Tamil_M.A-0013

என்னிடம் சொல்ல
இதை தவிர
வேறு ஏதேனும்
இருக்கிறதா

என்ற கேள்வி
ஏதோ ஒரு புள்ளியில்
தொக்கி நிற்பதாக
உனக்கு என்றேனும்
தோன்றி இருக்கிறதா?

வலிந்து முகத்தில்
ஒரு புன்னகையையும்…
உணர்ச்சியற்ற
உரையாடல்களையும்
நிகழ்த்தி நிகழ்த்தி
கையறு நிலைப்பட்ட
பொம்மலாட்டமாய்
உறைந்துப் போன
நாளில் தான்..
விடையற்ற
வினாக்களுக்குள்
தொலைந்து விட
துடிக்கிறாய் .

நிகழ்காலம்
இறக்கத்துடிக்கிற
மெழகுத்திரியாய்
மின்னி நடுங்க..
இறந்த காலமோ
உருகி வழிகிறது..
நினைவுகளாய்.

நிலா உரசும்
மலை முகட்டு
இரவுகள்
இதற்கு பின்னரும்
வரலாம்.

முகத்தில் மெல்லிய
துணியாய் வெளிச்சம்
படரும் பேருந்துப்
பயணம் இதன்
பின்னரும் நிகழலாம்..

எதனாலும்
அமைதியுறாத
அலைகழிப்பின்
இப்போதைய
சமாதானங்கள் இவை
என்பது
உனக்கும் தெரியும்.
எனக்கும் தெரியும்.

………..

விடு விடு..

என்னால்
என் வேதனையை
என் மொழியால்
விவரிக்க முடியவில்லை.

மூங்கில் வன
தனிமையினை…
சுவாசமாய்
சுமந்து வரும்
ஒரு புல்லாங்குழல்
கொடு..

வாசித்துக்காட்டுகிறேன்..

இரக்கமற்ற
சொற்களின்
விரல்களால்
என் ஆன்ம நிலத்தில்
நீ விதைத்திருக்கிற
நிராசை விதைகளால்
வேர் முழுக்க முள்
பூத்துக் கிடக்கிற
நாளொன்றில்
மீண்டும் சொல்வேன்..

பெருங்காவியமென
விரிந்திருக்க
வேண்டிய
ஒரு இதிகாசம்
சில கண்ணீர்க்
கவிதைகளாய்
முனகி துடிக்கும்
நம் துயர்க்கதையை..