26733705_386350815123126_611877709230030666_n (1)

 
அந்த அழகான
பலிபீடம்
அந்த ஒற்றை
வெள்ளாட்டின்
முன் கருணை
விழிகளோடு
வீற்றிருந்தது..

குளிர்மையும்
வழுவழுப்பும்
நிரம்பிய
அதன் வளைவுகளில்
வெள்ளாடு லயித்திருந்தது..

அழகானது இது..

தலை பொருந்துவது
போன்ற வளைவு..

சற்றே சாயலாம்.
கொஞ்சம் உறங்கலாம்..

வெள்ளாட்டின் விழிகளில்
வண்ணக்கனவுகள்
மிளிர்ந்தன..

கத்தியின் கனம்
தெரிவு செய்ய
வெள்ளாட்டின் கழுத்து
மிருதுவான வருடல்களால்
ஆராயப்பட்டது..

தனித்தே பிறந்த,திரிந்த
வெள்ளாடு தன் மீது
சொரியும் வருடல்களால்
கசிந்தது..

எவ்வளவு கதகதப்பான
கரங்கள்..
ஆதரவாய்..ஆதுரமாய்..

நீ தனியன் இல்லை
என்பதை உணர்த்துவது
போல..

கலங்கி அழத் தொடங்கியது..
வெள்ளாடு.

அனலேறிய அப்பகற்
பொழுதில் தன் மீது
தெளிக்கப்பட்ட
குளிர் நீரை அருவியென
கருதி சிலிர்த்த வெள்ளாட்டின்
கழுத்தில் மாலையும்
இடப்பட்டது…

எவ்வளவு மரியாதை..
வெறும் ஆடு என
கருதாமல்..
செய்யப்பட்ட
பெருமை அருமை.

ஆகா.. இவ்வுலகம்
அன்பின் மடியாய்..
கருணையின்
கருவறையாய்..

சே..இந்த அன்பிற்காக
சாகவும் செய்யலாம்..

என வெள்ளாடு
கண்கலங்கி
உருகிய அந்நொடியில்..தான்

தலை தனித்து விழுந்தது.