் இல்லாமல் அப்படியே வடிகட்டாமல் காட்டுகிறது Obsession.

பாலு மகேந்திராவின் “ஜூலி கணபதி” (2003) என்ற ஒரு படம் உண்டு. அதில் ” எனக்கு பிடித்த பாடல் உனக்கு பிடிக்குமே..” என்ற கவித்துவமான இளையராஜா பாடல் உண்டு. கமலின் குணா திரைப்படத்தின் ஏறக்குறைய பெண் மைய நகல். காதலை ஒரு மனநோய் போல காட்டி ஒரு திரில்லர் திரைப்படத்தை பாலுமகேந்திரா தர முயற்சித்து இருப்பார். 90களில் கன்னடத்தில் வெளிவந்த “ஓம்” திரைப்படமும் இதே வகை தான்.

எதுவுமே வலிந்து திணிக்கும் போது விஷம் ஆகி விடுகிறது என்பதுதான் வாழ்க்கையின் சூட்சமம். தமிழ்த் தேசியத் தத்துவப் பேராசான் ஐயா பெ. மணியரசன் அவர்களின் மனைவி அம்மா லட்சுமி அவர்களுக்கும் மணியரசன் ஐயா அவர்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவை கூர்ந்துக் கவனித்து இருக்கிறேன்.

ஒருமுறை உடல்நிலை சரியில்லாத போது ஐயாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு, அருகில் இருந்த ஐயா.. “நான் தான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே..! “என கண்கள் மினுக்கச் சொன்னதில் தென்பட்ட ஆழ்ந்த அன்பு தன்னை காதல் என விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை.

உடல் நலமில்லாத என் தந்தையை என் அம்மா கவனித்துக் கொண்டே இருப்பதை இந்த நள்ளிரவிலும் பார்த்துக் கொண்டே அமர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நொடி கூட என் தந்தையை விட்டு என் அம்மா நகர்வது இல்லை. என் தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து என் அம்மா ஏறக்குறைய ஒரு ஐந்தாறு கிலோ எடை குறைந்ததை அருகில் இருந்து வேதனையோடு கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் அம்மாவிற்கு சலிப்பு இல்லை. பெரு மகிழ்ச்சியோடு கொஞ்சமும் முகம் சுழிப்பு இல்லாமல் அப்பாவை பார்த்துக் கொள்ளும் என் அம்மாவிடம் தென்படுவது என்ன என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுவெல்லாம் காதல் என்றால், obsession நிறுவ முயல்வது என்ன..??

“ஞாபகார்த்தம்” என்ற எழுத்தாளர் கு அழகிரிசாமி எழுதிய புகழ்பெற்ற கதை ஒன்று உண்டு. காதலை சொல்ல முடியாமல் தவிக்கின்ற ஒரு இளைஞனுக்கும், அதை அழகாக வெளிப்படுத்துகிற ஒரு இளம் பெண்ணுக்குமான உறவை கவித்துவமாக விவரிக்கின்ற அந்த கதை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நமக்கு அதே உணர்வை ஏற்படுத்துகிற மாயம் கொண்டது.

Curry Barker இயக்கிய Obsession திரைப்படம் வசூல் சாதனை படைத்தது என்று செய்திகளைப் படிக்கும் போது, உண்மையில் எனக்கு இந்த சமூகத்தைப் பற்றி பயமாக இருந்தது. திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பல காட்சிகளில் ரசிகர்கள் சிரித்தார்கள் என்று என் மகன் சிரித்துக் கொண்டே சொன்னது கூட எனக்கு அச்சமாக இருந்தது. எதுவுமே அதீதமாக நுகர்ந்துக் கொள்ளும் இந்த தலைமுறையின் அலைவரிசையில் நான் பொருந்தாமல் தவிப்பது, ஒருவகையில் வரம் என்று கருதுகிறேன்.

கு. அழகிரி சாமியின் “ஞாபகார்த்தம்” சிறு கதையை Obsession திரைப்படத்தை பார்த்த இந்த இரவில், மீண்டும் எடுத்துப் படித்தேன்.

அப்போதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.

லிங்கம் – தனி மனித உணர்ச்சிகளின் போர்க்களம்.

லிங்கம் – எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் கதிர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ள “லிங்கம்” தமிழ் வலைத்தொடர் வரிசையில் தனித்துவ இடம் பிடித்திருக்கிறது.

“லிங்கம்” என்ற தனிமனிதனின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக விவரித்து இருந்தாலும் எண்பதுகளின் இறுதிக்காலக் கட்டத்தை நுட்பமாக ஆவண படுத்துவதில் லிங்கம் தனித்துவம் கொண்டிருக்கிறது.

“கடந்த காலம் என்பது செத்தப் பிணம் மாதிரி” என்று இந்த தொடரில் ஒரு வசனம் இருக்கிறது. ஆனால் மனித வாழ்க்கையின் விசித்திரம் என்னவெனில்.. அந்த செத்த பிணத்தை உயிருள்ளவர்கள் நாம் அனைவரும் உள்ளுக்குள்ளேயே சுமந்து கொண்டு ஏறக்குறைய வேதாளத்தை சுமக்கும் விக்கிரமாதித்தன் போல அலைந்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் தனிமனித உணர்ச்சிகளின் முரண்கள் வாயிலாக இயக்குனர் லட்சுமி சரவணக்குமாரின் திரை மொழி நம் கண் முன்னால் விவரிக்கிறது.

“இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் தனி மனிதர்கள் ( All are individuals ) . இங்கே முறையான வழி என்று எதுவும் இல்லை. அவரவர் வழி அவரவருக்கு .” என்கிறார் நீட்ஷே. அதுதான் லிங்கம் திரைமொழியின் அடிநாதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. முனைப்பு இருக்கிறது. உணர்ச்சிகள் இருக்கின்றன. அவை இன்னொருவரோடு தொடர்பு படும்போது முரண்கள் உருவாகின்றன. அந்த முரண்கள் ஒரு மனிதனை எதுவரை கொண்டு செல்லும் என்பதை லட்சுமி சரவணக்குமார் ஒரு தேர்ந்த இயக்குனராக மாறி கதை சொல்லி இருக்கிறார்.

உண்மையில் இது அவருடைய முதல் படைப்பு என எங்கும் சொல்லிவிட முடியாத அளவிற்கு முதிர்ச்சியோடு ஒரு கதையை அணுகி இருப்பதில் லட்சுமி சரவணகுமார் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார். கதைக்களன், கதாபாத்திரங்கள், வசனங்கள், உடைகள், கதை நடக்கும் காலகட்டத்தை நுட்பமாக விவரிக்கும் கலை இயக்க தேர்ச்சி, என அனைத்திலும் கைதட்ட வைப்பதில் ஒரு இயக்குனராக கூட்டு உழைப்பின் விளைவை கோருபவராக லட்சுமி சரவணகுமாரின் அசாத்திய கவனம் நமக்கு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

“லிங்கம்” என்ற ஒரு சாதாரண கபடி விளையாடி கொண்டு ஒரு அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற இளைஞனின் வாழ்க்கை , எவ்வாறெல்லாம் திசை மாறி எங்கே சென்று முடிகிறது என்பதை உண்மை கதை மாந்தர்களை வைத்து திரை மொழி வடிவமைத்திருக்கும் இயக்குனர் லட்சுமி சரவணகுமார் அதற்கான கதாபாத்திரங்களை அதற்குரிய நடிகர்களை தேர்வு செய்வதில் ஒரு எழுத்தாளனுக்கே உரிய படைப்பாளுமை மிகப்பெரிய உதவி செய்திருக்கிறது.

எட்டு பகுதிகளாக முதல் சீசன் ரெடியாகி இருந்தாலும், ஒன்றைப் பார்த்தால் இறுதிவரை பார்க்க வைக்கிற சுவாரசிய கதை சொல்லலால் பார்வையாளர்களை வேறு எங்கும் செல்ல விடாமல் தக்க வைக்கின்ற சாமர்த்தியம் முதல் படைப்பிலேயே லட்சுமி சரவணகுமாருக்கு கைவந்தது உண்மையில் ஆச்சரியம்.

80 களின் இறுதிக் காலகட்டத்தில் தென் தமிழகத்தின் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த அசலான மனிதர்களின் வாழ்வியல் பின்புலத்தை விவரிக்கிற மெனக்கிடல்‌ இந்தத் தொடரை மற்ற தமிழ்த் தொடர்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

பதைபதைப்பும் , மனித வாழ்க்கையின் எதிர்பாரான்மையும் , தன்முனைப்பும் வன்மமும் கலந்துக் கட்டிய மனிதர்களும் உலவுகிற இந்தக் கதைக்களத்தில் எல்லோராலும் தொடர்புக் கொள்ள முடிகிற வாழ்வின் அன்றாடப் பாடுகள் ஊடு பாவாய் நிறைந்து இருப்பது லிங்கத்தின் ஆகப்பெரும் பலம்.

வெறும் வன்முறையின் நிலக்களனாக திரைக்கதையை பயன்படுத்தாமல் மனித வாழ்வின் அலைகழிப்பு, காதல், பாசம் நட்பு நன்றி என தனிமனித உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திருப்பது கதையை நெருக்கமாக உணர வைக்கிறது.

உண்மைக் கதையை சொல்வதில் மிகப்பெரிய தடை என்னவெனில், ஒரு படைப்பாளனுக்குரிய கலை அழகும், புனைவும் இடம் பெற முடியாத அளவிற்கு இருக்கும் நெருக்கடிகள். அவற்றை இயக்குனர் லட்சுமி சரவணகுமார் தன்னுடைய முதல் படைப்பிலேயே வென்று முத்திரை பதித்திருக்கிறார்.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அனைவரும் அவசியம் பாருங்கள்.

மாபெரும் அனுபவத்தை தருகிறான் லிங்கம்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

மகேந்திரன் என்ற முன்னாள் தோழருக்கு..

ஜீரணிக்க முடியாத ஒரு செய்தி. எனது அரசியல் ஆசான் தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது.

ஆழ்ந்த வாசிப்பாளர், கொள்கைப் பற்றாளர் , தத்துவ நோக்கில் தடம் பிறழாமல் பயணித்தவர் என்ற பார்வையில் அவரை தரிசித்த எனது கண்களை நானே இன்று நொந்துக் கொண்டேன்.

எந்த தத்துவமும் கொள்கையும் அற்ற ஒரு கூட்டம் வெறும் ரசிக மனப்பான்மையை மூலதனமாக வைத்து தமிழக ஆட்சி பீடத்தை பிடித்தது என்பது நம் தலைமுறையில் நிகழ்ந்துவிட்ட, அண்ணன் சீமான் சொல்வது போல அரசியல் பேரிடர்.

உண்மையில் தத்துவங்களும் இசங்களும் பொய்யாக்கப்பட்டு , வெறும் கவர்ச்சி மேலோங்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும்.

இந்த விபரங்கள் எல்லாம் தோழருக்கு சொல்லி புரிய வேண்டியவை அல்ல. அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அவர் எடுத்த இந்த முடிவு அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய பிம்ப அழிப்பு. ஒரு வகையான தற்கொலை.

ஏன் இந்த தற்கொலை நடந்திருக்கிறது என யோசித்துப் பார்த்தால்.. உண்மையில் பல்வேறு காரணங்கள். இனி கொள்கை அரசியல் இந்த மண்ணில் எடுபடாது என அசலான கொள்கைகளை வாழ்க்கை முறையாக கொண்டவர்களே சிந்திக்க தொடங்கி விட்டார்கள் என பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது.

உதிரிக் கூட்டமாக மாறிவிட்ட தமிழ்ச் சமூகத்தில் இனி தத்துவங்களையோ கொள்கைகளையோ நம்பி பயணிக்க முடியாது என தோழர் மகேந்திரன் முடிவு எடுத்தது அவரையெல்லாம் முன்மாதிரியாக கொண்டு பயணிக்க துடிக்கிற எனக்கு எல்லாம் பெரும் அதிர்ச்சி.

மக்களுக்கு நல்லது செய்வது தானே கொள்கை.. எனப் போகிற போக்கில் அடித்து விடுவதற்கு அங்கே ஏற்கனவே ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆழப் பயின்ற தோழர் சி மகேந்திரன் அந்தக் கூட்டத்தின் நடுவே என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.

என்னுடைய முகம் மட்டும் தான் என்னுடைய மூலதனம் என்று வெளிப்படையாகவே கவர்ச்சியை சொல்லி அரசியலில் நிற்கிற

விஜய்க்கு எதிர் முனையில் தான் தோழர் எல்லாம் நின்று இருக்க வேண்டும்.

ஆனால் காலம் கருணையற்ற கொலைகாரன் அல்லவா..

இறுதியாக எங்கள் தோழரையும் அந்தக் காலம் கொன்றுவிட்டது.

ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது எனக்கு கடுமையான வருத்தம். இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் ஜனநாயகம் அற்ற , குழு அரசியலை சார்ந்த உட்கட்சி அரசியலால் வெளியேற்றியதன் விளைவு, கொள்கையை பார்க்காமல் போகிற போக்கில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டதன் பலன்.. தோழர் சி மகேந்திரன் போன்றவர்கள் இடம் மாற தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு அதிமுக விஜயபாஸ்கர் போன்றவர்கள் இடம் மாறுவது குறித்து எந்த விதமான அதிர்ச்சி மதிப்பீடும் இல்லை. ஆனால் தோழர் சி மகேந்திரன்

மாறியது உண்மையில் எனது தலைசிறந்த ஆசிரியரை எவ்விதமான அறமும் இல்லாத இந்த கும்பல் மனப்பான்மை சமூகத்தின் முன்பாக வைத்து பலி கொடுத்து விட்டது போல உணர்ச்சி.

இப்படி எல்லாம் கீழே உருண்டு பிரண்டு தத்துவமற்ற நிலையில் தன்னை தள்ளிக் கொண்டு ஒருவகையில் தற்கொலை செய்து கொண்டு எதற்காக இந்தக் கேடுகெட்ட அரசியலில் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் மனது யோசிக்க தோன்றுகிறது.

தோழர் நல்லகண்ணு அவர்களின் மனதிற்கு மிக நெருக்கமான அவரது மாணவரான தோழர் சி மகேந்திரன் இன்று இடம் மாறி இருக்கும் காட்சி.. நல்ல வேளை, மாமனிதர் நல்லகண்ணு உயிருடன் இல்லை என்பதை நமக்கு ஆறுதலாக தெரிவிக்கிறது.

ஆழ்ந்த இரங்கல் தோழர்.

வாழ்வின் அசலான நகல்.

வாழ்வைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா..

மனதில் உள்ள எல்லாவிதமான வெறுப்பு உணர்ச்சிகளும் அழிந்து இந்த வாழ்க்கையை அசலாக எதிர் கொள்ள வேண்டுமா…??

முன் முடிவுகள் ஏதும் பயன் தராத, வாழ்வின்

எதிர்பாரான்மை பற்றி விளங்கிக் கொள்ள வேண்டுமா..??

ஒரு அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

காத்திருப்போர் மத்தியில் ஒரு நாள் தங்கி இருங்கள்.

சுற்றி இருக்கிற நோயாளிகள், நோயாளிகளை அழைத்து வந்தவர்கள் என எல்லோரையும் கவனியுங்கள்.

மேற்சொன்னவை அனைத்திற்கும் பதில் கிடைத்துவிடும்.

சமீப காலமாக மருத்துவமனைகளிலேயே திரிந்துக் கொண்டிருப்பதால்,‌ புரிந்துக் கொண்டிருப்பவை ஏராளம்.

“என்றும் சுஜாதா” என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. எழுத்தாளுமை எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகளில் இருந்து சுவாரசியமாக சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது. ரசித்து படிக்கும் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

அதில் ஒரு கட்டுரை இருக்கிறது. நோயுற்ற தன் தந்தைக்காக மருத்துவமனையில் தங்கியிருக்கும் அனுபவத்தை சுஜாதா எழுதி இருக்கும் விதம் உண்மையில் கலங்கடிக்கிறது.

மருத்துவமனைகள் ஒரு தனித்த உலகம். இரவிலும் அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனிதர்கள் நிரம்பிய உலகம். ஒருவர் இரவு முழுக்க அமர்ந்து கண்கலங்கி அழுது கொண்டிருக்கும் போது, அருகிலேயே இன்னொருவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கின்ற முரண்கள் நிரம்பிய உலகம். ஒரு வகையில் மருத்துவமனைகள் தான் உலகின் அசலான நகல்.

எல்லோரும் தனி மனிதர்கள் என்பதை மருத்துவமனைகள்தான் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் மறைந்த இயக்குனர் இமயம் அப்பா பாரதிராஜா இறுதி காலத்தில் வீட்டிலேயே ஒரு சிறு மருத்துவமனை அமைத்துக் கொண்டு செவிலியர் உதவியோடு நாட்களை நகர்த்தியதாக வரும் தகவல்கள், காசு பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கை முழுமை அடையாது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.

மருத்துவமனைகளில் ஏராளமான முதியோர்களை பார்க்கிறேன். அவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் மகன்களையும் மகள்களையும் வயதான அவர்களது வாழ்க்கை துணைவியர்களையும் பார்க்கும் போது உண்மையில் அவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என தோன்றுகிறது.

நேற்று மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது ஒரு விசித்திரமான காட்சியை பார்த்தேன். வயதான தந்தையோடு அவசர அவசரமாக ஐ சி யூ க்குள் நுழைந்தார் ஒருவர். அவர் உடை , அவர் பயன்படுத்தும் சொற்கள் அலை பேசி ஆகியவை ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் வேலை செய்வதை காட்டின.

சென்ற வேகத்தில் தந்தையை ஐ சி யூ வில் சேர்த்துவிட்டு வெளியேறி வந்தார். அங்கே காத்திருந்த செவிலியரிடம் தனக்கு திருச்சியில் விமானத்திற்கு நேரமாகி விட்டதாகவும், நாளை அதிகாலை அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், விடுமுறை கிடைக்கவில்லை எனவும், அதனால் தன் தந்தையை இரண்டு நாட்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,அதற்கு எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை எனவும் , இரண்டு நாட்கள் கழித்து தனது தங்கை ( அவரும்..) அமெரிக்காவில் இருந்து வந்து விடுவார் எனவும், அதற்குப் பிறகு அவர் பார்த்துக் கொள்வார் எனவும், ஏதோதோ பேசிக் கொண்டிருந்தபோது.. அவர் தந்தைக்கு உள்ளே ஏதோ சீரியஸ் ஆகிவிட்டது.

உள்ளே செவிலியர்களும் மருத்துவர்களும் ஓடுகிறார்கள். இந்த மனிதர் வாசலில் நின்று கொண்டு யாருக்கோ அலைபேசியில் அழைத்து கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக அவரது தங்கையாக இருக்கலாம். ( நிறைய f**ck, shit..). ஏதோ மாட்டக் கூடாத இடத்தில் சிக்கிக் கொண்டது போல தவித்துக் கொண்டிருந்த அந்த ஆளை பார்க்க ஏனோ பிடிக்கவில்லை.

அப்போதுதான் சுஜாதா எழுதிய “அப்பாவின் மருத்துவமனை” இரவு கட்டுரை நினைவுக்கு வந்தது.

புனித குர்ஆனில் இறை மொழி ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது.

“குழந்தைகளாக நீங்கள் பிறந்த போது உங்களது பெற்றோர் உங்களை எப்படி பேரன்போடு கவனித்து பராமரித்து பார்த்துக் கொண்டார்களோ , அதையே வயதான காலத்தில் அவர்களுக்கு நீங்கள் திருப்பி செய்வீர்களாக !”

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹீமாயூன் கபீர் நமக்கெல்லாம் மேடையிலே வேகமாக பேசக்கூடிய ஒரு பேச்சாளராக தெரியும். ஆனால் வீட்டில் அவரைப் போன்ற மகனை பார்க்க முடியாது. அவருடன் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்தாலும் அவருடைய தாய் தந்தையரை அவர் இறுதி வரை வைத்து பராமரித்ததை நானெல்லாம் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். ஆட்களைக்கூட வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார். தனது மகன்களை வைத்தே தன் தாயை அவர் கவனித்துக் கொண்டார். குறிப்பாக அவருடைய மூத்த மகன் இஜா தன்னுடைய பாட்டியை குளிக்க வைத்து அவருக்கு பவுடர் போட்டு உடைகள் அணிவித்து பத்திரமாக பார்த்துக் கொண்டதை நானே சட்ட பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை அண்ணன் ஹீமாயூனிடம் வெளிப்படையாகவே கேட்டேன். உங்கள் தகுதிக்கு ஒரு ஆள் வைத்து அம்மாவை பார்த்துக் கொள்ளலாமே எனக் கேட்டபோது..

அவர் கனிந்தக் குரலில் சொன்னார்.

” யாரோ ஒருவரை பணத்திற்காக வேலைக்கு வைத்து விட்டு… அதெல்லாம் அம்மாவுக்கு சரியா வருமாடா தம்பி..??

நாங்கள் எதற்கு இருக்கிறோம்.?? அதைவிட உலகத்தில் முக்கியமான வேலை என்ன இருக்கிறது..?? என்று கேட்டார்.

நியாயம் தான்.

ஆனால் நான் மருத்துவமனையில் பார்த்த அமெரிக்கா காரன்தானே .. நம் ஊரில் பெரும்பான்மை..??

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு அவரது இறுதிக் காலத்தில் ஆறுதலாக உடனிருந்து, கங்கை அமரன் “சிறு பொன்மணி அசையும் விழி..” என்ற பாடலை ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்திலிருந்து பாடிக் காட்டிய அந்தக் காணொளியை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

அந்தப் பாடலை பாரதிராஜா ஒரு நூலேணி போல பயன்படுத்தி கடந்த காலத்தில் நுழைய முயற்சிக்கிறார்.

எவ்வளவு கவித்துவமான காட்சி அது ??

நோய்களும் முதுமையும் உலகைப் புரிந்து கொள்வதற்கான சாவிகள் என்கிறார் ரூமி.

ஏனெனில் அவைகள் தனிமைகளை அழைத்து வந்துவிடுகின்றன.

தனித்திருக்கும் போது தான் நாம் நம்மையே உணர்கிறோம்.

யாராலும் மீட்க முடியாத, கைவிடப்பட்ட சூழ்நிலைகளும் ஒரு வகையில் தேவையாகத்தான் இருக்கின்றன.

அதிலிருந்து தான் நாம் மீண்டும் பிறக்க வேண்டி இருக்கிறது.

பாரதிராஜா- காலத்தை உறைய வைத்த கலைஞன்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இறந்துவிட்டார் என்கின்ற செய்தி எனக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் சென்ற வருடம் மார்ச் மாதம் அவருடைய ஒரே மகன் மனோஜ் எதிர்பாராத விதமாக இறந்தபோதே அவர் அன்றே மனதளவில் இறந்து விட்டார். அவரைப் போன்ற மனிதர்கள் உயிரைத் தாண்டிலும் உணர்ச்சிகளை மதிப்பவர்கள்.

Cinema Paradiso என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில்.. இடிக்கப் போகும் ஒரு திரையரங்கில் அமர்ந்து கொண்டு கடைசியாக ஒரு திரைப்படம் பார்த்த ஒரு ரசிகன் போல இன்று செய்தி வந்தவுடன் அவருடைய கிளாசிக் திரைப்படங்களின் சில மறக்க முடியாத காட்சிகளை மீண்டும் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாரதிராஜா என்கின்ற பெரும் கலைஞன் நம்மிடையே தோன்றி வாழ்ந்து மறைவதெல்லாம் ஒருவகை கொடுப்பினை தான். அவரைப்போல உணர்வுத் தளத்தில் திரைமொழியை கையாளுபவர் தோன்றுவது எப்போதாவது ஒருமுறைதான். எங்கள் தலைமுறையில் நாங்கள் பாரதிராஜா இயக்கத்தில் வைரமுத்து வரிகளில் இளையராஜா இசையில் பாடல்களை கேட்டு பார்த்து மகிழ்ந்தோம் என்பதெல்லாம் உண்மையிலேயே வரம் தான்.

சினிமா ஸ்டுடியோக்களில் அடைந்து கிடந்த தமிழ் சினிமாவை விடுதலை செய்து வெளியே அழைத்துச் சென்று வயல்வெளிகளிலும் ஆற்றங்கரைகளிலும் கிராமத்து தெருக்களிலும் புழுதி காடுகளிலும் உலவ வைத்தவர் பாரதிராஜா.

30க்கும் மேற்பட்ட அவரது திரைப்படங்களில் காதலை அவர் கையாண்ட விதம் போல தமிழ்நாட்டின் வேறு எந்த இயக்குனரும் இதுவரை கையாண்டதில்லை. பதின் பருவத்து காதலுக்கு ஒரு அலைகள் ஓய்வதில்லை., நடுத்தர வயது காதலுக்கு ஒரு கடலோரக் கவிதைகள், முதிர்வயது காதலுக்கு ஒரு முதல் மரியாதை என அவர் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு காதல் கதையை சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவரது முதல் படமான 16 வயதினிலே காதல் என்பது வெறும் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல, மனதை சார்ந்தது என்பதை காவியத் தனமாக எடுத்துக் கூறியது. அவரது காதல் ஓவியங்கள்- நிறைவேறாத காதலின் தவிப்பை பற்றியது. அவரது கல்லுக்குள் ஈரம் – ஒரு தலைக் காதலின் அவஸ்தையை பற்றியது. அவரது மண்வாசனை- உறவுமுறைகளுக்குள் சிறுவயதில் இருந்து எழுகின்ற காதலைப் பற்றியது.

குறிப்பாக அவரது இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் கடலோரக் கவிதைகள். அந்த முட்டம் கடற்கரையும், ஓங்கி உயர்ந்து விண்ணை தொடுகின்ற அந்த தேவாலயமும் இன்றளவும் நம் மனதில் அலையடிக்க வைப்பவை.

குறிப்பாக.. அதில் வருகின்ற வசனங்கள்.

“கல்யாணம்னு சொல்றீங்களே.. பெண்ணுக்கிட்ட இத பத்தி சொன்னீங்களா..??

பெண்ணின் தகப்பனார்:

நாம என்ன அவளை கிணத்துலயா பிடிச்சு தள்ளிட போறோம் ??

அதுக்கு அவளை கிணத்திலேயே தள்ளி இருக்கலாம்.”

இப்படி படம் முழுக்க ரசனை மிக்க காட்சியமைப்புகள்.

அதேபோல முதல் மரியாதை. இந்தப் படத்தைப் பற்றி தனி புத்தகமே எழுதிவிடலாம். அவ்வளவு இருக்கிறது. இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த காவியங்களில் முதல் மரியாதைக்கு முக்கியமான இடம் இருந்து கொண்டே இருக்கிறது.

தன் படங்கள் முழுக்க அசத்தலான எடிட்டிங் காட்சி அமைப்புகளோடு, குறியீடுகளோடு திரை மொழியை உருவாக்குவதில் வல்லவர் பாரதிராஜா. முதல் மரியாதை திரைப்படத்தில் இந்த யுத்தியை இளையராஜாவின் இசை உதவியோடு பரவலாக பயன்படுத்தி இருப்பார்.

அவருடைய வேதம் புதிது மிக முக்கியமான ஒரு திரைப்படம். அது எந்த அளவுக்கு முக்கியமானது என்றால்..வேதம் புதிது போன்ற ஒரு திரைப்படத்தை இன்று நினைத்தாலும் எடுக்க முடியாது என்கிற அளவுக்கு துணிச்சல் மிகுந்த கதை அமைப்பு. சுயசாதி மறுப்பும், மனித நேயமும் இணைகிற அந்த காவியக் கணங்களை நம் கண் முன்னே தரிசனமாக்கி உலவ விட்டிருப்பார். வேதம் புதிது “சரிதா கதாபாத்திரம்” அதிகம் பேசப்படாத அற்புதம்.

அரசியல் அடிமைத்தனத்திற்கு சாட்டையடி கொடுக்கும் என் உயிர் தோழன் அப்போது அதிகாரத்தில் உச்சத்தில் இருந்த திராவிடக் கட்சிகளுக்கு மிகப்பெரிய விமர்சன திரைப்படமாக அமைந்தது.

இன்றைக்கும் எண்பதுகளின் கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு அவரது திரைப்படங்களே ஆவணங்கள். ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் என்னென்ன சடங்குகள் என்னென்ன முறைப்படி நடக்க வேண்டும் என்பதை மண்வாசனை திரைப்படத்தில் அணு அணுவாய் காட்சி அமைப்பில் செதுக்கியிருப்பார்.

கடந்து போன ஒரு காலத்தில் நினைவுகளாக தேங்கிவிட்ட இது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் பாரதிராஜா திரைப்படங்களில் மட்டுமே ஆவணங்களாய் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக்கப்பட்டிருக்கின்றன.

திரைக்கதை அமைப்பில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் உணர்ச்சிமிக்க மனிதராக பாரதிராஜா திகழ்ந்தார். காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது காவிரி நீர் தர மறுக்கின்ற கர்நாடகத்துக்கு தமிழ்நாட்டின் மின்சாரம் அளிக்கக்கூடாது என நெய்வேலிக்கு சென்று போராடியவர். ஈழத்தின் இறுதி நாட்களில் தமிழ் ஈழ ஆதரவு இயக்குனர்களை அழைத்துக் கொண்டு வீதி வீதியாக காங்கிரசுக்கு எதிராக பரப்புரை செய்தார். அவர் அந்தக் காலத்தில் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் வழங்கிய ஆகப்பெரும் கொடை.. அண்ணன் செந்தமிழன் சீமான்.

பாரதிராஜா திரைப்படங்களைப் பற்றி ஒரு கதாகாலட்சேபம் போல பாரதிராஜாவிடமே சொல்லிக் காட்டும் ஒரு வாய்ப்பினை திரைப்பட தயாரிப்பாளர் ஆருயிர் நண்பர் சுரேஷ் காமாட்சி ஒருமுறை எனக்கு அவரது பிறந்தநாளில் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது படங்களில் உள்ள முக்கியமான காட்சிகளை அவரிடமே விரிவாக எடுத்துச் சொல்கின்ற ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கேட்டுக் கொண்டிருந்தவர்.. ஒரு கட்டத்தில் “இந்த காட்சிகளை எல்லாம் எடுக்கும் போது, நீ பேசுவது போல எல்லோரும் பேசுவார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எடுக்கவில்லை. அப்படியே இயல்பாக எடுத்ததுதான்.” என்று தன்னடக்கத்தோடு சொன்னார். அதற்குப் பிறகு அண்ணன் சீமான் பிறந்த நாளில் நேரடியாக சந்தித்தபோது கட்டி அணைத்துக் கொண்டார். அப்போதுதான் அவர் காதில் ஒரு கேள்வி கேட்டேன். காதலை உருக உருக இப்படி எடுத்து வைத்திருக்கிறீர்களே.. உங்கள் காதலியின் பெயர் என்ன..??

கேள்வி தவறு என்றார்.

“காதலிகள்” என்று சொல்லி சத்தமாய் சிரித்தார்.

அந்த காலகட்டத்தில் நண்பர் சுரேஷ் காமாட்சி எங்களை எல்லாம் வைத்து இயக்குனர் இமயத்திற்கு ஒரு விழா எடுக்க ஏற்பாடு செய்தார். ஒரு மேடை.

நடுவில் ஒரே ஒரு சிம்மாசனம். அதில் இயக்குனர் இமயம் மட்டுமே அமர்ந்திருப்பார்.

அவருக்கு எதிரே ஒரு சிறிய மேடை. நாங்கள் அதில் பேச வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு இருந்தோம்.

அதற்குப் பிறகு மோசமான அவரது உடல் நிலையும் காலச் சூழலும் ஒத்துழைக்கவில்லை.

எந்த நொடியிலும் பாரதிராஜாவை அவரது செல்லுலாய்ட் காவியங்கள் மூலமாக நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமே அந்தப் பெருங்கலைஞன் நமக்கு செய்து விட்டுப் போயிருக்கிற கடைசி கருணை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்து இந்திய வரைபடத்தில் எட்டிப் பார்த்தாலும் கிட்டி விடாத அல்லிநகரம் என்ற ஒரு சிற்றூரில் இருந்து சின்னசாமி என்ற இளைஞன் கருத்த உடலோடு கனவு விழிகளோடு சென்னையில் காலடி எடுத்து வைத்த போது.. கண்டிப்பாக எந்த அதிசயங்களும் நிகழவில்லை.

ஆனால் அந்த மனிதன் பாரதிராஜாவாக வாழ்ந்து முடிந்த போது.. அதிசயமாய் வாழ்ந்து விட்டு முடிந்திருக்கிறார்.

தெற்கத்தி கரிசல்காட்டு காடுகளும், முட்டம் கடற்கரை பேரலைகளும், இன்றைய நாளில் சிலிர்த்து அடங்கியிருக்கும்.

கனவுலகிலேயே தேங்கிவிட்ட வெள்ளை தேவதைகள் இன்றைய தினம் கருப்பு ஆடை அணிந்திருப்பார்கள்.

ஆனால் பாரதிராஜாவோ.. ஆகாயத்தின் மறுபக்கத்திற்கும் சென்று.. ஏதோ ஒரு தேவதூதனிடம் காதல் கதை ஒன்றை உணர்வு பூர்வமாக சொல்லிக் கொண்டிருப்பார்.

காலத்தை ஒரே இடத்தில் உறைய வைத்த அந்தக் கம்பீர பெருங்கலைஞனுக்கு..

எனது கண்ணீர் வணக்கம்.

இசைக்கு பிறந்த நாள்!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் “தனிப்பட்டவை” என்ற ஒரு வகைமை இருக்கும்.ஆங்கிலத்தில் அதை Private, Personal போன்ற சில சொற்களில் அழைக்கிறார்கள்.

அப்படி மனிதனுக்குள்ள தனிப்பட்டவையாக இருக்கும் பலவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது. அவைகள் அவனோடு தோன்றி அவனோடு வாழ்ந்து அவனோடு முடிபவை.

இதில் இளையராஜா விதிவிலக்கு.

ஏறக்குறைய தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இளையராஜா அவர்களுக்கே உரிய அந்தரங்கமான Personal தான். என்ன ஒன்று என்றால்.. இது பற்றி அவர்களால் பலரோடும் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு இளையராஜா. எண்பதுகளில் பிறந்த பலருக்கும் இளையராஜா தான் தாலாட்டு. பதின் வயதுகளில் கிடைத்த முதல் முத்தத்தில் இளையராஜா தான் முதல் காதல். முதல் காமம். ஊர் திருவிழாக்களில் இளையராஜா ஒலிக்க தொடங்கியவுடன் திருவிழாக்கள் வந்துவிட்டன. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு இரவில் வலியால் கசிந்து கொண்டிருந்த விழிகளுக்கு.. இளையராஜா பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

வேலை கிடைக்காமல் முகவரி தெரியாத ஊரில் எங்கோ கிடைத்த ஒரு இடத்தில் பசியோடு தனியே படுத்துக் கொண்டிருந்தபோது, இளையராஜா குரல் மூலம் தான் அவரவர் சொந்த ஊரின் சுவாசத்தை பருகிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு இளையராஜா எப்படி என்றால்.. உங்களைப் போல எல்லாமும் தான்.

எல்லோருக்கும் சொல்லிக் கொள்வதற்கும், சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நெகிழ்ந்து கொள்வதற்கும், யாருக்கும் தெரியாமல் விழிகளில் வடிகிற ஒரு துளி கண்ணீரை சிறிய வலியோடும், நிறைய நினைவுகளோடும் உணர்ந்து நினைக்கின்ற ஒரு காலம் இருக்கும் இல்லையா…

அந்தக் காலத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான்.

இளையராஜா சிம்பொனி இசைத்து சாதனை படைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு எளிய மனிதனின் வாழ்க்கையிலும் அவனது நிராதரவு பொழுதுகளில்… அவரது வயலின்களும், அருண் மொழியின் ஒற்றைப் புல்லாங்குழலும்.. கொடுக்கின்ற ஆறுதல்.. சிம்பொனி இசையெல்லாம்

அதற்கு முன்னால் கொஞ்சம் சின்னது தான்.

இளையராஜாவை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு.. சற்றே சிந்தித்து, உள்ளுக்குள்ளேயே உருகி, இப்படி ஒரு கேள்வியா என நினைத்து பதில் சொல்ல சில மணித்துளிகள் எடுத்துக் கொள்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை..,

இளையராஜா என்பது வெறும் பெயர் அல்ல.

அவர் நமது வாழ்க்கை.

தீவிர எதிர் முனைகளான அளவற்ற அறமும், தீரா வன்மமும் இரண்டும் எதிர்பாராத வகையில் கலந்து நிற்கிற நமது இயல்பான வாழ்க்கையில்.. அவர் மட்டும் தான் தேங்கிவிட்ட கடவுளின் அமுதம்.

கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது.

ஆனால் எங்கள் உலகத்தை படைத்தது இளையராஜா தான்.

எங்கள் தலைமுறையின் மகத்தான மாமேதைக்கு.. திசை உணர்த்திய இசைக் கடவுளுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தோற்றவர்களின் வரலாறு..!

.

நாங்கள்

தோற்றவர்கள் தான்.

ஆனாலும்..

அனல் வீசும்

பொழுதுகளில்

நாங்கள் சளைக்காமல்

சண்டையிட்டவர்கள்.

ஆன்மாவின்

குருதியோடு

கலந்துவிட்ட

லட்சியத்திற்காக

ஒரு வாழ்வினையே

விலையாக கொடுத்து

எதிர்காலக் கனவிற்காக

தளராமல் நின்றவர்கள்.

எங்களது மூத்தோர்

தங்கள் மரணத்தின்

இறுதிப் பொழுதில்

உதிர்த்த

கடைசிச் சொல்லுக்காக

எதையும் இழக்கத் துணிந்த

எங்களது தோல்வியின்

வரலாறு ,

எந்த விலையும்

கொடுக்கப்படாமல்

மலிவாக கிடைத்த

உங்கள் வெற்றியின்

பெருமிதப் பாடலை விட

கம்பீரமானது.

அதோ..

யார் யாரோ

ஓடி வருகிறார்கள்.

புற்றீசல் போல.

மினுக்கும் வெற்றியின்

கதகதப்பான குடைக்குள்

ஒளிந்துக் கொள்ள.

வெற்றிகளின் கதை

அப்படித்தான்.

ஈர்க்கும்.மினுக்கும்.

பாம்பின் நாவாய்

அலையும்

அதிகாரத்தின்

சுவைக் காட்டி

மயக்கும்.

ஆனால்

தோற்றவர்களின்

வரலாறு

அப்படியல்ல.

வலிகளோடு

பிறக்கும்

ஒரு பெருமூச்சுக்குப் பிறகு,

நாங்கள் குருதித் தோய்ந்த

ஆயுதங்களை

மீண்டும் இறுகப்பற்றுகிறோம்.

இதோ..

ஒரு யுகத்தின் கனவை

சுமந்துக் கொண்டு

இதோ..

நாங்கள் காயங்களோடு

தயாராக இருக்கிறோம்.

அடுத்த போராட்டத்திற்காக.

நாங்கள் “மற்றவைகள்..”

நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறது.

மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், சில இடைத்தேர்தல்கள் என எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதில்லை.

கொள்கையை முன்னிறுத்துகிறோம். இரவு பகல் பாராது வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி வாக்குகள் கேட்கிறோம்.

தெருமுனை கூட்டமோ பொதுக்கூட்டமோ ஏதோ ஒன்று நடத்தி சாலையில் கடந்து கொண்டிருக்கின்ற மக்களை நிறுத்தி வைத்து தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் மனங்களில் விதைக்கிறோம்.

ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேச்சு மொழி. பெரும்பாலும் உரையாடல்களில் ஆங்கிலம் தவிர்த்த தமிழ் மட்டுமே மூச்சு மொழி.

அண்ணன் சீமான் வரும்போது கூட தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மேதகு வாழ்க என்ற முழக்கம் மட்டுமே. மாலைகள் இல்லை. சால்வைகள் கிடையாது.

எந்தக் கூட்டமும் ஆபாச நடனங்கள் சினிமா பாடல்கள் போட்டு மக்களை திரட்டும் கூட்டம் அல்ல.

117 ஆண்கள் 117 பெண்கள் என 234 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள்.

மக்களுக்காக போராடுகின்ற போராளிகள்.

எங்களைப் போல மற்ற யாரும் இல்லை.

ஆனாலும் நாங்கள் “மற்றவைகள் தான்”.

🔸

எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டை முழுமையாகக் கடந்த ஒரே தலைவர். எல்லா தலைவர்களை தாண்டிலும் அதிக கூட்டங்களில் பேசியவர். மக்களின் போராட்டக் களங்களில் பங்கேற்பவர். ஊடகங்களை தினந்தோறும் சந்திப்பவர். எப்போதும் களத்திலே நின்று போராடுபவர்.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆடு மாடு மாநாடு மலைகள் மாநாடு தண்ணீர் மாநாடு என தொடர்ச்சியாக மக்கள் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தி சூழலியல் சார்ந்து இயங்கும் ஒரே தலைவர்.

கருணாநிதியின் பேனா சிலையை தனி ஒருவனாக நின்று போராடி தடுத்தவர்.

தஞ்சை பெருவுடையார் கோவில் உச்சியில் தமிழ் முழங்க காரணமாய் நின்றவர்.

அவரைப்போல உழைப்பவர் யார் உண்டு இங்கு..?

ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்.”

🔹

60 ஆண்டுகால திராவிட அரசியலின் சீர்கேடுகளை, தமிழ்நாடு அடைந்த பின்னடைவுகளை அம்பலப்படுத்தியதில் சீமானை போல வேறு யாருமில்லை.

இன்று அண்ணன் பேரறிவாளன் வழக்கறிஞராக மாறியதற்கு பின்னால்

சீமான் என்ற தனி மனிதனின் கைதும், வேலூர் சிறைவாசமும் இருக்கிறது. அந்த மனிதன் ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என முழங்கிய போது அருகில் இருந்தவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தோம்.

ஆனாலும் சாதித்தார்.

கதிராமங்கலம் போராட்ட களத்தில், நெடுவாசல் போராட்டக் களத்தில், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் என அவர் கால் படாத பூமி ஏதாவது உண்டா.. வேர்வைத் துளி சிந்தாத நிலம் எங்காவது உண்டா. ?

ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்”.

🔹

மக்களை நம்பி நம்பி மீண்டும் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் உழைப்பை முன்னிறுத்தி உறுதியாக நிற்கிறோம்.

எங்களது களங்கமற்ற உழைப்பை கண்டு கலங்காதவர்கள் யாரும் இல்லை.

ஆனாலும் நாங்கள் சேர்ந்ததில்லை. இந்த இனத்தில் பிறந்தோம். தலைவரை நேசித்தோம். எனவே நம் வாழ்க்கை இப்படியே என்று எங்களை நாங்களே தேற்றி, தலைவரின் முகத்தை மனதில் ஏற்றி இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்”.

🔹

நாளை காலை ஜனநாயகத் தீர்ப்பு எழுதப்பட இருக்கிற இந்த நொடியிலும் கூட என் உயிர் அண்ணன் சீமானை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அவனோடு நான் நிற்பது என் பிறப்பிற்கே பெருமை.

உழைப்பினால் உறுதி ஏறிய அவனது விழிகளில் எந்த நொடியும் சஞ்சலம் குடிபுகுந்ததில்லை.

ஆயிரமாயிரம் அவதூறுகள், பொய்மைகள் என அவனை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளும் அசைக்க முடியா அவனது மன உறுதிக்கு முன்னால் மடிந்து போயிருக்கின்றன.

அவனது படை போரைத் தொழிலாக செய்பவர்கள் அல்ல. வாழ்க்கையாக கொண்டவர்கள்.

ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்.”

🔹

இந்த மற்றவைகள் தான்..

இந்த மண்ணைக் காக்க மக்களை காக்க மொழியை மீட்க இருக்கின்ற கடைசி வாய்ப்பு.

வெற்றியை பரிசளித்தால் மேலெழும்பி பூரிப்போம்.

தோல்வியை பரிசளித்தால் இன்னும் தொலைவு இருக்கிறது என பன்மடங்கு வேகம் எடுப்போம்.

ஏனெனில்

இந்த “மற்றவைகள்” தான்

ஓயாத அலைகளாய் பாய்ந்தவர்களின்

பிள்ளைகள்.

🔹

நம்பிக்கையோடு நாளை

விடியலில் நாங்கள் விழித்திருப்போம்.

விவசாயி சின்னம் மிளிரும் போதெல்லாம்.. தமிழர் வாழ்வு ஒளிரும்.

🔹

ஊடக வியாபாரிகளின் வணிகத்தில் நாங்கள் “மற்றவைகளாக” இருந்து விட்டுப் போகிறோம்.

ஒருபோதும் அலட்சிய பார்வையால் ஊடகங்களை நாங்கள் கடந்ததில்லை.

மௌன கத்தியால் அவர்களை நாங்கள் அவமானப்படுத்தியதில்லை.

பதில் சொல்லாமல் நாங்கள் அவர்களை பதற வைத்ததில்லை.

ஆனாலும் நாங்கள் “மற்றவைகள் தான்”

எங்களது வெற்றிச் செய்தி கூட மற்றவைகளில் வரட்டும்.

ஆனால்.

இறுதியாக ஒன்று.

இந்த “மற்றவைகள்” தான்

உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுதில்

அவர்களுக்காகவும் போராட இருக்கும்

இறுதியான மனிதர்கள்.

🔹

வெறுப்பின் பாலையில்நேசிப்பின் நிழல்

நிலையற்ற காரணங்களுக்காக மனிதர்களுக்குள் ஏற்படும் வெறுப்பினைப் போல உலகத்தில் பரவிய நோய் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் எல்லோரும் நல்ல மனிதர்கள் தான். ஆனாலும் புறச்சூழல் காரணமாக, அல்லது நிலைப்பாடுகள், நோக்கங்கள் என பல்வேறு காரணங்களுக்காக யாரோ ஒருவர் மீது வெறுப்பினை அள்ளி பூசிக்கொள்ளும் போது நாம் நம்மை நாமே வெறுக்கத் தொடங்குகிறோம்.

இதில் நானும் யோக்கியன் அல்ல. எதற்காக இன்னொருவரை வெறுக்க வேண்டும் என்று பலமுறை நானே சிந்தித்து நானும் பலரை வெறுத்தவன் என்ற காரணத்தினால் என்னை நானே மிகப்பெரிய குற்ற உணர்விற்கு உள்ளாக்கி இருக்கிறேன்.

உண்மையில் வெறுப்பு என்பது நீர் போன்றது. மனம் வடிவமைக்கும் எந்த ஒரு பாத்திரத்திலும் அது பொருந்திக் கொள்ளும். முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசியின் கதாபாத்திரம் மிக நுட்பமானது. இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது “அவள் எதுவும் கிடைக்காதவள். அவள் அடைந்தது வெறுப்பை மட்டுமே. அதனால்தான் பார்வையில் மொழியில் அசைவில் எங்கும் வெறுப்பினை உமிழ்ந்துக் கொண்டே இருக்கிறாள் ” என விளக்கம் அளித்தார்.

யாரையும் அழிக்க யாரும் இங்கு பிறக்கவில்லை. வாழும் காலத்தில் சில காலம் இணைந்து வாழ்கிறோம். அலைவரிசை ஒத்துப் போகவில்லை என்றால் விலகிப் போகிறோம். ஆனால் விலகிப் போகும்போது நேசித்த காலங்களை மறந்து விட்டு வெறுப்பை அள்ளி பூசிக்கொண்டு வன்மத்தோடு நம் பிரிவை நாம் நியாயப்படுத்திக் கொள்வதற்காக அடுத்தவர் மீது குற்றம் சாட்டுகிறோம்.

சில மாதங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி ஆகியோரின் விவாகரத்து வழக்கு முடிந்து இருவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகிற காணொளி ஒன்றினைப் பார்த்தேன். இணைந்து வாழ பிடிக்காமல் பிரிந்த ஜிவி பிரகாஷ் தன் இணையர் சைந்தவி அவர்களை மிக மதிப்புடன் தன் காரில் அழைத்துப் போகின்ற அந்த காட்சி உண்மையில் வெறுப்பையெல்லாம் தாண்டி பெற்றுக்கொள்ள வேண்டிய உணர்ச்சிகள் ஏராளம் இருக்கின்றன என்பதை சிந்திக்க வைத்தது.

முற்றிலும் முரணானவர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் மீது எப்படி வெறுப்பினை பிரயோகிப்பது என்று நாம் எல்லாம் சிந்திக்கிறோம். சமீபத்தில் என் மாமா Seenu Jaya Raman புற்றுநோயால் காலமானார். அவர் காலமாவதற்கு முன்பாக அவரிடம் முரண்பட்ட அனைவரையும் அவர் சந்திக்க விரும்பினார். அதற்காகவே ஒரு விழா தயார் செய்தார். ஒரு வகையான பிரிவு உபச்சார விழா போல. ஆனால் அவருக்கு இதுபோன்ற ஒரு நோய் இருக்கிறது என்று தெரியாமல், ஏற்கனவே இருந்த வெறுப்புணர்ச்சியின் காரணமாக எங்களில் பலர் அந்த விழாவை புறக்கணித்தார்கள். அவர் எல்லோரும் வருவார்கள் என பொறுமையாக காத்திருந்தார். ஆனால் நாங்கள் சிலர் மட்டுமே அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கும் அவருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறது என்று தெரியாது.

அவர் என்னிடம் சொன்னார் . ” என்னிடம் அவர்கள் எல்லோரும் நேசித்ததற்கான நினைவுகள் மட்டுமே இருக்கின்றன. அதனால்தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் ‌ ஆனால் அவர்களிடமோ என்னை வெறுப்பதற்கான காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால்தான் அவர்கள் வரவில்லை.”என்று கம்மிய குரலில் அவர் சொன்ன போது எனக்கு அப்போது அதற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மறைவிற்குப் பிறகுதான் அவர் எல்லோருடைய நேசத்திற்காகவும் ஏங்கித் தவித்து இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு அழுது என்ன பயன்..??

அண்ணன் சீமான் தனக்கு முற்றிலும் எதிரானவர்களை கையாளுவதில் எப்போதும் மேன்மையானவர். சமீபத்தில் கூட தன்னை எதிர்த்து நிற்கின்ற காரைக்குடி தவெக வேட்பாளர் மருத்துவர் பிரபு அவர்களை அவர் அணைத்துக் கொண்ட முறையை நாம் பார்த்தோம்.

அதேபோலத்தான் இன்று தஞ்சை மண்டலச் செயலாளராக இருந்து திடீரென மாரடைப்பால் காலமான தம்பி கந்தசாமியின் மறைவு செய்தியை கேட்டபோது‌ உண்மையில் அண்ணன் சீமான் மிகுந்த மனவலி அடைந்தார்.‌ இத்தனைக்கும் தம்பி கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிஜேபியில் இணைந்து நாம் தமிழர் கட்சியை தீவிரமாக விமர்சித்து வந்தார். கட்சியிலிருந்து பிரிந்த நேரத்தில் கடுமையாக கட்சியை அண்ணன் சீமானை தாக்கி காணொளிகள் பேட்டிகள் என வெளியிட்டார். கடந்த மார்ச் மாதத்தில் கூட காணொளி ஒன்றினை வெளியிட்டு கடுமையாக நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமானை விமர்சித்தார். ஆனால் அண்ணன் கந்தசாமி மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற ஒரு செய்தி கேட்ட உடனேயே அவர் கந்தசாமி தன்னை நேசித்த காலங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். எப்பேர்ப்பட்ட தம்பி ! கட்சிக்காக எப்படி நின்றிருக்கிறான் ! எத்தனை முறை எனக்காக திருச்சி விமான நிலையம் வந்திருக்கிறான் என்றெல்லாம் பழைய நினைவுகளில் அவர் மூழ்கிப் போனார். உடனே இரங்கல் அறிக்கை வெளியிட்டு நாம் தமிழர் கட்சி உறவுகள் தம்பி கந்தசாமியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இப்படித்தான் எதிரியாக இருந்தாலும் அவரிடத்தில் பேரன்பு காட்டுகின்ற அவரது குணம் பல சமயங்களில் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே விமர்சிக்கப்பட்டாலும், அதை அவர் கைவிட்டதில்லை. அதை அவர் மாண்பு என்றெல்லாம் புனிதப் படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. மாறாக அதை தன் இயல்பாக கொண்டிருக்கிறார். அவர் மொழியில் அவரே சொல்கிறார். “நாம் எதிர்க்கும் ஒருவர் மீது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக நமக்கு விமர்சனங்கள்/ எதிர்ப்புகள் தோன்றுகின்றனவே ஒழிய, தனிப்பட்ட வெறுப்பு என்பது எவர் மீதும் எப்போதும் இல்லை” என.

வைகோ விற்கும் அண்ணன் சீமானுக்கும் முரண்கள் உச்சக்கட்டத்தில் இருந்த போது வைகோ விற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அண்ணன் சீமான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மருத்துவமனைக்கு விரைந்தார். அவரை மிகுந்த நெகிழ்வோடு வரவேற்ற வைகோ, அதற்குப் பிறகு அண்ணன் சீமானை எங்கும் விமர்சிப்பதில்லை.

அப்படித்தான் மறைந்த கந்தசாமியும். உண்மையில் கந்தசாமியின் ஆழ்மனது அண்ணன் சீமானை எவ்வாறு நேசித்தது என்பதை நான் எல்லாம் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் பிஜேபிக்கு அவன் செல்லும்போது கடைசியாக என்னிடம் பேசினான். பிறகு நாம் தமிழர் கட்சியின் 2026 திருச்சி மாநாட்டிற்கு முதல் நாள் திருச்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது சாலையில் சந்தித்தபோது, என்னை கடந்த அவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து அணைத்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

கட்சியிலிருந்து பிரியும் பலரும் அண்ணன் சீமானை தரக்குறைவாக பேசுவது கண்டு நான் வியந்திருக்கிறேன். சென்ற நொடியில் அண்ணனாக இருந்தவர் எப்படி அடுத்த நொடியில் மாபெரும் எதிரியாக மாறிப்போனார் என்பதில் எனக்கு உண்மையிலேயே கேள்விகள் இருக்கின்றன. அரசியல் நிலைப்பாடுகள் மாறிப் போகலாம். அண்ணன் என்கிற உறவு எப்படி மாறும்.? இப்படி அண்ணனின் அரசியல் நிலைப்பாடுகளை தான் விமர்சிக்க வேண்டுமே ஒழிய உயிராய் நேசித்த அண்ணனை வெறுக்கும் மனது எப்படி உருவாகிறது என யோசித்தால் சத்தியமாக சங்கடம்தான்.

ஏனெனில் சமூக வலைதளங்களில் வெறுப்பினை கக்கி வன்மத்தை துப்பும் அதே நபர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நேரடியாக அவர் முகத்தைப் பார்த்தவுடன் கனிவாகி விடுவதையும் கவனித்து இருக்கிறேன்.

கட்சியில் இருந்து நீங்கிய ஒரு தம்பி ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எனக்கு அழைத்தபோது நம்மை பார்த்து பார்த்து வளர்த்த அண்ணனை ஏன் அப்படி விமர்சிக்கிறாய் எனக் கேட்ட கேள்விக்கு, கனத்த மௌனத்தோடு பதில் சொல்லாமல் கடந்துப் போனதை குற்ற உணர்வு / அல்லது சென்ற இடத்தில் பிழைப்புக்கான வழி என்று எடுத்துக் கொள்வதா என புரியவில்லை.

நான் மிகவும் நேசித்த ஒரு பெண் என்னை விட்டு பிரியும் போது இறுதியாக சொன்ன ஒரு சொல் இன்னும் என்னை கொன்று கொண்டிருக்கிறது. ” உண்மையான நேசிப்பை நீ கொன்று விட்டாய். வாழ்க்கை முழுக்க நீ அதற்காக எல்லோரிடமும் தேடி அலைவாய்.” உண்மையில் அதை அவள் வெறுப்போடு சொல்லவில்லை. மாறாக இப்படி என் வாழ்க்கை அமையப்போகிறதே என்கிற தவிப்போடு தான் சொன்னாள் என்று இப்போது நான் நினைத்துக் கொள்கிறேன்.

வயது ஏற ஏற , பக்குவத்தை வளர்த்துக் கொண்டு சக மனிதர்களை நேசிப்பதற்கான சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில் இந்தக் குறுகிய பட்டாம்பூச்சி வாழ்க்கையில்.. பறப்பதற்கான சிறகுகளை வெறுப்பின் நெருப்பு எரித்து விடுகிறது. நேசிப்பின் தென்றல் மட்டும்தான் சிறகுகளை தழுவி பறக்க வைக்கிறது.

“மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும் போது வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டம் மாறுகிறது” என்கிறார் எழுத்தாளர் ஜி நாகராஜன்.

நேசமித்திரனின் கவிதை ஒன்று உண்டு.

“ஓர் அன்பை அடைந்த பாதையை எப்போதும் மறவாமல் இருங்கள்.

பிறிதொருவராய் அதே பாதையில்

நாம் திரும்ப நேரிடலாம்.

மழை சாட்சி.”

உண்மைதானே. கடலில் இருந்து பிரிந்த நீராவி மீண்டும் மழையாய் கடலுக்கேத்தானே திரும்புகிறது..?

நாமும் அப்படித்தான். மீண்டும் ஒரே இடத்திற்கு தான் திரும்ப இருக்கிறோம் ??

என்பதை புரிந்து கொள்ளும் போது

நமக்குள் வெறுப்பு ஒரு சடலம் ஆகி கனிவின் கல்லறைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பேரன்பின் ஆணிகள் அறையப்படும்.

தேனிசை செல்லப்பா – காற்றில் கலந்த இசை முழக்கம்.

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்த போது சொல்ல முடியாத துயரத்தை மனம் அடைந்தது.

அவருடைய குரல் வெண்கல குரல். ஒலிவாங்கிக்கு முன்னால் அமர்ந்து அவர் கச்சேரிக்கு தயாராகும் முறைமையை பார்ப்பதற்கே அவ்வளவு சிறப்பாக இருக்கும். “தமிழ் தமிழ் தமிழ்” என்று ஒலிவாங்கியை அவர் பரிசோதித்து ‌ தோளில் கிடக்கும் துண்டைச் சரி செய்தவாறே , சின்ன உறுமலுடன் ” செந்தமிழை செந்தமிழ் நாட்டை சிறை மீட்க” எனத் தொடர்ந்து “கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே ! ” என‌ அவர் பாடத் தொடங்கும் போது கம்பீரம் என்கிற சொல்லுக்கு பொருள் நமக்கு தெரிய வரும். அவருடைய பாரதிதாசன் பாடல் வரிசை மிகவும் புகழ்பெற்றது.

“மாங்கிளியும் மரங்கொத்தியும் வீடு திரும்ப தடை இல்ல.. நாங்க மட்டும் உலகத்திலே கூடு திரும்ப வழியில்ல”என அவர் பாடும் போது கலங்காத கண்களில்லை. அதேபோல் “அழகான அந்த பனைமரம், அடிக்கடி என் நினைவில் வரும்” என்ற பாடல் என அடுத்தடுத்து பாடல்கள் பொழியும்போது நமது மரபணுவில் எங்கோ மறைந்திருக்கும் இன உணர்வும் மொழி உணர்வும் கொப்பளிக்க தொடங்கும்.

தேசியத் தலைவர் மேதகு அவர்கள் மறைந்து விட்டார் என்கிற செய்தி காட்டுத்தீ போலப் பரவ தொடங்கிய போது, பெரும்பாலான தமிழ் உணர்வாளர்களுக்கு உண்மையிலேயே மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டது. சிலர் இரவு முழுக்க தூங்காமல் அலைந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது ‌ தீர்த்தார்கள். சிலர் குடியில் வீழ்ந்தார்கள். அப்போதுதான் மாமன் மறத்தமிழ் வேந்தன் எழுதிய “என் தலைவர் சாகவில்லை, என்றும் புலி ஓய்வதில்லை” என்ற பாடல் ‌ ஐயாவின் குரலில் வெளிவந்த போது அது பலரின் உயிரையும் மனநிலையையும் காத்தது.

உண்மையில் ஐயாவின் குரல் அண்ணன் சீமான் என்று சொன்னது போல தேனிசை என்ற சொல்லுக்கு ஏற்றது போல மெல்லிய குரல் அல்ல. ஏழு கட்டை குரல் என்பார்கள். அதுபோல

அது ஏறக்குறைய முழக்கம் தான். ஆனால் அந்த முழுக்கத்தில் நுட்பமான இசைமை கலந்திருப்பது என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த பெருமை.

எடுத்துக்காட்டாக “பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன்..” என்ற ஒரு பாடல். அண்ணன் சீமான் உள்ளிட்ட பலருக்கும் மிகவும் பிடித்த பாடல் அது. “சலுகைக்கு அவன் என்றும் தலையாட்ட மாட்டான்..”என்ற வரிகளை அவரின் குரல் கடக்கும் போது அப்படியே ஒரு நெகிழ்வுத் தன்மையை பூசிக்கொள்ளும் பாருங்கள்.. இன்றும் கேட்டுப் பார்த்தால் நம் கண்கள் கலங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

ஒரு நள்ளிரவில் தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அலுவலகத்தில் அமர்ந்து அந்தப் பாடலைக் கேட்டபோது .. அண்ணன் நல்லதுரை கண்கள் கலங்கி அழுது.. அது ஒரு தொற்று போல அருகே அமர்ந்திருந்த எல்லோருக்கும் பரவி எல்லோரும் கலங்கினோம்.

ஏனெனில் தேனிசை ஐயாவின் குரல் என்பது தேசியத் தலைவர் மேதகு அவர்களின் முகத்தை அப்படியே நம் காதுகளில் பாய்ந்து நாம் நினைவுகளில் வரைந்து காட்டும் வித்தை கொண்டது.

மாவீரர் தினங்களில் அவருடைய குரல் தான் அங்கே கூடியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வினை ஒழுங்கமைத்து அந்த தினத்திற்கான மனநிலையை உருவாக்கும். நமது தாயக நிலத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள் பயிற்சி எடுக்கும் போது அவருடைய பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கின்றன. அதனால்தான் அவர் பாசறைப் பாணர்.

போர்க்களத்திற்கு செல்லும் போது ஒரு போராளி கையில் துவக்கோடு , எங்கள் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் பாடல்களையும் சுமந்து கொண்டு தான் போரிடச் சென்றிருக்கிறான். ஐயாவின் குரலும் அந்தப் பாடலும் அந்த வரிகளும் போர் கருவிகளாக போராளிகளுக்கு திகழ்ந்து இருக்கின்றன என நினைக்கும் போது உலகத்தில் வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பெருமையை எங்கள் ஐயா பெற்றுவிட்டார் என்கிற பெருமை நிச்சயம் எமக்கு உண்டு.

அண்ணன் இளங்கோ மற்றும் அன்புத்தம்பி கரிகாலன் போன்றோர் அவரின் தொடர்ச்சியாக இருப்பார்கள். ஆனாலும் அவருக்கு நிகர் யாருண்டு..??

இன்று அவருடைய உடலுக்கு புலிக்கொடி போர்த்தப் பட்ட காட்சியை பார்த்த போது.. எதை அவர் விரும்பினாரோ அதுவாகவே மாறி வாழ்ந்தார் என்று தான் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்நாள் முழுக்க போராட்ட களங்களில் முழங்கிய அந்தக் குரல் எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் சறுக்கலுக்கும் உள்ளாகாமல் என்றும் வாழ்கிற பூரண நித்தியத்தை அடைந்து விட்டது. அந்த வகையில் அவர் முழுமை பெற்ற மனிதர்.

விடுதலையை சமத்துவத்தை இன உணர்வை மொழிப்பற்றை பற்றி தனிப்பாடல்கள் பாடி அதன் மூலமாக தனிநபர் இயக்கமாகத் திகழ்ந்தவர் ஐயா அவர்கள்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நெருக்கம் அவரிடத்தில் உண்டு. ஒரு முறை அவரிடத்தில் கேட்டேன்.. தலைவரிடத்தில் உங்களுக்கு பிடித்த குணம் என்ன என்று…??

அவரிடம் பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று எல்லோரையும் உணர வைத்தது தான் அவரிடம் பிடித்த குணம் என மிக நுட்பமாக பதில் அளித்தார். அவரைப் பொறுத்த வரையில் தேசியத் தலைவர் மேதகுதான் அனைத்தும். தாயக விடுதலையில் தான் அவரது இறுதித்தாகம் சத்தியமாக இருந்திருக்கும்.

எல்லோரும் ஒருநாள் மறைந்து கடந்த காலத்தின் நினைவுகளாக தேங்கத் தான் போகிறோம். ஆனால் தேனிசை செல்லப்பா போன்றோர் எல்லா காலங்களிலும் குரல்களாக வரிகளாக நின்று யாரோ போராளிக்கு போராட்டக் களத்தில் கருவியாக இருப்பார்கள் என்பதுதான் அவர்களது தனித்துவம். அதன் மூலமாகவே அவர்கள் மரணம் அற்ற பெரு‌ வாழ்வை அடைந்து விட்டார்கள்.

பாசறைப்பாணர் , புலிகளின் குரல், விடுதலை முழக்கம் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு.. எனது புகழ் வணக்கம்.

Page 1 of 61

Powered by WordPress & Theme by Anders Norén