Category: கட்டுரைகள்.. Page 6 of 11
சமீப நாட்களாக கீற்று இணையத்தளத்தில் நாம் தமிழர் எதிர்ப்பு கட்டுரைகள் மீண்டும் அதிகமாக பிரசுரமாகி வருகின்றன. (நடுவில் ஏனோ..நிறுத்தி இருந்தார்கள்.)
பொய்யும்,புரட்டும்,தேர்தல்
மேற்கண்ட கட்டுரைகள் சில செய்திகளை சமூகத்திற்கு தெளிவாக வெளிக்காட்டுகின்றன..
அவையாவன..
தமிழ்த்தேசிய கருத்தியலின் ஏகமனதான பிரதிநிதியாய் நாம் தமிழர் அமைப்புதான் இருக்கிறது..
திராவிட கருத்தியலின் சிம்ம சொப்பனமாய் நாம் தமிழரே திகழ்கிறது.
தமிழ்த்தேசிய கருத்தியல் எதிர்ப்பு என்றாலே அது சீமான் எதிர்ப்பாகவே பதியப்படுகிறது.
சமீபநாட்களாக அர்த்தமற்று,வலுவற்று, இளைஞர்களை ஈர்ப்பை தொலைத்து…ஏறக்குறைய சமாதி நிலைக்கு சென்று விட்ட திராவிட கருத்தியல் நோக்கி வெளிச்சம் பட தேவை எழுந்திருக்கிறது.
ஆரிய எதிர்ப்பு,இந்துத்துவ எதிர்ப்பு,சாதீய மறுப்பின் பிராண்ட் அம்பாசிட்டர்களாக ஒரு காலத்தில் இருந்த திராவிட கருத்தியல் தற்போது அம்பலப்பட்டு, அப்பதவிகளை தங்களது வலிமையான தொடர் செயல்பாடுகளால் தமிழ்த்தேசிய கருத்தியல் மூலமாக பிரபாகரனின் தம்பிகள் நிறுவி நிற்பதுமான சூழலில் கீற்று போன்ற இணையதளங்கள் மூலமாக வசவொலி பொழிய கட்டாயம் எழுந்திருக்கிறது..
அரங்கங்களில் இருந்த தமிழ்த்தேசிய கருத்தியல் லட்சக்கணக்கான மக்கள் கூடும் வெகுசன ஈர்ப்பு கருத்தியலாக மாறி நிற்பதும், பெரியார் தன் உழைப்பால் வெகுசன கருத்தியலாக கட்டி வைத்திருந்த திராவிட கருத்தியலை ,கருணாநிதி,ஜெ,விசயகாந்த் (அண்ணன் வைகோ பெயர் இத்தருணத்தில் வேண்டாங்க.. அவரே அண்ணா அறிவாலயத்தில் தன் கட்சி கூட்டத்தை தேடும் நிலையில் இருப்பதால்.. நாமும் எதற்கு smile emoticon ) என நீளும் பட்டியலில் இருக்கிற திராவிட அரசியல் வாதிகள் தங்கள் சுயநலபிழைப்பு,பித்தலாட்ட அரசியல் காரணமாக மக்களிடம் அம்பலப்பட்டு நிற்பதும், இவர்களை தத்துவமாக தாங்கிப்பிடிக்க முடியாமல், அடையாளப்படுத்த முடியாமல் தவிக்கிற திராவிட சிறு இயக்கங்கள் தங்களை,தத்துவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் வருகிறது. சீமானின் சொற்கள் மக்கள் மனதில் ஏற்படுத்துகிற மாற்றத்தை.. பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது..அப்போதுதான் தங்களது ”இரத்த” உறவுகளது அரசியல் அங்கீகாரம் பலவீனப்படாமல் காக்கப்படும்..
இது போன்ற தேவைகளுக்காக,கட்டாயங்களுக்
புரிகிறது.
நாம் தமிழரை தனித்த வலுவான சக்தியாக மாற்ற..அடையாளப்படுத்த ஓயாமல், உறங்காமல் உழைக்கிற கீற்றுவின் சேவை (அச்சம்..?? ) கண்டு மனம் மகிழ்கிறது.
கீற்று இணையத்தளத்தில் ஒருகாலத்தில் எனது எழுத்துகள் பல வந்திருக்கின்றன.
அப்போது நான் எவ்வாறு மகிழ்ந்தேனோ..இப்போதும் அதே அளவு மகிழ்கிறேன்.
தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் என்று வசைபாடும் பெரியவர்கள்… முதலமைச்சு திராவிடம், வலது சாரி திராவிடம் போன்றதான விமர்சனங்களை தப்பித்தவறி கூட முன் மொழிவதில்லை என்பது வெளிப்படை.
மக்கள் ஆதரவை திரட்டி, மற்ற திராவிடக் கட்சிகள் போல எங்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, தமிழ்த்தேசிய கருத்தியல் வெகு சன மக்களை கவர்கிற கருத்தியல் என நிருபிக்க போராடும் இளையோர்களை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை நோக்கி தாறுமாறாக விமர்சன அம்புகள் எய்யப்படுவதன் உள்நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.
அப்படி இவர்கள் வெறுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்து விட்டோம்….?
கருத்தரங்குகளில், அரங்கங்களுக்குள் நடக்கும் மாநாடுகளில் (?) ,வயதானவர்களில் ஜிப்பா பைகளில், நரைத்த முடிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கருத்தியலை பல லட்சக்கணக்கான வெகு மக்களுக்கான கருத்தியலாக வெகுசனமயமாக்கியதும், பிழைப்புவாத போலி திராவிட அரசியல் கருத்தியலுக்கு மாற்றாக முன் நிறுத்தியதையும் தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன..?
யாருக்கு ஆதரவாக எங்கள் மீது வசவு அம்புகளை இவர்கள் எய்கிறார்கள்..?
தமிழ்த்தேசியவாதிகள் வெகுசன அரசியல் பாதைக்கோ, அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் பாதைக்கோ வந்து விடக்கூடாது என்பதில் திராவிட அரசியல் வாதிகளை விட கவனமாக இருப்பது ‘ கருத்தரங்க’ தமிழ்த்தேசியர்கள் தான்.
.. அற்பமான (?) இந்த தேர்தல் வெற்றியை கூட பெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ,சொல்லப்போனால் வெகு சன மக்கள் நிராகரிக்கிற தேர்தல் புறக்கணிப்பு தமிழ்த்தேசியம் எப்போதும் திராவிட அரசியலுக்கு ஆதரவாகவே இருப்பது ஏன்…?
இந்திய கட்டமைப்பாகவே இருந்து விட்டு போகட்டும். தமிழர்கள் ஆண்டு விட்டுதான் போகட்டுமே.. தெலுங்கர்,கன்னடர் தமிழ்நாட்டை ஆளலாம்..தமிழன் ஆளக்கூடாதா… இது தமிழனை தவிர்த்த மற்றவர்களுக்கான உரிமையா..? குறைந்த பட்சம் இந்தியக்கட்டமைப்புக்குள்ளாகவே ஆள வக்கற்ற, அதிகாரமற்ற தமிழன்…எப்படி தனக்கென ஒரு நாடு அடைவான்…? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..?
எதற்கெடுத்தாலும் பெரியார் என்கிற பாதுகாப்பு கேடயத்தை முன் நிறுத்தும் இவர்கள் பல முறை தனக்கு முதல்வர் வாய்ப்பு தனக்கு வந்தும் கூட..பெரியார் ”பச்சைத்தமிழன்” காமராசருக்கு தானே வாக்கு கேட்டார்… என்கிற உண்மையை மறைக்க துடிப்பது ஏன்..?
தேர்தலில் நிற்பது தவறென்றால்..வாக்கு கேட்பது சரியா…? ( தங்களுக்கு “வேண்டியவர்களுக்கு” மட்டும் வாக்கு கேட்பது தமிழ்த்தேசிய எல்லைக்கு அப்பால் என்றெல்லாம் மனசாட்சி கேட்டால் நாம் பொறுப்பல்ல..)
சரி.தேர்தலில் நிற்கவேண்டாம்.
கருணாநிதி,ஜெயலலிதாவே ஆண்டு விட்டு போகட்டும், அதற்கு பிற ஆள அவர்களது வாரிசுகள் இருக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்போம். தேர்தல் அரசியலில் நிற்காமல் மக்களை திரட்ட, மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலை நோக்கி ஈர்க்க , தமிழர்களை திரட்டி தமிழ்த்தேசம் சமைக்க… என்ன என்ன முயற்சிகள்.. எத்தனை ஆண்டு காலத்தில்…? விளக்குவார்களா இவர்கள்…???
தமிழர்கள் என்று சொன்னால் பிறப்பு அடிப்படையிலான குருதி தூய்மை..சரி. திராவிடர்களை நீங்கள் எதை கொண்டு வரையறை செய்தீர்கள் – ஏழை பணக்காரன் பார்த்தா..நல்லவன் கெட்டவன் பார்த்தா…? எதை கொண்டு திராவிடர்களை பிரிக்கிறீர்கள்.வரையறை செய்கிறீர்கள்…?
மக்களை வெல்லாமல், வெகு மக்களை திரட்டாமல்..மானுட எல்லைகளுக்கு (?) அப்பால் ஒரு தத்துவத்தை கட்டமைத்து, வாத பிரதிவாதங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தேசம் உருவாகி விட முடியுமா…அதற்கான மானுட உளவியல் விழைவை, தேவையை இம்மண்ணில் இதுவரை யாராவது ஏற்படுத்தி இருக்கிறார்களா…?
எப்போதும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது மக்கள் ஆதரவை சார்ந்தது. மக்களை வெல்லாமல் எதையும் நாம் அடைய முடியாது. எப்போதும் பலவீனப்பட்ட சிறு சிறு குழுக்களின் தத்துவமாக தமிழ்த்தேசிய கருத்தியல் இருந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இன்றைய தமிழின இளையோர் தமிழ்த்தேசிய கருத்தியலை வெகுசன ஆதரவு கருத்தியலாக விதைப்பதில் வென்று காட்டி இருக்கிறார்கள்.
கடந்த 2009 க்கு பிறகான தமிழின வரலாற்றிலும், தமிழின இளையோர் சிந்தனையோட்டத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை புறம் தள்ளி , அவர்களை வலது சாரி, உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், குருதித்தூய்மை பார்ப்பவர்கள் என்றெல்லாம் ஏசி முறியடிக்க விரும்புவது திராவிட பித்தலாட்ட அரசியலுக்கு அப்பட்டமாக துணை செய்யதானே..?
நமது மண்ணில் பிழைக்க வந்திருக்கிற வேற்று இனத்து உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பரசியல் குறித்தெல்லாம் சிந்திக்கிற இவர்கள்…இங்கிருந்து உலகம் முழுக்க பிழைக்கப் போன எம்மின மக்கள் குறித்து கரிசனம் கொண்டிருக்கிறார்களா… ? பெருமுதலாளிகளாக இம்மண்ணை சுரண்டி வாழும் நிறுவனங்களான ஜோஸ் ஆலுக்காஸ். ஜோய் ஆலுக்காஸ், முத்தூட் பைனான்ஸ், பல திரைப்பட நிறுவனங்கள்,குளிர்பான நிறுவனங்கள், உள்ளீட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விமர்சனம் சார்ந்த எங்களது வெறுப்பரசியல் இம்மண்ணில் பிழைக்க வந்துள்ள பிற இனத்து உழைக்கும் மக்கள் மீது என்றாவது பாய்ந்திருக்கிறதா…??
அதற்கான ஆதாரங்களை பெரியவர்கள் வெளியிடுவார்களா..?
தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக விடமாட்டோம் என்கிற இம்மண்ணின் பூர்வீகக்குடிகளின் அடிவயிற்றுக் குரல்… ஏன் உங்களுக்கு சுருதி பேதமாக ஒலிக்கிறது…??
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அலைபோல எழுகின்றன.
ஏனென்றால் காலங்காலமாக காற்றில் கரைந்துப் போன கற்பூரமாய் இருந்த அக்குரல் இப்போது திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு எதிரான இடி முழக்கமாய் முழங்க தொடங்கிவிட்டது.. செத்துக் கொண்டிருக்கிற திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு தத்துவார்த்தமாக வலிமை சேர்க்கவே இப்படிப்பட்ட கூப்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம்.
நாங்கள் உறுதியான குரலில் ,எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற எம்மின விடுதலை மீது பற்றுறுதி கொண்டு அறிவிக்கிறோம் . யாரும் வரலாம். வாழலாம். இம்மண்ணில். வந்தவர்களை வாழ வைப்போம்.. அது எம்மினத்தின் பண்பாட்டுப் பெருமை. ஆனால் எம் சொந்தவர்களை மட்டுமே ஆள வைப்போம். அது தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.
நாங்கள் முன் வைக்கிற முழக்கங்கள் உறுதியாக பிற இனத்தார் மீதான வெறுப்பரசியல் இல்லை. அவை எங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை.
பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களையும், இந்திய பெருநிலத்தில் தோன்றிய மகத்தான பெருமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களையும் நாங்கள் பெருமதிப்புடன் அணுகுவதில் ஒரு போதும் பிழை செய்வதில்லை. இருண்ட உலகிற்கு வெளிச்சம் காட்ட பிறந்த அந்த தீப்பந்தங்களின் ஆதி மூலம் குறித்து நாங்கள் ஆராய்வதில்லை. அவர்கள் மட்டுமல்ல மாமேதை மார்க்ஸ் தொடங்கி தத்துவங்கள் மூலம், நெறிகள் மூலம், வாழ்வியல் மூலம் வழிகாட்டிய மாபெரும் மனிதர்களை நாங்கள் ஒருபோதும் மதிக்காமல் கடந்ததில்லை. மாறாக அவர்கள் உலகம் தழுவிய அடிமைப்பட்டு கிடக்கிற இன மக்களுக்கான வழிகாட்டிகள் என்பதை நாங்கள் நெஞ்சார உணர்ந்துள்ளோம்.
அதே சமயத்தில் எம்மினத்தில் பிறந்த பேரறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களையும், எம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், பேராசான் ஜீவா அவர்களையும், இன்னும் பிற தமிழ்த்தேசிய கருத்தியல் தளம் சார்ந்து இயங்கிய எங்கள் பாட்டன்களையும் நாங்கள் எங்கள் குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவர்களை எங்கள் முன்னோடிகளாக, எங்கள் தலைவர்களாக போற்றுகிறோம்.
தவறான விமர்சனங்களை பரப்புவதன் மூலம் தமிழின இளைஞர்களின் அரசியல் பாதையை அழித்து..திராவிட பிழைப்பு வாத அரசியலுக்கு மறு உயிர் கொடுக்கிற முயற்சிகளை எங்களால் உணர முடிகிறது.
.இலட்சக்கணக்கான எம் உறவுகளும், எம்மினத்தின் மாவீரர்களும் பற்ற வைத்த பெருநெருப்பு பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த நெருப்பை உள்ளத்தில் சுமந்து…தங்களை வீழ்த்திய அனைத்தையும் எதிர்க்கிற, வெல்கிற வலிமையை தமிழின இளைஞர்கள் இன்று பெற்றுள்ளனர்.
அவ்வலிமையை கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தமிழர்களே தீர்மானிப்பார்கள்.
எங்களுக்கு முன்னதாக இக்களத்தில் பணி செய்தோர்,பயணம் செய்தோர்,பங்களிப்பு செய்தோர்களின் தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எம்மீது கல்லெறிந்து போகிற பெரியவர்களின் பெயர் கூட சொல்லாமல் கண்ணியமாக நகர்ந்து போகிறோம். ஆனால் உங்களது தியாகமும், அறிவும் தமிழ்த்தேசிய இனத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய , கருணாநிதி,ஜெயலலிதா, போன்ற திராவிட அரசியல் பிழைப்புவாதிகளின் அரசியல் எதிர்காலத்தை சவால்களுக்கு உள்ளாக்கி இருக்கிற இந்த இளைய பிள்ளைகளின் மீதான வன்மமாக,எதிர்ப்பாக மாறி விடக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இக்கணத்தில் விடுக்கிறோம்.
எப்போதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வலிமையாக தமிழின இளையோர் கம்பீரமாக நிற்கிறோம். ஆதரவாய் இருக்க விரும்புவோர் அருகில் வாருங்கள். நன்மொழி கூறுங்கள்.
அவதூற்றி எதிரிகளை பலப்படுத்த விரும்புவோர் தாராளமாக எதிரிகளுடனேயே நில்லுங்கள்.
கருணாநிதி,ஜெயலலிதாவை ஆதரிப்பதும், அவர்களையே ஆள வைப்பதுதான் இடது சாரி தமிழ்த்தேசியம் என்றால்…(நன்றி:சுப.வீ) அக்கனவை அழித்து, எம்மண்ணை இம்மண்ணின் பூர்வக்குடிகளே ஆளட்டும் என முழங்கிற நாங்கள் வலதுசாரி தமிழ்த்தேசியர்களே..
சில வருடங்களுக்கு முன் ஈழ அரசியலில் கலையரசன், சோபா சக்தி போன்றோர் எம்மினத்தின் விடுதலைக்காக தன்னுயிர் தந்த மாவீரர்களான, எம்மின தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை வலது சாரிகள் என வசை மொழிகள் பொழிந்தது நினைவுக்கு வருகிறது…
அந்த வலதுசாரிகள் தான் இறுதிவரை மண்ணை காக்க போராடி உயிர் ஈந்தார்கள்.
இந்த வலதுசாரிகள் தான் இம்மண்ணை காக்க போராட மக்களுடன் களத்தில் நிற்கிறார்கள்..
காலம் உணர்த்தும். தவறான கணக்கு திருத்தும்.
.யார் வலது சாரி, இடது சாரி என…
..மணி செந்தில்
எம் முகத்தில்
நீ காறி உமிழ்ந்த
அந்த
மஞ்சள்
எச்சிலுக்கு
மற்றொரு பெயர்
உண்டென்றாய்…
எம் செவியில்
நீ உரக்கச்
சொல்லிப்போன
அவமானச் சொற்களின்
பின்னால்
மகத்தான
உரிமை ஒன்று
மறைந்து கிடக்குதென்றாய்..
எம் கண்களை நோண்டியெடுத்து
உன் கால்களுக்கு கீழே போட்டு
நசுக்கி…
அதில் கசிந்த
உதிரத்தில் தான்
உன் மஞ்சள்
எழுத்திற்கான
மை தயாரித்தாய்..
உதிர சிவப்பேறிய
எம் விடுதலைக்கான பக்கங்களில்
உன் மஞ்சள் புத்தியை
பூசி விட்டு போனதைதான்
உன் ஆக்கத்திற்கான
ஊக்கமென்றாய்..
கல்குதிரையேறி
நீ கடக்க முயன்ற
குருதிப் புனலில்
அகப்பட்ட சடலங்களில்
நெளியும் புழுக்களை
தின்பதை தான்
உன் பசியாறல்
என பகிரங்கப்படுத்தினாய்..
……………….
இருண்டுக் கிடந்த
பேரிருள் நிலத்தில்
மின்னிட்ட
ஒரு சுடரின்
திசைவழி கண்டு
விழித்தெழ கூட
எமக்கு அனுமதி இல்லை.
ஆனால்
விடுதலை தாகத்தில்
உலர்ந்த எம் உதடுகளை
நனைக்க வந்த
பெருமழையினை
அது வானின் மூத்திரம்
என வசைபாட
உனக்கு வாய்ப்பு உண்டு..
………………
திறந்த எம் விழிகளை
நோண்டிப் போடும்..
எழுந்த எம் கரத்தினை
முறித்துப் போடும்…
உன் சொல் விளையாட்டிற்கு
இறுதியாய்
கருத்துரிமை என பெயர் சூட்டினாய்.
கல்குதிரையேறி வந்த
சதிகார சம்ராட்டிற்கு
எம் மண்டையோடுகளை
கொண்டு
இராஜப்பாட்டை அமைக்க
உரிமை உண்டெனில்…
எம் துயர் இருட்டை
நக்கி பிழைக்கும்
அந்த எழுத்தை
எரித்துப் போடுதலும்..
எம்மை உருக்குலைத்துப்
போட வந்த அந்த விரல்களை
உடைத்துப் போடுதலும்
எமக்கான கருத்துரிமைதான்..
– மணி செந்தில்
மிருகம்,உயிர்,சிந்து சமவெளி போன்ற சர்ச்சை திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு வேறு தளத்தில் பயணிக்கிறது. எப்போதும் உணர்வு சார்ந்த திரைக்கருவில் மிகை நடிப்பிற்கான சாத்தியங்கள் அதிகம். அதே போன்ற அண்ணன் -தங்கை அன்புணர்வினை தீவிரமாக பேசுகிறது கங்காரு..
எப்போதும் வாழ்க்கை நினைத்தது போல அமைந்துவிடுவதில்லை.நினைப்பது போல நடக்காததன் அவஸ்தைகளை,வலிகளை,வேதனைகளை, ஏமாற்றங்களை,சவால்களை பேசுவதுதான் திரைப்படங்களும், இலக்கியங்களும்… மனித மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களின் தொகுப்பில் மகத்தானது அன்பு என்கிற மகத்தான உணர்வு.ஒரு வகை பதிலீட்டை,எதிர்பார்ப்பை,கைமாற்றை கோரி நிற்கிற மாபெரும் துயராக அன்புணர்வு பேருருவம் அடையும் போது மனித மனம் பிறழ்வு அடைகிறது. அப்படிப்பட்ட அன்பினை யாசகமாக கோரி நின்ற சகோதர உணர்ச்ச்சியின் பிறழ்வு அவஸ்தைகளை தான் கங்காரு பேசுகிறது.
எங்கிருந்தோ வந்த ஒரு சிறுவனின் கரங்களில் ஒரு கைக்குழந்தை. டீக்கடை வைத்திருக்கும் தம்பி இராமைய்யா அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை வளர்க்கிறார். தனது தங்கையே உலகமென வாழும் அந்த சிறுவனும்,கைக்குழந்தையும் வளர்கிறார்கள். உரிய வயது வந்தவுடன் தங்கைக்கு காதல் பிறக்கிறது. அது கனிந்து அண்ணனின் ஆசியோடு திருமணமாக மலர இருக்கையில் காதலன் கொல்லப்படுகிறான். அதன்பின் பார்த்த மாப்பிள்ளையும் கொல்லப்படுகிறார். பின் திருமணம் செய்து கொள்கிற இளைஞன் நோக்கியும் கொலை முயற்சி. இதற்கு பின்னால் இருப்பது யார் என்ற மர்ம முடிச்சுகளுடன் திரை மொழி அமைத்திருக்கிறார் இயக்குனர் சாமி.
தன் முந்தையப்படங்களின் பாலியல் உறவுகள் சார்ந்த சாயல் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருக்கிறார் இயக்குனர். மின்னும் உயர் நட்சத்திரங்கள், மாபெரும் அரங்கங்கள், பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் ஆகிய எதுவுமின்றி,புதிய நட்சத்திரங்களைக் கொண்டு தான் கொண்டிருக்கிற கதைக்கருவினை மிகச்சரியாக திரைமொழிக்கு நகர்த்தி விட வேண்டும் என்கிற இயக்குனரின் உழைப்பு திரைப்படத்தில் தெரிகிறது.
தனது குட்டியை தானே சுமந்து திரியும் விலங்கினங்களில் சற்றே வித்தியாசமானது கங்காரு . தனது வயிற்றோடு இருக்கிற பையில் தனது குட்டியினை வைத்துக் கொண்டு திரிகிற கங்காருவினை முன் மாதிரியாக வைத்து கதையினை அமைத்திருக்கிறார்கள். மனித மனதிற்குள் பூட்டி கிடக்கிற விலங்கு விழித்தால் அடைகிற அவலங்களும், அன்பின் மிகுதியில் மனிதமனம் அடைகிற பிறழ்வுகளுமாக உளவியல் சார்ந்த திரைக்கதையாக கங்காரு உருவாகியுள்ளது.
மனப்பிறழ்வு கொண்ட கதாநாயகனாக நடித்திருப்பவர் இன்னும் உடல் மொழியில் மெனக்கிட்டு இருக்கலாம். கதாநாயகியாக பிரியங்கா. அமைதிப்படை 2 –ல் நடித்தவர். தன்னை தவறாக வழிநடத்த முயல்கிற தனது அக்காவினையும், அவரது ஆட்களையும் செருப்பால் அடித்து வெளுக்கிற காட்சியில் மின்னுகிறார். தங்கையாக நடித்திருக்கும் புது முகம் தனது அண்ணனுக்காக அவசர அவசரமாக கஞ்சியினை விழுங்கும் காட்சியில் நன்கு நடித்திருக்கிறார். தம்பி இராமையா, கலாபவன் மணி,சுந்தர்ராஜன் போன்றவர்கள் எப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் சுடர் விடுபவர்களே.இப்படமும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல.
மருத்துவராக நடித்திருக்கிற வெற்றிக்குமரன், தயாரிப்பாளராகவும் இருந்து, தங்கையின் கணவனாகவும் நடித்து இருக்கிற சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தங்களால் முடிந்த நேர்மையை செய்திருக்கிறார்கள்.
படத்தில் குறைகளே இல்லையா.. என்ற கேள்வி எழுப்பிகிறவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது தெலுங்கன் கரங்களிலும், மார்வாடி கரங்களிலும்,கன்னடத்தான் கரங்களிலும் சிக்கி வதைபடுகிற திரை உலகினை மீட்க எம் நண்பர் சுரேஷ் காமாட்சி போன்றோர் போராடத் தொடங்கியுள்ளார்கள். அப்போராட்டத்தின் முதற்படி தான் கங்காரு போன்ற திரைப்படங்கள். அடுத்தடுத்து வரும் திரைப்படங்களில் இப்படத்திற்கான தவறுகளை திருத்திக்கொள்வார்கள என்கிற எனது நம்பிக்கைதான் இப்படத்தினை தவறுகள் கடந்து நேசிக்கச்சொல்கிறது. எளிய பொருட்செலவில் உண்மையான பாச உணர்வின் தீவிரத்தை பேசுகிற கங்காரு..நான்கு பாட்டு,இரண்டு குத்து, நான்கு காமெடி என்கிற பெயரில் கடிகள் என்கிற வகையில் வெளிவருகிற எத்தனையோ திரைப்பட குப்பைகளுக்கு மத்தியில் மதிப்புறு படமே..
கங்காரு – தமிழன் தயாரித்த தமிழர்களுக்கான திரைப்படம்.
அவசியம் அனைவரும் காண்போம்.
சமீப காலமாக தமிழ்த்திரை வித்தியாசமான முயற்சிகளை தரிசித்து வருகிறது. கோடிக்கணக்கான பண முதலீட்டில் மாபெரும் கதாநாயகர்கள் –கதாநாயகிகள் நடிக்க, மிகப்பெரிய தொழிற்நுட்ப மேதைகள் பணியாற்றி, அட்டகாசமான விளம்பரங்களுடன் மின்னிக் கொண்டிருந்த தமிழ்த்திரையின் இலக்கணத்தை சமீப கால இயக்குனர்கள் மாற்றி எழுத தொடங்கி இருக்கிறார்கள். சராசரிக்கும் சற்று கீழேயே இரட்டை அர்த்தம்,பொறுக்கி கதாநாயகன் என அரைத்துக் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூட கதை திரைக்கதை வசனம் இயக்கம் என புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு மூலம் ’அட’ போட வைக்கிறார். ஜிகர்தண்டா என்கிற படத்தின் திரைக்கதை உத்தியை குறித்து பார்வையாளர்கள் பரவசம் கொள்கிறார்கள். சூது கவ்வும் மாபெரும் வெற்றியடைகிறது. அறிமுகமற்ற நட்சத்திரங்கள் நடித்த யாமிருக்க பயமேன் திரையரங்குகளை நிறைக்கிறது. இப்படிப்பட்ட பல நம்பிக்கைத் தரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக வெளிவந்து நம்மை அசத்திப் போடுகிறது அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்.
ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் அவ்வளவாக என்னை கவரவில்லை. அப்படத்தில் நான் பார்த்த வியந்த விஷயம் அப்படத்தின் எளிமை. அதுவே அப்படத்தின் வலிமையாக மாறி ஒரு வெகுசன திரைப்பட காட்சியாளனை திருப்திப் படுத்த மின்னுகிற அரங்கங்களும், ஆடுகின்ற ஸ்டார்களும் தேவை இல்லை என அப்படம் நிருபித்தது. முதல் படத்தில் வெற்றியடைந்த இயக்குனர் எதிர்கொள்கிற ஆகப்பெரும் சவால் தனது 2 ஆம் படத்திலும் சற்று குறையாத மரியாதைக்குரிய ஒரு வெற்றியை சம்பாதிப்பதே.. ஆனால் பல இயக்குனர்கள் இந்த சவாலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தவர்களே.. ஆனால் ரஞ்சித் இந்த சவாலில் மகத்தான வெற்றி அடைந்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்த்திரையின் வழக்கமான பண்பாட்டு அம்சங்களை கலைத்துப் போட்டு நிகழ்கால அரசியலின் அசல் முகத்தினை அப்படியே ரா வாக காட்டியிருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகன் கார்த்தி என்பது மிகை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரும் நடித்திருக்கிறார். இதுதான் இப்படத்தின் முக்கிய அம்சம். வழக்கமான கதாநாயக பிம்பத்தையே.. நண்பனாக வரும் அன்புவின் கதாபாத்திரம் மூலம் சிதைத்திருக்கிற இயக்குனர் ரஞ்சித் பாராட்டத்தக்கவர். வட சென்னையின் ஒரு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிதான் கதைக்களமாக விரிகிறது. சென்னையின் பூர்வீகக் குடிமக்களான ஆதித்தமிழர்களை கூவம் கரையோர வாசிகளாக்கி, வந்தவன்,போனவன் எல்லாம் மாட மாளிகை கூட கோபுரங்களில் வசித்து வாழ்வாங்கு வாழ்கிற வரலாற்றினை நாம் அறிவோம். அப்படி கூவம் கரையோரமும் அவர்களுக்கு சொந்தமானதில்லை எனவும், அவர்கள் பெரு முதலாளித்துவ-உலகமயமாக்கல் வாழ்வில் கறைகளாக –உறுத்தல்களாக விளங்குகிறார்கள் என்பதனால் சொந்த மண்ணை விட்டு வெளியேற்றி அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைத்துப்போட்ட அவலம் தான் சென்னைக்கு வெளியே,நகர்புறத்திற்கு அப்பால் நாம் காணுகிற குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகள். தமிழில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு..தாழ்த்தப்பட்ட ஆதித்தமிழர்களின் வரலாற்றினை, பண்பாட்டினை இப்படி ரத்தமும் சதையுமாக விவரித்த படைப்புகள் மிகக்குறைவு . தமிழ்த்திரை வெகுகாலமாக தனது மேல் பூசியிருக்கிற ஆதிக்கச்சாதிகளின் பெருமித வண்ணத்தை ஆதித்தமிழனின் வாழ்வியலை கொண்டு கலைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அவ்வகையில் இது மிக முக்கியமான திரைப்படம். ஏற்கனவே பாரதிராஜாவின் என்னுயிர்த்தோழன், துரையின் சோறு,வாட்டாக்குடி இரணியன்,கண் சிவந்தால் மண் சிவக்கும் போன்ற படங்கள் ஆதித்தமிழர்களின் அரசியல் தன்னெழுச்சியை குறிப்பிட்டு திரைமொழி படைத்திருந்தாலும் ..மெட்ராஸ் இத்தகைய முயற்சிகளில் மிகப்பெரிய கவனத்தை பெறுகிறது.
குறியீட்டு தளத்திலும் இத்திரைப்படம் மிகுந்த கவனத்தை பெறுகிறது. கார்த்தி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரிய புத்தகங்கள், வாசிக்கிற தீண்டப்படாத வசந்தம், கலையரசியின் அப்பாவின் உடை,உருவ தோற்றம், படத்தின் இறுதியில் கார்த்தி வகுப்பெடும் காட்சியில் தென்படும் அம்பேத்கார்,அயோத்தி தாசர் படங்கள்,பூர்வீக குடிமக்களின் கால்பந்து மீதான ஆர்வம், திருமண வீட்டில் வெகு சாதாரண சண்டையும்,சமாதானமும், ஆயா உச்சரிக்கும் கீரிப்பிள்ளை பரம்பரை என்கிற வர்ணனையும் ஆதித்தமிழர்களின் அசல் வாழ்க்கையை குறீயிடுகளாக காட்டுவதில் வெற்றியடைகின்றன.
வடசென்னை அடுக்கக்குடியிருப்பில் இருக்கிற ஒரு சுவற்றில் வரையப்பட்ட ஒவியம் –அதனை ஒட்டிய அரசியல், போட்டி,சூழ்ச்சி,துரோகம், காதல் என பல்வேறு அலைவரிசைகளில் பயணம் செய்து இறுதியாக அரசியல் கல்வியை ஆகப் பெரும் தீர்வாக முன்வைக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அண்ணல் அம்பேத்கர் படம் பின்னால் இருக்க ஒரு கதாநாயகன் சிறு பிள்ளைகளுக்கு அரசியல் கல்வி போதிப்பது போன்ற உச்சக்காட்சி வேறு ஏதாவது தமிழ்த்திரைப்படத்தில் இருக்கிறதா என்று சிந்திக்க வைப்பதில் இருந்தே ரஞ்சித் வெற்றி பெறுவது உறுதியாகிறது. சிலிர்க்க வைக்கும் அந்த உச்சக்காட்சிக்கான நியாயத்தை தனது திரைக்கதையில் திரட்டி இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தின் திறமை பாராட்டத்தக்கது. மனித வரலாற்றில் மாபெரும் தீங்காக, அழுக்காக விளைந்திருக்கும் தீண்டாமையை எதிர்த்து போராடிய.., கற்பி, ஒன்று சேர், போராடு என போதித்த புரட்சியாளரின் வாழ்க்கை வரலாற்றினை பேசுகிற திரைப்படம் கூட இன்னும் திரை தீண்டப்படாமல் இருட்டு அறைகளில் முடங்கி கிடப்பது நாமெல்லாம் நாகரீகச் சமூகத்தில் தான் வாழ்கிறோமா என்று நமது மனசாட்சியை உலுக்கிக் கொள்கிறோம். இச்சூழலில் தான் மெட்ராஸ் பேசுகிற ஆதித்தமிழர்களின் அரசியல் மிக முக்கியமானதாக நாம் கருத வேண்டியுள்ளது.
தமிழ் தமிழ் என பேசுறான் ஆனா கிட்டப் போனா சாதி,மதம் பாத்து அரிவாள தூக்கிடுறானுக என போற போக்கில் தமிழ்த்தேசியத்தின் மீதான தனது விமர்சனத்தை முன் வைக்கிறார் இயக்குனர். ஒரு தமிழ்த்தேசியனாக … தர்மபுரியில் எரிந்த குடிசைகளின் ஒளியில்..பரமக்குடியில் வெடித்த தோட்டாக்களின் ஒலியில்.. இந்த விமர்சனத்தை நேர்மையாக எதிர்க் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.. ஆனால் இதற்கான..இந்த சாதி ஏற்றத்தாழ்விற்கான வேறுபாட்டினை களையும் அரசியலைப் பற்றி பேசத்தான் உதடுகள் இல்லை. தமிழ்ச் சமூகத்தின் உட்சாதி பகை முரண்களை களைவதற்கான ஓர்மைப் புள்ளிகளை தேடிச் செல்லும் பயணம் தான் தமிழ்த்தேசியமாக அமைய வேண்டும் என்கிற நம்பிக்கை என் போன்ற தமிழ்த்தேசியர்களுக்கு உண்டு.
உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ வாழ்வியல் சூழலில் சென்னை மண்ணின் பூர்வீகக் குடிமக்களின் பாடுகளை,காதலை,அரசியலைப் பற்றி பேசுகிற மெட்ராஸ் திரைப்படம் தமிழ்த் திரையின் ஆதித்தமிழர்களின் தன்னெழுச்சி முயற்சியாக நாம் பார்க்கலாம். அதனாலேயே அப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னைத்தமிழ் பேசும் கதாநாயகி,மனநிலை குன்றிய நேர்மை மனிதன் ஜானி, உணர்வும்,அன்பும்,நட்பும் கொப்புளிக்கிற அன்பு, சாலையில் நாம் கடக்கிற போது மிக சாதாரணமாக சந்திக்க முடிகிற காளி ,அரசியல் சூதாட்டங்களில் பகடை காய்களாக மாற்றி ஆடப் படும் விளிம்பு நிலை மக்கள்..என ஒவ்வொரு காட்சியும் இயல்பின் அழகில் மனதை அள்ளுகிறது. எத்தனையோ பிம்பங்களை, ஆளுமைகளை,அடையாளங்களை கட்டியெழுப்பி இருக்கிற, நிறுவி இருக்கிற வலிமையான கருவியான தமிழ் சினிமாவின் வரலாற்றில் விளிம்பு நிலை மக்களுக்கான..வாழ்வியலை,அழகியலை பதிவு செய்திருக்கும் இயக்குனர் ரஞ்சித்தின் முயற்சியும் ஆதிக்கங்களுக்கு எதிரான ஒரு குரலே.. அந்த வகையில் இது வரலாற்று,பண்பாட்டு பெருமிதங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிற தமிழ்ச் சமூகத்தை மீள் பரிசீலனை செய்கிற பண்பாட்டு கலகமாக இத்திரைப்படத்தை நாம் கொள்ளலாம்.
இதுவரை தமிழ்த்திரை கட்டி வைத்திருந்த அத்தனை பெருமிதங்களின் மீதும் தனது திரைமொழி மூலம் தாக்குதல் நடத்தி நம்மை கவனிக்கச்செய்கிறார் இயக்குனர் ரஞ்சித் . தமிழ்நிலத்தில் வெகுகாலமாக ஆட்சி செய்து செய்துவரும் ..வர்ணாசிரமம் கட்டமைத்த ஆதிக்க இடைநிலை சாதிக்குழுக்களின் ஊதுகுழலாய் ..அவற்றின் பெருமிதங்களை போற்றிப் பாடும் பனுவலாய் மின்னிய தமிழ்த்திரை அழுக்கடைந்த அடுக்கங்களிலும், மழைச் சேற்றிலும், எம் மக்களின் பாமர மொழியிலும் புரளத் தொடங்கியிருப்பதே புரட்சிக்கர நடவடிக்கைத்தான்.
எது எப்படியோ இந்தியப் பெருநிலத்தில் தோன்றிய மாபெரும் புரட்சியாளனின் சிந்தனையை படத்தின் முடிவாக கொள்கிற..அடைகிற.. மெட்ராஸ் திரைப்படத்தின் பார்வையாளன் பெருமிதம் கொள்ளத்தக்கவனே…
-மணி செந்தில்