அம்பேத்கரின் ராஜினாமா.

அண்ணல் அம்பேத்கரைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோடி சில கருத்துக்களை பேசியிருந்ததை கண்டோம். குறிப்பாக அம்பேத்கர் அவர்களின் ராஜினாமா.

பிரதமர் மோடி ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போதே நாம் கவனமாகி விட வேண்டும். ஏனெனில் அதில் பொய்யும் வரலாற்று திரிபுகளும் கலந்து அக்கருத்தை உண்மை என நிறுவி விடுகிற மோடியின் துடிப்பு மிக ஆபத்தானது.

குறிப்பாக மோடி வழியாக இந்துத்துவ இயக்கங்கள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். திருவள்ளுவருக்கு பட்டை பூசி காவி உடை மாட்டியதில் தொடங்கி வள்ளலாரை இந்து மத சின்னங்களோடு அடையாளப்படுத்துவதில் வரையிலான அடையாளச் சிக்கல்களை அண்ணல் அம்பேத்கருக்கும் ஏற்படுத்தும் இந்துத்துவ சதிகளில் தமிழர்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தின் எதிரியாக தன்னை நிறுவிக் கொண்டவர். தன் வாழ்நாள் முழுக்க சனாதன தர்மத்திற்கு எதிராக ஒரு மாபெரும் போரை நிகழ்த்தியவர். இந்து மதத்தின் ஆன்மாவாக கருதப்படும் மனுதர்மத்தை எரித்தவர். நான் ஒரு இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என கம்பீரமாக முழங்கி அதன்படியே பௌத்தத்தை தழுவியவர்.

காங்கிரசை அம்பேத்கர் எதிர்த்தார். ஏனெனில் காங்கிரஸ் உயர்சாதி இந்துக்களுக்கான கட்சியாக இருந்தது. முதன் முதலாக மும்பையில் அண்ணல் அம்பேத்கர் காந்தியடிகளை சந்தித்தபோது இந்த நாட்டில் வாழ்கின்ற தீண்டப்படாத மக்களுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க காங்கிரஸ் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறது என கூற அதனால் என்ன பயன் என மறு கேள்வி கேட்டு காந்தியை திணறடித்தார் அண்ணல் அம்பேத்கர். இந்து முஸ்லிம் பிரச்சனையை விட தீண்டாமை ஒழிப்பு தான் தனக்கு முக்கியம் என அம்பேத்கரிடம் ஒத்துக் கொண்ட காந்தியை அம்பேத்கர் என்றுமே நம்பியதில்லை. இவ்வாறாக காங்கிரஸ் மீதான எதிர்ப்பு நிலையை அம்பேத்கர் எடுத்திருந்தார். அது முழுக்க முழுக்க இந்து சனாதன தத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு.

காந்தியடிகளின் சனாதன ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க பேராற்றலாக நின்றார். காந்தியடிகள் இந்திய பெரு நிலத்தின் அறிவிக்கப்படாத மன்னர். எல்லோராலும் வாழும் காலத்திலேயே வழங்கப்பட்ட மனிதப் புனிதர். ஆனால் அண்ணல் அம்பேத்கர் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான புரட்சியாளர். இருவரும் வரலாற்றில் எதிர் எதிர் புள்ளிகளாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மிகுமதிப்பு கொண்டிருந்தார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் அமைச்சரவை உருவாகும் காலத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தன் அமைச்சரவையில் இணைக்க நேரு எடுத்த முடிவை காந்தி மனதார பாராட்டினர்.

முஸ்லிம் லீக் உதவினால் இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்ற அண்ணல் அம்பேத்கர் அந்த குழுவில் இடம் பெற்ற அனைவரையும் விட கடுமையாக உழைத்தார். உலக அரசியலமைப்புகளில் உள்ள சிறந்த அம்சங்களை இந்திய அரசியலமைப்பில் கொண்டு வர வேண்டும் என விரும்பினார். சமூகத்தின் எல்லாருக்குமான உரிமைகளை காக்கின்ற அரசமைப்பாக அது திகழ வேண்டும் என விரும்பி அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என கனவு கண்டார்.

சட்ட அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏற்கனவே இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி புதிய இந்துமத சட்டத்தினை இயற்றிட அண்ணல் அம்பேத்கர் முயன்றார். ஏற்கனவே இருந்த இந்து மத சட்டத்தின்படி விதவை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடையாது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல்வேறு பிற்போக்கு தனங்களோடு இருந்த இந்து மத சட்ட தொகுப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக புதிய இந்து மத சட்டத்தினை அண்ணல் அம்பேத்கர் இயற்ற தொடங்கினார்.

அப்போது தான் திருமணம் செய்ய நினைத்த டாக்டர் கபீர் என்று அழைக்கப்பட்ட சவீதா அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கூட புதிய இந்து மத சட்ட தொகுப்பை எழுதி வருகிற செய்தியை குறிப்பிடுகிறார். தான் திருமணம் செய்து கொள்ள ஏற்படும் காலதாமதத்தை பற்றி தன் வருங்கால இணையரான, பிராமண சாதியை சேர்ந்த சவிதாவிற்கு கடிதங்கள் எழுதும் அம்பேத்கர் தற்போது இருக்கின்ற இந்து மத சட்டத்தின்படி தனது திருமணம் அங்கீகரிக்கப்படாது என்றும் புதிய இந்து மத சட்டம் விரைவில் ஏற்றப்பட்டவுடன் தனது சாதி மறுப்பு திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு விடும் என்றும் அந்த கடிதங்களில் குறிப்பிடுகிறார். இல்லையேல் சிறப்பு திருமண சட்டத்தின் படி தான் திருமணம் செய்ய வேண்டி இருக்கும் எனவும் குறைபட்டு கொள்கிறார்.

அப்படி அவர் இரவு பகலாக உழைத்து பாடுபட்டு உருவாக்கிய புதிய இந்து மத சட்டத் தொகுப்பினை பாராளுமன்றத்தில் அவரால் சட்டமாக்க முடியவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட முற்போக்கு கருத்துக்கள் அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த இந்து மத சனாதன ஆதரவாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. நாத்திகரான நேரு இதில் நடுநிலைமை வகுத்ததை அண்ணல் அம்பேத்கர் விரும்பவில்லை. தனது தனிப்பட்ட தோல்வியாக இதை உணர்ந்த அண்ணல் அம்பேத்கர் இனியும் சட்ட அமைச்சர் பதவியில் இருப்பது பலனில்லை என உணர்ந்து தன் பதவியை 1951இல் ராஜினாமா செய்தார்.

இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு கூட இந்து மத சனாதன எதிர்ப்புணர்ச்சியின் மாபெரும் விளைவாகத்தான் ஏற்பட்டது என்பதை மோடி மறைத்து காங்கிரசுக்கும் அம்பேத்காருக்கும் பொத்தம் பொதுவாக சண்டை என காட்டுவது மோடியின் மோசடி வித்தை.