பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: அக்டோபர் 2018

துளி-5

உங்களுக்கு பாபுவை தெரியுமா..??

உங்களில் பலர் பாபுவை அறிந்திருப்பீர்கள். அறிந்தவர்களில் பலருக்கு அதுதான் பாபு என்று தெரியாது. பலர் பாபுவாகவே வாழ்ந்திருக்கலாம். பலருக்கு அவர்கள் வாழ்க்கையில் பாபு வாக இருக்க வேண்டிய காலம் நிகழ்ந்திருக்கலாம் ‌.

யார் இந்த பாபு..?? நீங்களும்.. நானும்தான். இதைத்தான் அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொரு வாசகனும் உணர்கிறான். சில நூறு பக்கங்கள் விரிகின்ற அந்த நாவலை படிக்கின்ற ஒவ்வொருவரும் தன்னை இரகசியமாக கண்டுவிட்டு வெட்கமுறுவதுதான் அந்த நாவலின் இலக்கிய உச்சம்.
…….

இந்த வாழ்வும், அது சமைத்த விதிகளும் அலை கழிக்காத பெரும் மனிதன் யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா… வாய்ப்பில்லை. ஏனெனில் அவ்வாறு யாரும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நினைத்து பார்க்க விரும்பாத காலம் என்ற ஒன்று இருக்கும்தானே.. அவன் அடைந்த துயரம் அவமானம், காயம், அனைத்தையும் பூட்டி ஓரமாக வைத்துவிட்டு நிகழில் பயணிப்பதாக அவன் காட்டும் பாவனைதான் அவனது வாழ்க்கையாக அறியப்படுகிறது. எது வாழ்வில் அதிகம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதுவே வாழ்வில் அதிக துயரத்தை தரும் என்பது இயற்கையின் மாறா விதி. அந்தக் கொடும் விதியின் சாபத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
……..

மீண்டும் பாபுவிற்கு வருவோம். பாபுவை நான் முதன்முதலில் எனது பதின் வயதுகளில் அறிந்தேன். அவனை அறிந்த உடனே கண்டு கொண்டேன். நான்தான் அவன் என. இதைத்தான் படித்தவர்கள் பலரும் சொன்னார்கள். அந்த மேஜிக்கை நம்முள் நிகழ்த்தியவர் மறைந்த எழுத்தாளுமை தி. ஜானகிராமன். அவர் எழுதிய மோகமுள் நாவலின் கதாநாயகனே பாபு. திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது ஆனால் இலக்கியப்பிரதி தந்த மன எழுச்சியை திரைப்படம் தர தவறிவிட்டது. இருந்தாலும் இளையராஜாவின் அருமையான பாடல்களும், இசையும் மோகமுள் என்ற இலக்கிய உன்னதத்தை இசையாகவும் உணரவைத்தது.

தமிழின் ஆகச்சிறந்த பத்து நாவல்களை பட்டியலிடும் எவரும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு நாவலாக மோகமுள் இன்றும் திகழ்கிறது. நான் அந்த நாவலை வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெவ்வேறு அனுபவங்களை அடைந்திருக்கிறேன். பதின் வயதுகளில் முதன்முதலாக படிக்கும்போது சில பக்கங்களை என்னால் கடக்கவே முடியவில்லை. என்னைவிட வயது மூத்த பெண்கள் சிலரைத் காணும்
போது எனக்கு யமுனா வாக தோன்றினார்கள். இதுபோன்ற வயது மயக்கங்கள் அனைத்தும் கரைந்த முப்பதுகளில் அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது உண்மையில் யமுனா என்றொரு பெண் வாழ்ந்திருக்கிறாள் என நம்பி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். நீங்கள் சாதாரண கண்களில் பார்க்கும் கும்பகோணமும், மோகமுள் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிற கும்பகோணமும் சற்றே நுட்பமான அளவில் மட்டுமே வேறானவை. ஏறக்குறைய புனைவின் சாத்தியங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கும்பகோணத்தை ஒரு காட்சி சித்திரமாக நம் விழிகளுக்கு முன்னால் தி.ஜா மோகமுள்ளில் நிறுவி இருப்பார்.

வளைவுகளும், குறுகிய சந்துகளும், நெருக்கடியான வீடுகளும், பாரம்பரிய மனிதர்களும் இருக்கின்ற புராதன நகர் கும்பகோணம். ஊருக்கு மத்தியில் ஓடும் எழில் நதி காவிரி. இன்னொரு புறத்தில் அந்த ஊரின் சிறு இதயம் போல மகாமகக் குளம். ஊரைச் சுற்றிலும் , ஊருக்குள்ளும் திரும்பிய இடமெல்லாம் கோவில்கள். அதனால் நிறைய வெளியூர் ஆட்கள். வார இறுதி நாட்களில் தோன்றுகின்ற நெருக்கடி, மராட்டிய, சௌராஷ்டிர மக்களின் இயல்பான கலப்பு, பார்ப்பனர்களின் பூர்விகம், பக்கத்திலேயே திருவையாறு , அதனால் இயல்பிலேயே கரைந்திருக்கும் சங்கீதம், பசும்பாலும் டிகாஷனும் ஏதோ ஒரு மாயவிகிதத்தில் ஒன்றாக கலந்து காவிரி நீரோடு இணைந்து உண்டாக்கும் தேவ சுகம் தரும் மயக்கும் டிகிரி காப்பி.. என்றெல்லாம் விவரித்துக்கொண்டே போகின்ற சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம் நகரமே மோகமுள்ளின் கதைக்களம்.

அதில் கல்லூரியில் படித்துக்கொண்டு சங்கீதம் பயிலவரும் பாபு விற்கும் உரிய வயதாகியும் மணமாகாமல் இருக்கின்ற யமுனா விற்கும் ஏற்படுகிற நட்பு உறவு காதல் காமம் என சகலத்தையும் விவரிக்கின்ற நாவல் மோகமுள்.

இந்த நாவலின் கதையை பலரும் அறிந்திருப்பீர்கள். இந்நாவலில் காட்டப்பட்டிருக்கின்ற கும்பகோணம் பேரழகு வாய்ந்தது. ஏறக்குறைய யமுனாவின் சாயலை ஒத்ததாகவே , சற்றே வயதான ஆனால் கவர்ச்சி குறையாத ஒரு முதிர்கன்னி போல கும்பகோணமும் காட்டப்படுவது தி.ஜாவின் மேதமை.

ஊர்களைப் பற்றி எழுதப்பட்ட பல நாவல்களை தமிழ் கண்டிருக்கிறது. தென் மாவட்டங்களின் கிராமங்களை பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நெடுங்குருதி,மதுரை நகரத்தைப் பற்றி எழுதப்பட்ட காவல் கோட்டம், கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளைப் பற்றி எழுதிய ஜெயமோகனின் எழுத்துக்கள், தஞ்சாவூரை பற்றி பல நூறு பக்கங்களில் எழுதி குவித்த தஞ்சை பிரகாஷின் எழுத்துக்கள், பழைய தென்னாற்காடு மாவட்ட கிராமங்களைப் பற்றி எழுதிய தங்கர்பச்சானின் எழுத்துக்கள், இன்னமும் தன் ஊரின் அடையாளமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற கி.ராஜநாரயணின் எழுத்துக்கள், என நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல் முடிவில்லாதது.

அந்த வகையில் தி.ஜா எழுதிய கும்பகோணம் வசிஷ்டர் நிறுவிக் காட்டிய அஸ்தினாபுரத்தை காட்டிலும், கம்பன் எழுதிக் காட்டிய அயோத்தியை காட்டிலும் மிக அழகானது.

ஒரு முறை கும்பகோணம் வந்திருந்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனோடு அலைந்து திரிந்த போது மோகமுள் கதாபாத்திரங்கள் இருந்திருக்கக்கூடிய சாத்தியப்பட்ட பகுதிகளை என்னிடம் சுட்டிக்காட்டினார். ஏறக்குறைய நாவல் விவரிக்கும் தெரு பகுதி வீடு ஆகியவையும் எஸ்ரா காட்டிய பகுதிகளும் ஒரே மாதிரி இருந்தது மிக ஆச்சரியமாக தோன்றியது. நிஜமும் புனைவும் இடைவெளி இல்லாமல் போனதை நான் அப்போது உணர்ந்தேன். ஒரு படைப்பாளனால் நிஜத்திலேயே ஒரு ஊரையும் மனிதர்களையும் உருவாக்க முடியும் என்பதை நான் அறிந்தேன்.

குறிப்பாக நாவலில் வரும் தங்கம்மாள் என்ற கதாபாத்திரம் வாழ்ந்ததாக மோகமுள் சித்திரிக்கும் வீடு ஒன்றினை கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரிக்கு அருகில் காவிரிக் கரையோரம் எஸ்ரா என்னிடம் காட்டினார். பின்னொரு நாளில் அந்த வீட்டைப் பற்றி நான் விசாரித்த போது பல வருடங்களுக்கு முன்னால் அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை அறிந்தேன். அப்படி என்றால் அந்த இளம் பெண் தான் தங்கம்மாவா..

இந்த நாவலை எழுதிய தி.ஜா கூட கும்பகோணம் கல்லூரிக்கு அருகே காவிரி நதி ஓரம் அறை எடுத்து தங்கி இருந்ததாக கேள்விப்பட்டேன். அப்படி என்றால் தி.ஜா தான் அந்த பாபுவா..

இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் பாபுக்களும், தங்கமாக்களும், யமுனாக்களும் இன்றும் நம்மிடையே , நாமாக இருக்கிறார்கள். அதுதான் மோகமுள் நமக்குக் காட்டிய நமது அகஉலகத்து உண்மை.

துளி- 4

தலைவர் வருகிறார். ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் மக்களின் அழுகுரல்களால் அந்த வளாகமே முடங்கிக்கிடக்கிறது. எதற்கும் கலங்காத இரும்பை போல மனதை உடைய தலைவரும் சற்று பரிதவித்து தான் போயிருக்கிறார்.
தன் மகனை எதனாலும் இழக்கத்துணியாத ஒரு தாயின் பரிதவிப்பு அது. ஏதாவது பேசி அவனைக் கரைத்து கொல்லும் பசியிலிருந்து அவனை மீட்டு ஒரு பிடி சோற்றையாவது ஊட்டிவிட்டுத்தான் நகர வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி வேக வேகமாக நடக்க வைத்து இருந்தது. ஆயினும் அந்த வளாகத்தின் நுழைவாயிலிலேயே தலைவர் தடுக்கப்பட்டார். ஒரு இயக்கம் கடவுள் எனக் கருதும் தன் தலைவரையே தடுக்கும் வரலாற்று நிகழ்வு அதுவரை நிகழ்ந்ததில்லை. தலைவர் விரல் நீட்டும் இடத்தில் வெடித்துச் சாகும் புலிக்கூட்டம் தலைவரை தடுத்து நிறுத்தியது அவருக்கே வியப்பாகத் தான் தோன்றியது. ஒரு விசித்திரமான நிபந்தனை அவர் முன்னால் வைக்கப்பட்டது ‌. போராட்டத்தை தடுக்க வந்தவரை போராட்டத்தை தடுக்கக் கூடாது என நிபந்தனை. தலைவர் தவித்து தான் போனார். இயக்க கட்டளை தலைவருக்கும் பொருந்தும் என உணர்ந்த அறம் வழி நின்று மறம் பாடி வென்று தாய்நிலம் மீட்க வந்த தேவ மீட்பர் அவர்.
வேறுவழியின்றி ஒத்துக்கொண்டு விக்கித்த மனதோடு தளர்ந்து நடந்துபோனார் தலைவர். அவர் முன்னால் மெலிந்த உடலம் ஒன்று விடுதலைப் பசிக்காக உயிரைத் தின்று கொண்டிருந்தது. குழிவிழுந்த கண்களோடு.. ஒடுங்கிய வயிற்றோடு.. சுவாசத்தில் மட்டும் உயிரோடு படுத்துக்கிடந்தான் திலீபன்.
எதற்கும் கரையாத தலைவர் கலங்கி விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இதயத்தை இறுக்கி வைத்திருந்தாலும் ..கட்டி வைத்திருந்த முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழத் தொடங்கின. நெற்றியில் உள்ளங்கை வைத்து தடவிக் கொடுக்கிறார் தலைவர். உடலில் சூடு இன்னும் இருக்கிறது. போகாத உயிரோடு போராடிக் கொண்டிருக்கின்ற திலீபனை காண சகிக்காது கலங்கி அமர்ந்திருக்கிற தலைவரைப் பார்த்து ஒப்பாரி வைத்து கதறி தீர்க்கிறது தீந்தமிழர் கூட்டம்.

பார்த்தீபா என்று முணுமுணுக்கிறார் தலைவர்.

ஒடுங்கியிருந்த விழிகளுக்குள் அசைவு தென்படுகிறது. உலர்ந்து போன உதடுகள் மெலிதாக உராய்ந்து பார்க்கின்றன. அதைத் தாண்டி எதையும் அசைக்க திலீபனால் முடியவில்லை. அது மரணமில்லாப் பெருவாழ்வை நோக்கி நடந்த பெரும் பயணம் என்பதை தலைவர் உணர்ந்துகொண்டு பெருமூச்செறிந்தார்.

பார்த்தீபன் பசித்துக் கிடந்தான்.

வெறும் சோற்றிலும்,
ஒரு அவுன்ஸ் தண்ணீரிலும்,
அடங்கி விடக்கூடிய சாதாரண பசி
அல்ல அது..

சரித்திர வீதிகளில் சாபமாய் தொடர்கிற
துப்பாக்கி முனைகளுக்கும் எதேச்சதிகார குரல் நெறிவுகளுக்கும்..
எதிராக எழுந்த ஓங்கார பசி.

தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஒரு அடிமைப் பட்ட இனத்தின் விலங்கொடிக்க எழுந்த புலிகளின் பசி..

துயர் இருட்டு சூழ்ந்த காரிருள் வனமாய் இருண்டு கிடக்கிற ஒரு இனத்தில் சூரிய தீபமாய் பிறந்துவிட்ட சிலர் தேக்கி வைத்த விடுதலைப் பசி..

மின்னும் கண்களில் லட்சிய வேகம் தெறிக்க.. சுடர்விட்டு எரியும் இதயத்தில் சுதந்திரதாகம் தகிக்க… மண்ணை நேசித்தவர்கள் மனதிற்குள் சுமந்த மகத்தான பசி.‌.

காந்தி பசித்து கிடந்தார்‌.
அவர் உலகத்திற்கே உதாரணமாய் போனார்.

எங்கள் திலீபன் பசித்து இறந்தான்..
அவன் அந்த காந்திக்கே
உதாரணமாய் போனான்.

துளி-3

உண்மையில் எளிமை என்பது என்ன.. அது ஒரு பண்பாடா.. அது ஒரு ஒழுங்கா.. அதுவரை கடைபிடித்து வந்த பழக்கவழக்கங்களின் நீட்சியா.. அது ஒரு அடையாள அரசியலா.. என்றெல்லாம் யோசிக்கும் போது எளிமை பற்றி பல்வேறு கதவுகள் நம் முன்னே திறக்கின்றன.
 
எளிமை பற்றி பல்வேறு சமய மரபுகள் விரிவாக ஆராய்கின்றன. புத்தமும், சமணமும் எளிமையை அடிப்படையாக கொண்டவை. இந்திய தத்துவ மரபில் எளிமைக்கென்று ஒரு தனித்த இடம் இருக்கிறது. ஏறக்குறைய ஜப்பானின் ஜென் மரபு கூட எளிமையை அடிப்படையாக கொண்டதுதான்.
 
ஆனால் எளிமை பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எளிமை என்பது ஒருவித ஆடம்பரம் என்ற விமர்சனம் உண்டு. எளிமை என்றாலே நம் கண்முன்னால் வருவது காந்தியின் தோற்றம்தான். ஆனால் அந்த காந்தியின் எளிமையை பராமரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அக்காலத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்தது என்ற விமர்சனங்கள் உண்டு. ஏனெனில் அந்த எளிமை குறியீடுதான் அக்காலத்து காங்கிரசின் அரசியல் மூலதனம்.
 
என் தந்தையின் தாய் என் ஆத்தா ராஜாம்பாள் 84 வயது வரை உயிருடன் இருந்து மறைந்து போனார். தன் மகன்கள் நன்கு சம்பாதிக்கும் காலத்திலேயே தான் இளமையில் உணர்ந்த அனுபவித்த , வறுமை நிலையை தன் இறுதிக்காலம் வரை மிக கவனமாக அவர் பாதுகாத்து வந்தார். செருப்பு அணிய மாட்டார். விலை உயர்ந்த புடவை வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுப்பார். நூல் புடவைகளே அவரது அடையாளம்.காரில் ஏற அவ்வளவு தயங்குவார். நடமாட்டம் இருக்கும் வரை எங்கு சென்றாலும் அவர் வெறுங்காலோடு நடந்தே தான் போவார். அவரைப் பொறுத்தவரை எளிமை என்பது அவரது அன்றாட வாழ்வியல் முறைமை . அவரைப் போலவே என் மாமா வழக்கறிஞர் சீனு ஜெயராமன் அவர்களின் தந்தையார் மறைந்த சீனுவாசன் அவர்கள் தன் மகன் புகழ் பெற்ற வழக்கறிஞராகி , சம்பாதித்து காரில் செல்லும் போதும் தான் நடத்தி வந்த டீக் கடையை விடாமல் நடத்தி வந்ததும், வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ தயாரித்து ஆற்றிக் கொடுப்பதையும் நான் கண்டிருக்கிறேன். தன் மகன் புகழ்பெற்ற ஒரு அரசியல் தலைவராக , திரைப்பட இயக்குனராக இருந்த போதும் இன்னமும் வயல்வெளியில் வேலை பார்த்து வருகிற அண்ணன் சீமானின் பெற்றோர்களை நான் நேரடியாக கண்டு வியந்திருக்கிறேன்.எளிமையாக இருப்பதே தனது அடையாளமாக கொண்ட பெருமக்கள் அவர்கள்.
 
அரசியலில் இடதுசாரிகளின் எளிமை மிகப் புகழ் வாய்ந்தது ‌. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகம் ஒரு நவீன கார்ப்ரேட் அலுவலகத்தை விட மிக ஆடம்பரமாக இருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
இளம் வயதில் கம்யூனிஸ்ட் ஆக முயல்வதும், சிவப்பின் பின்னால் திரிவதும் என்பது ஒரு லட்சிய வாழ்வின் மகத்தான கனவு. நானும் சில காலம் அவ்வாறு திரிந்திருக்கிறேன். நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது தோழர் ஆர் என் கே என்று அழைக்கப்பட்ட அய்யா நல்லக்கண்ணு அவர்களே எனக்கு அரசியல் ஆதர்சம். அவர் பற்றிய பிம்பங்களை என்னுள் பதிய வைத்து அவரை ஒரு லட்சிய புருஷராக என்னுள் பதித்தவர் எனது ஆசான் தோழர் சிஎம் என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய சி.மகேந்திரன் அவர்கள்.
 
ஒருமுறை எங்கள் தஞ்சை மாவட்ட சிபிஐ கட்டிடப்பணிகளை பார்வையிடுவதற்காக தோழர் ஆர்என்கே அவர்கள் தஞ்சை வருவதாக அறிந்தேன். அவரை நேரில் சந்திக்க வேண்டுமென நான் நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருந்தேன். அவர் வருவதற்கு முன்பாக நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக தஞ்சை கிளம்பி சென்றேன். சற்று நேரமாகிவிட்டது. அலுவலக வாசலில் யாரும் இல்லை. நல்ல வேளை.. ஐயா நல்லக்கண்ணு வரவில்லை போலும். வந்துவிட்டிருந்தால் கூட்டம் கூடியிருக்கும் என நினைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தேன். அலுவலகத்திலும் யாரும் இல்லை. அந்த வளாகத்தில் இருந்த ஒரு கிணற்றில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் ஐயா நல்லகண்ணு அவர்கள் வந்து விட்டார்களா என்று வினவினேன். அவர் என்னை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு குளித்துக் கொண்டிருந்தார். நானும் அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்து அருகில் இருக்கிற ஜனசக்தி நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் தலையைத் துவட்டியவாறே சொல்லுங்க தோழர்.. என்றார் ‌. நான் மீண்டும் ஐயா நல்லகண்ணு அவர்கள் எப்போது வருவார்கள் என கேட்டேன். அதற்கு அவர் நான் தான் நல்லகண்ணு ‌‌. சொல்லுங்க தோழர்‌.. என்றார்.
 
ஒரு நொடியில் எனக்கு உலகமே அதிர்ந்தது போல தோன்றியது. தீவிரமான ஒரு அசட்டுத் தனமும் வெட்க உணர்ச்சியும் என்னை ஆட்கொண்டன. ஒருவகையில் அந்த எளிமை என்னை அச்சுறுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
 
பிறகு அவரிடம் உரையாடத் தொடங்கினேன். என் அறிவுஜீவி தனத்தை அவரிடம் காட்ட நான் அது வரை படித்து வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் மொழிபெயர்ப்பு நூல்களை சார்ந்து சில கேள்விகளை அவர் முன் வைத்தேன்‌‌. விஞ்ஞான கம்யூனிசம், மார்க்சிய பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். அவர் பொறுமையாக எளிய மொழியில் தெளிவான பதில்களை அளித்துக் கொண்டே வந்தார். உண்மையில் அவர் மொழியில் இருந்த எளிமை என் மேதமைத்தனத்தை சுக்குநூறாக நொறுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். நீ எல்லாம் ஒரு அறிவாளியா என்று நம் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது போல அவரது எளிமை அந்த அளவு வலிமையாக இருந்தது..
 
கொஞ்ச நேரத்தில் மௌனமாகிப் போனேன். ஐயா நல்லக்கண்ணு அவர்களும் கட்சித் தோழர்கள் வரவே கூட்டத்திற்கு கிளம்பினார். அப்போது தான் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் செருப்பு அறுந்துவிட்ட விபரமும், தைத்து தைத்து பயன்படுத்தியதால் அது மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்று விட்ட விபரமும் என்னை வந்து சேர்ந்தன ‌. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு சம்பாதித்துக் கொண்ட கெட்டப் பெயரை இச்சூழ்நிலையை பயன்படுத்தி சரிசெய்து கொள்ள வேண்டுமென ஆர்வக்கோளாறாக திட்டமிட்டேன். அவரது செருப்பின் அளவை அறிந்து கொண்டு அருகில் இருந்த பேட்டா கடையில் நல்ல தோல் செருப்பாக பார்த்து வாங்கிக்கொண்டு போனேன். அட்டையை பிரித்து பார்த்தவர் தான் இதுபோன்ற செருப்புகளை தான் பயன்படுத்துவதில்லை எனவும் சாதாரண சிலீப்பர் செருப்புகளைத்தான் பயன்படுத்துவதாகவும் கூறி செருப்பினை மாற்றச் சொன்னார். மேலும் கட்சித் தோழர்கள் இது போன்ற ஆடம்பர செலவுகளை செய்யக்கூடாது எனவும் பொதுவாக கடிந்து உரைத்தார். செருப்பை மாற்றி வாங்கி வந்த பிறகு அதற்கான ரசீதை பார்த்து அதற்கான தொகையை மறக்காமல் என்னிடம் வழங்கிவிட்டு என் தோளைத் தட்டி.. கட்சி வகுப்புக்குப் போங்க தோழர் ..என்று சொல்லியவாறே நகர்ந்து போனார்.
 
அதுவரை நான் கொண்டிருந்த அனைத்து அரசியல் கருத்தாக்கங்களையும் தனது எளிமை வாழ்வின் மூலம் தகர்த்தெறிந்துப் போனார் ஐயா நல்லகண்ணு. எளிமை என்பது நான் மேற் சிந்தித்த எதுவும் இல்லை, அது ஐயா நல்லக்கண்ணு போன்றோரின் இயல்பான வாழ்வியல் என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
 
நான் திராவிட இயக்க குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன். பெரியார் பார்த்து பார்த்து செலவு செய்தவர் என்பார்கள். ஆனால் அவர் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் இருக்கும் பெரியார் திடல், அண்ணா அறிவாலயம் போன்ற ஆடம்பர அரண்மனைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். சாதாரண திராவிட கட்சிகளின் நகர , ஒன்றிய நிர்வாகிகளே ஆடம்பரமாக வெள்ளையும் சொள்ளையுமாக வலம் வரும்போது அவர்களுக்கு மத்தியில் சாதாரண சிலீப்பர் செருப்பு போட்டு , அலைந்து திரியும் அய்யா நல்லகண்ணு போன்றவர்கள் மானுட வாழ்வின் மகத்தான அதிசயங்களே..
 
இச்சம்பவம் குறித்து நான் ஒரு முறை தோழர் சி மகேந்திரனிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தபோது.. அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு எழுந்து சென்றார். அப்போது அவர் தோளில் மாட்டியிருந்த அவரது ஜோல்னா பை கூட தையல் விட்டு கிழிந்து இருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

Page 2 of 2

Powered by WordPress & Theme by Anders Norén