????

நியாயம்

என்ற

வினாவின் ஓசை

நடுநிசியில்

மூடப்படாத

குடிநீர் பைப்பு

போல

சரித்திரத்தின்

வீதிகளிலே

சொட்டி கொண்டே

இருக்கிறது.

எது நியாயம்

என்பதற்கு

அவரவருக்கு

ஒரு தர்க்கம்.

ஆளாளுக்கு

ஒரு கதை.

வரையறையற்ற

சுதந்திரத்துடன்

அவரவர்‌ விழிகளில்

படுகிற காட்சியாய்,

இலக்கற்ற ஓவியமாய்,

அலைந்துக் கொண்டே

இருக்கும் சீரற்ற

சிதறலாய் நியாயம்.

எந்த திசையில்

நியாயம் உறைகிறது

என்று எவருக்குமே

தெரியாது.

ஏனெனில்

நியாயம்

திசைகளை அழித்து

அவரவருக்கு

ஒரு திசையை

பிரசவிக்கிறது.

நியாயத்தை

பற்றி எழுதி எழுதி

எழுதுகோல்கள்

முனை உடைந்து

இருக்கின்றன.

அவரவருக்கான

நியாயத்தின்

பழுப்பேறிய

ஏடுகளின்

வாக்கியங்கள்

தங்களுக்கு தாங்களே

அவ்வப்போது

மாறிக் கொள்கின்றன.

அப்படி என்றால்

நியாயம் என்றால் என்ன

என்று புத்தனின் கடைசி

சீடன் சுமன் கேட்டான்.

தனக்குள் ஆழ்ந்திருந்த

புத்தன் தன் மௌனத்தை

கலைத்து சொன்னான்.

“அடுத்தவரின்

பார்வையை

உன் விழிகளில்

பார்த்தால்

அது தான் நியாயம்.”

காலம் ஒரு முறை

சிலிர்த்து அடங்கியது.

❤️