பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: இலக்கியம் Page 3 of 4

ஜெயமோகனின் தோசை.

பிரச்சனை என்னவென்றால்..

அந்தக் கதையை முழுதாகப் படித்து பாருங்கள். தினந்தோறும் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு பிரபல எழுத்தாளர் ஒருவர் தாக்கப்படுகிறார்.

இதில் மகிழவோ சிரிக்கவோ ஒன்றுமில்லை என்றாலும் கூட..

இதுதான் தமிழ் சமூக மனநிலையின் நிலை, தமிழ் சமூகமே சாடிஸ்ட்.. என்றெல்லாம் கொதிப்பதற்கும், குதிப்பதற்கும் இதில் ஒன்றுமில்லை.

ஆனால் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன.

ஆசானுக்கும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் கூடி வாழும் சமூகத்தை கவனிக்க தவிர்த்துவிட்டு நீங்கள் மயிலாசனத்தில் சிம்மாசனம் சூடி அமர்ந்து இருந்தீர்களேயானால் நீங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் அது பொது சமூகத்திற்கு தெரியாமல் விலக்கப்படுவீர்கள்.

நீங்களும் சாலைக்கு வர வேண்டும் ஆசானே… எவன் கூரை பற்றி எரிந்தால் என்ன.. இந்த நிலத்தில் மீத்தேனோ ஹைட்ரோ கார்பனோ எடுக்கப்பட்டால் என்ன.. நமக்குத் தொழில் எழுத்து. அந்த இருக்கையை விட்டு நான் எழ மாட்டேன் என்று இருந்தால்..நீங்கள் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போது.. உங்களுக்கு வேண்டியவர்களை தவிர உச்சுக் கொட்ட யாரும் இருக்க மாட்டார்கள்.

எழுத்தாளன் தனியானவன் அல்ல. இந்தப் பெரு உலகத்தின் அங்கம். மற்ற எல்லாரையும் விட இந்த சமூகத்தை சரியாக அவதானிப்பதற்கும் , தவறானவற்றை எதிர்த்து நிற்பதற்கு மான கூடுதல் பொறுப்பு நிலை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை எழுத்தாளர்கள் முதலில் நம்ப வேண்டும். நான் மகாபாரதம் எழுதுவேன். ஆனால் பக்கத்து தெருவில் நடக்கும் அநியாயத்தை எட்டி பார்க்கமாட்டேன் என்றால் சூழ்நிலை பிசகும் தருணமொன்றில் நம்மை எட்டிப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள் ‌.

தோசை காரனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வருகிறார்கள் என்றெல்லாம் ஆவேச படுகிறீர்கள். தன்னிடம் வருகின்ற எந்த மனிதனுக்கும் அவன் பாதிப்பிற்காக வழக்கறிஞர்கள் வரத்தான் செய்வார்கள். அது அவர்களது தொழில். அதே தோசை காரன் காயம்பட்டால் மருத்துவர்கள் மருத்துவம் செய்யத்தான் செய்வார்கள்.
அது அவர்களது பணி.
அவனுக்காக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்று நீங்கள் பதறுவதில் எவ்வித நியாயமும் இல்லை ஆசானே…
அவரவர்களுக்கு வேண்டியவர்கள் அந்தந்த சமயங்களில் வரத்தான் செய்வார்கள்.

பாதிக்கப்பட்ட நேரத்தில் சொல்லிக் காட்டக் கூடாது தான்.. ஆனாலும் நீங்கள் பதறுவதால் சொல்ல வேண்டி இருக்கிறது.

நீங்கள் முன்வைக்கிற எதற்கும் மாற்றாக இருக்கிற எவரையும் உங்கள் வாழ் காலத்தில் நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள். அவர்களை இழிவுபடுத்தி அவதூறு பேசி இருக்கிறீர்கள். தமிழர் மீது, தமிழ் நிலத்தின் மீது வேட்டையாடும் அனைத்து வல்லாதிக்க தேசியங்களின் மீதும் உங்களது கருணை உங்கள் எழுத்துக்கள் மூலம் சொட்டிக்கொண்டே இருக்கிறது. எதைப் பற்றியும் உங்களுக்கு கவலை இல்லை. ஒரு கௌரி லங்கேஷ் போலவோ, ஒரு கிரிஷ் கர்னாட் போலவோ உங்களை இருக்க சொல்லவில்லை. ஒரு சாதாரண மனிதனாக உங்களை சுற்றியுள்ளவற்றை உங்களது பெருமித முகமூடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்க்கச் சொல்கிறேன். அவ்வளவே.

எதையும் கவனிக்காமல் பார்க்காமல் தாங்கள் வந்தது தான் ஓவியம், சித்தரித்தது தான் எழுத்து என்று கிரீடம் சூட்டிக் கொண்டு இருந்தால்… நம் கருத்துகளுக்கு மாற்றாக எழுதும் எவனும் அயோக்கியனே என்று தனக்குத்தானே தராசு பூட்டி எடை பார்த்துக் கொண்டிருந்தால்… நாம் தனித்து தான் நிற்போம்.

எனவேதான் தோசை காரனுக்கு வருகின்ற நாலு பேர் கூட உங்களுக்கு வரவில்லை. உங்களை ஆதரித்து எழுதுகிற நண்பர்கள் கூட சென்ற காலங்களில் நீங்கள் எழுதியது குறித்து தாங்கள் பொருட்படுத்தவில்லை என்ற பெருந்தன்மை மனோபாவத்தை வெளிப்படுத்தவே ஆதரிக்கிறார்கள்.
அது போன்ற எழுத்துக்கள் ‘ஆயிரம் முரண்கள்’ இருந்தாலும் என்பது போன்ற பெருந்தன்மை பாவனைகள். அந்த அரிதார எழுத்துக்கள் சமூகத்தின் பொது வெளிப்பாடு அல்ல.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எழுத்தாளர் என்பதாலோ தோசை மாவு விற்பவர் என்பதாலோ ‌ நடைபெற்று முடிந்த இருக்கின்ற சம்பவத்தின் மீதான கரிசனத்தை கோரி நிற்கக் கூடாது.

உண்மை விசாரணை நடைபெற்று தவறு செய்தவர் தண்டிக்கப்படட்டும்.

மற்றபடி ஆசான் ஜெயமோகன் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது ‌. அவர் யார் என்றே தெரியாமல் தோசை மாவு விற்பவர் அவரை அணுகியது என்பது பரவலாக்கப்படாத தமிழ் அறிவுலகம் (!) பற்றி சிந்திக்க வைப்பதால் அது கவலை அளிக்கிறது.

மணி செந்தில்.

மானுட ஜீவித வரலாறு

ஒரு காலத்தில் காதுகளே இல்லாத மனிதர்கள் இருந்தார்கள்.

காதுகளே இல்லாத மனித வாழ்க்கையில் சொற்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ இடமில்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் இல்லை. அப்படிப் பேசிக் கொண்டால் கூட அவைகளுக்கு பொருளும் இல்லை.

சரி.. காதுகள் இல்லாதது தான் பிரச்சனை. காதுகளைப் பொருத்துவோம். இனியாவது மனித வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்போம் என கடவுள் சிந்தித்து மனிதர்களுக்கு காதுகளை பொருத்தினான்.

அப்போதும் அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அர்த்தம் இல்லாததைப் பேசிக்கொண்டு எவ்வித உயிர்ப்பும் இல்லாத ஓசைகளை கேட்டுக்கொண்டும் வேரற்ற பெருமரம் போல அவர்கள் எவ்வித பிடிப்புமற்று இருந்தார்கள்.

இதைக் கண்ட கடவுள் மீண்டும் சிந்தித்தான்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாத சாரமற்ற மானுட வாழ்க்கையை கண்ட கடவுள் அர்த்தமுள்ளத்தாக்க சிந்தித்தான்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

பிறகு தானே ஒரு மனிதனாக இந்த மண்ணில் பிறந்தான்.

தனக்கு இளையராஜா எனப் பெயர் சூட்டிக் கொண்டு..

அவனே அர்த்தமற்று திரிந்த சொற்களுக்கு சிறகுகள் முளைக்க வைத்தான். காதுகளில் பூ உரசும் உணர்வினை மனிதர்கள் அடையத் தொடங்கினார்கள்.

அந்த அதிமனிதன்..

விசித்திரமான ஒலிக்கலவை மூலம்
மனிதனை அமைதிப் படுத்த தொடங்கினான்.

பல்வேறு ஓசைகளுக்கு
உயிரூட்டி உணர்ச்சிகளை உட்புகுத்தினான்.

காதுகளில் அருவிகள் பொழிந்தன.

வெவ்வேறு இசைக்கருவிகளின் விசித்திர கலவையில் பொங்கி எழுந்த இசைப் பிரவாகம் அதுவரை இல்லாத மானுட உணர்ச்சிகளை உண்டாக்கியது.

எங்கிருந்தோ கசியும் அந்த இசை துளியில் மனிதனின் கண்கள் கலங்க தொடங்கின. மனிதர்கள் அழுதார்கள்.
மென்மையாக சிரிக்க பழகினார்கள்.
தனிமையில் சிந்தித்தார்கள். காதலித்தார்கள். கலவி கொண்டார்கள்.
குழந்தைகள் தூங்கினார்கள். காதலில் தோல்வியுற்று அமைதியற்று அலைந்த மனங்கள் சிறு அழுகையுடன் சாந்தமாயின. பிரிவு மகிழ்ச்சி துக்கம் காதல் காமம் துரோகம் என பல்வேறு உணர்ச்சிகள் அந்த அதி மனிதனின் வெவ்வேறு இசையாழங்களால் உணரப்பட்டது. தாய் மண்ணை விட்டு பிரிந்து விதியின் சூட்சம கோடுகளால் உலகப் பரப்பில் ஆங்காங்கே துப்பப்பட்ட ஒரு இனத்தின் மனிதர்கள் அந்த குரலை கேட்கும் போதெல்லாம் தன் தாயின் கருவறைக்கு திரும்புவது போல ஆறுதல் கொண்டார்கள்.

தொலைதூரப் பாலையில் கொளுத்தும் வெயிலில்.. பிழைப்பின் நிமித்தமாய் அசைவற்று அமர்ந்திருக்கும் போது.. காதுகளில் நுழையும் அந்த அந்த தேவமனிதனின் இசை ஒரே நொடிக்குள் தன் சொந்த ஊரின் ஏரிக்கரை காற்றையும் அத்தை மகளின் வாசனையையும் தாய் மண்ணின் ஈரத்தையும் கொண்டு வந்து தன் ஆன்மாவிற்குள் சேர்த்ததை கண்டு அவர்கள் அதிசயித்தார்கள்.

அது கட்டிடக் காடாக இருந்தால் என்ன.. கட்டாந்தரையாக இருந்தால் என்ன.. உயர்ந்து நிற்கும் அரண்மனையாக இருந்தால் என்ன.. சுட்டெரிக்கும் சுடுகாடாக இருந்தால் என்ன.. பேதமற்று அந்த இசைத்துணுக்குகள் காற்றில் கலந்து பரவின.

அந்த மானுடர்கள் முதன்முதலாக வெறும் ஒலிகளால் பசியாற அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

தனித்தே பிறந்த மனிதர்கள் உயிர் உருகும் அந்த இசையை பெரும் துணையாக அடைந்தார்கள். தனியே வாழவும் தனியே நடக்கவும் இரவுகளில் தனியே படுக்கவும் காற்றில் மிதந்து வந்த அந்த இசைத் துளிகளால் அவர்களுக்கு சாத்தியமானது.

எல்லா இரவுகளிலும் இருட்டு இருந்தது. கூடவே இளையராஜாவும் இருந்தார்.

எனவே வெளிச்சமும் இருந்தது.

இறுதியாக மனிதன்..

அந்த கடவுளின் உன்னத இசையை தனது சுவாச காற்றாக மாற்றும் வித்தையை அவனாகவே கண்டறிந்தான் .

இவ்வாறாகவே இவ்வுலகில் மானுட ஜீவிதம் இந்த நொடி வரை மகத்தானதாக
இருந்து வருகிறது.

கடவுளின் கருணைக்கு இன்று பிறந்தநாள்.

புத்தக நதியில் மிதக்கும் சருகு..

–++++++-++——–++++–+————-_-

“ஒரு புத்தகம் என்பது உங்கள் உள்ளங்கையில் அமர்ந்திருக்கும் தனித்துவமான அற்புதம்.”

–ஸ்டீபன் கிங்

புத்தகங்கள் இல்லாத ஒரு உலகம் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை. உடன்பிறந்தார் யாருமில்லாத பிறப்பு, பிறப்பிலேயே வாய்த்துவிட்ட நோய் தந்த தனிமை, உறக்கமில்லா இரவுகள், பேச துணையற்ற மருத்துவமனை பொழுதுகள் என இயல்பு உலகத்திலிருந்து மாறுபட்ட இன்னொரு உலக வாழ்க்கை என்னுடையது. படுக்கையில் படுத்திருக்கும் என் விழிகள் நிலைகுத்தி கண்டு கொண்டிருக்கின்ற மின்விசிறியை பார்க்க சோரும் போதெல்லாம்..
அருகிலேயே வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரியை என் விழிகள் மேயத் தொடங்கிய நொடிகளில் தான் புத்தகங்களோடு எனக்கு நெருக்கம் உருவாகத் தொடங்கியது.

என் தந்தை தீவிர வாசிப்பாளர். வீட்டிற்கு வருகின்ற என் தந்தையின் நண்பர்களும் தீவிர வாசிப்பாளர்கள். புத்தகங்களை வாசிப்பதும் அவைகளைப் பற்றி உரையாடுவது மான ஒரு சூழல் எப்பொழுதும் என் வீட்டில் நிலவிக் கொண்டே இருந்தது. என் வீட்டிற்கு வருகிற என் தந்தையின் நண்பர்கள் வரும்போதெல்லாம் எனக்கு புத்தகங்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். குறிப்பாக என் தந்தையின் நெருங்கிய நண்பர்களான மறைந்த ஆசிரியர் நெடுவாக்கோட்டை இராஜேந்திரன், பேராசிரியரும் தமிழில் ஆகப்பெரும் நவீனத்துவ கவிஞருமான அபி,பேராசிரியர் அ மார்க்ஸ், மறைந்த பேராசிரியர் முனைவர் சௌ.மதார் மைதீன், எழுத்தாளரும் இயற்பியல் பேராசிரியருமான இராமசுப்பிரமணியன் என பேரறிஞர்கள் கூட்டம் என்னை சுற்றி இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருந்ததால் புத்தகங்கள் மீதான நெருக்கத்தை என்னால் தவிர்க்க முடியாத சூழலை எனது குடும்பம் எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

எனது பெரியப்பா ச. கல்யாணராமன் ஒரு எழுத்தாளர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி புரிந்தாலும் புத்தகப் பையோடு அவர் திரிவதை ஒரு ரசிகனாக உணர்ந்து நேசித்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக ஏங்கியிருக்கிறேன்.

ஆரம்பகாலத்தில் அப்பா எனக்கு வாங்கி கொடுத்த அம்புலிமாமா, பாலமித்ரா கோகுலம், ராணி முத்து காமிக்ஸ்கள் என என் பால்ய கால நண்பர்கள் தான் எனக்கு இன்னொரு உலகத்தை அறிமுகப்படுத்தி கொடுத்தார்கள். இரும்புக்கை மாயாவியும், பறக்கும் குதிரையும், மாய மோதிரமும் , புராண இதிகாச சிறுகதைகளும் என்னை விரல் பிடித்து அக்காலத்து நோய்மை நெருக்கடிகளில் இருந்து மீட்டு வேறு உலகிற்கு அழைத்துச் சென்றார்கள்.

புத்தக வாசிப்பு என்பது ஒரு மாயச் சுழி. நேர,கால, இடத்தை மறக்க வைக்கிற பெரும் போதை. சிறு வயதில் படித்த பல்கேரிய நாட்டு தேவதைக்கதைகளும், அமர் சித்திரா வெளியிட்ட இந்திய மரபு புராணீக கதைகளும், சோவியத் ரஷ்யாவின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட சிறுவர்களுக்கான கதைத்தொகுப்புகளும் எனது ஆரம்பகால வாசிப்பின் திறவுகோல்கள்.

அதேபோல பதின் வயதுகளில் மக்சிம் கார்க்கியின் தாய், தாஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், டால்ஸ்டாய் சிறுகதைகள், ஷேக்ஸ்பியர் கதைகள், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என வாசிப்பு வழக்கம் பெரிய பெரிய கதைகளில் தொற்றத் தொடங்கியது .

அந்த காலத்து தொலைக் காட்சி தொடர்களாக படமாக்கப்பட்ட அகிலனின் சித்திரப்பாவை, கரிப்பு மணிகள் போன்றவைகளை வாசிக்கும்போதுதான் நவீன இலக்கிய மரபு எழுத்துக்கள் மீது ஆர்வம் பிறந்தது. அந்த காலத்தில்தான் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேராசிரியர் கேசவன் ஆகியோர் தீவிர அரசியல் மற்றும் இலக்கிய வகைகளை சார்ந்த நிறப்பிரிகை என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்கள் . அந்த இதழை தொடர்ச்சியாக என்னுடைய தந்தையார் வாங்கி வருவார். அதுதான் எனக்கு மாற்று வகை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய முதல் பெருவழி.

பிறகு கல்லூரிக்காலங்களில் புதுமைப்பித்தன் சிறுகதைகள், கு அழகிரிசாமியின் கதைகள், ‌தி.ஜா வின் மோகமுள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள், வண்ணநிலவன் வண்ணதாசன் கதைகள், நகுலன் அபி கல்யாண்ஜி கவிதைகள், என ரசனை மாறத் தொடங்கிய பிறகு அதுவரை நான் பெரிதும் வியந்து வந்த திராவிட இயக்க வகைமை பிரச்சார எழுத்துக்களாக கலைஞர், வைரமுத்து , கோவி மணிசேகரன், போன்றோரின் இலக்கியங்கள் சற்றே என்னை விட்டு விலகத் தொடங்கின.

பிறகு இரண்டாயிரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட எண்ணற்ற மொழிபெயர்ப்பு அரசியல் புத்தகங்கள் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. சே குவேரா வாழ்வும் மரணமும், மாவோ வாழ்க்கை வரலாறு, அல்ஜீரிய விடுதலைப் போராளி பனான்,ரெஜி
டெப்ரேவின் புரட்சிக்குள் புரட்சி , போன்ற பல நூல்களின் எண்ணற்ற பக்கங்களுக்குள் இரவு பகல் பாராது வீழ்ந்து கிடந்தேன். அண்ணன் அறிவுமதியின் உறவு கிடைத்த பிறகு மேத்தா அப்துல் ரகுமான் இன்குலாப் எழுத்துக்கள் மற்றும் சங்கக் கவிதைகள் ஆகியவை மீதான ஆர்வம் அதிகரித்தது.

இதனிடையே எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நட்பு கிடைத்த பிறகு.. எனது வாசிப்பு பழக்கம் வேறு வடிவத்தில் மாறிப்போனது. உலகத் திரைப்படங்கள், நவீன இலக்கியங்கள் என ஒரு பெரும் உலகத்திற்குள் எஸ்.ரா என் கையை பிடித்து அழைத்துப் போனார்.

இன்றளவும் என் வாசிப்புப் பழக்கத்தை நேர் செய்து என்னை வழி நடத்தும் மூத்தவராக எஸ்.ராதான் இருக்கிறார்.

அரசியலில் எனது தலைமையாக நான் கொண்டுள்ள அண்ணன் சீமானும் மாபெரும் புத்தக வாசிப்பாளர். சிறந்த நூலகம் ஒன்றை அவர் மிகப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். அரசியல் நோக்கில் மட்டுமல்லாமல் அவரது இலக்கிய நூல்கள் சேகரிப்பு மகத்தானது.ஒவ்வொரு முறையும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதை படித்து அடிக் குறிப்பிட்டு அந்த நூல்களைப் பற்றி எங்களிடம் விரிவாகப் பேசுவார் . இன்று காலை கூட எஸ்ரா எழுதி சமீபத்தில் சாகித்திய அகாதமி விருது வாங்கிய சஞ்சாரம் புத்தகப் பிரதி ஒன்று அவசரமாக தனக்கு வேண்டும் என அலைபேசியில் கேட்டார்.

சென்ற புத்தக கண்காட்சி, களம் பதிப்பகம் தொடக்கம் என புத்தகங்கள் சார்ந்து இயங்க தொடங்கி இருப்பது என் வாழ்வின் நிறைவான கணங்கள். சாத்தியப்படுத்தி தந்த அண்ணன் சீமான் அவர்களுக்கும் அருமை மைத்துனர் பாக்கிய ராசன் அவர்களுக்கும் எனது பேரன்பு. நெகழ்ச்சி தழுவல்கள் .

இப்போதும் கூட தமிழில் வெளிவந்துள்ள வேட்டை இலக்கியங்களை தேடித் தேடி வாசித்து வருகிறேன். ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா,குமாயுன் புலிகள் எனத் தொடங்கி ஓநாய் குலச்சின்னம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை படித்து வருகிறேன். ஒரு மிருகத்தை ஒரு மனிதன் எதிர்கொள்கிற அசாத்திய கணங்களை என்னாலும் உணர வைக்க முடிகிற அந்தப் புத்தகங்களால் நடுநிசியில் எனது அறையின் மூலையில் புலியின் பெருமூச்சு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

….

வாழ்வின் ஓட்டத்தில் சறுக்கி விழும் போதெல்லாம் புத்தகங்களே என்னை உணர்ச்சிகளின் புதைகுழியில் இருந்து மீட்கிற மீட்பராக இருந்து வந்திருக்கின்றன. பெரும் தவறுகளிலிருந்து அவை என்னை காப்பாற்றி இருக்கின்றன. குற்ற உணர்விலிருந்து மீட்டெடுத்திருக்கின்றன.
என் தவறுகளை எனக்கு உணர்த்தி இருக்கின்றன. மகத்தான காயங்களில் இருந்து என்னை தேற்றி இருக்கின்றன.ஆற்றுப் படுத்தி இருக்கின்றன.

புத்தகங்கள் இருக்கும் என் நூலக அறைதான் நான் பாதுகாப்பாக உணருகிற என் தாயின் கருவறைக்கு நிகரான இடமாக கருதுகிறேன். மழைக்கால பொழுதுகளில் ஒரு தேனீரும் பிடித்த புத்தகம் கையில் இருக்கின்ற நேரம்தான் என் வாழ்வின் உச்சகட்ட மகிழ்ச்சி பொழுது.

புத்தகங்கள் எனக்கு சிறகுகளை அளிக்கின்றன. கதகதப்பையும் கண்ணீரையும் அளித்து என் விழிகளுக்கு வேறு உலகை தரிசிக்க கற்றுத் தருகின்றன. புத்தகங்களே எனது ஆசிரியர். புத்தகங்களே எனது தோழன் .
ஒரு காதலியின் அருகாமை போல புத்தகங்கள் எப்போதும் என்னை கிறக்கத்திலும் உற்சாகத்திலும் ஒருங்கே நிறுத்தி.. என்னை நானே உணர வைக்கின்றன. ஒரு புது புத்தகத்தின் வாசனை என்பது என்னை உன்மத்தம் கொள்ள செய்கிறது. புத்தகப் பக்கங்களைப் புரட்டும் ஓசையில் இசையின் தாள லயங்களை உணர்ந்திருக்கிறேன்

புத்தகங்கள் என்கின்ற பெரும் நதியின் மீது மிதக்கின்ற சிறு சருகாய் நான் தத்தளிக்கிறேன். அந்த தத்தளிப்பே என் வாழ்வு என நான் உணருகிறேன்.

மணி செந்தில்.
உலக புத்தக நாள் ஏப்-23 /2019

மறைமலை அடிகள் வரலாறு -மணி செந்தில்-தமிழன் டிவி

[youtube]https://www.youtube.com/watch?v=WuoUdf3zPQs[/youtube]

செவ்விந்தியனின் நடனம்- நூல் வாசிப்பு அனுபவ குறிப்புகள் சில.

அண்ணன் மணி செந்தில் அவர்களின் இந்த படைப்பை,
ஆற அமர, உட்கார்ந்து படித்து ரசிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவெழுத அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டேன்.

இப்படைப்பின் மீதான என் எண்ணங்களை மூன்று தலைப்பின் கீழ் பதிகிறேன்.

ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள்:

மிகச்சிறந்த எழுத்தாளுமைகளுக்கே உரிய குணங்கள் “ஆழம் உணர்தல்” மற்றும் “உணர்தலில் ஆழம்”. எந்தொவொரு உணர்வினையும் மதிப்பீடுகளுக்கு இடம் கொடுக்கும் முன் அதை முழுமையாக உள்வாங்கி எழுத்தில் வெளிக்கொணர்தல்.
அண்ணனுக்கு இவ்வரம் இயல்பாகவே வாய்க்கப்பெற்றுள்ளது என்று உறுதியாக நம்புகிறேன்.

அவரது நினைவுகளைக் கொண்டு அடுக்கிருக்கும் ஒவ்வொரு அத்தியாயமும், மென்மையான இசைப் போல நம்மீது படர்ந்து சூள்கிறது. இலக்கிய உலகில் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் பேராளுமைகளை அவர்களின் எளிமையான குணாதியங்களை பதிவு செய்து நம் பக்கத்து வீட்டு நண்பர் போல, நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். இதனால் அந்த மகத்தான மனிதர்களின் எழுத்தின் மீதுள்ள பற்று இன்னும் கூடுகிறது. அவர்களின் படைப்புகளைத் திரும்ப வாசிக்க தூண்டுகிறது.

ஓர் அழகிய சொல்லோவிய உதாரணம்

” பிரபஞ்சனும் அப்படிப்பட்டவர் தான். காற்றாக மாறினாலும், ஊஞ்சல் ஆடவும்.. காபி குடிக்கவும்.. கும்பகோணம் வந்தாலும் வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே காற்று மென்மையாக வீசியது..

ஊஞ்சல் மெல்ல அசையத் தொடங்கி இருந்தது.”

அரசியல் கட்டுரைகள்:

“Ethnic nationalism ” என்ற பூர்வக்குடி மக்களின் தேசிய அரசியல் போராட்டங்கள் பன்னெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் உதிரம் வடியும் தொடர் வரலாறு. (முரண்).

முடிவுப்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வின்போது, ஒரு பார்வையாளராக / பங்கு கொண்டவராக இருந்துக் கொண்டு அவருக்கே உண்டான தனித்துவமான எழுத்து நடையில் நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். இதற்கு அண்ணனின் செவ்விந்திய பூர்வக்குடிகளின் பாடல் மொழிப்பெயர்ப்பு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு
“ஆம்..
நாங்கள் காட்டுமிராண்டிகள்தான்
ஆனால் காடு
எங்களுடையது”

ஆம். நம் தமிழ்தேசிய அரசியலை ஒற்றைக் கட்டுரையில் உருவகித்து விட்டார்.

பொதுக்கட்டுரைகள்:

அண்ணன் , அவரின் பல ரசனைகளை கருப்பொருளாக்கி அதன் கீழ் நினைவலைகளை பதிவு செய்துள்ளார். ஆனால் ஒரு (perfect contextual foundation) , இதற்கான அடி நாதமாய் விளங்குவது அவருக்கு
வாழ்தலில் மீதுள்ள பற்றுதான் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். அதுவே அவருக்கே உரித்தான அவரின் அரசியல் கருத்தாக்கம். இதை ஒவ்வொரு வாசகருக்கும் தன் எழுத்தின் மூலமாக கடத்திவிட எத்தனிக்கிறார். அதில் வெற்றியும் பெருகிறார்.

எனக்கு வாழ்தலுக்கான பற்றுக் குறையும் நேரத்தில் அண்ணனின் எழுத்துக்கள் அரணாய் அரவணைத்து செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கட்சி தளத்திற்கு அப்பாற்பட்டு, உங்கள் இலக்கியத்திற்கு ஒரு தொடர் வாசகியாக என்னை மாற்றிய இந்த படைப்பைப் போல், நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். அதை நானும் கொண்டாடவேண்டும்.

உங்கள் படைப்பைப் பற்றிய என் எண்ணங்களையும் பகிர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்ட அண்ணனுக்கு நன்றிகள் பல.

– சுனந்தா தாமரைச்செல்வன்.

இந்த ஆண்டு நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் என் அன்பு அண்ணன் Mani Senthil எழுதிய செவ்விந்தியனின் நடனம்.

ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது கையில் எடுத்த புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்க வைப்பது. அது என் அண்ணனுக்கு இயல்பாகவே வாய்க்கப்பெற்றது.

தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு உணர்வை தூண்டுகிறது.

குறிப்பாக ஒரு இரவில் எல்லையற்ற விடியல்களில் இளையராஜாவின் சோலை பசுங்கிளியே பாடல் எங்கள் மூவரையும் ஏதோ ஒரு திசையில் இழுத்துக்கொண்டு சென்றதாக அண்ணன் எழுதியிருப்பார் ஆனால் அவருடைய எழுத்தாளுமையால் அங்கே நாளாவதாக நாமும் ஒரு பார்வையாளனாக இடம்பிடித்திருந்தோம்.

செவ்விந்தியனின் நடனத்தில் ஒரு ஆசானாக நமது தோள்களில் கைபோட்டு பல புத்தகங்களையும் பல எழுத்தாளர்களையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்துகொண்டே போகிறார். மோக முள் குறித்து ஏற்க்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் அதை படித்தே தீரவேண்டும் என்ற வெறியை. அண்ணன் மணி செந்தில் ஏற்படுத்திவிட்டார்.

அன்பும் நேசிப்பும் அண்ணா.

-கார்த்திக் கணேசன்.
யமுனாவை நானும் தேடி இருக்கேன்,
தங்கை அனிதாவின் கட்டுரையில் கண்ணீர்கள் நிறைய , 
நிறைய அழகை , நிறைய கேள்விகள் , பெரும் மகிழ்ச்சிகள், நிறைய இருக்கிறது முழுமையாக பின்பு எழுதுகிறேன் .. இபோதைக்கு உன் எழுத்திற்கு அன்பு முத்தங்கள் அண்ணா
நம் கும்பகோண நகரத்தை வைத்து ஒரு நாவல் எழுதுங்கள் தி.ஜாவை போல…..
#LOVE _YOU_ ANNA மனைதை உருக்கும் எழுத்து
நிறைய பணிகள் இருக்கிறது உங்களுக்கு தெரியும் நேரில் பார்த்தீர்கள் , ஒரு முழுமையான கட்டுரை விரைவில் எழுதுகிறேன்

அன்பின் ஆழத்திலிருந்து
– தமிழ் சிலம்பரசன்

அக்காளின் எலும்புகள்.. -யாவருக்குமான கள் பிரதி.

 

எனக்கு முன்னால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் புத்தகம் மெதுவாக அசைகிறது. நான் தலை சாய்த்து படுத்திருந்த மகிழம்பூ மரத்தடியில் பூக்கள் அதிகம் உதிர தொடங்குகின்றன. உச்சி வேளை வெயில் பொழுதில் வயற்க் காட்டில் யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு அசைந்து கொண்டிருந்த அந்தப் புத்தகத்தையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கவிழ்த்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்திலிருந்து அக்காக்கள் சொற்களாக கசிந்துக் கொண்டிருந்தார்கள். கசிந்த சொற்கள் உதிரா முதிர்எலுமிச்சை பழத்தின் வாசனையை காற்றில் பரப்பிக் கொண்டு இருந்தன. என் விழிகளில் நீலம் பாவியதை என்னால் உணர முடிந்தது.
அந்த புத்தகத்தை வாங்கி வந்த நாளில் இருந்து இதே பாடுதான். நள்ளிரவில் வாசித்துவிட்டு உறங்கத் தொடங்கும்போது தலையணைக்கு அருகில் யாரோ ஒரு அக்கா குத்துக்காலிட்டு அழுவது போன்ற உணர்வு. பொழுது சாயும் வேளையில் மாடியில் தன்னந்தனியாக சூரிய மறைவை கண்டு கொண்டிருக்கும் போது பின்னால் இருக்கும் தென்னை மர சலசலப்பில் யாரோ ஒரு அக்கா அணத்துவது போன்ற ஒரு சலசலப்பு.

அந்த நூலில் வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் அக்காக்கள் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். பல அக்காக்கள். வெவ்வேறு கதைகள் வெவ்வேறு சித்திரங்கள். அந்த அக்காக்களை நமது வீடுகளில் வீதிகளில் என எளிதில் சந்தித்து விடலாம். கழுத்தறுக்கப்பட்ட ஏதோவொரு அக்காதான் குலசாமியாக, மரப்பாச்சி பொம்மையாக, நினைவு பெயர்களாக, சுமைதாங்கி கற்களாக,நாள்களில் வணங்கும் வெவ்வேறு காரணங்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

அக்காக்கள் மறைக்கப்பட்டதற்கும்,
மறக்கடிக்கப்பட்டதற்கும் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. அவர்கள் கழுத்தறுக்கப்பட்டதற்கான காரணங்களாக சாதியோ,வர்க்கமோ இன்னும் பிறவோ இருக்கக்கூடும். ஆனாலும் யாரோ ஒருவரின் நினைவில் சட்டென உதிர்ந்துவிடும் ஒற்றை கண்ணீர் துளியாகத்தான் வெய்யிலின் அக்காக்கள் உறைந்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம்/ சிலவரிகள்/ ஒரு வாழ்க்கையை ஒரு சித்திரமாக நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி வித்தை காட்டியிருக்கிறார் வெய்யில். எளிய சொற்களில் சட்டென கடக்க முடியாத திடுக்கிடல்களை நிகழ்த்தி விட்டு அக்காவின் இன்னொரு உலகிற்குள் சென்று புதைந்திருக்கிற அக்காக்களின் எலும்புகளில் ரத்தவாடை தேடி அலையும் சிற்றெறும்பாய் அலைந்துக் கொண்டி இருக்கிறார்.

ஒரு கவிதை..

“அக்கா ஆகாத வயதில் வயசுக்கு வந்தவள்.
ஏவல் கைகூடியவள்
சிறு செருமலில் பனம்பழங்களை விழச் செய்கிறவள்
குளவிக் கூட்டு மண்ணை விரும்பி உண்பவள்
செய்வினை செய்து கழித்த கண்ணாடியில்
முகம் பார்த்தவளை
பின்பு யாரும் பார்க்கவே இல்லை.
தவச நாளில் வைக்கும் தளுவை
பொங்கி வழியும்போது
குலவைச் சத்தத்துக்கு நடுவே அப்பா ரகசியமாய் அழுவார்.”

இப்பிரதியில் வருகின்ற அக்கா யாரையும் எவராலும் எதனாலும் கட்டுப்படுத்த முடியாது. திசைவழி பேதயறியா அவள் சன்னதம் வர வைக்கிற அம்மனாக கம்பீரமாக நம் முன்னால் அமர்ந்து இருக்கிறாள். நம் குற்ற உணர்வின் மீது நமது வியப்பின் மீது கட்டப்பட்டு இருக்கிற பெரும்அச்சக்கோட்டையின் மகாராணியாக வீற்றிருக்கிறாள்.

வரலாற்றின் வீதியெங்கும் வெறித்த பார்வையோடு பாம்பின் நாக்கு போல பிளவு உற்ற கழுத்து வெட்டு காயத் தழும்போடு உதிர கவிச்சை வாசனை உலராமல் அக்காக்கள் பல கதைகளாக,பல நினைவுகளாக கிடக்கிறார்கள் ‌.

சட்டென வரும் ஒரு நேசத்தில் அவர்கள் உயிர் கொள்கிறார்கள். எதிரே வரும் சிறுமியின் முகத்தில் அவர்கள் வெட்க நிழலாய் மஞ்சள் பூசுகிறார்கள்.

இன்னொரு கவிதை

“மண முறிவுற்ற அக்கா குறிஞ்சிப் பூக்களை காண விரும்பினாள்; சூடவும்.
மிகத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டோம்.
நள்ளென் யாமமே தான்
துயில் கலைந்திடாது மெல்ல அரிந்து அவள் தலையை எடுத்துச் சென்றோம் அங்கே நிலைத்த விழிகளில் நீலம் திரும்புவதை புகைபிடித்தபடி அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார்.”

அக்காக்களுக்கு கால வேறுபாடு இல்லை. சங்ககாலம் தொட்டு சாதி ஆணவக் காலம் வரை கழுத்தறுப்பட்ட அக்காக்களின் பெருமூச்சுதான் இந்த நிலப்பரப்பு முழுக்க ஊழி காற்றாய் அடித்துக் கொண்டிருக்கிறது.

அக்கா வெறும் நினைவாய் மட்டும்தான் நம்முள் தேங்கி இருக்கிறாளா.. சொல் வழி கதையாக மிஞ்சி இருக்கிறாளா என்றால்.. நிகழ்காலத்து அக்காவிற்கும் கவிதை இருக்கிறது. அதில் ஒன்று.

“ஆறு வருஷமாகிறது
புழங்காமல் பரணில் கிடந்த பித்தளைக்குடத்தை விளக்க
எடுத்துச் செல்கிறாள் அக்கா.
வம்படியாக உச்சிக்கிளையேறி
புளியம்பழங்களை பறித்துக் கொடுக்கிறார் அவர்.
ஆற்று நீரில் புளி கொண்டு அவள் விளக்குகிற குடத்தின் பொன்மினுக்கத்தில் சூரியன் மங்குகிறது.
குடவாய் நீர் வாங்கும் ஒலியில் ஊர் திகைக்கிறது”

அக்கா வெறும் பாடல் மட்டுமல்ல வெய்யில் சொல்வதுபோல அவளே வளரி சீவிய பாளையிலிருந்து தீராமல் சொட்டுகிற யாவருக்குமான கள்.

.

கண்மூடி படுத்து இருக்கின்ற என் இமைகளில் ஏதேதோ நினைவு வந்து அழுத்த.. அப்படியே தூங்கிப் போகிறேன். விழித்துப் பார்க்கையில் காற்றின் விரல்கள் அக்காளின் எலும்புகளைப் படித்துக் கொண்டிருக்கின்றன.
உள்ளங்காலில் பார்த்தால்.. கட்டெறும்பு கடித்தத் தடங்கள்.

அக்காக்களின் நினைவினால் / வெய்யில் மொழி தந்த வலியினால் மனம் பிசகி காலம் நழுவிப் போன அக்கணத்தில் தான்.

எனக்கு கத்தி அழ வேண்டும்போல இருந்தது.

அந்தப் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வரப்பு வழியே நான் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன்.

.

அக்காளின் எலும்புகள்/ கவிதைகள்/ ஆசிரியர் வெயில்/ கொம்பு வெளியீடு/ விலை 75.

செவ்விந்தியனின் நடனம் -புத்தக வெளியீட்டு விழா- 12-01-2019

 

 

 

 

நான் எழுதி களம் வெளியிட்டிருக்கிற “செவ்விந்தியனின் நடனம்” என்கின்ற நினைவோடை கட்டுரைத் தொகுதியினை எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட.. களம் பதிப்பகத்தின் சார்பாக எனது மைத்துனர் பாக்கியராசன் சே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

எழுத்துலகில் எனக்கு ஆசானாக இருக்கிற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எனது நூல் ஒன்று வெளியிடப்பட்டிருப்பது எனது வாழ்நாள் பெருமை.

விடுதலைக்கு விலங்கு, சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம் என்கின்ற எனது நூல் வரிசையில்” செவ்விந்தியனின் நடனம்” மூன்றாவது நூல்.

நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற மறைந்திருக்கிற பல ஆளுமைகளின் அபூர்வ தருணங்களை, எளிய மனிதர்களின் கனிவினை, முரண்பாடுகளை, பற்றிப் பேசுகிற உண்மை மனிதர்களைப் பற்றிய நினைவோடை கட்டுரைத் தொகுப்பு இது.

இந்த நூல் எழுதப்பட்ட காலங்களில்..என்னைவிட இந்த நூல் வந்தே ஆகவேண்டும் என்று உழைத்த எனது எனது தம்பிகள் சிவராசன்,துருவன் செல்வமணி சோமு, துரைமுருகன், சேகர், லிங்க துரை, அஸ்வின் பத்மநாபன், இமயவரம்பன் ஆகியோருக்கு நன்றி.

இந்த நூல் வெளியிடப்படுவது குறித்து என்னை விட மிகவும் பதட்டமாகவும் ஆர்வமாகவும் இருந்த என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் அர்ப்பணம்.

இதை படப்பிடிப்பு செய்த சாட்டை வலையொளி குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இதில் மிகுந்த ஆர்வம் காட்டிய எனது மைத்துனர் வழக்கறிஞர் பிரபு சேதுராமலிங்கம் அவர்களுக்கும், களம் வெளியீட்டகத்தின் தம்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

வேறென்ன..

உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

படித்து விட்டு சொல்லுங்கள்.

அரங்கு எண் 333
சென்னை 42 ஆவது புத்தகக் கண்காட்சி
நந்தனம்.

நன்றி..

 

2019 ஜனவரி  மாதம் காக்கை சிறகினிலே இலக்கிய மாத இதழில் நான் எழுதிய பிரபஞ்சனின் ஊஞ்சல் என்கிற கட்டுரை வெளியாகியிருக்கிறது.

காக்கை சிறகினிலே ஆசிரியர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி.

கவிப்பேரரசு/சாட்டை/மணிசெந்தில்-துரைமுருகன்

[youtube]https://www.youtube.com/watch?v=Gmmi2tP6Q2w&feature=youtu.be&fbclid=IwAR0ZKHKvN3DOmt8mPy-M_wyb9b6d2hc3W9XyxcvUZvWt3LKRaXlSZY0pyrA[/youtube]

பிரபஞ்சனின் ஊஞ்சல்..


நான் சற்று தாமதமாக சென்றுவிட்டதாக என்னை நானே நொந்துகொண்டேன் ‌. குறித்த நேரத்தில் புறப்படுவது என்பது வாழ்நாளில் எப்போதும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருவது குறித்து மிகப்பெரிய கவலை இருக்கிறது. அதுவும் ஒரு முக்கியமான நபரை சந்திக்கச் செல்லும்போது ஏற்படும் காலதாமதம் அந்த சந்திப்பின் விளைவுகளை எதிர்மறையாக்கி விடும் என்பதில் நான் ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அன்றும் எனக்கு காலதாமதம் ஆகிவிட்டது. விடுதியில் நுழைந்த போது அவர் எனக்காக விடுதியின் வரவேற்பறையில் காத்திருந்தார். பார்க்க ஏதோ ஒரு சங்கீத வித்துவான் போல தோற்றம்.நெற்றியில் சந்தனக்கீற்று. என்னை பார்த்தவுடன் அவர் எழுந்து நின்றார். எனது காலதாமதத்தால் அவர் சற்று எரிச்சல் அடைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. மன்னித்து விடுங்கள் சற்று நேரம் ஆகிவிட்டது என்று சொல்லியவாறு நான் அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். சட்டென அவர் புன்னகைத்து விட்டார். அதுதான் பிரபஞ்சன்.

கும்பகோணத்தில் எங்கே டிகிரி காபி கிடைக்கும் மணி செந்தில்..? என்று கேட்ட அவரது கேள்விக்கு நான் சற்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கும்பகோணம் டிகிரி காபி உலகப்புகழ் பெற்றதுதான்..ஆனால் அது எங்கு கிடைக்கும் என்று கும்பகோணத்தில் வசிக்கும் எனக்கே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. முடிவில் அவரை நகரின் மத்தியிலுள்ள வெங்கட்ரமணா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். காபி ஆர்டர் செய்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

காபி அருந்துவது என்பது ஏதோ தேவ அமிர்தத்தை அருந்துவதற்கு இணையான ஒரு செயல் போல பிரபஞ்சன் ரசித்து பேசிக்கொண்டிருந்தார். காபி எவ்வாறு தயாரிக்க வேண்டும்.. எந்த பதத்தில் பால் காய்ச்ச வேண்டும் .. டிக்காஷனில் கலவை எவ்வாறு இருக்க வேண்டும்..சிக்கரி எவ்வளவு சேர்க்க வேண்டும் என்றெல்லாம் அவர் விரிவாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் அவர் எழுதிய நூல்கள் பற்றி பேசலாம் என வந்திருந்த எனக்கு அவரது காபி பற்றிய உரையாடல் சற்று ஏமாற்றத்தை தந்தது. திடீரென கும்பகோணத்து எழுத்தாளர்களைப் பற்றி பேசத் தொடங்கினார். தஞ்சாவூர் காரங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. கோவில் காபி இலக்கியம் இசை என ரசனை பூர்வமா வாழ்வதில் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றாலெல்லாம் உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டே போனார். மறைந்த எழுத்தாளர் தி ஜானகிராமன் அவர்களைப் பற்றி அவர் பேசும்போது சில எழுத்துக்கள் மூலம் ஒரு பெண்ணை நம் கண்முன்னால் உருவாக்கி பேச வைத்து விடுவதில் தி.ஜா ஒரு மாயக்காரன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

காபி வந்தது. ஒரு வீணையை வாசிக்கக்கூடிய ஒரு கலைஞன் போல அந்த காபியை அணுக அவர் தயாரானார். சூடாக வந்த அந்த காபியின் மணத்தை நுகர்ந்து சற்று சர்க்கரை போட சொன்னார். பிறகு துளித்துளியாக காபியை பருக தொடங்கினார். அது ஒரு ரசனையான பருகல். எவ்வித ஆரவாரமும் இன்றி பரபரப்புமின்றி மிகுந்த ஆர்வத்தோடு.. காபியின் இயல்பான வாசனையை நுகர்ந்தவாறு ரசித்துப் பருகிக் கொண்டிருந்தார். அந்தக் காபி அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அருந்தி முடித்துவிட்ட பிறகு அருகில் நின்று கொண்டிருந்த சர்வரிடம் காபி போட்ட மாஸ்டர் எந்த ஊர் என விசாரிக்க தொடங்கினார். பிறகு என்னை திரும்பி பார்த்து வாங்க போகலாம் என்றார்.

எங்கள் அன்னைக்கல்லூரி விழாவிற்காக அவரை அழைத்துப் போக நான் வந்திருந்தேன். போகும் வழியெல்லாம் அவர் காவிரியை பற்றி.. அதன் அரசியலைப் பற்றி எல்லாம் என்னோடு விவாதித்துக் கொண்டு வந்தார். எதைக் கேட்டாலும் அவர் புதிதாக கேட்பது போன்ற ஆர்வத்தோடு கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரிக்குள் எங்களது கார் நுழைந்தது. அதுவரை பேசி சிரித்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் சற்றே இறுக்கமாக மெளனமானார். இவர் வேறொரு மனிதரோ சற்று முன்பு நாம் சந்தித்தவர் இவர் இல்லையோ என்றெல்லாம் எனக்கு சந்தேகமாக இருந்தது. மேடையில் ஏறிய பிறகு ஒரு எழுத்தாளருக்குரிய எவ்விதமான இலக்கிய ஆடம்பர மொழிகள் இல்லாமல் நேர்த்தியாக பேசத்தொடங்கினார். சிறப்பாகப் பேசினார். தஞ்சை நிலத்தைப் பற்றி அவர் அறிந்தவற்றை வரலாற்றுக் குறிப்புகளோடு அங்கிருந்த மாணவ-மாணவியர்களுக்கு புரியக்கூடிய எளிய மொழியில் அழகாகப் பேசினார்.

கல்லூரியில் மதிய உணவு முடிந்தவுடன் நான் அவர் எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். என் வீட்டின் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அவர் போய் ஆசையாய் அமர்ந்து கொண்டார். மெதுவாக ஆடிக்கொண்டே ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தார். அருகில் இருந்த என்னை பார்த்து ஊஞ்சலில் அமர்ந்த உடனேயே பாட்டு வருது.. ஊஞ்சலுக்கும் பாட்டுக்கும் ஏதோ முன்ஜென்ம தொடர்பு இருக்கும் போல. எனச் சொல்லி சிரித்துக் கொண்டார்.

அப்போதுதான் அவருக்கு அலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியவர் சட்டென மௌனமானார். முகம் இறுகியது. பேசி முடித்து விட்ட பிறகு மௌனமாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருந்தார். என்ன சார் என்ன ஆயிடுச்சு என்று நான் கேட்டேன். ஒண்ணும் பெருசா இல்ல மணி செந்தில் ..வீட்டில் திருட்டு போயிடிச்சி என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார். நான் உடனே சென்னையில் இருந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்களுக்கு தொடர்புகொண்டு, அவரின் வீடு அமைந்திருந்த ராயப்பேட்டை காவல் நிலையத்தின் எண்ணைப் பெற்று காவல் ஆய்வாளரிடம் பேசினேன். அவரும் அந்த நேரத்தில் திருட்டு நடந்த பிரபஞ்சன் வீட்டில்தான் இருப்பதாகவும், விசாரித்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துவிட்டு தன்னிடம் தகவல் தெரிவித்ததாக அந்த காவல் ஆய்வாளர் தெரிவித்தார். எதுவும் பெரிதாக திருடு போய் விடவில்லை என்றும் அவர் கூறினார். இந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த பிரபஞ்சன் என்னுடைய ரேடியோ இருக்கிறதா என்பதைப் பார்க்கச் சொல்லுங்கள் எனக் கூறினார். காவல் ஆய்வாளரும் தேடிப் பார்த்துவிட்டு ரேடியோ உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போய் இருப்பதாக சொன்னார். பிரபஞ்சன் அமைதியாக இருந்தார். அதுதான் என்னுடைய மிகப்பெரிய சந்தோஷம். அதையும் திருடன் தூக்கி கொண்டு போய் விட்டானே என நொந்து கொண்டார்.

இது என் வீட்டில் இருந்த எல்லோருக்கும் மிகவும் வருத்தமாக ஆகிவிட்டது. நம் வீட்டிற்கு வந்த நேரத்திலா அவர் வீட்டில் திருடு போக வேண்டும்.. என்றெல்லாம் அனைவரும் வருத்தப்பட்டோம். இதை நுட்பமாக உணர்ந்துகொண்ட பிரபஞ்சன் அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற என் அம்மாவிடம் ஒரு காபி போட்டு தருமாறு கேட்டுக்கொண்டார். சூடாக காபி வந்தது. வழக்கமான அதே ரசனையோடு பருகியவாறே என்னிடம் இலக்கியத்தைப் பற்றி தீவிரமாக உரையாட தொடங்கினார்.

அவருடைய வானம் வசப்படும் நாவலை நான் படித்திருந்தேன். புதுச்சேரியில் பிரெஞ்சு அதிகாரிகளிடம் துபாஷாக,மொழிப்பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பினை தழுவி எழுதப்பட்ட அந்த நாவலில்.. அந்த மேலை நாட்டு அதிகாரிகளின் பழக்கவழக்கங்கள், உடை ஒழுங்குகள் அவர்களுக்குள் இருந்த பதவி சார்ந்த சச்சரவுகள் என மிக நுட்பமாக பிரபஞ்சன் பதிவு செய்திருந்தார். அவர் அளவிற்கு புதுச்சேரியை வரலாற்று ரீதியாக அறிந்தவர்கள் யாரும் இல்லை எனலாம்.அது தொடர்பான நிறைய கேள்விகளை நான் கேட்டபோது சளைக்காமல் மிகத்தெளிவாக ஒவ்வொன்றுக்கும் அவர் பதிலளித்தவாறே இருந்தார்.

திருட்டு நடந்த ஒரு வீட்டின் உரிமையாளர் அதை மறந்துவிட்டு எதிரே அமர்ந்திருக்கிற எளிமையான வாசகன் ஒருவனோடு இலக்கிய உரையாடலில் ஈடுபடுவது என்பதெல்லாம் இதுவரை எனக்கெல்லாம் புலப்படாத பிரபஞ்சனின் பிரபஞ்ச ரகசியம்.

அதற்குப் பிறகு ஒரு இரண்டு மணி நேரம் என்னோடு இலக்கியம், இசை ,எழுத்து, எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ் ..என அனைத்தையும் பேசிவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பிச் சென்றார்.

கிளம்பும்போது ஊஞ்சலை எப்போதும் கழற்றி விடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். தான் மீண்டும் வருவதாகவும் அப்போது அந்த ஊஞ்சல் இருக்க வேண்டும் எனவும் உரிமையோடு கேட்டுக்கொண்டார்.அவர் வீடு திருடு போனது குறித்து ஏதேனும் சட்ட உதவிகள் தேவைப்பட்டால் நான் உதவுவதாக சொன்னபோது.. ஒரு எழுத்தாளன் வீட்டில் திருட புத்தகங்களும், இசையும் தவிர வேறு என்ன இருக்க போகிறது.. கண்டிப்பாக திருடன் ஏமாந்து இருப்பான்.. பாவம் அவன் என சிரித்துக்கொண்டே கிளம்பிச் சென்றார்.

இன்று அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது மனது ஒரு மாதிரியாக கனக்கத் தொடங்கியது. நான் என் வீட்டின் கூடத்திற்கு வந்தேன். அங்கே இருந்த ஜன்னலை எல்லாம் திறந்து வைத்துவிட்டு… அசைவில்லாமல் தனித்திருந்த அந்த ஊஞ்சலை மௌனமாக பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அந்த ஊஞ்சலை என்றும் கழட்டக் கூடாது.இன்று காற்றில் கலந்த பிரபஞ்சன்.. அந்த ஊஞ்சலில் ஆடுவதற்காக என் இல்லத்திற்கு என்றாவது ஒரு நாள் வரக்கூடும் என எண்ணிக் கொண்டேன்.

பிரபஞ்சனும் அப்படிப்பட்டவர்தான். காற்றாக மாறினாலும் ஊஞ்சல் ஆடவும்.. காபி குடிக்கவும்.. கும்பகோணம் வந்தாலும் வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே காற்று மென்மையாக வீசியது.

ஊஞ்சல் மெல்ல அசையத் தொடங்கி இருந்தது.

Page 3 of 4

Powered by WordPress & Theme by Anders Norén