பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: செப்டம்பர் 2018

பெருந்தலைவருக்கு எதிரான பிழைப்புத்தனங்கள்

 

 

 

எப்போதும் தவறான,விஷமத்தனமான உரையாடல்களை உருவாக்குவது திராவிட பற்றாளர்களுக்கு கைவந்த கலை. கடந்த 2008-09 காலத்தில் கூட ஈழம் அழிவின் விளிம்பில் நின்ற பொழுதுகளில் கூட விடுதலைப்புலிகள் சகோதர யுத்தம் நடத்தியவர்கள் என்றெல்லாம் ஒரு விவாதத்தை திட்டமிட்டு உருவாக்கியது திமுக.எப்போதும் கருணாநிதியின் அறிக்கைகளில் இந்த சகோதர யுத்த புராணம் சற்று தூக்கலாகவே இருக்கும். இப்போதும் கூட தலைவர் பிரபாகரனைப் பற்றி அவ்வப்போது திமுக இணையத்தள அணியினர் விஷமத்தனமாக விமர்சனங்கள் வைப்பதும், அதை திமுக தலைமை ரசிப்பதும் அனைவரும் அறிந்ததே.

அதே போல இப்போதும் காமராசர் எதிர் பெரியார் என்கிற அபாயகரமான விவாதத்தினை பெரியார் திடல் தொடங்கியுள்ளது. காமராசரை ஒட்டுமொத்த தமிழினமும் தனது பெருமைக்குரிய சின்னமாக, நேர்மையான ஆட்சிமுறை/ மக்கள் நலன் சார்ந்த அரசியல் இவைகளின் அடையாளமாக காண்கின்ற இவ்வேளையில் அவருக்கு எதிராக பெரியாரை முன் நிறுத்துவது காமராசரின் புகழுக்கு எவ்வித களங்கமுமில்லை. இந்த விவாதம் பெரியாருக்குதான் இழுக்கினை ஏற்படுத்தும்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழர் அரசியல் வேறு வடிவங்களில் மாறி இருக்கிறது. தமிழ்/தமிழர் என்கிற அடையாளங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. திராவிட இயக்கங்கள் ஒரு காலத்தில் எள்ளி நகையாடிய தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் தங்களது பெருமித நிலையை மறுபடியும் அடைந்திருக்கின்றன. சாட்சி : ஜல்லிக்கட்டு போராட்டம்.

மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே என பேசிய பெரியார் இன்று தமிழின இளையோர்களால் மறுவாசிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். இந்த போக்கு பெரியாரை கடவுளாக்கி, திராவிடத்தலைவர்களை ஆதீனமாக்கி, அவர்களது மகன்களை இளைய ஆதீனமாக்கி திராவிடக்கட்சிகளை மடமாக்கி வழிபடும் திராவிடப்பற்றாளர்களுக்கு மிகுந்த பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது. அந்த பதட்டமே ஐயா திருச்சி வேலுச்சாமி சொல்வது போல ஆட்டைக் கடித்து ,மாட்டைக் கடித்து, இன்றும் மனிதனையும் கடிக்கத் தொடங்கி இருக்கிறது.

பெருந்தலைவர் காமராசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. காமராசரின் இந்திய தேசிய உணர்வு கடந்த பல காலங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் காமராசர் மறு வாசிப்பிற்கு உள்ளாகிற, விமர்சனங்களுக்கு நேருகிற ஒரு ஆளுமையாக என்றுமே இருந்திருக்கிறார். ஆனால் பெரியாரை புனித முக்காடு அணிவித்து பெரியாரைப் பற்றி எவ்விதமான விவாதங்களும் எழாமல் கவனம் காப்பதும், மீறி எழுப்புபவர்கள் மீது அவதூற்று பிரச்சாரங்களால் எகிறி தாக்குவதும் திராவிட ஆதரவாளர்களின் இயல்பாக உள்ளது. தன் வாழ்நாளில் எத்தனையோ எதிர் பிரச்சாரங்களை நேரிடையாக எதிர் கொண்டு நின்றவர் பெரியார். ஆனால் அவரது வாரிசுகளாக அறிவித்து கொள்கிறவர்கள் சகிப்பற்றத் தன்மையின் சின்னங்களாக மாறி இருக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராசர் போன்ற தமிழின அடையாளங்கள் மீது தகுதியற்ற விமர்சனங்களை வைத்தால் அது பெரியாருக்கு எதிராக திரும்பும் என்பது பெரியார் திடலுக்கு தெரியாதது அல்ல. அதையும் மீறி வைக்கிறார்கள் என்றால்.. பெரியாரைத் தாண்டியும் அவர்களுக்கு ஒரு அரசியல் உள் நோக்கம் இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

என்றுமே பெருந்தலைவர் காமராசர் பெரியாரின் புகழ் வெளிச்சத்தில் வெற்றிப் பெற்ற ஆளுமை அல்ல. சமகாலத்தில் இருவருமே புகழ்ப் பெற்ற தலைவர்கள். பெரியாரின் ஆலோசனைகளை காமராசர் கேட்டிருக்கக் கூடும். ஆனால் முடிவுகளை காமராசர் தன்னியல்பில் தான் எடுத்தார். ராஜாஜி போன்ற எதிர்முரணை தன் வரலாற்றில் மிக நெருக்கமாக வைத்துக் கொண்ட பெரியாரால் ராஜாஜியின் எதிரியான காமராசரை ஆதரிக்க மட்டுமே முடிந்தது. இந்த வித்தியாசமான முரண்புள்ளிகளை காமராசர் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தார். அதனால் தான் காமராசரது இறுதிக்காலத்தில் திமுகவோடும், இராஜாஜியோடும் மீண்டும் இணக்கமாகி இருந்த பெரியாரை காமராசர் வெகுவாக விமர்சிக்கவில்லை. எனவே காமராசர் மீது பெரியார் மிகுந்த ஆதிக்கத்தினை செலுத்தினார் என்பதும், பெரியாரின் ஆலோசனைகளை வைத்தே காமராசர் ஆட்சி நடத்தினார் என்பதும் வெகுவான மிகைப்புள்ளிகள்.

பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நிறைய தகவல்கள் நூல்கள் வாயிலாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் நமக்கு கிடைக்கின்றன. அவரது ஆட்சிக்காலமே தமிழகத்தின் மாபெரும் பொற்காலமாக திகழ்ந்திருக்கிறது. தன் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு தங்கத்தலைவனுக்கு பாராட்டு விழா என்பதான அபத்த விளம்பரங்களை காமராசர் என்றுமே செய்துக் காட்டியதில்லை. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?” என்று பெரியாரே வியந்துப் பாராட்டிய பெருமகனாக காமராசர் திகழ்ந்துள்ளார். பெரியார் தன் இயக்கத்திற்காக பெருச்சொத்தினை சேர்த்தவர். ஆனால் காமராசர் தன் கட்சியின் பெருஞ்சொத்தாக விளங்கியவர். திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் செய்த நலன்களை விட கேடுகளே அதிகம். அதில் மிக முக்கியமானது அரசியலில் இருந்த எளிமையை துடைத்து எறிந்தது. மக்களுக்காக உழைக்கிற அரசியலை ஒரு தொழிலாக மாற்றி, நிறுவனமாக மாற்றி கோடானுகோடி கொள்ளையடிக்கிற வணிகமாக மாற்றி ஆசியாவின் பெரும் பணக்காரர்களாக திராவிடத் தலைமைகள் மாறியது தமிழக அரசியலின் நேர்மை உணர்வை இல்லாதாக்கியது.

இவர்கள் விமர்சிக்கும் காமராசர் தான் இறக்கும் போது தன் தலையணைக்கு கீழே வைத்திருந்த சொற்ப பணத்தை (ரூ.160/-) தவிர வேறு எந்த சொத்தினையும் பொதுவாழ்க்கை மூலம் அடையாதவர். அவரின் குடும்பத்தினர்களோ, உறவினர்களோ அரசியலில் ஆதாயம் அடையாத அளவிற்கு சுய வாழ்க்கை சுத்தம் கொண்டவர். ஆனால் திராவிட அரசியல் வாதிகள்…????

பெரியாருக்கு எதிராக காமராசரை நிறுத்துவது அல்ல நமது நோக்கம். காமராசரை பெரியாருக்கு கீழே நிறுத்துவதை தடுப்பதே நமது நோக்கம். வரலாற்றினை தன் கொல்லைப்புற வாய்க்காலாக கருதி, அண்ணா அறிவாலயம் திசையில் மடைமாற்ற பிராயத்தனம் செய்யும் மதிமாறன் போன்றோரே பெரியாரின் கருத்தியலுக்கும், அவரது வாழ்க்கைக்கும் துரோகம் செய்கிறவர்களாக, பெரியாரை பலர் புறக்கணிக்கும் போக்கிற்கு காரணிகளாக திகழ்கிறார்கள்.

காமராசர் தான் கொண்ட இந்திய தேசிய உணர்வால் ஏமாற்றப்பட்டார். . ஆனால் அவரின் தியாகமும், சேவையும் ,இம்மண்ணுக்கேரிய ஒரு தூயத் தமிழனின் அப்பழுக்கற்ற சமூகப் பணி. அக்குணம் பாழ்படுத்தப்படாத ஒரு பச்சைத் தமிழனின் மரபியல் சார்ந்த பரம்பரைக்குணம். அதை குறை சொல்ல இம்மண்ணை கொள்ளையடித்தவர்களுக்கு, அடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, அடிக்கத் துடிப்பவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னதுதான் . காமராசரை ஆதரிக்கவே பெரியாருக்கு உரிமை உண்டு. அதை புரிந்துக் கொண்டு அவர் ஆதரித்தார். எதிர்க்க இவர்களில் யாருக்கும் தகுதி இல்லை.

பெரியார் தன்னை கன்னடன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். இந்த மண்ணை ஆளும் உரிமை தனக்கில்லை என வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர். அது பச்சைத்தமிழன் காமராசருக்கே இருக்கிறது என அறிவித்தவர். பெரியாரின் வாரிசுகள் என அறிவித்துக் கொள்ளும் இவர்கள் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கிற பெரியார் ஆதரித்த ஒரு முழக்கத்தை எதிர்ப்பதுதான் திராவிட அரசியல்வாதிகளின் பிழைப்புத்தனமாக இருக்கிறது.

பிழைத்து விட்டு போங்கள்.

ஆனால் எங்களுக்காக உழைத்த காமராசர் மீது பெரியாரை காட்டி கறைப்படுத்தாதீர்கள்.

அது உங்களையே வீழ்த்தும். ஏற்கனவே தடுமாறிக்கொண்டு இருக்கிற உங்களது கட்டுமரங்களும், கப்பல்களும், காமராசரை தமிழின அடையாளமாக உணர்ந்து எழுந்து வருகிற தமிழ்த்தேசிய உணர்வு என்கிற பேரலையால் முழ்கடிக்கப்படும்.

காமராசரைப் பற்றி அறிய:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D

காமராசரைப் பற்றியும்,
இச்சர்ச்சைப்பற்றியும்
திருச்சி வேலுச்சாமி அவர்களின்
எதிர்வினை

https://www.youtube.com/watch?v=_olmNq7mcm4

பிரிவொன்றின் மழை..

இறுதியாக
பிரிதலுக்காக
நீயே மழை ஒன்றை
தயாரிக்கிறாய்‌.‌.

வெறுமைக்
காரணங்களையும்..
வலிந்து
திணித்த
போலி
நியாயங்களையும்
கொண்டு தயாராகிறது
மழை..

நேசிப்பின்
மேகங்களை
வெறுப்பின்
கருமைக் கொண்டு
இருளாக்க மறதிக்
காலம் ஒன்று
அவசரத் தேவையாக
ஆம்புலன்சில் வருகிறது.

விழியோரம்
கனவொன்று சட்டென்று
கசிந்து விடக்கூடாது
என்கிற கவனம்
விரிய காத்திருக்கும்
பிரிய குடை ஒன்றை
மடித்து வைக்கிறது..

நிலாக்கால
நினைவுகளின்
ஏக்கப்பெருமூச்சுகள்
பெருங்காற்றாய்
வீச..
பிரிவின் மழை
மேகம் கலையுமோ
என அஞ்சுகிறாய்.

பிறகு நீயே
அலட்சிய புன்னகை
ஒன்றினால்
நிராசைத் தூறல்களை
தூவ வைக்கிறாய்‌.

உதிரம் கசியும்
ஒரு வயலினையும்

இருளடர்ந்த
ஒரு வனத்தையும்

சில கண்ணீர்த்
துளிகளால்

நீயே உருவாக்கிறாய்.

பொழியத் தொடங்குகிறது
மழை.

நான் நனையத்
தொடங்குகிறேன்.

நதியற்ற பாவம்.

 

 

 

நதிகளில்
தொலைக்க
பாவங்கள்
இருக்கின்றன..

பாவம்.
நதிகள் தான்
தொலைந்திருக்கின்றன.

மிகைற்ற சினமும்..நேசிப்பின் ரணமும்

திராவிடத் தத்துவம் தனக்குத்தானே மதிப்பிழந்து,அம்பலப்பட்டு நிற்கிறது. நிகழ்கால அரசியலில் தத்துவ தலைமையில்லாமல் காவி அரசியலோடு கலந்து விட துடிக்கிறது. பெரியாரை கேடயமாகக் கொண்டு தனக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கொள்ள எத்தனிக்கிறது. இம்முயற்சி கேடயத்தையும் சேர்த்தே வீழ்த்தும் என்பது தெரிந்தும் பிரபாகரன் என்ன கடவுளா என கேள்வி கேட்டு திசை திருப்புகிறது. இதற்கு எதிர்வினையாக அப்படி என்றால் தெருவிற்கு தெரு சிலைகள் கொண்ட பெரியார் என்ன கடவுளா என்ற கேள்வி எழும்பும் என்பது தெரிந்தும்..பிரபாகரன் vs பெரியார் என்கிற விளையாட்டில் திராவிடத் தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

பாவம் அவர்கள். தர்க்க ரீதியான எந்த கேள்விக்கும் அவர்களது நடைமுறை முரண்களே பதிலாகிப் போனதால் சீமானை சீண்டிப்பார்க்கிறார்கள்.

அண்ணன் சீமான் ஈழம் சென்று விட்டு திரும்பி அடுத்த நான்கு வருடம் இதே பெ.தி.க மேடைகளில் தன் ஈழப் பயணம் குறித்து நிறைய செய்திகளை பகிர்ந்து இருக்கிறார். அப்போதெல்லாம் பக்கத்தில் இருந்து பல்லிளித்த இதே தலைவர்கள் இன்று பாய்ச்சலாய் பாய்வதன் காரணம் அணையப் போகிற திராவிடத் தீபத்தை எதை கொண்டாவது சுடர் விட வைக்கும் தந்திரமே.

திராவிடபிழைப்புவாதங்களை,
பித்தலாட்டங்களை,தமிழின துரோகங்களை இன்றைய இளைஞர்கள் இணையம் வழி கேள்வி எழுப்புகிறார்கள் ‌. எள்ளி நகையாடுகிறார்கள். இந்த எழுதலுக்கு காரணம் சீமான் என திராவிடத் தலைமைகள் நம்புகிறார்கள்.
அதனால் ஏற்பட்ட சினம் தான்
சீமான் மீது வன்மமாய் கவிழ்ந்துக் கிடக்கிறது.

ஈழத்திற்கு சென்று வந்து கொளத்தூர் மணி அவர்களிடம் சீமான் மூலமாக என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன என அருகிலிருந்து கவனித்தோர் எல்லாம் இன்னும்,இன்றும் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு, அக்காலக்கட்டத்தில் பல செய்திகள் பெரியார் தி.க மேடைகளில் கொளத்தூர் மணி அவர்கள் முன்னிலையில் சீமான் அண்ணனால் பகிரப்பட்டன என்பதையும் மறைத்து இன்று கொளத்தூர் மணி திடீரென தோன்றி காந்தியை சுட்டுட்டாங்களா என்கிற ரீதியில் பேசுவதுதான் மிகையாக தோன்றுகிறது. சீமான் சொல்வதெல்லாம் மிகை என்றால்..அன்றே கொளத்தூர் மணி மறுத்து இருக்கலாம். தங்க ஊசி என்றாலும் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா..என்றளவிற்காவது எதிர்வினை ஆற்றி இருக்கலாம். அதற்கு பிறகு கூட சீமானோடு நெருக்கமாய் இருந்த காலக்கட்டங்கள் இருந்தன என்பதை மணி அண்ணன் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை. அப்போதெல்லாம் ஆற்றாத எதிர்வினை இப்போது எகிறி வந்து விழுகிறது என்று சொன்னால்..சொல்லப்பட்டவை எதுவும் மிகை அல்ல.. இப்போது கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளே மிகை.

இன்று படிக்காதவராய் மணி அவர்களால் அடையாளம் காட்டப்படும் சீமான் தான் அன்று தெருத்தெருவாக சென்று பெரியாரை பரப்ப பயன்படுத்தப்பட்ட ஆயுதம். இந்தப் படிக்காத சீமான் தான் அன்று கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட போது துண்டேந்தி வசூல் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி‌. இந்த படிக்காத சீமான் தான் அன்று பெரியாரைப் பற்றிப் பேசும்போது கொளத்தூர் மணியை உச்சி மோர வைத்த பரவசம். என்ன செய்வது.. சமீப காலமாக ஸ்டாலின் போன்ற மெத்த படித்த அறிவாளிகளோடு ஏற்பட்ட சகவாசம் சீமானை படிக்காதவராய் பார்க்கத் தோன்றுகிறது போலும். ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். ஸ்டாலின் மேதையாக,மீட்பராக,காப்பராக தோன்றும் விழிகளுக்கு சீமானை படிக்காதவராக தான் தோன்றும்.

அண்ணன் கொளத்தூர் மணி மீது நானெல்லாம் பெரு மதிப்புக் கொண்டவன். திமுக வெறுப்பினை அவர் மூலமாகவே அடைந்தவன். அவர் இன்று எளிதாக ஸ்டாலினைப் பார்த்து ,வீரமணியை சந்தித்து சமாதானமாகிக் கொள்கிறார். எங்களால் ஆக முடியவில்லை. அவ்வளவுதான்‌. அவரால் உண்டாக்கப்பட்டவர்கள் தான் நாங்கள். ஆனால் வரலாற்றின் போக்கு விசித்திரமானது. அவர் மீது நாங்கள் கொண்ட நேசிப்பே இன்று அவருக்கே ரணமாகி இருக்கிறது.

எம் இனத்தை வீழ்த்திய திராவிட கருத்தியலை சமரசமற்ற அரசியலால் வீழ்த்தி முடிப்போம் என முடிவு செய்தோம் . செய்கிறோம். அதே சமயத்தில் இந்துத்துவ காவி அரசியலுக்கு நேரடி எதிரியாக,சாதி முரண்களை கொண்டு காலங்காலமாய் எழுப்பப்படும் அரசியலுக்கு எதிராக …எம்மின படுகொலைகள் தந்த அனுபவங்களை உள்வாங்கி நிற்கிறோம்.

மற்றபடி..மதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் சொற்களை எல்லாம் கூராய்வு செய்ய வேண்டியதில்லை. இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல அவரெல்லாம் பேச மாட்டார் என கருதினோம். பேசி விட்டார். சிறு புன்னகையோடு கடப்போம்.

அவர்கள் கற்பித்தார்கள்.
நாங்கள் நடக்கிறோம்..

அவர்கள் விட்டு விட்டார்கள்.
நாங்கள் தொடர்கிறோம்.

நேற்றிருந்தவர்களின் கதை.

 

நேற்றிரவு
அவர்கள்
இருந்தார்கள்..

நேற்றிரவு
இந்த நொடியில்
அவர்கள்
உறங்கியும்
இருந்தார்கள்..

கண் மூடி
கதகதப்பாய்..
நாளையும்
இப்படிதான்
உறங்கப்
போகிறோம்
என்ற
நம்பிக்கைகளோடு..

நேற்றிரவு
குளிர்மையாய்
உறைந்திருந்த
சில தோட்டாக்கள்
அச்சமயம்
புன்னகைத்ததை
அவர்கள்
அறியவில்லை..

…….

புற்றில்லாத
உடலோடு
நஞ்சற்ற
நிலத்தில்
வாழ்தலென்ற
கனவோடு
அவர்கள்
காலை
விழித்தார்கள்..

அதிகாரத்தை
அரிதாரமாக
பூசி இருக்கும்
அரச துவக்குகள்
ஏற்கனவே
வேதாந்தா வீசிய
எலும்புத்
துண்டுகளுக்காக
நாய்களாக மாறிய
கதை தெரியாமல்..

எதிர்காலம்
என்பதை
இருத்த…
விதி ஒன்றை
மாற்ற அவர்கள்
வீதிகளிலே
போனார்கள்..

ரூபாய் நோட்டுகள்
செருகப்பட்ட
செவிகளில்
நெஞ்சடைத்து
அவர்கள் இடும்
முழக்கங்கள்
கேட்கட்டும் என
அவர்கள் நடந்தார்கள்..

ஏதோச்சதிகார
துவக்கின்
நாவிலிருந்து
உமிழப்பட்ட
தோட்டாக்களில்
அவர்களின்
பெயர்
எழுதப்பட்டிருப்பதை
அறியாமல்..
நெஞ்சத்தை
துளைக்கும்
முதல்
நொடி வரை
நம்பினார்கள்..

இது ஒரு நாடென..

பேய் அரசாண்டால்
மட்டுமல்ல..
பேயின் நாய்
அரசாண்டால் கூட
பிணம்தான்
தின்னும்
சாத்திரங்கள்..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

நாளை விடியும்
என்ற நம்பிக்கையோடு..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

 

Page 3 of 3

Powered by WordPress & Theme by Anders Norén