
அனுப்புதல்
மணி செந்தில்
வழக்கறிஞர்
கும்பகோணம்
பெறுதல்
மதிப்பிற்குரிய அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் ,
நாம் தமிழர் கட்சி.
அன்புள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு..
நேரடியாக பேச வாய்ப்பு இருந்தும் ஏன் முகநூலில் கடிதம் என உங்களுக்கு தோன்றலாம்.
எல்லாவற்றையும் முகநூலிலேயே தெரிவிப்பதற்கு முகநூல் என்ன பாவமன்னிப்பு கேட்கும் பாதிரியாரின் அறையா..??
அல்லது தங்களை தாங்களே நியாயவாதிகளாக ஒப்பனை செய்து கொண்டுக் காட்ட முகநூல் என்ன ஒப்பனைக் கண்ணாடியா..??
அல்லது தான் விரும்புவற்றையெல்லாம் ஒரு கதையாக மாற்றி எழுத முகநூல் வாய்ப்பளிக்கிறது என்ற காரணத்தினால் முகநூல் என்ன திரையரங்கா..??
முகநூலில் தான் கட்சியில் சேர்ந்தோமா… பிறகு எதற்கு முகநூலில் விலகல் கடிதம், அல்லது விளக்க கடிதம் ..??
பிறகு ஏன் முகநூலிலேயே எல்லாவற்றையும் வாந்தி எடுக்கிறீர்கள் என்ற பலருக்கும் எழும் கேள்விகளுக்கு எல்லாம் என்னிடத்திலும் பதில் இல்லை தான்.
முகநூல் என்பது குழப்பங்களின் குட்டை. அங்கு எதையாவது வீசி எறிந்தால் தான், நாமும் உயிர் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் தெரியும் என்பதற்காகத்தான் எல்லோரும் எதையாவது எழுதி இந்த குழப்பக் குட்டையில் எறிந்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கும் எங்களைப் போன்று எந்த வேலையும் இல்லாமல் நொடிக்கு நொடி அலைபேசித் திரையை உற்றுப் பார்த்து கருத்துக்கள், லைக்குகள் தெரிவித்து பகிரும் முகநூல் மூர்க்கர்கள் இங்குதானே இருக்கிறார்கள்..??
தவிர அலைபேசி திரையை தாண்டி வேறு உலகம் இல்லை என்று நினைக்கின்ற அறிவு ஜீவிகள் வேறு.. எனவே இக்கடிதம் இங்கு.
செய்தி என்னவெனில்..
தமிழ்த் தேசியப் பயணத்தில் உங்களோடு 15 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். இதுவரை எந்தவித சமரசமும் இல்லாமல் கொண்ட கொள்கையில் தடம் மாறாமல் இருந்ததால் .. எந்த ஒரு பதவிக்கும் நாம் தமிழர் கட்சி நகர்ந்தது இல்லை. பதவிக்கான அரசியல் செய்யாமல் மக்களுக்கான அரசியலில் நாம் இருந்தோம். இருக்கிறோம் .
உங்களைத் தேடி பதவிகளும், வாக்குறுதிகளும் தேடி வந்த போது ஒரு நொடி கூட சலனப்படாமல், எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் உங்களது அண்ணன் நமது தேசியத் தலைவர் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே, பேச வந்தவர்களை மௌனிகளாக மாற்றி அனுப்பிய போது நான் அருகில் தான் இருந்தேன்.
உங்களை நம்பி வந்தவர்களை, எங்கும் அடகு வைக்காமல், அந்தக் கூட்டத்தைக் காட்டி கூட்டணிப் பேரம் பேசாமல், தலை நிமிர்ந்து நடக்க வைத்த அந்த நம்பிக்கை இதுவரை இந்த நிலம் பார்க்காதது.
தனிப்பட்ட முறையில் நான் அறிந்தவரை உங்களால் மற்றவர்களை காயப்படுத்த முடியாது. உங்களது அதிகபட்ச எதிர்வினை என்பது அமைதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாகி விடுவீர்கள். கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் குறித்து எப்போதும் அவதூறோ குற்றச்சாட்டுகளோ நீங்கள் சொல்வதில்லை. அவர்கள் சொன்னாலும் “அவர்களும் நம் தம்பிகள் தானே!” என்று சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவீர்கள். எங்களையும் நகர சொல்கிறீர்கள்.
தேர்தல் அரசியலில் உங்களைப் போன்ற ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. கடுமையாக நீங்கள் உழைத்தீர்கள். ஒவ்வொரு தொகுதியாக பயணப்பட்டு கட்டமைப்பை ஏற்படுத்தினீர்கள். உங்கள் பின்னால் நிற்கின்ற எங்கள் அனைவரையும் ஒரே அலைவரிசையில் திரட்டினீர்கள். எல்லாப் போராட்டங்களிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள். மக்கள் எங்கெங்கெல்லாம் குறைகளுக்காக தெருவில் நின்றார்களோ அவர்களுடன் நீங்களும் நின்றீர்கள். உங்கள் குரல் கேட்காத தமிழக வீதிகள் இல்லை.
சிறுசிறு போராட்டங்கள். பிறகு மாபெரும் மக்கள் போராட்டங்கள். பிறகு வரிசையாக சூழலியல் மாநாடுகள். பிறகு வேட்பாளரை அறிவிக்கின்ற மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. அதன் பிறகு உங்களை உடலளவிலும் உள்ள அளவிலும் கடுமையாக வருத்திக்கொண்டு, கொளுத்தும் வெயிலில், ஒவ்வொரு தொகுதியாக பயணப்பட்டு தமிழ் நாடு எங்கும் சுற்றி வந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அந்த “கொடுமையான” பயணம்.
எனவே உங்களது உழைப்பில் ஒரு குறையும் இல்லை. உங்கள் பயணத்தில் எந்த தடுமாற்றமும் இல்லை.
இருந்தாலும் நாமும் தோற்றோம். அநீதியாக உருவாக்கப்பட்ட ‘பேரலையில்’ நாம் சிக்கினோம். ஆனாலும் குறைகள் என்று உங்கள் மீது கட்டமைக்கப்படுகிற பொய்மைகளை அமைதியாக பார்த்துக் கொண்ட அமர முடியவில்லை.
ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கு பிறகும் , அதுவரை சொல்லாத குற்றங்களை, லென்ஸ் கண்ணாடி போட்டுத் தேடிய குறைகளை, காரணங்களுக்காக காரணங்களை சொல்லிவிட்டு, இக்கரையில் இருந்து அதோ தெரிகிறது பச்சை என அக்கரைக்கு ஓடுவதற்கு என்று எப்போதும் ஒரு கூட்டம் உண்டு.
இப்போதும் அப்படி சிலர் ஓடுகிறார்கள். திராவிடக் கட்சிகளை ஒப்பிடும்போது அப்படிப்பட்ட “பச்சை மனிதர்கள்” நம்மிடத்தில் குறைவுதான் என்றாலும் , ஓடும் போது கூட உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓடும் அந்தப் பண்பாடுதான்(?) எனக்கு மிகுந்த பரவசத்தை அளிக்கிறது. வேறு வழி இல்லை.
“எனக்கு வாய்ப்பளித்தீர்கள், என் மீது அன்பு காட்டினீர்கள், தம்பியாக பயணம் தொடரும்” என்றெல்லாம் முன் கவனத்தோடு செதுக்கப்படும் இந்த வார்த்தை விளையாட்டுகளை நீங்கள் முகநூலில் இல்லாத காரணத்தினால் கவனித்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் எல்லோருக்கும் நீங்கள் வாய்ப்பு அளித்தீர்கள். இதயத்தில் இடம் அளித்தீர்கள். கொண்டாடினீர்கள். இதுவெல்லாம் அருகில் இருந்து அனுபவித்த எல்லோருக்கும் தெரியும்.
இவ்வளவு வாய்ப்பும், அன்பும் செல்லும் இடங்களில் கிடைக்குமா என்றெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஆனாலும் முகநூலில் முக்காலி போட்டு எப்போதும் உட்கார்ந்து இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு.. “அடடா இவர்கள் போய் நீங்கி விட்டார்களே..!” என்ற எண்ணத்தை ஏற்படுத்த குறைந்தபட்சத் தந்திரம் தான் அது.!
“பார்த்தீர்களா இதை இவர் விலகி விட்டாராம்.. அவர் சென்று விட்டாராம்.. போகும்போது இதையெல்லாம் சொல்லிவிட்டு போயிருக்கிறாராம்…!” என்று தமிழ்த் தேசிய பஞ்சாயத்தார்கள் சிலரின் வெற்று வாய்க்கு கிடைக்கின்ற கைப்பிடி அவல் தான் அது..!
இன்று செய்தி சேனல்களில் இவர் நீங்கி விட்டார் என்று போடுகிற அந்த செய்தி அட்டை கூட நீங்கள் கொடுத்த முகவரி அட்டை தானே..??
இரண்டு நாள் செய்தி. மூன்று நாள் வலையொலி நேர்காணல்கள். நான்காவது நாளில் பத்தோடு ஒருவர்.
மாவீரர்களின் தியாகத்தால் உருவான அரசியல் அமைப்பிற்கு தன்னிகரற்ற ஒரு பண்புநிலை உண்டு. முகவரி தேடிக்கொண்டு வேறு இடத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என நகர்பவர்களை அது உயர விடாது. நிம்மதியாக உறங்க விடாது. கடைசி வரை திட்டிக்கொண்டே திரிய வேண்டியது தான்..!

மற்றபடி எல்லா காலத்திலும் உங்களைக் கைவிடாமல் இருக்கின்ற உங்களது தன்னம்பிக்கை எப்போதும் கம்பீரமாக மிளிர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இங்கே அடையாளப்பட்டு கொண்டு , முகவரி பெற்றவுடன் எங்கேயாவது சென்று எதையாவது அடைந்து விடலாம் என ஓடுபவர்களை நான் பரிதாபமாக பார்க்கிறேன். அவர்கள் காலத்தின் கதாநாயகனை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். அவன் வெற்றிக்காக காத்திருக்கவில்லை. கம்பீரமான வெற்றி அவனுக்காக காத்திருக்கிறது.
கடல் தவமாய் தவமிருந்து முத்துக்களை உருவாக்கும். ஆனால் முத்துக்கள் என்னவோ யார் கழுத்திலோ காலிலோ நகையாய் தொங்கும். ஆனால் கடலில் கரைந்து அதுவாக உருவாகும் மணல் கடலை விட்டு எங்கும் செல்லாது. எவன் காலில் மிதி பட்டாலும், அலையடித்து கரைந்தாலும், அது எங்கோ ஒரு கரையில் ஒதுங்கி கடலை நீங்காத கடற்கரையாகிக் கிடக்குமே ஒழிய வேறெங்கும் செல்லாது.
அப்படித்தான் அண்ணா.. எந்த காயம் பட்டாலும் வேறு எங்கும் செல்லாமல் உங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு லட்சக்கணக்கான தம்பி தங்கைகள் மிகப்பெரிய நம்பிக்கை வெளிச்சத்தோடு ஒரு மகத்தான வெற்றிக்காக காத்திருக்கிறோம்.
ஏதோ ஒரு வீதியில் சிவந்த கண்களோடு புலிக்கொடி ஏந்தி ஒரு இளைஞனோ அல்லது இளம் பெண்ணோ உங்கள் சொற்களுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்தப் பாதை அமைத்தது நீங்கள். எங்கோ அரங்கங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியத்தை வெகுஜன அரசியலாக மாற்றி இன்று மண்ணுக்கான தத்துவமாக மாற்றி இருக்கிறீர்கள். தேசியத்தலைவர் மேதகு அவர்களை வீட்டுக்கு வீடு கொண்டு போய் சேர்ந்திருக்கிறீர்கள். பிறமொழி கலவாமல் தூயத்தமிழ் மொழியில் பேசுவதும், தமிழுக்காக இயங்குவதும்தான் இனி இளைஞர்களுக்கான அரசியல் என உணர்த்தி வருகிறீர்கள். உங்கள் எதிரிகள் கூட உங்களை நகலெடுத்து மாநாடுகள் நடத்துவதற்கும், இரண்டு விழிகளில் ஒன்று என்று சொல்வதற்குமான சூழலை உருவாக்கியது நீங்கள். இதில் எப்படி பயணிக்க வேண்டும் என முடிவு செய்பவர்கள் நீங்கள். காலம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கிறது.யார் யார் இந்த பயணத்திற்கு தகுதியற்றவர்களோ அவர்களை காலமே அந்தப் பயணத்திலிருந்து நீக்கிவிடுகிறது. இந்தப் பின்னடைவிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பதையும் உங்கள் முன்பே உணர்ந்து வைத்திருப்பீர்கள். அதைத்தான் கடந்த காலம் எனக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
எனவே.. கட்சியின் அடிப்படை உறுப்பினராக என்னை மேலும் உறுதி செய்து கொள்கிறேன்.
என் கடமைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காமல் உங்கள் கரங்களைப் பிடித்துக் கொண்டு களத்தில் இயங்க உறுதியேற்கிறேன்.
தமிழ்த்தாய் வாழ்க !
தலைவர் மேதகு வாழ்க !
மணி செந்தில் ,
நாம் தமிழர் கட்சி.
( கூடுதலாக ஒரு வேண்டுகோள். உனக்கு வேறு வேலை இல்லையா…?? எதற்கு இந்த கடிதம்..?? என அலைபேசியில் அழைத்துத் திட்ட வேண்டாம் என அமைதியோடு கேட்டுக்கொள்கிறேன். முகநூலில் கடிதம் எழுதாதவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை என்பதால்… ![]()











