பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2016

காயங்களால் ஆனவன்.

14232482_182494872175389_8100183791492522624_n

அங்கே..
அவரவர்
ஆன்ம
விருப்பத்தின்
ரகசிய கணக்குகள்
மீன்களாய் அலைகின்றன

என
சொற்களின்
குளத்தில்
குளித்தவன்
சொல்லி விட்டு
போனான்.

அனல் மேவிய
சொற்களும்..
நிச்சயமற்ற
காலக்
கணக்குகளின்
அமில மழையும்..
கனவுப் பூக்கள்
ஒளிர்கிற
என் ஏதேன்
தோட்டத்தை
அப்போதுதான்
அழித்து முடித்து
இருந்தன..

காரிருளாய்
மேனி முழுக்க
துயர இருட்டு
அப்பிய
பொழுதொன்றில்..

உதிரம் கசிந்த
விழிகளோடு..
நானும்..
அவரும்..
மட்டுமே அறிந்த
மொழி ஒன்றில்
சொன்னார்..
கடவுள்.

..ஆகவே..
மகனே..
நீ காயங்களால்
ஆனவன்.

கணங்களின் கதை

 

14485021_188947611530115_2749357017552220995_n

கோப்பை ஏந்தியிருக்கும்
கரத்தின் சிறு நடுக்கத்தில்
சற்றே சிந்தும்
ஒரு துளி தேநீர்..

யாருடனோ
பேசுதலின் போது..
சொற்களின் ஊடே
கசியும் மெளனம்..

மழை நனைக்கும்
பொழுதில்
விழி மூடி
வானை நோக்கி
தலை உயர்த்தும்
கணங்கள்…

எங்கிருந்தோ
கரையும் பாடலில்
தலையணை
நனைய முகம்
சிவந்து கிடக்கும்
நடு நிசிப் பொழுது..

இப்படி..
இப்படி..

ஏதேனும் நொடிகள்
வாய்த்து விடுகின்றன..

சொல்ல
முடியாதவற்றை..
நமக்குள்ளே
சொல்லிக் கொள்ள..

உறைந்த உயிரை
நாமே கிள்ளிக் கொள்ள..

.**** சுயபுராணம்


overcome-yourself-fyodor-dostoyevsky-daily-quotes-sayings-pictures

மீண்டும் மீண்டும்
என்னை பிரசவிக்கும்
எனது மொழி..

வற்றா வளத்தோடு
குன்றாப் பெருமை
மணக்கும் எனது
சொல்..

எப்போதும் காண்பவர்
முகத்தில் கண்ணீரையும்,
புன்னகையையும்
ஒரே நேரத்தில்
சிந்த வைக்கும் எனது
எழுத்து..

இத்தனை வருடங்களில்
இரவு பகலாக
விழித்து..
வாசித்து..
ரசித்து..
உழைத்து..
எனக்கு நானே
கனவுகளை உளியாக்கி
செதுக்கிக் கொண்ட
தன்னம்பிக்கை
சுடர் விடும்
ஒரு வாழ்க்கை..

என்றெல்லாம்
பேசிட என்னிடம்
ஏதேனும்
இருந்தாலும்…

துளித்துளியாய்
சேமித்து பெருமழையென
பொழிய எனக்குள்
ஒரு மழை இருக்கிறது..

விழி நீர் கசிய
உயிர் உருகி ஓடிட
கதைகள் சொல்ல
எனக்குள்
நிலவொளியில்
சேமித்த ஒரு
இரவு இருக்கிறது.

பரவசப்படுத்தும்
கவிதைகளோடு
காலார நடந்திட
எனக்குள் பனிப்பூக்கள்
நிரம்பிய பூங்காவோடு
ஒரு பொன் மாலைப்
பொழுது இருக்கிறது..

ரகசிய கனவுகள்
மினுக்கும்
நீல விழி தேவதை
மிதக்கும்
தங்க மீன்கள்
உலவுகிற
பாசி படர்ந்த
பெருங்குளமும்
எனக்குள் உண்டு.

தேவ கரங்கள் தொட்டுத்
துடைக்க உதிரமாய்
பெருகுகிற
தீராத்துயரமும்..

சாத்தானின் முற்றத்தில்
முடிவிலியாய்
கொண்டாடி மகிழ
வற்றா புன்னகைகளும்..

என்னிடம் இருப்பதாக
மதுப் போதையில்
உளறிய
கனவுலகவாசி
ஒருவன் கைக்குலுக்கிப்
போனான்.

அவனிடம் மறுமொழி
கூற என்னிடம்
சொற்கள் ஏதுமில்லை
அப்போது..

பக்கத்தில் தேநீர்
அருந்திய வண்ணம்
சிரித்துக் கொண்டே
கடவுள் சொன்னார்

அது தான் நீ இருக்கிறாயே..

பயணம் என்கிற பெருவழி..

14523298_194382390986637_8173281201202185685_n
எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’
– கோணங்கி (விகடன் 16-09-2009)

என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் எங்கே போய் முடியும் என்றெல்லாம் சிந்தனை முடிச்சுகளை மனம் பின்னிக் கொண்டே போகிறது. உண்மையில் பாதைகள் ஒரு முடிவிலி. அவைகளுக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. எல்லாப் பாதைகளும் ரோமை நோக்கியே என்ற கிரேக்க சொற்றொடர் உண்டு. பண்டைய காலத்தில் கிரேக்கத்தின் ஆதிக்கம் பரவி இருந்த போது இச்சொற்றொடர் பிறந்திருக்கலாம். அக்காலத்தில் பாதைகள் முழுக்க அலைந்து திரிந்த யாத்ரீகர்கள், ஊர்ச்சுற்றிகள் நிறைந்து இருந்தார்கள். பொதுவாக வாழ்தல் வேண்டி பிழைப்பு கருதி, சாமியாராக,வித்தைக் காட்டுபவராக, விசித்திர பொருட்கள் விற்பவராக, குறி சொல்பவராக, கால்நடைகள் மேய்ப்பவராக நாடு, நகரம், காடு,கழனி என சுற்றிக் கொண்டே இருந்த ஊர்ச்சுற்றிகள் உண்டு,. ஊர்ச்சுற்றுதல் என்பது வெறும் கேளிக்கைக்கானது மட்டுமில்ல. அது ஒரு ஆன்மீக அனுபவம் என்கிறது பெளத்தம். பெளத்தப் பிக்குகள் பல நாடுகளுக்கு புத்தரின் போதனைகளை எடுத்துக் கூற பயணப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் மதத்தினை பரப்ப பயணம் மட்டுமே ஒரே வழி. மதம் பரப்புதல் என்கிற நோக்கமும், பொருளீட்டுதல் என்கிற நோக்கமுமே பயணம் என்கிற பெருவழிக்கு பெரும்பாலும் காரணங்களாக அமைகின்றன. பயணம் என்பது பெரும் அனுபவங்களின் கூட்டுத் தொகையாக இருக்கிறது. பயணம் மூலமாக பெறும் அனுபவங்கள் மனித வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. சேகுவேரா தன் நண்பன் அல்பெர்த்தோ கிரானடோவுடன் மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொண்ட பெரும் பயணமே அவனை ஒரு புரட்சியாளராக உருவாக்கியது. சேகுவேராவின் பயண அனுபவங்கள் ஆங்கிலத்தில் தமிழிலும் நூலாக கிடைக்கின்றன. சே குவேரா-புரட்சியாளனாக உருவானது எப்படி என்ற தலைப்பில் இந்த பயண அனுபவங்களை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டு உள்ளது. ‘ ஒரு தகப்பனாக நான் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அவனிடம் இருந்தன. கால ஓட்டத்தில் தான் அவைகளை நான் அறிந்தேன். பயணத்தின் மேல் அவன் கொண்டிருந்த தீராவேட்கையானது புதியவைகளை அறிய வேண்டும் என்கிற அவனுடைய பற்றுறுதியின் இன்னொரு அம்சமே என்பதை அப்போது நான் உணரவில்லை.’ மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தன் மகன் குறித்து சேகுவேராவின் தந்தை எர்னஸ்டோ சீனியர் தெரிவிக்கிறார். உண்மைதான். பயணங்கள் எப்போதும் புதியவனவற்றை தேடி அலைகிற ஆன்மாவின் குரலாக இருக்கிறது.

அப்பயணத்தின் ஊடே சேகுவேரா விடை பெறுதலின் பொருட்டு ஒரு கடற்கரையில் தன் காதலி சிச்சினாவை சந்திக்கிறார். பொங்கி அலையடித்துக் கொண்டிருந்த அக்கடல் போலவே சேகுவேராவின் மனமும் பயணம் தருகிற புதிய சாகசங்களுக்காக கொந்தளித்துக் கொண்டிருந்தது. தனது காதலியின் விரல்களைப் பற்றிக் கொண்ட சே தெரிவித்தார். “ விடைபெறும் தருணம் இது. பிரிவின் துயரமும், உவப்பின்மையும் என் சுவாசத்தோடு கலந்து விட்டது. பயணங்களின் ஊடே நிகழும் சாகசங்களை நோக்கி நான் செல்லப்பட்டு விட்டேன். நான் திரும்பும்வரை நீ காத்திருப்பாயா என்று கேட்டார். சிச்சினா தலையசைத்தாள். பயணம் தொடர்ந்தது.

சே குவேரா செய்த இப்பயணம் குறித்து மோட்டார் சைக்கிள் டைரீஸ் ( Motor Cycle Diares (2004) ) என்ற புகழ்ப் பெற்ற உலகத்திரைப்படம் காணக்கிடைக்கிறது. நிலவியல் காட்சிகளும், நுட்ப உணர்வுகளும் நிரம்பிய அத்திரைப்படத்தை காணுதல் என்பதே மகத்தான ஒரு அனுபவம். கொடும் மழையிலும், பல்வேறுவிதமான பருவ சூழல்களிலும் ஆஸ்துமாவால் பலவீனமான நுரையீரலோடு சேகுவேரா பயணித்த அந்த அனுபவக் காட்சிகள் திரையில் விரியும் போது பயணம் குறித்த நம் மதிப்பீடுகள் மாறத் தொடங்குகின்றன. இதன் பாதிப்பில் வெளிவந்த மலையாளத்திரைப்படம் தான் துல்கர் சல்மான் நடித்த நீல ஆகாசம் பச்சக்கடல், செவ்வண்ண பூமி(2013).

அதே போல புரட்சியாளர் மாவோ நடத்திய பெரும் பயணமே சீனப்புரட்சிக்கு அடிப்படையாக திகழ்ந்தது. ஏகாதிபத்திய கோமிண்டாங் படைகளின் தாக்குதல் இருந்து தப்பிக்க மாவோவின் தலைமையில் 2,30,000 செஞ்சட்டை படையினர் 1934 அக்டோபர் 16 முதல் 1935 அக்டோபர் 21 வரை சுமார் ஓராண்டு காலம் நெடும்பயணம் நடத்தி, சீன விவசாயிகளை, மக்களை புரட்சிக்காக அணியப்படுத்தினர்.கடுமையான பருவ கால சூழல்களுக்கு முகங்கொடுத்து 6000 மைல் தூரத்தை செஞ்சட்டைப் படை கடந்தது. கொந்தளிக்கும் ஆறுகள், குத்தீட்டி மலைகள், அதல பாதாளமான நிலவியல் அமைப்புகள் , உணவு, உறைவிடம் ஆகியவற்றை கண்டறிவதற்கான சூழல்கள் போதாமை, தொற்று நோய்களின் தாக்குதல் என பல்வேறு விதமான சங்கடங்களை கடந்து சீனப் புரட்சியை தன் படையினரோடு நிகழ்த்திக் காட்டினார் மாவோ.

இந்தியப் பெருநிலத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற தண்டி யாத்திரைப் பற்றி நமக்குத் தெரியும். 1930 மார்ச் 12 ஆம் தேதி குஜராத்தில் உள்ள தனது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து , 23 நாட்கள் 240 மைல்கள் நடந்து 1930 –ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டியை பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அடைந்த காந்தி தனது பயணத்தின் மூலமாகவே தன் போராட்ட உணர்வை பரவலாக்கினார். சாதாரண மனிதராக இருந்த காந்தியை மகாத்மா காந்தியாக்கியதற்கு மூல சம்பவமும் அந்த தென் அமெரிக்க ரயில் பயணம் தானே..

இப்படி உலகம் முழுக்க பயணங்களும், அது தரும் அனுபவங்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டவைகளாக இருக்கின்றன. ஒரு பயணம் என்பது ஏதேனும் காரணங்கள் கொண்டவையாக இருக்கலாம். இல்லையேல் பயணம் தருகிற அனுபவங்களும், மனநிலையுமே ஒரு பயணத்திற்கான காரணங்களாக அமையலாம்.

maxresdefault

 

தமிழ் இலக்கிய உலகில் பெரும் ஊர்ச்சுற்றிகளாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், கோணங்கியும் திகழ்ந்திருக்கிறார்கள். இருவரின் எழுத்துக்களின் ஊடே அப்பயணங்களின் அனுபவங்களும், நிலவியல் காட்சிகளும் நிரம்பி ததும்புகின்றன. ஒரு முறை எஸ்.ரா சொன்னார் “ பயணத்திற்கென எனக்கு காரணங்கள் தேவையில்லை. எவ்வித காரணங்களும் இல்லாமல் ஒரு ஊரில் இருந்து கிடைக்கிற பேருந்து, வாகனம் என ஏதாவது ஒன்றில் ஏறி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஊரில் இறங்கி, அங்கு கிடைப்பதை உண்டு, அங்கு இருப்பதை கண்டு , அங்கேயே நாலைந்து நாட்கள் தங்கி விட்டு வருவதை நானும், கோணங்கியும் வெகுநாட்கள் வழக்கமாக கொண்டிருந்தோம். ”

உண்மையில் ஊர்ச்சுற்றுதல் கேளிக்கைக்கு எல்லாம் அப்பாற்பட்ட பெரும் அனுபவமே என்று ஊர்ச்சுற்றிகள் கண்கள் மிளிர சொல்கிறார்கள். அது ஒரு வகையான போதை. ஒரு வகையான ஆழ் மனக் கோரல். அனைத்திலிருந்தும் தப்பிகிற மனநிலை.
ஆஸ்கர் விருது வாங்கிய Forest Gump என்கிற உலகத்திரைப்படம் உண்டு. அதன் கதாநாயகி எப்போதும் Forest Gump என்று பெயருள்ள அக்கதாநாயகனை Run Forest, Run Forest (ஓடு பாரஸ்ட்..) என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். ஒரு கட்டத்தில் அம்மாவையும், காதலியையும் இழந்த கதாநாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், காரணமே இல்லாமல் ஓடத் தொடங்குவான். இரவு, பகல் பாராது ஓடிக் கொண்டே பல நாடுகளை கடப்பான். அவனது இலக்கற்ற ,முடிவற்ற இந்த ஓட்டம் தொலைகாட்சிகளில் காட்டப்படும். உலக சமாதானத்திற்காகதான் ஓடுகிறார் என பலரும் நினைத்து, அவன் பின்னால் பலரும் ஓடுவர். ஒரு கட்டத்தில் அக்கதாநாயகனுக்கு வீட்டு நினைவு வந்து விடும். உடனே வீட்டை நோக்கி திரும்ப ஓடத் தொடங்குவான். ஏனெனில் அக்கதாநாயகனுக்கு தன் சோகத்தில் இருந்தும், மன அழுத்ததில் இருந்தும் தப்பிக்கும் வழியாக அந்த ஓட்டத்தை, அப்பயணத்தை கருதுவான். அது ஒன்று மட்டுமே அவனை ஆற்றுப்படுத்தும் .

தமிழ்நிலத்தில் ஊர்ச்சுற்றிகளின் பங்கு மகத்தானது. பல்வேறு விதமான தத்துவங்களை, மத போதனைகளை ,மருத்துவத்தை ,பண்பாட்டுக் கூறுகளை பரப்பியதில் ஊர்ச்சுற்றிகள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். சமண முனிவர்களாக,பெளத்த பிக்குகளாக, புனித யாத்திரை செல்பவர்களாக விளங்கிய தமிழர்களின் ஊர்ச் சுற்றி உளவியல் அதிகார வேட்கையாக மாறிய காலத்தில் பெரும் படையெடுப்புகளை நிகழ்த்தி உலக நாடுகளை எல்லாம் வென்று இருக்கிறார்கள்.

பயண அனுபவங்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் காணக்கிடைக்கின்றன. பல நாடுகளுக்கு சென்று உலகம் சுற்றிய தமிழராக ஏ.கே செட்டியார் திகழ்ந்திருக்கிறார்கள். அதே போல மணியன் ,சாவி , தமிழ்வாணன், அகிலன் போன்ற பல எழுத்தாளர்களும் உலகைச்சுற்றி பார்த்து தனது அனுபவங்களை இலக்கிய பிரதிகளாக ஆக்கி இருக்கிறார்கள். காவேரி நதிக்கரை ஓரமாக எழுத்தாளர் தி.ஜானகிராமனும், அவரது நண்பர் சிட்டியும் மேற்கொண்ட பயணத்தை நடந்தாய் வாழி காவேரி (காலச்சுவடு வெளியீடு ) என்கிற படைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

14523202_194382474319962_8228487827882526794_n

ஊர்ச்சுற்றிகளின் குண இயல்புகள், ஊர்ச்சுற்றிகள் எதிர்க்கொள்ளும் சவால்கள்,பயணத்திற்கு தேவையான பொருட்கள் போன்ற ஊர்ச்சுற்றி அம்சங்களைப் பற்றி புகழ்ப் பெற்ற எழுத்தாளர் இராகுல சாங்கிருத்யாயன் “ ஊர்ச்சுற்றி புராணம் “ என்கிற புகழ்ப்பெற்ற நூலை எழுதியுள்ளார் .

( ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
விலை ரூ 70 மொத்த பக்கங்கள் : 236)

எல்லா பாதைகளும் என் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்கிறது ஒரு ஜென் மொழி. எந்த பயணமொன்றின் முடிவும் ஒருவிதமான தனிமை உணர்வை தருவது இயல்பு. ஏனெனில் பயணம் என்பதே நான் தனியன் அல்ல என்பதை உணரத்தானே…

 

சொல்லப்படுகிற சொற்களற்ற கதை.

14900327_208444706247072_1276150418681769516_n
காதிற்கு பின்னால்
வழியும்
ஒரு வியர்வைத்துளி
சொல்லக்கூடும்
இப்போது
என்ன நிகழும் என..

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
நீயும் நானும்..

செல்லும் ரயிலில்
இருந்தவாறே..
மெளனித்து கிடக்கிற
என் ரயில் பெட்டி அசைகிறது
என நீ நினைப்பது
உனக்கான ஆறுதல்
என எனக்கு புரிகிறது..

நிகழ்தகவுகளாய்
வர்ணம்
மாறிய மனதின் மொழியை
ஒரு போதும் பேச முயற்சிக்காதே..

ஏனெனில் உண்மைகள்
பொய்களை விட
மோசமானவை.
கருணையற்றவை.

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
நீ காத்திருப்பது
புரிகிறது.

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உன் உதடுகள்
இன்னும் தயாராகவில்லை
போலும்..

ஈரப்படுத்திக் மெதுவாய்
கனைத்துக் கொள்கிறாய்..

நான் தயாராகத்தான்
இருக்கிறேன்.

விஷம் தோய்ந்த
ஈட்டி முன்னால்
இதயம் துடித்துக்
கொண்டே இருப்பது
கொஞ்சம் அசெளகரியம்தான்..

சீக்கிரம் குத்தி விடு.

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நீயோ..நானோ..

அந்த பரிதவிப்பு
நம் இருவருக்குமே
இருப்பதுதான்..
எனக்கான இறுதி ஆறுதல்..

கலங்கும் விழிகளில்
தூரத்து கானலாய்
தெரிகிறது.

என்னையும் மீறி
கொப்புளிக்க
துடிக்கும்
நாமாக இருந்த
பொழுதுகளின்
நினைவுகள்..

தப்பித்தவறி
அவை சொற்களாக
மாறக்கூடும் என
அஞ்சாதே..
.
மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
அச்சொற்கள் உண்மையின்
கயிற்றினால் இறுக்கி
கட்டப்பட்டு விட்டன..

இனி..

நீ தாராளமாக
எதையும்
சொல்லலாம்.

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிற இந்த
இமைக்காத பொழுதில்..

சில
பெருமூச்செறிதல்களோடும்..
ஆழ்நிலை தியான
கவனத்தோடு இயற்றப்பட்ட
சில நொடி மெளனத்தோடும்.

நீ சொல்ல வருகின்ற
காரணங்களுக்காக
அன்றி
வேறு எதற்காகவோ
கசிகிற கண்ணீர்த்
துளிகளோடும்..

நீ சொல்லத் தொடங்கு..

நானும் இதை முதன்
முறை கேட்பது போல்
கேட்கத் தொடங்குகிறேன்..

-மணி செந்தில்

 

 

Page 2 of 2

Powered by WordPress & Theme by Anders Norén