
லிங்கம் – எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் கதிர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ள “லிங்கம்” தமிழ் வலைத்தொடர் வரிசையில் தனித்துவ இடம் பிடித்திருக்கிறது.
“லிங்கம்” என்ற தனிமனிதனின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக விவரித்து இருந்தாலும் எண்பதுகளின் இறுதிக்காலக் கட்டத்தை நுட்பமாக ஆவண படுத்துவதில் லிங்கம் தனித்துவம் கொண்டிருக்கிறது.
“கடந்த காலம் என்பது செத்தப் பிணம் மாதிரி” என்று இந்த தொடரில் ஒரு வசனம் இருக்கிறது. ஆனால் மனித வாழ்க்கையின் விசித்திரம் என்னவெனில்.. அந்த செத்த பிணத்தை உயிருள்ளவர்கள் நாம் அனைவரும் உள்ளுக்குள்ளேயே சுமந்து கொண்டு ஏறக்குறைய வேதாளத்தை சுமக்கும் விக்கிரமாதித்தன் போல அலைந்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் தனிமனித உணர்ச்சிகளின் முரண்கள் வாயிலாக இயக்குனர் லட்சுமி சரவணக்குமாரின் திரை மொழி நம் கண் முன்னால் விவரிக்கிறது.
“இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் தனி மனிதர்கள் ( All are individuals ) . இங்கே முறையான வழி என்று எதுவும் இல்லை. அவரவர் வழி அவரவருக்கு .” என்கிறார் நீட்ஷே. அதுதான் லிங்கம் திரைமொழியின் அடிநாதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. முனைப்பு இருக்கிறது. உணர்ச்சிகள் இருக்கின்றன. அவை இன்னொருவரோடு தொடர்பு படும்போது முரண்கள் உருவாகின்றன. அந்த முரண்கள் ஒரு மனிதனை எதுவரை கொண்டு செல்லும் என்பதை லட்சுமி சரவணக்குமார் ஒரு தேர்ந்த இயக்குனராக மாறி கதை சொல்லி இருக்கிறார்.
உண்மையில் இது அவருடைய முதல் படைப்பு என எங்கும் சொல்லிவிட முடியாத அளவிற்கு முதிர்ச்சியோடு ஒரு கதையை அணுகி இருப்பதில் லட்சுமி சரவணகுமார் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார். கதைக்களன், கதாபாத்திரங்கள், வசனங்கள், உடைகள், கதை நடக்கும் காலகட்டத்தை நுட்பமாக விவரிக்கும் கலை இயக்க தேர்ச்சி, என அனைத்திலும் கைதட்ட வைப்பதில் ஒரு இயக்குனராக கூட்டு உழைப்பின் விளைவை கோருபவராக லட்சுமி சரவணகுமாரின் அசாத்திய கவனம் நமக்கு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
“லிங்கம்” என்ற ஒரு சாதாரண கபடி விளையாடி கொண்டு ஒரு அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற இளைஞனின் வாழ்க்கை , எவ்வாறெல்லாம் திசை மாறி எங்கே சென்று முடிகிறது என்பதை உண்மை கதை மாந்தர்களை வைத்து திரை மொழி வடிவமைத்திருக்கும் இயக்குனர் லட்சுமி சரவணகுமார் அதற்கான கதாபாத்திரங்களை அதற்குரிய நடிகர்களை தேர்வு செய்வதில் ஒரு எழுத்தாளனுக்கே உரிய படைப்பாளுமை மிகப்பெரிய உதவி செய்திருக்கிறது.
எட்டு பகுதிகளாக முதல் சீசன் ரெடியாகி இருந்தாலும், ஒன்றைப் பார்த்தால் இறுதிவரை பார்க்க வைக்கிற சுவாரசிய கதை சொல்லலால் பார்வையாளர்களை வேறு எங்கும் செல்ல விடாமல் தக்க வைக்கின்ற சாமர்த்தியம் முதல் படைப்பிலேயே லட்சுமி சரவணகுமாருக்கு கைவந்தது உண்மையில் ஆச்சரியம்.
80 களின் இறுதிக் காலகட்டத்தில் தென் தமிழகத்தின் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த அசலான மனிதர்களின் வாழ்வியல் பின்புலத்தை விவரிக்கிற மெனக்கிடல் இந்தத் தொடரை மற்ற தமிழ்த் தொடர்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
பதைபதைப்பும் , மனித வாழ்க்கையின் எதிர்பாரான்மையும் , தன்முனைப்பும் வன்மமும் கலந்துக் கட்டிய மனிதர்களும் உலவுகிற இந்தக் கதைக்களத்தில் எல்லோராலும் தொடர்புக் கொள்ள முடிகிற வாழ்வின் அன்றாடப் பாடுகள் ஊடு பாவாய் நிறைந்து இருப்பது லிங்கத்தின் ஆகப்பெரும் பலம்.
வெறும் வன்முறையின் நிலக்களனாக திரைக்கதையை பயன்படுத்தாமல் மனித வாழ்வின் அலைகழிப்பு, காதல், பாசம் நட்பு நன்றி என தனிமனித உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திருப்பது கதையை நெருக்கமாக உணர வைக்கிறது.
உண்மைக் கதையை சொல்வதில் மிகப்பெரிய தடை என்னவெனில், ஒரு படைப்பாளனுக்குரிய கலை அழகும், புனைவும் இடம் பெற முடியாத அளவிற்கு இருக்கும் நெருக்கடிகள். அவற்றை இயக்குனர் லட்சுமி சரவணகுமார் தன்னுடைய முதல் படைப்பிலேயே வென்று முத்திரை பதித்திருக்கிறார்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அனைவரும் அவசியம் பாருங்கள்.
மாபெரும் அனுபவத்தை தருகிறான் லிங்கம்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.
மறுமொழி இடவும்