பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: திரை மொழி Page 3 of 4

மேற்குத் தொடர்ச்சி மலை- யதார்த்த அழகியலின் திரைமொழி.

 

 

ஒரு நாள் இலக்கிய நணபர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு வந்தது. அப்போது என் பக்கத்தில் இருந்த ஒரு மூத்த எழுத்தாளர் வெகு சாதாரணமாக விடுதலைப் புலிகளிடம் இருந்த பணத்திற்கு ஏதேனும் ஒரு தீவை விலைக்கு வாங்கி கொண்டு தங்களுடன் வரும் மக்களோடு அங்கே சென்று ஒரு நாட்டை கட்டியிருக்கலாமே என்று கேட்டார். கேள்வி மிக எளிதுதான். அவர் என்னிடம் கேட்க விரும்பியது ஏன் அதே நிலத்தை தக்கவைக்க பிடிவாதமாக உயிரை விடுகிறார்கள் என்பதுதான்.

அவர் ஒரு முற்போக்கு பிராமணர். பூணூலெல்லாம் அணிந்துக் கொள்ள மாட்டார் . மார்க்சிய சித்தாந்தத்தில் நாட்டமுடையவர். அவர் கேட்ட கேள்வி அங்கு இருப்பவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் நியாயம்தானே என்று யோசிக்கும் அளவிற்கு குழப்பியது.

நிலத்திற்காக உயிரையா இழப்பார்கள்.. என்ற கேள்விக்கு ஒரு பூர்வக்குடி மனிதனால் என்ன பதில் சொல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?

ஆம். நிச்சயம் உயிரை விட தாய்நிலம் மகத்தானது. அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால் அந்த அறிவு ஜீவி பார்ப்பனரால் என் பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவரது தவறும் இல்லை. பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கு தாய் நிலப் பற்று இருப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு என தாய்நிலம் என்று எதுவும் இல்லை. தாய்நில நேசிப்பதென்பது பூர்வ குடிகளின் தனித்துவக் குணம். எந்த தாய்நிலத்தில் ஒரு பூர்வக்குடி பிறந்தானோ அதே தாய் நிலத்தில் தான் இறக்கவும் அவன் விரும்புகிறான். அந்த மண்ணோடு அவன் மண்ணாக மட்கி மாறுகையில் தான் அவன் நிறைவுறுகிறான்.

ஒரு பூர்வக்குடியின் இந்த மகத்தான தாய் நில நேசிப்பு உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் , அரசியல் ஆகியவைகளால் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதை ஒரு புனைவிற்கு அப்பாற்பட்ட எதார்த்த அழகியலோடு சொல்லப்பட்டிருக்கிற திரைப்படம்தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

திரைப்படம் என்பது ஒரு புனைவிற்கு முடிந்தளவு நேர்மை செய்கிற காட்சி அழகியல் ஊடகம். தன் முன்னால் விரிகிற அந்தக் காட்சியில் பார்வையையும் ஒரு பாத்திரமாக உணரவைத்து அவனையும் உயிரோடு அதில் உலவவைத்து… திரையோடு ஒன்றிட வைக்கும் மகத்தான ஒரு வித்தை தான் திரைப்படம். அந்த வித்தையை மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக நிகழ்த்தி இருக்கிறது.

அந்த மலை வனம். பூச்சிகளின் ரீங்காரம். பறவைகளின் ஓசை. பசும் ஈரம் நிறைந்த ஏற்ற இறக்கமான வழித்தடங்கள். எப்போதும் வீசிக் கொண்டிருக்கிற ஊதற்காற்று, என திரையரங்கு குள்ளேயே நம்மை மலை வனம் ஒன்றின் பசுமை மணத்தை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. அவருக்குப் பக்கபலமாக ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வரும், இசைஞானி இளையராஜாவும் செயல்பட்டிருக்கிறார்கள்.

கால்வலியும் , களைப்பும் நேர வைக்கிற ஓங்கி உயர்ந்த நெடிய மலை. அதில் தன்னந்தனியனாக தகவல் சொல்பவனாக திரியும் ரங்கசாமி. அவனுடனேயே அலையும் அந்த மலை படுகையில் ஒரு சிறு நிலம் வாங்கும் அவனது கனவு. படம் முழுக்க மலைகளில் வாழுகிற எதார்த்த மனிதர்கள் . மூட்டை தூக்கி தூக்கியே ரத்தம் வருமளவிற்கு இருமிச் சாகும் அந்த முதியவர், மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, தன் கணவனுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிற அந்த எளிய மலை கிராமத்து பெண், கோபமும் எரிச்சலும் இறுதியில் கண்ணீரும் நிரம்பிய அந்த கங்காணி, ஆவேசமும் கொள்கைப்பிடிப்பும் நிறைந்த அந்த செங்கொடி சகா, என படம் முழுக்க உலவுகிற நிஜ மனிதர்களின் உணர்ச்சிக் குவியலே இப்படத்தின் திரைமொழி.

கதையை சில வரிகளில் நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த வாழ்க்கை தருகிற வலியை யாரால் விவரிக்க முடியும்… கதை இதுதான். சிறிய நிலம் வாங்க ஆசைப்படுகிற மலை வாழ் இளைஞன் ரங்கசாமி. வீட்டில் உள்ள அனைத்தையும் விற்று ..மனைவியின் தாலியையும் அடமானம் வைத்து ,நிலம் வாங்க ஏலக்காய் முட்டையை சுமந்து செல்லும் போது அதைச் சற்றே வைத்துவிட்டு நிலத்தை குடும்பத்தோடு வேடிக்கை பார்க்கும் ஒரு பொழுதில் மூட்டை சரிந்து பாதாளத்தில் விழ அவனது கனவு நொறுங்குகிறது. பிறகு தந்தைக்கு வேண்டிய ஒருவரால் அந்த நிலம் வாங்கும் கனவு கடனாக சாத்தியப்பட.. அந்நேரத்தில் எஸ்டேட்டை மூடி தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறான் முதலாளி. தொழிலாளி வர்க்கத்திற்காக நேர்மையாக குரல் கொடுக்கும் உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் இளைஞனுடன் அந்த முதலாளியையும் அவனுக்குத் துணை போன போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரையும் கொன்றுவிட்டு சிறை படுகிறான் ரெங்கசாமி. சில வருடங்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது தன்னிடத்தில் இருந்த ஒரே சொத்தான நிலத்தை விவசாயம் செய்வதற்காக மனைவி வாங்கிய கடனுக்காக அந்த நிலமும் பறிபோக.. என்ன ஆனது ரெங்கசாமியின் கனவு என்பது தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

பூர்வ குடிகள் நிலங்களை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் நிலத்திற்கும், இயற்கைக்கும் ,காடுகள் ,மலைகள் ,சோலைகள் ,தாவரங்கள் என தன்னைச் சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என நம்பி அந்த வனத்தையும் அந்த மலையையும் மட்டுமே உயிராக நினைத்து வாழ்கின்ற எளிய மக்கள் அவர்கள்.

அந்த மலையைத் தவிர.. வனத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அவர்களை பலி கொடுத்தே இங்கே நவீன இந்தியா கட்டப்படுகிறது. வலிமையான பாரதத்தை உருவாக்க பல எளிய மனிதர்களின் வாழ்வும் , கனவும் பலி கொடுக்கப்படுவதை தான் நாம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணீர் மல்க பார்க்கிறோம்.

இப்படத்திற்கு உயிரே இப்படம் கொண்டிருக்கும் கனத்த மௌனம் தான். அதை இளையராஜா முற்றிலும் உணர்ந்திருக்கிறார். மகத்தான அந்தக் கலைஞனுக்கு எங்கெங்கே இசைப்பது என்பதைத் தாண்டி எங்கெங்கே மெளனிப்பது என்பது மிக நுட்பமாக கைவந்த கலையாக இருக்கிறது. சமீபத்திய நம்பிக்கை வரவு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். முழு மலையையும் அப்படியே திரைக்குள் கொண்டு வந்து இயற்கை வெளிச்சங்களோடு படத்தின் அழகியலை மெருகேற்றிருக்கிறார்.

மலையாள திரைப்படங்களில் மட்டுமே நாம் கண்டுணர்ந்த எதார்த்த அழகியல் தமிழ் திரையிலும் ஒளிரத் தொடங்கி விட்டது என்பதற்கான நம்பிக்கைக் கீற்று தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த உலகமயமும் , சுயநல அரசியல் முறைமைகளும் ஒரு மலை வனத்தின் மென் காற்றாய்.. நிலத்தின் உரிமையாளனாய் .. திரிந்துகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு யூனிபார்ம் மாட்டி வாட்ச்மேன் ஆக்கிய கொடும் கதை தான் வீதிக்கு வீதி , ஊருக்கு ஊர் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆவணப்படுத்தியதில் மேற்குத் தொடர்ச்சி மலை முழு வெற்றி அடைந்திருக்கிறது.

இயக்குனர் லெனின் பாரதிக்கு கை நிறைய மலை வனப் பூக்களும்..வாழ்த்துகளும்..

இப்படிப்பட்ட படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

மரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை..

 

 

15726679_234535580304651_6748961008342597201_n

எப்போதும் என் இரவுகளில் தனிமை தகர வாளியின் மீது சொட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல அமைதியற்றது. விரிந்த வானில் தனித்து பறக்கும் ஒரு பறவை போல ஆழ் தனிமையை என் இரவுகள் போற்றுகின்றன. கண் மூடி அமைதிக் கொண்டிருக்கிற இமைகளுக்குள் அமர்ந்து தனிமை வயலின் வாசிப்பதை என் இரவுகள் உணர்ந்திருக்கின்றன. ஆதி வனத்தின் விடியற்காலைப் பொழுதைப் போல களங்கமற்ற தனிமையைத் தான் மரணமும், பிறப்பும் சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு சிறு புன்னகை, இடது கையை இறுக்கி பற்றி தோளில் ஆழப் புதையும் முகம், தீரா அன்பினால் வெம்மைக் கொண்டிருக்கும் அந்த விழிகள் என தனிமைத் தேநீரை ருசிக்க விடாமல் துரத்தினாலும், குளிர்காலப் போர்வைப் போல தனிமையை இறுக்கப் போர்த்திக்கொள்ளவே என் இரவுகள் விரும்புகின்றன.

அப்படி ஒரு பனிக்கால தனிமை இரவில் தான் நான் இத்திரைப்படத்தை காண நேர்ந்தது. என் விழிகளுக்கு முன்னால் விரிந்த காட்சிகளால் நான் உள்ளிழுக்கப்பட்ட போது ..நானும் அத்திரைப்படத்தின் ஒரு அங்கமாகி இருந்ததை உணர்ந்தேன். ஒரு படைப்பில் பார்வையாளனும் ஒரு அங்கமாகி துடிப்பதைதான் படைப்பூக்கத்தின் உச்சம் சாதிக்க விரும்புகிறது என்று நினைத்தால்…அந்த நினைப்பிற்கு இத்திரைப்படம் நேர்மை செய்திருக்கிறது. ஏனோ மிகுந்த தனிமை உணர்ச்சியையும், விழிகள் முழுக்க கண்ணீரையும் தந்து …கூடவே சிறு புன்னகையும் பரிசளித்துப் போனது இப்படைப்பு.

அந்த அரண்மனை..மின்சாரம் இல்லாத பொழுதுகளில் கைவிளக்கு ஏந்திய காரிகையாய் ஐஸ்வர்யா ராய், தன் வாழ்வின் துயர் முடிய கருணைக்கொலை வேண்டி காத்திருக்கும் ரித்திக், அவருக்காக வாதாடும் அந்த பெண் வழக்கறிஞர், ரித்திக்கின் மருத்துவர், அவருக்கு சேவகம் செய்யும் இரண்டு பெண்கள், அவரின் மாணவனாக வரும் அந்த இளைஞன் என…மிகச்சில பாத்திரங்களைக் கொண்டு வலிமையான திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி வழங்கி இருக்கிறார்..

ஐஸ்வர்யாவைப் பற்றி ரித்திக்கின் வழக்கறிஞர் விவரிக்கும் போது.. அவள் தோழிக்கு மேலானவள், அவள் காதலியை மிஞ்சியவள், சொல்லப்போனால் அவள் மனைவியையும் தாண்டியவள்.. என்று விவரிக்கிற காட்சியாகட்டும், கொடுமைக்கார கணவனால் முடியாத ரித்திக்கின் முன்னால் ஐஸ்வர்யா தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்படும் காட்சியிலும், அவரை பிரிந்து ரணமாகி ரித்திக் துயர்க் கொள்ளும் காட்சியிலும் சொல்லப்படும் உணர்ச்சியலைகளாட்டும், இப்படம் எந்த அலைவரிசையிலும் பொருந்தாமல் தனித்து மிளிர்கிறது.

Guzaarish -ஒரு திரைப்படம் என்றெல்லாம் சுருங்க வைக்க முடியாது. அது ஒரு விவரிக்க முடியா அனுபவம். படம் முழுக்க அரூவ கதாபாத்திரமாய் இடம்பெற்றிருக்கும் தனிமையுணர்ச்சியே இத்திரைப்படத்தின் ஆழமான அழகியல். மரணம் கூட ஒருவகை புன்னகைதான்..அது ஒரு ஆறுதல் தான்..என்பதை விவாதிக்கும் இத்திரைப்படம் தரும் அனுபவம் உண்மையில் அபூர்வமானது.

மரணத்தை மிஞ்சவும் வாழ்தலின் துயர் கொடியது என்பதைதான் வாழும் போதே உணரும் ஒவ்வொருவரும் பெற தகுந்த மாபெரும் அனுபவம்..

…………..

சமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.

Kali-Malayalam-Movie-Review-Rating-Public-Talk-Twitter-response-Critics-Reviewசமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan se) சமீப காலமாக வரிசையாக பல மலையாளப்படங்களை கண்டு வருதலில் நான் உணர்ந்தது மலையாளப்படங்கள் கொண்டுள்ள எளிமை.
 
இன்னமும் தன் பண்பாட்டு விழுமியங்களை தனது திரைமொழி மூலமாக ஆவணப்படுத்துகிற மலையாளிகளின் கவனம் பிரமிக்கத்தக்கது. புதியவர்களின் வருகையால் மலையாள திரையுலகம் புத்துணர்ச்சி அடைந்ததுள்ளது. துல்கர் சல்மான், நிவின் பாலி , பஹத் பாசில், சாவித்திரி என மலையாள திரையுலகம் கொண்டிருக்கும் இளைய நடிகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
 
இங்கே தமிழ் படங்களில்..
 
துப்பாக்கிகளும், தாதாக்களும்,புளித்துப் போன அதே சத்தமும், பறக்கும் சுமோக்களும், வீசும் அரிவாள்களும், தெறிக்கும் ரத்தமும், அதே மதுக்கடைகளும், அதே குடிகார கதாநாயகர்களும், இக்காலத்திலும் பொறுக்கிகளையும், ரவுடிகளையும் விரும்பும் அதே லூசு கதாநாயகிகளும், பார்க்கிற நம்மை களைப்படைய செய்கின்றன. 10 நிமிடத்திற்கு ஒரு முறை கூட்டம் கூட்டமாய் ஆடுவதைதான் காதலிக்கிற உணர்வு என்றும், கத்தியால் குத்துபவன் தான் வீரன் என்றும் கற்பிக்கிற இவர்களால் தான் சுவாதிக்கள் பிணங்களாய் ரயில்வே மேடைகளில் கிடக்கிறார்கள்.
 
நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை அக்கம் பக்கம் பார்க்கும் போது புரிகிறது.
 
குறிப்பாக நான் விரும்பும் துல்கர் சல்மான். தமிழ்த்திரையுலகில் 90 களில் இருந்த கார்த்திக் போல பின்னுகிறார். சிறிய காட்சி என்றாலும் முக பாவனை, உடல்மொழி என அனைத்திலும் பட்டையை கிளப்புகிற துல்கரை யாராலும் விரும்பாமல் இருக்க இயலாது.
 
அவர் நடித்த சார்லி, பெங்களூர் டேஸ், 100 டேஸ் ஆப் லவ் , உஸ்தாத் ஹோட்டல், பச்சக் கடல் நீல ஆகாசம் செவ்வண்ண பூமி என பல படங்களை கண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் பார்த்த படம் களி.
 
பிரேமம் புகழ் சாய்பல்லவியும் ,துல்கர் சல்மானும் பின்னிருக்கிற அப்படத்தை வாய்ப்புள்ளோர் காண்க. எளிய சாதாரண திரைக்கதை.. அதை எவ்வளவு அழகாய் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய மலையாள சினிமாவின் ஒரு பானை சோற்று ஒரு சோறு பதமாக இருக்கிறது.
 
நாம் குடிப்பதையும், சோரம் போவதையும் முற்போக்காக காட்டிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தான் ..அவர்கள் மனிதனின் சின்னச்சின்ன குணாதிசியங்களையும்,பெருந்தன்மையையும், நில அழகியலையும் ,பண்பாட்டு சாரங்களையும் ஆவணப்படுத்திக் கொண்டே செல்கிறார்கள்.
 
இங்கே சினிமா அரசியலாகி வெகு நாட்கள் ஆகிறது. வெள்ளித்திரைகளில் தான் நமக்கு வருங்கால முதல்வர் கிடைக்கிறார்.
 
ஆனால் அங்கோ
 
சினிமா – எளிய வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்யும் இன்னொரு இலக்கிய வடிவம்.
 
-மணி செந்தில்

ஷிண்டர்ஸ் லிஸ்ட்(1993 )- இன அழிப்பின் வலி நிறைந்த திரைமொழி

schindlers-list-17523-hd-wallpapers

 

உலக வரலாற்றில் மாபெரும் மனித அழிவு காட்சியாக 1939-45 வருடக் காலங்களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நம் கண் முன்னால் தோன்றுகிறது . மனித குலத்தில் 3 ல் ஒரு பங்கு உயிர்களை பலிவாங்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் நிகழ்த்தி இருக்கிற உளவியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மனித குலத்தின் பாற் நேசமும், சமநீதியும் போதிக்கிற கம்யூனிச கொள்கைகளின் பாற் உலகம் தழுவிய ஈர்ப்பும், எழுச்சியும் இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு பிந்தைய காலக்கட்டங்களில் தான் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வதற்கான போராட்டம் என்பது மனித இனத்தின் தலையாய இயல்பு. உயிரோடு வாழ்ந்திருத்தல் என்கிற ஒரே ஒரு காரணிக்காக மனித இனம் எத்தகைய துன்பங்களையும் ,இழிவுகளையும் தாங்கிக் கொள்கிறது??

அப்படி..உயிர் வாழ்தலின் பொருட்டு மனித இனம் படும் பாடுகளைதான் Schindler’s List (1993) என்ற புகழ்ப்பெற்ற உலகத்திரைப்படம் பேசுகிறது..  இன அழிப்பிற்கு உள்ளான இன்னொரு இனமான தமிழினத்தை சேர்ந்தவர்கள்  என்ற முறைமையில் தமிழர்கள் தேடிப்பிடித்து இத்திரைப்படத்தை காண வேண்டிய அவசியம் இருக்கிறது.

இத்திரைப்படத்தின் பல காட்சிகள் ஈழப்பெருநிலத்தின் வன்னி வதை முகாம்களையும் ,முள்ளிவாய்க்கால் போர்க்கள காட்சிகளையும் நினைவூட்டுகின்றன.

 

 

Schindler's List

 

 

புகழ்ப்பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆஸ்திரேலியாவின் எழுத்தாளுமை தாமஸ் கென்னலி 1982 ஆம் வருடத்தில் எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler’s Ark ] என்ற நாவலை தழுவி இயக்கிய Schindler’s List என்கிற இத்திரைப்படம் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரால் இன அழிவிற்கு உள்ளாகிற யூன இனம் படுகிற பாடுகளை அணுஅணுவாய் சித்தரித்து இருக்கிறது. 1939 ஆம் வருடம் போலந்து இரண்டாம் உலகப்போரில் தொல்வியுற்ற தருணத்தில் இருந்து 1945 ஆம் ஆண்டு செக்கஸ்குலோவியா நாட்டினை நாஜிப்படைகளின் வசமிருந்து சோவியத் படைகள் மீட்கும் வரையிலான 6 வருட வாழ்க்கையினை ஜெர்மானிய வதை முகாம்களில் யூத இனம் படுகிற துயர் வழியே காவியமாய் படைக்கிறது.  தனது வயதான தாய் தந்தையரை உயிர்கொல்லி முகாமான ஆஸ்ட்விச் வதைமுகாமில் இருந்து மீட்டுத்தரும் ஆஸ்கர் ஷிண்டலரின் அலுவலகத்தை நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்க பார்க்கும் ஒரு இளம் பெண், குழந்தைகள் நாஜிப்படைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் ஒளிந்துக்கொள்ளும் காட்சிகள், சிவப்பு நிறந்தில் காட்டப்படும் சிறுமி ஒருத்தி தனியே அந்த கொலைக்களத்தில் நடந்து செல்வது போன்ற காட்சி என இத்திரைப்படம் முழுக்க காட்சிகளால் நிரம்பிய உணர்ச்சிக் காவியமாக விளங்குகிறது. தொடக்கத்தின் ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற ஜெர்மானிய நாஜிக்கட்சியை பிரதான கதாபத்திரம் சுயநலமாக, சம்பாதிக்க யூதர்களின் உழைப்பினை சுரண்ட வந்தாலும், அங்கே நடக்கிற கொடுமைகளை ஒரு மலை உச்சியின் மேல் இருந்து மனம் மாறுவது திருப்புமுனை. நிர்கதியான குழந்தைகள், உணர்வும், உடலும் மரத்துப்போன முகங்கள், இறுதியில் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் இழக்கமுடியாமல் வாழ்வதற்கான போராட்டத்தில் தன்னிலை மறங்கும் மனிதர்கள் என பல்வேறு பட்ட கதாபாத்திரங்கள் நம் ஈழ மண்ணை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.

 

ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற நாஜிக் கட்சி சின்னத்தை பெருமையோடு தனது கோட்டில் அணிந்திருக்கிற ஜெர்மானியர் தொழில் வளர்ச்சி, ஊதியம் தர தேவையற்ற யூத அடிமைகளின் உழைப்பு ஆகியவற்றை முன் வைத்து போர்கோட்சே என்று அழைக்கப்பட்ட யூத முகாமிற்கு வந்து சேர்கிறார். பெரும் செல்வந்தரான அவர் தனது பணபலத்தைமுன் நிறுத்தி அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் பலவிதமான முறையில் சிகரெட்டுகள்,சாக்லெட்டுகள்,விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கையூட்டாக அளித்து செல்வாக்கு உடைய நபராக திகழ்கிறார். அந்த வதை முகாமில் தலைமை நாஜி ராணுவ அதிகாரியாக இருக்கிற ஆமன் கோத் பல கொடுமைகளை செய்து யூத மக்களை கருணையற்ற முறையில் கொலை செய்து வருகிறார்.  தன்னிடம் பணிபுரிகிற இஸ்தக் ஸ்டெரன் என்கிற யூத இனத்தை சேர்ந்த கணக்காளரின் உறவினால் ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாற தொடங்குகிறார். ஒரு மலை உச்சியின் மீது நின்று அந்த அந்த யூத முகாமில் தன் மனைவியோடு பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாறுகிறார். அந்த கொடுமை நிலையில் இருந்து யூத இன மக்கள் 1100 பேரை எப்படி காப்பாற்றினார் என்பதை தான் 3 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளாக இத்திரைப்படம். ஆஸ்கர் ஷிண்டலராக லியம் நிசனும்,அவரிடம் மனமாற்றம் ஏற்பட வைக்கும் யூத கணக்காளராக காந்தி திரைப்படத்தில் நடித்த பென் கிங்க்ஸ்லியும், கொடுமையான நாஜிப்படைஅதிகாரி ஆமன் கோத் கதாபாத்திரத்தில்  இரால்ப் பியன்சும் நடித்துள்ளனார்.  1993-ல் வெளியான இத்திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டு இருந்தாலும் ஆஸ்கர் ஷிண்டலரால் காப்பாற்றப்பட்ட அந்த 1100 யூத மக்களும் 6000 பேராக விரிவடைந்து ஷிண்டலர் சந்ததியினர் என உலகத்தினரால் அழைக்கப்பட்டு ஆஸ்கர் ஷிண்டலர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் அந்த இறுதி காட்சி வண்ணத்தில் படமாகப்பட்டுள்ளது ஏகப் பொருத்தமானது.  

 

இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரும் ஒரு யூதரே. இத்திரைப்படத்தை இயக்க அவர் ஏதும் ஊதியம் வாங்கவில்லை என்கிறார்கள். யூதப்படுகொலைகள் குறித்து நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நிறைய காணொளிக் காட்சிகள் இணைய வெளிகளில் காணக்கிடைக்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் யூத இனத்தை சேர்ந்தவர்களின் பங்கு மிகுதியாக இருக்கிறது. யூத இன அரசியல், அதன் பரவலாக்கம், இஸ்ரேலிய அரசு உருவாக்கம் ஆகியவற்றின் மீது நமக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. இன்றளவும் பாலஸ்தீன பூர்வக்குடிகள் சிந்துகிற உதிரத்தில் இஸ்ரேலின் கைரேகை படிந்துள்ளது. ஆனால்  தன்னினம் அடைந்த துயரை ஒரு காயமாக ஆன்மாவில் தேக்கி வைத்து, அக்காயத்தையே மூலதனமாகக் கொண்டு தங்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கியதில் யூத இனம் வெற்றியடைந்து இருப்பது, இன அழிவிற்கு உள்ளான தமிழ்த்தேசிய இனம் போன்ற இனங்களுக்கு பாடமாக இருக்கிறது.

சக மனிதனை நேசிக்கும் உள்ளம் இறைவனுடையது என்பார்கள். அத்தகைய இறைவனாக Schindler என்ற ஜெர்மானியர் பல யூதர்களின் உயிரை காக்க அனைத்தையும் இழக்க துணிகிறார். திரைப்பட முடிவில் தன்னிடம் இருக்கிற தங்க பொத்தானை காட்டி ..இதனையும் விற்றிருந்தால் இன்னும் 2 யூதர்களை காப்பாற்றி இருப்பேனே என கலங்கித்துடிக்கும் போது…மனித குணத்தில் சக மனிதனை காரணமில்லாமல் நேசிக்கும் மனித நேயமே மகத்தானது என்கிற உண்மையை நாம் நமக்குள் உணர தொடங்குகிறோம். துளித்துளியாய் கசியும் தேன் துளி போல..நமக்குள்ளாக சக மனிதன் மீது,மனித இனத்தின் மீது நேசிப்பை சுரக்க வைப்பதுதான் இந்த உலகத்திரைப்படம் நமக்குள்ளாக நிகழ்த்தும் வித்தை.

உலகம் அழகானதுதான். நாம் தான் உலகத்தை நரகமாக்கி வைத்திருக்கிறோம்.

உயிர் வாழுகிற விலங்கினத்தில் மிகப்பெரிய அபாயகரமான விலங்காக மாறி அனைத்தையும் வேட்டையாடி புசிக்கிற மனிதன்..தனக்குள் இருக்கிற நேச ஊற்றை தோண்டிப்பார்க்க…அவசியம் இத்திரைப்படத்தை காணவேண்டும்.

ஆஸ்கர் ஷிண்டலர் யூத மக்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அன்று ஜெருசலம் அருகே அவர் நட்ட மரமொன்று இன்றளவும் இனம் ,மொழி,சாதி, பிரிவுகள் கடந்த உலகம் தழுவிய மனித நேயத்திற்கு சாட்சியாக விளங்குகிறது.

இத்திரைப்படத்தை பார்த்து விட்டு..இறுதியில் நமக்குத் தோன்றுவது இதுதான்.

மனித அவஸ்தைகளை தாண்டி உலகில் வலிமைமிக்க துயர் எதுவும் இல்லை.அத்துயரை தீர்க்க முனையும் ஒரு கனிவு மிக்க இதயத்தை விட இறைவன் எங்கும் இல்லை.

லிங்கா..  கலைந்த கனவும்,மாறி வரும் இரசனைகளும்.

                  lingaa-poster உச்ச நட்சத்திரங்கள் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழகத்தில் நாம் தரிசிக்கும் அதே மாறா காட்சிதான்.  மழைக்காலங்களில் மின்னிடுகிற சுடு வெயில் பொழுதொன்றில்.. அத் திரையரங்கின் முன் திரண்டியிருக்கிற ரசிகர் கூட்டம் கத்திக் கொண்டிருக்கிறது. திடீரென்று கையில் பால்பாக்கெட்டுகளோடு நாலைந்து பேர் ’தலைவா’ என கத்திக் கொண்டு ஒடி வருகிறார்கள். “சர சர” வென்று அந்த கட் அவுட் மூங்கில்களில் ஏறி தங்களது தலைவர் முகத்தில் பாக்கெட் பாலை பீய்ச்சி அடிக்கிறார்கள். இதற்கு நடுவே திரையரங்கு வாசலில் இருந்து ஒரு சத்தம். டிக்கெட் கொடுங்கறாங்கடோய்…. அனைத்து கூட்டமும்  குறுகிய அத்திரையரங்கு வாசலை நோக்கி நெறுக்கி தள்ளுகிறார்கள். திரையரங்குள்ளும் அந்த ரசிகர்களின் ஆட்டம் தொடர்கிறது. திரைப்படம் தொடங்கியவுடன் திரையில் மின்னும் SUPER STAR என்னும் எழுத்துக்களை கண்டவுடன் திரையரங்கமே இடிந்து விழும் அளவிற்கு கூச்சல்..பிறகு முதல் பாடலின் போது காரில் இருந்து இறங்கும் தங்கள் தலைவரின் முகமே தெரியாத அளவிற்கு பேப்பரை கிழித்து எறிந்து உச்சத்தை தொடும்  இந்த ரசிகர்கள் ..அடுத்தடுத்த காட்சிகளில் அமைதியாகிறார்கள். திரைப்படத்தின் இடைவெளிகளில் கூடும் இந்த ரசிகர்கள் ”இனிமே தாம்பா படமே” போன்ற வார்த்தைகளில் ஆசுவாசம் கொள்கிறார்கள். மீண்டும் திரைப்படம் ஓடி முடிவடைகிறது. ஏறக்குறைய 3 மணி நேர கனவு கலைந்த துயர்கொண்டு அமைதியும், சோர்வுமாக கலையும் அந்த ரசிகர்களை பார்த்து நமக்குள் எழுகிற கேள்வி..

ரஜினியின் யுகம் முடிவடைந்து விட்டதா…?

 70களின் பிற்பகுதியில் இருந்து தொடங்கிய திரைப்படம் காண்போரின்  ரசிக அலைவரிசை 2010க்கு பிறகு மாறி இருக்கிறதோ என சமீப காலமாக வெற்றியடையும் பல திரைப்படங்கள்   சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இக்கால திரைப்படங்களுக்கு கதாநாயக,கதாநாயகி பிம்பங்கள் தேவையில்லை. பாடல்கள் கூட வேண்டாம். பின்ணணி இசையை முன்ணனி இசையாக போட்டுக் கொள்ளலாம். பறந்து,எழுந்து, துடித்து, அடிக்கும் பரபர சண்டைக் காட்சிகள் தேவையில்லை. உதடுகள் பிரியும் அளவிற்கு உதிரும் புன்னகையை வர வைத்தால்  அதை காமெடி காட்சியாக கருதி விடலாம். சொல்லப் போனால் கதையே தேவையில்லை என்பதை கதை திரைக்கதை வசனம் இயக்கம் காட்டி விட்டது. பயமுறுத்த வேண்டிய பேய் படங்களும் காமெடிப்படங்களாக சிரிக்கின்றன.

ஏற்கனவே வழமையாக காலங்காலமாக திரைப்படங்கள் மூலம் திரையாசிரியர்கள் நிறுவி இருக்கிற பிம்பங்களினை கலைத்துப் போடுதலை..பிம்பங்களை அழித்தலைத்தான் சமீபத்திய வெற்றி படங்களின் கதையாக விரிகிறது இக்காலம் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு மிக கடின காலம் தான்.

சத்தம் போட்டு புள்ளி விபர வசனம் பேசி, ஒற்றைக்காலை ஊனி ,  மற்றொரு காலால் வில்லனை உதைத்து,பொதுமக்கள் சூழ விஜயகாந்த் கதாநாயகனாக நடந்து வந்த காலங்களில் கொண்டாடிய ரசிகர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மலையூர் மம்பட்டியான் என வெள்ளி விழா கொண்டாடிய ஒரு திரைப்படம் மீண்டும் ரீ மேக்கான போது வாங்க ஆளில்லை.   ஒரு காலத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் ஆக்‌ஷன் கிங் அவதிக்கு உள்ளாகிறார் . ஒரு காலத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக தொடர்ச்சியாக அளித்த இயக்குனர் விக்கிரமனின் அடுத்த படம் என்ன என்பது  யாருக்கும் தெரியாது .  இயக்குனர் பாரதிராஜாவின் அண்மைப்படம் அன்னக்கொடி வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தடமிழந்தது. மணிரத்தினத்தின் இராவணன் படம் தோற்கிறது. அக்காலக்கட்டத்தின் மாபெரும் நட்சத்திரங்களான பிரபும், சத்தியராஜீம் கிடைக்கிற கதாபாத்திரங்களில்  தங்களை பொருத்திக் கொள்ள போராட வேண்டியிருக்கிறது.

இக்காலக்கட்டத்தில் தான் ரஜினிகாந்தின் லிங்கா வெளி வருகிறது. பெரும்பாலும் 35 மேல் வயதாகி விட்ட ஒரு தலைமுறை ரசிகர் கூட்டத்தை இத்தனை ஆண்டு காலம் தக்க வைப்பதே ஒரு சாதனைதான்.  அதனால் தான் ஒரு ரஜினி படத்தின் வெளியீட்டிற்கு முன் வழக்கமாக எழும்பும் ரஜினியை அரசியலுக்கு அழைத்தல்கள் இப்பட ஒலிப்பேழை வெளியீட்டின் போதும் நடந்தது. இம்முறை ரஜினியை இயக்குனர்கள் அமீர்,சேரன் ஆகியோர் அரசியலுக்கு அழைத்தனர். இயக்குனர் சேரன் காந்திக்கு பிறகு ரஜினிதான் என போட்டுத்தாக்கினார். ”இன்னும் எத்தனை நாளுக்குய்யா ஒரே ஆளையே அரசியலுக்கு கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க” என எரிந்து விழுந்தார் இயக்குனர் பாரதிராஜா. ரஜினிதான் வந்து தமிழ்நாட்டை காப்பாத்த வேண்டும் என்கிற அவசியமில்லை என்று குரல் எழுப்பினார் நாம் தமிழர் சீமான்.

இப்படி ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டின் போதும் அரசியல் சார்ந்த சர்ச்சைகள் ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது வழமை. பாட்சா பட வெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சு,முத்து திரைப்படத்தில் அந்த நாடக காட்சி, அருணாசலம்,பாபா திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள், என அனைத்து ரஜினி படங்களும் ரஜினியை அரசியலுக்கு அழைப்பு விடுப்பவனாகவே அமைந்தன. இவையெல்லாம் ஒன்று சேர்த்து பார்க்கும் போதெல்லாம் திட்டமிட்டு தான் இது போன்ற காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா என்கிற சந்தேகம் எளிய பார்வையாளனுக்கு பிறப்பது எளிது.

அவ்வகையில் லிங்கா ஒரு வழக்கமான ரஜினி படமா என்றால் ஆம்/இல்லை என்கிற ஒற்றைப் பதிலை சொல்ல முடியாத குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர்.கே.எஸ்.ரவிக்குமார். பெரும் செல்வந்தர் ஒருவர் தனது செல்வத்தை எல்லாம் மக்களுக்கு வாரி வழங்கி விட்டு எதுவுமற்ற ..ஏறக்குறைய ஒரு துறவு மனநிலையில் வாழ்வது போன்ற காட்சிகளை திட்டமிட்டு/திட்டமிடாமல் தொடர்ச்சியாக தன் படங்களில் இடம் பெற செய்கிற ரஜினிகாந்த் லிங்கா பட ஒலிப்பேழை வெளியீட்டின் போது தன் இளைய மகளுக்கு புதிதாக ஏதும் சம்பாதிக்க வேண்டாம். தான் சம்பாதித்தை பாதுகாத்தாலே போதும் என அறிவுரை வழங்கியது காட்சியியல் முரண்.

முல்லை பெரியாற்று அணையை கட்டிய பென்னிக்குயிக் அவர்களின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இது என லிங்காவை யாரும் பாராட்டி விடக் கூடாது (?) என்பதில் இயக்குனர் மிக கவனம் கொண்டிருக்கிறார். ஏனெனில் அயல் நாட்டில் பிறந்தாலும் ஒரு பகுதி மக்களின் பசியை,வறுமையை, வாழ்வியல் தேவையை உணர்ந்தவர் பெருமகன் பென்னிக்குயிக் .கடலில் கலந்து வீணாகும் தண்ணீர் மக்களின் வயிற்றில் நீராக,சோறாக சேரட்டும் என சிந்தித்த பென்னிக்குயிக் முல்லை பெரியாறு அணையை கட்ட தனது செல்வங்கள் அனைத்தும் இழந்தார் என்பது தியாக வரலாறு. அந்த வரலாற்றின் துளிகளை ரஜினி என்கிற உச்ச நட்சத்திரத்திற்கு ஏற்றாற் போல் மாற்றியமைப்பதில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு கடுமையான குழப்பங்கள் .

ஒரு உச்சநட்சத்திரமாக விளங்குகின்ற ஒருவரின் 60 வயதிற்கு மேற்பட்ட அவரது திரைப்பட முயற்சிகள் எப்படிப்பட்ட விமர்சனங்களை எழுப்பும் என்பதை ரஜினி அறியாதவரல்ல.  ரஜினியை போலவே இந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் தன் வயதிற்குரிய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. ரஜினிகாந்தை விட வயதில் இளையவர்களான அவரது சக நட்சத்திரங்களான விஜயகுமார்,பிரபு,சத்யராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் தந்தையாக, தாத்தாவாக நடிக்கத் தொடங்கி விட்டனர். தெலுங்கில் உச்ச நட்சத்திரமான என் டி ஆர் தீவிர அரசியல் பிரவேசத்திற்கு பிறகு 1984க்கு பிறகு மீண்டும் 1991  –ல் பிரும்மரிஷி விஸ்வாமித்ராவில்  கதாநாயகனாகவே நடிக்க வந்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . ஆனாலும் தமிழகத்தின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் தனது சக நட்த்திரமான சத்ருகன் சின்ஹா வின் மகள் சோனாக்‌ஷி சின்காவோடு கதாநாயகனாக நடிப்பது என்பது மிகு நம்பிக்கைதான்.

இரு வேடங்கள். ஒருவர் திருடன்.மற்றொருவர் மக்கள் மனங்கவர்ந்த மாமனிதர் என்கிற சிறு முடிச்சியை (Knot) வைத்துக்கொண்டு, பென்னிக்குயிக் கதையை நகல்.. எடுத்து மன்னிக்க ..இப்பொதெல்லாம் இன்ஸ்ப்ரேஷன் தான் , ரஜினிக்கென்று வழமையாக கிளிஷேக்களை கொண்டு திரைமொழி படைத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். சந்தானம் மற்றும் இளைய நடிகர்களோடு ஒரு மேக்கப் ரஜினியை உலவ வைத்தால் போதும் இளமையான ரஜினியை உருவாக்கி விடலாம் என்று ரவிக்குமார் நினைத்திருக்கிறார் போலும். அம்முயற்சியில் ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளாரா என்பது கேள்விதான். சில குளோசப் காட்சிகள்,நடன அசைவுகள்,வழக்கமான ரஜினிக்கென்று வசப்பட்டிருக்கிற துறுதுறுப்பின்மை போன்ற காட்சிகளில் தான் ரஜினியின் உண்மை வயதை நாம் உணர்கிறோம். ஆனால் இதையெல்லாம் தாண்டி தனது வயதை காட்டிக் கொள்ளாமல், கடுமையான நோய் பாதிப்புகளிலிருந்து மீண்டு தன்னால் இன்னமும் எல்லாம் முடியும் என நடித்திருக்கிற ரஜினியின் தன்னம்பிக்கை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. அது இத்தனைக் காலம் தன் பின்னால் திரண்டிருக்கிற தனது ரசிகர்கள் மீது அவர் கொண்டிருக்கிற நம்பிக்கை எனவும் கொள்ளலாம்.

திருடனாக இருக்கிற லிங்கா தனது தாத்தாவான ராஜா லிங்கேஸ்வரன் மீது அதிருப்தியில் இருக்கிறார். அனுஷ்கா மூலமாக சோலையூர் கிராமத்திற்கு செல்லும் லிங்கா தனது தாத்தா கட்டிய அணை பற்றிய வரலாற்றினை அறிகிறார். அந்த அணைக்காக தனது தாத்தா தனது பதவி,அதிகாரம் ,சொத்து என அனைத்தையும் இழந்து சமையல்காரனாக மாறிப்போன கதையை கேட்டு நெகிழ்கிறார். சம காலத்தில் அணைக்கு உள்ளூர் எம்.பி மூலம் ஏற்படும் அபாயத்தை பைக்கில் சீறி,பலூனில் பறந்து, வெடிக்குண்டை தண்ணீரில் வெடிக்க வைத்து தடுக்கிறார். வழக்கமாக இறுதிக்காட்சியில் வரும் போலீஸ் காரராய் கே.எஸ் ரவிக்குமார் வர,அவரோடு அனுஷ்காவையும் அழைத்துக் கொண்டு  விசாரணைக்காக (?) செல்கிறார். இதுதான் கதை. ரஜினி படத்திற்கே உரிய வேகமான கதையோட்டம் படத்தில் இல்லை. ரஜினியை பறக்க,தாவ வைக்க உதவுகிற கிராபிக்ஸ் காட்சிகளும் அவ்வளவாக எடுபடவில்லை.

படத்தில் நிறைய காலத்தகவல் குழப்பங்கள். இரயிலில் கொள்ளையடிக்கும் வரும் தீவிரவாதியை பார்த்து நீ சுபாஷ் சந்திர போஸ் படையில் சேர் என்பது போல அறிவுறுத்துவது காலக் குழப்பத்தை காட்டுகிறது. 1939 களில் சுபாஷ் சந்திர போஸ் ஆயுத போராட்டத்தினை தொடங்கவில்லை . 1939 ஆகஸ்ட் வரை காங்கிரசின் தலைவராகவே சுபாஷ் சந்திரபோஸ் விளங்கினார். அதே போல 1939 களில் ரஜினி இரயிலில் படித்து வருகிற ஜோசப் காம்பெல் எழுதிய A hero with thousand faces என்ற புத்தகம் 1949ல் தான் பதிக்கப் பட்ட நூலாகும்.

மேலும் ரஜினிகாந்த் ஆங்கிலேய அதிகாரிகளிடம் இந்திய பெருமிதம் பேசும் 1939 காலங்களில் ஏறக்குறைய அனைத்து ஜமீன் தார்களும், குறு நில மன்னர்களும் ஆங்கிலேயர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு ,பிரிட்டிஷ் மகாராணி விசுவாசம் உடையவர்களாக மாற்றப்பட்டிருந்தார்கள் . தன்னிச்சையாக ஒரு அணை கட்டும் அளவிற்கு ஒரு இந்தியரை பிரிட்டிஷ் வல்லாதிக்கம் அனுமதிக்குமா என்பதும், தேசியக் கொடியோடு சாதி,மத பேதமற்று இந்தியராய் ஒரு அணை கட்டுமானப்பணியில் இணைய அனுமதிக்குமா என்பதெல்லாம் ரஜினி படங்களுக்கே உரிய கேட்கக் கூடாத கேள்விகள்.

சந்தானத்தின் ஸ்பாட் (spot ) காமெடியும்,அணை உருவாக்கமும், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலும் நேர்த்தியும் திரைப்படத்தில் முக்கிய அம்சங்கள் .ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோர்ப்பில் இது மற்றொரு படம் அவ்வளவே.

ஒரு உச்ச நட்சத்திரம் தன்னை நிலை நிறுத்த மேற்கொள்ளும் பாடுகளை ஏற்கனவே தமிழ்சினிமா எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நட்சத்திரங்கள் வாயிலாக உணர்ந்திருக்கிறது . மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தோடு எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனதும், படையப்பா திரைப்படத்தில் சிறு வேடத்தில் சிவாஜி கணேசன் வந்து போனதும் திட்டமிட்டு நடந்தவை அல்ல. பிரபு,சிவக்குமார் நடித்த உறுதிமொழி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது அதனை பார்க்கச்சென்ற சிவாஜி கெஸ்டா வந்திருக்கேண்டா என்று கலங்கிய சிவாஜியை நீங்க நடிச்சி முடிச்ச தாண்ணே இப்ப நாங்க நடிச்சிகிட்டு இருக்கோம் என ஆற்றுப்படுத்தியாக நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இது போல் அல்லாது ..கதையின் நாயகனாகவே தொடர விரும்பும் ரஜினி தான் இத்தனை ஆண்டு காலமும் உழைத்து நிறுவி இருக்கிற இளமையும்,துள்ளலும் ,வேகமும் நிரம்பிய தனது நாயக பிம்பத்தை..தனது முயற்சிகளாலேயே சிதைத்து விடும் அபாயம் இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைதான் லிங்கா திரைப்படம்  அவருக்கு உணர்த்தியிருக்கும்.

அவரது சம கால நண்பர் கமல்ஹாசன் சமீப படங்களில் மரங்களை சுற்றி பாட்டு பாடி வருவதை நிறுத்தி விட்டு ஏதோ வித்தியாசமாக செய்துவிட உழைத்துக்கொண்டு இருப்பதும் ரஜினி அறியாதது அல்ல. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரோஜர் மூர்,மார்கன் ப்ரீமென் போன்றவர்கள் இன்றளவும் உச்சத்தில் தொடர்வதற்கான சாத்தியங்களில் இருக்கிறார்கள். அவர்கள் செய்வது  மேக்கப் மேன் உள்ளீட்ட எவரையும் நம்பாமல்,கிராபிக்ஸ் உள்ளீட்ட  எதையும் நம்பாமல் அவர்களாவே வருவது. தனக்குள் இயல்பாக ஊறி இருக்கிற கலை அம்சத்தை மீட்டெடுத்து தக்கவைப்பதுதான் ஒரு கலைஞனின் வாழ்நாள் பணி. முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல் என தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினி என்கிற கலைஞனின் கலையம்சம் கேள்விக்குபட்டதல்ல.

ஆனால் காலமும்,லிங்கா போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் ரஜினி என்கிற கலைஞனின் கலையம்ச உணர்வினை கேள்விக்குட்படுத்தி விடுகிற அபாயம் இருக்கிறது.

அந்த அபாயத்திற்கு பயந்து தான் மகேந்திரன் ,பாரதிராஜா போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் ஒரு கண் அசைவிலேயே கலை நுண் உணர்வினை நிறுவிய ரஜினிகாந்த் இப்படி லிங்காவில்  பலூனில் எல்லாம் பறக்க வேண்டி உள்ளது.

இப்படி சிரமங்களெல்லாம் படாமல் ரஜினிகாந்த் தனது வயது, தனது பிம்பம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு கலைஅம்சம் சுடரும் ஒரு முழுமையான கலைஞனாய் வெளிபட  உதவும் ஒரு படைப்பாளிதான் ரஜினிகாந்தின் இன்றைய தேவை.

-மணி செந்தில்

[email protected]

கண்களால் எழுதிய கலைஞன் –பாலுமகேந்திரா.

                
 
 
அது ஒரு பாடல் காட்சி.  கதாநாயகனும்,கதாநாயகியும் ஊட்டியின் மெல்லிய குளிரை அனுபவித்தவாறே ஏரிக்கரையில் பேசிய படி நடந்து செல்வார்கள். பின்ணணியில் இளையராஜாவின் மெல்லிய செவ்வியல் இசை கசிந்துக் கொண்டிருக்கும். மலரே மலரே ..உல்லாசம் என தொடங்கும் அப்பாடல் (http://www.youtube.com/watch?v=BG8n2RRvDxU ) இடம் பெற்ற திரைப்படம் ரஜினிகாந்த்,மாதவி நடித்த மறைந்த மாமேதை பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் .
 
          அவர் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள திரையிசைப்பாடல்கள் இளையராஜாவின் நுண்ணிய நெய்தலால் ஆழ்மனதிற்குள் பாயும் வல்லமை உடையவை. செவிகளால் கேட்கும் போதே பரவசத்தையும்,சோகத்தையும், காதலையும், கண்ணீரையும் தர வல்ல அப்பாடல்களை தனது ஒளித்தூரிகையினால் ஆகச்சிறந்த நிகழ் ஒவியங்களாக செதுக்குவதில் பாலுமகேந்திரா வல்லவர் .
 
பொதுவாக அவர் படங்களில் உரையாடல்கள் குறைவாக இருக்கும் . அவரின் திரைப்படப் பாடல் காட்சிகளிலோ கதாநாயகனும்,நாயகியும் உரையாடிக் கொண்டே இயற்கை சூழ் பகுதிகளில் நடந்து சென்று கொண்டு இருப்பார்கள். டாடா சுமோக்களில் அடியாட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வீச்சரிவாக்களோடு நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என கத்திச்செல்லும் கதாநாயகர்களை அவர் பாடங்களில் நீங்கள் பார்க்க இயலாது.  அவரது பட கதாநாயகன்  சாதாரணன். சராசரி மனிதனுக்குள்ள அனைத்து பலவீனங்களும் அவனுக்கும் உண்டு. அவரது படத்தின் நாயகிகள் அன்றாடம் நாம் சாலையிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வீடுகளிலோ சந்திக்கும் பெண்கள். இப்படி தனது படத்திற்கான திரைமொழியை இயல்பு மீறாமல் பாதுகாத்து கொள்வதில் பாலுமகேந்திரா ஒரு மேதை.
 
அவரது ஒளி மொழி தனித்துவமானது.  இயற்கையாக நாம் எதிர்க்கொள்ளும் ஒளியின் அளவீடுகளை உணர்ந்து அதைத்தான் தன் திரைப்படங்களுக்கான ஒளி அளவாக அவர் பயன்படுத்தினார். அதனால் தான் அவர் திரைப்படங்களில்  பெய்யும் மழை , ஒளிரும் வெயில் ,அலை பாயும் கடல்,பசுமை வழியும் கானகம், பழங்காலத்து சிதிலமான கோவில், கருமை சுமக்கும் கற்சிற்பங்கள் , ஏகாந்த ஏரி என அனைத்தும் அவர் படங்களில் பேசின.
அவர் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன  ” நெல்லு” என்கிற மலையாளப்படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பாலுமகேந்திரா பெற்றார். அவர் தன்னை ஒளிப்பதிவாளராகத்தான் எப்போதுமே கருதிக்  கொண்டார். காட்சியமைப்பிலும், ஒளி அளவிலும் அவர் செலுத்திய கவனம் அலாதியானது. எடுத்துக்காட்டாக நீங்கள் கேட்டவை படத்தில் ”கனவு காணும் வாழ்க்கை யாவும் “                           ( http://www.youtube.com/watch?v=yEiF1a8b-Lo ) என்ற பாடலில்  வாழ்க்கை நிலையாமை குறித்த அடுக்கடுக்கான  உதிரிக் காட்சிகளை அவர் அடுக்கி இருக்கும் விதம் அப்பாடலை ஆகச்சிறந்த பாடலாக்கியது. தண்டவாளத்தில் காது வைத்து கேட்கும் கமலையும் , ஸ்ரீதேவியையும் ரயில் கடந்து சென்றதை நாம் கண்டோம். நம்மால் இது வரை கடக்க முடியாமல் நிற்கிறோம்.
 
ஒளிப்பதிவாளராக பல மலையாள படங்களில் தடம் பதித்த பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. ஏற்கனவே உதிரிப்பூக்களில் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருடன் கைக் கோர்த்த இருந்த  மகேந்திரன்  “முள்ளும் மலரும்” படத்தில் பாலு மகேந்திராவை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். அப்படத்தில் அடிப் பெண்ணே..பொன்னுஞ்சல் ஆடும் இளமை என்கிற பாட்டில் பாலுமகேந்திரா நிகழ்த்தி இருக்கும் வித்தை அதி உன்னதமானது. அப்படித்தான் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற புகழ்ப் பெற்ற பாட்டிலும் சிறு சிறு காட்சியையும் தனது திறமையால் பாலு செல்லூலாய்டு ஒவியமாக்கி இருப்பார். அதில் வரும் உச்சக் காட்சியில் தான் உயிருக்குயிராக நேசித்த தங்கை உட்பட அனைவரும் கடந்துப் போகையில் தன்னந்தனியனாய் நிற்கும்  காளி கதாபாத்திரத்தின் உணர்வினை மிகநுட்பமாக பாலுமகேந்திரா பதிவு செய்து அப்படத்தை மற்றொரு தளத்திற்கு கடத்தி சென்றிருப்பார்(http://www.youtube.com/watch?v=jU629VRND6c ) .  பதின்பருவத்து உணர்ச்சிகளை மையமாக வைத்து 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார் (http://www.youtube.com/watch?v=EXuqUC-soQs ). இப்படத்திற்கு சலீல் செளத்ரி இசையமைத்தார்.  இப்படத்தினை தவிர பாலுமகேந்திராவின் அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை . இளையராஜாவின் இசையமைத்த 50 ஆவது படம் என்ற பெயரோடு வெளிவந்த படம் பாலுமகேந்திராவின் மூடுபனி.  இளையராஜாவும் ,பாலுமகேந்திராவும் கூட்டணி சேர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்தனர். இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த படங்கள் பட்டியலில் அவரின் மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், தலைமுறைகள் போன்ற படங்களுக்கு உறுதியான இடமுண்டு . நகைச்சுவைப்படங்களாக  அவர் எடுத்த ரெட்டைவால்குருவி, சதி லீலாவதி,ராமன் அப்துல்லா போன்ற படங்களும்  திரில்லர்  வகைப்படங்களாக அவர் இயக்கிய மூடுபனி, ஜீலி கணபதி போன்ற படங்களும், தன்னையே அவர் விமர்சித்து ஏசிக் கொண்ட நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களும் அவர் வணிக ரீதியலான திரைப்படங்களையும்  அவர் எடுப்பதில் வல்லவர் என்கிற முயற்சிகளாக நாம் கருதலாம். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் கூட மனதில் எப்போது தேங்கி நிற்கும் கலை அம்சங்களுக்கு அவர் குறை வைப்பதில்லை. 
 
மூன்றாம் பிறை திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்று தந்தது. சத்மா என்கிற பெயரில் அப்படத்தினை அவர் இந்தியிலும் எடுத்தார்.  வண்ண வண்ண பூக்களில்  காடுகளுக்கு நடுவில் பயணம் செய்யும் ரசனை மிக்க  இளைஞனை அவரால் மிக எளிமையாக திரைமொழி சட்டகங்களுக்குள் அடக்கி விட முடிந்தது. அவரது நாயகிகள் கதாநாயகனின் சட்டையை மட்டும் அணிந்து நடந்தது எங்கும் ஆபாசமாக பார்க்கப்படவில்லை. காதலுக்கும், காமத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை பாலுமகேந்திரா அலட்சியப் படுத்தினார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணும், அந்த வீட்டு இளைஞனும் யாருமற்ற வீட்டில் தனியாக ..இரசனையாக வாழ்ந்ததையும் (அது ஒரு கனாக்காலம் ), காட்டிற்குள் தனித்து ஒரு இளம் பெண்ணுடன் அருவியில் குளித்து,கதைகள் பேசி ஒன்றாக தூங்கியதையும் அவர் எவ்வித அதிர்ச்சி மதிப்பீடுகளையும் வலிந்து கூட்டாமல் ,அலட்டாமல் அழகாக எடுத்தார். ஒரு சராசரி இளைஞனின் கனவில் ஒரு இளம் பெண் வருவதுதான் இயல்பானது. அதை தான் நான் காட்டுகிறேன். இளைஞனின் கனவில்  சாமியார் வந்து ஆன்மீக பாடம் புகட்டுவது மாதிரி  எடுத்தால் தான் அது திணிப்பு என்று துணிவாக ஒரு பேட்டியில் சொன்னார்.
 
நேசிக்கும் பெண்ணோடு தனித்திருக்கும் ஒரு இளைஞன் என்ன செய்வானோ அதைத்தான் பாலுமகேந்திராவின் நாயகர்கள் செய்தார்கள் . தனது வாழ்க்கையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்துக் கொள்வதை அவர் விரும்பி செய்தார். ரெட்டைவால் குருவி,மறுபடியும் போன்ற படங்களில் அவர் தன்னை உள்நோக்கி பார்த்துக் கொண்டார். ஒளங்கள்,ஊமக்குயில்,யாத்ரா போன்ற மலையாளப்படங்களையும் ,கன்னடத்தில் கோகிலா, தெலுங்கில் நிரிக்‌ஷினா போன்ற  படங்களையும் அவர் இயக்கி தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஈழத்தமிழரான அவர் தமிழ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
 
அவரின் அழகியல் சார்ந்த திரைமொழியை  தொடர இன்றைய தேதியில் யாரும் இயக்குனர்கள் இல்லை. ஆனால் அவரது மாணவர்களான பாலா, வெற்றிமாறன், சீனு இராமசாமி போன்றோர்கள் தங்களின் உயரிய படைப்புகளால் பாலுமகேந்திரா என்கிற மகத்தான கலைஞனை நினைவூட்டுவார்கள். அவரும் இறுதிக் காலங்களில் திரைப்பட வகுப்புகளை நடத்தி தனக்கு பிறகும் தன்னியக்கம் நடக்க உழைத்தார்.  அவரது நிகரற்ற படங்களான வீடு,சந்தியாராகம் போன்ற படங்களின் பிலிம் சுருள்கள் பாதுகாக்கப்படாமல் வீணாகிப் போனதில் மிகுந்த சங்கடம் கொண்டார். திரைப்பட ஆவண காப்பகம் ஒன்றை அமைக்க கோரினார் . ஆனால் கோரிக்கைகள் இன்றும் காற்றில் தான் இருக்கின்றன.
அவரே ஒரு பேட்டியில் சொன்னதுதான்..
 
நானோ,மகேந்திரனோ,இளையராஜாவோ ஒரு நாளும் மறைய மாட்டோம். எங்களது படைப்புகள் அசையும். பேசும்.பாடும்.உங்களை கண்கலங்க வைக்கும்.  அதுவரை நாங்களும் இருப்போம்.
 
அவரின் நீங்கள் கேட்டவை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. ஓ..வசந்தராஜா.. தேன் சுமந்த ரோஜா.. என்ற பாடல் . அப்பாடலை எங்கள் கங்கைக் கொண்ட சோழபுரத்தில் எடுத்து இருப்பார் . அக்கோவில் அழகானது தான். ஆனால் இத்தனை அழகா..என வியக்க வைத்தவர் பாலுமகேந்திரா..
 
அவர் கண்களால் சுவாசித்தார். எழுதினார்.இயக்கினார்.
 
அவருக்கு பிறகும் அவரது படைப்புகளில் அவரது கண்களை நாம் காண்கிறோம்.
 
தமிழனாக பிறந்து …மாபெரும் மேதையாக வாழ்ந்து…என்றும் முடியாமல் வாழ்கிற பாலுமகேந்திராவிற்கு  அன்பு முத்தங்கள்….
-மணி செந்தில்

பச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.


ஒரு மனிதனை அவனது சகல விதமான நிறை குறைகளோடு திரையில் தரிசிக்கும் அனுபவம் தான்

பச்சை என்கிற காத்து. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்பவன் விண்ணில் முளைத்து மண்ணில் கிளம்பிய அதிசயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சமூக வெளியில் நாம் சாலையில் கடக்கும் போது இயல்பாக சந்திக்க நேரிடும் ஒரு மனிதன் தான் இந்த ‘பச்சை என்கிற காத்து ‘. சற்றே தெனாவட்டோட்டு சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் திரியும் கதாநாயகன் இப்படத்திலும் தன்னை உதாசீனப்படுத்தும் கதாநாயகியை காதலிக்கிறார்.

அரசியல்,ரவுடீசம், அன்பு,வம்பு என சகல விதமான சராசரிக்கும் அப்பாற்பட்ட குண நலன்களோடு திரியும் கதாநாயகனை ஏற்பதில் துளிர்க்கும் காதலையும் மீறி கதாநாயகிக்கு தயக்கம் இருக்கிறது. அதை மறுப்பாக கருதி முரட்டுத்தனமாக கதாநாயகன் கையாள ரத்தம் வழியும் கிளைமாக்ஸ்.

படம் கதையின் நாயகனின் மரணத்தில் இருந்து துவங்கிறது. கதாநாயகனுக்கு நெருக்கமான மூவர் மற்றும் கதாநாயகியின் தங்கை ஆகியோரின் எண்ண ஓட்டத்தில் கதை முளைத்து வளர்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை அனைவரின் பார்வையிலும் ஒரே மாதிரியாக அமையாது என்பதை நண்பர் கீரா தனது திரைமொழியில் விவரிக்கிறார் . வசனங்கள் சில இடங்களில் மனதை கவர்ந்தும், சில இடங்களில் மனதை நெருடியும் இருப்பது சரிதான். ஆனால் சென்சார் கத்திரிக்கு உள்ளானதில் பழுது பட்டதாக மாறி இருப்பது வசனங்களின் ஆழத்தினை குறைக்கிறது. இறுதி பாட்டில் வரும் புலி வேசம், இராசபக்சே தோற்றம் என இயக்குனர் கீராவின் உணர்வு புரிகிறது.

அழுத்தம் இருக்க வேண்டிய பல காட்சிகள் மனதை பாதிக்காமல் நகர்வது படத்திற்கு பலவீனமே.தனது நண்பர்கள் மற்றும் தங்கைக்கு மட்டும் நல்லவனாக இருக்கும் கதாநாயகனை ஒரு வில்லன் அளவிற்கு நமது விழிகள் பார்த்து பழகி விட்டதால் அவனது மரணம் நியாயமாக நமக்குள் ஏற்படுத்தி இருக்கவேண்டிய பாதிப்பினை ஏற்படுத்தாமல் போனது உண்மை.தேசிய விருது நடிகர் அப்புக்குட்டியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

மற்றபடி புதியவர்கள். பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட திரைவடிவம். புதுமையாக படைப்பினை அணுக வேண்டும் என்ற எண்ணம். தோழர் கீராவின் அசாத்திய தன்னம்பிக்கை. எம் அன்பிற்கினிய தோழர்கள் பலர் உழைத்திருக்கிறார்கள்.

தோழர்கள் வெல்லட்டும் .வாழ்த்துக்கள்.

கொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.

உலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன்.

கொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.

உலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன்.

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

Page 3 of 4

Powered by WordPress & Theme by Anders Norén