20953734_335863913505150_1919002977959472517_n (1)

இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களோடு சிலப்பதிகாரம் விவரித்துள்ள நிலவியல் குறிப்புகளின் படி கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரை வரை நடந்துச் சென்ற பாதையை தேடி அப்பாதையை கண்டறிந்து பயணப்பட்டு கொண்டிருந்தோம் .எங்களோடு ஆனந்த விகடன் புகைப்படக்காரர், அன்பு நண்பர் திரு.பொன் காசிராஜனும் ஒளி ஓவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.

பெரும் பயணம் அது. குறிப்பாக எஸ்.ரா என்ற கதை சொல்லியோடு பெரும் பயணம் மேற்கொள்வது என்பது முழு நிலா நாளில் அடர் வனத்தில் திரிவது போல..

இந்த பயண நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் எப்போது இந்த நாவலை எழுதினார் என்று எனக்கு இப்போதும் நினைவில்லை.

இந் நாவல் தமிழ் பயின்ற சம்பத் என்ற மனிதனின் வாழ்வையும், சரிவையும் பேசுகிறது. மனித உளவியல் சந்திக்கும் அறம் என்ற உணர்ச்சி தரும் சிக்கல்களை நுட்பமாக ஆராய்கிறது.

ஏன் சம்பத் அப்படி ஆனான்…என்ற கேள்விக்கு பின்னால் இருக்கும் பதில்கள் மொழியற்றவை. இருட்டு மூலையில் மறைந்திருக்கும் வெளவால்கள் போன்றவை. எப்போதும் மெளனம் என்பது இயலாமையால் விளைவது அல்ல. பேரன்பின் பாற் தனக்கு தானே தூக்கி கொண்டு சுமந்து திரிகிற சிலுவையாய் உண்மைகளை மறைத்து திரிகிற மெளனம் திகழ்கிறது.

என் தம்பி இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் வருங்கால திரை நம்பிக்கை Murali Manohar உறுபசி நாவலை எனக்கு எஸ்.ரா அர்ப்பணிப்பு செய்திருப்பதாக சொன்னார்.

ஒரு எளிய வாசகன் மேல் ஒரு மாபெரும் படைப்பாளன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பின் சாட்சி யாக உறுபசி விளங்குகிறது..

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றளவும் என்னை உறுத்துகிற, எஸ்.ராவிற்கு மட்டும் பதில் தெரிந்த,இது வரை பதில் சொல்லாத,இனியும் பதில் சொல்ல மறுக்கிற கேள்வி..

என்னில் எது உறுபசி..?? உறுபசியில் நான் யார்..?!!