வாழ்வைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமா..

மனதில் உள்ள எல்லாவிதமான வெறுப்பு உணர்ச்சிகளும் அழிந்து இந்த வாழ்க்கையை அசலாக எதிர் கொள்ள வேண்டுமா…??

முன் முடிவுகள் ஏதும் பயன் தராத, வாழ்வின்

எதிர்பாரான்மை பற்றி விளங்கிக் கொள்ள வேண்டுமா..??

ஒரு அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

காத்திருப்போர் மத்தியில் ஒரு நாள் தங்கி இருங்கள்.

சுற்றி இருக்கிற நோயாளிகள், நோயாளிகளை அழைத்து வந்தவர்கள் என எல்லோரையும் கவனியுங்கள்.

மேற்சொன்னவை அனைத்திற்கும் பதில் கிடைத்துவிடும்.

சமீப காலமாக மருத்துவமனைகளிலேயே திரிந்துக் கொண்டிருப்பதால்,‌ புரிந்துக் கொண்டிருப்பவை ஏராளம்.

“என்றும் சுஜாதா” என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. எழுத்தாளுமை எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகளில் இருந்து சுவாரசியமாக சேகரிக்கப்பட்ட தொகுப்பு இது. ரசித்து படிக்கும் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

அதில் ஒரு கட்டுரை இருக்கிறது. நோயுற்ற தன் தந்தைக்காக மருத்துவமனையில் தங்கியிருக்கும் அனுபவத்தை சுஜாதா எழுதி இருக்கும் விதம் உண்மையில் கலங்கடிக்கிறது.

மருத்துவமனைகள் ஒரு தனித்த உலகம். இரவிலும் அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனிதர்கள் நிரம்பிய உலகம். ஒருவர் இரவு முழுக்க அமர்ந்து கண்கலங்கி அழுது கொண்டிருக்கும் போது, அருகிலேயே இன்னொருவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கின்ற முரண்கள் நிரம்பிய உலகம். ஒரு வகையில் மருத்துவமனைகள் தான் உலகின் அசலான நகல்.

எல்லோரும் தனி மனிதர்கள் என்பதை மருத்துவமனைகள்தான் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் மறைந்த இயக்குனர் இமயம் அப்பா பாரதிராஜா இறுதி காலத்தில் வீட்டிலேயே ஒரு சிறு மருத்துவமனை அமைத்துக் கொண்டு செவிலியர் உதவியோடு நாட்களை நகர்த்தியதாக வரும் தகவல்கள், காசு பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கை முழுமை அடையாது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.

மருத்துவமனைகளில் ஏராளமான முதியோர்களை பார்க்கிறேன். அவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் மகன்களையும் மகள்களையும் வயதான அவர்களது வாழ்க்கை துணைவியர்களையும் பார்க்கும் போது உண்மையில் அவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என தோன்றுகிறது.

நேற்று மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது ஒரு விசித்திரமான காட்சியை பார்த்தேன். வயதான தந்தையோடு அவசர அவசரமாக ஐ சி யூ க்குள் நுழைந்தார் ஒருவர். அவர் உடை , அவர் பயன்படுத்தும் சொற்கள் அலை பேசி ஆகியவை ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் வேலை செய்வதை காட்டின.

சென்ற வேகத்தில் தந்தையை ஐ சி யூ வில் சேர்த்துவிட்டு வெளியேறி வந்தார். அங்கே காத்திருந்த செவிலியரிடம் தனக்கு திருச்சியில் விமானத்திற்கு நேரமாகி விட்டதாகவும், நாளை அதிகாலை அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், விடுமுறை கிடைக்கவில்லை எனவும், அதனால் தன் தந்தையை இரண்டு நாட்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,அதற்கு எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை எனவும் , இரண்டு நாட்கள் கழித்து தனது தங்கை ( அவரும்..) அமெரிக்காவில் இருந்து வந்து விடுவார் எனவும், அதற்குப் பிறகு அவர் பார்த்துக் கொள்வார் எனவும், ஏதோதோ பேசிக் கொண்டிருந்தபோது.. அவர் தந்தைக்கு உள்ளே ஏதோ சீரியஸ் ஆகிவிட்டது.

உள்ளே செவிலியர்களும் மருத்துவர்களும் ஓடுகிறார்கள். இந்த மனிதர் வாசலில் நின்று கொண்டு யாருக்கோ அலைபேசியில் அழைத்து கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக அவரது தங்கையாக இருக்கலாம். ( நிறைய f**ck, shit..). ஏதோ மாட்டக் கூடாத இடத்தில் சிக்கிக் கொண்டது போல தவித்துக் கொண்டிருந்த அந்த ஆளை பார்க்க ஏனோ பிடிக்கவில்லை.

அப்போதுதான் சுஜாதா எழுதிய “அப்பாவின் மருத்துவமனை” இரவு கட்டுரை நினைவுக்கு வந்தது.

புனித குர்ஆனில் இறை மொழி ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது.

“குழந்தைகளாக நீங்கள் பிறந்த போது உங்களது பெற்றோர் உங்களை எப்படி பேரன்போடு கவனித்து பராமரித்து பார்த்துக் கொண்டார்களோ , அதையே வயதான காலத்தில் அவர்களுக்கு நீங்கள் திருப்பி செய்வீர்களாக !”

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹீமாயூன் கபீர் நமக்கெல்லாம் மேடையிலே வேகமாக பேசக்கூடிய ஒரு பேச்சாளராக தெரியும். ஆனால் வீட்டில் அவரைப் போன்ற மகனை பார்க்க முடியாது. அவருடன் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்தாலும் அவருடைய தாய் தந்தையரை அவர் இறுதி வரை வைத்து பராமரித்ததை நானெல்லாம் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். ஆட்களைக்கூட வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார். தனது மகன்களை வைத்தே தன் தாயை அவர் கவனித்துக் கொண்டார். குறிப்பாக அவருடைய மூத்த மகன் இஜா தன்னுடைய பாட்டியை குளிக்க வைத்து அவருக்கு பவுடர் போட்டு உடைகள் அணிவித்து பத்திரமாக பார்த்துக் கொண்டதை நானே சட்ட பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை அண்ணன் ஹீமாயூனிடம் வெளிப்படையாகவே கேட்டேன். உங்கள் தகுதிக்கு ஒரு ஆள் வைத்து அம்மாவை பார்த்துக் கொள்ளலாமே எனக் கேட்டபோது..

அவர் கனிந்தக் குரலில் சொன்னார்.

” யாரோ ஒருவரை பணத்திற்காக வேலைக்கு வைத்து விட்டு… அதெல்லாம் அம்மாவுக்கு சரியா வருமாடா தம்பி..??

நாங்கள் எதற்கு இருக்கிறோம்.?? அதைவிட உலகத்தில் முக்கியமான வேலை என்ன இருக்கிறது..?? என்று கேட்டார்.

நியாயம் தான்.

ஆனால் நான் மருத்துவமனையில் பார்த்த அமெரிக்கா காரன்தானே .. நம் ஊரில் பெரும்பான்மை..??

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு அவரது இறுதிக் காலத்தில் ஆறுதலாக உடனிருந்து, கங்கை அமரன் “சிறு பொன்மணி அசையும் விழி..” என்ற பாடலை ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்திலிருந்து பாடிக் காட்டிய அந்தக் காணொளியை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

அந்தப் பாடலை பாரதிராஜா ஒரு நூலேணி போல பயன்படுத்தி கடந்த காலத்தில் நுழைய முயற்சிக்கிறார்.

எவ்வளவு கவித்துவமான காட்சி அது ??

நோய்களும் முதுமையும் உலகைப் புரிந்து கொள்வதற்கான சாவிகள் என்கிறார் ரூமி.

ஏனெனில் அவைகள் தனிமைகளை அழைத்து வந்துவிடுகின்றன.

தனித்திருக்கும் போது தான் நாம் நம்மையே உணர்கிறோம்.

யாராலும் மீட்க முடியாத, கைவிடப்பட்ட சூழ்நிலைகளும் ஒரு வகையில் தேவையாகத்தான் இருக்கின்றன.

அதிலிருந்து தான் நாம் மீண்டும் பிறக்க வேண்டி இருக்கிறது.