நீ என்னை ஆக்கிரமிப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் வீசும் ஆயுதங்களை கம்பீரமான எனது கலகக் குரல் மூலமாக அடித்து நொறுக்குவேன்.
நான் விடுதலையின் காற்று. எதிர்ப்பின் ஏகாந்தம். உன் கட்டுபாட்டுக் கம்பி வேலிக்குள் அடங்கி விடமாட்டேன்.
ஓங்கி ஒலிக்கும் எனது முழக்கம் என்னைப்போலவே, உன்னை எதிர்த்துப் போராடி உன்னால் உயிரோடு கொளுத்தப்பட்ட எனது முன்னோரின் சாம்பலிலிருந்து கிளர்ந்து எழுந்தது.
நான் யாராக இருக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதை விட நீ தீர்மானிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் யார் என்பதை நீ தீர்மானித்து வைத்திருக்கும் எல்லா வரையறை சட்டகங்களையும் கிழித்து எறிவேன்.
எனது உடை உன் அதிகார பாசிச உச்சங்களின் உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால் அதை நான் ரசித்து அணிவேன்.
எனது பண்பாட்டின், எனது வழிபாட்டின், கற்றைப் புள்ளிகளை உன் கைப்பிடி அதிகாரத்தால் ஒற்றைப் புள்ளியாக வரைய துடிக்கும் உனது வரலாற்று வன்மத்தை எகிறி மிதிப்பேன்.
என்னை அச்சுறுத்துவதாக எண்ணி கூட்டம் கூடி முழங்கித் தீர்க்கும் உனது அச்சம் கம்பீரமான எனது ஒற்றை அதட்டலால் அடங்கி ஒடுங்கும்.
நீ கடவுளைச் சொல்லி என்னை கலங்கச் செய்வாய் என்றால், நானும் கடவுளை முழங்கி உன்னை நடுக்கமுறச் செய்வேன்.
இன்னும் மீறி அழுத்தினால், எல்லோரும் ஓர் குரலில், ஓர் உடையில் , உரக்கச் சொல்வோம்.
எங்கிருந்தோ வீசி
என் பின்னங்கழுத்தை
உரசி செல்கிற
காற்றில் உன் மெல்லிய
விரல்கள் ஒளிந்திருக்கின்றன.
எதிர்பாராமல் சிந்துகிற
எதிர்ப்படும் குழந்தையின்
புன்னகை ஒன்றில்
பொன்னெழில் பூசிய
உனது கன்னக்கதுப்புகள்
மலர்ந்து இருக்கின்றன.
அடர்மழை குளிர் இரவில்
கண்ணாடிக் கூண்டினில்
அசையும் மெழுகுச்சுடரில்
நிலா இரவொன்றில்
கிறங்கிப் போயிருந்த
உன் நீல விழிகளின்
வெப்பம் தகிக்கின்றன.
பின்னிரவின் ஒத்திசைவு
லயிப்பில் கேட்கும்
இளையராஜாவின்
பியானோ வாசிப்பின்
இடையே மலரும்
மெளனங்கள்
அடர்த்தியாய்
என் முகம் போர்த்தும்
உன் கேசத்தின் வாசனையை
வாசித்து காட்டுகின்றன..
அசையும் பேருலகில்
சலனமில்லா ஒரு நொடி
திடுக்கிடலில் கழுத்தில்
முகம் புதைத்து நீ சிந்திய
கண்ணீர் துளிகள்
கனக்கின்றன.
எப்போதும் தோள் தழுவி
உறங்கும் என் பால்ய
மகனின் அமைதியில்
உன் மடியில்
நான் அடைந்த
அந்த முன் அந்தி
உறக்கத்தின் சாயல்கள்
இயல்பாய் நிகழ்கின்றன.
இப்படியாக
உன்னை தொலைத்தும்
உன்னை அடைந்துமாக
அலைந்து கழிகிறது
இந்த நிகழுலகு.
யுகயுகமாய்
அந்த இனத்தின்
மண் காக்க நின்று
விதையாய்
ஊன்றப்பட்ட
முதுமனிதர்களின்
பொருமிடும்
மூச்சுக்காற்று
அந்தப் பாடலைத்தான்
சுமந்து
உச்சி மலைகளில்
அலைகிறது
என்றார்கள்..
உற்சாகக் குரலோடு
சேர்த்து பிணைந்த
கரங்களோடு…
அதோ
அவர்கள்
பாடிக் கொண்டே
செல்கிறார்கள்..
குருதியாற்றின்
உதிரத்துளிகள்
தொல்குடி ஒன்றின்
விழிச்சிவப்பு
வெப்பத்தால்..
ஆவியாகி மேகமாய்
மிதக்க..
எந்த நொடியிலும்
உறுமி வெடிக்க
காத்திருக்கும்
அந்த
வானத்தின்
விளிம்பின்
உதித்திருக்கும்..