கால அடுக்கு

நழுவிய அந்த

நொடியில் தான்

என் நினைவின்

விரல்கள் அந்த கதவின்

மீது பட்டன.

வெண்மையும்

வெம்மையும்

கசிந்துக்கொண்டிருந்த

அந்த கதவிடுக்கின்

வழியே கண்ட போது

நீல நிறத்தில் மலர்ந்த

செம்பருத்தி சாயலில்

அந்த பாடல் எனக்காக

காத்துக் கொண்டிருந்தது.

துளித்துளியாய்

திறந்த கதவிற்கு

பின்

பனித்துளி தூவிய

பசுங் கொடி மேவிய

அந்த வெள்ளைச்சுவர்

இருந்தது.

அங்கே இருந்த

அலங்கார பீடத்தில்

வைக்கப்பட்டிருந்த

சுழலும் இசைத்தட்டில்

இருந்து எழும்பிய

மெல்லிய புகைச்சுருளின்

ஊடே சுழன்றவாறே

அவள் மிதந்திருந்தாள்.

அப்போதுதான்

எனக்கே

எனக்காக

உருவாக்கப்பட்ட

அந்த பாடல்

அனிச்சையாக

ஒலிக்க தொடங்கியது.

கண்கள் கலங்க

மீண்டும்

அந்தப் பாடலை

கேட்க

தொடங்கியபோது

தான் உணர்ந்தேன்.

நான்

திறந்தது கதவும் அல்ல.

நான் கேட்பது வெறும்

பாடலும் அல்ல.

இந்த இரவும்

முடியப் போவதில்லை.

விடியப் போவதில்லை.