—-+-+-+++++++++

கரை ஒதுங்கிய
மீனின் வயிற்றில்
குழந்தையின்
கண் ஒன்று
இமைக்காமல்..

கண்ணை
உற்றுப்பார்த்தோர்
கலங்கித்தான்
போனார்கள்.

அசையாத
விழியில் உறைந்த
காட்சிகள் அசைந்துக்
கொண்டிருந்தன..

பிஸ்கட் தின்றவாறே
எங்கோ வெறித்திருந்த
சிறுவனின் பார்வை.

இடுப்பிற்கு கீழே
வெடிக்குண்டால்
சிதைக்கப்பட்ட
பெண்ணொருத்தியின்
நிர்வாண உடல்

நெஞ்சோடு தாய் மண்ணை
இறுக்கிப் பிடித்த வாறே
இறந்திருந்த போராளியின்
இறுக மூடிய விரல்கள்..

பின்னந்தலையில்
சுடப்பட்ட தோட்டாவால்
முன்னால் சிந்திய
உதிரத்தை பார்த்த
விழிகள்..

கைவிலங்கிடப்பட்ட
சீருடைப் பெண்ணின்
குனிந்த தலை..

நிராதரவாய்
காற்றில்
அலையும்
சரணடைய
உயர்ந்த கரங்கள்.

கந்தக
மேனியோடு
கருகிய
ஒற்றை பனை.

போதும்..போதும்.

காண சகிக்காது
பார்வையை
விலக்கிய போது..

தூரத்தில்
காயங்களோடு
கரை ஒதுங்கி
பிணமாகக்
கிடந்தார்
கடவுள்.