ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை பொறுப்பேற்று நடத்துவது என்பது ஏறக்குறைய‌ முதன்முதலாக தன் ஒரே மகளின் திருமணத்தை பொறுப்பேற்று நடத்துகிற‌ தந்தையின் வலிக்கு நிகரானது. ஆனால் கும்பகோணம் நாம் தமிழருக்கு பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்துகிற அனுபவம் புதிதல்ல என்றாலும்.. இந்த முறை வேறு வகையான மாறிப்போன சூழல்கள்.

வீரத்தமிழர் முன்னணியில் சாமிமலை கூட்டம் ஒரு வருட காலத்திற்கு முன்பே அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்டது என்றாலும் நடுவில் ஏற்பட்ட பல சூழல்கள், குடந்தை நகரச் செயலாளர் கார்த்தியின் மரணம் மற்றும் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் போன்ற பலவற்றால் அதன் வேலைகளை தொடங்கவே முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி இருந்தோம். குறிப்பாக தம்பி கார்த்தியின் மரணம் மிகப் பெரிய உளவியல் சோர்விற்கு என்னையெல்லாம் உள்ளாக்கியிருந்தது. இந்த பின்னடைவுகளுக்கு மத்தியில் தான்
ஜனவரி மாத தொடக்கத்தில் தைப்பூச திருவிழா திருமுருகன் பெருவிழா பணிகள் எங்களுக்கு கட்சித் தலைமையால் மீண்டும் நினைவூட்டப்பட்டது. தொடக்கத்தில் இதை எடுத்து செய்ய முடியுமா என்கின்ற மிகப்பெரிய தயக்கம் சமீபகால சூழ்நிலைகளால் எங்களுக்கு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளர் தம்பி செந்தில்நாதன் இதை நாங்கள் நடத்தியே ஆக வேண்டும் என வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவனோ தஞ்சைக் கோபுரத்தின் உச்சியில் தமிழை ஏற்றி வைக்க உற்சாகமாய் உழைத்தவன். இந்த நிகழ்வையும் வெல்ல வைக்க வேண்டுமென எங்களை தூண்டிக்கொண்டே இருந்தான்.

சாமிமலை மிகச்சிறிய சிற்றூர். அந்த ஊரில் மிகப் பெரிய கூட்டங்கள் நடந்ததில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் அந்த ஊர் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போய்விடும். அந்த ஊரில் ஒரு மாபெரும் மாநாடு போன்ற ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய சவால். கூட்டத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் பக்கத்து பெரிய ஊர்களான கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்படிப் பல சவால்கள். குறுகிய காலம். மிகுந்த பொருளாதார நெருக்கடி.இதையெல்லாம் தாண்டி ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டுமென அண்ணன் சீமானின் அன்பான அறிவுறுத்தல். அந்த மனிதனின் குரல் கேட்ட பிறகு எதையும் செய்துவிட துடிக்கின்ற உளவியல் இயல்பாகவே நமக்கு வாய்த்து விடும். இவ்வாறாக நாங்களும் தயாரானோம்.

காலம் வெவ்வேறு காரணங்களுக்காக தகுதி வாய்ந்த சிலரை தேர்ந்தெடுத்து அதுவாகவே உருவாக்கி அனுப்பி வைக்கிறது.

அப்படி எங்களில் ஒருவனாக இருந்தவன் வீரத்தமிழர் முன்னணி குடந்தை தொகுதி பொறுப்பாளர் தம்பி வெங்கட் ரவி. அதுவரை அவனை சாதாரணமாகத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டவுடன் 100% அதற்கு நேர்மையாக நின்று உறுதியாக உழைத்த தம்பி வெங்கட்டு தான் இந்த நிகழ்வில் நான் கண்டடைந்த மகத்தான ஆச்சரியம். அவனது காலடி படாத இடம் அந்தக் கூட்டம் நடந்த திடலில் எங்கும் இல்லை.
பிளக்ஸ் அச்சிட்டு மேடையை தயார்செய்ததிலிருந்து நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் வரை பல வேலைகளை எடுத்துக் கொண்டு செய்தான்.
அவனே நாற்காலிகளை தூக்கிக் கொண்டு ஓடினான். குடிநீர் குடுவைகளை எடுத்துக்கொண்டு ஓடினான். நிகழ்ச்சி தொடங்கி அண்ணன் வர வேண்டிய நேரம். அப்போதுதான் கவனித்தோம். மைக் பொருத்தப்பட வேண்டிய போடியம் இல்லை.ஒரு நொடியில் எங்களுக்கு உலகமே மாறி போய்விட்டது. இதுவரை அறியாத பதட்டம். இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இப்படிப்பட்ட தவறு ஏற்பட்டது என்பது எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.உடனே பரபரப்பானோம். தம்பி வெங்கட்டு என்னையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தம்பியையும் அழைத்துக்கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக பறந்தான். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு இருந்த போடியம் வந்த மினி லாரியை மீட்டெடுத்து தம்பி லிங்க துரையோடு போடியம் மேடையை தூக்கிக்கொண்டு நாங்கள் உள்ளே நுழைந்தபோது அண்ணன் திடலில் நுழைந்தார். உயிர் வந்தது எங்களுக்கு.

இப்படியாக ஒவ்வொரு வேலையிலும் தம்பி வெங்கட்டு உழைத்துக் கொண்டே இருந்தான். கூட்டம் முடிந்த பிறகு அவனை நெஞ்சார தழுவினேன். கண்கலங்கி என்னை இறுக்க கட்டிப்பிடித்தான். நெருக்கடிகள் தான் ஒரு களத்தின் நாயகனை உருவாக்கும் என்பதற்கு அவன்தான் உதாரணம்.

அவனோடு துணையாக நின்ற பல தம்பிகள், பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் என பலருக்கும் இந்தக் கூட்ட வெற்றியில் பங்கு இருக்கிறது. அதேபோல இறுதிநேரத்தில் நிதி நெருக்கடி மிகுந்த போது அதை ஓரளவுக்கு சரி செய்ய உதவிய ஒருங்கிணைந்த சோழ மண்டலத்தின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள், வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய ராச்சிய பொறுப்பாளர்கள் முருகன் சிலைக்கு தொகை கொடுத்து உதவிய கோவை மண்டலச் செயலாளர் அப்துல் வகாப் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

தம்பி முனைவர் செந்தில்நாதன் கடுமையான தனது உடல் நலிவிற்கு மத்தியிலும் எங்களுடன் நின்றான். தேர்ந்த அறிவோடு நிகழ்ந்த அவனது திட்டமிடல்கள் எங்களை வழி நடத்தின.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் செயலாளர் தம்பி தூயவன், சாமிமலை பொறுப்பாளர் பிரபு, வீரத்தமிழர் முன்னணி அப்துல்கலாம், எப்போதும் காவல் துறையோடு மல்லுக்கட்டி ஓடியாடி உழைத்த என் உயிர் இளவல் வழக்கறிஞர் மோ ஆனந்த் , தம்பிகள் , மாவட்ட செயலாளர் அரவிந்தன் ,ஜஸ்டின், திருவிடைமருதூர் தொகுதி செயலாளர் புஷ்பராஜன் , ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா,லிங்கதுரை ,கார்த்திக் நிமலன், அசோக், சக்தி, சிவபாலன், அஸ்வின், பார்த்தா, ஹரி, ராம், ராஜா, சாமிநாதன், மாவட்டத் தலைவர் முருகன், பரணி, விஜி,பிச்சுவா மணி, காளிமுத்து ,பூசாரி வேடமிட்டு கலக்கிய விஜி,முத்து,பழனிவேல் உணவு ஏற்பாடுகள் செய்த மதிபாலா, அருண், விஜய் சங்கர், நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு சென்னையில் இருந்தாலும் தனது உறவினர் மூலமாக மதிய உணவு ஏற்பாடுகளை செய்த ராஜா ராம்தாஸ் என பலருக்கும் இந்த நிகழ்வின் வெற்றியில் பெரும் பங்கு இருக்கிறது.

பெரும் தமிழறிஞர்கள் பெருந்தமிழர் கிருஷ்ணகுமார், இறைநெறி இமயவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், சத்தியவேல் முருகனார் ஆகியோர் வரலாற்று சிறப்புரைகளை வழங்கி பெருமை சேர்த்தனர்.

இந்த நிகழ்வின் கதாநாயகன் அண்ணன் சீமான். வழக்கம்போல எங்களை கண்காணித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்தி தன் தமிழால் தகுதி சேர்த்த அண்ணனுக்கு எப்போதும் தம்பிகளாய் உடன் நிற்பதில் பெருமை கொள்கிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்க வேண்டுமென என் உயிர்த் தம்பி மறைந்த குடந்தை நகர செயலாளர் மோ. கார்த்திக் விருப்பப்பட்டான். நிகழ்வு நடக்கும் போது அவனது மூச்சுக்காற்று அங்குதான் உலவியிருக்கும் என எனக்கு நன்கு தெரியும். இந்த நிகழ்வுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு தடைகளையும் ஒரு இறை போல அரூபமாக நின்று தகர்த்துக் கொண்டே இருந்தான். அவனது கனவிற்கு நிறைந்த எங்களது உழைப்பின் மூலமாக எங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினோம்.

தமிழகமெங்கும் பல ஊர்களிலிருந்து பேருந்துகள் வாகனங்கள் எடுத்துக்கொண்டு எம் நாம் தமிழர் உறவுகள் அந்த சிறிய ஊரில் குவிந்து நிகழ்வினை மாற்றிக் காட்டினார்கள். கும்பகோணத்தையே அதிரச் செய்த காலையில் நடைபெற்ற வேல் ஊர்வலத்தில் இருந்து மாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் வரை நாம் தமிழர் கட்சி உறவுகள் நாடெங்கிலும் திரண்டு வந்துகொண்டே இருந்தார்கள்.
நிகழப் போகின்ற பெரும் அரசியல் மாற்றத்திற்கு இந்தக் கூட்டமே ஒரு வரலாற்று சாட்சியாக மாறிப் போயிருக்கிறது.

கூட்டம் முடிந்தது. கடுமையான உடல் சோர்வு, எதிர்நோக்கி இருக்கிற பொருளாதார நெருக்கடிகள் என கூட்டம் நடத்துகிற அனைவருக்கும் வருகிற வழக்கமான சிக்கல்கள் எங்களுக்கும் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு வரலாற்று நிகழ்வில் நாங்களும் உழைத்தோம் என்கின்ற நிறைவு எங்களிடம் என்றும் நிற்கும்.

கூட்டம் முடிந்து அனைவரும் சென்று விட்ட பிறகு எதையோ சாதித்தது போல தம்பி வெங்கட் முகம் நிறைந்த புன்னகையோடு என் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.உண்மையில் அவனைப் போன்ற எளிய தம்பிகள் தான் நாம் தமிழர் கட்சியின் பலம்.

கலையும் நேரம் வந்தது. மிகச்சிலரே அந்த நள்ளிரவில் அந்த திடலில் மீதம் இருந்தோம். எந்த அடையாளமும் இல்லாத இந்த எளிய பிள்ளைகள் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்திய பரவசத்தில் முகம் நிறைந்த புன்னகையோடு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம்.

மீண்டும் இன்னொரு இதேபோன்ற பரவசத்திற்காக, அந்த மகத்தான உணர்ச்சி வெள்ளத்தை மீண்டும் அனுபவிக்கும் லட்சிய வேட்கையோடு எங்களது பயணத்தை அந்த நொடியிலிருந்து அதே இடத்திலிருந்து தொடங்கினோம்.

காலியாக இருந்த அந்த மேடை பதாகையில் கம்பீரமாக நின்ற முருகன் எங்களை சிறு புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.