மெளனங்களோடு
பேசுதல்.
—————————-

நீங்கள்
எப்போதும்
சொற்களோடு
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்.

வெறும் சொற்கள்
நம்பிக்கையின்
வேரற்றவை.

வறண்டப் பாலையின்
எப்போதோ அறியாமல்
சிந்தி விடும் மழைத்துளி
ஒன்றின் இருப்பினைப்
போன்றவை ‌.

காதற்ற வெளியில்
தவறி உதிர்ந்து
விடும் ராகத்
துளியின் சாயல்
கொண்டவை.

அவைகளால்
எதையும்
நிரப்பவும்
முடியாது.
அவைகளாக
எதனுள்
நிரம்பவும்
முடியாது.

அந்தந்த
கணங்களுக்கே
உரிய
கூட்டிசைவிற்கான
சமாதானங்கள்
அவை.

சில தொண்டை
விம்மும்
கணங்களை
கண்டும் காணாமல்
நகர்த்தக் கோரிடும்
வாயசைவு
வாக்குறுதிகள்
அவை.

இவையெல்லாம்
தாண்டி
போலியற்ற
இருளுக்குள் அசலான
கனத்த
மெளனம் ஒன்று
ராட்சசனாய்
அமர்ந்து இருக்கிறது.

அதனோடு
என்றாவது..
அதன் காயம்
கொண்ட கண்களை
நேர் கொண்டு..

தலைகுனியாமல்
நேர்மையாக
உரையாடி
இருக்கிறீர்களா..?