மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஜெயமோகனின் தோசை.

பிரச்சனை என்னவென்றால்..

அந்தக் கதையை முழுதாகப் படித்து பாருங்கள். தினந்தோறும் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு பிரபல எழுத்தாளர் ஒருவர் தாக்கப்படுகிறார்.

இதில் மகிழவோ சிரிக்கவோ ஒன்றுமில்லை என்றாலும் கூட..

இதுதான் தமிழ் சமூக மனநிலையின் நிலை, தமிழ் சமூகமே சாடிஸ்ட்.. என்றெல்லாம் கொதிப்பதற்கும், குதிப்பதற்கும் இதில் ஒன்றுமில்லை.

ஆனால் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன.

ஆசானுக்கும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் கூடி வாழும் சமூகத்தை கவனிக்க தவிர்த்துவிட்டு நீங்கள் மயிலாசனத்தில் சிம்மாசனம் சூடி அமர்ந்து இருந்தீர்களேயானால் நீங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் அது பொது சமூகத்திற்கு தெரியாமல் விலக்கப்படுவீர்கள்.

நீங்களும் சாலைக்கு வர வேண்டும் ஆசானே… எவன் கூரை பற்றி எரிந்தால் என்ன.. இந்த நிலத்தில் மீத்தேனோ ஹைட்ரோ கார்பனோ எடுக்கப்பட்டால் என்ன.. நமக்குத் தொழில் எழுத்து. அந்த இருக்கையை விட்டு நான் எழ மாட்டேன் என்று இருந்தால்..நீங்கள் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போது.. உங்களுக்கு வேண்டியவர்களை தவிர உச்சுக் கொட்ட யாரும் இருக்க மாட்டார்கள்.

எழுத்தாளன் தனியானவன் அல்ல. இந்தப் பெரு உலகத்தின் அங்கம். மற்ற எல்லாரையும் விட இந்த சமூகத்தை சரியாக அவதானிப்பதற்கும் , தவறானவற்றை எதிர்த்து நிற்பதற்கு மான கூடுதல் பொறுப்பு நிலை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை எழுத்தாளர்கள் முதலில் நம்ப வேண்டும். நான் மகாபாரதம் எழுதுவேன். ஆனால் பக்கத்து தெருவில் நடக்கும் அநியாயத்தை எட்டி பார்க்கமாட்டேன் என்றால் சூழ்நிலை பிசகும் தருணமொன்றில் நம்மை எட்டிப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள் ‌.

தோசை காரனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வருகிறார்கள் என்றெல்லாம் ஆவேச படுகிறீர்கள். தன்னிடம் வருகின்ற எந்த மனிதனுக்கும் அவன் பாதிப்பிற்காக வழக்கறிஞர்கள் வரத்தான் செய்வார்கள். அது அவர்களது தொழில். அதே தோசை காரன் காயம்பட்டால் மருத்துவர்கள் மருத்துவம் செய்யத்தான் செய்வார்கள்.
அது அவர்களது பணி.
அவனுக்காக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்று நீங்கள் பதறுவதில் எவ்வித நியாயமும் இல்லை ஆசானே…
அவரவர்களுக்கு வேண்டியவர்கள் அந்தந்த சமயங்களில் வரத்தான் செய்வார்கள்.

பாதிக்கப்பட்ட நேரத்தில் சொல்லிக் காட்டக் கூடாது தான்.. ஆனாலும் நீங்கள் பதறுவதால் சொல்ல வேண்டி இருக்கிறது.

நீங்கள் முன்வைக்கிற எதற்கும் மாற்றாக இருக்கிற எவரையும் உங்கள் வாழ் காலத்தில் நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள். அவர்களை இழிவுபடுத்தி அவதூறு பேசி இருக்கிறீர்கள். தமிழர் மீது, தமிழ் நிலத்தின் மீது வேட்டையாடும் அனைத்து வல்லாதிக்க தேசியங்களின் மீதும் உங்களது கருணை உங்கள் எழுத்துக்கள் மூலம் சொட்டிக்கொண்டே இருக்கிறது. எதைப் பற்றியும் உங்களுக்கு கவலை இல்லை. ஒரு கௌரி லங்கேஷ் போலவோ, ஒரு கிரிஷ் கர்னாட் போலவோ உங்களை இருக்க சொல்லவில்லை. ஒரு சாதாரண மனிதனாக உங்களை சுற்றியுள்ளவற்றை உங்களது பெருமித முகமூடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்க்கச் சொல்கிறேன். அவ்வளவே.

எதையும் கவனிக்காமல் பார்க்காமல் தாங்கள் வந்தது தான் ஓவியம், சித்தரித்தது தான் எழுத்து என்று கிரீடம் சூட்டிக் கொண்டு இருந்தால்… நம் கருத்துகளுக்கு மாற்றாக எழுதும் எவனும் அயோக்கியனே என்று தனக்குத்தானே தராசு பூட்டி எடை பார்த்துக் கொண்டிருந்தால்… நாம் தனித்து தான் நிற்போம்.

எனவேதான் தோசை காரனுக்கு வருகின்ற நாலு பேர் கூட உங்களுக்கு வரவில்லை. உங்களை ஆதரித்து எழுதுகிற நண்பர்கள் கூட சென்ற காலங்களில் நீங்கள் எழுதியது குறித்து தாங்கள் பொருட்படுத்தவில்லை என்ற பெருந்தன்மை மனோபாவத்தை வெளிப்படுத்தவே ஆதரிக்கிறார்கள்.
அது போன்ற எழுத்துக்கள் ‘ஆயிரம் முரண்கள்’ இருந்தாலும் என்பது போன்ற பெருந்தன்மை பாவனைகள். அந்த அரிதார எழுத்துக்கள் சமூகத்தின் பொது வெளிப்பாடு அல்ல.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எழுத்தாளர் என்பதாலோ தோசை மாவு விற்பவர் என்பதாலோ ‌ நடைபெற்று முடிந்த இருக்கின்ற சம்பவத்தின் மீதான கரிசனத்தை கோரி நிற்கக் கூடாது.

உண்மை விசாரணை நடைபெற்று தவறு செய்தவர் தண்டிக்கப்படட்டும்.

மற்றபடி ஆசான் ஜெயமோகன் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது ‌. அவர் யார் என்றே தெரியாமல் தோசை மாவு விற்பவர் அவரை அணுகியது என்பது பரவலாக்கப்படாத தமிழ் அறிவுலகம் (!) பற்றி சிந்திக்க வைப்பதால் அது கவலை அளிக்கிறது.

மணி செந்தில்.

பேரறிவாளனின் வீடு. ——————————-

யாருமே
அழைக்காமல்
அந்தப் பொல்லாத
இரவும்
துயர் காற்றின்
விரல் பிடித்து
அந்த வீட்டுக்குள்
நுழைந்தது.

அதுவரை
நிலா முற்றங்களில்
அன்பின் கதகதப்போடு
அந்த ஐவரும்
உறங்கிய இரவுகள்
முடிவுக்கு வந்தன.

அந்த வீட்டின்
ஒற்றை புன்னகையை
எங்கிருந்தோ வந்த
இருட்டின் கரங்கள்
இழுத்துச் சென்றன.

யார் யாரோ வந்தார்கள்.
ஏதேதோ சொன்னார்கள்.
காரணக் கதைகள்
ஆயிரம் சொன்னாலும்
மறைந்துபோன
புன்னகையை
அந்த வீட்டினில்
மலர வைக்க
யாராலும் முடியவில்லை.

அலைந்தலைந்து
பாதங்கள் சோர்ந்தன.
அழுது அழுது
கண்ணீரின் தடம்
கலையாமல்
கன்னங்கள்
தழும்புகள் ஆகின.

வாசல் பார்த்த விழிகள்
நிலைக்குத்தின.
அசையா அந்த
விழிகளின் நடுவே
ஒரு தலைமுறை
கடந்த துயரம்
உறைந்து கிடக்கிறது.

வீட்டிற்கு கதவுகள்
இருந்தன.
கொடும் மழை காற்றிலும்
அவை சாத்தப் படவே இல்லை.
மூடப்படாத கதவுகளுக்கு
வலது பக்க ஓரத்தில்
என்றும் வாடாத
செம்பருத்திப் பூ சூடிய
ஒரு அழைப்பு மணி இருந்தது.

அதைத் தாயன்பு என்றார்கள்.

அந்த வீட்டிற்கு
ஜன்னல்களும்
இருந்தன.
சாத்தப்படாத ஜன்னல்கள்
பெருமூச்சு இரவுகளில்
உயிர்க்காற்றின்
அலைச்சலால்
அடித்துக் கொண்டே
இருக்கின்றன.

எனவே அதை
காற்றின் வீடு
என்றார்கள்.

அந்த வீட்டையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்த
பித்தன் ஒருவன்
உக்கிரமாகி சொன்னான்..

அது காற்றின் வீடு
அல்ல..
காத்திருப்பின் கூடு
என.

அந்தப் பொல்லாத
இரவு
அதன்பிறகு
இன்னும்
விடியவே இல்லை.

மணி செந்தில்.

சிரித்து விட்டுப் போவோம்

ஆதித்தமிழர் தமிழ் இன உணர்வோடு தமிழ்த்தேசியப் பாதையில் திரளத் தொடங்குவதை மறுத்து..எதிர்த்து..இறுதிவரை அவர்களை ‘தலித் தாகவே வைத்து’ பராமரிக்க விரும்புவது …ஆதிக்கச் சாதி உணர்வாளர்கள் கொண்டிருக்கும் அதே ஆதிக்குடிகளை தனிமைப்படுத்தும் உளவியல் தான்..

இந்த நுட்பமான விசித்திர ஒற்றுமைதான் சாதிகளை காப்பாற்றும் முக்கிய கருவி.

சுய சாதியை மறுத்து.. தமிழர் என்ற இன அடையாளத்தில் திரளும் சாதி மறுப்பாளர்களையும்… சாதிதான் தமிழர் இன ஓர்மைக்கு எதிரான முக்கிய காரணி என தன் சுய சாதி பெருமிதத்தை அழித்து தமிழர் என்று இரண்டு இளைஞர்களையும்…

எதிரான சக்திகளாக காட்ட முனைவது..

ஆதிக்கசாதி உணர்வாளர்களுக்கு ஆதரவான செயல் மட்டுமல்ல… நேரடியாக இந்துத்துவ உணர்ச்சியை ஊக்குவிக்கிற செயலும் கூட.

வெளிப்படையாகப் பேசுவோம்.

நம் சமூகத்தில் சாதி நிலைகளை காப்பாற்றுவதில் முதன்மையாக திகழ்வது எது..?

கடந்த 50 ஆண்டு கால திராவிட அரசியலே சாதி நிலைகளை காப்பாற்றும் மகத்தான அரசியல் தத்துவமாக திகழ்கிறது. பார்ப்பனர்களுக்கு எதிரான பார்ப்பனரல்லாதோரின் அரசியல் கருத்தாக்கமான திராவிடத்தின் அரசியல் பார்ப்பனர் அல்லாதோரான தமிழர்களின் இடைநிலை சாதிக்க்குழுக்களை வளர்த்தெடுப்பதில் மிகுந்த கவனம் காட்டியதை வரலாற்றின் ஏடுகளில் நாம் பார்க்கலாம்.

ஒருபக்கம் பார்ப்பனரை சுட்டிக் காட்டிக் கொண்டு.. மறுபக்கம் தமிழரை சாதியாக பிரித்து வைத்துக்கொண்டு.. தான் பிழைப்பதற்கான நுட்பமான வேலையை திராவிடம் செய்து வருகிறது.

எல்லாத் திராவிட கட்சிகளும் சாதியை பார்த்தே நகர ,ஒன்றிய ,மாவட்ட ,மாநில பொறுப்புகளை வழங்குகின்றன. சாதியை பார்த்தே வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. சாதியை பார்த்தே உள்ளாட்சி மன்ற பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சாதிக்கட்டமைப்புகளை எள்ளளவும் மீறிவிடக் கூடாது என்பதில் திராவிட அரசியல் கட்சிகள் மிகுந்த கவனம் கொண்டிருக்கின்றன. ஏனெனில் சாதி கட்டமைப்புகளை மீறினால் வெகுஜன அரசியல் வாக்கு தங்களுக்கு கிடைக்காது என்ற எண்ணத்தினால் சாதியை பாதுகாக்கின்ற மகத்தான அரணாக திராவிடம் திகழ்கிறது.

வட மாவட்டங்களில் பறையரும் வன்னியரும் இணைந்து மண்ணின் மைந்தர்கள் என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிட கட்சிகளை எதிர்த்து தேர்தலை சந்தித்தால்.. திராவிடக் கட்சிகள் அடையாளமின்றி அழியும்.
இதே நிலைதான் தென் மாவட்டங்களில் தேவேந்திரரும் தேவரும்.

எனவேதான் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை சாதிகளுக்கிடையிலான முரண்களை தன் அரசியல் அதிகாரம் மூலமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடம் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

தேவர் சிலைக்கு மாலை போடுகிற, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிற திமுக அண்ணா திமுக என்கின்ற கட்சிகளுக்கு தேவரும், அம்பேத்கரும் ஒரு பொருட்டே அல்ல.
அந்த சிலைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய வாக்குகள் மட்டுமே அவர்களது தேவை. இந்நிலையில் இரண்டு குழுக்களும் அடித்துக் கொண்டால் தான்.. அந்த முரண்பாட்டை முன்னிறுத்தி தாங்கள் வாக்குப் பெற முடியும் என்கின்ற தெளிவு திராவிட கட்சிகளுக்கு என்றும் உண்டு.

இவ்வாறெல்லாம் சாதியை காப்பாற்றுகிற.. பல காரணிகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு..
தமிழர் என்கின்ற தேசிய அடையாளத்தின் மீது பாய்ந்து பிராண்டுவது எதன் பொருட்டும் நியாயமல்ல.

ராஜராஜ சோழன் நல்லவனாக இருந்தால் என்ன கெட்டவனாக இருந்தால் என்ன… வரலாற்றின் வீதியில் பின்சென்று அந்தப் பக்கங்களை மாற்ற நமக்கு வலிமை இருக்கின்றதா என்ன…

ராஜராஜ சோழனைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் கட்டும் போது அதற்கு இடம் தந்த இஸ்லாமிய தமிழனைப் பற்றி வரலாற்றில் பதிவு இருக்கிறது. ராஜராஜனைப் பற்றி பெருமிதமாகவும், குற்றம் சாட்டவும் சரிசமமான ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இருதரப்பிலும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் மறைந்துபோன தமிழரின் அடையாளமான ஒரு மாபெரும் மன்னனை இழிவு படுத்துவது என்பது தாழ்த்தப்பட்டு இருக்கிற மக்களின் விடுதலைக்கு எவ்வாறு உதவும் என்று தெரியவில்லை.

ஒரு மன்னனை எடைபோட வேண்டும் என்றால்.. அவன் வாழ்ந்து இருக்கின்ற காலகட்டம்.. அவன் கொண்டிருந்த வாய்ப்பு.. அவன் பெற்றிருந்த நம்பிக்கைகள்.. அவன் அடைந்த வெற்றி, புகழ்..அவன் மீதான விமர்சனங்கள் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டிய செயல். ஆனால் அதற்கெல்லாம் தற்போது என்ன தேவை இருக்கிறது என்பது இதையெல்லாம் கடந்த ஒரு கேள்வி.

குடிசை கொளுத்துபவர்களும், அரசியல் அதிகாரத்தால் நிலத்தை பிடுங்கிக் கொண்டவர்களும், சாதி பார்த்து அரசியல் செய்பவர்களும் உங்கள் கண் முன்னால் தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நாசுக்காக தவிர்த்துவிட்டு..ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பது.. என்ன சொல்ல..??

ஆதி தமிழர்களின் நிலங்களை ஏற்கனவே பிடிங்கி இன்னுமும் பிடுங்கிக் கொண்டிருக்கிற திராவிட/தேசிய அரசியல்வாதிகளை சட்டையைப் பிடித்து உலுக்கி எடுத்து பஞ்சமி நிலங்களை மீட்டால்.. அது உண்மையான புரட்சி. செத்துப்போன ஒரு மன்னனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது என்பது காலத்தைக் கடத்துகின்ற..தன் மீது வெளிச்சம் பாய்ச்சிக் கொள்கிற ஒரு சாதாரண தந்திரம் அவ்வளவே..

தமிழரின் ஒற்றை அடையாளமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் திகழ்கிறது. இந்த உணர்ச்சி சாதி நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன உணர்வு சார்ந்த மரபணு சார்ந்த பெருமித உணர்ச்சி… அதனால் தான் ஆளுக்கு ஆள் ராஜராஜ சோழன் தன்னுடைய சாதி எனக் கொண்டாடிக் கொள்ள போட்டி போடுகிறார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய இன வரலாற்றில் நம் இனத்தின் பெருமைக்குரிய அடையாளங்களாக திகழ்கிற பல முன்னோர்களையும் நாம் அவர்கள் செய்த சமூக அறம் சார்ந்த செயல்களுக்காக நினைவு கூறுகிறோம். அந்த முன்னோர்கள் எந்த சாதியாக இருந்தாலும் சரி. அவர்கள் காலத்தில் அவர்களுக்குள் எப்படிப்பட்ட முரண் பட்டவர்களாக இருந்தாலும் சரி.. நாம் இருவரையும் சமமாக மதித்து வணங்குகிறோம்.

அவரவர்களுக்கு சொல்லக்கூடிய ஒரு நீதியும் ,ஒரு கதையும், ஒரு நியாயமும் எல்லோருக்கும் ,எல்லா இடத்திலும் உண்டு. அந்தக் கதையை வைத்துக்கொண்டு வரலாற்றின் வீதிகளில் பின் சென்று நியாயம் தீர்ப்பது நமது வேலையல்ல.

நமக்கு இரண்டு தாத்தாக்கள் இருந்தார்கள். இருவரும் அடித்துக் கொண்டார்கள். தற்போது இருவரும் இறந்து விட்டார்கள். சரி.. இருவரையும் வணங்கி விட்டுப் போவோமே…. என்பதான மனநிலை அது. அதைத்தாண்டி அவர்களுக்குள் இருக்கும் முரண்களில் நியாயம் பார்த்து தீர்ப்பு சொல்வது நமது வேலையல்ல.

நமது தாத்தாக்கள் காலத்து பகையையும் இப்போது கொண்டு வந்து அடித்துக் கொள்வதும், கொலை செய்து கொள்வதும் இருப்பதிலேயே ஆகப்பெரும் முட்டாள்தனமான மூடத்தனம்.

இதுவெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். சாதி மறுத்து வருகிற இளைஞர்களை ஒதுக்கி வைத்துவிட்டு.. சாதிக்கு எதிராக உயரும் கரங்களை மறுத்துவிட்டு..
நான் ஜாதியற்றவன். நான் தமிழன் என்கின்ற முழக்கங்களை மூர்க்கமாக எதிர்த்துவிட்டு…

தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலையை பேசுவது என்பது… அந்தந்த காலகட்டத்தில் நடக்கின்ற சாதாரண மேடை கூத்து.

உண்மையில் யார் சாதிக்கு எதிரானவர்கள்..

சுய சாதியை விட்டு வெளியேறி இன்னொரு சாதியில் திருமணம் செய்தவர்கள்.. தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆதி தமிழர் வீட்டில் மணம் முடித்தவர்கள்.. தான் பெற்றெடுத்த பிள்ளைகளும் சாதிமறுப்புத் திருமணமே செய்வார்கள் என்று உறுதி ஏற்று வாழ்பவர்கள்..
இதனால் அவரவர் பிறந்த சாதியில் ஏற்படும் கலகத்திற்கும் முகம் கொடுத்து.. அந்தக் கலகமே தான் கொண்டு இருக்கின்ற சாதி எதிர்ப்பு உளவியலுக்கு கிடைக்க விருதாக கருதி வாழ்பவர்கள்தான் சாதிக்கு எதிரானவர்கள்.

ஏதேனும் ஒரு சாதியின் பக்கம் நின்று கொண்டு இன்னொரு சாதியை பற்றி பேசிக் கொண்டிருப்பதும் ‌.. சுயசாதி பெருமிதத்தில் .. தன் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் சாதி உணர்ச்சிகளால் நிரப்பி வைத்துக் கொள்வதும் சாதிய உணர்ச்சிகளை வளர்க்கவே செய்யும்.

மற்றபடி.. ராஜராஜன் ராஜேந்திரன் என்றெல்லாம் பேசி இகழ்வது திட்டுவது.. இது போன்றவை அந்தந்தக் காலத்திற்கேற்ற ஆகச் சிறந்த பொழுதுபோக்கு.

சிரித்து விட்டுப் போவோம்.

மணி செந்தில்.

இதற்கு யாரும் வர மாட்டார்கள்..

————————-+————————

தமிழக அரசியல் கட்சிகளில் வேறு எதுவும் நினைத்துக்கூட பார்க்க இயலாத மாபெரும் புரட்சிகர காரியம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் இளையப் போராளிகள் நிகழ்த்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் 85% நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது. 2020க்குள் நிலத்தடி நீர் முற்றும் அழிகிற நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.

இந்நிலையில் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நமக்குள்ள ஒரே ஒரு வழி இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலைகளை பராமரித்து வருகிற மழைக்காலத்தில் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிற நீர்நிலைகளில் நீரை சேகரித்து நமது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்வது தான்.

எனவேதான் இந்த மாபெரும் அபாயத்திலிருந்து இந்த மண்ணை காத்திட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த தம்பி தங்கைகள் இன்று வேளச்சேரி ஏரியினை சுத்தம் செய்கிற மாபெரும் புரட்சிகரப் பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

இதை எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை ‌.எந்த முற்போக்கு சிந்தனையாளர் வெங்காயமும் பாராட்ட போவதில்லை.

அரசியல் என்றாலே மக்களிடம் ஓட்டு கேட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற விவகாரம் மட்டுமல்ல. மாறாக இந்த நிலத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து இம் மண்ணை காத்திட மக்களைக் காத்திட தமிழகத்தின் இன உணர்வு மிக்க இளையோர் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதே புரட்சிகர நடவடிக்கை தான்.

இதில் எந்த திராவிட கட்சியாவது எங்களோடு போட்டி போடுங்களேன்.

சமூகநீதி பல்லாங்குழி விளையாடி, தலைவர்களையும் தத்துவங்களையும் மண்ணாக்கி.. இந்த இனத்தையும் நிலத்தையும் நாசமாக்கிய திராவிடக் கட்சிகளே… இந்தியத்தின் பெயரால் தமிழகத்தை சுரண்டிக் கொழுக்கிற தேசிய கட்சிகளே.. சாதி பெருமிதத்தை ஊட்டி தமிழ்நாட்டை துண்டாடிக்கொண்டிருக்கும் சாதியக் கட்சிகளே..

வாருங்கள்.. இதில் நாம் தமிழர் கட்சியோடு போட்டி போடுங்கள்.

தமிழர்களை குடிநோயாளிகளாக்கிய டாஸ்மாக் பார் எடுக்க, குண்டும் குழியுமாக ஒரு பாதையை உருவாக்க தார் ரோடு காண்ட்ராக்ட் எடுக்க, வரிசையில் நின்ற கருப்பு சிவப்பு, கறுப்பு சிவப்பு வெள்ளை என பல்வேறு கரை வேட்டி கட்டிய பெரியோர்களே..

வாருங்கள்.‌ இதில் எங்களோடு போட்டி போடுங்கள்.

இதற்கு எந்த திராவிட கட்சியும் எதிர்வினையாற்ற மாட்டார்கள். நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருப்பார்கள்.

ஆற்று மண்ணையெல்லாம் திருடித் தின்று விட்டு.. இல்லாத மண்ணை பெரியார் மண் என்று பீற்ற வரிசையில் வருவார்கள்.

இதற்கு வரமாட்டார்கள்.

இந்த 50 வருட அயோக்கியத்தனத்தால்
ஒரு தலைமுறை இளைஞர்கள் வீதியில் நிற்கிறார்கள்.

வேளச்சேரி ஏரியை காப்பாற்ற வீதிக்கு வந்து வேர்வையில் நனைந்து.. செயலில் இறங்கி இருக்கிற.. நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

மணி செந்தில்.

 

வயிற்றெரிச்சல் கும்பல்களின் வன்ம எரிச்சல்

என்னடா தேர்தல் முடிந்து விட்டதே.. நாம் தமிழர் குறிப்பிட்ட சதவீத ஓட்டை வாங்கிவிட்டதே.தனது எழுச்சியான வளர்ச்சியை பதிவு செய்துவிட்டதே.
ஆனாலும் இன்னும் வயிற்றெரிச்சல் கும்பல்களிடமிருந்து வன்ம இருமல் வரவில்லையே என்று நினைத்தேன்.

வரத் தொடங்கியிருக்கின்றன.அதிலும்
சிலதுகள் புலம்பியே ரத்த வாந்தி எடுக்க
தொடங்கி இருக்கின்றன.

வழக்கம்போல் அதே புலம்பல்தான்.

ஆனால் இம்முறை கூடுதலாக பொய் 2 டீஸ்பூன் அதிகம்.

சரி.. நாமும் வழக்கம்போல் இடது கையால் இக்னோர் செய்யலாம் என்று நினைத்தால் கக்கிய அவதூறுகள் சமூக வலைதளங்களில் கத்த தொடங்கியிருக்கின்றன.

எனவே தான் இந்த பதிவு.

…..‌

ஒவ்வொரு முறையும் சாதி கருத்தியலுக்கு எதிராக நாம் தமிழர் முழங்கிக் கொண்டே வருகிறது. பொதுத் தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்துவது, தேர்தல் அரசியலில் சாதி பார்க்காமல் வேட்பாளரை களம் இறக்குவது என ஒவ்வொரு முறையும் சாதிக்கு எதிராக தனது தடத்தை அழுத்தமாக நாம் தமிழர் பதிவு செய்து வருகிறது.

ஆனால் மீண்டும் மீண்டும் நாம் தமிழர் குறித்து ஒரு திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுகிறது. அது என்னவென்றால்.. தமிழர் என்கிற இன வரையறை செய்ய சாதி கேட்கிறோம் என்கின்ற மிக இழிவான மலிவான பிரச்சாரம் எங்களை நோக்கி செய்யப்படுகிறது.

எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களது பேச்சுக்கள் இணையதளம் முழுக்க பரவிக் கிடக்கின்றன. சாதிக்கு எதிராக அவர் முழங்கிய முழக்கங்கள் காற்றோடு கலந்து ஒவ்வொரு தமிழர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் எங்களைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு.

முதலில்…

நாங்கள் சாதி உணர்வுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கவே நாம் தமிழர் என்று முழங்குகிறோம். நாம் தமிழர் என்கின்ற முழக்கமே சாதி உணர்விற்கு எதிரான கலகச் சொல் தான்.அதுவரை சாதியாகப் பிரிந்து நின்ற தமிழன் நாம் தமிழர் என்ற முழக்கத்தினால் தான் சாதியை கடந்து, மதத்தை மறந்து இன அரசியலின் மீது ஈர்க்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசியலை நோக்கி நகர்கிறான்.

சாதி உணர்வை சாகடித்துவிட்டு தான் 16 லட்சம் தமிழர்கள் நாம் தமிழராய் உணர்ந்து வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் சாதியை ஆதரிப்பவர்களாக இருந்தால்.. அந்தந்த சாதி கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள்.இல்லையேல் திராவிட கட்சிகள் சாதி பார்த்து நிறுத்தியிருந்த தங்கள் சாதி வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருப்பார்கள். இதையெல்லாம் கடந்து இனம் மொழி என நேசித்து நாம் தமிழருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

நாம் தமிழரை சேர்ந்த ஒவ்வொரு இளைஞனும் சாதி மறுப்பினை உளப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு களத்தில் நிற்கிறான். சாதிய விரும்புகிறவனாக இருந்தால் அவன் இணைய ஆயிரம் அமைப்புகள் இங்கே இருக்கின்றன.

இனத்திற்கான மாபெரும் போர் படையாய் நாம் தமிழர் வளர்வதை பொறுக்காத திராவிடக் கூட்டம் சாதி மறுப்பாளர்களான எங்களை தவறாக சித்தரிக்க முயன்று வருகின்றது..

சாதி குறித்து கேள்வி எழுப்பி முற்போக்காளர்கள்…தங்கள் அருகிலேயே நிற்கின்ற கருப்பு துண்டுகளையும், அவை ஆதரிக்கின்ற கருப்பு சிவப்பு துண்டுகளையும் சற்றே ஏறெடுத்து சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி.. தமிழர்களை 50 வருடங்களாக சாதியாகப் பிரித்து வட்டச் செயலாளர் தொடங்கி பகுதி செயலாளர் நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்டச் செயலாளர் என அனைத்துக் கட்சி பதவிகளிலும் சாதி பார்த்து இடம் கொடுத்து சாதியை காப்பாற்றுகின்ற இழிநிலை குறித்து எந்தவித கேள்வியும் எழுப்ப மாட்டார்கள்.

ஏனெனில் அவர்களுக்கும் தெரியும். திராவிடம் என்பதே சாதியை காப்பாற்றுகிற சாதியை போற்றுகிற மாபெரும் சூழ்ச்சி என..

ஒரு பக்கம் ஈழத்திற்கு ஆதரவாக போராடுவதாக காட்டிக்கொள்வார்கள். மறுபக்கம் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு தெருத்தெருவாய் அலைந்தவர்களோடு கைகோர்த்து நிற்பார்கள்.

இந்த லட்சணத்தில் எம்மினத்தின் உதிரம் படிந்த அந்த கைகளோடு நாங்களும் கைகோர்க்க வேண்டும் என கேட்பது தான் மாபெரும் கொடுமை.

உன் நண்பனைக் காட்டு.. உன்னை யாரென்று சொல்கிறேன் என்பார்கள். அவர்களது நண்பர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களும் தொடர்ந்து அம்பலப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி வயநாடில் வந்து நிற்கலாம் வெல்லலாம். ஆனால் சட்டமன்றத் தொகுதியில் நிற்க சொல்லுங்களேன் பார்ப்போம். ராகுல் காந்தி மாபெரும் கட்சியின் தலைவராக இருக்கலாம். எம்பியாக வெல்லலாம். ஆனால் ஒரு போதும் கேரளா நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது.

மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்

தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது தமிழரின் அடிப்படை அரசியல் உரிமை.

நாங்கள் கேட்பது எம் இனத்திற்கான இறையாண்மை.

எம் இனத்தின் வரையறை என்பது… தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்கள்.

அதில் சாதிக்கும் மதத்திற்கும் இடமில்லை.

எங்களுக்கென்று ஒரு நிலம் இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறது.அந்தப் பண்பாட்டு தொடர்ச்சியையும் செழுமைப் படுத்திக் கொள்கிற வரலாற்றுத் தெளிவு எம் இனத்திற்கு இயல்பாகவே இருக்கிறது.

எனவே தன் ஊக்கம் கொண்ட தமிழின இளையோர் தன் மண்ணிற்கான, தன் இனத்திற்கான அரசியலை ஒரு வெகுஜன அரசியலாக கட்டமைக்க நாம் தமிழர் என்ற அமைப்பினை உருவாக்கி வளர்த்து வருகிறார்கள்.

எங்களது அரசியல் தெளிவு/சாதிய மறுப்பு ஆகியவை திராவிட கட்சிகளுக்கு இயக்கங்களுக்கு உறுத்தலாகதான் இருக்கும்.

அதை ஆதரித்து கைப்பிடித்து நிற்பவர்களுக்கும் உறுத்தலாகத்தான் இருக்கும்.

அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உன் முதுகிலேயே ஓராயிரம் அழுக்கு. நீ அடுத்தவர் மீது சாட்டுகிறாய் பொய் வழக்கு.

தொடர்ந்து உண்மையினை உரக்கச் சொல்லி.. சுயசாதி பெருமித உணர்ச்சி யை சாகடித்து புலிக்கொடி உயர்த்துவோம்.

விடியும் கிழக்கு.

மணி செந்தில்.

மானுட ஜீவித வரலாறு

ஒரு காலத்தில் காதுகளே இல்லாத மனிதர்கள் இருந்தார்கள்.

காதுகளே இல்லாத மனித வாழ்க்கையில் சொற்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ இடமில்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் இல்லை. அப்படிப் பேசிக் கொண்டால் கூட அவைகளுக்கு பொருளும் இல்லை.

சரி.. காதுகள் இல்லாதது தான் பிரச்சனை. காதுகளைப் பொருத்துவோம். இனியாவது மனித வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்போம் என கடவுள் சிந்தித்து மனிதர்களுக்கு காதுகளை பொருத்தினான்.

அப்போதும் அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அர்த்தம் இல்லாததைப் பேசிக்கொண்டு எவ்வித உயிர்ப்பும் இல்லாத ஓசைகளை கேட்டுக்கொண்டும் வேரற்ற பெருமரம் போல அவர்கள் எவ்வித பிடிப்புமற்று இருந்தார்கள்.

இதைக் கண்ட கடவுள் மீண்டும் சிந்தித்தான்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாத சாரமற்ற மானுட வாழ்க்கையை கண்ட கடவுள் அர்த்தமுள்ளத்தாக்க சிந்தித்தான்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

பிறகு தானே ஒரு மனிதனாக இந்த மண்ணில் பிறந்தான்.

தனக்கு இளையராஜா எனப் பெயர் சூட்டிக் கொண்டு..

அவனே அர்த்தமற்று திரிந்த சொற்களுக்கு சிறகுகள் முளைக்க வைத்தான். காதுகளில் பூ உரசும் உணர்வினை மனிதர்கள் அடையத் தொடங்கினார்கள்.

அந்த அதிமனிதன்..

விசித்திரமான ஒலிக்கலவை மூலம்
மனிதனை அமைதிப் படுத்த தொடங்கினான்.

பல்வேறு ஓசைகளுக்கு
உயிரூட்டி உணர்ச்சிகளை உட்புகுத்தினான்.

காதுகளில் அருவிகள் பொழிந்தன.

வெவ்வேறு இசைக்கருவிகளின் விசித்திர கலவையில் பொங்கி எழுந்த இசைப் பிரவாகம் அதுவரை இல்லாத மானுட உணர்ச்சிகளை உண்டாக்கியது.

எங்கிருந்தோ கசியும் அந்த இசை துளியில் மனிதனின் கண்கள் கலங்க தொடங்கின. மனிதர்கள் அழுதார்கள்.
மென்மையாக சிரிக்க பழகினார்கள்.
தனிமையில் சிந்தித்தார்கள். காதலித்தார்கள். கலவி கொண்டார்கள்.
குழந்தைகள் தூங்கினார்கள். காதலில் தோல்வியுற்று அமைதியற்று அலைந்த மனங்கள் சிறு அழுகையுடன் சாந்தமாயின. பிரிவு மகிழ்ச்சி துக்கம் காதல் காமம் துரோகம் என பல்வேறு உணர்ச்சிகள் அந்த அதி மனிதனின் வெவ்வேறு இசையாழங்களால் உணரப்பட்டது. தாய் மண்ணை விட்டு பிரிந்து விதியின் சூட்சம கோடுகளால் உலகப் பரப்பில் ஆங்காங்கே துப்பப்பட்ட ஒரு இனத்தின் மனிதர்கள் அந்த குரலை கேட்கும் போதெல்லாம் தன் தாயின் கருவறைக்கு திரும்புவது போல ஆறுதல் கொண்டார்கள்.

தொலைதூரப் பாலையில் கொளுத்தும் வெயிலில்.. பிழைப்பின் நிமித்தமாய் அசைவற்று அமர்ந்திருக்கும் போது.. காதுகளில் நுழையும் அந்த அந்த தேவமனிதனின் இசை ஒரே நொடிக்குள் தன் சொந்த ஊரின் ஏரிக்கரை காற்றையும் அத்தை மகளின் வாசனையையும் தாய் மண்ணின் ஈரத்தையும் கொண்டு வந்து தன் ஆன்மாவிற்குள் சேர்த்ததை கண்டு அவர்கள் அதிசயித்தார்கள்.

அது கட்டிடக் காடாக இருந்தால் என்ன.. கட்டாந்தரையாக இருந்தால் என்ன.. உயர்ந்து நிற்கும் அரண்மனையாக இருந்தால் என்ன.. சுட்டெரிக்கும் சுடுகாடாக இருந்தால் என்ன.. பேதமற்று அந்த இசைத்துணுக்குகள் காற்றில் கலந்து பரவின.

அந்த மானுடர்கள் முதன்முதலாக வெறும் ஒலிகளால் பசியாற அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

தனித்தே பிறந்த மனிதர்கள் உயிர் உருகும் அந்த இசையை பெரும் துணையாக அடைந்தார்கள். தனியே வாழவும் தனியே நடக்கவும் இரவுகளில் தனியே படுக்கவும் காற்றில் மிதந்து வந்த அந்த இசைத் துளிகளால் அவர்களுக்கு சாத்தியமானது.

எல்லா இரவுகளிலும் இருட்டு இருந்தது. கூடவே இளையராஜாவும் இருந்தார்.

எனவே வெளிச்சமும் இருந்தது.

இறுதியாக மனிதன்..

அந்த கடவுளின் உன்னத இசையை தனது சுவாச காற்றாக மாற்றும் வித்தையை அவனாகவே கண்டறிந்தான் .

இவ்வாறாகவே இவ்வுலகில் மானுட ஜீவிதம் இந்த நொடி வரை மகத்தானதாக
இருந்து வருகிறது.

கடவுளின் கருணைக்கு இன்று பிறந்தநாள்.

சந்தேகங்கள் நிரம்பிய தேர்தல் முறைமை -எழும்பும் வினாக்களும்.. நீடிக்கும் பொது மெளனமும்..

இந்தத் தேர்தலைப் பொறுத்து சில சந்தேகங்கள் நமக்கு எழுந்திருக்கின்றன. இதையே சந்தேகங்கள் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். இந்த சந்தேகங்கள் குறித்து இதுவரை எந்த ஊடகமும் எவ்விதமான விவாதங்களும் மேற்கொள்ளாமல் கடந்து போக முயற்சிப்பதில் இருந்தே இந்த சந்தேகங்கள் மீதான வலிமை அதிகரிக்கிறது.

உரையாடல்கள்/ கேள்விகள்/ விவாதங்கள் எதுவுமற்ற சந்தேகங்கள் உண்மைகளுக்கு நெருக்கமானவை என்பதுதான் அச்சமாக இருக்கிறது.

1. பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்த மாநிலத்தை ஆளுகின்ற அண்ணா திமுக அரசிற்கு தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள 8 சட்டமன்ற தொகுதி இடங்கள் தேவைப்பட்டன. நடந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகச் சரியாக ஒன்பது இடங்களை பிடித்து இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த அண்ணா திமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டும் வலுவான திமுகவை எதிர்த்து ஒன்பது இடங்களை பிடித்து இருப்பது மிகுந்த சந்தேகத்திற்குரியது. ஒரு சட்டமன்ற தொகுதி வாக்காளர் சட்டமன்ற தொகுதிக்கு இரட்டை இலைக்கும் பாராளுமன்ற தொகுதிக்கு உதய சூரியனுக்கும் வாக்களித்திருப்பார்கள் என எண்ணும் போது உண்மையில் சந்தேகமாக இருக்கிறது. அப்படி முற்றிலும் எதிரான முரண்பட்ட இரண்டு கட்சிகளுக்கு ஒரே தேர்தலில் ஒரே வாக்குச்சாவடியில் இரண்டு ஓட்டுக்களை அளித்த ‘விசித்திர’ வாக்காளர்கள் குறித்த எந்தக் கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பாதது மிகுந்த சந்தேகத்திற்குரியது.

2. மக்கள் நீதி மய்யம் நாம் தமிழர் கட்சி போலவோ அம முக போலவோ பரவலான கிளைப் பொறுப்பாளர்களை கொண்ட கட்சி அல்ல. நாம் தமிழர் கட்சிக்கு இருந்த பரவலான ஆதரவைப் குறைத்து காட்டவே மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டது. சொல்லப்போனால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் எங்கும் சரியாக வாக்கு கேட்டதாக கூட தகவல்கள் இல்லை. அதன் தலைவர் கமலஹாசனும் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்ததாக தெரியவில்லை.ஆனாலும் மக்கள் நீதி மையம் 3 சதவீத வாக்குகள் பெற்று இருப்பது என்பது கமலஹாசனின் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பதன் அரசியலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எவ்விதமான பிரச்சாரமும் செய்யாத மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கின்ற வாக்கு சதவீதம் கமலஹாசன் மோடி அந்த இரண்டு தனி நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

3. முற்றிலுமாக மின்னணு வாக்கு எந்திரத்தின் மீதான சந்தேகங்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தென்மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது போல ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகம் எழுகிறது. வட இந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்திற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுக் கொண்ட பாஜக தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் தன்னை வீழ்த்திக் கொண்டு தான் பெற்றிருக்கிற மாபெரும் வெற்றியின் மீதான சந்தேக நிழலை தடுக்க முயற்சித்திருக்கிறது.

4. திமுக அடைந்திருக்கின்ற வெற்றி அரசியல் ரீதியாக கொண்டாடப்பட முடியாமலும் அதிமுக அடைந்திருக்கின்ற தோல்வி கொண்டாடப்பட கூடியதுமாக இருப்பதும், நாம் தமிழர் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வளர்ச்சிக்கு இணையாக எவ்வித கட்டமைப்பும் கிளையும் இல்லாத மக்கள் நீதி மய்யம் பொருட்படுத்த வேண்டிய வாக்குகளை பெற்று இருப்பதும் திட்டமிட்டு கணக்குப் போட்ட ஒரு சாணக்கியனின் சதியாகத்தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

5. நீண்டகாலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தான சந்தேகங்களை நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. இந்தத் தேர்தலிலும் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தப்பட்டதும், பல வீடுகள் கடைகள் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் காணப்படுவதுமான வருகிற செய்திகள் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை குலைக்கின்றன.ஆரம்பத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்திய நாடுகள் கூட தற்போது அதை கைவிட்டு வாக்குச்சீட்டு முறைக்கு மாறி விட்ட பிறகு இன்னும் பிடிவாதமாக இந்த சந்தேகத்திற்கு இடமான முறையை கடைபிடித்து வருவது என்பது பெரும் முதலாளிகளுக்கு பன்னாட்டு வர்த்தகத்திற்கு ஆதரவான ஒரு ஆட்சி அமைப்பினை உருவாக்க நடத்தப்படும் பெரும் நாடகமே இந்த தேர்தல் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

6. தேர்தல் ஆணையம் என்ற ஒன்று செயல்பட்ட மாதிரியே தெரியவில்லை. வழக்கம்போல வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்கள். வாக்காளர்கள் பெற்றுக் கொண்டார்கள்.வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குகின்ற முறைதான் தேர்தல் என்றால்.. நாங்களெல்லாம் சொல்வது போல ஒரு பெரிய ஏலத்தினை ஏற்பாடு செய்து அந்த ஏலம் மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்கும் ஏதோ ஒரு பணக்கார கட்சிக்கு வெற்றியை கொடுத்து விடலாம். பணம் அளித்ததாக சொல்லி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற வேலூர் தொகுதியில் கூட பணம் அளித்ததாக ஒரு வேட்பாளர் மீது கூட வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஒரு சந்தேகம் நிரம்பிய ஒரு தேர்தல் முறையை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உலகிலேயே பெரிய ஜனநாயக நாட்டின் ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்துவதாக நாடகம் நடத்தப் படுவதும்..அதை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எதையும் கண்டுகொள்ளாமல் கடந்து போவதுமான காட்சிகள் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு பாசிஸ ஆட்சி முறையை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகளாகும்.

மணி செந்தில்.
www.manisenthil.com

துளி -26 Photograph -hindi- தயக்கங்களின் பேரழகு.

 

நீ நடக்கும் பாதையில்
எனது சொற்கள்
மஞ்சள் நிறப்
பூக்களாய் உதிர்ந்து
கிடக்கின்றன.

உன்
மௌனம் ஒரு
வண்ணத்துப்
பூச்சியாய் மாறி
என் தோளின் மீது
அமர்ந்து விட்டு
செல்கிறது.

உன்னைக் காணும்
கணப்பொழுது
என்னுடைய
நிகழ்காலத்தை
வெள்ளை
பனிக்கட்டியாய்
உறைய வைக்கிறது.

உறைந்துவிட்ட
காலத்தை
உலர வைக்க
மீண்டும்
உன்னைத்தான்
தேடி வர
வேண்டியிருக்கிறது.

ஒருமுறை பார்த்துவிட்டு போ.

சலசலத்து ஓடும் வாழ்வின் நதி எதையும் கடத்தி விட்டு போகும் கரைத்துவிட்டு போக்கும் வல்லமை கொண்டது. அதன் குரூர வேக ஓட்டத்தில் அன்பினால் பூத்த எளிய கணங்கள் கரை ஒதுங்கி.. நனைந்த செம்பருத்திப்பூ வாய் சிவந்து கிடக்கின்றன.‌

என்னுள் மலர்ந்திருக்கும் உன் மீதான நேசத்தை எப்படி சொல்வேன்.. ஒரு வயலின் கொடு. வாசித்துக் காட்டுகிறேன். ஒரு தூரிகை கொடு.
வரைந்து காட்டுகிறேன். சில சொற்களைக் கொடு. முன்னும் பின்னுமாக கோர்த்து முற்றுப்பெறாத கவிதை ஒன்றை எழுதி காட்டுகிறேன்.

இல்லையேல் தகிக்கிற உனது நிராகரிப்பினை என் மீது சில வெற்றுப் பார்வைகள் மூலம் காட்டி விட்டுப் போ.
அதே நாளின் அந்தியில் என் கண்ணீரால் ஒரு பெரும் மழை என உன் ஜன்னலுக்கு வெளியே பெய்து விட்டுப் போகிறேன்.

ஏதோ சில பொழுதுகளை மறக்க தீராத் துயரத்தோடு சகிக்க முடியாத பாவனை வாழ்வொன்றை வாழ்ந்துதான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த முகமூடி வாழ்க்கையில்.. நாம் கண்டடைகிற மகிழ்ச்சி சோகம் பசி தூக்கம் என அனைத்துமே.. இறந்து போன காலம் ஒன்றின் இறக்கமுடியா வலி ஒன்றின்
தகிப்பே.

இந்த பாவனை வாழ்வில்.. ஏதோ ஒரு நொடியின் சலனத்தில் கேட்டு விடுகிற ஒரு இசை பாடல்.. ஆழமான ஒரு நினைவை.. காய்ந்திருக்கும் பாலையில் ஒற்றை மழைத்துளியால் நிகழும் ஒரு துளிர்ப்பைப் போல .. சட்டென்று ஒரு நினைவின் துளிர்ப்பை நிகழ்த்தி விட முடிகிறது.

இந்தப் பெரும் அபாயத்திற்கு மத்தியில் தான் நிகழ்தகவாய் இந்த அபத்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உதிர்ந்து திரியும் சொற்களை விட.. உதிராமல் உயிர் ஆழத்தில் சேகரித்து வைத்திருக்கும் நேச மௌனத்தை சுமந்து திரியும் இருவரைப் பற்றிதான் இத்திரைப்படம் பேசுகிறது.

அவர்களை நீங்கள் எங்கும் பார்க்கலாம் என்பதுதான் இந்த திரைப்படத்தின் பலம். சொல்லப்போனால் அவர்களை உங்களுக்குள்ளேயே பார்க்கலாம். சிறு சிறு தயக்கங்களால் தங்கள் இதயங்களை கீறிக் கொள்ளும் அவர்கள் நமக்குள்ளும் ஒளிந்திருக்கிறார்கள்.

ஒரு பறவையின் சிறகடிப்பு போல..பெரு வலையில் சிக்கிக் கொண்ட ஒற்றை மீனைப் போல ‌… பார்த்துவிட்டு பின்பு நெடுநேரம் உறுத்திக்கொண்டே இருக்கிறது இத்திரைப்படம்.இத்திரைப்படம் கண்ட பிறகு காணும் யாவரும் மௌனித்து எதையோ சிந்தித்தவாறே அமைதியாக அமர வைப்பதுதான் இந்தத் திரைக்கதையின் வலிமை.

முற்றுப்பெறாத கவிதை போல.. சின்ன அதிர்வினை மனதிற்குள் சுமத்தி விட்டு போகும் அந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி.. எதனாலும் விவரிக்க முடியா மௌனத்தின் பேரழகு.

இயல்பை மீறியதொரு அழகு எங்கும் இல்லை. செயற்கையான எந்த பூச்சுகளும் இல்லாத இயல்பின் மொழியில்.. பார்க்கப் பார்க்க .. ஆச்சரியப்பட வைக்கின்ற இத்திரைப்படத்தின் பெயர்.

போட்டோகிராப். (Photograph)

அமேசான் பிரைம் வீடியோ வில் காணக் கிடைக்கிறது. நவாசுதீன் சித்திக் என்கின்ற மாபெரும் கலைஞனின் அசலான நடிப்பில் உறைந்திருக்கும் மௌனங்களின் வலி மொழியை பேசுகிற இத்திரைப்படம்.. நுட்பமான உணர்வுகளை உணரும் பேறுபெற்றோர் காணவேண்டிய அற்புத அனுபவம்.

மற்றதை திரையில் காணுங்கள். அதுவே அந்த அற்புதத் திரைமொழிக்கு செய்யும் மரியாதை.

பரவசத்துடன் பரிந்துரைத்து சிலிர்க்க வைத்த என் சீடன் Dhuruvan Selvamani Somu க்கு நன்றி.

திமுக Vs நாம் தமிழர்.

 

கடந்த சில நாட்களாக திமுகவினர் நம்மை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் பதிவுகளில் குறிப்பிட்ட சில அம்சங்கள் காணப்படுகின்றன.

இது வரை இல்லாத மூர்க்க எதிர்ப்பினை பதிவு செய்து வரும் அவர்களது பதிவுகள் நாம் தமிழர் கட்சி கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியலில் பெற்றிருக்கின்ற மறுக்க முடியாத வளர்ச்சியை ஒரு குறியீடாக குறியிட்டு காட்டுகின்றன.

இப்படி விமர்சிக்கும் எந்த திமுகவினரும் நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற சுற்றுப்புற சூழல் சார்ந்த பசுமைப் பொருளாதாரத்தை பற்றியோ, தற்சார்பு பொருளாதாரம் குறித்தோ, பல்லுயிர் பெருக்கம் குறித்தோ பேச மாட்டார்கள். பல்வேறு தேசிய இனங்கள் உள்ளடக்கிய ஒரு நாட்டில் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஏதுவாக சுழற்சி முறை பிரதமர், மக்களை சந்திக்காது தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கு மக்களை நிர்வகிக்க பதவிகள் மறுக்கப்படும் சூழல் உள்ளிட்ட மாற்று அரசியல் சிந்தனைகளை பற்றியோ அவர்கள் பேசுவதில்லை. நாம் தமிழர் சாதித்திருக்கிற பெண்களுக்கு சரி சமமான 50 சதவீத இட ஒதுக்கீடு, தமிழகத்தில் நிலவி வந்த ஈழ விடுதலைக்கான ஆதரவு மீதான அரசு அதிகாரம் சார்ந்த அச்சத்தை அகற்றல், ஈழவிடுதலையை தாயக தமிழக இளைஞர்களின் பொதுவான லட்சியமாக மாற்றல், தேசிய இனங்களுக்கான அதிகாரங்களை கோரும் வண்ணம் மாநில தன்னாட்சி போன்ற எது குறித்தும் இவர்கள் பேச மாட்டார்கள்.பணம் வாங்கிக்கொண்டு பதிவுகள் எழுதும் இவர்களுக்கு இது குறித்த எந்த சிந்தனையும் கிடையாது.

நாம் தமிழரைப் பற்றி இழிவான வார்த்தைகள் மூலம் திமுக ஆதரவு பதிவுகள் எழுதும் பெரும்பாலானவர்கள் பதிவு எழுதுவதையே முழு நேர வேலையாக கொண்டிருப்பவர்கள். அதன் மூலமாக ஊதியம் பெற்று சம்பாதிப்பவர்கள். ஒரு கேவலமான பதிவு எழுதி அதன் மூலமாக இன்சென்டிவ் உள்ளிட்ட ஊதிய உயர்வு பெறுகிறவர்கள். அவர்களுக்கு வாசிப்பு அறிவோ, குறிப்பிட்டவை குறித்தான ஆய்வு அறிவோ எதுவும் கிடையாது.

பிழைப்பின் காரணமாக பதிவுகள் எழுதி ஏசி கொண்டிருப்பவர்களை நம்மைப் போன்ற இலட்சியத்தால், இன அழிவின் உறுதியால் அரசியலுக்கு வந்தவர்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுபவீ போன்றவர்களுக்கு நம்மை எதிர்த்தால் தான் பிழைப்பு. திமுகவில் அவருக்கு என எந்தப் பணியும் கிடையாது. திமுக சார்ந்த ஒரு கிளை அமைப்பினை உறுப்பினர்கள் இல்லாத ஒரு சிறு அமைப்பினை கொண்டு இருக்கிற அவருக்கு சீமான் போன்ற திமுகவின் பிரதான எதிரியை எதிர்த்து பேசுவதன் மூலமாக திமுகவில் தனக்கான இடம் இருக்கிறது என்கின்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம். எனவே நம்மை அழிப்பதாக சவால் விட்டுக் கொண்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

சுபவீ யோடு மிக நெருங்கி பழகி அவரது இனத்துரோக செயல்களால் விலகி வந்து நாம் தமிழரில் பயணித்துக் கொண்டிருக்கிற அண்ணன் அன்பு தென்னரசன், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் சுபவீ பற்றி அனைத்து உண்மைகளையும் அறிந்தவர்கள் இருக்கிறார்கள். இது சுப வீக்கும் தெரியும். நாம் பேசினால் எதிர்விளைவு மிகக் கடுமையாக பாயும் என்பது சுபவீக்கு தெரியாததல்ல. ஆனாலும் அவர் பேசியாகவேண்டும். அவருடைய இருப்பு, பிழைப்பு ஆகியவை அவருக்கு முக்கியமானவை. எனவே பேசிக் கொண்டு திரிகிறார்.

ஆனால் நாம் அவ்வாறல்ல. அரசியல் என்பது நமக்குத் தொழில் அல்ல. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அனைவருக்கும் ஒவ்வொரு தொழில் இருக்கிறது. நமது வயிற்றுப் பிழைப்பிற்கான வேலையை செய்து விட்டு அதில் நேரம் ஒதுக்கிக் கொண்டு மக்கள் பணி செய்ய நாம் வருகிறோம். நமது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் கூட இதுவரை அவருடைய வாழ்க்கைப் பாடுகளுக்காக திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் திரைத்துறை சார்ந்த பணிகளில் இயங்கிக் கொண்டு அவரது சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டும் தான் இருக்கிறார்.

திமுகவில் இயங்குகிற 80 சதவீதம் பேர் அரசியலை முழு நேர தொழிலாக கொண்டவர்கள்.அதன் தலைவர்கள் ஏற்கனவே பலமுறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள் தொழில் நிறுவனங்கள் அசையும் அசையா சொத்துக்கள் என இன்னும் பல தலைமுறைகளுக்கு வசதியாக வாழுகின்ற பொருளாதார பலத்தை கொண்டவர்கள்.

எனவேதான் முழு நேரமாக ஊதியத்திற்காக பதிவு எழுதும் ஆட்களை நியமித்துக் கொண்டு அவர்கள் சார்பாக இவர்கள் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.

திமுக இன்று தத்துவ பின்புலமற்ற பிழைப்புவாத அரசியல் கட்சியாக மாறிவிட்டது. அவர்களது தலைவர் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரை எவ்விதமான தத்துவ புரிதலும் மற்றவர்கள். திராவிட கட்சி என்று சொல்லிக்கொண்டு கோவில் கோவிலாக அலைந்து யாகம் வளர்ப்பவர்கள். திமுக தலைவரே என் கட்சியில் இருக்கிற பெரும்பாலானோர் இந்துக்கள் என்று பேசுபவர். இதுதான் இவர்களது தத்துவ புரிதல் மட்டம்.

கருணாநிதி என்கின்ற தனிமனிதனுக்கு பிறகு திமுகவில் இருக்கிற பெரும்பாலான தலைவர்கள் வாசிப்பு அறிவு இல்லாதவர்கள். திராவிடம் பெரியார் என்றெல்லாம் பேசுவதில் அதிகம் விருப்பம் இல்லாதவர்கள். அது மக்களின் ஆதரவைப் பெறாத தத்துவம் என்று புரிந்தவர்கள்.

திமுகவில் இருவகையான தலைவர்கள் இருக்கிறார்கள் ‌. ஒன்று ஏற்கனவே திமுகவின் தலைவர்களாக இருந்தவர்களின் வாரிசுகள். மற்றொன்று பிழைப்பதற்காக வயிறு வளர்ப்பதற்காக உள்ளூரில் ரவுடித்தனம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை செய்து பெரிய ஆளாக காட்டிக் கொண்டவர்கள்.

இவர்களுக்கு ஈழ விடுதலை குறித்தோ, மாநில உரிமைகள் குறித்தோ சுற்றுப்புறச் சூழல் குறித்தோ , உலக அரசியல் நிலைகள் குறித்தோ, எதுவும் தெரியாது. திமுகவில் இருக்கின்ற வாசிப்பறிவு உள்ள மிகச்சிலரான திருச்சி சிவா, ஆ ராசா போன்றவர்களுக்கும் இந்தக் கொடும் நிலை நன்கு தெரியும்.வேறு வழியில்லாமல் பிழைப்பிற்காக அவர்களும் பாராட்டிக் கொண்டு இந்த கொடும் நிலையை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே நாம் இப்படிப்பட்டவர்களை எதிர்த்துதான் இந்த களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

ஒரு எளிய நாம் தமிழரின் இளைஞன் தன்னை வாசிப்பு அறிவு மூலம் மெருகேற்றிக்கொண்டு தனக்கும் சமூகத்திற்கும் பயன்படுபவராக மாறி கொள்வதையே தனது முக்கியமான செயல்பாடு என கருதுவதுதான் நாம் தமிழர் கட்சியின் முக்கியமான வெற்றி.

தொடர்ந்து நாம் முன்னேறுவோம்.

ஆயிரம் தடைகள், ஆயிரம் விமர்சனங்கள் சுற்றி சூழ நாம்தமிழர் தனது இலக்கை வென்றே தீரும்.

அதன் லட்சிய பயணத்தில் சுபவீ கரு பழனியப்பன் திண்டுக்கல் லியோனி பிரசன்னா போன்ற ஈசல்கள் ஒரு போதும் தடையாக இருக்கப்போவதில்லை.

ஜஸ்ட் லைக் தட் ..

காறித்துப்பிவிட்டு போய்க்கொண்டே இருப்போம் ‌.

கடவுள் மரித்த நிலம்..


—-+-+-+++++++++

கரை ஒதுங்கிய
மீனின் வயிற்றில்
குழந்தையின்
கண் ஒன்று
இமைக்காமல்..

கண்ணை
உற்றுப்பார்த்தோர்
கலங்கித்தான்
போனார்கள்.

அசையாத
விழியில் உறைந்த
காட்சிகள் அசைந்துக்
கொண்டிருந்தன..

பிஸ்கட் தின்றவாறே
எங்கோ வெறித்திருந்த
சிறுவனின் பார்வை.

இடுப்பிற்கு கீழே
வெடிக்குண்டால்
சிதைக்கப்பட்ட
பெண்ணொருத்தியின்
நிர்வாண உடல்

நெஞ்சோடு தாய் மண்ணை
இறுக்கிப் பிடித்த வாறே
இறந்திருந்த போராளியின்
இறுக மூடிய விரல்கள்..

பின்னந்தலையில்
சுடப்பட்ட தோட்டாவால்
முன்னால் சிந்திய
உதிரத்தை பார்த்த
விழிகள்..

கைவிலங்கிடப்பட்ட
சீருடைப் பெண்ணின்
குனிந்த தலை..

நிராதரவாய்
காற்றில்
அலையும்
சரணடைய
உயர்ந்த கரங்கள்.

கந்தக
மேனியோடு
கருகிய
ஒற்றை பனை.

போதும்..போதும்.

காண சகிக்காது
பார்வையை
விலக்கிய போது..

தூரத்தில்
காயங்களோடு
கரை ஒதுங்கி
பிணமாகக்
கிடந்தார்
கடவுள்.

Page 18 of 53

Powered by WordPress & Theme by Anders Norén