இறுதியாக
பிரிதலுக்காக
நீயே மழை ஒன்றை
தயாரிக்கிறாய்‌.‌.

வெறுமைக்
காரணங்களையும்..
வலிந்து
திணித்த
போலி
நியாயங்களையும்
கொண்டு தயாராகிறது
மழை..

நேசிப்பின்
மேகங்களை
வெறுப்பின்
கருமைக் கொண்டு
இருளாக்க மறதிக்
காலம் ஒன்று
அவசரத் தேவையாக
ஆம்புலன்சில் வருகிறது.

விழியோரம்
கனவொன்று சட்டென்று
கசிந்து விடக்கூடாது
என்கிற கவனம்
விரிய காத்திருக்கும்
பிரிய குடை ஒன்றை
மடித்து வைக்கிறது..

நிலாக்கால
நினைவுகளின்
ஏக்கப்பெருமூச்சுகள்
பெருங்காற்றாய்
வீச..
பிரிவின் மழை
மேகம் கலையுமோ
என அஞ்சுகிறாய்.

பிறகு நீயே
அலட்சிய புன்னகை
ஒன்றினால்
நிராசைத் தூறல்களை
தூவ வைக்கிறாய்‌.

உதிரம் கசியும்
ஒரு வயலினையும்

இருளடர்ந்த
ஒரு வனத்தையும்

சில கண்ணீர்த்
துளிகளால்

நீயே உருவாக்கிறாய்.

பொழியத் தொடங்குகிறது
மழை.

நான் நனையத்
தொடங்குகிறேன்.