
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் “தனிப்பட்டவை” என்ற ஒரு வகைமை இருக்கும்.ஆங்கிலத்தில் அதை Private, Personal போன்ற சில சொற்களில் அழைக்கிறார்கள்.
அப்படி மனிதனுக்குள்ள தனிப்பட்டவையாக இருக்கும் பலவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது. அவைகள் அவனோடு தோன்றி அவனோடு வாழ்ந்து அவனோடு முடிபவை.
இதில் இளையராஜா விதிவிலக்கு.
ஏறக்குறைய தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு இளையராஜா அவர்களுக்கே உரிய அந்தரங்கமான Personal தான். என்ன ஒன்று என்றால்.. இது பற்றி அவர்களால் பலரோடும் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு இளையராஜா. எண்பதுகளில் பிறந்த பலருக்கும் இளையராஜா தான் தாலாட்டு. பதின் வயதுகளில் கிடைத்த முதல் முத்தத்தில் இளையராஜா தான் முதல் காதல். முதல் காமம். ஊர் திருவிழாக்களில் இளையராஜா ஒலிக்க தொடங்கியவுடன் திருவிழாக்கள் வந்துவிட்டன. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு இரவில் வலியால் கசிந்து கொண்டிருந்த விழிகளுக்கு.. இளையராஜா பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
வேலை கிடைக்காமல் முகவரி தெரியாத ஊரில் எங்கோ கிடைத்த ஒரு இடத்தில் பசியோடு தனியே படுத்துக் கொண்டிருந்தபோது, இளையராஜா குரல் மூலம் தான் அவரவர் சொந்த ஊரின் சுவாசத்தை பருகிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு இளையராஜா எப்படி என்றால்.. உங்களைப் போல எல்லாமும் தான்.
எல்லோருக்கும் சொல்லிக் கொள்வதற்கும், சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நெகிழ்ந்து கொள்வதற்கும், யாருக்கும் தெரியாமல் விழிகளில் வடிகிற ஒரு துளி கண்ணீரை சிறிய வலியோடும், நிறைய நினைவுகளோடும் உணர்ந்து நினைக்கின்ற ஒரு காலம் இருக்கும் இல்லையா…
அந்தக் காலத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான்.
இளையராஜா சிம்பொனி இசைத்து சாதனை படைத்து விட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு எளிய மனிதனின் வாழ்க்கையிலும் அவனது நிராதரவு பொழுதுகளில்… அவரது வயலின்களும், அருண் மொழியின் ஒற்றைப் புல்லாங்குழலும்.. கொடுக்கின்ற ஆறுதல்.. சிம்பொனி இசையெல்லாம்
அதற்கு முன்னால் கொஞ்சம் சின்னது தான்.
இளையராஜாவை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு.. சற்றே சிந்தித்து, உள்ளுக்குள்ளேயே உருகி, இப்படி ஒரு கேள்வியா என நினைத்து பதில் சொல்ல சில மணித்துளிகள் எடுத்துக் கொள்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை..,
இளையராஜா என்பது வெறும் பெயர் அல்ல.
அவர் நமது வாழ்க்கை.
தீவிர எதிர் முனைகளான அளவற்ற அறமும், தீரா வன்மமும் இரண்டும் எதிர்பாராத வகையில் கலந்து நிற்கிற நமது இயல்பான வாழ்க்கையில்.. அவர் மட்டும் தான் தேங்கிவிட்ட கடவுளின் அமுதம்.
கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையோ பொய்யோ தெரியாது.
ஆனால் எங்கள் உலகத்தை படைத்தது இளையராஜா தான்.
எங்கள் தலைமுறையின் மகத்தான மாமேதைக்கு.. திசை உணர்த்திய இசைக் கடவுளுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
மறுமொழி இடவும்