பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 6 of 11

பொழுதுகள் கடந்த வெளி..

87244191_1280x720
கூந்தலை அள்ளி
அப்படியே என் முகத்தில்
படர்த்தினாய் …
 
இது நீள் இரவு என்றேன்..
 
இல்லை..இல்லை..
சூரியன் இருக்கிறதே
இது பகல்..
என்றாய் நீ..
.
அது உன் விழிகள்..
இது அதிகாலை
என்றேன்.
 
போடா
என்று புன்னகைத்தவாறே
இறுக அணைத்தாய்..
 
மீண்டும் சிரித்தவாறே
சொன்னேன்..
 
இது ஒரு பொன்மாலைப்
பொழுதென..

இளையராஜா – எம் தலைமுறை வாழ்க்கை.

3513-ilaiyaraja-issue317421980
தேவ தீண்டல்களால் உயிர் வாழ்பவனின்நன்றிக் குறிப்பு இது.
 
…..
 
புகழ்ப் பெற்ற டைட்டானிக் படத்தில் வரும் அந்த சில நிமிடக் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. கப்பல் முழ்கி கொண்டிருக்கும் அந்த துயர வேளையில்..அந்த வயலின் இசை கலைஞர்கள் தங்கள் இசையை நிறுத்தாமல் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காட்சி உலகத்தையே உலுக்கிப் போட்டது. ஆனால் தமிழர்களோ ஒரு சிறிய புன்னகையோடு அந்த காட்சியை எளிதில் கடந்தார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு இசைக்கலைஞனை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள்.
 
சகல விதமான மனித பாடுகளில் சிக்கித்தவிக்கும் அவர்களை ஏதோ ஒரு தேனீர் கடையில் உதிரும் இசையால், சட்டென கடக்கும் வீட்டின் சன்னல் ஒன்றில் இருந்து கேட்கும் இசையால்.. மனமும், குணமும் புத்தாடை அணிந்துக் கொள்ளும் திருவிழா பொழுதொன்றில்.. கண்கள் கலக்க ஏதுவாக கசியும் இசையால், பரபர என ஓடிக்கொண்டிருக்கும் புன்னகை தேக்கும் முகங்கள் திரியும் கல்யாண வீடுகளில் இருந்து ஒலிக்கும் இசையால் .. இன்னும் பல இடங்களில்..பல பொழுதுகளில்
 
24 மணி நேரமும்.. தன் இசை நுணுக்கங்களால் மீட்கும் மீட்பரை அவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆக்கி வைத்திருந்தார்கள்…
 
தனது இசை வடிவ தீண்டல்களால்.. உள்ளுக்குள் உயிரை சுரக்க வைத்திருப்பவரை தம் சம காலத்து இசையாளனாய் அவர்கள் பெற்றிருந்தார்கள்..
………………………………….
 
அவமானங்களை சகித்துக் கொள்ளல் என்பது வாழ்வின் ஆக மகத்தான கலை. நம் முன்னால் வைக்கப்படும் எளிய சாப்பாட்டு தட்டின் ஒலி கூட இதயத்தை கீறி இருக்கிற அனுபவங்களை நாம் அனைவருமே பெற்றிருக்கிறோம். அனைத்தையும் இழந்து கையறு நிலையில் கழுத்தினை அறுத்துக் கொள்ள தூண்டும் மோசமான அனுபவங்களை நம் விழிகளில் இன்னமும் கண்ணீராய் தேக்கி இருக்கிறோம். போதும்டா எல்லாம் .. இது வாழ்க்கையடா மயிறு… என தோணும் தருணமொன்றில் நம் முன்னால் தோன்றும் குழந்தையின் புன்னகைப் போல
ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கிறது..
 
அவரது இசை .. துளித் துளியாய்… அமிர்தமாய்..
——————————————-
 
எளிய எம் பெண்களை தேவதைகளாக.. துருத்திய பல்லோடும், கருத்த மேனியோடும், தடுமாறிய வார்த்தைகளோடும், வரலாற்றின் வீதியில் தடம் மாறிய வாழ்க்கையோடும் தலைமுறை தலைமுறையாக பிறந்த எம் இனத்தின் ஆண்களை கதாநாயகர்களாக…
உளவியலாய் தனது இசைத் தீண்டல்களால் உருவாக்கி..
எம் மனதில் ஆழ்ந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையை தனது தேவ கரங்களால் நீக்கி…
 
இசை இசையாய் வழியும் தன் வண்ணத்தூரிகையின் மூலம் மானுட வாழ்வின் சகல விதமான அர்த்தங்களையும் வரைந்துக் கொண்டே செல்கிறார் அவர்.
 
————————————————–
புன்னகைக்கும், சிரிப்பிற்கும் உள்ள மெல்லிய வேறுபாட்டினை.. நாணம் மலரும் ஆண்களின் விழிகளை… தனிமையின் அர்த்தத்தை, மாலைப் பொழுதின் அழுத்தத்தை ..கண்ணீரின் கனத்தை என அனைத்தையும் புத்தியில் சிந்தித்து..கைகளால் எழுதிய இசைக்குறிப்புகளால் உணர வைத்தது மட்டுமா.. அவரது சாதனை..?
 
இல்லை..இல்லை..
 
இன்னமும் என்னைப் போன்றோர் துயர வாழ்வின் அழுத்தம் தாங்காமல் கழுத்தினை இறுக்கிக் கொள்ளாமலும்.. மனநிலை தடுமாறாமலும்.. பாதுகாத்து. இயல்பில் வாழ வைக்கிற அதிசயங்களை வெறும் இசைத் துணுக்குகள் என்று யாரும் அர்த்தப்படுத்த முடியாமல் பிரமித்து இருக்க வைத்திருப்பதே அவரது சாதனை..
——————————————–
 
வாழ்வென்ற கண்ணாடி மீது படரும் கசப்பு பனித்திரையை தனது நுட்ப இசை வருடல்களால் நீக்கும்
 
இசைஞானி இளையராஜா…
 
என்பது வெறும் பெயரல்ல..
 
எங்கள் தலைமுறை வாழ்க்கை.
 
அவர் பிறந்ததால் ..நாங்கள் உயிர் வாழ்கிறோம்.
 
இனிய வாழ்த்துக்கள்.. ஆழ்மன நன்றியோடும். காரணமேயன்றி கலங்கும் விழிகளோடும்..
 
-மணி செந்தில்

திராவிட நச்சுப்பாம்புகளின் விச பெருமூச்சுகளும்.. துரோக கதையாடல்களும்..

ithu_eppadi_irukku
சமீப காலமாக இணைய வெளிகளில் தி(ருக்குவளை குடும்ப) முன்னேற்றக்கழகத்தின் இணைய எழுத்தர்கள் செத்துப் போன பிணமாய் தங்கள் ஆட்சி அதிகார கனவு ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையில்.. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து தரம் குறைந்த வசவுகளை.. முக்கிக் கொண்டும், முனகிக் கொண்டும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் இருமுறைமைகளாக மட்டுமே பேச உரிமையிருக்கிறது என கருதுகிறவன் நான். ஒன்று அவரின் வீரம், ஈகை , அளப்பரிய உழைப்பு, அதன் வாயிலாக ஏற்பட்டிருக்கிற கம்பீரம் ஆகியவை குறித்தான பெருமித கதையாடல்கள். மற்றொன்று புலிகளின் ஆயுத மெளனித்தலுக்கு பிறகான தமிழீழ விடுதலையில் தமிழ் நாட்டின் பங்கு.
இந்த இரண்டு வகையான முறைமைகளை தாண்டி புலிகளை விமர்சிக்க, ஏச, தூற்ற , ஈழப் பெருநிலத்தின் இறையாண்மையை சீண்ட இங்கிருக்கும் எவருக்கும் எந்த வித உரிமையுமில்லை. அவர்களது தியாகவெளியில் பங்கேற்று தன்னுயிர் தந்த முத்துக்குமார் போன்ற தமிழ்நாட்டு சீலர்களைத் தவிர வேறு எந்த சில்லரைகளுக்கும் ஈழ விடுதலைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் வில்லங்கம் பேச, எழுத எவ்வித யோக்கியதையும் இல்லை.
 
இராசீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக சிறைக் கொட்டடியில் சிக்குண்டு கிடக்கும் ஏழு தமிழர் விடுதலைப் பற்றி நமக்குத் தெரிந்த திமுக இணைய எழுத்தர் ஒருவர் தன்னாலான பதிவொன்றை உருக்கமாக எழுதி இருந்தார். என்னடா சாத்தான் வேதம் (?) தானே ஓதும்..இம்முறை சங்கீதம் இசைக்கிறதே என்று பார்த்தால் அதில் தலைவர் பிரபாகரனைப் பற்றி கீழ்த்தர வசவுகள்.
 
தலைவர் பிரபாகரன் துரோகியாம்..அவர்தான் ராசீவ் காந்தியை கொன்றாராம்.. சிறையில் இருக்கிற எழுவர் பற்றி எதுவும் பேசாமல் அது ஒரு துன்பியல் சம்பவம் என ஏசி அறையில் பேசி விட்டு போய் விட்டாராம்.
பாவம். திமுக தம்பிக்கு கோபாலபுரத்து கோயபல்ஸ்களின் கோல்மால் வரலாறு தெரிந்திருக்கும். தலைவரைப் பற்றி, அங்கு நடந்த தியாக வரலாறைப் பற்றி கோபாலபுரத்தின் முட்டுச்சந்திலும், சிஐடி காலனியின் சிக்னலிலும் முற்போக்கினை தேடும்
தம்பிக்கு எங்கே தெரியும்…?
 
தமிழின அகராதியில் துரோகம் என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் இல்லை. ஈழம், தமிழ்நாடு என்கிற இரு பெரு நிலங்களிலும் துரோகத்திற்கு பொதுவான ஒரே பெயர்தான். அது கருணா.
 
தியாகத்திற்கும், துரோகத்திற்கும் தொடர்பே இல்லாத வித்தியாசங்கள் உண்டு.
 
இராமச்சந்திரா மருத்துவமனையில்.. மல்லாக்கப் படுத்துக்கொண்டு முதுகுக்கு அறுவை சிகிச்சை செய்தது துரோகம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே சாப்பிடாமல் இருந்ததை சாகும் வரை உண்ணாவிரதம் என்று கதை கட்டியது துரோகம். காயம் பட்ட போராளிகளுக்காக சொட்டு சொட்டாய் சேர்த்த உதிரப் பொட்டலங்களை ஜாபர் சேட் ஷீ காலில் போட்டு மிதித்து அழித்தது துரோகம். இனத்தை அழித்த காங்கிரசின் காலை பதவிக்காக,பணத்திற்காக தழுவி கிடத்து சோனியா ..சோனியா சொக்கத் தங்கம் சோனியா என்று பாட்டு பாடியது துரோகம்.. 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை வாங்கி தன் புட்டத்தின் பின் போட்டு விட்டு குடும்ப திட்டங்களுக்காக பேரம் பேசியது துரோகம். அய்யகோ…கொய்யகோ என்றெல்லாம் அழுகாச்சி தீர்மானங்களை பேருக்கு போட்டு விட்டு நேரு குடும்பத்திற்கு காவடி தூக்கியது துரோகம்.
நானே அடிமை ..இன்னொரு அடிமைக்கு எப்படி உதவுவது என்று உதவாக்கரை பேச்சு பேசி விட்டு ..அந்த அடிமைப்பதவிக்காக இந்த இறுதி மூச்சுவரை நாயாய்..பேயாய்..நரியாய் அலைவது துரோகம். இனத்தை அழித்த காங்கிரசோடு இனி ஒட்டும் இல்லை.உறவும் இல்லை .அவர்களுக்கு எங்கள் ஓட்டும் இல்லை என அறிவித்து விட்டு அடுத்த தேர்தலிலேயே காங்கிரசின் காலை கழுவிக் குடிப்பது துரோகம்.
செய்த துரோகங்களை அடுக்கடுக்காய் பட்டியலிட்டால் கோபாலபுரத்து சொத்துக் கணக்கு போல முடிவில்லாத கணக்குதான். ஆனால் அந்த தம்பி எளிமையாக சொல்கிறார் பிரபாகரன் துரோகி என்று.
 
இந்த சொல்லை சிறையில் இருக்கும் ஏழு தமிழரும் சொல்லட்டும். அற்புதம் அம்மா சொல்லட்டும். பெரியார் சிலைக்கு முன்னால், பெரியார் திடலில் வைத்து கைது செய்யப்பட்ட பேரறிவாளனை கைக்கழுவி விட நாங்கள் எல்லாம் திடலோ, கோபாலபுரத் திண்ணையோ அல்ல. பிரபாகரன் என்கிற தியாக நெருப்பினை ஆன்மாவில் சுமக்கிறவர்கள். இன்று ஏழு தமிழரின் விடுதலைக்காக திரண்டிருக்கிற அத்தனைத் தமிழர்களும் பிரபாகரனை தங்கள் தலைவராக மானசீகமாக ஏற்றுக் கொண்டவர்களே.. எங்களுக்கு எல்லாம் சென்னைக்கு ஒரு தலைமை..சிஐடி காலனிக்கு ஒரு தலைமை..மதுரைக்கு ஒரு தலைமை என்ற மானங்கெட்டத்தனங்கள் கிடையாது.
தான் பெற்ற பிள்ளைகளுக்கு பதவி கேட்டோ, உதவிக் கேட்டோ நின்றவர் எங்கள் தலைவர் அல்ல. எல்லாருக்கும் நேர்வது தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நேரட்டும் என்று களத்தில் நின்ற நேர்மையாளன். கட்சியில் குச்சி கட்டிய காலம் முதல் இருந்தவனை காலில் போட்டு மிதித்து விட்டு தன் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும், பேத்திக்கும் பதவி கேட்டு டெல்லிக்கு அலைய எம் தலைவர் அண்ணா அறிவாலயத்துக்காரர் அல்ல. ஏசி அறையில் தூசி தட்டி..பேசி முட்டி நிற்பதற்கு எங்கள் தலைவர் காகிதத்தில் வசனம் எழுதி.. காற்றை 2 ஜியாக விலை பேசும் வில்லன் இல்லை.
 
எங்கள் தலைவர் களத்தில் நின்றார்.
 
மக்களோடு.. மக்களாக.தன் உதிரம் சிந்தி தாய்மண்ணை உயிர்ப்பிக்க நம்பிக்கைக் கொண்டு களத்தில் நின்றார்.
 
பேசுங்கள். தமிழ்நாட்டு அரசியலில் ஆளா..இல்லை..? திட்டிக் கொள்ள, ஏசி..பேசி ஒப்பிட்டுக் கொள்ள ஆளா இல்லை…? சாக்கடையில் நெளியும் புழுக்களுக்கா பஞ்சம்..? கடலிலே தூக்கிப் போட்டாலும் கூட கடலையே களவாடும் கட்டுமரங்களுக்கா இங்கு பஞ்சம்..?
சாக்கடைகளை பற்றி சலிக்காமல் பேசுங்கள். அதில் எங்களுக்கு சல்லிக்காசு அளவு கூட எதிர்ப்பில்லை. ஆனால் புனிதங்களைப் பற்றி பேச நரித்தனத்தின் நாவுகளுக்கு உரிமை இல்லை.
இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலைவழக்கில் இன்னும் வெளிவராத மர்மங்கள் ஏராளம் உண்டு. அது இன்றவும் முடிவடையாத விசாரணை. அதில் சிக்கி இருக்கிற 7 தமிழர்களை காப்பாற்றவே இந்த உணர்வுப் பூர்வ ஒன்று கூடல். பேரணி.
 
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டவர்களை விடுவிக்க தலைவர்.பிரபாகரன் எதுவும் செய்யவில்லை என்று பேசுவதே அபத்தமானது. ஏதாவது செய்திருக்க முடியுமா..செய்திருப்பார்களா என்பதெல்லாம் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது. அதைப்பற்றி அந்த ஏழு பேரைத் தவிர மற்றவரெல்லாம் பேசுவது அநாகரீகமானது.
 
எனவே துரோகத்தனத்தை எல்லாம் பேச அடிப்படை தகுதிகளை திமுக இழந்து பன்னெடுங்காலமாகி விட்டது. ஈழ உறவுகளின் இரத்தக்கறை படிந்த அவர்களின் அரசியல் பாதை எதனாலும் புனிதமாகி விடாது.
திராவிடம் என்ற பெயரில் மண்ணின் பூர்வக்குடிகளின் வாழ்வை,பண்பாட்டு விழுமியங்களை, அரசியலை, பொருளாதார சூழலை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு …ஆசியாவின் மூன்றாவது பணக்கார குடும்பமாக மாறியது எம் தலைவர் குடும்பம் அல்ல.
 
ஒப்பிட்டு யோசிக்கவே மனது கூசுகிறது. புனிதத்தின் உச்சிக்கும், வாயில் இருந்து உமிழும் எச்சிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா..?
 
வந்தோமா…அரசியல் செய்தோமா..அடுத்தவன் காசை , அரசாங்க பணத்தை ஆட்டைய போட்டோமா என்கிற அரசியலைத் தாண்டி ..ஈழம் ,பிரபாகரன் என்கிற தியாகமும்,புனிதமும் நிறைந்த சுடர்மிகு இலட்சியங்களை அவர்கள் நினைக்க வேண்டியதில்லை.
நினைக்கவும் முடியாது. கூடாது.
 
எனவே எம் தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூற்று கதையாடல்களை நிறுத்திக் கொண்டு..வழக்கம் போல பிழைப்புத்தனங்களை செய்து வர உங்களுக்கு தயாளு அம்மா ஸ்பெசல் சாய்பாபா அருள் அளிக்கட்டும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில்  இருக்கும் ஒரு சுவரொட்டி போதும். சொல்லக்கூசும் இவர்களின் கதைகளைச் சொல்ல.
 
– மணி செந்தில்
 

வசவுகள் உணர்த்தும் செய்திகள்..

சமீப நாட்களாக கீற்று இணையத்தளத்தில் நாம் தமிழர் எதிர்ப்பு கட்டுரைகள் மீண்டும் அதிகமாக பிரசுரமாகி வருகின்றன. (நடுவில் ஏனோ..நிறுத்தி இருந்தார்கள்.)

பொய்யும்,புரட்டும்,தேர்தல் அச்சமும் (சொந்தக்காரர்கள் ஜெயிக்கணுமில்ல…) நிரம்பி வழியும் அக்கட்டுரைகள் பற்றி நமக்கு ஒரு பொருட்டே இல்லை என்றாலும் கூட…

மேற்கண்ட கட்டுரைகள் சில செய்திகளை சமூகத்திற்கு தெளிவாக வெளிக்காட்டுகின்றன..

அவையாவன..

தமிழ்த்தேசிய கருத்தியலின் ஏகமனதான பிரதிநிதியாய் நாம் தமிழர் அமைப்புதான் இருக்கிறது..

திராவிட கருத்தியலின் சிம்ம சொப்பனமாய் நாம் தமிழரே திகழ்கிறது.

தமிழ்த்தேசிய கருத்தியல் எதிர்ப்பு என்றாலே அது சீமான் எதிர்ப்பாகவே பதியப்படுகிறது.

சமீபநாட்களாக அர்த்தமற்று,வலுவற்று, இளைஞர்களை ஈர்ப்பை தொலைத்து…ஏறக்குறைய சமாதி நிலைக்கு சென்று விட்ட திராவிட கருத்தியல் நோக்கி வெளிச்சம் பட தேவை எழுந்திருக்கிறது.

ஆரிய எதிர்ப்பு,இந்துத்துவ எதிர்ப்பு,சாதீய மறுப்பின் பிராண்ட் அம்பாசிட்டர்களாக ஒரு காலத்தில் இருந்த திராவிட கருத்தியல் தற்போது அம்பலப்பட்டு, அப்பதவிகளை தங்களது வலிமையான தொடர் செயல்பாடுகளால் தமிழ்த்தேசிய கருத்தியல் மூலமாக பிரபாகரனின் தம்பிகள் நிறுவி நிற்பதுமான சூழலில் கீற்று போன்ற இணையதளங்கள் மூலமாக வசவொலி பொழிய கட்டாயம் எழுந்திருக்கிறது..

அரங்கங்களில் இருந்த தமிழ்த்தேசிய கருத்தியல் லட்சக்கணக்கான மக்கள் கூடும் வெகுசன ஈர்ப்பு கருத்தியலாக மாறி நிற்பதும், பெரியார் தன் உழைப்பால் வெகுசன கருத்தியலாக கட்டி வைத்திருந்த திராவிட கருத்தியலை ,கருணாநிதி,ஜெ,விசயகாந்த் (அண்ணன் வைகோ பெயர் இத்தருணத்தில் வேண்டாங்க.. அவரே அண்ணா அறிவாலயத்தில் தன் கட்சி கூட்டத்தை தேடும் நிலையில் இருப்பதால்.. நாமும் எதற்கு smile emoticon ) என நீளும் பட்டியலில் இருக்கிற திராவிட அரசியல் வாதிகள் தங்கள் சுயநலபிழைப்பு,பித்தலாட்ட அரசியல் காரணமாக மக்களிடம் அம்பலப்பட்டு நிற்பதும், இவர்களை தத்துவமாக தாங்கிப்பிடிக்க முடியாமல், அடையாளப்படுத்த முடியாமல் தவிக்கிற திராவிட சிறு இயக்கங்கள் தங்களை,தத்துவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் வருகிறது. சீமானின் சொற்கள் மக்கள் மனதில் ஏற்படுத்துகிற மாற்றத்தை.. பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது..அப்போதுதான் தங்களது ”இரத்த” உறவுகளது அரசியல் அங்கீகாரம் பலவீனப்படாமல் காக்கப்படும்..

இது போன்ற தேவைகளுக்காக,கட்டாயங்களுக்காக வசவு கட்டுரைகள், ஏசல் எழுத்துக்கள்,பூசல் பூச்சாண்டிகள் ஆகியவற்றை கீற்று பிரசவிக்கிறது.

புரிகிறது.

நாம் தமிழரை தனித்த வலுவான சக்தியாக மாற்ற..அடையாளப்படுத்த ஓயாமல், உறங்காமல் உழைக்கிற கீற்றுவின் சேவை (அச்சம்..?? ) கண்டு மனம் மகிழ்கிறது.

கீற்று இணையத்தளத்தில் ஒருகாலத்தில் எனது எழுத்துகள் பல வந்திருக்கின்றன.

அப்போது நான் எவ்வாறு மகிழ்ந்தேனோ..இப்போதும் அதே அளவு மகிழ்கிறேன்.

சில நேரங்களில் பல கேள்விகள்- மணி செந்தில்..

1491548104seemaneputhur

தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் என்று வசைபாடும் பெரியவர்கள்… முதலமைச்சு திராவிடம், வலது சாரி திராவிடம் போன்றதான விமர்சனங்களை தப்பித்தவறி கூட முன் மொழிவதில்லை என்பது வெளிப்படை.
மக்கள் ஆதரவை திரட்டி, மற்ற திராவிடக் கட்சிகள் போல எங்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, தமிழ்த்தேசிய கருத்தியல் வெகு சன மக்களை கவர்கிற கருத்தியல் என நிருபிக்க போராடும் இளையோர்களை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை நோக்கி தாறுமாறாக விமர்சன அம்புகள் எய்யப்படுவதன் உள்நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.

அப்படி இவர்கள் வெறுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்து விட்டோம்….?

கருத்தரங்குகளில், அரங்கங்களுக்குள் நடக்கும் மாநாடுகளில் (?) ,வயதானவர்களில் ஜிப்பா பைகளில், நரைத்த முடிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கருத்தியலை பல லட்சக்கணக்கான வெகு மக்களுக்கான கருத்தியலாக வெகுசனமயமாக்கியதும், பிழைப்புவாத போலி திராவிட அரசியல் கருத்தியலுக்கு மாற்றாக முன் நிறுத்தியதையும் தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன..?

யாருக்கு ஆதரவாக எங்கள் மீது வசவு அம்புகளை இவர்கள் எய்கிறார்கள்..?

தமிழ்த்தேசியவாதிகள் வெகுசன அரசியல் பாதைக்கோ, அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் பாதைக்கோ வந்து விடக்கூடாது என்பதில் திராவிட அரசியல் வாதிகளை விட கவனமாக இருப்பது ‘ கருத்தரங்க’ தமிழ்த்தேசியர்கள் தான்.

.. அற்பமான (?) இந்த தேர்தல் வெற்றியை கூட பெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ,சொல்லப்போனால் வெகு சன மக்கள் நிராகரிக்கிற தேர்தல் புறக்கணிப்பு தமிழ்த்தேசியம் எப்போதும் திராவிட அரசியலுக்கு ஆதரவாகவே இருப்பது ஏன்…?

இந்திய கட்டமைப்பாகவே இருந்து விட்டு போகட்டும். தமிழர்கள் ஆண்டு விட்டுதான் போகட்டுமே.. தெலுங்கர்,கன்னடர் தமிழ்நாட்டை ஆளலாம்..தமிழன் ஆளக்கூடாதா… இது தமிழனை தவிர்த்த மற்றவர்களுக்கான உரிமையா..? குறைந்த பட்சம் இந்தியக்கட்டமைப்புக்குள்ளாகவே ஆள வக்கற்ற, அதிகாரமற்ற தமிழன்…எப்படி தனக்கென ஒரு நாடு அடைவான்…? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..?

எதற்கெடுத்தாலும் பெரியார் என்கிற பாதுகாப்பு கேடயத்தை முன் நிறுத்தும் இவர்கள் பல முறை தனக்கு முதல்வர் வாய்ப்பு தனக்கு வந்தும் கூட..பெரியார் ”பச்சைத்தமிழன்” காமராசருக்கு தானே வாக்கு கேட்டார்… என்கிற உண்மையை மறைக்க துடிப்பது ஏன்..?

தேர்தலில் நிற்பது தவறென்றால்..வாக்கு கேட்பது சரியா…? ( தங்களுக்கு “வேண்டியவர்களுக்கு” மட்டும் வாக்கு கேட்பது தமிழ்த்தேசிய எல்லைக்கு அப்பால் என்றெல்லாம் மனசாட்சி கேட்டால் நாம் பொறுப்பல்ல..)

சரி.தேர்தலில் நிற்கவேண்டாம்.

கருணாநிதி,ஜெயலலிதாவே ஆண்டு விட்டு போகட்டும், அதற்கு பிற ஆள அவர்களது வாரிசுகள் இருக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்போம். தேர்தல் அரசியலில் நிற்காமல் மக்களை திரட்ட, மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலை நோக்கி ஈர்க்க , தமிழர்களை திரட்டி தமிழ்த்தேசம் சமைக்க… என்ன என்ன முயற்சிகள்.. எத்தனை ஆண்டு காலத்தில்…? விளக்குவார்களா இவர்கள்…???

தமிழர்கள் என்று சொன்னால் பிறப்பு அடிப்படையிலான குருதி தூய்மை..சரி. திராவிடர்களை நீங்கள் எதை கொண்டு வரையறை செய்தீர்கள் – ஏழை பணக்காரன் பார்த்தா..நல்லவன் கெட்டவன் பார்த்தா…? எதை கொண்டு திராவிடர்களை பிரிக்கிறீர்கள்.வரையறை செய்கிறீர்கள்…?

மக்களை வெல்லாமல், வெகு மக்களை திரட்டாமல்..மானுட எல்லைகளுக்கு (?) அப்பால் ஒரு தத்துவத்தை கட்டமைத்து, வாத பிரதிவாதங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தேசம் உருவாகி விட முடியுமா…அதற்கான மானுட உளவியல் விழைவை, தேவையை இம்மண்ணில் இதுவரை யாராவது ஏற்படுத்தி இருக்கிறார்களா…?

seeman_2417919f

எப்போதும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது மக்கள் ஆதரவை சார்ந்தது. மக்களை வெல்லாமல் எதையும் நாம் அடைய முடியாது. எப்போதும் பலவீனப்பட்ட சிறு சிறு குழுக்களின் தத்துவமாக தமிழ்த்தேசிய கருத்தியல் இருந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இன்றைய தமிழின இளையோர் தமிழ்த்தேசிய கருத்தியலை வெகுசன ஆதரவு கருத்தியலாக விதைப்பதில் வென்று காட்டி இருக்கிறார்கள்.

கடந்த 2009 க்கு பிறகான தமிழின வரலாற்றிலும், தமிழின இளையோர் சிந்தனையோட்டத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை புறம் தள்ளி , அவர்களை வலது சாரி, உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், குருதித்தூய்மை பார்ப்பவர்கள் என்றெல்லாம் ஏசி முறியடிக்க விரும்புவது திராவிட பித்தலாட்ட அரசியலுக்கு அப்பட்டமாக துணை செய்யதானே..?

நமது மண்ணில் பிழைக்க வந்திருக்கிற வேற்று இனத்து உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பரசியல் குறித்தெல்லாம் சிந்திக்கிற இவர்கள்…இங்கிருந்து உலகம் முழுக்க பிழைக்கப் போன எம்மின மக்கள் குறித்து கரிசனம் கொண்டிருக்கிறார்களா… ? பெருமுதலாளிகளாக இம்மண்ணை சுரண்டி வாழும் நிறுவனங்களான ஜோஸ் ஆலுக்காஸ். ஜோய் ஆலுக்காஸ், முத்தூட் பைனான்ஸ், பல திரைப்பட நிறுவனங்கள்,குளிர்பான நிறுவனங்கள், உள்ளீட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விமர்சனம் சார்ந்த எங்களது வெறுப்பரசியல் இம்மண்ணில் பிழைக்க வந்துள்ள பிற இனத்து உழைக்கும் மக்கள் மீது என்றாவது பாய்ந்திருக்கிறதா…??

அதற்கான ஆதாரங்களை பெரியவர்கள் வெளியிடுவார்களா..?

தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக விடமாட்டோம் என்கிற இம்மண்ணின் பூர்வீகக்குடிகளின் அடிவயிற்றுக் குரல்… ஏன் உங்களுக்கு சுருதி பேதமாக ஒலிக்கிறது…??

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அலைபோல எழுகின்றன.

ஏனென்றால் காலங்காலமாக காற்றில் கரைந்துப் போன கற்பூரமாய் இருந்த அக்குரல் இப்போது திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு எதிரான இடி முழக்கமாய் முழங்க தொடங்கிவிட்டது.. செத்துக் கொண்டிருக்கிற திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு தத்துவார்த்தமாக வலிமை சேர்க்கவே இப்படிப்பட்ட கூப்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம்.

நாங்கள் உறுதியான குரலில் ,எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற எம்மின விடுதலை மீது பற்றுறுதி கொண்டு அறிவிக்கிறோம் . யாரும் வரலாம். வாழலாம். இம்மண்ணில். வந்தவர்களை வாழ வைப்போம்.. அது எம்மினத்தின் பண்பாட்டுப் பெருமை. ஆனால் எம் சொந்தவர்களை மட்டுமே ஆள வைப்போம். அது தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.
நாங்கள் முன் வைக்கிற முழக்கங்கள் உறுதியாக பிற இனத்தார் மீதான வெறுப்பரசியல் இல்லை. அவை எங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை.

பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களையும், இந்திய பெருநிலத்தில் தோன்றிய மகத்தான பெருமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களையும் நாங்கள் பெருமதிப்புடன் அணுகுவதில் ஒரு போதும் பிழை செய்வதில்லை. இருண்ட உலகிற்கு வெளிச்சம் காட்ட பிறந்த அந்த தீப்பந்தங்களின் ஆதி மூலம் குறித்து நாங்கள் ஆராய்வதில்லை. அவர்கள் மட்டுமல்ல மாமேதை மார்க்ஸ் தொடங்கி தத்துவங்கள் மூலம், நெறிகள் மூலம், வாழ்வியல் மூலம் வழிகாட்டிய மாபெரும் மனிதர்களை நாங்கள் ஒருபோதும் மதிக்காமல் கடந்ததில்லை. மாறாக அவர்கள் உலகம் தழுவிய அடிமைப்பட்டு கிடக்கிற இன மக்களுக்கான வழிகாட்டிகள் என்பதை நாங்கள் நெஞ்சார உணர்ந்துள்ளோம்.

அதே சமயத்தில் எம்மினத்தில் பிறந்த பேரறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களையும், எம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், பேராசான் ஜீவா அவர்களையும், இன்னும் பிற தமிழ்த்தேசிய கருத்தியல் தளம் சார்ந்து இயங்கிய எங்கள் பாட்டன்களையும் நாங்கள் எங்கள் குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவர்களை எங்கள் முன்னோடிகளாக, எங்கள் தலைவர்களாக போற்றுகிறோம்.

தவறான விமர்சனங்களை பரப்புவதன் மூலம் தமிழின இளைஞர்களின் அரசியல் பாதையை அழித்து..திராவிட பிழைப்பு வாத அரசியலுக்கு மறு உயிர் கொடுக்கிற முயற்சிகளை எங்களால் உணர முடிகிறது.

.இலட்சக்கணக்கான எம் உறவுகளும், எம்மினத்தின் மாவீரர்களும் பற்ற வைத்த பெருநெருப்பு பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த நெருப்பை உள்ளத்தில் சுமந்து…தங்களை வீழ்த்திய அனைத்தையும் எதிர்க்கிற, வெல்கிற வலிமையை தமிழின இளைஞர்கள் இன்று பெற்றுள்ளனர்.

அவ்வலிமையை கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தமிழர்களே தீர்மானிப்பார்கள்.

எங்களுக்கு முன்னதாக இக்களத்தில் பணி செய்தோர்,பயணம் செய்தோர்,பங்களிப்பு செய்தோர்களின் தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எம்மீது கல்லெறிந்து போகிற பெரியவர்களின் பெயர் கூட சொல்லாமல் கண்ணியமாக நகர்ந்து போகிறோம். ஆனால் உங்களது தியாகமும், அறிவும் தமிழ்த்தேசிய இனத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய , கருணாநிதி,ஜெயலலிதா, போன்ற திராவிட அரசியல் பிழைப்புவாதிகளின் அரசியல் எதிர்காலத்தை சவால்களுக்கு உள்ளாக்கி இருக்கிற இந்த இளைய பிள்ளைகளின் மீதான வன்மமாக,எதிர்ப்பாக மாறி விடக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இக்கணத்தில் விடுக்கிறோம்.

எப்போதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வலிமையாக தமிழின இளையோர் கம்பீரமாக நிற்கிறோம். ஆதரவாய் இருக்க விரும்புவோர் அருகில் வாருங்கள். நன்மொழி கூறுங்கள்.

அவதூற்றி எதிரிகளை பலப்படுத்த விரும்புவோர் தாராளமாக எதிரிகளுடனேயே நில்லுங்கள்.

கருணாநிதி,ஜெயலலிதாவை ஆதரிப்பதும், அவர்களையே ஆள வைப்பதுதான் இடது சாரி தமிழ்த்தேசியம் என்றால்…(நன்றி:சுப.வீ) அக்கனவை அழித்து, எம்மண்ணை இம்மண்ணின் பூர்வக்குடிகளே ஆளட்டும் என முழங்கிற நாங்கள் வலதுசாரி தமிழ்த்தேசியர்களே..

சில வருடங்களுக்கு முன் ஈழ அரசியலில் கலையரசன், சோபா சக்தி போன்றோர் எம்மினத்தின் விடுதலைக்காக தன்னுயிர் தந்த மாவீரர்களான, எம்மின தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை வலது சாரிகள் என வசை மொழிகள் பொழிந்தது நினைவுக்கு வருகிறது…

அந்த வலதுசாரிகள் தான் இறுதிவரை மண்ணை காக்க போராடி உயிர் ஈந்தார்கள்.

இந்த வலதுசாரிகள் தான் இம்மண்ணை காக்க போராட மக்களுடன் களத்தில் நிற்கிறார்கள்..

காலம் உணர்த்தும். தவறான கணக்கு திருத்தும்.

.யார் வலது சாரி, இடது சாரி என…

..மணி செந்தில்

கருத்துரிமை என்பது யாதெனில்… . -மணி செந்தில்


2013-10-31T092629Z_1799413014_GM1E9AV1BWA01_RTRMADP_3_PHILIPPINES

 

எம் முகத்தில்
நீ காறி உமிழ்ந்த
அந்த
மஞ்சள்
எச்சிலுக்கு
மற்றொரு பெயர்
உண்டென்றாய்…

எம் செவியில்
நீ உரக்கச்
சொல்லிப்போன
அவமானச் சொற்களின்
பின்னால்
மகத்தான
உரிமை ஒன்று
மறைந்து கிடக்குதென்றாய்..

எம் கண்களை நோண்டியெடுத்து
உன் கால்களுக்கு கீழே போட்டு
நசுக்கி…
அதில் கசிந்த
உதிரத்தில் தான்

உன் மஞ்சள்
எழுத்திற்கான
மை தயாரித்தாய்..

உதிர சிவப்பேறிய
எம் விடுதலைக்கான பக்கங்களில்
உன் மஞ்சள் புத்தியை
பூசி விட்டு போனதைதான்
உன் ஆக்கத்திற்கான
ஊக்கமென்றாய்..

கல்குதிரையேறி
நீ கடக்க முயன்ற
குருதிப் புனலில்
அகப்பட்ட சடலங்களில்
நெளியும் புழுக்களை
தின்பதை தான்
உன் பசியாறல்
என பகிரங்கப்படுத்தினாய்..

……………….

இருண்டுக் கிடந்த
பேரிருள் நிலத்தில்
மின்னிட்ட
ஒரு சுடரின்
திசைவழி கண்டு
விழித்தெழ கூட
எமக்கு அனுமதி இல்லை.

ஆனால்

விடுதலை தாகத்தில்
உலர்ந்த எம் உதடுகளை
நனைக்க வந்த
பெருமழையினை
அது வானின் மூத்திரம்
என வசைபாட
உனக்கு வாய்ப்பு உண்டு..
………………

திறந்த எம் விழிகளை
நோண்டிப் போடும்..
எழுந்த எம் கரத்தினை
முறித்துப் போடும்…
உன் சொல் விளையாட்டிற்கு
இறுதியாய்
கருத்துரிமை என பெயர் சூட்டினாய்.

கல்குதிரையேறி வந்த
சதிகார சம்ராட்டிற்கு
எம் மண்டையோடுகளை
கொண்டு
இராஜப்பாட்டை அமைக்க
உரிமை உண்டெனில்…

எம் துயர் இருட்டை
நக்கி பிழைக்கும்
அந்த எழுத்தை
எரித்துப் போடுதலும்..

எம்மை உருக்குலைத்துப்
போட வந்த அந்த விரல்களை
உடைத்துப் போடுதலும்

எமக்கான கருத்துரிமைதான்..

– மணி செந்தில்

கங்காரு -தீவிர அன்புணர்வின் எளிய மொழியியல்…

Kangaroo

 

மிருகம்,உயிர்,சிந்து சமவெளி போன்ற சர்ச்சை திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு வேறு தளத்தில் பயணிக்கிறது. எப்போதும் உணர்வு சார்ந்த திரைக்கருவில் மிகை நடிப்பிற்கான சாத்தியங்கள் அதிகம். அதே போன்ற அண்ணன் -தங்கை அன்புணர்வினை தீவிரமாக பேசுகிறது கங்காரு..

எப்போதும் வாழ்க்கை நினைத்தது போல அமைந்துவிடுவதில்லை.நினைப்பது போல நடக்காததன் அவஸ்தைகளை,வலிகளை,வேதனைகளை, ஏமாற்றங்களை,சவால்களை பேசுவதுதான் திரைப்படங்களும், இலக்கியங்களும்… மனித மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களின் தொகுப்பில் மகத்தானது அன்பு என்கிற மகத்தான உணர்வு.ஒரு வகை பதிலீட்டை,எதிர்பார்ப்பை,கைமாற்றை கோரி நிற்கிற மாபெரும் துயராக அன்புணர்வு பேருருவம் அடையும் போது மனித மனம் பிறழ்வு அடைகிறது. அப்படிப்பட்ட அன்பினை யாசகமாக கோரி நின்ற சகோதர உணர்ச்ச்சியின் பிறழ்வு அவஸ்தைகளை தான் கங்காரு பேசுகிறது.

எங்கிருந்தோ வந்த ஒரு சிறுவனின் கரங்களில் ஒரு கைக்குழந்தை. டீக்கடை வைத்திருக்கும் தம்பி இராமைய்யா அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை வளர்க்கிறார். தனது தங்கையே உலகமென வாழும் அந்த சிறுவனும்,கைக்குழந்தையும் வளர்கிறார்கள். உரிய வயது வந்தவுடன் தங்கைக்கு காதல் பிறக்கிறது. அது கனிந்து அண்ணனின் ஆசியோடு திருமணமாக மலர இருக்கையில் காதலன் கொல்லப்படுகிறான். அதன்பின் பார்த்த மாப்பிள்ளையும் கொல்லப்படுகிறார். பின் திருமணம் செய்து கொள்கிற இளைஞன் நோக்கியும் கொலை முயற்சி. இதற்கு பின்னால் இருப்பது யார் என்ற மர்ம முடிச்சுகளுடன் திரை மொழி அமைத்திருக்கிறார் இயக்குனர் சாமி.

தன் முந்தையப்படங்களின் பாலியல் உறவுகள் சார்ந்த சாயல் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருக்கிறார் இயக்குனர். மின்னும் உயர் நட்சத்திரங்கள், மாபெரும் அரங்கங்கள், பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் ஆகிய எதுவுமின்றி,புதிய நட்சத்திரங்களைக் கொண்டு தான் கொண்டிருக்கிற கதைக்கருவினை மிகச்சரியாக திரைமொழிக்கு நகர்த்தி விட வேண்டும் என்கிற இயக்குனரின் உழைப்பு திரைப்படத்தில் தெரிகிறது.

தனது குட்டியை தானே சுமந்து திரியும் விலங்கினங்களில் சற்றே வித்தியாசமானது கங்காரு . தனது வயிற்றோடு இருக்கிற பையில் தனது குட்டியினை வைத்துக் கொண்டு திரிகிற கங்காருவினை முன் மாதிரியாக வைத்து கதையினை அமைத்திருக்கிறார்கள். மனித மனதிற்குள் பூட்டி கிடக்கிற விலங்கு விழித்தால் அடைகிற அவலங்களும், அன்பின் மிகுதியில் மனிதமனம் அடைகிற பிறழ்வுகளுமாக உளவியல் சார்ந்த திரைக்கதையாக கங்காரு உருவாகியுள்ளது.

மனப்பிறழ்வு கொண்ட கதாநாயகனாக நடித்திருப்பவர் இன்னும் உடல் மொழியில் மெனக்கிட்டு இருக்கலாம். கதாநாயகியாக பிரியங்கா. அமைதிப்படை 2 –ல் நடித்தவர். தன்னை தவறாக வழிநடத்த முயல்கிற தனது அக்காவினையும், அவரது ஆட்களையும் செருப்பால் அடித்து வெளுக்கிற காட்சியில் மின்னுகிறார். தங்கையாக நடித்திருக்கும் புது முகம் தனது அண்ணனுக்காக அவசர அவசரமாக கஞ்சியினை விழுங்கும் காட்சியில் நன்கு நடித்திருக்கிறார். தம்பி இராமையா, கலாபவன் மணி,சுந்தர்ராஜன் போன்றவர்கள் எப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் சுடர் விடுபவர்களே.இப்படமும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல.

மருத்துவராக நடித்திருக்கிற வெற்றிக்குமரன், தயாரிப்பாளராகவும் இருந்து, தங்கையின் கணவனாகவும் நடித்து இருக்கிற சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தங்களால் முடிந்த நேர்மையை செய்திருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா.. என்ற கேள்வி எழுப்பிகிறவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது தெலுங்கன் கரங்களிலும், மார்வாடி கரங்களிலும்,கன்னடத்தான் கரங்களிலும் சிக்கி வதைபடுகிற திரை உலகினை மீட்க எம் நண்பர் சுரேஷ் காமாட்சி போன்றோர் போராடத் தொடங்கியுள்ளார்கள். அப்போராட்டத்தின் முதற்படி தான் கங்காரு போன்ற திரைப்படங்கள். அடுத்தடுத்து வரும் திரைப்படங்களில் இப்படத்திற்கான தவறுகளை திருத்திக்கொள்வார்கள என்கிற எனது நம்பிக்கைதான் இப்படத்தினை தவறுகள் கடந்து நேசிக்கச்சொல்கிறது. எளிய பொருட்செலவில் உண்மையான பாச உணர்வின் தீவிரத்தை பேசுகிற கங்காரு..நான்கு பாட்டு,இரண்டு குத்து, நான்கு காமெடி என்கிற பெயரில் கடிகள் என்கிற வகையில் வெளிவருகிற எத்தனையோ திரைப்பட குப்பைகளுக்கு மத்தியில் மதிப்புறு படமே..

கங்காரு – தமிழன் தயாரித்த தமிழர்களுக்கான திரைப்படம்.

அவசியம் அனைவரும் காண்போம்.

சொற்களின் மினுக்கும் சிறகுகள்

11064900_10153260048767074_1943520695953753847_nகாற்றில்
மிதந்து திரிகிற
உன் சொற்களில்
மின்மினி பூச்சிகளின்
சிறகினை கண்டேன்…

வளைந்து,நெளிந்து
திரிகிற புதிர் பாதையில்
ஆயிரத்தி எட்டு
நட்சத்திரங்களை
விதைத்து போயின அவை.

சட்டென கிளைத்த
மெளனத்தில்…
நட்சத்திரம் அழிந்த
வானமாய் நிர்மூலமானது
நானும் கூட….

 

இராவணப் பேரன்களின் எழுச்சி பாய்ச்சலும்.. வீபிசண சுப.வீயின் அபத்த கூச்சலும்…

subave
அது ஒரு பஞ்சாயத்து காட்சி. படத்தின் பெயர் நினைவில்லை. ஆடு திருடிய கள்வனான வடிவேலு பஞ்சாயத்தை கலைத்து விட்டு “ இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணு..சூனா ..பானா..ஒரு பய உன்னை அசைச்சிக்க முடியாது “ என மீசையை முறுக்குவார். அதே போல நமது அரசியல் களத்தின் சூனா..பானா ..சுப.வீயும் நாம் தமிழர் கட்சி பழனியில் தொடங்கிய வீரத்தமிழர் முன்னணி குறித்து மீசையை முறுக்கி திராவிட அரசியல் வாதிகளுக்கே உரித்தான “ வரும்..ஆனா..வராது…” என்பது போன்ற ஒரு கட்டுரையை தமிழ் ஒன் இந்தியா இணையத் தளத்தில் எழுதியுள்ளார்.
அவள் படி தாண்டா பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்பது போன்ற புகழ் வாய்ந்த சொல்லாடல்களுக்கு பேர் போனவர்கள்…அவர் உங்கள் மனைவியா..இல்லை. அவர் என் மகளின் தாய் என குழப்பி அடித்தல்களில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள்… திருப்தி அளிக்கிறது..ஆனால் மனநிறைவை தரவில்லை என்றெல்லாம் அகராதியில் இல்லாத  புது மொழி பேசியவர்களின் மரபு அப்படி..இப்படியெல்லாம் எழுத வைக்கிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்ப்பு வந்திருப்பதால் குறி தவறாமல் நம் அம்பு இலக்கினை எட்டி இருக்கிறது என மகிழ்வோம்.
ஒரு பக்கம் பாஜகவின் எச்.ராஜா ஏசுவதும்… மறுபக்கம் திராவிட சுப.வீ திமிறுவதும் நமக்கு இன்பமாகவே இருக்கிறது. இந்துத்துவா என்கிற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்ப்பனீயமும்,திராவிடமும் திகழ்கின்றன என்பதற்கு எச்.ராஜாவின் பதறலும், சுப.வீயின் உதறலும் உதாரணமாக திகழ்கின்றன. இதற்கு மற்றுமொரு உதாரணம் கட்டுரையின் தொடக்கத்திலேயே சுப.வீ. இந்து நாளிதழின் செய்தியை துணைக்கு அழைத்திருப்பது.  பாவம். துணைக்கு அழைக்க பார்ப்பனீய வினை தான் திராவிட அறிஞருக்கு உதவுகிறது என்றால்.. காஞ்சி மடத்தின் துணையை காஞ்சித்தலைவனின் வாரிசுகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதானே பொருள்..?
முன்னோர் வழிபாடு புதுமையும் இல்லை.புரட்சியும் இல்லை என்கிறார் சுப.வீ. தனது பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுக்க முயலுகிற ஒரு அமைப்பை நாம் தமிழர் தொடங்கி இருக்கிறது.  சல்லிக்கட்டு,தமிழர் உணவு,பழந்தமிழர் விளையாட்டுக்கள் என்பது போன்ற பல காரணிகளை உள்ளடக்கிய வீரத்தமிழர் முன்னணியின் பல்வகை நோக்கங்களில் முன்னோர் வழிபாடும் ஒரு அம்சம். முன்னோர் வழிபாடு,நடுகல் மரபு போன்றவை தமிழனின் பண்பாட்டு விழுமியங்கள் என்பதற்கு ஆதாரங்களை தனது கட்டுரையிலேயே சேகரித்து வழங்கி சேம் சைடு கோலடித்த வீரராக, ஆஜரான குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுக்க வழக்கறிஞர் சூரராக காட்சி அளிக்கிறார் சுப.வீ .
நாம் தமிழர் கட்சியை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். ஆனால் அந்த அமைப்பை அவரால் தொடர முடியாமல் போனது. அவருக்கு பிறகு அவரது வழித்தோன்றல்களான நாங்கள் தொடர்கிறோம். அதே போல் தான் தமிழரின் மரபு,பண்பாடு ஆகியவற்றில் இந்துத்துவ அம்சங்கள் நீக்கமற நிறைந்துள்ளன. அவற்றை எல்லாம் களைந்து எமது பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்கிற பணியை செய்ய வீரத்தமிழர் முன்னணியை தொடங்குகிறோம். இதில் எங்கே கருணாநிதியின் தொங்கு சதையாகிப் போன சுப.வீக்கு வலிக்கிறது என புரியவில்லை.
மேலும் முருகனை எப்படி நம் முன்னோன் என்கிறீர்கள் ..அது ஒரு புராணப்பாத்திரம்.இராவணன் ஒரு இதிகாசப் பாத்திரம்,வள்ளுவர் ஒரு வரலாற்று பாத்திரம்  என்கிறார் சுப.வீ. முருகன் தமிழினத்தின் முன்னோன்,மூத்தோன் ,நம்மை ஆண்ட மன்னோன் என்பதற்கு தொடர்ச்சியான தமிழின அறிஞர்களின் ஆய்வுகள் சான்று பகிர்கின்றன . சங்க இலக்கியங்கள் முருகனைப் பற்றி பேசுகின்றன. வேலன் வெறியாடல் என்கிற என்ற முருக வழிபாடு சார்ந்த..முருகனே குறி சொல்வதாக கருதி மக்கள் வழிபட்ட பண்பாட்டு நிகழ்வினை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  சங்க இலக்கிய நூலான பரிபாடலில்  பல பாடல்கள் முருக வழிபாட்டினை பேசுகின்றன. சங்க இலக்கியத்திற்கு உரை கண்டதாக சொல்லி தனக்கு தானே சங்கு ஊதிக் கொண்ட வரின் சீடருக்கு இது தெரியாதா..?
இனக்குழு வாழ்க்கையில் தாய்வழி சமூகத்தின் ஒவ்வொரு இனக்குழுவிற்கும் இடையே போர் ஏற்பட்ட போது  இனக்குழுவிலே யார் தகுதி வாய்ந்த வீரனோ அவனே தலைவனான் மக்கள். அத்தகைய வீரனை,தங்களுக்காக உயிரையும் விட துணிந்தவனை தங்களது தலைவனாக ஏற்றனர். அவன் மறைவிற்கு பிறகு அவனை தெய்வமாக போற்றினர். அப்படித்தான் கடவுளானான் முருகன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
 தெய்வத்துள் வைக்கப்படும் -குறள்
 எங்கள் தலைவன் பிரபாகரன், அவன் முருகனுக்கே நிகரானவன் என்று எழுதிய பாவலர் அறிவுமதி கூட இது தொடர்பான முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார் என்பது செய்தி.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘திருமுருகாற்று படை ‘ கண்ட மொழி  தமிழ் மொழி.  போர்த்தொழிலையும், பெறுகின்ற வெற்றியினையும் உடையவனாக முருகன் அழைக்கப்பட்டு
மள்ளனாக புகழப்பட்டார் என்கிறது திருமுருகாற்றுப் படை
‘வானோர் வணங்குவில் தானைத்தலைவ !
மாலை மார்ப,நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள ! ( திருமுருகாற்றுப்படை 261-263)
நக்கீரர் தொடங்கி அருணகிரிநாதர், கிருபானந்த வாரியார் என நீண்ட வரலாற்று தொடர்ச்சியில் வருகிற தமிழஞறிர்கள் முருகனை நம் முன்னோனாக நிறுவி இருக்கிறார்கள். ஆனால் எங்கே ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த முருகன் முன்னோனாக நிறுவப்பட்டால்.. இரு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய திராவிட கருத்தாக்கம் வலுவற்று போகுமே என்கிற வருத்தத்தில் தான் முருகனை புராணப்பாத்திரமாக அழைத்து புளாங்கிதம் அடைகிறார் சுப.வீ.
தமிழ்ச்சமூகத்தை பெரிதும் பாதித்த ஆரியர் வருகையும், வடநாட்டு புராண,இதிகாச மரபும் தமிழர் மெய்யியல் நம்பிக்கைகளில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன. வடநாட்டில் ஸ்கந்த மரபு என்கிற நம்பிக்கையோடு தமிழன் முருகனை இணைத்து  தெய்வயானையை திணித்தது ஆரியம். முருகன் சுப்ரமணியன் ஆனான். இந்து மத கடவுளாக பார்க்கப்படுகிற முருகன் பெயர் கொண்ட பார்ப்பனரை இன்றளவும் நம்மால் காண முடியவில்லை. தமிழன் முருகன் பார்ப்பன சுப்ரமணியன் ஆன கதை  தெலுங்கர்-திராவிட பிழைப்புவாத அரசியலில் தன்னை இழந்த சுப.வீக்கு வேண்டுமானால் உறுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்து மத அடுக்கினில் சிக்குண்டு, சாதி பெருமிதத்தில் தன்னை தொலைத்திருக்கிற தமிழனை மீட்டெடுக்க துடிக்கிற தமிழ்த்தேசிய இளைஞர்களுக்கு உறுத்துகிறது. இன்று வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்திருப்பது வந்தேறி இருக்கிற இந்துத்துவாவிற்கு எதிரான பண்பாட்டு கலகம்.  சாதி மத வேறுபாட்டால் கூறு போடப்பட்டிருக்கும் தமிழினத்திற்கு கிடைத்திருக்கும் மாற்று.
இராவணன் இதிகாசப்பாத்திரமாம். இராவணனை ஒரு தமிழனாக அறிந்து, ஆய்ந்து ..நிறுவி “இராவண காவியம் “ எழுதிய புலவர் குழந்தையை திராவிட அறிஞர் மறந்தது எப்படி ..? ஒருவேளை  ஊழல் வழக்கில் சிக்குண்டு சட்டென்று தோன்றி இருக்கிற தயாளு அம்மாளுக்கு ஏற்பட்டுள்ள “  அல்சீமர்        “  இவருக்கும் தாவி விட்டதா.. திராவிடத்தலைவர் ஆட்சியில் தானே இராவண காவியம் தடையே நீக்கப்பட்டது. ..? . சுப.வீ இதிகாசப் பாத்திரமாக விளிக்கும் இராவணனின் புகழ்பாடும் நூலை …உண்மையாகவே இராவணனை  இதிகாச பாத்திரமாக கருதித்தான் திமுக ஆட்சியில் தடை நீக்கப்பட்டதா….? தென் திசை பார்க்கிறேன் என இராவணனை புகழ்ந்து பாடினாரே பாவேந்தர்..? அவரது வார்த்தைகள் பொய்யா…?
வள்ளுவர் ஒரு வரலாற்று பாத்திரமாம். சரி. வள்ளுவருக்கு வானை முட்ட சிலை எழுப்பியவர்கள் வள்ளுவரை போற்றுபவர்களை,வள்ளுவத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்பவர்களை  தூற்றுவதன் பித்தலாட்ட,பிழைப்புவாத அரசியல் புரிகிறதா…?.
முருகனை வழிபடும் இவர்கள் மாடன்,சுடலை மாடன்,பன்றி மாடன், அய்யனார் போன்றவர்களை வணங்குவார்கள். ஆண்டு முழுவதும் இதே வேலையை செய்து கொண்டு இருப்பார்களா என்கிற கேள்வியின் தொனி எங்களுக்கு புரியாமல் இல்லை  சுப.வீ அவர்களே..
உங்களுக்கு சாய்பாபாவினை தொழுவதிலும் ,பிரச்சாரத்திற்காக கிளம்பும் கருணாநிதிக்கு தயாளு அம்மாள் ஆரத்தி எடுக்கும் காட்சியை கண்டு மகிழ்வதிலும் ,காலம் முழுவதும் மஞ்சள் துண்டிற்கு கழுத்தை காவு கொடுப்பதிலும் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் மாடன்,மாரி,வீரன்,அய்யனார், கருப்பு, என நீளுகிற எங்கள் முன்னோர்களை நாங்கள் போற்றி வணங்குதலில், எம் இனப் பெருமை அடைவதில் உங்களுக்கு சிக்கல் இருக்கிறது. அது நீங்கள் தொழுது வரும் திராவிட பிழைப்பிற்கும், கோபாலபுரத்து செஞ்சோற்று கடனுக்கும் , அறிவாலயத்தின் அறிவீனங்களுக்கும்  எதிராக இருக்கிறது.
ஆண்டு முழுவதும் இதை செய்ய போகிறார்களா என்று ஒரு கேள்வி வேறு. செய்து விட்டு போகிறோம். உங்களுகென்ன சிக்கல் … ஆந்திர –திராவிட பாலாஜிக்கும், மலையாள –திராவிட அய்யப்பனுக்கும் வருமானம் போய்விடும் என்கிற பயமா… வீரத்தமிழர் முன்னணி மாடனையும்,அய்யனாரையும்,வீரனையும்,காளியையும், மாரியையும், கருப்பினையும்,காத்தனையும் இன்னும் முன்னோர்களாக வாழ்ந்த சிறு தெய்வங்களையும்,எம் இனத்திற்காக உழைத்த பெரியோர்களையும்,மாவீரர்களையும்  வணங்குவதில் போற்றுவதில் திராவிட இயக்கத்து தமிழருக்கு என்ன சிக்கல்…திராவிட இயக்கத்து தெலுங்கருக்கு தானே வர வேண்டும் விக்கல்..?
பழனியில் பார்ப்பனர்களாம். முருகன் சிலைக்கு அவர்கள் தான் பூசை செய்கிறார்களாம். இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை சுப.வீ…?  தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிற திராவிட கட்சிகளின் ஆட்சியில் பழனியில் இருந்து பார்ப்பனர்களை துரத்தி இருக்கவேண்டியதானே. ..உங்கள் தலைவரே 5 முறை ஆண்டவர்தானே… அப்போதெல்லாம் இதற்காக என்ன கிழித்தீர்கள் என்பதை விலாவாரியாக சொல்ல இயலுமா…? பழனி முருகனின் தங்க வேலை திருடியது யார் என்று அடித்துக் கொண்டதை தவிர  திராவிட கட்சிகள் என்னவற்றை கிழித்தன என்பதை முழிக்காமல் சொல்ல இயலுமா சுப.வீ…? ..வந்தேறிய தெலுங்கு திராவிட திருமலை நாயக்கர் காலத்தில் தானே எங்களை எம் பாட்டன் கோவிலில் இருந்து துரத்தி…பார்ப்பனர்களை உட்புகுத்தினான்..நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளீர்களே..உங்கள் கட்டுரையில்… முதுகில் ஆபிரேசன் என மல்லாக்க படுத்திருந்த உங்கள் தமிழினத்தலைவர்  மீண்டும் பழனியின் பூசை உரிமையை தமிழர்களுக்கே மீட்டு அளிக்க ஒருக்களித்தாவது படுத்தாரா..
”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே “.
என குறுந்தொகை பாடலை பற்றி திருவிளையாடற் புராணத்தில் வருகிற குறிப்புகளை சுப.வீயின்
மஞ்சள் (துண்டு) காமாலை கண்களுக்கு புலப்படாமல் போகலாம். இறையனார் என்னும் புலவரைக் கடவுள்-சிவபெருமான் என்று ஆக்கி, அரசன் அவையில் பரிசு பெறத் தருமி என்பவனுக்கு இப்பாடலைச் சிவபெருமான் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையாக்கித் திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது.  சங்கப்பாடல்களும், பழந்தமிழர் இலக்கியங்களும் எண்ணற்ற காட்சிகளை விவரிக்கின்றன. அவற்றில் புனைவுகள் இருக்கலாம். ஆனால் இருப்பவை எல்லாம் புனைவுகள் ஆகா.
செவி வழிக்கதையாக நம்மில் உலவும் பிள்ளையார்-முருகன் –மாம்பழக்கதையே மிகச்சிறந்த உதாரணம். நேர்மையாக வாழ்ந்த தமிழன்  கள்ளத்தன ஆரியனிடம் ஏமாந்துப் போனான் என்பது தான் முருகன் –பிள்ளையார் மாம்பழக்கதை நிறுவ விரும்பும் குறியீடு . இக்குறியீடுதான் தமிழர் இறையாண்மை கோரிய முருகனின் கதையாக விரிகிறது.  எனக்கென ஒரு நாடு, எனக்கென ஒரு கொடி,எனக்கென ஒரு குடி என அறிவித்து ஆரிய பிள்ளையாருக்கு எதிராக நின்று தனித்த முருகனின் கதை சுட்டும் தமிழர் இறையாண்மை, கருணாநிதியின் இறையாண்மையில் தன்னை தொலைத்திருக்கிற சுப.வீ அறியாதுதான்.  அதைத்தான் எம் அண்ணன் சீமான் சுட்டிக்காட்டி பேசினார்.
திமுக வில்  வீரத்திமுக முன்னணி இல்லையாம். சாய்பாபா காலிலும், மயிலாப்பூர் கோவில்களிலும் சரிந்து கிடக்கும் தலைவரின் குடும்பத்தை பற்றி பேசக் கூடாதாம். அது தனி மனித நம்பிக்கையாம்.  ஜால்ரா அடிக்கலாம் சுப.வீ. அதுவும் ஒரு பிழைப்பு. ஆனால் கால்ரா வந்த பிறகும் கழிவது கூட தெரியாமல் அடிக்கிறீர்களே… அதுதான் எங்களுக்கு மலைப்பு.
இந்துத்துவா என்கிற பேராபத்து சூழ்ந்திருக்கிற இக்காலத்தில் தமிழரின் வழிபாட்டு மரபுகளை மீட்டெடுக்க வேண்டிய தேவை நேர்ந்திருக்கிறது . பிள்ளையார் ஊர்வலம் என்கிற பெயரில் 20 வயதிற்குட்பட்ட தமிழின இளைஞர்கள் கத்திக்கொண்டு பள்ளிவாசலை கடக்கும் போது நமக்குள் பதட்டம் ஏற்படுகிறது. இந்து என்பது தமிழரின் மதமல்ல என உரக்க கூவ வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். நான் இந்துவல்ல… நான் கிருத்துவன் அல்ல..நான் முஸ்லீம் அல்ல… இவைகள் எல்லாம் எம் மீது தொற்றியவை. ஆனால் காலங்காலமாய் நான் தமிழன் என அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  சாதியாய் பிரிந்து நிற்கும் தமிழினத்தை ஓர் ஒர்மைக்குள் திரட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மக்கள் கூடுகிற கோவில்களை பார்ப்பனர்கள் கரங்களிலும், அரசியலையும்,அதிகாரத்தினையும் திராவிடர் கரங்களிலும் கொடுத்து விட்டு எப்போதும் தேர் இழுக்கும் கூட்டமாக தமிழ்த்தேசிய இனம் நகர முடியாது என்கிற நிர்பந்தம் எங்களுக்குள் பிறந்து விட்டது. எமது வாழ்வில்,எமது மொழியில்,எமது பண்பாட்டில் சேர்ந்திருக்கிற ஆரிய-இந்துத்துவ கசடுகளை திராவிடம் போலவே தங்க வைத்து அதில் பிழைக்கிற வாழ்க்கையை எம்மால் அனுமதிக்க இயலாது.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி, அவருக்கு பிறகு அவருடைய மகன் என வாழையடி வாழையாக கோபாலபுரத்து சேவகனாக நிற்பதில்..உருளுவதில் சுப.வீக்கு வேண்டுமானால் சங்கடங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மானமுள்ள எவருக்கும் இது உறுத்துத்தான் செய்யும். தமிழர்கள் தனது வரலாற்று பாதையில் அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் நகர்வு திராவிடர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த தான் செய்யும் . அதை தான் சிம்ரன் ஜித் சிங் மான் அறிவுறுத்தினார்.அம்பேத்காரும் வழிகாட்டினார், நாங்கள் செல்கிறோம். இது சுப.வீ வலிக்கிறது. வலிக்கும். வலித்தே ஆக வேண்டும்
நாங்கள் நன்றாக அறிவோம். பொடா வழக்கில் சுப.வீயை அப்போதைய ஜெ.அரசு கைது செய்வதற்கு முன்னால் இருந்த சுப.வீயை நாங்கள் நன்றாக அறிவோம். இன்று கருணாநிதியின் கால் கட்டை விரலாக அசைகிற நீங்கள்…அன்று இதே கருணாநிதியை என்னென்ன
வார்த்தைகளில் வசவி தூற்றீனர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.
50 ஆண்டுகளாய் உங்கள் திராவிட பிழைப்பு வாத  அரசியல் செய்யதா இந்து மத இழிவுகளில் இருந்தும், சாதீய சகதிகளில் இருந்தும் தமிழினத்தை மீட்டு எடுக்கிற பண்பாட்டு மீட்சிப்பணியை எளிய இளைஞர்கள் முன்னெடுப்பதை வயிற்றெரிச்சல் தாங்காமல்…வாங்கியதற்கும் அதிகமாக கூவுகின்ற சுப.வீயை பார்த்தால் ”எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்” என்கிற திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
ஒருமுறை சீமான் தன்னை கொல்ல முயற்சிப்பதாக சுப.வீ பிதற்றிய போது , ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவரை நான் ஏன் கொல்ல வேண்டும் என கேட்ட சீமானின் கேள்வி இன்னமும் ஈரம் காயாமல் தான் இருக்கிறது.
பண்பாட்டு புரட்சியில் தமிழர்களுக்கு மொட்டை போடுவதற்காகதான் வீரத்தமிழர் முன்னணி உருவாகி உள்ளதோ என கேள்வி எழுப்பும் சுப.வீ அவர்களே.. ” திராவிட பிழைப்பு வாதத்திற்கு பலியாகி எங்களுக்கு நாங்களே மொட்டை போட்டு கொண்ட காலம் மலையேறி விட்டது. அவசரப்படாதீர்கள் … முதலில் ஆரியத்திற்கு பிறகு திராவிடத்திற்கு…”
 இந்த தமிழினம் தனது வரலாற்றுப் பாதையில்  கோட்டைக்கு செல்ல முயலுகிற, பெரும் படையாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்றும் தன்னெழுச்சி முயற்சியை கைவிட்டு விட்டு ..கருணாநிதிக்கும், அவரது குடும்பத்திற்கும், அவரது வழித்தோன்றல்களுக்கும் காவடித் தூக்கினால் சுப.வீ நிம்மதியாக உறங்குவார் தான்.,
ஆனால் அதை நாங்கள் அனுமதியோம்.
துரோகமிழைத்து..எங்களை அழித்து முடித்து..எம் தாயக கனவினை பறித்துப் போட்டு..எங்கள் உதிர பொட்டலங்களை பூட்ஸ் காலால் மிதித்து… எம்மக்களை ..குழந்தைகளை,எம் பெண்களை,எம் நிலத்தை,எம் களத்தை  அழித்து  குதறிப் போட்ட கும்பல்களுக்கு வீபிசண வேலை பார்க்கும் சுப.வீக்கள் எந்நாளும் இனி நிம்மதியாய் உறங்க கூடாது.
இராவணனின் பேரன்கள் விட மாட்டோம்.

மெட்ராஸ் – பெருமிதங்களுக்கு எதிரான கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்

madras-tamil-movie-stills-00-002-658x380

சமீப காலமாக தமிழ்த்திரை வித்தியாசமான முயற்சிகளை தரிசித்து வருகிறது. கோடிக்கணக்கான பண முதலீட்டில் மாபெரும் கதாநாயகர்கள் –கதாநாயகிகள் நடிக்க, மிகப்பெரிய தொழிற்நுட்ப மேதைகள் பணியாற்றி, அட்டகாசமான விளம்பரங்களுடன் மின்னிக் கொண்டிருந்த தமிழ்த்திரையின் இலக்கணத்தை சமீப கால இயக்குனர்கள் மாற்றி எழுத தொடங்கி இருக்கிறார்கள். சராசரிக்கும் சற்று கீழேயே இரட்டை அர்த்தம்,பொறுக்கி கதாநாயகன் என அரைத்துக் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூட கதை திரைக்கதை வசனம் இயக்கம் என புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு மூலம் ’அட’ போட வைக்கிறார். ஜிகர்தண்டா என்கிற படத்தின் திரைக்கதை உத்தியை குறித்து பார்வையாளர்கள் பரவசம் கொள்கிறார்கள். சூது கவ்வும் மாபெரும் வெற்றியடைகிறது. அறிமுகமற்ற நட்சத்திரங்கள் நடித்த யாமிருக்க பயமேன் திரையரங்குகளை நிறைக்கிறது. இப்படிப்பட்ட பல நம்பிக்கைத் தரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக வெளிவந்து நம்மை அசத்திப் போடுகிறது அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்.

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் அவ்வளவாக என்னை கவரவில்லை. அப்படத்தில் நான் பார்த்த வியந்த விஷயம் அப்படத்தின் எளிமை. அதுவே அப்படத்தின் வலிமையாக மாறி ஒரு வெகுசன திரைப்பட காட்சியாளனை திருப்திப் படுத்த மின்னுகிற அரங்கங்களும், ஆடுகின்ற ஸ்டார்களும் தேவை இல்லை என அப்படம் நிருபித்தது. முதல் படத்தில் வெற்றியடைந்த இயக்குனர் எதிர்கொள்கிற ஆகப்பெரும் சவால் தனது 2 ஆம் படத்திலும் சற்று குறையாத மரியாதைக்குரிய ஒரு வெற்றியை சம்பாதிப்பதே.. ஆனால் பல இயக்குனர்கள் இந்த சவாலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தவர்களே.. ஆனால் ரஞ்சித் இந்த சவாலில் மகத்தான வெற்றி அடைந்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்த்திரையின் வழக்கமான பண்பாட்டு அம்சங்களை கலைத்துப் போட்டு நிகழ்கால அரசியலின் அசல் முகத்தினை அப்படியே ரா வாக காட்டியிருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகன் கார்த்தி என்பது மிகை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரும் நடித்திருக்கிறார்.  இதுதான் இப்படத்தின் முக்கிய அம்சம்.  வழக்கமான கதாநாயக பிம்பத்தையே.. நண்பனாக வரும் அன்புவின் கதாபாத்திரம் மூலம் சிதைத்திருக்கிற இயக்குனர் ரஞ்சித் பாராட்டத்தக்கவர். வட சென்னையின் ஒரு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிதான் கதைக்களமாக விரிகிறது. சென்னையின் பூர்வீகக் குடிமக்களான ஆதித்தமிழர்களை கூவம் கரையோர வாசிகளாக்கி, வந்தவன்,போனவன் எல்லாம் மாட மாளிகை கூட கோபுரங்களில் வசித்து வாழ்வாங்கு வாழ்கிற வரலாற்றினை நாம் அறிவோம். அப்படி கூவம் கரையோரமும் அவர்களுக்கு சொந்தமானதில்லை எனவும், அவர்கள் பெரு முதலாளித்துவ-உலகமயமாக்கல் வாழ்வில் கறைகளாக –உறுத்தல்களாக விளங்குகிறார்கள் என்பதனால் சொந்த மண்ணை விட்டு வெளியேற்றி அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைத்துப்போட்ட அவலம் தான் சென்னைக்கு வெளியே,நகர்புறத்திற்கு அப்பால் நாம் காணுகிற குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகள். தமிழில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு..தாழ்த்தப்பட்ட ஆதித்தமிழர்களின் வரலாற்றினை, பண்பாட்டினை இப்படி ரத்தமும் சதையுமாக விவரித்த படைப்புகள் மிகக்குறைவு . தமிழ்த்திரை வெகுகாலமாக தனது மேல் பூசியிருக்கிற ஆதிக்கச்சாதிகளின் பெருமித வண்ணத்தை ஆதித்தமிழனின் வாழ்வியலை கொண்டு கலைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அவ்வகையில் இது மிக முக்கியமான திரைப்படம். ஏற்கனவே பாரதிராஜாவின் என்னுயிர்த்தோழன், துரையின் சோறு,வாட்டாக்குடி இரணியன்,கண் சிவந்தால் மண் சிவக்கும் போன்ற படங்கள் ஆதித்தமிழர்களின் அரசியல் தன்னெழுச்சியை குறிப்பிட்டு திரைமொழி படைத்திருந்தாலும் ..மெட்ராஸ் இத்தகைய முயற்சிகளில் மிகப்பெரிய கவனத்தை பெறுகிறது.

குறியீட்டு தளத்திலும் இத்திரைப்படம் மிகுந்த கவனத்தை பெறுகிறது. கார்த்தி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரிய புத்தகங்கள், வாசிக்கிற தீண்டப்படாத வசந்தம், கலையரசியின் அப்பாவின் உடை,உருவ தோற்றம், படத்தின் இறுதியில் கார்த்தி வகுப்பெடும் காட்சியில் தென்படும் அம்பேத்கார்,அயோத்தி தாசர் படங்கள்,பூர்வீக குடிமக்களின் கால்பந்து மீதான ஆர்வம்,  திருமண வீட்டில் வெகு சாதாரண சண்டையும்,சமாதானமும், ஆயா உச்சரிக்கும் கீரிப்பிள்ளை பரம்பரை என்கிற வர்ணனையும் ஆதித்தமிழர்களின் அசல் வாழ்க்கையை குறீயிடுகளாக காட்டுவதில் வெற்றியடைகின்றன.

வடசென்னை அடுக்கக்குடியிருப்பில் இருக்கிற ஒரு சுவற்றில் வரையப்பட்ட ஒவியம் –அதனை ஒட்டிய அரசியல், போட்டி,சூழ்ச்சி,துரோகம், காதல் என பல்வேறு அலைவரிசைகளில் பயணம் செய்து இறுதியாக அரசியல் கல்வியை ஆகப் பெரும் தீர்வாக முன்வைக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அண்ணல் அம்பேத்கர் படம் பின்னால் இருக்க ஒரு கதாநாயகன் சிறு பிள்ளைகளுக்கு அரசியல் கல்வி போதிப்பது போன்ற உச்சக்காட்சி வேறு ஏதாவது தமிழ்த்திரைப்படத்தில் இருக்கிறதா என்று சிந்திக்க வைப்பதில் இருந்தே ரஞ்சித் வெற்றி பெறுவது உறுதியாகிறது. சிலிர்க்க வைக்கும் அந்த உச்சக்காட்சிக்கான நியாயத்தை தனது திரைக்கதையில் திரட்டி இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தின் திறமை பாராட்டத்தக்கது. மனித வரலாற்றில் மாபெரும் தீங்காக, அழுக்காக விளைந்திருக்கும் தீண்டாமையை எதிர்த்து போராடிய.., கற்பி, ஒன்று சேர், போராடு என போதித்த புரட்சியாளரின் வாழ்க்கை வரலாற்றினை பேசுகிற திரைப்படம் கூட இன்னும் திரை தீண்டப்படாமல் இருட்டு அறைகளில் முடங்கி கிடப்பது நாமெல்லாம் நாகரீகச் சமூகத்தில் தான் வாழ்கிறோமா என்று நமது மனசாட்சியை உலுக்கிக் கொள்கிறோம். இச்சூழலில் தான் மெட்ராஸ் பேசுகிற ஆதித்தமிழர்களின் அரசியல் மிக முக்கியமானதாக நாம் கருத வேண்டியுள்ளது.

தமிழ் தமிழ் என பேசுறான் ஆனா கிட்டப் போனா சாதி,மதம் பாத்து அரிவாள தூக்கிடுறானுக என போற போக்கில் தமிழ்த்தேசியத்தின் மீதான தனது விமர்சனத்தை முன் வைக்கிறார் இயக்குனர். ஒரு தமிழ்த்தேசியனாக … தர்மபுரியில் எரிந்த குடிசைகளின் ஒளியில்..பரமக்குடியில் வெடித்த தோட்டாக்களின் ஒலியில்.. இந்த விமர்சனத்தை நேர்மையாக எதிர்க் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.. ஆனால் இதற்கான..இந்த சாதி ஏற்றத்தாழ்விற்கான வேறுபாட்டினை களையும் அரசியலைப் பற்றி பேசத்தான் உதடுகள் இல்லை. தமிழ்ச் சமூகத்தின் உட்சாதி பகை முரண்களை களைவதற்கான ஓர்மைப் புள்ளிகளை தேடிச் செல்லும் பயணம் தான் தமிழ்த்தேசியமாக அமைய வேண்டும் என்கிற நம்பிக்கை என் போன்ற தமிழ்த்தேசியர்களுக்கு உண்டு.

உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ வாழ்வியல் சூழலில் சென்னை மண்ணின் பூர்வீகக் குடிமக்களின் பாடுகளை,காதலை,அரசியலைப் பற்றி பேசுகிற மெட்ராஸ் திரைப்படம் தமிழ்த் திரையின் ஆதித்தமிழர்களின் தன்னெழுச்சி முயற்சியாக நாம் பார்க்கலாம். அதனாலேயே அப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னைத்தமிழ் பேசும் கதாநாயகி,மனநிலை குன்றிய நேர்மை மனிதன் ஜானி, உணர்வும்,அன்பும்,நட்பும் கொப்புளிக்கிற அன்பு, சாலையில் நாம் கடக்கிற போது மிக சாதாரணமாக சந்திக்க முடிகிற காளி ,அரசியல் சூதாட்டங்களில் பகடை காய்களாக மாற்றி ஆடப் படும் விளிம்பு நிலை மக்கள்..என ஒவ்வொரு காட்சியும் இயல்பின் அழகில் மனதை அள்ளுகிறது. எத்தனையோ பிம்பங்களை, ஆளுமைகளை,அடையாளங்களை கட்டியெழுப்பி இருக்கிற, நிறுவி இருக்கிற வலிமையான கருவியான தமிழ் சினிமாவின் வரலாற்றில் விளிம்பு நிலை மக்களுக்கான..வாழ்வியலை,அழகியலை பதிவு செய்திருக்கும் இயக்குனர் ரஞ்சித்தின் முயற்சியும் ஆதிக்கங்களுக்கு எதிரான ஒரு குரலே.. அந்த வகையில் இது வரலாற்று,பண்பாட்டு பெருமிதங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிற தமிழ்ச் சமூகத்தை மீள் பரிசீலனை செய்கிற பண்பாட்டு கலகமாக இத்திரைப்படத்தை நாம் கொள்ளலாம்.

இதுவரை தமிழ்த்திரை கட்டி வைத்திருந்த அத்தனை பெருமிதங்களின் மீதும் தனது திரைமொழி மூலம் தாக்குதல் நடத்தி நம்மை கவனிக்கச்செய்கிறார் இயக்குனர் ரஞ்சித் . தமிழ்நிலத்தில் வெகுகாலமாக ஆட்சி செய்து செய்துவரும் ..வர்ணாசிரமம் கட்டமைத்த ஆதிக்க இடைநிலை சாதிக்குழுக்களின் ஊதுகுழலாய் ..அவற்றின் பெருமிதங்களை போற்றிப் பாடும் பனுவலாய் மின்னிய தமிழ்த்திரை அழுக்கடைந்த அடுக்கங்களிலும், மழைச் சேற்றிலும், எம் மக்களின் பாமர மொழியிலும் புரளத் தொடங்கியிருப்பதே புரட்சிக்கர நடவடிக்கைத்தான்.

எது எப்படியோ இந்தியப் பெருநிலத்தில் தோன்றிய மாபெரும் புரட்சியாளனின் சிந்தனையை படத்தின் முடிவாக கொள்கிற..அடைகிற.. மெட்ராஸ் திரைப்படத்தின் பார்வையாளன் பெருமிதம் கொள்ளத்தக்கவனே…

-மணி செந்தில்

Page 6 of 11

Powered by WordPress & Theme by Anders Norén