பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: திரை மொழி Page 1 of 3

மாமன்னன்- கட்டமைக்க முயலும் போலி பிம்பங்களும், சில அற்புத தருணங்களும்…

????

என்னை சக மனிதனாக பார்க்கும் விழிகளைக் காணும் போது தான் நான் நிம்மதி அடைகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி என்கின்ற கொடும் பேய் சாத்தான் போல அவரை துரத்தி துரத்தி வேட்டையாடிய ரத்தப்பக்கங்களை அவரது சுயசரிதையில் படிக்கும் போது எவராலும் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடியாது.

ஏனெனில் சாதி பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் உணர்வாக/பண்பாடாக/செயலாக /வழிபாடாக/ உணவாக/ உடையாக .. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உள்ள அநீதியாகும்.

அதைத்தான் தனது தீவிர திரை மொழி மூலம் மாமன்னன் ஆக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

மிக மிக சாதாரண “மண்”ணாக இருந்தவர் எப்படி மாமன்னனாக மாறினார் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரி சுருக்கம்.

தனது முந்தைய திரைப்படங்களைப் போல சாதியை மறைமுகப் பொருளாக வைத்து உரையாடல்களை நிகழ்த்தாமல் நேரடியாக சாதியின் நுட்பமான உணர்ச்சி படிமங்களை காட்சி மொழியாக்கி இருக்கின்ற இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணனில் தனக்கு சாத்தியப்பட்ட தனக்கே உரிய திரை மொழி வசீகரத்தை மாமன்னன் திரைப்படத்தில் இழந்துவிட்டது போல ஒரு உணர்ச்சி.

சாதி முரண்பாடுகளைப் பற்றிய ஒரு உரையாடலை இரண்டு தேனீர் கோப்பைகள் ஊடாக தொடங்குவோம் என்றது பரியேறும் பெருமாள். சாதியை பற்றி மிக நுட்பமாக பேசும் அந்தத் திரைப்படத்தில் அதி உச்ச அழகியல் எது என்றால் சாதி என்ற சொல் அந்த திரைப்படத்தில் எங்கும் பயன்படுத்தப்படாமல் இருந்தது தான்.

கர்ணனும் அப்படித்தான். அடுக்கடுக்கான படிமங்களால் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்கள் சிந்திக்க நிறைய ஊடு பொருள்களை புதைத்து வைத்து சாதி உணர்ச்சியின் கோரத்தை ரத்தமும் சதையுமாக நம்மை அனுபவிக்க வைத்திருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதே வித்தை மாமன்னனிலும் சாத்தியமாகி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. அதில் என்ன வருத்தம் என்றால் மாமன்னன் போன்ற சாதி மறுப்பு உளவியலை திரை மொழியாக கொண்ட திரைப்படங்கள் கலை நேர்த்தியில் மிளிர வேண்டும் என்கின்ற விருப்பம் தானே ஒழிய வேறொன்றுமில்லை.

ஆனாலும் வடிவேல் என்கின்ற ஒரு உச்ச கலைஞன் தன் கலை வாழ்வின் சிகரத்தை தொட்டு நம்மை நோக்கி திரும்பிப் பார்த்த அனுபவத்தை மாமன்னன் நமக்கு ஏற்படுத்துகிறான்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இதுதான் கடைசி படம் என்றார்கள். ஆனால் இதுதான் அவருக்கு முதல் படம். உணர்வுகளை முகத்தில் உறைய வைப்பதற்கான வாய்ப்புகளை இந்த திரைப்படம் தான் அவருக்கு வழங்கியிருக்கிறது.

படத்தை இந்த இருவருக்கும் இணையாக தாங்குவது பகத் பாசில் என்கின்ற நடிப்பு அரக்கன் தான். மூவரும் இருக்கும் காட்சியில் பகத் பாசில் மிக எளிதாக வடிவேலு மற்றும் உதயநிதியை ஓவர் டேக் செய்து திரையை ஆதிக்கம் செய்வது என்பது அவரது கலை மேதமை.

மற்றபடி இந்தத் திரைப்படம் பேசியிருக்கும் அரசியல் வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படங்களில் தென்படாத பிரச்சார நெடி சொல்ல வருகிற மிக முக்கியமான கருத்தினை பலவீனப்படுத்துகிறது.

காட்சி அமைப்புகளில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள திமுக சார்பு நிலை ,புத்தர் சிலைகள் ,அம்பேத்கர் ஓவியம் ,பன்றி குட்டி டாட்டூ இவை எல்லாம் மாமன்னனுக்கு எந்த வலிமையும் சேர்க்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி சற்றே நீண்டு ஏதாவது நடத்தி திரைப்படத்தை முடியுங்கள் என பார்வையாளர்கள் நினைக்கும் அளவிற்கு திரை மொழி சீரமைப்பு இல்லை.

திமுகவின் கருப்பு சிவப்பு சாயலில் வடிவமைக்கப்பட்ட கொடியை கொண்ட அரசியல் கட்சி கட்சியின் தலைவராக வருகின்ற மலையாள நடிகர் லால் பேசுகிற சமூக நீதி வசனங்கள் ஒருபோதும் திமுகவிற்கு பொருந்தாது என்பதுதான் கடந்த கால வரலாறு.

திராவிட இயக்கங்கள் சமூக நீதி அரசியலில் வெற்றி பெற்றிருந்தால் இன்று வரை ஒரு மாமன்னன் திரைப்படம் எடுப்பதற்கான தேவை இந்த மண்ணில் எழுந்திருக்காது. திராவிட இயக்கங்கள் தனது வரலாற்று வழிப் பாதையில் செய்து கொண்ட அப்பட்டமான சமரசங்கள், பிழைப்புவாதங்கள் போன்றவைகளால் தான் இன்னும் இங்கே சாதிய இருப்பு வலிமையாக கட்டமைக்கப்பட்டு எழுந்து நிற்கிறது.

எனவே சமூக நீதி அரசியல் என்றால் அது திமுக தான் என மாமன்னன் திரைப்படம் கட்டமைக்கின்ற போலிபிம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதிக்காக மிகச் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்பதை எவ்வித உணர்ச்சியும் கடத்தாத அரசியல் பேசும் காட்சிகள் காட்டி விடுகின்றன.

வேட்பாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் ,ஒன்றியச்செயலாளர்,வட்டச் செயலாளர் வரை சாதி பார்த்து மிகச்சரியாக ஆதிக்க சாதிக்கு பொறுப்பளிக்கின்ற திராவிட இயக்க அரசியல்தான் மாமன்னன் மற்றும் அதிவீரன் போன்றவர்கள் அனுபவிக்கின்ற அத்தனை கொடுமைகளுக்கும் மூல காரணம் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜின் கலை ஆன்மா உணர்ந்திருக்கும் தான். ஆனாலும் அதை அவரால் ‘செஞ்சோற்றுக் கடனுக்காக’ வெளிப்படையாக பேச முடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி மாமன்னனில் சில அற்புத தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த மலைமுகட்டில் வடிவேலு தனது இயலாமையை எண்ணி கைப் பிசைந்து கண்கலங்கி நிற்கின்ற அந்தக் காட்சி இதுவரை தமிழ் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் அதி உச்சமானது. அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆபத்துகளை உள்ளுணர்வால் உதயநிதி உணர்கிற தருணங்கள். தந்தை மகனுக்கு இடையே இருக்கின்ற நேசமிக்க கணங்கள் போன்ற காட்சிகளில் இயக்குனர் மாரி செல்வராஜின் திறமை பளிச்சிடுகிறது.

சாதியின் நுட்பமான புள்ளிகளை வலிமையாக பேச வந்த திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு அரசியல் அதிகாரப் போட்டி தேர்தல் என்றெல்லாம் திசை மாறி அலைகழிவது இயக்குனர் மாரி செல்வராஜ் கதை அமைப்பில் கொண்டிருந்த தடுமாற்றங்களை அப்பட்டமாக காட்டுகிறது.

மிக மிக முக்கியமான ஒரு திரைப்படமாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்த்து செல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு மாமன்னன் ஒரு புதுவிதமான திரைப்பட அனுபவத்தை தரும் தான். ஆனால் ஒரு இயக்குனராக தன் படைப்பாக்க உச்சத்தின் அனுபவத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் அனுபவித்தாரா என்பது சந்தேகமே.

மாமன்னன் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம்.

????

“விடுதலை”நிகழ்த்தும் அரசியல் உரையாடல்களும் அதன் ஊடாக இருக்கின்ற அரசியலும்..

????

சமீபத்தில் வெளியாகி இருக்கின்ற விடுதலை திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக அறிகிறோம். குறிப்பாக இது தமிழ்த்தேசிய அரசியலை பேசுகிறது என்று ஒரு கருத்தை தமிழ் தேசியர்கள் முன் வைக்கும் போது திராவிடக்கூடாரத்தில் இருந்தும் ,முற்போக்கு வகையறாவிடம் இருந்தும் கடுமையான வசவுகளும், பதட்டம் நிறைந்த சொல்லாடல்களும் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

விடுதலை திரைப்படம் அந்த வகையில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது என்பதை அது அடைகிற எதிர்வினைகள் மூலம் தெளிவாக புரிகிறது.

…..

திரைப்படக்கலை பற்றி அறிந்தோர், பல் மொழி பேசுகிற திரைப்படங்களை தொடர்ச்சியாக கவனித்து பார்த்து ரசித்து வருவோர் என பலரும் அறிந்த விஷயம் யாதெனில் ,
திரைப்படங்கள் கற்பனையாக கதை ஒன்றை உருவாக்கி அதை திரை மொழியாக உருவாக்கி திரைப்படமாக மாற்றுவது இது ஒரு வகை. அசலான மனிதர்களைப் பற்றி அப்படியே நகலெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சமும் மாற்றாமல் திரை மொழியாக்கி திரைப்படமாக மாற்றுவது. தான் நாம் ஆவண படங்களாக பார்த்து வருகிறோம் .

இந்த இரண்டு வகைகளையும் தாண்டி மூன்றாவது வகையாக அசலான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தாக்கம் பெற்று அதன் மூலமாக புனைவு வெளி ஒன்றை உருவாக்கி வரலாற்றையும் /கற்பனையும் கலந்த கதைகளை திரை மொழியாக்கி திரைப்படங்களாக மாற்றுவது.

எடுத்துக்காட்டாக கீழ்வெண்மணி பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை”. இது அச்சு அசலான ஆவணப்படம்.

இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கம் பெற்று பல திரைப்படங்களின் காட்சிகள் உருவாகி இருக்கின்றன. 90களில் வெளியான சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அரவிந்தன்”திரைப்படம், இதே வெற்றிமாறன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்”திரைப்படம் போன்றவை கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கத்தினால் உருவான காட்சி அமைப்புகளை கொண்டவை .இது போன்ற பல நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான திரைப்படங்களை படங்களை நாம் உதாரணமாக காட்டிக் கொண்டே போகலாம்.

அதுபோன்ற அசலான வரலாற்று மாந்தர்களையும் கற்பனைக்கே உரிய சுதந்திரத்துடன் தாண்டி மறக்கப்பட்ட புரட்சியாளர்களைப் பற்றி இத்தலைமுறையினர் தேடி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆழமான சமூக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “விடுதலை”.

வரலாற்றில் நடந்த எந்த நிகழ்வின் ஊடாக எவரும் தாக்கம் அடைந்து விடக்கூடாது என சொல்வதற்கு இங்கே யாருக்கும் உரிமை இல்லை. தாக்கம் அடைந்தவர் தனது புனைவு மற்றும் கற்பனை மூலமாக ஒரு திரை மொழி அமைக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதை இங்கே யாரும் கேள்வி கேட்க முடியாது.

விடுதலை திரைப்படத்தின் தொடக்கத்திலேயே இக்கதை மூலம் காலம் /கதை /மாந்தர் அனைத்தும் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட்டு விட்டே மிக கவனத்துடன் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஊடாக வரும் செய்திகளை தனக்கு சார்ந்ததாக காட்டிக் கொள்ளும் எவரும் இந்த அறிவிப்பினை கண்டும் காணாதது போல் நடித்து எந்த நபரும் சுயமாக சிந்திக்கவே கூடாது என மூர்க்கத்துடன் இந்த திரைப்படத்தின் மீதாக எதிர்வினை ஆற்றி வரும் சில உரையாடல்கள் உண்மையிலேயே அலுப்பு ஊட்டுகின்றன.

குறிப்பாக திராவிடம் சார்ந்து கொந்தளிப்போர் திடீரென இடதுசாரி பக்கம் எகிறி குதித்து அவர்கள் சார்பாக இவர்கள் பேசுவது போல பாவனை செய்து திரைப்படம் தகவல் பிழை/கருத்துப் பிழை கொண்டது என செய்திகள் பரப்பி வருவதை தமிழ்த்தேசியம் சார்ந்து எவ்வித உரையாடலும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதான அவர்களது நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

இதே போல இடதுசாரிகள் பக்கத்தில் இருந்தும் சோளகர் தொட்டி எழுதிய வழக்கறிஞர் பாலமுருகன் தரப்பிலிருந்தும் வருகின்ற விமர்சனப் பார்வைகளை திராவிடத் தரப்பு கூச்சல்கள் போல அணுக கூடாது என்றாலும் படைப்பாளியின் நியாயப் பாடுகளை எடுத்து வைப்பது நமது கடமை.

விடுதலை திரைப்படம் இரண்டு கூர்மையான கருத்தாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்று காவல்துறை அடக்குமுறைகள் மீதான காத்திரமான காட்சி மொழியாக்கம், மற்றொன்று தமிழ் தேசிய பார்வையுடன் கூடிய மனிதநேய புரட்சியாளர்கள் பற்றிய பிம்ப உருவாக்கம். இந்த இரண்டிலும் விடுதலை திரைப்படம் முழு வெற்றி அடைந்திருக்கிறது.

குறிப்பாக தமிழ் தேசிய புரட்சிக் களத்தில் ஆயுதம் தாங்கி தமிழர் நிலத்தில் தாக்கம் செலுத்திய புரட்சியாளர்களான மாமனிதர் புலவர் கலியபெருமாள் மற்றும் மாபெரும் தமிழ்த் தேசிய புரட்சியாளர் தமிழரசன் ஆகியோர் பற்றிய உரையாடல்களை தமிழ் தேசிய கருத்தாக்கம் கூர்மை அடைந்திருக்கிற இந்த காலகட்டத்தில் மீண்டும் இந்த திரைப்படம் உருவாக்கி இருக்கிறது. எளிய திரைப்பட பார்வையாளன் கூட யார் கலியபெருமாள் , யார் தமிழரசன் என வாசிக்க புத்தகங்கள் தேடுவதும் பார்க்க காணொளிகள் தேடுவதும் இத்திரைப்படத்தின் மூலமாக கைகூடி இருக்கிறது. திரைப்படம் என்கிற வலிமையான சாதனத்தின் வெற்றி அதுதான்.

இதைத்தான் இயக்குனர் வெற்றிமாறன் தனது நோக்கமாக கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் முன்வைத்த திரைமொழியே நமக்கு தெரிவிக்கிறது. எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர் நடிகர்களை தேர்ந்தெடுத்தது முதல், உரையாடல்களில் காட்சிகளில் ஆங்காங்கே தென்படும் குறியீடுகள் மூலமாக இந்த திரைப்படத்தை தமிழ்த் தேசியம் சார்ந்த உரையாடல்களை எழுப்புகிற ஒரு கருவியாக வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார்.
வள்ளலாரை வணங்குகிற கதையின் நாயகன் திரையில் இதுதான் முதன் முதல் என நான் கருதுகிறேன்.

திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக வருகின்ற பெருமாள் வாத்தியார் தனது இரண்டாம் பாகத்தில் மொழிக்கும் மரபிற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவம் சார்ந்த வசனங்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் என்பது புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக இருவர் திரைப்படத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் ஒருவராக காட்டிய நாசர் கதாபாத்திரம் போல விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள இன்று நமக்கு கையில் இருக்கின்ற ஒரே ஒரு மகத்தான ஆதாரம் அவரது சுய வரலாற்று நூலான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்கின்ற நூல் மட்டுமே. அந்த நூல் பற்றி திராவிட தரப்பிலிருந்து யாருமே எந்தக் கருத்தையும் குறிப்பிடாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நூல் திராவிட ஆட்சியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி ஆட்சிமுறை குறித்தான கடுமையான விமர்சனங்களை, அந்தக்கால திமுக ஆட்சியின் ஒடுக்கு முறைகளை அந்த நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பல பக்கங்களில் அதற்கான செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன அது பற்றி நாம் தனியே ஒரு கட்டுரையில் காண்போம்.

60களின் இறுதியில் எழுந்த வசந்தத்தின் இடி முழக்கம் என வழங்கப்பட்ட நக்சல் பாரி இயக்கத்தின் தலைவர் சாரு மஜும்தார் அவர்களின் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளை விட்டு புரட்சி செய்ய கிராமங்களை நோக்கி விரைந்த போது தான் கோவை பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துடிப்பான கல்லூரி மாணவரான தமிழரசனும் அழித்தொழிப்பு வேலைகளுக்காக கிராமங்களை நோக்கி நகர்கிறார். இவரோடு புலவர் கலியபெருமாள் சேர்ந்தது தமிழ்இன வரலாற்றில் முக்கியமான ஒரு இணைவு ஆகும். மேற்கண்ட இருவரும் மக்கள் யுத்த குழுவோடு முரண்பட்டு தேசிய இன விடுதலை சார்ந்து இயங்கிய போது தான் தமிழ்நாடு விடுதலைப் படை உருவானது.

எனவே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை குறித்தும் சுய நிர்ணய உரிமை குறித்தும் மேடைகளை தாண்டி களத்தில் செயல்பட முனைந்தவர்கள் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்றோர். இவர்களை எந்த வகையில் திராவிட ஆட்சியாளர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஒடுக்கினார்கள் என்பது தான் திராவிடத்தரப்பிலிருந்து மறைக்க முயல்கிற வரலாறு.

புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோர் தமிழ் தேசிய உணர்வின் மூலங்கள் என்பதை இத்தனை ஆண்டு காலம் திராவிடத்தரப்பு வரலாற்று திரிபுகளை வைத்துக்கொண்டு மண்மூடி மறைத்து வைத்திருந்ததைத்தான் விடுதலை திரைப்படம் மீண்டும் நினைவூட்டி இளைஞர்களை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் திராவிடத்தரப்பிலிருந்து கடுமையான பதட்டக் கருத்துக்களை விடுதலை திரைப்படம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றொன்று வீரப்பன் தேடுதலின் போது மலைவாழ் ஆதிகுடிகளை காவல்துறை எவ்வாறு கொடுமைப்படுத்தியது என்பதையும் இந்த திரைப்படம் பயன்படுத்தி இருக்கிறது என பலரும் உரிமை கொண்டாடுவது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. நடந்தவை அனைத்தும் வரலாறாய் உறைந்து கிடக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறன் உறைந்துப் போன காலத்தின் நெருப்பு பொறியில் இருந்து தனக்கான கங்கை பற்ற வைத்துக் கொண்டு விட்டார். அது அவரது படைப்பாக்க சுதந்திரம்தான். வரலாறும், பதிக்கப்பட வேண்டிய அடக்குமுறைகளும் யாருக்கும் சொந்தமானது இல்லை. இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது என்பது படைப்பாளியின் படைப்பாக்க வரம்பினை நாம் நிர்ணயிக்கிற ஆபத்தை உண்டாக்கிவிடும்.

இவையெல்லாம் தாண்டி இந்த விடுதலை திரைப்படம் ஒரு மகத்தான உரையாடல் வெளியை தோற்றுவித்திருக்கிறது
என்பதுதான் நடந்திருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நடவடிக்கை. இந்தத் திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது வேறு வடிவம் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது சற்று ஏறக்குறைய சில காட்சிகள் மூலமாகவே இந்த படம் பேசுகிற அரசியல் குறித்து யார் யார் பதட்டம் அடைகிறார்கள் என்பதை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கவனத்தையும் இந்த படத்தின் திரை மொழி நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

இது போன்ற உரையாடல்களை ஏற்படுத்துகிற திரைப்படத்தை படைக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளனின் கடமை. அந்த கடமையை வெற்றிமாறன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார்.

“ஒரு படைப்பிற்குப் பிறகு அந்த படைப்பாளன் இறந்து விடுகிறான் ” என்கின்ற புகழ்பெற்ற மேற்கோளுக்கு விடுதலை திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு அல்ல. இனி வெளிச்சம் படவேண்டியது வெற்றிமாறன் மீது அல்ல விடுதலை திரைப்படத்தின் மீது

அதன்படி நமக்கு முன்னால் விடுதலை திரைப்படம் இருக்கிறது .

அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

வெற்றிமாறன் மட்டுமல்ல தமிழ் தேசியர்களான நாமும் மகிழ்ச்சியோடு அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் .

அவ்வளவுதான்.

????

எங்களுக்கு இளையராஜா போதும்.

Disclaimer.

முதலில் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.”

இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே.

????

எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டுவதாக தான் நாங்கள் அப்போது தீவிரமாக எதிர்த்தோம்.

90 களின் தொடக்கத்தில் ஹெச் எம் வி நிறுவனம் ராஜாவின் தொடக்க கால 70களின் பாடல் தொகுப்பு ஒன்றினை நான்கு கேசட்டுகளாக வெளியிட்டு இருந்தது. ஒரு அபூர்வமான தொகுப்பு அது. “அன்னக்கிளியே உன்னைத் தேடுதே ,சின்னக் கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, வசந்தகால கோலங்கள், வா பொன்மயிலே, மயிலே உன் தோகை எங்கே, என அபூர்வ பாடல்கள் நிறைந்த அந்த தொகுப்பு என்னைப் போன்ற ராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு பெரும் பொக்கிஷம்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவருக்கு கிடைத்த தேசிய விருது அவருக்கு அப்போது கிடைத்த ஊடக வெளிச்சங்கள் எதுவுமே எங்களுக்கு அப்போது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பாலச்சந்தர் மணிரத்தினம் என ஏ ஆர் ரகுமான் பின்னால் அணிவகுத்து நின்றவர்களும் அதன் நடுவில் இழை ஓடிய அரசியலும் இளையராஜாவை எங்களுக்கு இன்னும் நெருக்கமானவராக காட்டியது. அது ஒரு வகையான புரிதல் கோளாறு என்பதை கொள்ள சில வருடங்கள் தேவைப்பட்டாலும் இன்றளவும் இளையராஜாவிற்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதில் எங்கள் தலைமுறையே உறுதியாக இருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் இத்தனை வருட எங்களது வாழ்க்கையில் காலை மாலை சூரிய உதயம் நிலவு இரவு பசி உறக்கம் காதல் காமம் தனிமை தந்தைமை தாய்மை கொண்டாட்டங்கள் போன்ற தவிர்க்க முடியாத இந்த வாழ்வின் ஒரு அங்கம் தான் இளையராஜாவின் இசை. எங்கள் தலைமுறையில் யாரேனும் ஒருவரை சந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி அதில் நிகழ்ந்தவை குறித்து நீங்கள் கோர்வையாக சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்கள் என்றால் அவருக்கு பல இளையராஜா பாடல்கள் நினைவுக்கு வருவது இயல்பு.

என் பதின் பருவ நண்பன் ஒருவன் “தெற்கத்திக் கள்ளன்”என்ற திரைப்படத்தில் வரும் “ராதா அழைக்கிறாள் ..”என்கிற பாடலை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான முறை கேட்டுக் கொண்டிருந்ததும் அவன் ராதா என்ற பெண்ணை விரும்பி கொண்டிருந்ததும் தற்செயலானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெயருள்ள அந்தப் பெண்ணை விரும்பினானா அல்லது அந்தப் பாடலுக்காக அந்த பெண்ணை விரும்பினானா என்றெல்லாம் இதுவரையில் அந்த காதலில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதே போல நெல்லை மாவட்டத்தில் எனது கல்லூரி வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பன் ஒருவன் ஆனந்த ராகம் திரைப்படத்தில் வரும் “ஒரு ராகம் பாடலோடு ..”என்ற பாடலை ஒரு கேசட் முழுக்க பதிவு செய்து வைத்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க அதைக் கேட்டுக் கொண்டு கிறங்கி கிடந்ததெல்லாம் எங்கள் தலைமுறையில் தெருவுக்குத் தெரு நடக்கின்ற
மிக மிக சாதாரண சம்பவங்கள்.

எனது பள்ளிக்காலத்தில் எனது நண்பன் ஜோஸ்வா உடன் நான் எங்கள் ஊரில் இருக்கின்ற புராதான சர்ச்சிக்கு போவது வழக்கம். அந்த சர்ச்சில் தேவ கருணை என்கின்ற ஒரு சிஸ்டர் வேலை பார்த்து வந்தார். தேவா என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அந்த சிஸ்டர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்த போது என் வீட்டு நூலகத்தை அவருக்கு அழைத்து போய் காட்டினேன். என் மிகப்பெரிய கேசட்சேகரிப்பை பார்த்து வியந்த அவர் நல்ல பாடல் ஏதோ ஒன்றை ஒளிபரப்பம்படி கேட்டுக் கொள்ள நான் “அறுவடை நாள் “திரைப்படத்தில் வருகிற “தேவனின் கோவில் மூடிய நேரம் ..”என்கிற பாடலை அவருக்கு ஒளிபரப்பி காட்டினேன். நான் ஒரு சோக சுமைதாங்கி என்கின்ற பாடல் வரிகள் வரும் அந்த நொடியில் அவரது கண்கள் கலங்கிவிட்டன. முடிந்தவுடன் என்னிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து போன அவரை அதன் பின் நான் எங்குமே சந்திக்கவில்லை.

இப்படியாக நிறைய மனிதர்கள் நிறைய வாழ்க்கை.

இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதன் வாழ்நாட்கள் முழுக்க ததும்பி நிரம்பி எங்களை முழுகடித்துக் கொண்டிருந்தான்.

2000 களின் தொடக்க காலத்தில் இருந்து நான் திரைப்படப் பாடல்களில் இருந்து நானெல்லாம் வாழ்வின் சூழல்களால் அந்நியப்பட்டு விலகிப் போன போது ஏறக்குறைய ராஜாவும் அமைதியாகி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு “காட்டு மல்லி”பூத்திருக்கிறது.

நடுவில் நகர்ந்த நாட்கள் பற்றி அந்தக் காட்டுமல்லிக்கு எந்தக் கவலையும் இல்லை. போன்ற இளையராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு அந்தக் “காட்டுமல்லி ” குறித்து எந்த பெருமிதமும் இல்லை. ஏனென்றால் இதே போன்று பல நூற்றுக்கணக்கான பாடல்களை நாங்கள் எங்கள் தலைமுறையில் அனுபவித்து சுவைத்து ஆழ்ந்து மூழ்கி அழுது சிரித்து கலங்கி நெகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறோம்.

அது கூட சமூக வலைதளங்களில் சில உரையாடல்களை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. கீரவாணி ,ஏ ஆர் ரகுமான் போன்று ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் போல இளையராஜா ஏன் ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்பதான கேள்விகள் “உன் கண்களுக்கு உலகிலேயே அழகான உன் தாய் ஏன் உலக அழகியாக மாறவில்லை …?” என்பது போல அபத்தமாக இருந்தது.

ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய “ஜெய் ஹோ ” பாடலும் கீரவாணி இன்று ஆஸ்கர் விருது வாங்கிய “நாட்டுக்குத்து “பாடலும் மிகச்சாதாரணமாக நாம் கடந்து போனவை. நமக்குள் சிறிதளவு அதிர்வை கூட அந்தப் பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பது நிஜம். விருதுகள் அதற்கு பின்னால் இருக்கின்ற வணிகங்கள் இவைகளைப் பற்றி பேசுவது என் வேலை அல்ல. ஆனால் வணிகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு , இளையராஜாவின் அரசியல் அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ராஜாவின் இசை என் ஆன்மாவை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

என்றாவது பின் இரவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும்போது கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தில் வரும் தாலாட்டும் பூங்காற்று என்கின்ற ஜானகி பாடலை ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு கால எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கைதி போல நீங்கள் சுழன்று அடித்து இறந்த காலத்திற்கு தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பது உண்மை. இது போன்ற அனுபவங்களை மற்றவர்களின் எந்த பாடல்களும் தருவதில்லை என்கிற கேள்விகளுக்கெல்லாம் இளையராஜாவிடம் கூட பதில் இல்லை தான்.

சமீபத்தில் விமான பயணத்தில் 18 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் “அலைகள் ஓய்வதில்லை “படத்தின் “புத்தம் புது ராகம் ..”என்னை அப்படியே தூக்கிச் சென்று மன்னார்குடி வீதிகளின் அதிகாலை பனிக்குளிரோடு நிற்க வைத்தது.

தமிழனாகிய நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் மூலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது.
என்னை போன்ற பல கோடி தமிழர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எங்களுக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.
விருதுகளை அவரவர் வைத்துக் கொள்ளட்டும்.
அதற்கு எம் வாழ்த்துக்கள்.

❤️

பொன்னியின் செல்வன் பார்ப்போர் கவனத்திற்கு…

????

அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து “புல்லரிப்போடு” இருக்கின்ற அனைவருக்கும்…

1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது.

2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உள்நோக்கத்தோடு எழுதியுள்ளார் என்பதான விமர்சனங்கள் அந்தக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் படுகொலை என்பது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் அதை மட்டுப்படுத்தவே நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை முன்வைத்து “நந்தினி- ஆதித்த கரிகாலன் காதல்” என்பதான கற்பனைக் கதை ஓட்டத்தை அமரர் கல்கி எழுதினார் என்றும் அது பெரு மாவீரனான ஆதித்த கரிகாலன் புகழுக்கு எதிரான செயல் என்பதான விமர்சனங்கள் அப்போதே உண்டு.எனவே புல்லரிப்பாளர்கள் ‘விக்ரம் – ஐஸ்வர்யா ராய்’ ஜோடியை பார்த்துவிட்டு இதுவே தமிழரின் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள்.

3. இது ஒரு திரைப்படம் என்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுமே வரலாற்றை தழுவி மணிரத்னம் செய்கிற ஆக்கங்களில் அவருக்கென்றே உரித்தான மேல்தட்டு வலதுசாரி ‘அரசியல்’ இருக்கும் என்கிற கவனத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஈழத்தின் வீர வரலாற்றை ஆயுத வியாபாரிகளின் மோதல் என இழிவுபடுத்திய மணிரத்னம் , எடுத்துள்ள ‘பொன்னியின் செல்வனில்’ அல்ல..அல்ல PS-1 ல் ( ப்ளே ஸ்டேஷனா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்.) நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விமர்சிக்கிற மனப்பாங்கு பார்வையாளர்களுக்கு வேண்டும்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக அதீதமாக ஒலிக்கும் இந்த திரைப்பட விளம்பரத்தின் மூலமாக திடீரென கவனம் பெற்று இருக்கிற ‘ராஜராஜ சோழன்’ இதோ கும்பகோணத்தில் அருகே இருக்கிற உடையாளூரில் எவ்வாறு பராமரிப்பின்றி படுத்து கிடக்கிறார் என்கின்ற காட்சியை பொன்னியின் செல்வன் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை அவசியம் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றால், இக்கதை, திரைப்படம், விளம்பரம், வணிகம் இவைகளுக்கு ஊடாக இருக்கிற ‘அரசியல்’ புரியும்.

5. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை அவரே இக்கதையின் முன்னரையில் சொன்னது போல சோழ வரலாற்றை ஆய்வு செய்த சதாசிவ பண்டாரத்தார், கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் அறிஞர்களின் உழைப்பிலிருந்து எழுத்தாளப்பட்ட சில வரலாற்று செய்திகளை கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் ஆழ்வார்கடியான் நம்பி பூங்குழலி நந்தினி குடந்தை ஜோதிடர் என பல கற்பனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சாண்டல்யன் எழுதிய கடல்புறா போன்றது தான் பொன்னியின் செல்வனும். இது வரலாறு அல்ல.

இந்த புரிதலோடு திரைப்படத்தை அணுக வேண்டும்.

6. வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்கும் போது இருக்க வேண்டிய கவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறதா என்பதை எல்லாம் திரைப்படம் சொல்லட்டும். ஆனால் வரலாற்றில் பொன்னியின் செல்வனில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்த போது அருள்மொழி வருமனுக்கு 16 17 வயது இருக்கலாம். ( ஜெயம் ரவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கற்பனை என்பதோடு நிறுத்தினால் இந்த பிரச்சனை இல்லை.) ஆதித்த கரிகாலனுக்கு 20 21 இருக்கலாம் .( 20 21 வயது இளைஞனுக்கு விக்ரம் போல தாடி மீசை முளைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் ‌. இது கற்பனை. அவ்வளவுதான்.)

எனவே இதை சோழர் வரலாறாக திரைப்படம் பார்க்க வரும் குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடாதீர்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் சோழர் வரலாறு பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றை உண்மையான ஆவணங்கள் மூலம் நாம் படித்தறிந்து நம் பிள்ளைகளுக்கு கடத்துவோம். பிழையான வரலாறுகளால் தான் இன்னும் இந்த தமிழினம் அடிமையாக கிடக்கிறது என்கிற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். திரைப்படங்களை வரலாறாக புரிந்து கொண்ட பேதமையால் தான் இங்கே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஓடியது. மருது பாண்டியர்கள் வரலாற்றை அசலாக பேசிய ” “சிவகங்கைச் சீமை” தோற்றது.

5. மற்றபடி திரைப்படம் என்கிற அறிவியல், அது தருகிற வசீகரம், தொழில்நுட்பத்தால் விளைகிற அதிசயங்கள், திரையில் விரியும் நடிகர்களின் திறமை ஆகியவற்றை ‘ஒரு திரைப்படப் பார்வையாளன்’ என்கிற முறையில் கொண்டாடி மகிழ்வோம்.‌

ஆனால் இதுவே வரலாறு என நம்பி தொலைக்கும் பேதைமை தொலைப்போம்.

கவனம் கொள் தமிழினமே..

காலப் பயணத்தின் ஊசலாட்டம்.

“சுழலும்

வாழ்வென்ற

இசைத்தட்டில்

அடுத்த வரி

தாண்ட

மறுக்கிறது

என் ஆன்ம முள்.

கீறல் விழுந்த

இசைத்தட்டை

கேட்க முடியாது

என்பதை யார்

அதற்குச் சொல்லுவது..?”

என்கிற எனது பழைய கவிதை ஒன்று

நினைவுக்கு வருகிறது. கடந்த காலம் என்கிற பொக்கிஷ மினுமினுப்பில் உறைந்து நிகழ்கால அந்திச் சிவப்பை தரிசிக்காமலேயே தவறவிடுகிறோம்.

எத்தனையோ உரையாடல்களில் பலரும் சொல்வது இறந்தகால பசுமை நினைவு ஒன்றைதான். எப்போது தவிப்பு ஏற்பட்டாலும் இறந்தகால கிடங்கிற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அதன் நினைவுச் சூட்டினில் கதகதப்பாய் கிறங்கிக் கிடக்கிறோம்.

பால்யமோ, பதின்வயதோ , கல்லூரியோ, முதல் வேலை பார்த்த இடமோ, நாம் நினைத்தால் ஓடி புகுந்து கொள்ளும் மாய கதவு ஒன்றினை நினைவுகளின் வாயிலாக நாம் பெற்றிருக்கிறோம். காதலோ காமமோ காயமோ எல்லா உணர்ச்சிகளுக்கும் நம்மிடத்தில் நினைவுகள் இருக்கின்றன.

அப்படி நினைவுகளுக்கும், நிகழ்காலத்திற்கும் நடக்கிற ஊசலாட்டத்தில் தன்னையே இழந்து தானே மீட்டு எடுத்துக் கொள்கிற ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளைஞனின் கதைதான்

My beautiful wringles.

சரிகா (Dilber) இந்தக்கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு மிக மிக எளிமையாக இருந்திருக்கும். போகிற போக்கில் அசாத்தியமாக உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இளைஞன் கதாபாத்திரத்தில் தனேஷ் ராஸ்வி (Kunal )என்ற நடிகர் நடித்திருக்கிறார்.

Wringles என்றால் வயதான காலத்தில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை சொல்கிறார்கள். அந்தந்தக் காலகட்டத்தை வாழாமல் தவற விடுவதும், வாழ முயற்சிக்கும் புள்ளிகளில் குற்ற உணர்வு கொள்வதும் , பிறகு நேர்மையாக அனைத்தையும் உணர்ந்து கொண்டு

கடப்பதும் பற்றிய மனித உணர்வுகள் பற்றிய கதை இது.

பல்வேறு வலிகளுக்கும் ,ஏக்கங்களுக்கும் பின்னால் ஒரு சிறு புன்னகை முடிவாக இருக்கிறது என்பதை மிகமிக கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள அதன் போக்கிலேயே கடந்து போவது மிக மிக முக்கிய குணாதிசயம். தேங்கி நிற்க நிற்க வலி மட்டுமே மிச்சம். இந்த படத்தில் காட்டப்படும் ஒரு பழைய கார் போல நம் அனைவருக்கும் நம் மனதில் ஒரு பழைய கார் ஒன்று இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் அதன் கதவைத் திறந்து அதன் இருக்கையில் அமர்ந்து நாம் கலங்கவோ, மகிழவோ தொடங்கி விடுகிறோம்.

நிகழ்காலத்தில் வாழ்வது குறித்து ஆன்மீகம் பேசுகிறது. அந்தந்த நொடிகளை ஆழமாக கவனித்து வாழ்வது என்பதுதான் வாழ்வியல் என்று வாழ்க்கை பாடங்கள் போதிக்கின்றன. ஆனாலும் நாம் யாருமே அவ்வாறு இருப்பதில்லை.

‘நினைவோ ஒரு பறவை..’ என்ற புகழ்பெற்ற பாடல் வரி இருக்கிறது. நினைவு பறவையின் சிறகடிப்பில் நிகழ்கால நீல வானத்தின் வசீகரத்தை நாம் இழந்து விடுகிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

பிரைம் வீடியோவில் Modern love தொகுப்பில் கிடைக்கிறது.

ஜெய் பீம்- அநீதிகளுக்கு எதிரான கலைக்குரல்.

எப்போதும் அநீதிகளுக்கு சாட்சியமாக குழந்தைகளின் விழிகள் அமைந்து போவது தான் உலகத்தின் கோர விதியாக இருக்கிறது. ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இது நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஜெய் பீம் -ல் குழந்தைகள்” என தனி ஆய்வே செய்யலாம் என்ற அளவிற்கு குழந்தைகளின் அழுகை, குணாதிசயங்கள், எதிர்பார்ப்புகள், அச்ச உணர்வுகள் என குழந்தைகளின் யதார்த்தக்காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

சற்று பிசகினாலும் ஆவணப்பட சாயல் அளித்துவிடும் என்கிற அளவிற்கு உண்மை சம்பவங்களை, நிஜ மனிதர்களை காட்சிமைப் படுத்தியது சவாலான காரியம் தான்.

இந்த படத்தின் அடிநாதம் எளிய மனிதர்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதி, வன்முறை போன்றவை. எனவே கதாநாயக பிம்பம் அநீதிக்கு எதிராக எழுந்து நிற்க கதையோட்டத்தில் அநீதியின் பிம்பம் வலிமையாக இருக்க வேண்டும். அதை கதாநாயகன் சூர்யாவுக்கு இணையாக ஏறக்குறைய சம பலத்தில் தாங்கிப் பிடித்திருக்கிறார் காவல்துறையின் உதவி ஆய்வாளராக வருகின்ற தம்பி தமிழ்.

ஏற்கனவே அசுரன் படத்தில் வியத்தகு நடிப்பாற்றலை வெளிப்படுத்திய தம்பி தமிழுக்கு ஜெய்பீம் ஒரு புதிய பாய்ச்சல்.

புரட்சியாளர் அம்பேத்கர் வழங்கிய “ஜெய் பீம்” என்ற சொல்லின் அரசியலை படம் முழுக்க ஒரு கல்வி போல பார்ப்பவரின் மனதிற்குள் விதைப்பதற்கான வித்தை இயக்குனர் ஞானவேலுக்கு கூடி வந்திருக்கிறது.

சில திரைப்படங்கள் வெளிவரும் போது அதற்கான அரசியல் போக்குகள் உருவாக முயலும் காட்சிகளை சமீபகாலத்தில் காண்கின்றோம். குறிப்பாக சாதி புகழ் பேசும் சில திரைப்படங்கள் மனதிற்குள் கடும் அருவெறுப்பை,ஒவ்வாமையை தோற்றுவித்து விடுகின்றன.

நெருங்கிய தம்பி ஒருவர் அந்தப்படத்தைப் பற்றி எழுதுங்கள் அண்ணா என்று சொன்னார். எதிர்த்து எழுதுவது கூட அதற்கான விளம்பரமாக அமைந்து விடும் என்கிற பயத்தில்தான் அப்படியே கடந்து விடுவது.

அது போன்ற படங்களைப் பற்றி பேச மறுப்பது தான் அந்த படங்களுக்கு எதிரான கடும் எதிர்ப்பு.

எல்லாவற்றையும் பேச முடிகிற நமக்கு அத்திரைப்படங்களை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.அது போன்ற திரைப்படங்களை பற்றி பேசுவது கூட ஆதிக்க அரசியலுக்கு சார்பான போக்கு என்ற நிலையில்தான் ஜெய்பீம் வெளிவந்திருக்கிறது.

ஆனால் ஜெய்பீம் பற்றி
அவசியம் பேசவேண்டும்.
பேசியே தீரவேண்டும்.

அது கூட ஒரு அரசியல்தான்.
அதுதான் மக்களுக்கான அரசியல்.
எளிய மனிதர்களுக்கான அரசியல்.

படம் பார்த்து முடித்த பின்னரும் அதிர்ந்து கொண்டே இருக்கும் மனநிலையில் செங்கனியின் விம்மிய அழுகை மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஜெய்பீம் பற்றி பேசுவோம்.
விரிவாகப் பேசுவோம்.

ஒரு வகையில் அந்தப் படம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

பேசப்பட வேண்டும் என்பதுதான் அநீதிகளால், அதிகாரங்களால் பாதிக்கப்பட்ட அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

பேசுவோம்.

மாநாடு-திரைக்கதை கலையின் விசித்திரம்.


திரை உலகை கனவுத் தொழிற்சாலை என வரையறுத்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா . நம் கண்முன்னால் விரிகிற திரை நமக்கும் , நம் கனவிற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை அழிக்க முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சியை தான் நாம் திரைப்படம் என்கிறோம். ஒரு நல்ல திரைக்கதை “ஹைக்கூ” வடிவம் போன்றது என்கிறார் காட்பாதர் , அபாகலிஸ் நெள போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ. அவரே சொல்கிறார் , “ஒரு கலை வடிவத்தின் உச்சத்தை அடைவதற்காக துணிச்சலான முடிவுகளை எடுங்கள். அது வெல்லலாம், தோற்கலாம்.. ஆனால் துணிச்சலான முடிவுகள் தான் எப்போதும் கலை வடிவத்தின் உச்சங்களை வெளிப்படுத்துகின்றன”.


ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக அதன் திரைக்கதை விளங்குகிறது. சிறந்த கதையாக அறியப்பட்டவைகள் திரைக்கதையாக வேதியியல் மாற்றம் அடையும்போது பல சூழ்நிலைகளில் தோல்வி அடைந்திருக்கின்றன. நல்ல கதைகளுக்கு எப்போதுமே நல்ல திரைக்கதைகள் தேவைப்படுகின்றன. ஆனால் நல்ல திரைக்கதைகளுக்கு ஓரளவு போதுமான வழக்கமான கதை இருந்தால் வென்று விடலாம். அவ்வாறாகத்தான் மாநாடு வென்றிருக்கிறது.


ஒரு திரைப்படத்தை அறிவியலாக புரிந்து கொள்வதும், கலை மொழியில் அறிந்து கொள்வதும் வெவ்வேறானது. திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒரு எளிய பார்வையாளன் திரையில் விரிகிற காட்சியோடு ஒன்றுபட்டு தானும் அதில் ஒரு பகுதியாக உணர தலைப்படும் போது தான் கலையின் அழகியல் வெளிப்படுகிறது. ஒரு திரைப்படம் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பார்வையாளனின் சகலவிதமான நினைவுகளிலிருந்து அவனை திசை திருப்பி , தான் விவரிக்கும் கதையில் அவனை ஒன்ற வைத்து , அவனது கால ஓட்டத்தை மெலிதாக அவன் மறக்க வைக்கிற அந்த உணர்வுப் புள்ளியை தான் தனது வெற்றியாக கருதுகிறது. 


அந்த கால ஓட்டத்தை தான் ஒரு கதைக் கருவாகக் கொண்டு மாநாடு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவருடைய முந்தைய திரைப்படங்கள் வணிக ரீதியிலான அனைத்து சமரசங்களுக்கும் உட்பட்டு , வெகு மக்களுக்கான தமிழ்சினிமாவின் சகலவிதமான இலக்கணங்களுக்கு உட்பட்டவை தான். அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 (2007) தெருவில் நடக்கும் கிரிக்கெட் பந்தயத்தை அடிப்படையாக கொண்டது. மாபெரும் திறமை உள்ள விளையாட்டு வீரர்களை விதந்தோதும் படங்களுக்கு மாற்றாக தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பற்றிய அத்திரைப்படத்தின் எளிய வகையிலான திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது. தெரிந்தோ தெரியாமலோ வெங்கட்பிரபு தான் கட்டமைத்த நண்பர்கள், கேளிக்கைகள், விளையாட்டுகள், காதல், கடத்தல் இவற்றில் எழுகின்ற துரோகங்கள், வழக்கமான கதாநாயகத்தனம் போன்ற குறிப்பிட்ட வகையிலான சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் சில ரசனை மிகுந்த தந்திரங்களை அவரால் செய்ய முடிந்தது. அவரது உச்சபட்ச வணிக வெற்றியை கொடுத்த மங்காத்தா திரைப்படம் கூட இவ்வாறானதே. வழக்கமான நன்மை/தீமை இடையிலான யுத்தமாக ஒரு திரைப்படத்தை வடிவமைக்காமல், ஒரு திரைப்படத்தில் அனைவரும் கெட்டவர்களாக இருந்து, யார் இதில் அதிகம் கெட்டவர் என்கின்ற போட்டி நடத்தி,  அந்தப் போட்டியையும் மக்களை ரசிக்க செய்து அதிகம் தீயவர் எவரோ, எவர் அதிகம் வில்லத்தனம் செய்கிறாரோ அவர்தான் கதாநாயகன் என வழமையான கோடுகளில் இருந்து மாற்றி வரைந்தது மங்காத்தாவின் திரைக்கதை அமைப்பு.
முதல் முறையாக “வெங்கட்பிரபு அரசியல்”(  A Venkat Prabu Politics) என தலைப்பிடப்பட்டு மாநாடு என்கின்ற திரைப்படத்தை அவர் அறிவித்தபோது நிச்சயமாக இது தீவிரமான அரசியல் திரைப்படமாக இருக்காது என அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தவர்கள் கண்டிப்பாக கணித்து இருப்பார்கள். அந்தக் கணிப்பு சரியானது தான். மாநாடு அரசியல் படமல்ல. அரசியலைப் பற்றிய படமும் அல்ல.


நழுவி ஓடும் கால ஓட்டத்தின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் சிம்பு மற்றும் வில்லன் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவர் விளையாடும் பரமபத கதையே மாநாடு.  எல்லோரையும் விட இந்த திரைப்படம் நடிகர் சிலம்பரசனுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் சமீப காலத்தில் தன் மீது எழுந்திருந்த எல்லா விமர்சனங்களுக்கும் அவர் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அவருக்கு ஒரு வெற்றி தேவையாக இருந்தது. இந்த இரண்டில் அவர் மீது எழுந்து இருந்த எல்லா விமர்சனங்களுக்கும் இத்திரைப்படத்தின் மூலம்  அவர் பதில் சொல்லிவிட்டாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது இரண்டாம் தேவையான படத்தின் வெற்றி அவருக்கு கிடைத்துவிட்டது.


அரசியல் என்ற சொல்லை பயன் படுத்தி விட்டதால் கதாநாயகன் ஒரு இஸ்லாமியனாக உருவாக்க பட்டிருப்பதை தாண்டி , இஸ்லாமியர்கள் என்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்கின்ற செய்தி இந்த திரைப்படத்தின் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற ஆறுதல் நமக்கு இருந்தாலும் அது வலிமையாக சொல்லப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு மத பெரும்பான்மையினர் வசிக்கும்  நாட்டில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை பற்றி இத்திரைப்படம் இன்னும் விரிவாகப் பேசி இருக்கலாம் என்பது ஒரு குறையே.
“Time Loop” பற்றி ஏற்கனவே பல ஆங்கிலத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்னவென்று சிந்தித்தால்”காலச்சுழி” என்பது சரியாக இருக்கும் என்றே கருதுகிறேன். இந்தக் கருத்தோடு காலத்தின் முன்னாலும் பின்னாலும் பயணிக்கிற ‘டைம் மிஷின்’ விவாகரங்களை பொருத்திப் பார்த்துக் கொண்டால் இன்னும் இந்த விஷயம் புரியும்.


புத்திசாலித்தனமாக மாநாடு திரைப்படத்திலேயே” Time loop”  திரைப்படங்கள் குறித்த அறிமுகங்களை கதாநாயகனே கொடுத்து விடுவதால் அந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று என பார்வையாளர்களை இயக்குனர் நம்ப வைத்து விடுகிறார்.
தமிழிலும் ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவா இயக்கிய 12 B( 2001) இதுபோன்ற திரைப்பட வகைமைகளுக்கு தமிழில் நமக்கு கிடைக்கின்ற ஒரு முன்னோடி திரைப்படம். அதேபோல் சூர்யா நடித்து விக்ரம் கே குமார் இயக்கிய 24 (2016), அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த கேம் ஓவர் (2019) சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கன்னியும் 3 களவாணிகளும் (2014)  போன்ற சில படங்களும் இதே போன்று கால நழுவலின் கண்ணியில் சிக்கிக்கொண்ட நிகழ் மனிதர்களின் கதைகள் தான். டைம் மெஷின் பற்றிய திரைப்படங்களை தனி பட்டியலாக வே கூறலாம்.


படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக வருகிற ஒய் ஜி மகேந்திரன் தனது வசனத்தில் போகிற போக்கில் கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” ( Tenet) திரைப்படத்தை குறிப்பிடுவதும் படம் குறித்த புரிதலை பார்வையாளருக்கு ஏற்படுத்தும் முயற்சி தான். 


இவ்வளவு முன் தயாரிப்புகளை சொல்லியும் பார்வையாளர்களுக்கு ‌ “Time Loop”  பற்றி புரிகிறதோ புரியவில்லையோ, ஆனால் திரைக்கதை வடிவமைப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்திருக்கிற திறமையான “எளிமை” இந்தத் திரைப்படத்தின் மூல கருத்தினை புரிந்துகொள்ளாத எளிய பார்வையாளர்களுக்கு கூட , திரைக்கதையின் சுவாரஸ்யத்தை சென்று சேர்த்துவிடுகிறது. 
அதற்காகவே வழக்கமான தமிழ் திரைப்படங்களுக்கு உரிய கதாநாயகன் -வில்லன் மோதலாக இந்த திரைப்படத்தை வடிவமைத்துக் கொண்டது இயக்குனரின் புத்திசாலித்தனம். இந்த வழமையான சட்டகத்திற்குள் Time Loop சற்றே குழப்பமான வடிவத்தை பொருத்தி , அதற்கு இந்திய திரைப்பட பார்வையாளனுக்கு தேவைப்படும் புராணீக நியாயம் சேர்ப்பதற்காக காலபைரவர் கதையையும் இணைத்து இயக்குனர் வெங்கட்பிரபு விவரிக்க முயன்றிருக்கிறார்.


இந்த முயற்சிகள் படம் பார்ப்பவர்களை சிந்திக்க வைப்பதற்கு முன் ,எஸ் ஜே சூர்யா வின் அசாத்திய உடல்மொழியோடு கூடிய தவிப்பிலும்,” தலைவரே தலைவரே..” என அவர் புலம்பும் புலம்பலிலும், இத்திரைப்படம் பார்வையாளனுக்கு வெகு சுவாரசியமாக மாறிவிடுகிறது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா தான் இந்தப் படத்தின் மாபெரும் வலிமை.


படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் படத்தின் படத்தொகுப்பு. படத்தொகுப்பாளர் பிரவீனுக்கு இது நூறாவது படம் என்பதனால் தன்னுடைய பங்களிப்பு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக உழைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். காட்பாதர் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் என அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வாங்கிய “வால்டர் முர்ச்”  சிறந்த படத்தொகுப்பிற்கு 1. உணர்ச்சி 2.கதை 3. ரிதம் 4. கண் பார்வையை தொடர்தல் 5. திரையின் இருபரிமாண இடம் 6. முப்பரிமாண வெளி என ஆறு விதிகளை வகுக்கிறார் ( மாண்டேஜ் -தமிழில் தீஷா, பேசாமொழி பதிப்பகம் வெளியிடு). இந்த விதிகளில் ஒன்று பிசகினாலும் திரைப்படம் தான் தெரிவிக்க வந்த மூல கருத்திற்கு அப்பால் விலகிச் சென்றுவிடும் எனவும் அவர் எச்சரிக்கிறார். இந்த விதிகளை மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பில் பொருத்திப் பார்த்தால் ஏறக்குறைய பொருந்திப் போவது ஆச்சரியம்தான்.


மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் தனது கடந்த 99 திரைப்படங்கள்  வழங்கிய அனுபவத்தினை வைத்து எது பார்வையாளர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் வெற்றி கண்டுள்ளார்.  படத்தின் இன்னொரு பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை.
மற்றபடி காட்சிக்கு காட்சி வேறுபடும் கதாநாயகன் சிம்புவின் உடல்வாகு படத்தின் போக்கினை பாதிக்கிறது. வேக வேகமாக நகரும் திரைக்கதையில் குறிப்பிட்ட சில காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் பார்வையாளர்கள் களைப்படைந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் சில புதிய விஷயங்களை சேர்த்து இணைத்து வழங்கி இருப்பது படத்திற்கு பலம் என்றாலும், அது ஒவ்வொரு முறையும் நடக்கும் போது கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது. 
ஒரு திரைக்கதையாக இந்தப் படத்தை இயக்குனர் விவரிக்கும்போது அதை புரிந்து கொண்டு தயாரிக்கும் திரை அறிவு கண்டிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு அவசியம் தேவை. “மிக மிக அவசரம்”(2019) என்கின்ற மிக முக்கியமான ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கிய சுரேஷ் காமாட்சி இந்தத் திரைக்கதையின் அடிப்படையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தயாரித்திருக்கிறார். நீண்ட காலமாக படம் தயாரிப்பு நிலையிலேயே இருந்தது பல காட்சிகளில் தெரிந்தாலும், படத்தின் திரைக்கதையின் போக்கு அதை முறியடிக்கிறது.


படம் வெளிவருவதற்கு முன்பாக வழக்கம்போல் தடைகள் ஏற்பட்டன. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்கின்ற முறையில் பணம் போட்டு ஒரு படைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை சரியாக மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பது மிக மிக சவாலான ஒரு விஷயம். அந்த சவாலில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெற்றி பெற்றிருக்கிறார். 
வழமையான கதையில் புதுமையான திருப்பங்களோடு கூடிய, விறுவிறுப்பான திரைக்கதையால் மாநாட்டிற்கு கூட்டம் கூடுகிறது.


அந்தவகையில் மாநாடு தன் வழக்கமான திரைக்கதையின் போக்கில் வலிந்து பொருத்திக்கொண்ட “கால விசித்திரத்தால்” தமிழில் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறியிருப்பது ஒரு வெற்றிக்காக காத்து நின்ற இயக்குனர் வெங்கட்பிரபுவிற்கும், நடிகர் சிலம்பரசனுக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கக்கூடும்.


-மணி செந்தில்.

The serpent-netflix series

1970-80 காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகளை செய்து சீரியல் கொலைகாரன், பிகினி கில்லர் என்றெல்லாம் பெயர் பெற்றசார்லஸ் சோப்ராஜ் பற்றிய வாழ்க்கைத் தொடர் Netflix -ல் தலா ஒரு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது

.சார்லஸ் சோப்ராஜ் எண்பதுகள் காலத்திய கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற பல வழக்குகளில் சிக்குண்டு பலமுறை சிறை பட்டவர்‌. ஒவ்வொரு முறை சிறை படும் போதும் சிறையிலிருந்து தப்பிக்க முயல்பவர்‌. 1986 ல் தன் பிறந்தநாள் விழாவில் சிறை அதிகாரிகளுக்கு போதை மருந்து கொடுத்து திகார் ஜெயிலில் இருந்து தப்பித்து போன சுவாரசியமான ஆசாமி. இதேபோன்று தாய்லாந்து சிறையில் இருந்தும் தப்பித்து இருக்கிறார்.

தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே சிறைப்படுகிற ஆள் சார்லஸ். சிறுவயதில் பெற்றோரின் பிரிவினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பினால் குற்றங்களை தயக்கம் இல்லாமல் செய்கிற உளவியல் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இப்போதும் நேபாளம் காத்மாண்டு சிறையில் ஆயுள் தண்டனை அடைந்து உயிருடன் இருக்கின்ற சார்லஸ் சோப்ராஜ் மீது இன்னும் பல நாடுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உலகத்தின் பல நாடுகளுக்கும் தப்பி ஓடிக் கொண்டிருந்த அவரது வாழ்க்கை “The Serpent” என்ற பெயரில் தொடராக வெளியாகியிருக்கிறது.கதை சொல்லல் முறையிலும் காட்சியமைப்பு முறையிலும் திரைப்படங்களை மிஞ்சக் கூடிய அளவிற்கு மிகுந்த தரமாக “சீரீஸ் (Series)”என்று அழைக்கப்படக்கூடிய பல தொடர்கள் நெட்பிளிக்ஸ் , அமேசான் பிரைம் போன்ற OTT தளங்களில் வெளியாகி அசத்துகின்றன.

குறிப்பாக Money heist. ஒரு சீசன் பார்த்துள்ளேன். தமிழிலும் கிடைக்கிறது. அமேசான் பிரைமில் அரசியல் தொடரான “தாண்டவ்”‌ தற்போது பார்த்து வருகிறேன்.கடந்த சில நாட்களாக தேடிக்கொண்டிருந்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்கிற மலையாளப்படமும் அமேசான் பிரைமில் தற்போது கிடைக்கிறது.

குறிப்பாக The Serpent. திரைக்கதை வடிவமைப்பில் நிகழ்வுகளை முன்னும் பின்னுமாக சங்கிலி தொடர் போல மாற்றி மாற்றி அமைத்து இறுதியாக ஒரு புள்ளியில் குவிக்கின்ற திரைமொழி நம்மை வியக்க வைக்கிறது. இரவு தூங்கும் போது கூட சார்லஸ் சோப்ராஜாக நடித்த தாஹர் ரஹீமின் சலனமற்ற விழிகள் நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்பதுபோல அடுக்கடுக்காக காட்சியமைப்புகளை வைத்து ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். சிறு உரையாடலைக் கூட கவனிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

55Packiarajan Sethuramalingam, மு.முகம்மது சர்வத்கான் and 53 others2 sharesLikeCommentShare

0

பொதுக்கருத்தியலின் வன்முறையும்,பொன்மகள்களின் அபத்தங்களும்..———————————————–

சமீபகாலமாக பொது கருத்தாக்கத்தின் தாக்கம் அதிகமாகி வருவதை நாம் கவனிக்கிறோம். பொதுக்கருத்து என்பது யாதெனில் செல்வாக்குப் பெற்ற கருத்தாக்கம் என்பதே சரியானது. பலரும் பொது கருத்தாக்கத்தின் மீதான ஈர்ப்பினால் தங்கள் சுய கருத்துக்களை மறந்து விட்டு பொதுக் கருத்தாக்கத்தை வலுப்படுத்த வரிசையில் நிற்பதையும் பார்க்க முடிகிறது. பொதுக்கருத்து என ஏற்படுத்தப்படும் அதிகாரத்தின் புனைவு நிகழ்த்தும் ஆகப் பெரும் வன்முறையாகவே கருத முடிகிறது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தீர்ப்பில்  கூட “சமூக கூட்டு உணர்வின் மனசாட்சி” என்கின்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் இந்த சமயத்தில் நினைவு கூரலாம். அந்த சொல்லால் எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இச் சமயத்தில் சிந்திக்க வேண்டியச் செய்தி.


எனவே சமூகமாக சேர்ந்து இருப்பதன் பலன்களையும், ஏதோ ஒரு வடிவத்தில் வலுவாக ஒலிக்கிற ஒரு கருத்தினை  தானும் ஆதரிப்பதன் மூலம் வலிமையாக இருப்பது போன்ற தோற்ற உளவியலுக்காக நம்மில் பலர் பொது கருத்தாக்கத்தின் ஆதரவாளராக மாறி ஒலிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பொதுக் கருத்தாக்கம் என்பது சகல காலத்திற்கும் பொருந்தக்கூடிய மிகச்சரியாக முடிவுகள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாத தீர்மானங்களாக இருந்திருப்பதை வரலாற்றின் பக்கங்களில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

“நமது ஊரை அவமானப்படுத்தி பேசிவிட்டார்கள் , வாருங்கள் .. பக்கத்து ஊரை போய் அடிக்கலாம்” என்பது போன்ற அழைப்புகள் ‘பொது கருத்தாக்கத்தின் செல்வாக்கு’ தோற்றங்களுக்கு நல்ல உதாரணம். ஏன், எதற்கு என்ற கேள்வி பெரும்பாலும் எவருக்கும் எழாது. எல்லோரும் அடிக்கப் போகிறார்கள், நாமும் போவோம் என்பது போன்றதான பொதுக் கருத்து சமூகத்தில் வலிமையான கருத்தாக மாறி வருவது என்பது உண்மையில் அபாயகரமான ஒன்று.


மனித மனம் உணர்ச்சிகளின் பிடிகளில் கட்டுண்டது. தொலைக்காட்சி, இணையம் என்கின்ற பல்வேறு விதமான ஊடகங்கள் வலிமை பெற்று இருக்கின்ற காலத்தில் அந்தந்த நொடிகளில் உண்டாகும் செய்திகளில் மனித மனம் உணர்ச்சிவசப்பட தொடங்குகிறது. யாரோ ஒருவன் தவறு செய்து விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் அவனை எல்லோரும் சேர்ந்து அடிப்போம் என்பதுபோன்ற பொதுக் கருத்தியலின் அபத்தங்களை சமீப கால சமூகம் எதிர்கொண்டு வருகிறது.யாரோ கற்பழிக்கப்பட்டு விட்டார்கள், குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்பதற்காக தவறாக அறியப்பட்டு சிக்கிக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்படுவதும் பொது கருத்தியல் இழைக்கும் வன்முறைதான்.
குறிப்பாக பொதுக் கருத்திற்கு சார்பாக பேசப்படும் அல்லது கதை அமைக்கப்படும் எல்லா திரைப்படங்களுமே நல்ல திரைப்படங்கள்தான் என ஒரு பொதுக் கருத்து திட்டமிட்டு உண்டாக்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஒரு திரைப்படம் என்பது வெறும் கருத்தியல் சார்ந்த கலை அல்ல. மனித உணர்வுகளை நுட்பமாக அவதானித்துஒளி, இசை, வசனம், காட்சி அமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டு  கலையம்சம் மிகுந்த படைப்பாக ஒரு சிறந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்கிறார் புகழ்ப்பெற்ற இயக்குனர் இங்கர் பெர்க்மன்.
அதில் ஒரு புள்ளி பிசகினாலும் உண்மையான கலைஞன் மனம் பாதிக்கப்படுவதை நம்மால் அருகில் இருந்து கவனிக்க முடிகிறது. நான் உயிராக நேசிக்கின்ற ஒரு அண்ணன் திரைப்படத் துறையை சார்ந்தவர். நீண்டகாலமாக திரைப்படம் என்பதை ஒரு கலையாக உள்வாங்கி பல்வேறு உலகத் திரைப்படங்களை கண்டுணர்ந்து, பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இணை இயக்குனராக வசனகர்த்தாவாக பணிபுரிந்து தான் விரும்பிய கலையம்சம் கூடிய ஒரு படைப்பினை திரையில் மொழிய நீண்டகாலமாக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தன்னிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் குறித்தும், தன் கண்ணெதிரே தான் கொண்டிருக்கிற கலை உளவியல் சிறுக சிறுக கொலை செய்யப்பட்டது குறித்தும் முகநூலில் மிகக் காத்திரமாக ஒரு பதிவு எழுதி இருந்தார். அப்படித்தான் ஒரு அசலான கலைஞன் காத்திரமாக இருப்பான். அந்தக் கலைஞனின் கோபம் சத்திய ஆவேசமானது.
பலரிடம் ஒரு பொதுக்கருத்து இருப்பதை நானே கவனித்திருக்கிறேன். கதை எழுதுவது,கவிதை எழுதுவது, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது போன்ற பல படைப்பு பணிகள் உட்கார்ந்த இடத்திலேயே செய்யக்கூடியவை தானே .. அதை எல்லோரும் செய்யலாம் என்பது போன்ற ஒரு அலட்சிய மனப்பாங்கு ‌ உலகப் பொது விதியாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


அப்படியெல்லாம் எந்த வாசிப்பும், எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் எழுதுவதுஏறக்குறைய தற்கொலைதான். தனது படைப்பை அம்சத்தை மட்டுமல்ல பொதுவாக கலை என்கிற வடிவம் கொண்டிருக்கிற மேன்மையை கொலை செய்வது. ‌ உணர்வு பூர்வமான ஒரு படைப்பினை ஒரு கலைஞன் உருவாக்கும்போது அவன் எதிர்கொள்ளும் உளவியல், உடலியல் சிக்கல்கள் மிகக் கொடுமையானவை.


சமீபத்தில் Honey land (2019) என்கிற மிக முக்கிய ஒரு ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது.  Tamara Kotevska , Ljubomir Stefanov என்ற இரு இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள்.ஏறக்குறைய திரைப்படம் போலவே தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த ஆவணப்படம் உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. சிரியா நாட்டின் எல்லையில் தேன் எடுக்கச் செல்லும் வயது முதிர்ந்த ஒரு எளிய பெண்ணின் கதை. அந்த சிறிய ஆவணப்படம் முன் மொழியாத அரசியல் எதுவும் இல்லை என்ற அளவிற்கு உலகமயம், இயற்கையை அழித்தல், மனிதர்களின் பேராசை, இயற்கை தன்னைத் தானே மறுசீரமைப்பு செய்து கொள்வது போன்ற முக்கிய அரசியல் கருத்துக்களை தீவிரமாக பேசக்கூடிய அந்த ஆவணப்படம் மிக எளிமையான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அந்த திரைப்படம் எடுப்பதற்கு 5 வருடங்களுக்கு மேலாக அந்தப் படக் குழுவினர் உழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.


உண்மையான கலை அம்சத்திற்கு உள்ள வலிமையே அதுதான். அதன் இயல்பின் மொழியிலேயே அரசியல் பேசும். சிறந்த கலைப்படைப்பு ஒன்றில் நாம் வலிந்து புகுத்த அரசியல் என்று ஏதும் இல்லை. இல்லையென்றால்அதை திணிக்கப்பட்ட ஒன்றாக, துருத்திக் கொண்டுதான் இருக்கும்.


சமீபகாலமாக Child Abuse  பற்றிய பரவலான விவாதங்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அது குறித்தான ஒரு திரைப்படம்தான் பொன்மகள் வந்தாள்(2020). அந்தத் திரைப்படம் OTT என்கிற முறைமையில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் என்பதைத் தாண்டி அதில் கொண்டாட ஏதுமில்லை என்பதோடு மட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டிய எவ்வித கலையம்ச புள்ளிகளும் அந்த திரைப்படத்தில் இல்லை என்பது உண்மையில் வருத்தத்துக்குரிய ஒன்று.பொதுக்கருத்து என்பதன் அடிப்படையில் எல்லோரும் ஆதரிக்கிறார்கள் நாமும் பாராட்டுவோம் என்பதான கருத்தினை எல்லாம் தாண்டி பொன்மகள் வந்தாள் ஒரு மகத்தான தோல்வி.


மிகவும் அலட்சியமாக தயாரிக்கப்பட்ட திரைக்கதையும், காட்சி வடிவங்களும்,உண்மையாக பேசப்பட வேண்டிய மிக முக்கிய செய்தியொன்றை வெவ்வேறு திசைகளில் திசைமாற்றி குழப்பின.
 Child Abuse போன்ற குற்ற வழக்குகள் முதலில் பெரும்பாலும் திறந்த வெளி நீதிமன்றங்களில் (not open court,  in-camera Proceedings) நடைபெறுவதில்லை என்பது கூட அந்த திரைப்பட இயக்குனருக்கு தெரியாதது, அல்லது அது குறித்த தரவுகள் சேகரிக்க தவறிய அந்த இயக்குனரின் அலட்சியம் என்பது ஜீரணிக்க முடியாதவை.

உண்மையில் ஒரு நீதி மன்றம் என்பது எப்படிப்பட்டது என்பது கூட அறிந்துகொள்ள அந்த இயக்குனர் விரும்பவில்லை என்பதுதான் வேதனைகரமானது. வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே கதாநாயகியின் தந்தையும் கதாநாயகியும் பேசிக் கொள்கின்ற காட்சி,வில்லனிடம் லஞ்சம் பெற்ற நீதிபதி (அந்தப் பணம் என்னானது..?) இறுதியில் நல்லவர் போல நீதி வழங்குவது, நீதிபதிகளை பகடி செய்வதற்காக உருவ கேலி காட்சிகளை அமைத்திருப்பது என நீதிமன்றத்திற்கு முன்பின் செல்லாதஒருவர் இயக்குனராகி இருப்பதன் விபத்து என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் குழந்தைகளின் ஆடையில் உதிரத்தை காட்டுவதும், குழந்தைகளுக்கு முன்னால் பேண்டின் பெல்டை கழட்டுவதும் போன்ற பொது மனிதனின் உளவியலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகளே போதுமென அந்த திரைப்படத்தின் இயக்குனர் நினைத்தது தான் படத்தின் ஆகப் பெரும் பலவீனம்.


இதுவரை பேசப்படாத ஒரு பொருளை பேசியதால் மட்டுமே மட்டமான கலையம்ச தன்மைகளோடு இருக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அற உணர்வுகள் உடைய எந்த எளிய கலைஞனுக்கும் அல்லது எழுத்தாளனுக்கும் தோன்றுகின்ற அடிப்படைக்கேள்வி.


Hope (2013) என்கின்ற ஒரு கொரியன் படம் இருக்கிறது. இணையத்திலும் காணமுடிகிறது. குழந்தைகள் மீது நடக்கிற பாலியல் அத்துமீறல் பற்றிய மிக முக்கியமான திரைப்படம். இயல்பான வாழ்வொன்றில் ஒரு மழைப்பொழுதின் போது பள்ளிக்கு செல்லும் சிறுமி தன் குடையில் இடம் கேட்கும் குடிபோதைக்காரன் ஒருவனை காண நேர்கிறாள்.அதிலிருந்து அந்த சிறுமியின் வாழ்க்கையே மாறிப் போகிறது. அந்த ஒற்றைச் சம்பவம் உளவியல் ரீதியாக உடல்ரீதியாக அந்த சிறுமியை நாசப்படுத்த, அதிலிருந்து அந்த சிறுமியின் தந்தை எப்படி தன் மகளை மீட்டார் என்பதுதான் அந்த திரைப்படம்.Ji-hye Kim எழுதிய கதையினை Joon-ik Lee இயக்கியிருக்கிறார். தென்கொரியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கொரியன் திரைப்பட வரிசையில் மிக முக்கியமான திரைப்படமாக திகழ்கிறது.


ஒரு நடு இரவில் பார்த்துவிட்டு விடிய விடிய கண்கலங்க விழகத்துக்கொண்டே கிடந்த அனுபவத்தை Hope தந்தது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் கை விரல்கள் உதிரத்தோடு தோன்றுகின்ற அந்த ஒரு காட்சியை தவிர வேறு எங்கும் ரத்த வாடை கிடையாது. மேலும் Child Abuse போன்ற சமூகத்தை அதிர்ச்சியூட்டும் கதைகளை கையாளும்போது எப்படி கையாள வேண்டும் என்பதற்கு Hope ஒரு மகத்தான பாடம்.


வெறும் Good touch- Bad touch சொல்லிக் கொடுத்தாலே அது சீர்திருத்தம் என நினைப்பவர்களுக்கு பொன்மகள் வந்தாள் ஒரு காவியம்தான். ஆனால் தன் மகளை ஒரு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு எதிராக சட்ட போராட்டங்களையும் செய்துகொண்டு, ஒரு மனித விலங்கினால் குதறப்பட்டிருக்கும் தன் மகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அந்தத் தந்தை செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் நம்பிக்கை மொழி பேசுகிற நெகிழ்ச்சி உணர்வின் அடிப்படையிலானவை.
குறிப்பாக அந்த சிறுமியின் கேள்வி “மழையில் நனையும் ஒருவருக்கு நான் இடம் கொடுத்தது தவறா..” என்கின்ற ஒரு சிறு குழந்தையின் அந்த அறம் சார்ந்த கேள்விக்கு முன்னால் மனிதனின் மனசாட்சி தலைகுனிந்து நிற்கிறது.


குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் அத்துமீறலுக்கு சட்டம் அடங்கிய தண்டனையோடு ஒரு பொது மனம் அமைதி கொள்கிறது. ஆனால் கலையம்ச விழிப்புணர்வு கொண்ட ஒரு அசல் கலைஞன் அதற்குப் பிறகுதான் சமூகத்திற்கான செய்தியைச் சொல்ல வருகிறான். அதுதான் நம்பிக்கை. அதைத்தான் Hope திரைப்படத்தின் இயக்குனர் Joon-ik Lee சாதித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளெல்லாம் அவ்வளவு நுட்பமான தரவுகளோடு மிகத்தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதை அதே துறையில் பணி புரிவதால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ‌.நமது ஆட்கள் இன்னும் “விதிப் பட நீதிமன்றத்தையே” தாண்டவில்லை என்பது தான் இதில் வேதனையான ஒரு செய்தி.


ஏறக்குறைய பொன்மகள்வந்தாள் திரைப்படத்தையும், Hope திரைப்படத்தையும் ஒரே காலகட்டத்தில் பார்க்க நேர்ந்ததால் என்னவோ, நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதையும், இன்னும் அசலான கலையம்ச  கதைகளோடு கோடம்பாக்கம் வீதிகளில் ஏன் மிகச் சிறந்த படைப்பாளிகள் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. நமக்கு நட்சத்திரப்பகட்டும் , அபத்தங்களும் நிறைந்த பொன்மகள்கள் வரத் தேவையில்லை. விலங்காம்ச மானுடத்தீமைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்க Hope போன்ற மின்னுகிற நம்பிக்கைகளே போதுமானது.

..

நினைவில் காடுள்ள மனிதர்கள்..

 

[youtube]https://www.youtube.com/watch?v=CB-J_4k8QKQ[/youtube]

 

“எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட..
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்..
பரவுகிறது
மனதில் பிரகாசமாக..”
– கல்யாண்ஜி

80 கள்.. தமிழ் நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களில், இலக்கியத்தில், அரசியலில், திரைப்படங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம். இலக்கியத்தில் ‌ தீவிர இலக்கியம் என்கின்ற வகைமை தோன்றி முழுநேர எழுத்தாளர்கள் பலர் தோன்றிய காலக் கட்டம். அரசியலில் இடதுசாரித்தனம் கலந்த தமிழ் உணர்வு சார்ந்த அரசியலுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. திரைப்படங்கள் ஏறக்குறைய அரங்கங்களை விட்டு வெளியே வந்து, நாடக தன்மையை ஏறக்குறைய சற்றே உதிர்த்து இயல்புணர்ச்சி ஊக்கமுடைய பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என்றெல்லாம் அசலான கலைஞர்கள் தோன்றிய காலக் கட்டம். எல்லாவற்றையும் சேர்த்து சுருக்கமாக சொன்னால் இளையராஜா என்கின்ற அதிதீவிர கலைஞன் உணர்ச்சிகளின் அசைவோட்டத்தை மொழிபெயர்த்து தன் இசையால் காற்றை நிரப்பி தமிழர்களை சுவாசிக்க வைத்த காலம்.  தமிழ்த்திரைப்பட ரசனை என்றால் அப்போதெல்லாம் ரஜினி-கமல் விஜயகாந்த் சத்தியராஜ் மோகன் போன்றோர் முன்னணி கலைஞர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கே. பாக்யராஜ்,டி.ராஜேந்தர், மணிவண்ணன்,ராஜசேகர், ஆர் சுந்தர்ராஜன், பாரதி – வாசு (பன்னீர் புஷ்பங்கள் பிறகு இவர்கள் இருவரும் தனித்தனியே நிறைய திரைப்படங்களில்..) தேவராஜ் மோகன், துரை (பசி), ராபர்ட் ராஜசேகர் போன்ற நிறைய இளம் தலைமுறை இயக்குனர்கள் நிறைய திரைப்படங்களை எடுத்துத் தள்ளினார்கள். வீட்டுக்கு வீடு டேப் ரிக்கார்டர்கள் (Tape recorder) முளைத்திருந்தன. சிறிய மரத்திலான ஒரு செல்ஃப் தயாரித்து அதில் ஆடியோ கேசட்டுகளை (Audio Cassette) வரிசையாக அடுக்கி வைத்திருப்பது வீட்டின் அந்தஸ்தை காட்டுகிற ஒரு தகுதியாக மாறத் தொடங்கியிருந்தது. இந்த ஆடியோ கேசட்டுகளில் பாடல்களை பதிவு செய்து கொடுப்பதற்காகவே வீதிக்கு வீதி பெரும்பாலும் பெயர் பலகைகளில் இளையராஜா படத்தோடு கேசட் பதிவு செய்யும் மையங்கள் ( Recording Center) முளைத்தன. அங்கே பெரும்பாலும் இளைஞர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ந்த இளைஞர்கள் எக்ஃகோ, லஹரி,ஏவிஎம்,ஏவிஎல் போன்ற பல்வேறு இசைக் கம்பெனிகள் வெளியிட்ட ஒரிஜினல் ஆடியோ கேசட்டுகளை வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டார்கள். மக்கள் ரேடியோ கேட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் ரேடியோவில் நாடகங்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சி பெட்டியில் தூர்தர்ஷன் என்கின்ற ஒரே ஒரு சேனல் கொடைக்கானல் மலை உச்சியிலிருந்து ஒளிபரப்பப்பட , அதற்கு ஆண்டனா வைத்து பூஸ்டர் ஸ்டபிலைசர் என அனைத்தும் வைத்து புள்ளி புள்ளியாக திரைப்படங்கள், கிரிக்கெட் மேட்ச்கள் ஒளிபரப்பாகின. கிரிக்கெட்டில் அன்று பெரும் பேட்ஸ்மேனாக விளங்கிய கவாஸ்கர் ஏறக்குறைய இறுதி காலத்தில் இருந்தார். கபில்தேவ் ஒரு வெற்றிகரமான பவுலராக அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். பெரும்பாலான மேட்சுகளில் இந்தியா தோற்று கொண்டிருந்தது. நானெல்லாம் தீவிரமான முகம்மது அசாருதீன் ரசிகன். கை மணிக்கட்டு களால் விளையாடுகிற அற்புதன். அவர் Square Cut Shot விளையாடும்போது அங்கே நின்று கொண்டிருக்கின்ற ஃபீல்டருக்கு பந்தைப் பிடிக்க தோணாமல் கைத் தட்டத்தான் தோன்றும் என்கிற அளவுக்கு நளினமாக விளையாடுகிற பெரும் கலைஞன். அற்புதமான fielder. எப்போதாவது Spin bowling ங்கும் செய்வார். நாங்கள் வாழ்ந்துவந்த மன்னார்குடி ஹவுசிங் யூனிட்டில் GCC என்கின்ற கவாஸ்கர் கிரிக்கெட் கிளப் என்ற ஒரு அணி இருந்தது. அதில் விளையாடிய ஸ்டீபன் அண்ணா தான் டீம் கேப்டன். காவுக்கனி , ராக்கெட் ராஜா என்கின்ற இருபெரும் வேகப்பந்து வீச்சாளர்கள். எதிரணியை மிரட்டி எடுத்துவிடுவார்கள்.குறிப்பாக ராக்கெட் ராஜா அண்ணன் பந்தினை யாராலும் தொடவே முடியாது.என் எதிர் ஃப்ளாட்டில் வாழ்ந்து வந்த ரவி அண்ணன் தான் அந்த டீமின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு அனைத்திலும் ஆதர்சம். அதிகமாக பேசமாட்டார். பிரமாதமாக கீப்பிங் செய்வார். அந்தக் காலகட்டத்தில் நான் நடப்பதற்காக Calipar போட்டிருந்தேன். ஆனாலும் ரவி அண்ணன் என்னையும் விளையாட வைப்பார். எல்லா விளையாட்டுக்களிலும் என்னை ஒதுக்கி வைக்காமல் சேர்த்துக் கொள்வார். என்னை நின்ற இடத்திலிருந்து பவுலிங் போட சொல்வார்.எங்கே சென்றாலும் நான்தான் அவருக்கு துணை. ஒரு நாள் மாலை ரவி அண்ணன் எங்கோ அவசரமாகக் கிளம்பி கொண்டிருக்க.. நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். வேறு வழி இல்லாமல்‌ வீட்டில் சொல்லிவிட்டு என்னையும் சைக்கிளில் அழைத்து கொண்டு அவர் சென்று நின்றது எங்கள் ஊரின் சாந்தி திரையரங்கத்தின் முன்னால். அந்தப்படத்தின் போஸ்டரை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. ஏதோ குடும்பப் படம் போல இருந்தது. ஆனால் ரவி அண்ணன் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அந்த 80 களின் காலத்தில் அதுபோன்ற திரைப்படத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு மெலோ டிராமா. அதுபோன்ற ஒரு திரைப்படத்தை மன்னார்குடி போன்ற ஒரு நடுத்தர நகரத்தில் பார்ப்பதற்கு ஒரு தனிப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. ரவி அண்ணன் ஏறக்குறைய அந்த மனநிலையில்தான் இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால்.. மன்னார்குடி போன்ற ஒரு ஊரில் அந்தத் திரைப்படத்திற்கு ஒரு கூட்டமாக கல்லூரி மாணவிகள் வந்து இருந்தார்கள். அந்த மாணவிகளை சார்ந்து சில மாணவர்களும் வந்திருக்க.‌. தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டது. படம் தொடங்கியது. திரைப்படம் ஒரு பெண்ணைப் பற்றியது. அவளுடைய விருப்பத்தை மீறி அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவன் மென்மையான மனதை உடையவன். ஏன் தன்னை தனது மனைவி விரும்ப மறுக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. இதுகுறித்து அவளிடம் அவன் ஆழமாக கேட்கின்ற ஒரு தருணத்தில்.. ஒரு வெள்ளை சுவற்றில் தலையைச் சாய்த்தவாறு அவள் அழுதுகொண்டே சரிய.. அவளது முற்காலம்(Flashback) காட்சிகளாக விரிகிறது. அதிரும் இசை துணுக்குகளுக்கு நடுவே சில இளைஞர்களோடு சட்டென ஒரு இளைஞன் வேகமாக நடந்து வருகிறான். திரையரங்கமே அதிர்கிறது.அக்காட்சியின் கேமிராவை கையாள்பவன் ஒரு கவிஞன் (P.C. ஸ்ரீராம்) என புரிகிறது. அந்தக் காட்சியில் அந்த கேமிரா தரையிலிருந்து நடந்துவரும் அந்த இளைஞனின் கோபம் மிக்க முகத்தை காட்டுகிறது. அதுபோன்ற ஒரு துள்ளல் மிகுந்த ஒரு ஆக்ரோஷமான வேக நடையை தமிழ்த் திரை அதுவரை பார்த்ததில்லை. வந்த வேகத்தில் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு அடி விழத் தொடங்குகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறபோது சரியாக சுவர் ஏறி குதித்து அந்த இளைஞன் தப்பித்துப் போய் விடுகிறான். அந்தக் காட்சியில் தன் இருக்கையிலிருந்து எழுந்து கூச்சலிடத் தொடங்கிய அந்த கல்லூரி மாணவிகள் அந்த இளைஞன் தோன்றும் போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அந்த இளைஞன் பைக்கில் சென்றான்/அந்தப் பெண் படிக்கும் கல்லூரிக்கே சென்று ஸ்பீக்கரில் சத்தம் போட்டு காதலை சொன்னான்/பேருந்திற்கு முன்னால் தன் பைக்கை நிறுத்தி தன் காதலியோடு பேசிக் கொண்டிருந்தான்/தன் காதலியின் முகத்தை பார்த்தவாறே கையில் கடலையோடு பின்னால் நடந்து சென்றான்./ அந்தப் பெண்ணோடு ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு காபி சாப்பிடும் போது எதிர்பாராதவிதமாக வருகிற அந்தப் பெண்ணின் தந்தையை பேர்ச்சொல்லி அழைத்து அந்தப் பெண்ணின் முகத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறான்/ பிறகு அந்த அதிர்ச்சியையே ஒரு ரசனை மிக்க காதலாக மாற்றுகிறான்/ தன் காதலிக்காக தான் போக வேண்டியிருந்த ஒரு போராட்டத்திற்கு போகாமல் கொட்டும் மழையில் காதலியின் வீட்டின் ஜன்னலுக்கு முன்னால் காத்திருக்கிறான்/மறுநாளே திருமணம் செய்து கொள்ள கோருகிறான்/கடைசியில் அந்த இளைஞன் திருமணத்திற்காக காத்திருக்கும் காதலியின் கண் முன்னரே எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒரு ரசவாத வித்தை போல அந்த 15 நிமிடங்களும் கண் முன்னால் வித விதமான உணர்வலைகளோடு நிகழ்ந்து முடிந்து விடுகிறது. அந்தப் பதினைந்து நிமிட காட்சிகளுக்கு பின்னால் ஆரவாரம் செய்து கொண்டிருந்த அந்த கல்லூரி மாணவிகள் அமைதியாக எழுந்து திரையரங்கை விட்டு வெளியே சென்று விட்டார்கள்.அவர்களைப் பொறுத்தவரையில் அத்திரைப்படம் அத்தோடு முடிந்து விட்டது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்கள் தியாகராஜ பாகவதர்/எம்ஜிஆர்/ கமல் என சிலவகை தனித்த நளினங்களோடு கூடிய ஆண்களை விரும்பியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள் போல தாங்கள் விரும்பும் நடிகனின் காட்சிகள் முடிந்த பிறகு திரையரங்கை விட்டு யாரும் வெளியே சென்றதில்லை.வெளியே விசாரித்தபோதுதான் சொன்னார்கள். மனோகர் என்கின்ற அந்த கதாபாத்திரம் சுடப்பட்டு இறந்து போன காட்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நாளும் பலர் எழுந்து சென்று விடுவதாக சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக எங்கள் மன்னார்குடிக்கு இது மிகப்பெரிய மாபெரும் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய பரபரப்பு செய்தியாக மாறிப்போனது. அது அக்காலத்தில் திரைப்பட ரசனைகளின் ஊடாக ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி. மனோகர் ஆக நடித்த அந்த இளைஞனின் பெயர் கார்த்திக். படம் மவுனராகம். அப்போதுதான் தெரிந்தது ரவி அண்ணன் கார்த்திக்கின் ரசிகன் என.அண்ணனும் படம் பார்த்துக்கொண்டிருந்த என்னை பார்த்து போகலாமா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அங்கே வந்திருந்த கல்லூரிப்பெண்களில் யாரோ ஒருவருக்காகவும், கார்த்திக்கிற்காகவும் தான் அண்ணனும் அத்திரைப்படத்திற்கு வந்திருந்தார். இரண்டுமே முடிந்து சென்று விட்டபடியால் அண்ணன் அழைக்க, நானும் எழுந்து வந்துவிட்டேன். இவ்வாறாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் பலவற்றை அறிமுகம் செய்து வைத்த ரவி அண்ணன் தான் எனக்கு கார்த்திக்கையும் அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு முன்னாலும் எனக்கு கார்த்திக்கை தெரியும். ஒரு வெகு சாதாரணமான சிறு நடிகன் போல துணை கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அக்காலத்தில் எனக்கு கமல் மட்டும் தான் பிடிக்கும்.அப்போது வித்தியாசமாக நடித்து கொண்டிருந்த சத்யராஜ் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. ஆனால் மவுனராகம் என்ற திரைப்படத்தினை என்னை அழைத்து சென்று காட்டியதன் மூலம் தன்னைப்போலவே ரவி அண்ணன் என்னையும் தீவிர கார்த்திக் ரசிகனாக மாற்றிவிட்டார். கார்த்திக்கை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் திரைப்படம் குறித்தான எனது ரசனைகள் மாறத் தொடங்கின. What is acting என்ற கேள்விக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஒரே ஒரு வார்த்தையில் சொல்கிறார் “living”.
நடிப்பு ஒரு நிகழ்கலை. புனைவு வெளிப்படுத்துகிற மிகை புள்ளிக்கும் , கலைஞனுக்கு இயல்பாக தோன்றுகிற கலையம்ச நேர்த்திக்கும் இடையே இருக்கின்ற நுட்ப இடைவெளியை உள் வாங்கி ஒரு கனவின் நகல் போல காட்சியளிக்கும் ஒரு மாய தோற்றத்தை உண்மையாக்குகிற வித்தை அது. அந்த மேஜிக் களியாட்டத்தில் ஒரு நுனி அளவு பிசகிவிட்டாலும் கலை தன் உயிரை இழந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாய விளையாட்டை தான் மிக இயல்பாக விளையாடுவதற்கான சாதுர்யத்தை கொண்ட மகத்தான கலைஞனாக கார்த்திக் திகழ்ந்தார்.

மவுனராகம் படத்தில் கார்த்திக்கு வருகின்ற காட்சிகள் 15 நிமிடங்களுக்கு மிகாதவை. ஆனால் அந்தப் பதினைந்து நிமிடங்கள் தான் கார்த்திக் என்ற இளம் கதாநாயகனை தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு இருக்கையில் அமர வைத்தது. வழமையான காதல் காட்சிகளுக்கு இளமையான துள்ளல் வண்ணம் தீட்டிக் கொண்டே இருந்தார் கார்த்திக். நொடிக்கு நொடி மாறிவிடும் அமர்க்களப்படுத்தும் அவரது முகபாவங்கள் அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாதது. அதன்பிறகு அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், இதயதாமரை, கோபுர வாசலிலே என அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கார்த்திக் நடித்து கலக்க அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் பிரம்மாண்டமாக உண்டானது. அவருக்கென தனித்துவமான இசையை இளையராஜா உருவாக்க… அவரது கிராமத்து படங்களான கிழக்கு வாசல், பாண்டி நாட்டு தங்கம், உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் , பெரிய வீட்டு பண்ணக்காரன், பூவரசன், பொன்னுமணி, போன்ற பல படங்கள் பாடல்களுக்காகவும்,கார்த்திக்கின் வசீகரத்திற்காகவும் ஓடின.தென்மாவட்டங்களில் கார்த்திக்கின் சாதியை வைத்து வீட்டுக்கு வீடு அவரது புகைப்படங்களை வைத்து ஒரு பெரிய கூட்டமே அவரது ரசிகர்களாக மாறி வழிபட்டதெல்லாம் பெருங்கதை. கார்த்திக் மிக நுட்பமான உணர்வுகளை மிக அழகியலாக வெளிப்படுத்துகிற தேர்ந்த கலைஞன்.குறிப்பாக அக்னி நட்சத்திரம். அந்தப் படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் மிகுந்த நேர்மறையான கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரி பாத்திரம். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரத்தை போகிற போக்கில் அனாசியமாக செய்து அசத்தி இருப்பார் கார்த்திக். பேருந்து நிறுத்தத்திலும், பேஸ்கட் பால் மைதானத்திலும், பெட்டிக் கடைகளிலும் மிக எளிதாக தென்படுகிற வேலையற்ற இளைஞனின் பாத்திரத்தை கார்த்திக் ரசிக்கத்தக்க வகையில் செய்து இணை நடிகரான பிரபுவை தாண்டிலும் ஸ்கோர் செய்திருப்பார். ஷேவ் செய்யப்படாத இளம் தாடி முகத்தில் ஜீன்ஸ் பேண்டோடு, உடல் முழுக்க வியர்வையோடு, சட்டை இல்லாமல் மைதானத்தில் பந்தை தலைக்கு வைத்து கார்த்திக் படுத்திருக்கிற அந்த லாவகம் இயக்குனர் மணிரத்னம் எதிர்பார்த்த அளவை விட காட்சி அழகின் உச்சம். கார்த்திக் போன்று முக அழகு கொண்ட தமிழ் நடிகர்கள் இதுவரை தோன்றியதில்லை. அது அப்பட்டமான ஒரு தமிழனின் முகம். ஊருக்குள் களையான முகம் என்பார்களே அந்த முகம் கார்த்திக்கின் முகம் தான். இதயத்தாமரை திரைப்படத்தில் ஒரு காதல் தேவதை … பாடலில் கார்த்திக்கும் ரேவதியும் ஒரு பாடல் முழுக்க ஒரு மிதிவண்டியில் வருகிற அந்த கவித்துவ காட்சி போல பொங்கி எழுகிற காதலின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிற காட்சி அழகியல் தமிழ் திரைப்படங்களில் மிகக் குறைவு..

[youtube]https://youtu.be/0ziNk53ikVI[/youtube]

மிகையற்ற நடிப்பு தான் கார்த்திக்கின் மூலதனம். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்ற மாபெரும் நடிகர்களிடம் காணப்படும்
உடல் மொழியில் ஆத்மார்த்த நெகிழ்வுத் தன்மை (flexibility) தமிழில் உடைய ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே. அதற்கு பல காட்சிகளை உதாரணம் சொல்லலாம்.
குறிப்பாக இந்தப் பாடல்

[youtube]https://youtu.be/8Hjf-UyTSKg[/youtube]

கார்த்திக்கின் முகபாவங்கள் தனித்துவமானவை. நடிகர் திலகம் சிவாஜி, கமல் போன்றோரிடம் இருக்கின்ற சற்றே Over tone கார்த்திக்கிடம் இருக்காது. தன் காதலிக்கு விடிந்தால் திருமணம். ஏற்கனவே காதலியை பெண் கேட்டு தன் தாய் வேறு அவமானப்பட்டு இறந்தும் போய்விட்டாள். திருமணத்தின் முதல் நாளன்று தான் விரும்பிய பெண்ணின் வீட்டின் முன்னால் கூத்துக் கட்ட வேண்டிய பிழைப்பு கொண்ட அந்த எளிய கலைஞனாக கார்த்திக் கண்ணீரோடு “பாடி பறந்த கிளி.. பாதை மறந்ததடி” என ததும்பும் விழிகளோடு பாடிய போது திரையரங்கமே சேர்ந்து அழுதது. அதுவரை அழுகை என்பது மிகை நடிப்பு அம்சங்களில் ஒன்றாக இருந்ததை கார்த்திக் தான் அதன் இறுக்கங்களை தகர்த்து இயல்பின் மொழிக்குள் கொண்டு வந்து அட்டகாசப்படுத்தினார் ‌. அதேபோல வருஷம் 16 திரைப்படத்தின் இறுதிக்காட்சி. எல்லாவற்றையும் இழந்து விட்டு தன் தாய்க்கு முன்பாக கையறு நிலையில் கதறித் தீர்க்கிற மனிதனாக கார்த்திக் பிரமாதப் படுத்திய போது அதை மிகை நடிப்பாக யாருமே உணரவில்லை என்பதுதான் கார்த்திக்கின் கலையழகு. கார்த்திக்கின் பிற்காலம் எல்லா நடிகர்களை போலவும் அமைந்தது என்றாலும்.. கோகுலத்தில் சீதை போன்ற சில அற்புதமான திரைப்படங்களிலும் தான் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டே இருந்தார். இதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்தாலும்.. கார்த்திக் கோகுலத்தில் சீதையில் நடித்த விதம் உலகத் தரமானது. கார்த்திக் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தனது கலை வாழ்வின் இறுதிக்காலத்தில் உள்ளத்தை அள்ளித்தா போன்ற வணிக ரீதியிலான காமெடி படங்களில் நடிக்க வேண்டியிருந்தது வரலாற்றின் கோர விசித்திரம். இப்போதும் கார்த்திக் ராவணன்,அனேகன், சந்திரமௌலி போன்ற படங்களில் நடிப்பதை பார்க்க முடிகிறது. அது நான் பார்த்த கார்த்திக் அல்ல. இது வேறு நபர். மன்னனாக வாழ்ந்தவனை பிச்சைக்காரனாக மாற்றி வைத்து அழகு பார்ப்பது தான் காலம் என்ற கொடுங்கோலனின் தீராப் பகடையாட்டமாக இருக்கிறது.
..
ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் ஒரு உணவகத்தில் யாரோ பின்புறத்திலிருந்து என்னை கட்டிப்பிடிக்க.. சட்டெனத் திரும்பி பார்த்த நான் ஒரு நடுத்தர வயதுக்காரரை பார்த்து விட்டு இவர் யாராக இருக்கும் என யோசித்தேன். “அடையாளம் தெரியலையா” என கேட்டவாறே “நான்தாண்டா ரவி” என்று
அணைத்துக்கொண்ட ரவி அண்ணன் அவரது மனைவி, பிள்ளைகளை அறிமுகம் செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணனை பார்க்கிறேன். நாங்கள் மன்னார்குடியிலிருந்து குடிமாறி வந்துவிட்ட பிறகு அண்ணனைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை. அண்ணனுக்கு வயதாகி இருந்தது. தலைமுடி நரைத்து விட்டது. பிள்ளைகள் பெரியவர்களாக நின்றார்கள். ஒரு காலத்தில் நாம் கதாநாயகர்களாக பார்த்த அண்ணன்கள் வயதாகி ஒரு சாதாரண மனிதனாக, ஒரு குடும்பஸ்த்தனாக, சகல பாடுகளும் நிரம்பிய எளிய மனிதராக நாம் பார்க்கும் பொழுது உண்மையாகவே வருத்தமாகி விடுகிறது. ரவி அண்ணன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். நிறைய விசாரித்தார். எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கேள்விப்பட்டு கண்கள் மின்ன சந்தோஷப்பட்டார். மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டார்.அலைபேசி எண்ணை மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து விடைபெற்றுக் கொண்டோம்.
அப்போதுதான் அவரது அலைபேசி ஒலித்தது. அதே கார்த்திக்கின் மௌனராகம் பிஜிஎம். அண்ணன் என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தார். நான் அப்படியே அதே இடத்திலேயே உறைந்து அமர்ந்து இருந்தேன். என்னைப் பொருத்தவரையில் பெரும்பாலான மனிதர்கள் நினைவுகளிலும், கடந்த காலங்களிலும் தான் வாழ்கிறார்கள். ஏதோ ஒரு திரைப்படத்தில் நான் நான் கேட்ட வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “டேப் ரிகார்டரில் உள்ளது போல உண்மையான வாழ்க்கையிலும் ரிவைண்டர் என்கின்ற பொத்தான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” கவிஞர் விக்ரமாதித்தியனின் கூண்டுப் புலிகள் என்ற ஒரு கவிதையில்…

“கூண்டுப் புலிகள் நன்றாக பழகி விட்டன;
நாறக் கூண்டினை பற்றி எந்த புகாரும் இல்லை:
நேரத்திற்கு இரை..
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்கத் சுகத்திற்கு தடையில்லை

என வரிசையாகச் சொல்லி வரும் அவர்… இறுதியாக

“ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்.”

என அதிர்ந்து முடித்திருப்பார். மனித வாழ்க்கையும் அவ்வாறு தானே இருக்கிறது..

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் “நினைவில் காடுள்ள மிருகம்” என்கின்ற ஒரு புகழ்பெற்ற கவிதை உண்டு.

“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.

அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.

அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன.
அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.

அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.

நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.”

அப்படித்தான் ரவி அண்ணன் போல மனிதர்களும். நினைவுகளில் கடந்த காலத்தையும், கூடவே கார்த்திக்கையும் சுமந்துக் கொண்டு அலைந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Page 1 of 3

Powered by WordPress & Theme by Anders Norén