இந்து தமிழ் திசை‌ இதழில் “ஆண் மனதின் கேவலம்” என்ற தலைப்பில் பிருந்தா சீனிவாசன் என்பவர் எழுதிய பதிவு ஒன்றினை காண நேர்ந்தது.

மிகவும் ஒரு தலைப்பட்சமான பார்வை கோளாறு நிரம்பிய அந்தப் பதிவு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை ஆணாதிக்கம் உடையவராக சித்தரிக்க முயன்றது. குறிப்பாக அண்ணன் சீமான் எதிர்கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறிய சில வார்த்தைகளை கருப்பொருளாக வைத்துக் கொண்டு பிருந்தா அவர்கள் இதழியலாளருகளுக்குரிய ஊடக அறத்தை தன் சுய கண்ணோட்டத்திற்காக மீறி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு பெண்ணைப் பற்றி அவரது மனைவியார் சொன்னதாக கூறிய கருத்து என்பது ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரானது என காட்டுவது மிக மோசமானது. அந்தக் கருத்து குறிப்பிட்ட பெண்ணின் குணாதிசயத்தை விமர்சித்து எழுந்த கருத்து. பொய்யான அவதூறுகள் மூலம் தொடர்ந்து ஒருவரை பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிற ஒரு பெண்ணை அவரின் இயல்பை பற்றி எழுந்த விமர்சனம் அது. அந்த விமர்சனத்தை ஒட்டுமொத்த பெண் இனத்திற்கானதாக மாற்றுகின்ற திசை திருப்புகிற “பணி”(?)யை யார் பிருந்தாவிடம் வழங்கியது என்பதை பிருந்தா மட்டுமே அறிவார்.

இப்போதுதான் நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேறி உள்ள நிலையில்‌ சென்ற பாராளுமன்ற தேர்தலின் போதே நாம் தமிழர் கட்சி இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதன் முதலாக பெண்களுக்கு தேர்தலில் 50 விழுக்காடு வாய்ப்பளித்து வரலாற்றில் இடம் பிடித்த அமைப்பு. அடுத்து வந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும்‌ 234 தொகுதிகளில் சரி பாதி பெண்களுக்கு இடம் அளித்து பெண்ணுரிமையை தன் உயிர் கொள்கையாக அண்ணன் சீமான் செயலில் செய்து காட்டினார்.

இந்த துணிச்சலான நடவடிக்கை இந்திய சமூக வரலாற்றில் ஒரு மைல் கல். தேர்தல் வெற்றி தோல்வியை பற்றி கணக்கில் கொள்ளாமல் சமூக மாற்றத்தை பற்றி ஆழமாக சிந்திக்கும், பிருந்தா போன்றவர்களால் கேவலமானதாக பார்க்கப்படுகின்ற ஒரு உன்னத ஆண் மனது தான் இதை நடைமுறைப்படுத்தியது.

ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை தன் அமைப்பின் தத்துவமாக அண்ணன் சீமான் தான் பேசும் இடங்களில் எல்லாம் பதிவு செய்து வருகிறார்.

அண்ணன் சீமான் அவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் கழித்து இரண்டு பிள்ளைகளுக்கு அவர் தந்தையான பிறகு “ஒரு காலத்தில் அவர் என்னை காதலித்தார் என்னை ஏமாற்றி விட்டார்..” என்றெல்லாம் ஒரு நடிகை பேசுவது இவர்களுக்கு பெண்ணுரிமையாகப்பட்டால் பிருந்தா போன்றவர்கள் தான் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்.

இதே போல ஒரு காலத்தில் காதலிக்கப்பட்டவர்கள் மீது காதலித்தவர்கள் எல்லாம் குற்றம் சாட்டி வீதிக்கு வந்து நின்று சண்டை போடும் பட்சத்தில் இங்கே யாரால் நிம்மதியாக இருக்க முடியும்..??

காதல் என்பது ஒரு காலத்தின் உணர்ச்சி. அது சிலருக்கு திருமணத்தில் முடிகிறது. பலருக்கு நினைவாக தேங்கி விடுகிறது. மேலும் கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகும் மனநிலை காதல் என்ற பெயரில் தான் தேர்வு செய்யும் இணையை பெரும்பாலும் மறு பரிசீலனை செய்து மாற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்துகிறது.

அந்த விமர்சனம் கூட குறிப்பிட்டு இத்தனை பெண்களுக்கு மத்தியில் அந்தப் பெண்ணை ஏன் நீ விரும்பினாய் என்கிற கேள்விக்கு இது போன்ற குணாதிசயம் உள்ள பெண்ணை ஏன் விரும்பினாய் என்பதுதான் பொருளே ஒழிய ஒட்டுமொத்த பெண்ணினம் இங்கே எங்கே வந்தது..??

தனிப்பட்ட விருப்பு வெறுப்பன்றி ஒரு செய்தியை அணுக முடியாதவர்கள் பத்திரிக்கை துறையில் பணியாற்றும்போது நேருகின்ற விபத்து இது. சொல்லப்போனால் குறிப்பிட்ட அந்த நடிகை மீதும் அவருடன் இணைந்து தற்போது பிரிந்து இருக்கின்ற இன்னொரு பெண்ணின் மீதும் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகிறார்கள் என நாடெங்கிலும் அதிகம் புகார் அளித்தது பெண்கள் தான், பெண்ணினத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பெண்ணுரிமை என்பது ஒரு ஆணை முன்னிறுத்தி பொய்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பி அதன் மூலம் நிலைநாட்டப்படுவதல்ல. மாறாக வரலாற்றில் காலம் காலமாக தாழ்த்தி ஒடுக்கப்பட்டு சமையலறையிலும் படுக்கை அறையிலும் வீழ்த்தப்பட்டு கிடக்கிற பெண்களை வீதிக்கு அழைத்து வந்து அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் அவர்களை ஈடுபடுத்துவது.

ஒருபோதும் பெண்களால் மட்டும் பெண்ணுரிமையை ஈட்டி விட முடியாது. பெண்களை சரிக்கு சமமாக மதிக்கின்ற அண்ணன் சீமான் போன்ற மிகவும் பக்குவமான சுதந்திர உணர்ச்சி நிரம்பிய ஆண் மனது அதற்குத் தேவையாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ஆண் மனது கேவலம் என அவதூறு பேசும் பிருந்தா போன்றவர்கள் தான் விடுதலைக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரானவர்கள்.