????

…அடை மழை இரவில்

காற்றின் பேரோசைப்பொழுதில்

படபடவென அடித்துக்கொண்ட

ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு

திரும்பிப் பார்த்தபோது,

அந்த நீல விளக்கு ஒளிர்ந்த

மாடி அறையின் மையத்தில் நீ

நின்று கொண்டிருந்தாய்.

தலை குனிந்த வாறே

நீ நின்றிருந்த கோலம்

எனக்கு மிஷ்கின் படத்து நாயகனை

நினைவூட்டியது.

உறுதியான கால்களுடன்

அங்கிருந்து நகரப் போவதில்லை

என்ற தீர்மானத்துடன்

நீ நின்று இருப்பதாக

எனக்குத் தோன்றியது.

நான் பேச எதுவும் இல்லை.

ஆனால் என் நடு மார்பில்

பாய்ச்சுவதற்கான அம்புகளாய்

விஷம் தோய்ந்த சொற்களை

உன் நாவில் எடுத்து வந்திருக்கிறாய்

என நினைக்கிறேன்.

தீரா கொடும் வலியும்,மீளா நடு இருளும்,

வண்ணங்களாய் ஒளிரும்

உன் சொற்கள் செவிகளில் புகுந்து விட்ட

முள் பந்தாய் உருளக்கூடியவை.

அடிமேல் அடி வைத்து

கடந்த காலத்தை

நினைவூட்டும் டேப்ரிக்கார்டரின் ரிவைண்டர் போல

பின்னால் போய்க் கொண்டிருந்தேன்

நீ குளிர் காலத்து பழங்கால சிலையாய்

அப்படியே உறைந்திருந்தாய்‌.

துளியும் கருணையற்று நீ

அவ்வப்போது துப்பியதூளாக்கப்பட்ட

பிளேடு துண்டுகளின் சாயல் கொண்ட

உன் சொற்கள் என் ஆன்மா முழுதிலும்

அப்பிக் கிடக்கின்றன.

வெளிறிய விழிகளோடு பின்னால் நகர்ந்த

நான் சுவரின் விளிம்பில்

நின்று கொண்டிருக்கிறேன்.

கால விசை நழுவிய

ஒரு நொடியில் வேகமாய்

ஓடி வந்த நீ ஆழமாய்

என் கழுத்தில் உன் கத்தியை சொருகினாய்.

நல்ல வேளை..

நீ உன் சொற்களோடு வரவில்லை

என்கிற ஆசுவாசம் மட்டும்,

அந்த ஒரு நொடியில்‌‌..

உதிரமேறி கிறங்கும்

என் விழிகளில் நிம்மதியின் நிழலை பரப்பியது