பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 6 of 9

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்..

20664930_332227397202135_5946565845759023935_n

அந்த மங்கிய
ஒளி அறையில்..

தலைக்குனிந்து
அழுதுக்கொண்டிருந்த
அவனது விழிகள்
கனன்று..
தகித்த ஆன்மாவின்
சொற்களை சொல்ல
முடியாமல் சிவந்திருந்த
வேளையில் தான்..

அவனை சந்தித்தேன்.

எதிலும் நிலைக்
கொள்ளாமல்
அலைக்கழிந்து
சிவப்பேறிய அவன்
விழிகளுக்குப் பின்னால்
இருந்த காயம்
புரையோடி இருந்ததை
அவன் விழிகளை
நேரிட்டு பார்க்கும்
எவரும் அறியலாம்.

காயத்தின் தர்க்க,
நியாயங்களை..
பற்றி சிந்திக்க
ஏற்கனவே பல
இரவுகளை தின்று
பசியாறி இருந்தான்..

அவன் விரல் இடுக்கில்
சாம்பல் தட்டாமல்
நடுங்கிக்கொண்டிருந்த
சிகரெட்டின் புகை
வளைய வடிவங்களில்..
இறந்தக்கால லயிப்புகளை
தேடிக் கொண்டிருந்தான்..

இசைத்தட்டின் மீது உரசும்
முள்ளாய் ..
நினைவுச்சுழலில்
சில நிலாப்பொழுதுகளை
கத்தியாக்கி ..
தன் ஆன்மாவில்
உதிரம் வழிய கீறி
ஒரு முடிவிலிக் கவிதை
ஓன்றை எழுத முயன்றுக்
கொண்டிருந்தான்.

நீ வாழ்வை விட
நரகத்தை
மேலானதாக்கி
வருகிறாய்
என்று முனகிய
என்னை
பார்த்து வெறுமையாய்
சிரித்தான்..

எதிரே இருந்த கோப்பையில்
நிராசையின்
அடையாளமாய்
இருந்த மதுவை
பொறுமையாய்
குடித்தான்.

பிறகு அவனே சொன்னான்.

நரகம் என்ற ஓன்றே
வாழ்வின் ரணத்திற்கு
மேலான சொல் இருக்கிறது
என்ற உம் ஆறுதலுக்காகவே..

மற்றபடி.
நரகமே வாழ்வின்
பிறிதொரு
சொல்..

நரகம் எப்போதும்
காலியாகத்தான்
இருக்கிறது..
ஏனெனில் எல்லா
தண்டனைகளும்
வாழ்விற்குள்ளாகவே
வந்தமர்ந்து இருக்கின்றன..

சாத்தான்களின்
நிழலில் தான்
பூமி இளைபாறுகிறது..

தெய்வங்கள்
பூமியை விட்டு
விலகி விட்டன.

பரிசுத்த
நம்பிக்கைகளை
கொல்வது எப்படி
என அறிதலில்
தேர்ந்த
பின்னரே சக தோளில்
கரம் பதிக்கின்ற
உலகில்…
கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறது..
தூய அன்பின் உடல்..

பேசிக் கொண்டே போனான்..

இறுதியில் அவனே..

என்
நம்பிக்கைகளை
கொன்ற சொற்களை..
பொழுதுகளை…
நான் உடைக்கத்
துடிக்கும்
அந்த துரோகக்
கோப்பையில்
சேகரித்துக் கொடு..

அதை அருந்தி
நான் இறக்கிறேன் என..

இல்லையேல்..

மனதார அன்பின்
வழி பிறந்த
பொழுதுகளை..
என் நினைவில் வைத்துக்
நிராயுதபாணியாய்
நிற்க வைத்துக்
கொல்லக்
கூரிய ஆயுதம் ஒன்றினை
உன் பொய்களால்..
தயாரித்துக்
கொடு.

கொன்று தீர்க்கிறேன்.

என்று வலியோடு கத்தினான்..

சரி வா ..

காலாற நடந்து விட்டு வருவோம்..
புதிய கடலலைகள்
கால் தழுவ காத்திருக்கின்றன
என்றேன்.

மறுத்தான்.

என்னால்
உன்னை..
உன் வலியை..
சகிக்க முடியவில்லை.
நான் கிளம்புகிறேன்..

என்றவாறே
வெறுப்புடன்
நடக்கத்தொடங்கினேன்.

என்னை இப்படியே விட்டு
போகிறாயா..
ஏதாவது பொய்யான
மழுப்பல்களோடு
என் நெற்றியை
வருடிக் கொடுத்து
விட்டுதான் போயேன்..
என்ற அவனது
கத்தலும்..
கதறலும்..
கலந்த
இறைஞ்சலை ..
இடறியவாறே
சென்றேன்.

நள்ளிரவு வரை
அவனது இறைஞ்சல்
வெறி நாய்க்கடியாய்..
ரத்தக்கசிவாய்..
என்
தொண்டைக்கடியில்..

*********************†
காலை…
கழுத்தறுக்கப்பட்ட
நிலையில் அவன் பிணமாக
கடற்கரை ஓரத்தில்
கிடக்கிறான் என யாரோ
சொன்னார்கள்.

உதிர உலர்வோடு
என்
தலையணைக்கு
அடியில்
மறைந்திருந்த
கத்திக்கு மட்டுமே
தெரியும்.

அந்த கழுத்தை
அறுத்த நொடியில்
வழக்கத்திற்கு மாறாக
அவனது விழிகள்
தேவ சாந்தம் கொண்டன
என்பதும்…

நன்றியோடு அவன்
என்னை நேசித்தான்
எனவும்.

இறுதியாக அவன்
உகுத்த நீர்
விடுதலைக்கான
ஆதி உணர்வு எனவும்..

ஆம்..

அவனை நான்தான்
கொன்றேன்.
…,

இன்றாவது..
இனிமேலாவது..

நான்
உறங்குவதற்காக..

மீண்டும் ..

637c68ba0dba902e1d117843e63c048a--trippy-quotes-acid-trip

 

அமில
மழைத்துளிகள்
கொட்டி சிதறும்
என்
எண்ண முற்றத்தில்..

எப்படியாவது
துளிர்த்திட
துடிக்கிறது
என் ரோஜா..

அமைதியான
ஒரு உதிர
சொரிதலுக்கு
பின்..

அமிலத்தை
மிஞ்சியும்..
முளைத்தே
விடுகிறது மலர்..

அமிலம்
முள்ளாய்..
ரோஜாவினடியில்
தேங்கி இருப்பதை
உணர்ந்தாலும்..

முள்ளை
பொருட்படுத்தாது
தீண்ட நீளுகின்ற
என் கனவின்
விரல்கள் தயாராகவே
இருக்கின்றன..

இன்னொரு உதிர
சொரிதலுக்கு..

வாழ்வு- சபிக்கப்பட்ட வரம்.

 

18891713_305469093211299_1564591392787481116_o
நுரை ததும்பும்
அந்த ஒற்றைக்
கோப்பையின்
விளிம்பில்…

ஆலகாலமாய்
பூத்திருந்த
நஞ்சைக் கண்டு
சற்றே
சிரித்துக் கொண்டது..

சாத்தான்.

இதோ
வாழ்வெனும் அமிர்தம்.

காதலாகி
கசிந்துருகி..
மேனி துயர் கண்டு
மெலிந்து புண்பட..
ரணம் கண்டு
வதை பட்டு
சுகம் காண
வாழ்ந்து விட்டுப் போ
என்ற அலட்சியத்
தொனியில்
அறிவித்தவாறே..
பீடியை பற்ற
வைத்து இழுத்தான்
சாத்தான்.

புகைச் சுருள்
மேல் எழ
யாரோ ஒருவளின்
கூந்தல் நினைவு
எனக்கு வந்தது.

நட்சத்திரங்களில்
வசித்திருக்கிறாயா..
இல்லையெனில்
ஒரு இதயத்தை
வென்றெடு.

தோள்களில்
வானவில்
பூத்திருக்கிறதா…
இல்லையெனில்
சிறகடிக்கும்
விழிகளை தேடி
கண்டடை.

அதற்கு
இந்த அமிர்தத்தை
பருகு என்று பரவசம்
காட்டிய சாத்தானில்
கண்களில் பொய்யில்லை..

நடுங்கிய
கரத்தோடு
கோப்பையை
தழுவச் சென்ற
என் கரங்களை
கடவுள் சற்றே
பிடித்து இழுத்தார்.

வேண்டாம்..
இது உனக்கு பொருந்தாது..

கொந்தளிக்கும்
அலைகடலை
ஒரு கோப்பைக்குள்
அடக்கி வைத்து
அமிர்தம் என்கிறான்.

ஏமாறாதே..

எச்சரித்தார் இறைவன்.

இறைவனின் நிழலோடு
கரைந்து நழுவத்தொடங்கினேன்..

விசுவாசம் ஏற்ற
இறைவன் திரும்பி
நடக்க தொடங்கினார்.

சட்டென திரும்பி
ஒரே மடக்கில்
விழுங்கினேன்
கோப்பையில்
குடி இருந்ததை..

வாழ்வின்
வசீகரம்
சிறகுகளாய்
முளைத்த
தோள்களோடு..

பின் தொடர்ந்த
என்னில்
ஏற்கனவே அருந்தி
விட்டிருந்த நஞ்சு
மெல்லிய புன்னகையாய்
அதரத்தில் அமர்ந்திருந்தது..

காலியாய் இருந்த
கோப்பையை
உருட்டி விளையாடத்
தொடங்கி இருந்தான்
சாத்தான்..

இம்முறையும் ஏமாற்றப்பட்டான்
என விசனப்பட்டார் இறைவன்..

இனிமேல் தான் வாழப் போகிறான்
என குதூகலித்தான் சாத்தான்.

கோப்பைகளின் இரவு..

8

அந்த சிவப்பு
மேசையில்..

இரவு என்ற
பொல்லாத
மிருகமும்..
நானும்..
தனித்திருந்தோம்..

நினைவுகளை
கடித்துக் குதறிய
செந்நிற பற்களோடு
சிரித்த இரவோடு..

வாழ்வை ஒரு
மதுவாக்கி குடிக்க
நானும் தயாரானேன்..

இரவின் விரல்
இடுக்கில்
சிகரெட்டாய்
புகைந்துக்
கொண்டிருந்த
என் ஆசைகளின்
கங்கொன்றின்
நுனியில் மின்னியது
ஒரு நட்சத்திரம்.

கனவுகளும்..
நிராசைகளும்..
சம விகிதத்தில்
கலக்கப்பட்டு
கோப்பைகள்
தயாராகின..

தத்துவச்சாரங்களும்
மெளனமாக்கப்பட்ட
சொற்களும்..
இரண்டு பீங்கான்
தட்டுகளில் நிரம்பி
இருந்ததை
முரண்களே நமது
இன்றைய
side dish என
குதுகலித்தது
இரவு.

சியர்ஸ்
என்றவாறே
உரசிய
கோப்பைகளின்
அதிர்வில் சிந்தி
சிதறிற்று
ஆன்மாவில்
என்னையும் மீறி
ஒட்டியிருந்த
முத்தமொன்றும்..
அதிகாலை
அணைப்பொன்றும்..

செந்நிற திரவமாய்
என் கடந்த காலம்
அந்த கோப்பையில்
கொப்பளித்ததை
பார்த்ததை கண்ட
இரவு தன் மினுக்கும்
கண்களின் அலட்சியப்
மொழியில் சொன்னது.

தண்ணீய ஊத்துடா…

..அடங்கியது காலம்.

 

 

https://youtu.be/j-kKJKlufBQ

வேண்டுவன..மயக்கம்.

 

IMG_19700130_041755

 

எனது இரவே…

நீ துளித்துளியாக
நகர்வது …

யாரோ கழுத்தை
பொறுமையாக
அனுபவித்து
அறுப்பது போல…

ரண வேதனையாக
இருக்கிறது..

என்
விழிகளே..

சிவந்த
உங்களது
விழிப்பை மறந்து
சற்றே பொசுங்கி
எரிந்துப்
போங்கள்..

அது கொஞ்சம்
ஆறுதலானது.

உயிர்த்திருந்து
ரணம் கொள்ளும்
மனமே…
கொஞ்சம் மயங்கிப்
போ..

உன் நிலை மறந்து
கிறங்குவது மிக
நலம்.

ஆழ கொதித்து
துயர
வியர்வையால்..
எரியும் உடலமே…

நீ மரத்துப்போ.

அது மரித்துப்
போவதற்கு நிகராக
இருந்தாலும் கூட..

இறுதியாக சொல்வது
இதை தான்..

ஆற்ற முடியா
கொந்தளிப்பினை
கொல்ல…

அது உறக்கமாக
கூட இருக்க
தேவையில்லை…

சிறிது நேர
மரணமாக இருந்தாலும்..

இறுதிவிருந்தின் அவசியம்

 

18342769_294633877628154_5684090597137973115_n

அந்த சாலையின்
முனையில் அவனை
நீ சந்திக்கக் கூடும்..

நிலைக்காத பார்வைகளோடும்..
குழறிய சொற்களோடும்..
கலைந்த கவனத்தோடும்..
கசங்கிய ஆடையோடும்..

முணுமுணுப்புகளோடு
திரியும் அவனை
நீ நிராகரித்து கடக்கலாம்.

நேர்த்தியான உன் ஆடைக்கு..
மின்னுகிற உன் ஆபரணங்களுக்கு..
இன்பம் மிதக்கும் உனது
பயணத்திற்கு..
உண்மையின் கண்களோடு
காத்திருக்கும் அவன்
ஒரு உறுத்தல் தான்..

உன் விழி அசைவுகள்
அவன் மீது படாதவாறு
லாவகமாக கடப்பதில்
இருக்கட்டும் உன் கவனம்..

இன்று நீ
அணிந்திருக்கிற
புனைவுகளின் அடவு
தெரிந்த அவன் சற்று
ஆபத்தானவன் தான்..

எதிர்பாராமல் சந்தித்து
விட்டால் கூட..
அந்த நொடியை
உடைத்துப் போட்டு
யாரிவன் என்கிற
அலட்சியத்தை மட்டும்
உன் ஆன்மாவில்
சேமித்துக் கொள்.

சொற்கள் ஏதேனும்
மிச்சப்பட்டிருந்தால்
உச்சரித்துப் போவதில்
கூட..
ஒன்றும் ஆகி விடப்
போவதில்லை..

எங்கிருந்தோ
யாரோ உன்
மீது கொட்டிய..
உன் அடி
நாக்கில் சேமித்து
வைத்திருக்கும்
கசப்பினை
அவன் மீது
காறி உமிழ்தல்
மிக நலம்.

அக்கணத்தில்
சட்டென உன்
நினைவில் பூக்கும்
அவன் பொழிந்த
நேச மழையை
கவனிக்காமல்
மிதித்துக்
கடந்துப் போக
கண நேர
வெப்பம்
சுமக்கும் காலணிகளை
தயாரித்து வை.

உன்னிடம்
இல்லாவிட்டாலும்
கவலையில்லை ..
உன் மீது யாரேனும்
எக்கணத்திலாவது
துப்பிய வெறுப்பினை
கடன் வாங்கியாவது
அவன் மீது கக்கு..

காரணங்களை
ஒரு
விருந்தினைப் போல
நேர்த்தியாய்
தயாரி.

விதவிதமான
கதைகளோடும்..
உன் விழிகளில்
இதற்கென
ப்ரத்யோகமாக
தயாரித்திருக்கும்
துளிகளோடும்..

அந்த விருந்தினை
உனக்கு நீயே
பரிமாறிக் கொள்..

ஏனெனில்
அவனை நீதான்
கடவுள் என்றாய்..
அவன் சாத்தானாக
உனக்குள் மாற்றிக்
கொள்ள இந்த
இறுதி விருந்து
அவசியம்…

ஆனால்…
அவனுக்கோ..
இவையெல்லாம்
தேவையே இல்லை.

ஏற்கனவே
நிராகரிப்பின்
சொற்கள்
நஞ்சாய்
தடவிய கத்தி
ஆழ பின்
கழுத்தில்
குத்தப்பட்டிருக்கும்
அவனுக்கு
தேவை…

அவன் ஆன்மா
மட்டுமே உணரத்தக்க..
நேர்மையான..
கண்களின் ஈரம்
மினுக்கும்
மதிப்பு மிகுந்த

ஒரு மரணம்.

நினைவின் தனிமை..

 

17992209_289848791439996_7020550986337600879_n

 

இரவுப் பொழுதின்
மலை அருவி
போல …
யாரையும் நனைக்காமல்
போகிறது..
தனிமை
இசைக்கும்
என் நினைவு…

சொல்லில் மறைந்த செய்திகள் ..

 

15873112_240184553073087_4173025362634729673_n

 

வெளிச்சப்புள்ளிகள்
முளைக்காத
காட்டில்
கண்களிரண்டையும்
பிடுங்கி யாருக்கும்
தெரியாமல்
புதைத்து விடு..

கால்கள் இரண்டையும்
கட்டி.
கைகள் இரண்டையும்
வெட்டி..
ஒலி படா வண்ணம்
செவிகளை அறுத்து
புதை..

மறக்காமல்
என்
ஆணுறுப்பினை
வெட்டி
ஓநாய்களுக்கு
மத்தியில் வீசியெறி..

ஆழமாக புதை..
இன்னும் தோண்டு..

தப்பித்தவறி
முளைத்து விட
கூடாது என்ற கவனம்
உன் அறிவினை
பதட்டத்திலேயே
வைக்கட்டும்..

ஆழ புதைத்து..
உன் கால்களால்
மண்ணை மிதித்து
உறுதிச்செய்து
கொள்..

ஆழ புதைத்து
விட்டு மேலே
ரோஜா பதியம்
இட்டு விடாதே..

நாளை முட்கள்
கூட முனகக்கூடும்..

செய்து விட்டாயா..

சற்றே
கம்பீரமாக
உன் வெற்றியை
முழங்கிக்
கொள்..

அடிமையே செத்து ஒழி
என்று வாய் விட்டு
சிரி..

சிரித்துக் கொள்..

அதுவே உன்
இறுதிப் புன்னகையாக கூட
இருக்கலாம்.

வெட்டிய வாளின்
நுனியில் மிச்சமிருந்த
உதிரத்துளி கூட
இன்னும் உயிரோடு
இருக்கலாம்..

யார் கண்டது..???

அது மழையோடு கலந்து
ஆற்றில் ஓடி..
என்னைப் போலவே
இருக்கும் இன்னொரு
அடிமையின் உடலில்
கூட சேரலாம்..

அவனின்
அடித்தொண்டையில்
இருந்து மீண்டும்
நான் பிறப்பேன்..

அதற்காகவே …
என்னை அடிமையாகவே
வைத்து அழித்தொழி.

 

* எம் பண்பாட்டு உயிர் நிகழ்வான பொங்கல் திருநாளை இந்தியத்தேசியம் மறுத்து எம்மை அடிமைகள் என உணர்த்திய ஒருநாளில்….*

இப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்…

 

 

15972645_242421829516026_2504605351533441783_o

 

தழும்பாக
மிஞ்சுவதும்
வலியாக
எஞ்சுவதுமாக

கனன்று எரியும்
காயம் நீ…

பயப்படாதே..

ஒரு போதும்
என் காயங்கள்
ஆறுவதில்லை..

நானும்
ஆற்ற
நினைப்பதில்லை..

உன்னால்
நகராத
ஆற்றின்
சுழி
மையத்தில்
விசையற்றும்
திசையற்றும்
ஆழ்ந்திருக்கின்றேன்..

அந்த
மோனநிலையில்
நானாகவே
உணர்ந்தது

எதுவும்
உன்னால் இல்லை
எனவும்…

அது
என்னால்
தான் எனவும்..

சொல்லப்போனால்
நீ கூட
நானாக
வரைந்துக் கொண்ட
கனவு ஓவியம்
எனவும்…
………………….

இதை பார்த்து
உன்னால்
மெலிதாக
புன்னகைக்கூட
முடியும்..

ஆனால்
புன்னகைக்கு
பின்னால்
கசியும்
உதிர
வாடையையும்
என்னால்
இப்போதே
இங்கிருந்தே
உணரமுடிகிறது
என்பதே
இப்போதைய
என் துயர் நிலை..

– மணி செந்தில்

.சொல்ல முடியாத கதை.

 

 

Tamil_M.A-0013

என்னிடம் சொல்ல
இதை தவிர
வேறு ஏதேனும்
இருக்கிறதா

என்ற கேள்வி
ஏதோ ஒரு புள்ளியில்
தொக்கி நிற்பதாக
உனக்கு என்றேனும்
தோன்றி இருக்கிறதா?

வலிந்து முகத்தில்
ஒரு புன்னகையையும்…
உணர்ச்சியற்ற
உரையாடல்களையும்
நிகழ்த்தி நிகழ்த்தி
கையறு நிலைப்பட்ட
பொம்மலாட்டமாய்
உறைந்துப் போன
நாளில் தான்..
விடையற்ற
வினாக்களுக்குள்
தொலைந்து விட
துடிக்கிறாய் .

நிகழ்காலம்
இறக்கத்துடிக்கிற
மெழகுத்திரியாய்
மின்னி நடுங்க..
இறந்த காலமோ
உருகி வழிகிறது..
நினைவுகளாய்.

நிலா உரசும்
மலை முகட்டு
இரவுகள்
இதற்கு பின்னரும்
வரலாம்.

முகத்தில் மெல்லிய
துணியாய் வெளிச்சம்
படரும் பேருந்துப்
பயணம் இதன்
பின்னரும் நிகழலாம்..

எதனாலும்
அமைதியுறாத
அலைகழிப்பின்
இப்போதைய
சமாதானங்கள் இவை
என்பது
உனக்கும் தெரியும்.
எனக்கும் தெரியும்.

………..

விடு விடு..

என்னால்
என் வேதனையை
என் மொழியால்
விவரிக்க முடியவில்லை.

மூங்கில் வன
தனிமையினை…
சுவாசமாய்
சுமந்து வரும்
ஒரு புல்லாங்குழல்
கொடு..

வாசித்துக்காட்டுகிறேன்..

இரக்கமற்ற
சொற்களின்
விரல்களால்
என் ஆன்ம நிலத்தில்
நீ விதைத்திருக்கிற
நிராசை விதைகளால்
வேர் முழுக்க முள்
பூத்துக் கிடக்கிற
நாளொன்றில்
மீண்டும் சொல்வேன்..

பெருங்காவியமென
விரிந்திருக்க
வேண்டிய
ஒரு இதிகாசம்
சில கண்ணீர்க்
கவிதைகளாய்
முனகி துடிக்கும்
நம் துயர்க்கதையை..

Page 6 of 9

Powered by WordPress & Theme by Anders Norén