பொய்கள்
பாசியென
படர்ந்திருந்த
குளமொன்றில்
அரூவ மீனாய்
நீந்திக்கொண்டிருந்த
உன்னை நோக்கி
எறியப்பட்ட தூண்டில்
வாயில்தான்
என் கனவொன்று
இரையாய் சிக்கித்
தவித்துக்
கொண்டு இருந்தது.

எதிர்பாராமின்மையை
சூட்சம விதிகளாய்
கொண்டிருக்கும் அந்த
மாய விளையாட்டில்
அவரவர் பசிகளுக்கேற்ப
சொற்களின் பகடையாட்டம்
நடந்தன….

உக்கிரப் பொழுதில்
தாங்காமல் நிகழ்ந்த
பெரு வெடிப்பு .
கணத்தில் சிதறிய
என் சிலுவைப் பாடுகளின்
கதறல் ஒலிகள்
உன்னால் சில்லறைகளின்
சிந்திய ஓசை என
அலட்சியப் படுத்தப்பட்ட
நொடியில்..

திரும்பவே இயலா
திசையில்..
நான் வெகுதூரம்
போய் இருந்தேன்..

எப்போதாவது
உன் நம்பிக்கைகளும்..
கணக்குகளும் பொய்த்துப்
போன இருட் பாதையில்
தேடிப்பார்.

நான் ஏற்கனவே
தவற விட்டிருந்த..
எனது சில
விழிநீர்த்
துளிகளும்..
இந்த கவிதை
வரிகளும்..

உனக்கு விளக்காகலாம்..